RSS

Category Archives: நாகூர் எழுத்தாளர்கள்

நாகூர் புலவர்கள்

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் நல்லடியார் பதிவு செய்திருக்கும் நாகூர்ப் புலவர்களைப் பற்றிய அரிய தகவல்களை இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன். நற்றமிழ் வளர்ச்சியில் நாகூரார்களின் சிறப்பான இலக்கியப் பணியையும் நமது பாரம்பரிய வரலாற்றியும்  இன்றைய  இளைஞர் சமுதாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியம் :

 

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு

 

‘சங்கத் தமிழுக்குத் தலைநகர்’ மதுரை என்றால் முஸ்லிம்களின் ‘தங்கத் தமிழுக்குத் தலைநகர்’ தஞ்சைத் தரணியைக் குறிப்பிடலாம். கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பிறந்தார்கள்; புலமையில் சிறந்தார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பொற்காலம் அமைத்திட புதிய அத்தியாயம் துவங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இது இலக்கியவாதிகளுக்கு இனிக்கும் செய்தி. இனி எழுதப்படும் தமிழ் வரலாற்று நூல்களில் இடம் பெற வேண்டிய குறிப்பு .

“இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!”  என்று இசை முரசு கொட்டிய நாகூர் E.M. ஹனீபாவை அறிந்த அளவுக்கு, அவர் பாடிய பெரும்பாலான பாடல் வரிகளை எழுதியக் கவிஞர் பெருமக்கள் அறியப்படவில்லை. (நாகூர் ஹனீபாவின் சில பாடல்வரிகள் இஸ்லாத்திற்குப் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்ற விவாதத்திற்குள் நுழையாமல் இத்தொடரின் கருவான தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பை மட்டும் பார்ப்போம்.)

நாகூர் ஹனீபா பாடிய பெரும்பாலான பாடல்களை இயற்றியவர் நாகூர் புலவர் ஆபிதீன் ஆவார். திருவை அப்துல் ரஹ்மான் (M.A. ரஹ்மான்) அவர்கள், “ஞானத்தின் திறவு கோல் நாயகம் அல்லவா”  உட்பட சில பாடல்களை எழுதிக் கொடுத்தவர். உத்தம பாளையம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கவிமணி கா.அப்துல் கபூர் அவர்களின் சில பாடல்களும் நாகூர் ஹனீபா அவர்களால் பாடப் பட்டுள்ளன.

தமிழிலக்கிய வளர்ச்சியில் நாகூர் தந்த தமிழ்ச் செல்வர்களைப் பற்றிய தகவல்கள் மலைக்க வைக்கின்றன. 17-18 ஆம் நூற்றாண்டுகளில் சம காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களில் சிலர் மொழிப் புலமையும், சமய அறிவும் ஒரு சேரப் பெற்றிருந்தனர். வேறு சிலர் தமிழோடு பிறமொழி ஞானம் பெற்று பன்மொழிப் புலவர்களாக உலா வந்துள்ளனர். மற்றும் சிலர் இறைமறை வெளிப்படுத்தப்பட்ட மொழியான அரபியில் ஆழ்ந்த அறிவும் ஆன்மீகத் துறையில் தேர்ந்த பக்குவமும் பெற்று திகழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களுள் வணிகம் புரிந்து பொருள் குவித்த வித்தகர்களும் உண்டு. மொத்தத்தில் நாகூர் தந்த நற்றமிழ் புலவர்களின் அறிவு, ஆற்றல், படைப்புத் திறன், கற்பனை வளம், மற்றவர்களை மிஞ்சக் கூடியதாகவும் விஞ்சக் கூடியதாகவும் இருந்த உண்மையை மெய்ப்பிக்க – அவர்கள் விட்டுச் சென்ற – இன்றும் நம்மிடையே உள்ள இலக்கியச் செல்வங்கள் போதியனவாகும். அவர்களின் இலக்கியப் பணி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் எண்ணி மகிழத்தக்கவை! ஏற்றம் பெற்ற நிலையினை எடுத்துரைப்பவை!

நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பற்றிப் பேச முற்பட்டால் அல்லது எழுதிடத் தொடங்கினால் அறிஞர் வட்டத்தினரின் நினைவுக்கு வருபவர், நெஞ்சில் நிழலாடுபவர் வா. குலாம் காதிறு நாவலரே ஆவார். அவரை முன்னிறுத்தியே பேசவும் எழுதவும் செய்கிறோம் . அவர் பற்றி அறிந்து வைத்துள்ள அளவு , அவருடைய சம காலத்திலே வாழ்ந்த மற்ற புலவர்களை நாம் அறிந்து வைக்கவில்லை . அவருடைய படைப்பு இலக்கியங்கள் கிடைக்கும் அளவில் மற்றவர்களின் படைப்பு இலக்கியங்கள் கிடைப்பதுமில்லை.

தஞ்சை மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத முஸ்லிம் தமிழறிஞர்களின் பட்டியல் கீழ்க்கண்டவாறு நீள்கிறது:

1. ஆயுர்வேத பண்டிதர் வாப்பு மகன் மகா வித்வான் வா.குலாம் காதிறு நாவலர்,
2. பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக்களஞ்சியம் முகம்மதுப் புலவர்,
3. நெ.மதாறு சாகிபு நகுதா மகன் பெரும்புலவர் நெயினா மரைக்காயர்,
4. கி.அப்துல் காதிர் சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி செவத்த மரைக்காயர்,
5. இபுறாகிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர்,
6. மீறா லெவ்வை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர்,
7. முகம்மது உசேன் சாகிபு மரைக்காயர் மகன் மு. செவத்த மரைக்காயர்,
8. முஆக்கின் சாகிபு நகுதா மகன் முகியுத்தீன் அப்துல் காதிறுப் புலவர்,
9. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்,
10.அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் சீரியர் செவத்த மரைக்காயர்,
11. பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்,
12. யூ.சின்னத் தம்பி மரைக்காயர் மகன் யூ. சி.பக்கீர் மஸ்தான்,
13. ப.கலீபா சாகிபு மகன் பகீர் முகியித்தீன்,
14. முகம்மது நயினா ராவுத்தர் மகன் ‘தரகு’ நாகூர்க் கனி ராவுத்தர்,
15. ஆதம் சாகிபு மகன் முகம்மது முகியுத்தீன் சாகிபு,
16. தம்பி மாமா மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர்,
17. சி.யூசுபு மகன் வாஞ்சூர் பகீர்,
18. ச.அப்துல் காதிர் நயினா மரைக்காயர் மகன் முகம்மது முஹிய்யித்தீன் மரைக்காயர்,
19. மீ. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முஹம்மது சாகிபு மரைக்காயர்,
20. முகம்மது அலி மரைக்காயர் மகன் முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர்,
21. கோ.மு. முகம்மது நைனா மரைக்காயர் மகன் (காரைக்கால்) கோசா மரைக்காயர்,
22. சு.பகீர் முகியித்தீன்,
23. செ.கமீது மஸ்தான்,
24. ம.முகம்மது மீறா சாகிப் புலவர்,
25. தளவாய் ம. சின்னவாப்பு மரைக்காயர்,
26. கா. பெரிய தம்பி நகுதா,
27. க.காதிறு முகியித்தீன் சாகிபு,
28. இ.செய்யது அகமது,
29. மு.சுல்தான் மரைக்காயர்,
30. வா.முகம்மது ஹுஸைன் சாஹிபு மகன் மு. ஜெய்னுல் ஆபிதீன் (புலவர் ஆபிதீன்),
31. பண்டிட் எம்.கே. எம் ஹுஸைன்,
32. வா.கு. முஹம்மது ஆரிபு புலவர்,
3. வா.கு. மு. குலாம் ஹுஸைன் நாவலர்.

இவர்களுள் காலத்தால் முந்தியவர் முதன் முதலில் இலக்கியம் படைத்தவர் பிச்சை நயினார் மகன் முகம்மதுப் புலவர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள் படைத்தளித்தவர் வா .குலாம் காதிறு நாவலரே ஆவார். அவருடைய ஆக்கங்களில் செய்யுள்களானவையும் உள ; உரை நடைகளிலானவையும் உள. கூடவே மொழிபெயர்ப்பு நூல்களும் உள. அந்த வகையில் நாகூர் முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் அவரை தலைமைப் புலவராகக் கொள்வதும் கொண்டாடி மகிழ்வதும் மிகச் சரியான செயலாகும். ‘தண்டமிழுக்குத் தாயா’கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நக்கீரர் அல்லவா அவர்!

நம் கவனத்தில் வந்த மேற்கண்ட தமிழரிஞர்களின் படைப்புகள் வெகுசனங்களை ஈர்க்காமல் போனதற்கு அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தைப் பற்றி மட்டுமே எழுதியதால் பிறமத இலக்கியவாதிகளின் கவனத்தைப் பெறவில்லை. மேலும், முஸ்லிம்களைப் பற்றி எழுதியவையும் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருந்ததால் முஸ்லிம்களிடமும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதே முக்கியக் காரணமாகும் எனக் கருதுகிறேன்.

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த தமிழ் முஸ்லிம்களில் சிலரைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இனி, நாகூர் தமிழ் புலவர்களின் இலக்கியப் படைப்புகள் பற்றியும் பார்ப்போம் .

வா. குலாம் காதிறு நாவலரின் படைப்பு இலக்கியங்களின் பட்டியல் இப்படி விரிகிறது:

1. பிரபந்தத் திரட்டு – சச்சிதானந்தன் பதிகம், இரட்டை மணிமாலை , முனாஜாத்து, திருநாகை யமகபதிற்றந்தாதி, நாகைப் பதிகம், முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது .

2. ‘நாகூர்க்கலம்பகம்’ நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாஹிபு அவர்கள் சிறப்பு விவரிப்பது. கி.பி. 1878ல் வெளிவந்தது.

3.’முகாசபா மாலை’ நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த( தாகச் சொல்லப்படும்) விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம். 13 படலங்கள் 300 பாடல்கள் கொண்டது. முதற்பதிப்பு 1899 ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1883 ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம்.செய்யது முஹம்மது ‘ஹஸன் ‘ அவர்களால் சென்னை, மில்லத் பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.

4. ‘குவாலியர்க் கலம்பகம்’ ஹலரத் முகம்மது கௌது குவாலீரீ அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்களாய் 1882ல் அச்சில் வந்தது.

5. ‘திருமக்காத் திரிபந்தாதி’ மக்க நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் கொண்டது. 1895ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வச்சிரயந்திர சாலையில் அச்சிடப்பட்டது.

6. ‘நாகூர்ப் புராணம்’ ஹஜரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்வின் சிறப்பைக் கூறுவது . மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித் திரட்டு உட்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள் கொண்டது. 1893ஆம் ஆண்டு ம. முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு.

7. ஹலரத் செய்யிது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு; நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள் 2373 விருத்தங்கள். 1896ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பெயர்: ‘ஆரிபு நாயகம்’.

8. ‘பகுதாதுக் கலம்பகம்’ ஹலரத் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாது நகரின் சிறப்பைக் கூறும் 101 பாடல்கள். 1894ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

9. ‘பதாயிகுக் கலம்பகம்’ ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900ல் அச்சில் வந்தது. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல்.

10. மதுரைத்தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை. இதன் முதற்பதிப்பு 1903 ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968ல் வெளிவந்தது. பதிப்பித்தவர் இலக்கியச் செம்மல் கலாநிதி.ம.மு. உவைஸ்(இலங்கை). நாகூர் தறுகா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது.

11. ‘தறுகா மாலை’ நாவலர் குலாம் காதிறு மகன் வா. கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார் . முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள் குறிப்பிடப் படவில்லை. (கஃபா – மக்கா, மஸ்ஜுதுன் நபவி – மதீனா , பைத்துல் முகத்தஸ் – பாலஸ்தீன் ஆகிய மூன்று புனித இறையில்லங்கள் தவிர்த்து மற்றவை குறித்த மிகையான புகழ்ச்சிகளில் எனக்கு உடன்பாடில்லை – நல்லடியார்)

12. ‘மும்மணிக் கோவை’

13. ‘மக்காக் கோவை’

14. ‘மதினாக் கலம்பகம்’

15. ‘பகுதாதுய மக அந்தாதி’

16. ‘சச்சிதானந்த மாலை’

17. ‘சமுத்திர மாலை’

18. ‘மதுரைக் கோவை’

19. ‘குரு ஸ்தோத்திர மாலை’

20. ‘பத்துஹுல் மிஸிர் பஹனஷாப் புராணம்’

21. நாகூராரின் வரலாற்றை அழகிய தமிழ் உரை நடை நூல் ‘கன்ஜூல் கறாமத்து’ எனும் பெயரில் அச்சில் வந்தது. காலம் 1902.

22. ‘சீறாப்புராண வசனம்’

23. ‘திருவணி மாலை வசனம்’

24. ‘ஆரிபு நாயகம் வசனம்’

25. ‘சீறா நபியவதாரப் படல உரை’

26. ‘சீறாநபியவதாரப் படல உரை கடிலக நிராகரணம்’

27. ‘நன்னூல் விளக்கம்’

28. ‘பொருத்த விளக்கம்’

29. ‘இசை நுணுக்க இன்பம்’

30. ‘அறபித்தமிழ் அகராதி’

31. ‘மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம்’

32. அதிரை நவரத்தின கவி காதிறு முஹ்யித்தீன் அண்ணாவியரின் ‘பிக்ஹு மாலை உரை’ முதற் பதிப்பு 1890ம் ஆண்டில் வெளி வந்தது. அந்நூலின் இரண்டாம் பதிப்பை 1990 ஆம் ஆண்டு புலவர் அ.முஹம்மது பஷீர் வெளிக் கொணர்ந்தார் .

33. நாகூர் பெரியார் முஹ்யித்தீன் பக்கீர் சாஹிபு காமில் என்கிற செய்யது அப்துல் வஹ்ஹாப் ஆலிம் அவர்களின் ‘தறீக்குல் ஜன்னா’ (ஹி 1335). மேலும் ,

34. இலக்கணக் கோடாரி பேராசிரியர் திருச்சி கா. பிச்சை இபுறாஹிம் புலவரின் ‘திருமதினத்தந்தாதி உரை’ (1893).

35. இவை தவிர ரைனால்ட்ஸ் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய ‘உமறு’ என்னும் புதினத்தைத் தமிழாக்கி வெளியிட்டார் நாவலர். நான்கு பாகங்களிலான அந்நூலின் பெயர் ‘ உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்’.

நாகூர் தமிழ் புலவர்களின் தலைமைப் புலவர் வா. குலாம் காதிறு நாவலர் மலேயா (இன்றைய மலேசியா) திருநாட்டின் அழகு நகர் பினாங்கில் இதழாசிரியராக புகழ் குவித்தார். ‘வித்தியா விசாரிணி’ என்னும் பெயரில் இதழ் நடத்திய காலம் 1888 ஆம் ஆண்டு. தொட்ட துறை அனைத்திலும் துலங்கிய திறன், ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடு மெச்சத்தக்க வகையில் இருந்தமையால் குலாம் காதிறு புகழ் முகட்டில் வாழ்ந்து 28.1.1908ல் மரணித்தது தமிழ் கூறு நல்லுலகு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க, ஏற்றமிகு புலவர் பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக் களஞ்சியம் முகம்மதுப் புலவர். இவர் இலக்கிய உலகில் ‘ஊஞ்சல் பாட்டு’ புகழ் புலவராக பேசப்படுபவர். அவருடைய பிற ஆக்கங்களாகக் குறித்து வைத்துள்ள விவரப்படி

(1) ‘கேசாதி பாத மாலை’
(2) ‘முகியித்தீன் புராணம் ‘ ஆகிய இரண்டு நூல்கள் மட்டும். ஆனால், முகம்மதுப் புலவரின் இலக்கியப் பணி அத்துடன் நின்றிடவில்லை. அவர் ஆற்றிய பணி விரிவானது. அழகும் ஆழமும் கொண்டது. அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

(3) புதூகுச்சாம்மென்னும் வசன காவியம். 1879 ஆம் ஆண்டு காரை முஹம்மது மைதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. மற்றொன்று

(4) நாகூர் கலறத் மீரான் சாகிபு ஆண்டவர்கள் பேரில் ‘பிள்ளைத் தமிழ்’ ஹிஜ்ரி 1291 அச்சில் வந்தது. நாகூரார் பேரில் வந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களின் எண்ணிக்கை இதனைச் சேர்த்து எட்டு. இனிக்கும் தமிழ் இலக்கியங்களில் இது ஒன்று.

நாகூர் புலவர்களுள் சிறப்புக்குரிய மற்றொருவர் கி. அவு.செவத்த மரைக்காயர். இவருடைய ஆக்கங்களில் (1) ‘மும்மணிக் கோவை’ (2) ‘உயிர் வருக்கக் கோவை’ ஆகிய நூல்கள் ஹிஜ்ரி ஆண்டு 1311ல் காரைக்கால் இந்தியக் காவலன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டவை. ‘வருக்கக் கோவை ‘ காரைக்காலில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஆரிபுல்லா காமில், ஹலரத் மஸ்தான் சாஹிபு அவர்கள் பெயரால் அமைந்த பாடல்கள் நிரம்பியது.

மற்ற நூல்களில் பார்வையை கூர்மையாக்கும் வகையில் அமைந்த ‘பயணக் கவிதை’ நூல் அதுவும் கடல் கடந்த நாட்டில் அச்சிட்ட நூல் ‘மலாக்காப் பிரதேசத் திரட்டு’. இன்றைய மலேஷியவின் பெருநகர்களில் ஒன்றான ‘மலாக்கா’வை அடுத்துள்ள ‘புலாவ் பெஸார்’ தீவில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் செய்குணா, செய்கு இஸ்மாயில் அவர்களின் ‘ஜியாரத்’ முடித்து வந்த பயணம் பற்றிய நூல்.

ஹலரத் செய்கு இஸ்மாயீல் வலியுல்லா அவர்களின் அருட்சிறப்பு விரவி உள்ளது. அத்துடன் புலவர் பாடிய ‘இரத பந்தம்’ ‘அட்டநாக பந்தம்’ ‘ இரட்டை நாக பந்தம்’, ‘கமல பந்தம்’ ,’சித்திரக் கவி’ ஆகியவை இடம் பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் கஞ்சஸவாய் பிரஸில் ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ‘ கந்தூரி திருவலங்காரச் சிந்து அலங்காரக் கும்மி’ என்னும் நூலும் கி.அவு. செவத்த மரைக்காயர் ஆக்கமேயாகும். நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணிக்கும் இடையிலுள்ள பாப்பாவூரில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் ஸையிதினா ஹாஜா செய்யிது அலாவுத்தீன் அவர்களின் பேரில் திருவிழா திருவலங்காரச் சிந்து, நாகப்பட்டினத்தில் அடங்கியுள்ள ஹலரத் ஸையிதினா சைய்யிது இபுனு மஸ்ஊத் அவர்களின் பேரில் இன்னிசை ஆகியவை உள்ளடங்கிய அழகிய படைப்பு.

அவரது மற்றொரு நூல் சென்னை திருவல்லிக்கேணியில் அடங்கியுள்ள ஹலறத் செய்குனா செய்குல் மஷாயிகு செய்கு அப்துல் காதிறு சாகிபு ஆரிபு அவர்கள் பேரில் சரமாசிரிய விருத்தம். கலித்துறை இன்னிசை பதங்கள் கொண்ட நூல் ‘பதங்கள்’ என்னும் நூலுருவில் வெளிவந்தது. கரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்தில் 1896 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

ஒரே காலத்தில் மூன்று புலவர்கள் செவத்த மரைக்காயர் என்ற பெயருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். மூவரும் புலவை மிக்க மும்மணிகளாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுள் அ .தம்பி சாகிபு மரைக்காயர் மகன் த.செவத்த மரைக்காயர் சீரியர். இவர் நூலாசிரியர் இதழாசிரியர் ஆக இனிய இலக்கியப் பணி புரிந்தவர். அவர் வெளிக் கொணர்ந்த இதழ் ‘சீரிய சூரியன்’. நாகூர் புலவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை வெளி உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில் இதன் பணி தொடர்ந்தது. முன்னோடி இதழ்களில் இது ஒன்று.

த. செவத்த மரைக்காயர் சீரியரின் புலமைக்குச் சான்று கூறும் அவரது ‘திருமக்காக் கோவை, மக்கா நகரின் சிறப்பு, மாநபி நாதர்(ஸல்) அவர்களின் மாண்பு விரித்துரைக்கும் அகப் பொருள் பாடல் 437 கொண்டது. அவருடைய தலையாய இலக்கியப் பணியாக இதனைக் குறிப்பிட வேண்டும்.

திருமக்காக் கோவையின் உள்பக்கத்தில் காணப்படும் குறிப்பை அவரது மற்ற நூல்கள் பற்றிய விவரமாக எடுத்துக் கொள்ளலாம். அவை

(1) ‘தர்காக் கோவை’

(2)’ஜைலான் மும்மணிக் கோவை’

(3)’பகுதாதுக் கலம்பகம்’

(4)’ ஆரிபு பிள்ளைத் தமிழ்

(5) ‘ பார்ப்பாரூர் யமக நூற்றந்தாதி’

(6) ‘ தந்தையந்தாதி’

(7) ‘மாணிக்கபூர் மாணிக்க மாலை’

(8) ‘கீர்த்தனாச் சாரம்’

9) ‘குருமணி மாலை’

(10) ‘திருப்பா’

(11) பதஉரை , பொழிப்புரை விரிவுரையுடன் கூடிய ‘குத்பு நாயகம்’

(12) ‘மெஞ்ஞானத் தீர்மானம்’ ஆகிய பனிரெண்டு. இவற்றுள் ‘பகுதாதுக் கலம்பகம்’ அச்சிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பட்டியலில் குறிப்பிடாத ஒன்றான ‘திருமணிமாலை வசனம் பார்க்க்க விசனம் ‘ என்னும் சிறுநூலும் வெளிவந்துள்ளது. (மற்றவை அனைத்தும் அச்சில் வந்தனவா என்பதுவும் அப்படி அச்சிடப்பட்டிருந்தால் எப்போது வந்தது என்பதும் தெரியவில்லை. அத்தனையும் அச்சில் வந்திருப்பின் நாகூர்ப் புலவர்களில் குலாம் காதிறு நாவலருக்கு அடுத்த நிலையில் வருபவர் த . செவத்த மரைக்காயர் ஆவார்.)

முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் முத்தமிழ் வித்தகர் நெ.மதாறு சாகிபு மகன் பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் எனலாம். அவருக்குப் புகழ் சேர்த்த இலக்கியப் படைப்புகள்

(1) ‘தேவார மஞ்சரி’

(2) ‘புகழ்ப்பா மஞ்சரி’

(3) ‘ கீர்த்தன மஞ்சரி’ ஆகியவை.

அவரது ஆழ்ந்த தமிழறிவுக்கும், புலமை செறிவுக்கும் இசைஞானத்திற்கும் பதச் சோறாக ‘லால் கௌஹர் ‘ நாடகத்தைக் கூறலாம். இவ்வட்டாரப் பேரூர்களில் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுச் சிறப்பு சேர்த்தது. நாடக நூலினை வா.குலாம் காதிறு நாவலர் பதிப்பித்தார். முதற்பதிப்பு காரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்திலும் இரண்டாம் பதிப்பு 1901ல் சென்னை இட்டா பார்த்தசாரதி அச்சுக் கூடத்திலும் அச்சிடப்பட்டது.

1990 டிசம்பர் திங்கள் கீழக்கரையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் ப்திப்பு வெளியிடப்பட்டது. பதிப்பித்தவர் பேராசிரியர் டாக்டர் சே.மு .முஹம்மது அலீ. வெளியீடு சென்னை சுலைமான் ஆலிம் அறக் கட்டளை.

பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் வண்ணம், இன்னிசை, சித்திரக் கவிகள் பாடியுள்ளார் . அத்துடன் அன்றைய வணிகர்களுக்குப் பயன்தரக்கூடிய வாணிப குறியீட்டு நூலாக ‘நெயினாஸ் கோட்’ வழங்கி அன்றைய தேவையை நிறைவேற்றியுள்ளார் . குலாம் காதிறு நாவலர் படைப்புகளில் ஒன்றான ‘சமுத்திர மாலை’ முகம்மது நெயினா மரைக்காயரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிலேடையிலான பாடல்கள் நிறைந்தது.

மூவர் வினா -விடை முறையில் பேசுவது போல் அமைந்த, இறை புகழ்ப்பாக்கள் நிறைந்த நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் ‘மூவர் அம்மானை’. நூலாசிரியர் பெயர் மீறா லெப்பை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர். ‘மூவர் அம்மானை’ 1873ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1876 ஆம் ஆண்டிலும் முன்றாம் பதிப்பு 1878ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது . அந்நாளில் மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்ட நூல் இது ஒன்றே. அதற்கு மக்களிடையே இருந்த வரவேற்பை உணர்த்துகிறது.

மீ.அல்லி மரைக்காயர் இயற்றிய மற்ற நூல்கள் வருமாறு.

(1) ‘ பிரபந்தக் கொத்து’

(2) முகைதீன் அப்துல் காதிர் ஆண்டவர் பேரில் ‘பதிற்றுப்பத்தந்தாதி’

(3) ‘முனாஜாத்து’

(4) ‘ நெஞ்சறிவுத்தல்’

(5) ‘அன்னம் விடு தூது ‘

(6) வண்டு விடு தூது .

பெரும்பாலும் நூல்கள் பதினொன்று பாடல்கள் கொண்டது. அனைத்தும் கட்டளைக் கலித்துறை பாடல்களாக அமைந்தவை . இவற்றை 1878ல் நாவலர் குலாம் காதிறு பதிப்பித்துள்ளார். நூல்கள் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டவை. ‘நெஞ்சறிவுத்தல்’ மார்க்க அறிவுரை கூறும் ஐந்து பாடல்களைக் கொண்டது.

செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்

(1) ‘ஹக்குப் பேரிற் பதிகம்’

(2) ‘நபியுல்லா பேரிற்பதிகம்’, ‘இமாம் ஹுசைன், இமாம் ஹஸன், முஹ்யித்தீன் ஆண்டகைகள் ஆகியோர் பேரிற் பதிகம்’ பாடியுள்ளார். அவை

(3) ‘துதிப்பாத் திரட்டு ‘ என்னும் பெயரில் நூலுறு பெற்று 1876ஆம் ஆண்டு வெளிவந்தது. க.பகீர் முகியித்தீன் நாகூர் ஆண்டகை அவர்களின் சிறப்பையும் தர்காஷரீபின் சீரையும் 44 பாடல்களின் வடித்துள்ளார். 1876ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட அந்நூலின் பெயர் ‘நான்மணி மாலை’. இபுறாஹிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர் ‘குதுபு’ சதகம் பாடியுள்ளார் . இது 1893ல் அச்சிடப்பட்டது. ப. கலிபா சாகிபு மகன் பகீர் முகியித்தீனின் ‘கீர்த்தனா மாலிகை’ 1886ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1895ஆம் ஆண்டு மலேஷியா ‘பினாங்கு’ நகர் கிம் சேய்க் ஹியான் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்ட நூல் ‘ பினாங்கு உற்சவ திருவலங்காரச்சிந்து’. நூலாசிரியர் நாகூர் கோ. முகம்மது நைனா மரைக்காயர் மகன் கோசா மரைக்காயர். இவர் இயற்றிய நூல்கள் எட்டு. இவற்றுள் நாடகங்கள் நான்கு. முறையே

(1) சதானந்த மாலை

(2) மனோரஞ்சித சஞ்சீவி என்னுமோர் அற்புத கிஸ்ஸா

(3) திருக்காரைத் திருவிழாச் சிந்து

(4) வைத்திய மகுடம்

(5) சராரே இஷ்க் நாடகம்

(6) ஷிரீன் பரஹாத் நாடகம்

(7) ஜூஹுரா முஸ்திரி நாடகம்

(8) லைலா மஜ்னூன் நாடகம். (இவை அச்சில் வந்த காலம், பதிக்கப்பட்ட அச்சகம் பற்றிய விவரம் தெரியவில்லை.)

முத்தமிழ் வித்தகர் நெயினா மரைக்காயரின் ‘லால் கௌஹர்’ நாடக நூலை அடுத்து வந்ததும் , அடுத்த நிலையில் வைத்து எண்ணத் தக்கதுமான நூல் ‘அப்பாசு நாடகம்’ ஆகும். நாகூர் , நாகப்பட்டினம், பினாங்கு, சிங்கப்பூர் , சிங்கப்பூர் ஆகிய ஊர்களில் வழங்கிய வர்ண மெட்டுப் பாட்டுக்களின் இராகங்களில் அமைந்த நாடகத்தை இயற்றியவர் பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்.அப்பாசு நாடகம் 1892ல் அச்சேறியது. ஆங்காங்கே நடிக்கப்பட்டு பரவலான புகழ் ஈட்டியது.

மு. ஆக்கீன் சாகிபு மரைக்காயர் மகன் மு.ஆ. முகையித்தீன் அப்துல் காதிறுப் புலவர் இயற்றிய ‘நபியுல்லா பேரில் துவாதசக் கலித்துறை சந்தக் கும்மி’ நாகை ஸ்காட்டிஸ் பிராஞ்சு அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது . காலம் 1879ஆம் ஆண்டு. அவரது மற்றொரு நூல் ‘சங்கீத கீர்த்தனா மாலிகை’ சிங்கப்பூர் தீனோதய வேந்திர சாலையில் 1916 ஆம் ஆண்டு அச்சேறியது. பிறிதொரு நூல் ‘நாகூர் யூசுபிய்யா மாலை 1918ஆம் ஆண்டு நாகை நீலலோசனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

யூ. சின்னத்தம்பி மரைக்காயரின் மகன் யூ .சி.பக்கீர் மஸ்தான் ஆக்கங்கள் மூன்று. அவை முறையே ‘திருத் தோத்திர கீர்த்தனம் ‘ 1`912ல் ரங்கூன்(பர்மா) ஸ்ரீ ராமர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. ‘கீர்த்தனா மஞ்சரி ‘ 1916ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாகை நீல லோசனி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘திருப்புகழ்’ என்னும் தலைப்பிலான நூலில் இருப்பவை நாகூர் ஆண்டகை அவர்களின் பெயராலியற்றப்பட்ட நவீனாலங்கார ஜாவளிப்பதங்கள் சந்தக்கவிகள்.

1933ஆம் ஆண்டு சிங்கப்பூர் கலோனியல் பிரிண்டிங் பிரஸில் அச்சிடப்பட்ட ‘முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சர்வலோக சற்குருநாதர்’ , 1934ஆம் ஆண்டு சிங்கப்பூர் செயிண்ட் மேரீஸ் பிரஸில் அச்சிடப்பட்ட ‘முஹம்மத் நபி( ஸல்) அவர்கள் கடைந்தேற்றும் வள்ளல்’ , 1935ஆம் ஆண்டு நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட ‘முஹம்மத் நபி(ஸல்) ( இன்ஸான் காமில்) நிறைந்த புருசர் ‘ ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர் சி. ஹாஜி சிக்கந்தர்.

சு. அஹமது இபுறாஹிம் மரைக்காயர் ஆலிம் மகன் S.A. எஹ்யா மரைக்காயர் இயற்றிய ‘அரும் பொருட்பா வைங்கவி’ 1940 ல் வெளிவந்தது. நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட இந்நூலில் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

சி.சி. அப்துர் ரஜ்ஜாக்கு (காதிரி) இயற்றிய நூல் ‘நூறுல் ஹகாயிகு என்னும் அந்தரங்கச் சோதி ‘ மதுரை நூருல் ஹக் பிரஸில் 1956ஆம் ஆண்டு அச்சேறியது.

அண்மைய கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் முஸ்லீம் புலவர்களில் நாடறிந்த புலவர் வா.முஹம்மது ஹுசைன் சாஹிப் மகன் மு .ஜைனுல் ஆபிதீன். பின்னாளில் இவர் ‘புலவர் ஆபிதீன்’ என்றழைக்கப்பட்டு அறியப்பட்டவரானார். ஏறத்தாழ 4000 க்கு மேற்பட்ட இசைப்பாடல்கள், மரபுக்கவிதைகள் 13 நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் நமது கவனத்திற்கு வந்தவை

(1) ‘நவநீத கீதம்’ (1934),

(2) ‘தேன்கூடு (1943-இலங்கை),

(3) ‘அழகின் முன் அறிவு’ (1960-சென்னை).

அதே ஆண்டில் வெளிவந்த இரு நூல்கள் (1) ‘முஸ்லீம் லீக் பாடல்கள்’,

(2) ‘இஸ்லாமியப் பாடல்கள்’.

அவர் இயற்றிய பல பாடல்கள் இன்றும் இசைத் தட்டுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி: நல்லடியார்/ எதிரொலி ஜூலை 2006

தொடர்புடைய சுட்டி : இஸ்லாம் கல்வி

 

தூயவன்

thooyavan
ஏ.வி.எம்.ராஜன் & புஷ்பலதா
ஏ.வி.எம்.ராஜன் & புஷ்பலதா

எழுத்தாளர் ஜெய்புன்னிஸாவின் கணவரான ‘தூயவன்’ நாகூரைச் சேர்ந்தவர். இயர்பெயர் எம்.எஸ்.அக்பர். தூயவனின் முத்திரைக் கதைகள் ஆனந்த விகடனில் அடுத்தடுத்துப் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. . இவரது முதல் முத்திரைக்கதை 1967-ல் ஆனந்த விகடனில் பிரசுரமாகி ரூ. 501/- பரிசைப் பெற்றது.

தூயவன் திரையுலகில் நுழைய இச்சிறுகதையே வாயிலானது. ஆனந்த விகடனில் இச்சிறுகதையை படித்த ஏ.வி.எம்.ராஜன், மேஜர் சுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க , தூயவன் எழுதிய “பால்குடம்” மேடை நாடகமாக அரங்கேறி பின்னர் திரைப்பட வடிவமும் பெற்றது.

தூயவன் 84-படங்களுக்குத் திரைக்கதை வசனம் தீட்டியுள்ளார். 7 படங்களைச் சொந்தமாக தயாரித்துள்ளார். ‘வைதேகி காத்திருந்தாள்’, அன்புள்ள ரஜினிகாந்த அவற்றுள் சில.

தூயவன் எழுதிய சிறுகதைகள் இன்னும் நூல் வடிவம் பெறவில்லை.

நன்றி : முனைவர் ஹ.மு.நத்தர்சா
(80-களில் இஸ்லாமியத் தமிழ் சிறுகதைகள்)

தொடர்புடைய சுட்டி :

தூயவனைப் பற்றிய விவரங்கள் – நாகூர் ரூமியின் வலைத்தளத்திலிருந்து

மடி நனைந்தது – தூயவன் கதை

ஆபிதீன் பக்கங்கள்

 

திரைக்குப் பின்னால்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடைய வலைப் பதிவிலிருந்து :

Nadodi Mannan Ramakrishnan

வலைப்பக்கங்களில் சில அபூர்வமான கட்டுரைகள் வாசிக்க கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் ஆபீதீனின் வலைப்பக்கத்தில் நாகூர் படைப்பாளிகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது இவ்வளவு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்தது. கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது அது யாருடைய கதை, யார் வசனம் எழுதியிருக்கிறார்கள் என்று கவனித்துப் பார்ப்பேன். அது போலவே யார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒன்று.

சமீபத்தில் நாடோடி மன்னன் படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதோடு அவரது வாழ்க்கை வரலாற்றை இந்த வலைப்பதிவில் அறிந்து கொண்ட போது சந்தோஷமாகவும் தற்போதைய அவரது நிலையை அறிந்த போது நெகிழ்வாகவும் இருந்தது. அவரைப்பற்றிய கட்டுரை இதோ:

- எஸ். ராமகிருஷ்ணன்

Ravindar

‘கலைமாமணி’ ரவீந்தர்

எழுதியவர் : முனைவர் ஹ.மு.நத்தசா

நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.

வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.

ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.

காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு ‘ரவீந்தர்’ எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.

சிறுவயதிலேயே அரபி,. உருது, பாரசீக மொழிகளில் வழங்கப் பெரும் கதைகளில் ஞானம் வாய்க்கப் பெற்றிருந்தார் ரவீந்தர். சிரிப்பு நடிகர் ‘டணால்’ தங்கவேலு, ‘நாம் இருவர்’ புகழ் சி.ஆர்.ஜெயலட்சுமி இணைந்து நடித்த ‘மானேஜர்’ எனும் மேடை நாடகத்திற்கு கதை வசனம் எழுதி அதன் வழி எம்.ஜி.ஆரின் அறிமுகத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் ‘குலேபகாவலி’. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸூம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.

1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.

இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.

எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான ‘அடிமைப்பெண்’ படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.

32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.

சிவாஜி நடித்த படம் ஒன்றுக்கும் ஜெமினி நடித்த படம் ஒன்றுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த ‘பாக்தாத் பேரழகி’ படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.

1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.

எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.

நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.

ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது ‘என்ன வேண்டும்?’ என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.

ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

ரவீந்தருக்கு தயக்கம். ‘என்ன விஷயம்?’ என்றார் எம்.ஜி,ஆர். ‘உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?’ என்று ரவீந்தர் கேட்டதற்கு ‘புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்’ என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.

அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த ‘இணைந்த கைகள்’ படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.

நாகூர் நேஷனல் பள்ளியில் ஏழாவது வரை படித்த இவர் பிறகு லண்டன் மெட்ரிக் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.

‘கன்னி’, ‘குற்றத்தின் பரிசு’, ‘பெண்ணே என் கண்ணே’ ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ள ரவீந்தர், ‘பூ ஒளி’ என்ற பெயரில் 1947-ல் நாகூரில் பத்திரிகை நடத்தி இருக்கிறார்.

‘குலேபகாவலி’ போன்று ‘அப்பாஸ்’ என்னும் சுவையான அரபுக் கதையை அதே பெயரில் திரைப்படமாக்க முயற்சி செய்து, இவரே சொந்தமாக தயாரித்து இயக்கத் தொடங்கினார். கே.ஆர்.விஜயா, மனோரமா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. நிதி நெருக்கடியால் பாதியிலேயே நின்று போனது அப்படம்.

தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி ‘கலைமாமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தார்.

பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.

அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்.

இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!

- ஹ.மு.நத்தர்சா – தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002

நன்றி : ஆபிதீன்பக்கங்கள்.

தொடர்புடைய சுட்டி : நாடோடி மன்னன் vs காதலா? கடமையா?

 

கவிஞர் ஜபருல்லாஹ்

zafarullah.jpg 

வாயில் நுழையாத பெயர்

எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது என்னுள் முளைவிட்டிருந்த கவியாற்றலை கண்டுக்கொண்டு நாகூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் மீலாது விழாவில் எனக்கு கவிதை பாடுகின்ற வாய்ப்பினை அளித்தார் எங்களூரைச் சேர்ந்த H. ஜக்கரியா எனும் தமிழார்வலர். அவருடைய இடைவிடாத முயற்சியினாலும், பிரமாண்டமான ஏற்பாட்டினாலும் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கியக் கொண்டாட்டத்தினால் நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும்  பிரபலமான தமிழறிஞர்களும், இஸ்லாமியப் பெரியார்களும் கலந்துக்கொண்ட மாநாடு அது. ஊரின் நடுநாயகமாக வீற்றிருந்த ‘நியுபஜார் கடைத்தெரு’வில் நாயகத் திருமேனியின் பிறந்தநாள் விழாக் கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

எனக்கு மேடையேற வாய்ப்பளித்த தமிழார்வலர் H.ஜக்கரியா அவர்களின் மைந்தர்தான் இன்று தமிழகத்தில் நடைபெறும் ஆன்மீக, இலக்கிய, கட்சிக் கூட்டங்களில், தன் நகைச்சுவை பேச்சாலும், சொல்லாற்றலாலும் முத்திரை பதித்துவரும் கவிஞர் இஜட் ஜபருல்லா அவர்கள்.

அன்று நடைபெற்ற மீலாதுவிழா கவியரங்கத்தில் உள்ளுர்க்கவிஞர்கள் இஜட். ஜபருல்லா உட்பட கஃபூர்தாசன், அபுதல்ஹா, கலைமாமணி நாகூர் சலீம் போன்றோர் மேடையில் கவிதை பொழிந்தார்கள். சிறுவனாக இருந்த நானும் அந்த கவிவாணர்களின் கூட்டத்தில் கவிதை வாசித்து அவையோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

கவியரங்கங்களில், மரபுக் கவிதைகளே அதிகம் இடம்பெற்றிருந்த அக்கால கட்டத்தில், அவரது புதுக்கவிதைபாணி அவர்பால் என்னை வெகுவாக ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து, சில காலத்திற்குப்பின் (சுமார் 30 ஆண்டுகட்கு முன்னர்) எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த திட்டச்சேரியில் ஒரு மீலாதுக் கவியரங்கம் நடைபெற்றது. சுவரொட்டிகளில் கவிதை பாடுவோர் வரிசையில் கவிஞர் இஜட் ஜபருல்லா அவர்களின் பெயரும் இடம் பெற்றிருந்தது. என் தந்தையிடத்தில் வம்படித்து அனுமதி வாங்கிக் கொண்டு, துணைக்கு ஒரு ஆளையும் அழைத்துக் கொண்டு அவரது கவிமழையில் நனைவதற்காகச் பக்கத்து ஊர் சென்றேன்.

இளம் பிராயத்தில் என்னிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. சட்டைப்பையில் ஒரு பாக்கெட் நோட்டும், பேனாவும் எப்போதும் கைவசம் இருக்கும். கவிஞர் இஜட். ஜபருல்லா மேடையில் ஏறி கவிதைமழை பொழிய, என் மனதில் நின்ற வரிகளை அவசர அவசரமாக கிறுக்கிக் கொண்டேன். அங்ஙனம்  எழுதிய ஒரு பாக்கெட் புத்தகம் நேற்று என் தற்செயலாக கண்ணில் சிக்கியது. ஏதோ ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத்துவிட்டதைப் போன்றதொரு சந்தோஷம் எனக்கு.

அன்று அந்த கவியரங்கத்தில் அவர் பாடிய இக்கவிதை வரிகளை நிச்சயம் அவர் கூட பாதுகாத்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அதனை இங்கே பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அழைப்பிதழ்களிலும், சுவரொட்டிகளிலும் கவியரங்கத்திற்கு தலைமை தாங்கப் போவதாக அறிவித்திருந்தவரின் பெயர் வேறு. அன்று மேடையில் தலைமை தாங்க அமர்ந்திருந்தவர் வேறொருவர். அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் நம் கவிஞர்.

இங்கு மாறிய தலைமையில்
மன்றம் நிகழினும் – இது
தேறிய தலைமை

என்று கவிஞர் ஆரம்பித்ததும் அவையோர்களின் முகம் மலர்ந்ததோ இல்லையோ அவைத்தலைவரின் முகம் மலர்ச்சியடைந்து விட்டது. யாருக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காது? சமயத்திற்கேற்ப சமயோசித அறிவுடன் சரளமாய் வந்த வரிகளைக் கேட்டதும் சோர்வுற்றிருந்த அவையோர்கள் உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்காரத் தொடங்கி விட்டார்கள்.

தன்னை உதவாக்கரையாய் படைக்காமல், உருப்படியான ஒரு மனிதனாகப் படைத்த இறைவனுக்கு நன்றியைச் சமர்ப்பிக்கிறார் நம் கவிஞர். நயமான கவிதை வரிகளில் ‘ஒருபிடி” “உருப்படி” என்ற சொற்களை வைத்து இவர் ‘வார்த்தை ஜாலம்’ புரிகையில், நாம் அவர் கவியாற்றல் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலும் “ஒரு படி” மேலே சென்று விடுகின்றார்.

ஒருபிடியின் மண்ணாலே
உயிருள்ள பொருளாக்கி
உருப்படியாய் இப்பதியில்
உலவவிட்ட இறையவனின்
அடிபணிந்து அவையோர்முன்
படிக்கின்றேன் இக்கவிதை

என்ற கவிதை வரிகள் இதமாக நம் மனதை மயிலிறகால் வருடுவதைப்போல் இருக்கின்றன.

கஃபூர் தாசன், சாந்திதாசன், பூபதிதாசன், கதிர்தாசன். இதயதாசன் என்று தங்களுக்குத் தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டு கவிஞர்கள் மகிழ்ந்த காலம் அது. அந்த மேடையிலும் நிறைய தாசன்மார்கள் வீற்றிருந்தார்கள். அவர்களையும் புகழ்ந்து தனக்கு ஆதரவு திரட்டிக் கொள்கிறார் நம் கவிஞர்.

காசுக்காய் இம்மண்ணில்
தாசிகளாய் ஆனவர்கள்
பலபேர்கள் – இங்கோ
நேசம் வைத்த காரணத்தால்
தாசனாகி போய்விட்ட
மாசுஇலா கவிஞர்கள்
இவர்கள் .. ..

தலைமையேற்றவரை தனது பக்கம் இழுத்ததோடு நிற்காமல், சக கவிஞர்களையும் தன்னிடம் சரணாகதி அடையச் செய்து விடுகின்றார் கவிஞர். 
 
அவைத் தலைவரை புகழ்ந்தாகி விட்டது. மேடையில் இருந்த மற்ற கவிஞர்கள்மீதும் ஐஸ்கட்டியை வைத்தாகி விட்டது. இப்பொழுது ஊர்மக்கள்தான் பாக்கி. அவர்களுக்கு சோப்பு போட வேண்டாமா? அவர்கள் கோபித்துக் கொண்டால்.. ..?  கைத்தட்டல் கிடைக்காமல் போய்விடும். கைத்தட்டல் கிடைக்காவிட்டால்..? கவிதை எடுபடாது. கவிதை எடுபடா விட்டால்..? கவிஞருக்கு புகழ் வந்து சேராது. எனவே ஊர்க்காரர்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார் கவிஞர்.

இது
இட்டமுள்ள மக்கள்வாழ் ஊர்
இவர்கள்
திட்டம் போட்டு வாழ்வதினால்
திட்டச்சேரி ஆனதோ..?
என் கவிதை கேட்டபின்னர் – இது
திட்டும்சேரி ஆனாலும் ஆகலாம்.

இப்படி கிலோ கணக்கில் ஐஸ் வைத்தால் யார்தான் திட்டுவார்கள்? கூட்டத்தினரின் முகபாவத்தை ஒரு நோட்டமிட்டேன். காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனமாக கேட்க ஆரம்பித்தார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் அவர்களைப் பாரட்டும் வரிகள் எதையாவது ‘மிஸ்’ பண்ணி விடுவோமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

இப்பொழுது கவிதையின் தலைப்புக்கு வருகிறார் கவிஞர்.

வாழ்கின்ற மனிதரெலாம்
காவியமாய் ஆவதில்லை
வள்ளல்நபி வாழ்க்கையே – ஒரு
வற்றாத காவியமாம்

என்ற வரிகள் மனதைத் தொடுகின்றன. அண்ணலாரின் வழிமுறைகள் அழகிய முன் மாதிரி அல்லவா? அந்த வாழ்க்கையைத்தான் வற்றாத காவியம் என்கிறார் கவிஞர்.

‘மண்ணகத்தின் இகழ்வு மாற்றி; பொன்னகத்தின் உயர்வு சாற்றி’ ஒரு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கிய மாநபியின் மாண்புகளை அவர் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, கவியரங்கம் களை கட்டுகிறது.

பெண்சேய் பிறந்தால்
மண்ணில் புதைக்கும்
மடமை பழக்கங்கள்

மழையை வேண்டி
மாட்டின் வாலில்
தீயை மூட்டும்
மாயஜாலக் கதைகள்

அவைகள்
அரேபிய மண்ணின்
மலிவுப் பதிப்புகள்

மானிடரை நல்வழிப்படுத்த வேண்டி ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகளை இத்தரைக்கு அனுப்பி வைத்ததாக திருமறை கூறுகிறது. படைத்தவனைப் ‘படைப்பாளி’யாக்கி அழகிய உவமைளோடு ஒப்பிட்டு மகிழ்கிறார் நம் கவிஞர்.

ஒப்பற்ற எழுத்தாளன்
ஒருலட்சத்து இருபதினாயிரம்
எழுதிய தொடர்கதை

நபிகள் ..
இறைவன் எழுதிய
தத்துவக் கதையின் முற்றுப்புள்ளி

இறைவன் எழுதிய
பற்பலக் கதையின்
முத்திரைக் கதை

காருண்ய நபியை, ‘கதை’ என்று சொல்வதை விட கவிதை என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக அமைந்திருக்குமோ?

இலக்கணம் பிசகாத கவிதை அல்லவா அது? எதுகைக் கேற்ற மோனையாய். மோனைக்கேற்ற எதுகையாய் சந்தம் பிறழாத சாந்தமே உருவான ‘ஆசிரியப்பா’ அல்லவா அது?. அன்பாய் உருவான வெண்பா அது. அந்த ‘திருப்புகழை’ பாடப் பாட வாய் மணக்கும். அதை இறைவன் எழுதிய ‘மரபுக்கவிதை’ என்று சொல்வதா அல்லது ‘புதுக்கவிதை’ என்று சொல்வதா? ஊஹும்.. சொல்லத் தெரியவில்லை. இத்தரை போற்றும் முத்திரை நபியை ‘முற்றுபுள்ளி’ என்ற கவிஞரின் வருணனை மிகப் பொருத்தமாக இருக்கிறது.

நபிகள் நாயகம் வணிகத் தொழில் புரிந்தவர். எமன், சிரியா போன்ற நாடுகளுக்குச் சென்று துணிமணி வியாபாரம் செய்தவர். நம் கவிஞரும் நபிகளை வியாபாரி என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவரது பார்வையில்  ‘வியாபாரக் கண்ணோட்டம்’ முற்றிலும் வேறுபடுகிறது.

கவிஞர் சொல்வதைப் பாருங்கள் :

நபிகள் வணிகர்.
நம் பாவ மூட்டைக்குப் பதில்
புண்ணிய பொருளை
மாற்றித்தரும்
பண்டமாற்றுக் காரர்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்னர், இக்கவிதை வரிகளை, கசங்கிபோன அந்த பாக்கெட் டயரியில் கண்டெடுத்து படித்துப் பார்த்தபோது, இதுபோன்ற உவமைகளை கண்டு வியந்துப் போனேன்.

என்னமாய் ஒரு சிந்தனை? எத்தனை கருத்தாழமிக்க சொற்கள்? எப்படிப்பட்ட சமயோசிதமான இடைச்செருகல்கள்?

நான் வெளிநாட்டுக்கு சம்பாதிக்க வந்தபின் இந்த மாபெரும் கவிஞனுடன் நெருக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. விடுமுறையில் சென்றபோது ஓரிருமுறை சந்தித்து உரையாடியதுண்டு. ஆபிதீனின் வலைப்பதிவில் அவ்வப்போது இந்த கவிஞனின் படைப்பாற்றலைக் காணும்போதெல்லாம் என் மனதுக்குள் பொங்கி எழும் பாராட்டுக்களை ஒருநாள் நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது செய்கிறேன்.

தொடக்கத்தில் மணிவிளக்கு போன்ற மாத இதழ்களில் “பர்வீன்” என்ற புனைப்பெயரில்  சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த இவர், அதற்குப் பிறகு பெரும்பாலோர், குறிப்பாக மாற்றுமதச் சகோதரர்கள்; வாயால் உச்சரிக்கச் சிரமப்படும் பெயரை வைத்து கொண்டே தமிழகத்து மூலை முடுக்குகளில் எல்லாம் வலம் வந்து வெளுத்துக் கட்டுகிறாரே என்று வெளியூரில் நான் கண்ட சுவரொட்டிகளில் “கவிஞர் இஜட் ஜபருல்லா பி.ஏ., பி.ஜி.எல்.” என்ற இவர் பெயரைக் கண்டு நான் வியந்ததுண்டு.

சென்ற முறை விடுமுறையில் திருச்சியில் என் கல்லூரி நண்பர் குணசேகரனைச் சந்தித்தேன். “உங்க ஊரு கவிஞரு நேத்து நடந்த கூட்டத்துலே சும்மா பிச்சு உதறிட்டாரு. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி கண்டுடுச்சு” என்று சொன்னார்.

“எங்க ஊருலே எத்தனையோ கவிஞரு இருக்காங்க. அவரு பேரு என்னா?” என்று கேட்டேன்.

“அதுதாங்க. வாயிலேயே நுழையாத பெயரா இருக்குமே.” என்றார்.

எனது இஷ்டக் கவிஞர் இஜட் ஜபருல்லாவைத்தான் இவர் சொல்கிறார் என்பது சட்டென்று புரிந்துப் போனது.

பெயர் – வாயில் நுழையா விட்டால் என்ன? எல்லோர் மனதிலும் இலகுவாய் இவர் நுழைந்து விடுகிறாரே என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.

- அப்துல் கையூம்

நாகூர் புலவர் ஆபிதீன்

- இஜட். ஜபருல்லா

இவரின்
சந்தப் பாடல்கள்
சாகாவரம் பெற்றது!
இவர் -
சொந்தப் பாட்டுதான்
சோகத்தில் முடிந்தது!

இவரின்
வார்த்தைகள்
வளமாய் செழித்தன !
வாழ்க்கைதான்
வறுமையில் அழிந்தது!

இவர் பாடல்கள்
எல்லா ராகங்களிலும்
இனித்தது!
இவர் வாழ்க்கையில்
‘முகாரி’ மட்டுமே
ஒலித்தது!

நிறைய பாடகர்கள்
இவர் பாடல்களாலேயே
அறிமுகம்!
பாடகர்கள் மட்டும்
இவர் பக்கம்
பாராமுகம்!

நன்றி பற்றி
இவர் பாடல் எழுதவில்லை!
காரணம்
யாருமே இவரிடம்
நன்றியைக் காட்டவில்லை!

‘ஈட்டியில் முனையில்
நிறுத்திய போதும்
ஈமான் இழக்க மாட்டோம்’
என
இறைவன் மேலேயே
ஆணையிட்டவர்!
இவர் -
ஈமானை மட்டுமல்ல
இறுதிவரை
தன்மானத்தையும்
இழக்காதவர்!

இவருக்கு பிடித்தது
ராகத்தில் தோடி
எப்போதும் பீடி!

 

நாகூர் கந்தூரி

கைலிக் கடைகளின்

‘கட்-அவுட்’ திருவிழா..!

‘காதல் தேசம்’

‘காதல் கோட்டை’

புடவைகள் பெயர்கள்..!

பூரிப்பில் பெண்கள்…!

பாரின் சாமான்கள்

மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்

விடாது ஒலிக்கும்

சட்டுவ சங்கீதம்

முட்டை புறாட்டா மணம்

மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்

கப்பல்கள்

தெருவில் ஓடும்

ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு

கொடிகள் ஏறும்

விமரிசையாக..!

நாகூர் கந்தூரி -

இங்கு

இரவிலும் சூரியன்..!

மொழிகளை எல்லாம்

இரண்டறக் கலந்து

செவிட்டில் அறையும்

கேஸட் அலறல்கள்…!

‘மேட்-இன்’

செவ்வாய்க்கிரகம்

என்றும்

முத்திரை குத்தும்

வித்தைக்காரர்கள்..!

தர்ஹா உள்ளே

காணிக்கை எல்லாம்

உண்டியல் போட

கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து

பாத்திஹா கடைகள்

தாயத்து டிசைன்கள்

விற்பனை அங்கு-

மொத்தமாகவும்

சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்

சிற்ப வேலைகள்..!

அதை

வெள்ளியாய் மாற்றும்

ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்

நாட்டியத்தோடு

களி நடம் புரியும்

இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக

மிச்சப் பணத்தில்

கரும் புகையோடு

வாண வேடிக்கை

கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்

எழுமிச்சைப் பழங்களில்

பிள்ளைவரத்தை

தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்

பூக்களை வீசிப்

பரவசப்படும்

பக்த கோடிகள்..!

‘ஐயா..தருமம்..!’

என்ற

அபஸவரத்தோடு

ஊரே நிறைந்த

பிச்சைக்காரர்கள்..

அவர்களுக்கு

சுகத்தைக் கொடுக்கும்

சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்

தொண்டற் படைகள்

உண்டியலோடு..!

இகபர உலகில்

நன்மைகள் வேண்டி

இரண்டே ரூபாயில்

ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட -

அந்த -

மகானை -

நினைத்தும் – துதித்தும்

சில

மனித மனங்கள்…

-இஜட். ஜபருல்லாஹ்
————————————————————————————- 

  

இறைவா ..! 

இறைவா
என் ‘இபாதத்’ இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும் போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
‘கலிமா’வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
‘தவ்ஹீது’க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
‘ஒதுவீராக’
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

————————————————————————————–

தொடுசுகம்

————-

எண்ணும்

எழுத்தும்

கண்ணெனப்படும்…!

எண்ணமும்

செயலும்

இறைவனைத் தொடும்…!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

தேவை

———-

 

இறைவா…

என்ன வேடிக்கை பார்!

தேவைகளே இல்லாத

உன்னிடம் -

எங்கள் தேவைகளைக்

கேட்கிறோம்…!

உனக்கு நாங்கள்

தேவையில்லாமல் இருக்கலாம்..!

எங்களுக்கு எப்போதும் நீ தேவை!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

 

மாறுதல்

———–

நரக நெருப்பு

பாவிகளை

சுத்திகரிக்கிறது…!

சொர்க்கச் சுகமோ

மெய்யடியார்களை

மறுபடியும்

‘பழைய’ ஆதமாக

ஆக்கிவிடுகிறது…

 

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

 

பிரமை

———

இனிக்கிறது

நேற்றைய நினைவுகளும்

நாளைய கனவுகளும்.

இன்று

எப்போதும்போல

கசப்பாகவே…

ஒருவேளை

நாளை இன்றாகி

கசக்கும்போது

இன்று நேற்றாகி

இனிக்குமோ?

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

நீருக்கும் நெருப்புக்கும்

பகையென்று யார் சொன்னது?

நீர்

நெருப்பை

‘அணைக்கத்தானே’ செய்கிறது?

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers