RSS

Category Archives: இயற்றமிழ் வளர்த்த நாகூர்

இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர் ஹ.மு.நத்தர்சா அவர்களின் பேட்டி

 

இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர் வழியில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அழியாது காத்துப் பதிப்பித்தவர்; சிறுகதை எழுத்தாளர், சரித்திர நாவலாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் மு.செய்யது முஹம்மது ஹசன்.

நாகப்பட்டினத்தில், 1918-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முஹம்மது சாலிஹ் சாஹிபுக்கும், ஜுலைகா பீவிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.

நாகப்பட்டினம் தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தந்தையிடமும் தாத்தாவிடமும் அரபி, உருது, பார்ஸி ஆகிய மொழிகளைக் கற்றார். இவர் மேற்படிப்புப் படிக்க விரும்பினார். ஆனால், பாட்டன் விரும்பியபடி தன் தந்தையுடன் 1935-இல் பர்மாவுக்குச் சென்று, “மாந்தலே’ என்ற ஊரில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். அங்கே பர்மிய மொழியைக் கற்றார். 1937-இல் தாயகம் திரும்பினார். 1938-இல் “இந்திய தபால் தந்தித் துறை’யில் தந்திப் பிரிவில் அமைச்சகப்பணி எழுத்தாளராகச் சேர்ந்து கண்காணிப்பாளராய் உயர்ந்து, 38 ஆண்டுகள் பணியாற்றினார்.

கல்கியின் நூல்களைப் படித்து, அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், 1941-இல் எழுதத் தொடங்கினார். பணியிலிருந்த காலத்திலேயே கலைமகள், பிரசண்ட விகடன், சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணிவிளக்கு, முஸ்லீம் முரசு முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். “சாபு’ என்ற புனைபெயரில் வள்ளி, வளையல்கள், இரு சித்திரங்கள்; “ஜமீல்’ என்ற பெயரில், என் ஹலீமா, படிப்பும் பரம்பரையும்; “ஹசன்’ என்ற பெயரில், வீரத்தின் பரிசு முதலிய சிறுகதைகளை எழுதினார். 1942-இல் சென்னை அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்ட “பிரபலங்களின் சிறுகதைத் தொகுப்பில்’ இவரது சிறுகதையும் இடம்பெற்றது.

சிறுகதைகள் எழுதிவந்த ஹசனின் கவனம், பின் சரித்திர நாவல்கள் எழுதுவதில் திரும்பியது. மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, சொர்க்கத்து கன்னிகை, நீலவானம் ஆகிய ஐந்து சரித்திர நாவல்களை எழுதியுள்ளார்.

1956-இல் “மஹ்ஜபீன்’ நாவல் வெளிவந்தது. சிந்துநதிக் கரையினிலே 1971-இல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்றது. சீதக்காதி அறக்கட்டளையின் “செய்கு சதக்கத்துல்லா அப்பா’ இலக்கியப் பரிசையும், கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. நினைவுப் பரிசையும் வென்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் முஹம்மது ஹசனுக்குப் பொற்கிழி வழங்கி, “இஸ்லாமிய இலக்கியக் காவலர்’ என்ற பட்டமும் கொடுத்தனர். மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே ஆகிய இரு நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, மேற்கு வானம் ஆகிய மூன்று நாவல்களையும் மூன்று பேராசிரியர்கள் ஆய்வு செய்து, “ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பிஃல்) பட்டமும், “ஹசனின் வரலாற்று நாவல்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து “முனைவர்’ (பிஎச்.டி) பட்டமும் பெற்றுள்ளனர்.

1966 லிருந்து 1980 வரை “முஸ்லீம் முரசு’ மாத இதழில், முதலில் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பின்னர் அவ்விதழின் முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

மணிவிளக்கு, பிறை, உரிமைக்குரல் ஆகிய மாத இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அரிய ஆலோசனைகள் வழங்கினார்.

17, 18-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மறைந்துவிட்டன – கிடைக்கவில்லை. அவைகளைத் தம் கடின உழைப்பால் தேடிப் பிடித்து, துண்டு துண்டாகக் கிடந்தவற்றை ஒன்றாய் இணைத்துப் பதிப்பித்தார். ஆயிரம் மஸாலா, மிஹ்ராஜ் மாலை, சீறாப்புராணம், சின்னச் சீறா, திருமணக் காட்சி, கனகாபிஷேக மாலை, திருமண மாலை முதலிய காப்பியங்களையும், 20 சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்துள்ளார்.

தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், இலக்கியக் காவலர் எனப் பன்முகத் தன்மையோடு பளிச்சிட்ட மு.செய்யது முஹம்மது ஹசன், 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு, இஸ்லாமிய இலக்கியத் துறையை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

முஹம்மது ஹசனுக்கு மூன்று ஆண், மூன்று பெண் குழந்தைகள். அவர்களுள் ஒருவர்கூட எழுத்துத் துறையில் ஏற்றம் பெறவில்லை என்றாலும், அவரிடம் பயிற்சிபெற்ற பலர், எழுத்துலகில் இன்றைக்கும் பரிணமிக்கின்றனர் – பிரகாசிக்கின்றனர் என்பதுதான் ஹசனின் படைப்பிலக்கியத் திறனுக்குச் சான்று!

நன்றி: தினமணி – தமிழ்மணி(18/12/2011)
தகவல் : Azeez Ahamed M

 

இயற்றமிழ் வளர்த்த நாகூர் -1

முன்னுரை

இயற்றமிழின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் நமக்கே வியப்பாக இருக்கிறது.

இதனை ஆராய வைத்த எழுத்தாளர் ஜெயமோகனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று அவர் விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தால் பலநுட்பமான விஷயங்கள் எனக்குத் தெரியாமலே போயிருக்கும்.

தமிழில் நாவல்கள் எழுதிய முதல் இஸ்லாமிய பெண்மணி யாரென்று கேட்டால் எளிதில் கூறிவிடலாம். 1938-ஆம் ஆண்டு “காதலா கடமையா’ என்ற நாவலை எழுதிய நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா என்று.

தமிழில் வெளி வந்த முதல் நாவல் எது?

தமிழில் வெளி வந்த முதல் வரலாற்று நூல் எது?,

தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு நூல் எது?

தமிழில் சிறுகதைக்கு முன்னோடி யார்?

தமிழில் பத்திரிக்கைக்கு முன்னோடி யார்?

இந்த கேள்விகளுக்கு பதில்கள் நமக்குத் தெரியாது. அப்படியே தெரிந்துக் கொள்ள விரும்பி புத்தகங்களை ஆராய்ந்தாலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்தான் கிடைக்கின்றன.

இவை அத்தனைக்கும் பதில் பகரும் வண்ணம் இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று நான் சொன்னால் என்னை யாரும் நம்பப் போவதில்லை. இதில் இரண்டு சாதனைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் நாகூர்க்காரர் என்ற தகவல் நம்மை மேலும் தலைநிமிர வைக்கிறது.

சிறுகதை

சிறுகதை தோன்றிய ஆண்டு என்று ஆய்வாளர்கள் கூறுவது 1917. வ.உ.சுவாமிநாத ஐயரின் கதைகளே முழுமையான சிறுகதை வடிவம் என்று அறியப்பட்டு வந்தது. 1887-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிவந்த “சிங்கை நேசன்” ஏட்டில் அதன் ஆசிரியர் திரு மகுதூம் சாகிபு எழுதிய ‘விநோத சம்பாஷணை’ என்ற கதையே தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என வாதிடுகிறார் அமரர் நா. கோவிந்தசாமி. அக்காலக் கட்டத்தில் “சிறுகதை” என்ற பெயர் வடிவம் அதற்கு கொடுக்கப்படவில்லை. அவ்வளவுதான். உண்மையில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு முதல் பங்களிப்பு மகுதூம் சாயபு அவர்களுடையது என்பதை யாரும் மறுக்க இயலாது.

நாவல்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதி 1879-ல் வெளிவந்த ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நாவல் என்று ஏடுகள் கூறுகின்றன. செய்யுள் நடையில் இருந்ததை உரைநடை வடிவில் மாற்றியமைத்த பெருமை மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களையே சாரும் என்கிறார்கள்.

பிரதாப முதலியார் என்ற நாயகன், ஞானாம்பாள் என்ற நாயகியை திருமணம் புரிவதும், பிறகு அவர்களிருவரும் பிரிவதும், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை வைத்து பின்னப்பட்ட இக்கதை பெரிய வரவேற்பைப் பெற்றது.

நிஜவாழ்க்கையில் பேச்சு வழக்கில் இருந்ததைப் போலவே நிலவிய இந்த உரைநடையைப் பார்த்த வாசகர்கள் புரட்சிகரமான இந்த வடிவத்தைப் படித்து இரசித்து மெய்மறந்து போனார்கள். இந்த நாவல் பின்னர் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1885-ல் எழுதப்பட்டதாகக் கூறும் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட ‘அசன்பே சரித்திரம்’ என்ற நூல் இலங்கையிலிருந்து வெளியானதால் இதனை யாரும் இவ்வளவு காலம் கண்டு கொள்ளவே இல்லை.

அண்மையில் ‘அசன்பே சரித்திரத்’தையும், ‘பிரதாப முதலியார் சரித்திரத்’தையும் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார் முனைவர் தே நேசன். தமிழின் முதல் இரு நாவல்களில் ஆய்வு என்பதோடு, ஒரே கால கட்டத்தில், ஒரே மொழியில் இரு நாடுகளில் முதல் நாவல்களாகத் தோன்றிய வெவ்வேறு சமயப் பின்னணி கொண்ட படைப்புகளில் ஒப்பாய்வாகவும் இது அமைந்துள்ளது.

பத்திரிக்கை

பத்திரிக்கைத் துறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வேறு யாருமல்ல. நாகூர் குலாம் காதிறு அவர்களேதான். ‘வித்தியா விசாரிணி’ என்ற ஏட்டை வெளிக் கொணர்ந்து, இதே காலகட்டத்தில் ‘ஞானாசிரியன்’ என்ற ஏட்டையும் நடத்தி இருக்கிறார்.

இதோ மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எம்சாலி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

“‘வித்தியா விசாரிணி’ – மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா-விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறிமுறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.

‘வித்தியா விசாரிணி’க்கு எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்களை நடத்தவேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது.

‘வித்தியா விசாரிணி’ பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறை அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னணி வகித்தவர். பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலரே அந்த இலக்கிய இதழியல் முன்னோடி.

வரலாற்று நூல்

1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் “விக்கிரமாதித்யன் கதை’ முதல் வரலாற்று நாவல் என்கிறார் மிகச் சிரந்த எழுத்தாளரான கீரனூர் ஜாகிர்ராஜா. “பிரதாப முதலியார் சரித்திரம்’ அல்ல; மாப்பிள்ளை லெப்பையின்1858-ல் எழுதப்பட்ட “தாமிரப் பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல் என்று வாதிடுகிறார். இந்த நாவல் அரபுத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது அன்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மொழிபெயர்ப்பு நாவல்

நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 1889 ஆம் ஆண்டு நாவலர் மொழிபெயர்த்து வெளியிட்ட மிகப் பெரிய நாவல் “உமறு பாட்ஷா யுத்த சரித்திரம்” என்ற ஆங்கில நாவலாகும். ரெனால்ஸ் என்பவர் எழுதிய இந்நாவல்தான் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் நாவல். இதை நான் சொல்லவில்லை அண்மையில் இந்நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முரளீதரன் கூறுகிறார்.

நாவலர் இந்நாவலை பினாங்கில் மற்றும் தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்துள்ளார். கொழும்பு பெருவணிகர் ஒருவரின் உதவியுடன் இந்நாவல் 1889 இல் வெளிவந்துள்ளது. இந்த நாவலில் உள்ள சிறப்பம்சன் என்னவெனில், தமிழில் மணிப்பிரவாள நடையே நடைமுறையில் இருந்த காலத்தில் கூடுமானவரை வடமொழி வார்த்தைகளை கலக்காமல் தூயதமிழ் நடையில் எழுதியிருப்பது.

பத்திரிக்கைத் துறை மட்டும் மொழியாக்கத்துறையில் நாகூர்க்காரர்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

 

Tags: , ,

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers