Category Archives: இசைமணி யூசுப்
இசைமணி நாகூர் எம்.எம்.யூசுப்

யமுனைக் கரையில் பொங்கிய தமிழ்ப் பண்ணிசை…தொடர்ச்சி…
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
கோடிலிங்கம் தலைநகருக்குப் புதியவர் அல்ல. பெரியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் காந்தி நினைவகத்தில் ஒருமுறை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இவர் பாடிய தேவாரப் பாடல்களை, கண்ணீர் மல்கக் கேட்டு உருகியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் பிற்பகுதியில் திருவருட்பா பாடல்களைத் தனித்து மிகவும் அற்புதமாகப் பாடினார் கோடிலிங்கம்.
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது. திருமதி பத்மா கிருஷ்ணன், திவ்வியப் பிரபந்தப் பாடல்களை மிகவும் தெளிவான உச்சரிப்பில், மிகவும் அழகாகப் பாடினார்.
சீர்காழி மூவர் பாடல்களை முனைவர் திருப்பாம்பரம் சோ.சண்முகசுந்தரம் பாடினார். என்ன ஒரு ஆழமான இசைஞானம்? என்ன ஒரு கம்பீரமான குரல் வளம்? உண்மையிலேயே மலைக்க வைத்தார் சண்முகசுந்தரம். சில தருணங்களில் சற்று அசந்து கண்ணை மூடிக் கேட்டால் அப்படியே தண்டபாணி தேசிகர் நினைவுக்கு வந்தார். பின்னர் யாரிடமோ பேசியபோது தெரிந்தது, இவர் தேசிகரின் மாணவராம். அடுத்து இசுலாமியப் பாடல்களை நிஜமாகவே “முழக்கினார்’ இசைமணி நாகூர் எம்.எம்.யூசுப். மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது என்பார்கள். நாள் முழுக்க சிரித்த முகத்துடன் மிகவும் அமைதியாக வலம் வந்து கொண்டிருந்த யூசுப் பாய், மாலை மேடையில் ஏறியதும் சண்டமாருதமாகப் பொழிந்து தள்ளிவிட்டார். அவருடைய குரல் எட்டாத உயரம் இல்லை.
அன்று அவர் அநாயாசமாகத் தொடாத மேல் தட்டு ஸ்வரங்கள் எதுவும் இல்லை. தார ஸ்தாயி, அதி தாரஸ்தாயி என்று பல இடங்களிலும் சர்வ லகுவாக சஞ்சாரம் பண்ணிக் கொண்டிருந்தார் யூசுப் பாய். உமறுப்புலவரின் சீறாப் புராணத்திலிருந்து பாடல், தக்கலை பீர் முகமது அவுலியாவின் பாடல் , குணங்குடியார் பாடல் என ஒவ்வொரு பாடலையும் மிகவும் சிரத்தையுடன் அளித்தார். இவர் பாடிய சில பாடல்களின் இசைபாணி, வடக்கில் இசைக்கப்படும் சூஃபி இசையின் வடிவத்தினை ஒத்து இருந்தது. தியானத்துக்குரிய மனநிலையை ஏற்படுத்துபவை இந்த சூஃபி இசையின் வடிவங்கள். குறைந்த நேரமே பாடினாலும் ஒரு அற்புதமான தியானத்துக்கான சூழலை முன்வைத்தார் யூசுப்.
இசைமணியின் வலைப்பதிவு http://www.isaiillam.info/biography.html


