சமரசம் பத்திரிக்கையின் மதிப்புரை
இதழ் : சமரசம் 1 – 15 ஆகஸ்ட் 2007
மதிப்புரை வழங்கியது : தாழை எஸ்.எம்.அலீ
நாகூர் என்றவுடன் தர்காவே நினைவுக்கு வரும். அங்குள்ள மினாரக்களோடு புறாக்கள் விளயாடும் காட்சி நெஞ்சுக்குள் பகல் கனவுகளாய் நடமாடும். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பிருக்கும். நாகூருக்கோ பல்வேறு சிறப்புகள். அது அலைவாய்க்கரையூர், தொடர்வண்டித் தொடர் முடியும் ஊர், சோழ மண்டலக் கடற்கரையின் நடுவிலுள்ள ஊர், பிரஞ்சு எல்லையிலுள்ள பாரம்பர்ய வணிகர்களின் ஊர், கலையும், இலக்கியமும் கைகோர்த்து நடக்கும் ஊர் எனப் பல்வேறு சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வூரில் பிறந்த கவிஞர் அப்துல் கையூம் ‘அந்த நாள் ஞாபகம்’ எனும் பெயரில் தன் இளமைக் கால நினைவுகளை கைச்செண்டு கவிதைகளாய்க் கொண்டு வந்துள்ள பாங்கு போற்றுதற்குரியது. ஊர்க்கதைகளை நதி போலவோ, சிற்றாறு போலவோ சொல்லாமல் ஊற்றுச் சுரப்பாக கவிஞர் சொல்லியிருப்பதில் எளிமையும் இனிமையும் பீரிடுகிறது. தர்காவையும் அதன் பிம்பத்தையும் காட்டுகிறார் பாருங்கள் :
மறவை எனும் பெரிய வட்ட ‘சஹனில்’ நாலு பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இன்றும் கடலோரக் கிராமங்களில் உண்டு. அதையும் கவிஞர் ஞாபகப்படுத்துகிறார். ஓரிடத்தில் இளமைக்கால பறவை வேட்டையை இயல்பாக சொல்கிறார்.
‘சுங்குத்தான் குழல்ஊதி
சுட்டக் களிமண்
சூறாவளியாய் தாக்கி
சுருண்டிடும் குருவி’
நீண்ட குழலை வாயில் வைத்து சுட்ட களிமண் உருண்டையால் குருவியை வேட்டையாடும் பாங்கும் கடலோரக் கிராமங்களிலுள்ள கலையே. வாய்க்காற்று சூறாவளியாக மாறியதை சொல்லாமல் சொல்வது சுருண்டு விழும் குருவிகள்தான்.
அந்த நாள் ஞாபகங்களை சில கவிதைகள் மட்டும் சொல்லவில்லலை; கவிஞரின் எல்லாக் கவிதைகளுமே ‘செலுலாய்டு பிலிம்’களாக மாறிச் செல்கின்றன.
‘துயில் காணும் நேரத்திலும்
தொடர்கதை போன்று
தோன்றுகின்ற பழங்கதைகள்
துரத்துது இன்று’
என நூலின் இறுதிக்கு முன் கூறுவது நமக்குந்தான்.
இந்நூலை மிக விரைவாக படித்து முடித்த நம்மை நூலில் உள்ள அந்த நாள் ஞாபகங்கள் நம்மையும் துரத்துவது உண்மைதான். நூலை படித்து முடிக்கும்போது அணிந்துரையில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறியது நெஞ்சில் நிழலாடுகிறது.
“கவிஞர் கையூமுக்கு பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது.” ஈரோட்டுக் கவிஞர் பழுத்திருக்கிறது எனச் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாகூர்க் கவிஞர் நூலின் ஒவ்வொரு கவிதையிலும் மெய்ப்பித்திருக்கிறார்.
அறிமுக உரையில் வாழ்த்துக் கூறும் ஹ.மு.நத்தர்சா “நாகூர் தர்காவுக்கு உண்டு ஒரு அலங்கார வாசல்! ஒட்டு மொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப்போய் நிற்கிறது நாகூர் மனாரா” எனக் கூறுவது உண்மை என்பதைக் கவிஞர் கையூம் மெய்ப்பித்துள்ளார்.
One response to “சமரசம் பத்திரிக்கை மதிப்புரை”