RSS

Category Archives: Uncategorized

அடி ஆத்தி !


ஆங்கிலத்தில் ‘Banana Lazy’ என்ற சொற்பதத்தை யாரும் கையாள்வதில்லை. “வாழைப்பழ சோம்பேறி” என்ற வார்த்தையை நாம்தான் பயன்படுத்துகிறோம்.

ஆனைக்கு கவளச்சோறு கொடுப்பதைப்போல் உருண்டை பிடித்து ஊட்டி வளர்ப்பது தமிழன்தான் போலும்.

“ஊரெங்கும் திண்ணைக் கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?” 

என்று கண்ணதாசன் தமிழனைப் பார்த்துதானே பாடினான்?

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படித்த காலத்தில் ஜங்ஷன் அருகிலுள்ள “ஹோட்டல் டி ப்ராட்வே”யில் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. (பிளாட்பாரக் கடைக்கு பசங்க இப்படித்தான் பெயர் வைத்திருந்தாங்க).

புறாட்டாவை நாறு நாறாய் பிய்த்துப் போட்டு அதற்கு மேல் குழம்பை ஊற்றுவான் சப்ளையர். நண்பன் ஹாஜாவுக்கு சப்ளையர் பிய்த்துப் போடாததினால் வந்ததே கோபம். அப்பப்பா! ரகளை பண்ணி விட்டான். 

“அவுங்களுக்கெல்லாம் பிய்ச்சு போடுறே? எனக்கு மட்டும் பிய்ச்சு போடலே ஏன்? பிய்ச்சுடுவேன் பிய்ச்சு” என்று ரகளை பண்ணிவிட்டான். அவன் முத்தாய்ப்பாய் “பிய்ச்சிடுவேன்” என்று சொன்னது புறாட்டாவை அல்ல; சப்ளையரை.

அது போகட்டுமுங்க. சிலபேருக்கு காப்பியை கொண்டு வந்து அவர்கள் கண்முன்னே ஆற்றிக் கொடுத்தால்தான் திருப்தியே ஏற்படும். மேலே காணப்படும் இந்தப் புகைப்படம் இலங்கை புகைப்பட நிபுணர் ஒருவர் நாகூர் ஹோட்டலில் எடுத்தது. சுவரில் சாட்சிக்காக தேசத்தலைவர்கள் வேறு. அந்த புகைப்படத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால் “இப்படியொரு வாழைப்பழ சோம்பேறியாக இருக்கிறீயே?” என்று திட்டித் தீர்த்திருப்பார்கள்.

இந்தப் பதிவு மட்டும் நடிகர் விவேக் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். கண்ணில் பட்டால் தன் அடுத்த படத்திற்கு தமிழனுக்கு மெசேஜ் சொல்ல இதை அபேஸ் பண்ணினாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.

- அப்துல் கையூம்

 
2 Comments

Posted by on January 27, 2010 in Uncategorized

 

Nagore IT Web site

இது நாகூர் நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட COMPUTER சம்பந்தமான WEBSITE.
நண்பர்கள் தங்களின் கணிப்பொறி சம்பந்தமான தகவல்களை nagoreit@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்

 
2 Comments

Posted by on January 25, 2010 in Uncategorized

 

கலைஞர் உரை

AnnaMuka

(21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:

“என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் – பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் – நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் – பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபாவின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”

முழு உரை

 
Leave a comment

Posted by on October 31, 2009 in Uncategorized

 

எஸ்.ஏ.அசோகன்

S.A.Asokan 

அனிபாவின் எடுப்பான குரலும், பாடல்களின் பகுத்தறிவுக் கருத்துக்களும் அண்ணாவுக்கு மிகவும் பிடித்து விட்டன. தான் கலந்துக் கொண்ட கூட்டங்களுக்கு அனிபாவை அழைத்தார், அண்ணா. இருவருக்கும் பாசப் பிணைப்பு இறுகி வந்தது.

அடுத்த கூட்டம் அரியலூரில் நடந்தது. அண்ணா பேசினார். அனிபாவுக்கும் அழைப்பு வந்தது, போயிருந்தார்.

கூட்டம் தொடங்குமுன், அந்துவான் என்ற இளைஞர் பாட விரும்புவதாக அண்ணாவிடம் சொன்னார். “அனிபாவிடம் கேட்டுக்கொள்” என்று அண்ணா கூறினார். அனிபாவிடம் கேட்க, “சரி, பாடுங்கள்” என்றார். அந்துவான் மேடையேறி ஓரிரு பாடல்கள் பாடினார்.

இந்த அந்துவான் யார் தெரியுமா?

பிற்காலத்தில் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற எஸ்.ஏ.அசோகன் !

நன்றி : அ.மா.சாமி

 

அல்லாமா இக்பால்

images
“இஸ்லாத்தை ஏற்று சாந்தி பெற்றவனே!
என்றாவது நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா?
எஃகினாலான வீரவாள் எத்தகு பொருளென்று?
இறைஏகத்துவத்தின் இரகசியங்களைப்
பொதிந்து வந்துள்ள பாடலின் முதலடியே அது!
எனக்கோ அவ்வீரடிப்பாவின் ஈற்றடியின் கவலைதான்
‘எளிமை’ என்னும் வாளை அல்லாஹ் உனக்கு அருள்வானாக!
இறை நம்பிகையாளனின் கைப்பிடியில்
இந்த வாளும் வந்துவிடின்
கதிகலக்கும் காலிதாகவோ,
அடலேறு அலீயாகவோ ஆகிவிடுவான்!”

- அல்லாமா இக்பால் (ஜர்பே கலீம்)

 
Leave a comment

Posted by on October 19, 2009 in Uncategorized

 

கலைஞரின் கண்ணியம் – ஆதனூர் சோழன்

hanifa

கலைஞரின் கண்ணியம்அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா. தமிழக அரசு சார்பில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபம் நிரம்பி வழிகிறது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் திமுக தலைவர்கள், தொண்டர்கள் என்று எல்லோரும் முதல்வர் கலைஞரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.விழா தொடக்கத்தில் சீர்காழி சிவசிதம்பரம் தனது குழுவினருடன் அண்ணாவின் புகழ்பாடும் பாடல்களை பாடினார்.

அவரைத் தொடர்ந்து திமுகவின் பழம்பெரும் பாடகர் நாகூர் அனிபா தனது குழுவினருடன் பாட வந்தார்.  “எனக்கு 84 வயது ஆகிவிட்டது. ரம்ஜான் மாதம் என்பதால் நோன்பு கடைப்பிடிக்கிறேன்”முன்கூட்டியே கூறிவிட்டார். அதாவது, தனது குரலில் பிசிறு ஏற்படக்கூடும் என்பதைகூறிவிட்டார். அதற்கேற்றபடியே, அவர் உச்சஸ்தாயிக்கு செல்லும்போது சிரமப்பட்டார்.

“எங்கே சென்றாய்? எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?” பாடலை அவர் பாடி முடித்தார். அடுத்து கலைஞரைப் பற்றி ஒரு பாடலை பாடத் தொடங்கினார். சில வரிகள் பாடிய நிலையில் முதல்வர் கலைஞரும், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மேடை நுழைவாயிலுக்கு வந்துவிட்டனர்.இந்த தகவலை அனிபாவிடம் கூறினார்கள். அதாவது பாடலை முடிக்கும்படி அவர்கள் நாசூக்காக தெரிவித்தனர்.அனிபா அதை கேட்கவில்லை.

இதற்குள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்துவிட்டனர். அனிபா தொடர்ந்து பாடினார். மேடையில் இருந்தவர்கள் பரபரத்தார்கள். ஸ்டாலின் மேடையின்  ஒரு ஓரத்தில் சாய்ந்து நின்று கொண்டார். அனிபா பாடலை பாடி முடிக்கும்வரை அவரை யாரும் தொந்தரவு செய்யவில்லை. பாடி முடித்த பிறகு அரங்கில் அவருக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அதைத்தொடர்ந்துதான் கலைஞரும் மற்ற தலைவர்களும் மேடைக்கு வந்தனர். அரங்கம் அதிர்ந்தது.கலைஞர் வீல் சேர் இல்லாமல் தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் கைத்தாங்கலோடு நடந்து வந்தார்.“தலைவரை நடக்கவிட வேண்டாம்” என்று தொண்டர்கள் குரல் எழுப்பினார்கள்.

பிறகு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் பலரும் கவனிக்கத் தவறிய ஒருவிஷயம் உண்டு.பத்திரிகையாளர்கள் வரிசையில்கூட, அனிபாவின் குரலை, எதைப்பற்றியும் கவலைப்படாத பாடிய முறையை சிலர் விமர்சித்தார்கள்.ஆனால், அனிபா இந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு மேடையில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அனிபா பாடி முடிக்கும்வரை காத்திருந்த கலைஞரின் கண்ணியத்தை மெச்சத் தவறிவிட்டனர். இதுவே திருமதி ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்திருந்தால் பாடகர் பாதியிலேயே எழுந்து ஓடியிருப்பார் என்பதை அவர்கள் யோசிக்கவே இல்லை.தமிழகத்தில் உள்ள கட்சிகளில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டுமே கட்டுப்பாடும் கண்ணியமும் காக்கப்படுகிறது என்பதற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் இது.

- ஆதனூர் சோழன்

தொடர்புடைய சுட்டி : தமிழ் மறை தமிழர் நெறி

 

Living Legend on Living Legend

scan0008

[கலைஞர் மு. கருணாநிதியின் தோள்மீது உரிமையோடு கை போட்டு அரவணைத்துப் பேசும் தகுதி நாகூர் அனிபா ஒருவருக்குத்தான் உண்டு என்பது இந்த புகைப்படத்தைப் பார்த்தாலே நன்கு விளங்கும்] 

வாழும் இசை சரித்திரத்தை வாழ்த்தும் வாழும் இலக்கியச் சரித்திரம்

 

                                                   (கலைஞரின் வாழ்த்துரை)

 

கத்துகடல்சூழ் நாகையைத் தழுவி நிற்கும் நாகூர் அனிபாவுக்கு முத்து விழாவாம் !

முத்துவிழா, பவழவிழா, வைரவிழா, மாணிக்க விழா என எத்தனையோ நவரத்தின விழாக்கள் நடத்தலாம் !

இசையெனில் புகழ் எனவும் பொருள் உண்டு. இவரோ இசைமுரசு ! ஆம் ! முரசென இசை முழங்குபவர் ! இளமை முதல் இவர் பெற்ற புகழும் அவ்வாறே !

அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறுபிராயம் தொட்டு நாகூர் அனிபாவை அறிவேன் !

அன்று கேட்ட அதே குரல் ! வளமிக்க குரல் ! அனைவரையும் வளைக்கும் குரல் ! ஆதிக்கக்காரர்களின் செவிப்பறையைக் கிழிக்கும் இடியோசைக் குரல் !!

அந்தக் குரல் மட்டுமா இன்றளவும் நிலைத்து நிற்கிறது? – அவர் நெஞ்சில் பதித்த கொள்கை உறுதியுமன்றோ ஆடாமல் அசையாமல் அப்படியே நிலைத்து நிற்கிறது.

உலகில் இஸ்லாமியப் பெருமக்கள் வாழும் இடமெல்லாம் இவர் குரல் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது !

பல்வேறு நாட்டுத் தமிழ் மக்கள் இந்த இசைமுரசம் கேட்டு நரம்பு முறுக்கேறிடத் தலை நிமிர்கின்றனர் !

பெரியார் பெயரை உச்சடித்தால், அண்ணாவின் பெயரைச் சொன்னால் ஒருவித முகக்கோணலுடன் சமுதாயத்தில் பலர் பார்த்து ஒதுக்கிய நேரத்தில் – அவர்களின் பெயரைச் சொன்னால் பிழைக்கவே முடியாது எனும் அச்சுறுத்தல் ஆட்டிப் படைத்த நேரத்தில் – இந்த இயக்கத்தில்
தன்னை ஒப்படைத்துக் கொண்டு, மேடை தோறும் இசைமுழக்கம் செய்த
அனிபாவின் இளமைத் தோற்றத்தையும் கண்டிருக்கிறேன். இன்று என்னை விட ஓரிரு வயது குறைந்தவராயினும் நரைத்த தாடியுடன் கழகத்தின் கொடிமரமாய் மிடுக்காகத் திகழ்வதையும் கண்டு பூரிப்புக் கொள்கிறேன்.

ஏறத்தாழ 40 ஆண்டுக்கு முன்பு என நினைவு. கழக ஏடு “நம்நாடு” இதழில் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது. “அழைக்கின்றார் அழைக்கின்றார்.. அண்ணா” என்பது பாட்டின் எடுப்பாகும். அதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது, “இந்தப் பாடலை பாடுவதற்கு ஏற்ற குரல் நாகூரில்தான் இருக்கிறது என்று !

அழைப்பு விடுத்தேன் பாடச் சொல்லி ! மெட்டு அமைத்து பாடிக்காட்டினார் ! அந்தப் பாடல், அனிபாவுக்கு திருவாடுதுறை ராஜரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ! எங்குச் சென்றாலும் அதைப் பாடச் சொல்கிறார்கள். நான் எழுதிய திரைப்படம் ஒன்றில் அந்தப் பாடலை அனிபாவே பாட வேண்டுமென்றேன். பாடினார். ஆனால் அந்தக் காலத்துத் தணிக்கை அதிகாரி அந்தப் பாடலை வெட்டிவிட்டார்.

1957-ஆம் ஆண்டு கழகம், பொதுத்தேர்தல் களத்தில் குதிப்பது என முடிவெடுத்தபோது நாகை சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் இசைமுரசு அனிபா அவர்கள்தான். அந்தத் தேர்தலில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தைப் பெரும்பாலும் இசைநிகழ்ச்சி வாயிலாகவே நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. அதற்காக அவர் சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து கழக மேடைகளில் இசைமுரசு கொட்டத் தொடங்கினார். சட்டமன்ற மேலவையில் நாகூர் அனிபா அவர்கள் இடம் பெற்றிருந்தபோது கருத்துக்களை இசையாகவே பொழிந்து அனைவரையும் கவர்ந்தார்.

வெறும் இசைவாணர், கழக மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்துகிறவர் என்றில்லாமல் கழகம் நடத்திய போராட்டங்களில் சிறை புகுந்தவர். ஒரு காலகட்டத்தில் திருச்சிச் சிறையில் நானும் அவரும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் அடைக்கப்பட்டிருந்தது, நினைத்தாலே நெஞ்சினிக்கும் நிகழ்ச்சி.

அளவு கடந்த பாசத்தை என்மீது கொட்டி, பற்றினைக் கழகத்தின் மீது காட்டி கழகத்தினரின் பேரன்பைப் பரிசாகப் பெற்றுள்ள இசைமுரசு அனிபா அவர்கள், இஸ்லாமியப் பெரியோரும் இளைஞரும் மகிழ்ந்து போற்றத்தக்க அளவுக்கு நபிகள் நாயகம் அவர்களைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களை இன்னமும் வானொலி நிலையம் ஒலிபரப்புவதையும், தொலைக்காட்சி நிலையம் நிகழ்ச்சியாக்க்கிச் சித்தரிப்பதையும் கண்டு, கேட்டு களிப்புறாதவர் எவர்?

பாலப்பருவ முதல் நானும் அனிபா அவர்களும் இணந்து நடத்தும் இலட்சியப் பயணம், இடையூறுகளை, சோதனைகளை, வேதனைகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

என் மீது இவருக்கு எவ்வளவு அன்பு இருந்தால் இவர் உழைத்துச் சம்பாதித்துக் கட்டியுள்ள நாகூர் இல்லத்துக்கு “கலைஞர் இல்லம்” என்று பெயர் சூட்டியிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இதயம் விம்முகிறது – பூரிப்புத் தாங்காமல் !

இனியும் வாழ்க பல்லாண்டு இசைமுரசு அனிபா என வாழ்த்துகிறேன் !

மு.கருணாநிதி

(இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் 70-வது பிறந்தநாளுக்கு முத்துவிழா மலர் வெளியிட்டபோது கலைஞர் வழங்கிய வாழ்த்துரை இது)

தொகுப்பு : அ.மா.சாமி
நன்றி : அண்ணா அறிவாலயம் நூலகர் சுந்தரராசன்

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers