நாகூர் அனிபாவின் பெருமைக்கும் சிறப்புக்கும் முதல் காரணம் அவருடைய ஆசிரியரான புலவர் ஆபிதீன்தான்.
இவரும் நாகூர்க்காரர்தான். நாகூர் தர்கா புலவராகத் திகழ்ந்தார். நாலாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று அவரைப் பற்றி ஆய்வு செய்த நண்பர் நாகூர் சொல்லரசு மு. ஜாபர் முகைதீன் அவர்கள் கூறியுள்ளார்.
ஆபிதீன் புலவர் மட்டுமல்ல. அவர் ஒரு முத்தமிழ் வித்தகர். பாடல்கள் எழுதினார். மேடைகளில் தானே பாடினார். நாடகங்கள் எழுதினார். தானே நடித்தார். எழுத்தாளர், இதழாளர், இதழாசிரியர். ஓவியங்கள் தீட்டுவார், அச்சுக் கோப்பார். ஆங்கிலம், உருது, மலாய், பர்மி, சிங்கள மொழிகள் தெரியும்.
புலவர் ஆபிதீனின் தந்தையார், முகம்மது உசைன் சாகிபு மரைக்காயர். தாயார் சுல்தான் கனி அம்மையார். உடன் பிறந்தோர், ஒரு சகோதரர், இரு சகோதரிகள்.
ஆபிதீன் ஒரு பிறவிப் புலவர். புலவர்களுக்கே உரிய வறுமை அவரை வாட்டியது. நாகூரில் சிறுசிறு தொழில்கள் செய்துக்கொண்டே, பாடல்களும் எழுதினார்.
“நவநீத கீதம்” என்ற அவரது பாடல் தொகுதி (பத்துப்பாடல்கள் கொண்டது) 1934- ஆம் ஆண்டில் நாகையில் அச்சாகி வெளிவந்தது. அப்போது அவரது பெயர், மு. ஜெய்னுல் ஆபிதீன்.
வறுமைக்கு புகலிடம் தேடி ரெங்கூனுக்குப் போனார். அங்கு தமிழ் இதழ்களில் பணியாற்றினார். பாடல்களும் எழுதினார். பாடவும் செய்தார். 1935-இல் “திருநபி வாழ்த்துப்பா” என்ற அவரது கவிதைத் தொகுதி ரெங்கூனில் நடந்த நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது. “மு.ஜெ.ஆபிதீன்” என்ற பெயரில் அது வெளிவந்தது.
இரண்டாவது உலகப் போரின் போது 1942-இல் ரெங்கூனில் சப்பானிய விமானங்கள் குண்டு வீசின. அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்கள் ஊரைக் காலி செய்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு நடந்தே வந்தார்கள். அப்படி வந்தவர்களில் புலவர் ஆபிதீனும் ஒருவர்.
1947-இல் ஆபிதீன் சிங்கப்பூருக்குப் போனார். அங்கு முதலில் விளம்பரப் பலகைகள் எழுதும் ஓவியராக இருந்தார். பிறகு அங்கு வெளிவரும் “மலாயா நண்பன்” என்ற நாளிதழில் வேளைக்குச் சேர்ந்தார். துணை ஆசிரியராக இருந்து, நிர்வாக ஆசிரியராக உயர்ந்தார்.
பிறகு ஆபிதீன் கொழும்புக்குச் சென்றார். அங்கும் இதழ்ப்பணி தொடர்ந்தது. அங்கு 1949-இல் “தேன்கூடு” என்ற அவரது கவிதைத்தொகுதி “புலவர் ஆபிதீன்” என்ற பெயருடன் வெளிவந்தது.
பின்பு நாகூருக்குத் திரும்பினார். “அழகின் முன் அறிவு” (1960), “முஸ்லீம் லீக் பாடல்கள்” (1961) என்ற அவரது நூல்கள் இங்கு வெளிவந்தன.
“பயோனியர் வாட்ச்” என்ற கடிகார விற்பனைப் பிரதிநிதியாகவும் நாகூரில் ஆபிதீன் பணியாற்றினார். அத்துடன் பாடல்கள் எழுதினார். மேடைகளில் கச்சேரி செய்தார். நாடகங்களில் நடித்தார். கெளதியா சபை புலவராகவும் விளங்கினார்.
இந்த நேரத்தில்தான் நாகூர் அனிபா புகழ் பெற்றுக்கொண்டு வந்தார். அவரது பாடல்களைக் கேட்ட புலவர் ஆபிதீன், தான் பாடுவதை நிறுத்திக்கொண்டு, அனிபாவுக்குப் பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அதுமுதல் இருவரும் “நாகூர் இரட்டையர்” என்று புகழ்பெறத் தொடங்கினார்கள் என்பார், சொல்லரசு ஜாபர் முகைதீன்.
புலவர் ஆபிதீன் பாட்டு எழுதுவார்; அனிபா பாடுவார்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பாட்டு. ஒவ்வோர் ஊருக்கும் ஒரு பாட்டு. அவ்வளவு வேகமாக ஆபிதீன் எழுதினார்.
ஒரு ஊருக்குக் கச்சேரி செய்ய அனிபா போவார். அவருடன் புலவர் ஆபிதீனும் செல்லுவார். பேருந்தில் போகும்போதே அவர் ஒரு பாட்டு எழுதிவிடுவார். அனிபா அதற்கு இசை அமைத்துப் பாடிவிடுவார். அவ்வளவு வேகம்!
ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரியில் “புலவர் ஆபிதீன்” என்று தனது பெயர் பொறிக்கும் வழக்கம் வைத்திருந்தார்.
அவர் வறுமையில் வாடிய போதெல்லாம் சங்கு வாப்பா முகமது அபூபக்கர் தாராளமாக உதவி செய்தார். “மெய்யைவிட்டு உயிர் மறையும் வரையும் கையை மேலாய்க் காத்துக் கொண்டவர்” என்று அவரைப் பற்றி புலவர் ஆபிதீன் பாடியிருக்கிறார்.
புலவர் ஆபிதீனுக்கு இரண்டு மனைவிகள்.
முதல் மனைவி நாகூர் ஜெய்னபு நாச்சியார். இவருக்கு மூன்று குழந்தைகள்.
இரண்டாம் மனைவி, சென்னை ஆமினா அம்மா. இவருக்கு நாலு பிள்ளைகள்.
1966 செப்டம்பர் 23-இல் புலவர் ஆபிதீன் காலமானார்.
அவரது 9 நூல்கள் வெளிவந்தன. 3 நூல்கள் அச்சேறவில்லை.
நாகூர் கெளதியா பைத்து சபையின் அவைப்புலவராக ஆபிதீன் இருந்தார். அவரை “காக்கா” (பெரியவர்), “நானா” (அண்ணன்) என்று மரியாதையாக அழைப்பார்கள்.
குளச்சலில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் கலந்து கொண்டார்கள். அங்கு
நாட்டின் இரு கண்கள்
நல்லவர்கள் போற்றும்
வல்லவர்கள் இவர்கள்
நாட்டின் இரு கண்கள்
என்ற பாடலை ஆபிதீன் எழுத, இசைமுரசு பாடினார். இப்பாடலே புலவர் ஆபிதீன் கடைசியாக எழுதிய பாட்டு.
எழுதியவர் : அ.மா.சாமி
புகழ் முகட்டில் புலவர் ஆபிதீன்
சொல்லரசு. மு. ஜாபர் முஹ்யித்தீன்
‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்’
காற்றினிலே வரும் கீதமாகவோ ஏட்டினில் இடம்பெற்ற பாடலாகவோ நம்மை கவரும் கவிதைகள் உள்ளத்தை ஊடுருவனவாகவும், உணர்வலைகளை எழுப்பக் கூடியனவாகவும் செவிக்குளிர செய்வனவாகவும் சிந்தைக்கு இன்பம் தருவனவாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு ஆன பாடல் அர்த்தம் பொதிந்ததாக, அறிவு செறிவின் அடையாளமாக ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடாக அங்கீகாரம் பெறும். காலமெல்லாம் ஆளுமை செலுத்தும்.
உணர்வின் வெளிப்பாடாக வார்த்தை வரிவடிவங்களில் உருவெடுத்த கவிதைகள் அழுத்தமிக்கதாக ஆளுமைத்திறன் கொண்டதாக அமைந்துவிட்டால் பாடிய புலவன் புகழ்முகட்டில் நின்று பாடம் நடத்துவான். அத்தகு நிலை எய்தியவன் இறந்தும் இறவாத ஏற்றம் பெற்றவன் ஆவான். அப்படி அமரகவி ஆன அறிவு சான்றோர் ஆயிரம் ஆயிரம் பேர் அன்றும் வாழ்ந்தார்கள்; இன்றும் வாழ்கிறார்கள்; இனியும் வாழ்வார்கள். வாழும் வரம் பெற்றவர்கள் அவர்கள்.
புலமையின் காரணத்தால் பாடிக் குவித்து புகழ்மேவியவர்களுள் (நாகூர்) புலவர்கோட்டை தந்த நற்றமிழ்ப் புலவர் ஆபிதீனும் ஒருவர். கன்னல்சுவை மிகுந்த கவிதைகளால் கனல் தெறிக்கும் சொல் வன்மையால் கருத்தாழம் மிக்க படைப்பிலக்கியங்களால் அவர் அறிமுகமானார். அவர் மொழிப்புலமை மிக்க கவிஞர். சொல்லாற்றல் உடைய எழுத்தாளர். எழுத்து வன்மை கொண்ட இதழாசிரியர். மதிக்கப்பெற்ற மேடை நாடக ஆசிரியர். நற்றமிழ் இசைப்பாடல்கள் இயற்றிய நாடறிந்த இசைவாணர். ஆக அவர் முத்தமிழ் வித்தகர்.
தமிழை தாய்மொழியாக கொண்ட அவருக்குத் தெரிந்த மொழிகள் ஆங்கிலம், உருது, மலாய், பர்மா ஆகியவனவாகும். ஓவியங்கள் தீட்டவும் அச்சுக் கோர்க்கவும் திறன் பெற்றிருந்த அவர் அவ்வப்போது சிறு வணிகம் புரிந்தாலும் பாட்டு எழுதுவதையே வாழ்நாள் நெடுகிலும் தொழிலாகக் கொண்டிருந்தார். தேவைக்குரிய வருவாய் இன்றி வருவாய்க்கேற்ற வறிய வாழ்வினை நடத்தினார்.
எண்ணிக்கையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்தார். யாப்பிலக்கணம் கூறும் எல்லா வகை பாடல்களையும் எழுதியுள்ளார். சித்திர கவியும் அவருக்குத் தெரியும். பாடல்கள் புனைவதற்கு ஏற்ற ஒரு சூழலுக்காக ஒதுங்கி நின்றதில்லை. தேவை என்று சொன்னால் போதும். ‘திடீர்’ கவிதைகள் தீந்தமிழில் தருவார். எந்த நேரத்திலும் எவ்வித நிலையிலும் எழுதிடும் அவர் தூங்கும்போது மட்டும் எழுதியது இல்லை. அவர் எழுதிய கவிதைகளுக்கு பண்சாராக் கவிதைகள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. பாட்டு எழுதுவதையே தொழிலாகக் கொண்டிருந்த அவர் எழுதிய பாட்டிற்காக பெருந்தொகை எதுவும் பெற்றதாக – பிழைப்பிற்கு வழி செய்து கொண்டதாக – இல்லை. ஒரு கோப்பைத் தேத்தண்ணீருக்காவும் பாடல் எழுதியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அவர் பெற்ற கூடுதல் தொகை ரூபாய் 80 (எண்பது) என்றும் கூறி வைத்துள்ளார்.
இந்தியத் துணைக்கண்டத்தில் வடபுலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். கடல் கடந்து இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலாயா என்றெல்லாம் சுற்றி வந்துள்ளார். சென்ற இடங்களில் எங்கும் அவர் சோம்பித் திரியவில்லை. சுறுசுறுப்பாக இயங்கியுள்ளார். சமுதாய சேவையிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்குப் புகழ் சேர்த்த அளவு பொருள் சேரவில்லை. அருள் தேடி அலைந்த அவர் அதுபற்றி கவலைப்பட்டு கலங்கி நிற்கவில்லை. அதே நேரத்தில் அவர் சஞ்சலங்களுக்கும் சபலங்களுக்கும் ஆளாகி தடம் புரளவும் இல்லை; திசை மாறவும் இல்லை. தீனுக்கு – வாய்த் தீனுக்கு அல்ல – உழைத்த தீரர் அவர்.
இளமைப் பருவத்தில் அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் இறைமாட்சியையும் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்-ம்) அவர்கள் வாழ்வியல் வழிகளை விளக்குவதாகவும். இறை நேசச் செல்வகளின் ஏற்றமிகு வழிமுறைகளை விவரிப்பனவாகவும் சமுதாய உணர்வூட்டும் செய்திகளாகவும் அமைந்து இருந்தன. அருமையான பாடல்கள் அவருக்கும் அவர் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பவைகளாகவே இருந்தன. நாகூரின் பண்டைய பெருமை மிக்க அமைப்புகளில் ஒன்றான கௌதிய்யா சங்கம் சார்பிலான பைத்து சபாவின் ஆஸ்தான புலவர் ஆனார் ‘ஆபிதீன் காக்கா’. அண்ணனை ‘காகா’ என்றும் ‘நானா’ என்றும் அழைப்பது நாகூர் முஸ்லீம் வழக்கு.
கௌதிய்யா பைத்து சபாவின் ஆஸ்தான புலவர் ஆபிதீன் இயற்றிய உணர்ச்சிக் கொப்பளிக்கும் உயர் தமிழ்ப் பாடல்களை விழாக்களிலும் ஊர்வலங்களின் பொது வீதிகளிலும் பாடியவர்கள் பலர். அவர்களும் குறிப்பிடத்தக்கவர் இன்று புகழ் மணக்கும் இசைப்பாடகராக வாழும் இசைமுரசு அல்ஹாஜ் இ.எம். ஹனீபா ஆவார். அன்றக்கும் அதன் பின்னர் பல ஆண்டுகளிலும் வட்டார பைத்து சபாவினர்களும் பாடகர்களும் புலவர் ஆபிதீன் பாட்டுக்களையே விரும்பி பாடி வந்தனர்.
சமுதாய அமைப்பான முஸ்லீம் லீக்கிற்கு , நீதிக்கட்சிக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொள்கை விளக்க பாடல்களை எழுதியவர் அவர். தமிழக அரசியலில் அவருடைய பாடல்களின் முழக்கம் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அர்த்தம் தொனிக்கும் அழகிய பாடல்களால் பாடுவோரும் பாடல் ஒலிக்கும் நிகழ்ச்சிகள் மாநாடுகளும் களை கட்டும். அவ்வப்போது கூடி நிற்கும் மக்கள் எழுப்பும் கரவோசை கடல் அலையையும் மிஞ்சும்.
புலவர் ஆபிதீன் பெற்றிருந்த பன்முகத்திறன் அன்று பரவலாக பேசப்பட்டது என்னவோ உண்மை. அவரது வாழ்க்கை வரலாறு அவருடைய வாய்மொழிகளில் வெளிச்சப் பகுதிக்கு வந்தது 1958ஆம் ஆண்டு டிசம்பர் மாத மணி விளக்கு இதழிலும் 1962ஆம் ஆண்டு ஜூலை மாத பிறை இதழிலும்தான். அவ்விரு இதழ்களிளும் இடம்பெற்ற நேர்காணலில் நெஞ்சம் திறந்து பேசியுள்ளார். நினைப்பையும் நிலையையும் உரைத்துள்ளார். அன்றைய நிலையில் அவரது எழுத்துக்கள் ஒன்பது நூல்களாக வடிவம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று நூல்கள் அச்சேறாமல் பெட்டியில் தூங்குவதாகவும் கூறியுள்ளார். அவை பற்றிய விபரம் இன்று வரை தெரியாத ஒன்று. ‘நானிலங் கண்ட நபிமார்கள்’ என்ற தலைப்பிலான நூல் ஒன்று அச்சில் இருப்பதாக விளம்பரம் வந்தது. அப்படி ஒரு நூல் பார்வைக்கு வரவில்லை.
தேடலின் பயனாக இப்போது கிடைத்துள்ள அவருடைய ஆக்கங்கள் : (1) நவநீத கீதம். 1934ஆம் ஆண்டு நாகப்பட்டினம் லெட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. இந்நூலில் நபிகள் பெருமானார் (ஸல்-ம்) அவர்கள் திருப்பெயரிலும் சாஹ¥ல் ஹமீது ஆண்டகை அவர்கள் பெயரிலும் பாடப்பெற்ற பத்துப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. (2) திருநபி வாழ்த்துப்பா. 1935ஆம் ஆண்டு இரங்கூனில் நடைபெற்ற புனித மீலாது விழாவில் வெளியிடப்பட்டது. இரங்கூன் ஸ்ரீ ராமர் பிரஸில் அச்சிடப்பட்டது. இவை இரண்டும் காலத்தால் முந்தியவை. அவர் குறிப்பிட்டு கூறிய ஒன்பது நூல்களுள் இவை இரண்டும் சேர்ந்தவை என்று நம்பலாம். நூலாசிரியர் பெயர் ஒன்றில் மு. ஜெய்னுல் ஆபிதீன் என்றும் மற்றொன்றில் மு.ஜெ. ஆபிதீன் என்றும் அச்சிடப்பட்டுள்ளன. இரண்டு நூல்களையும் இயற்றியவர் புலவர் ஆபிதீன்தான் என்று அவர் காலத்தில் வாழ்ந்த அவருடைய நண்பர்கள் கூறினார்கள். அப்போதெல்லாம் புலவர் ஆபிதீன் என்று தெரியப்படவில்லை. ஆரம்ப காலம் அது.
அதன்பின்னர் 1949ஆம் ஆண்டு இலங்கை கொழும்பிலிருந்து புலவர் ஆபிதீன் கவிதைத் தொகுப்பு ‘தேன்கூடு’ என்ற பெயவில் வெளிவந்தது. அந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சில சொட்டும் தேன் துளிகள். சில கொட்டும் தேனீக்கள். மொத்தத்தில் அந்நூல் பல்சுவை விருந்து.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புலவர் ஆபிதீன் படைப்பு இலக்கியங்களாக – பாடல்களின் தொகுப்புகளாக – அச்சில் வந்தவை மூன்று நூல்கள். அவை முறையே , 1960-ல் ‘அழகின் முன் அறிவு’ என்ற நூல். யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் வெளியீடு. அதனை அடுத்து 1961ஆம் ஆண்டில் பாவலர் பதிப்பக வெளியீடாக முஸ்லீம் லீக் பாடல்கள் நூல் வந்தது. தொடர்ந்து இஸ்லாமியப் பாடல்கள் புலவர் ஆபிதீன் முகவரி இட்டு வந்தது. இவை மூன்றும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவை எனலாம். இவற்றைத் தவிர வேறு நூல்கள் எதுவும் தேடியும் கிடைக்கவில்லை.
பாகுசுவை தரும் புலவர் ஆபிதீன் பாடல்கள் இன்றும்கூட இசைமுரசு இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்யூசுப் ஆகியோர் குரல்களில் வானொலி, தொலைக்காட்சி , ஒலிநாடாக்கள் ஆகியவைகளில் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் ஒலிக்கின்றன. நாகூர் தர்கா ஆஸ்தான இசைவாணர், வித்துவான் எஸ்.எம். ஏ. காதிர், இசைமுரசு அல்ஹாஜ் இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்.யூசுப், இசைத்தென்றல் ஹெச்.எம்.ஹனிபா, காரைக்கால் எம்.எம்.தாவூது, திருச்சி கலிபுல்லாஹ், மதுரை எஸ். ஹ¥ஸைன்தீன் , இலங்கை மெய்தீன் பேக் ஆகியோரும் பிறரும் பாடிய புலவர் ஆபிதீன் பாடல்கள் புகழ் குவித்தவைகளாகும்.
1947-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்றிருந்த அவர் அங்கு விளம்பரப் பலகைகள் எழுதிடும் ஓவியராகத் தொழில் புரிந்தார். சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்களின் சிறப்பிற்கு சிறப்பு சேர்த்த நாளிதழ் / வார இதழ் ‘மலாயா நண்பன்’ ஆகும். அதன் ஆசிரியர்களாக பல நல்லறிஞர்கள், நாடும் போற்றும் நல்லவர்கள் பொறுப்பேற்று பணியாற்றிய வரலாறு அதற்கு உண்டு. அறிஞர் மு.கரீம் கனி அவர்கள் ஆசிரியராக வீற்றிருந்த காலம் அதன் பொற்காலம். அந்தக் காலகட்டத்தில் புலவர் ஆபிதீன் மலாயா நண்பனின் ஆசிரியராக பணிபுரிந்தார். அறிஞர் கரீம்கனி, மணிமொழி மௌலானா கலிலூர் ரஹ்மான் ஆகியோர் நட்புறவின் பயணாக அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் வெளிப்பாடான கருத்துக்களுக்கு தமிழ் கவிதை வடிவம் கொடுக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்களின் வாழ்வு அசைவுகளை அன்று பிரதிபலித்த மலாயா நண்பன் நாளிதழ், மற்றும் வார இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய நாகூரைச் சேர்ந்த மூவருள் புலவர் ஆபிதீன் முதலாமவர் ஆவார். குறுகிய காலம் பணியாற்றினார் என்றாலும் அதன் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உழைத்தார். மலாயா நண்பன் நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்பேற்ற நாகூரைச் சேர்ந்த இரண்டாமவர் எஸ்.எஸ். முஹ்யித்தீன். இவர் நீண்ட காலம் பணிபுரிந்தார். அவரை அடுத்து வார இதழின் துணை ஆசிரியர் பொறுப்பேற்று பணிபுரிந்தது நான் (மு. ஜாபர் முஹ்யித்தீன்). 1962ல் மலாயா நண்பன் நிறுத்தப்பட்டு விட்டது.
எந்த நிலையிலும் நேரத்திலும் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து இனிய கவிதைகளாக வழங்கிடும் வல்லமை பெற்றிருந்த அவர் குறிக்கோளும் கொள்கை பிடிப்பும் கொண்டவர். சமுதாய உணர்வுடன் சலியாது சேவை புரிந்தவர். அவர் பாடல்களில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று மிகுதியாக காண முடிகிறது. உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளம் போல பொங்கி வந்தவை. அவற்றில் தமிழ் துள்ளும். தரங்கெட்டவர்களையும், தீயவர்களையும் எள்ளும் எனில் சரியான மதிப்பீடு ஆகும்.
தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், கேரள சிங்கம் முஹம்மது கோயா, பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ., அரசியல் ஞானி வடகரை பக்கர்,சொல்லின் செல்வர் ஆக்கூர் எம்.ஐ.அப்துல் அஜீஸ், கலைக்களஞ்சியம் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம், சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமத் ஆகியோரும் பிறரும் பெரிதும் பாராட்டியுள்ளார்கள். வறுமையில் வாடி வருந்தியபோதெல்லாம் உள்ளன்புடன் உதவிக்கரம் தீட்டியவர்களில் சங்கு வாப்பா முகம்மது அபூபக்கர் குறிப்பிடத்தக்கவர். ‘மெய்யை விட்டு மறையும் வரையில் கையை மேலாய்க் காத்துக் கொண்டவர்’ சங்குவாப்பா என்று பாடிச் சென்றுள்ளார் புலவர் ஆபிதீன்.
***
‘எல்லாம் வல்ல ஏகனுக்கல்லால்
எவருக்கும் அஞ்ச மாட்டோம்’
முஸ்லிம் என்பவர் யார், அவர் எப்படி இருப்பார் எத்தகைய வாழ்வினர் என்று யாரும் கேட்டு அறிவதில்லை. அப்படிப்பட்ட தேவை எதுவும் இல்லை. எல்லோரும் தெரிந்து வைத்துள்ளனர்; அறிந்து வைத்துள்ளனர். இது உலகு எங்கனும் நிலவும் உண்மை நிலை. இன்றைய நிலையில், நேற்று பெய்த மழையில் முளைத்து நிற்கும் காளான்கள் (நாய்க்குடை என்பது நாகரீகம் அல்ல) நல்ல ஒழுக்கமும் நெறிமுறை தவறாத வாழ்வும் சொந்தமாகக் கொண்ட முஸ்லீம்களைப் பார்த்து ‘நீங்கள் முஸ்லீம்களா?’ என்று வினா எழுப்பும் வேதனை நிலை. நாம் அந்த நிலைகெட்ட மனிதர்களைப் பார்த்து நெஞ்சு பொறுக்க முடியாமல் நொறுங்கி கிடக்கிறோம் என்பது வேறு விஷயம்.
புலவர் ஆபிதீன் , முஸ்லிமாக , அதுவும் முழு முஸ்லீமாக வாழ்ந்தவர். மற்றவர்களுக்கு முன்மாதிரி முஸ்லீமாக வாழவேண்டும் என்று உளமார விரும்பியவர். அவர் எழுதிய பாடல்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிச்சப் புள்ளிகளாக ஒளிர்வது உணரப்பட்டவை; ஒப்புக்கொள்ளப்பட்டவை. அந்த பாடல்களில் ஒன்றில் சில வரிகள் முஸ்லிம்களை பிறருக்கு அறிமுகம் செய்து வைத்து, அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கும் அடையாளம் காட்டுகிறார்; அறிவுறுத்துகிறார்.
‘இறைவன் மேலாணை, இறைமறை மேலாணை’ என்று சத்திய வாக்கை முன்வைத்து தொடரும் பாடலின் பக்கம் பார்வையை செலுத்துவோம். அந்தப் பாடல் வரிகள்:
‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மைக்
கனவிலும் விடமாட்டோம்!
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓட மாட்டோம்.’
கூனர்களை நிமிரச் செய்யும் கெடுமதியாளர்களை நாணச் செய்யும் கூர்மையான வார்த்தைகள் வேறு வேண்டுமா? அத்துடன் அவர் நின்றார் இல்லை; நிலை கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. நம்மைச் சுற்றி பார்வையை செலுத்துகிறார். நம்மை பற்றி நம்மிடையே நாடகம் ஆடும் அரிதாரம் பூசாத நடிகர்களைப் பற்றி பாடுகிறார். பார்வையை கூராக்கிக் கொள்ளுங்கள்.
ஊருக்கு உபதேசம் உள்ளத்துப் படுமோசம்
பேருக்கு தாடியும் பெருமையாந் தொப்பியும்
பாருக்கு தேவையா பாசாங்கு பண்ணுதல்
யாருக்கும் நலமாய் ஆகாது அறிவீர்.ஈனம் இவையற இனியேனும் விடுமின்
ஞானம் இல்லாதவை நமதல்ல நீக்கு
மானம் வளர்ந்திட மதியை செலுத்து
தானம் புரிந்துயர் தைரியம் கொள்க
இவ்வரிகள் இன்றைய நமது எதிரிகளாக வலம் வருவோர்க்காக எழுதப்பட்டவைகளாக தோன்றுகிறது. உள்ளம் குழம்பி, ஊரையும் குழப்பத்தில் ஆழ்த்திடுவோர் உலவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆள்காட்டி விரல் நீட்டி அடையாளம் காட்டுவதாக உணரப்படுகிறோம், இல்லையா? அவ்வாறு ஆயின் அவருடைய தூர நோக்கு தெரிய வருகிறது. தூய வழிமுறை தெளிவாகிறது.
முன்பெல்லாம் புலமை மிக்க பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களின் இறுதியில் தனது பெயரை இலாவகமாக பொறிப்பார்கள். இதற்கு புலவர் ஆபிதீன் விதிவிலக்காக இல்லை. கொஞ்சம் வேறுபட்டு வித்தியாசமாக பாடியுள்ளார். தியாக செம்மேறுகளான இம்மாம் ஹஸன் (ரலி), இமாம் ஹூசைன் (ரலி) ஆகியோர் வரலாற்றை விளக்க முனைந்தவர் புனைந்த பாடல் ஒன்று ‘இருக்கண்கள் நம் ஹஸன் ஹூஸைன் வாழ்வே..’ என்று தொடங்கும். பாட்டின் நிறைவுப் பகுதியின் ஈற்றடியில் ‘ஜெய்னுல் ஆபிதீனைத் தவிர யாருமில்லை தீனோரே’ என்று வருகிறது. வரலாறு காட்டும் கர்பலா களம் கண் முன் வருகிறது (இமாம் ஹூஸைனாரின் இளவயது மகன் ஜெய்னுல் ஆபிதீனைத் தவிர மற்றனைவரும் கொல்லப்பட்டனர்).
எடுத்த காரியங்களை முடித்த வகையில் அவர் சாதனையாளராகவே உருவெடுத்து இருந்தார். வீர உணர்வு மிக்க வரி வடிவங்கள், கேட்பவர்களையும் படிப்பவர்களையும் விழித்தெழ வைக்கும், வீறு கொள்ளச் செய்யும். அதில் அவருடைய தனித்துவம் உருவம் காட்டும். இறை இல்லங்களான மஸ்ஜித்கள் – பள்ளிவாசல்கள் – இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்பிற்குரியவைகளாகும். அவற்றில் வணக்க வழிபாடுகள் நடைபெறும் என்பதை எல்லோரும் அறிவார்கள். எடுத்ததெற்கெல்லாம் பயன்படுவது இல்லை. பயன்படுத்துவதும் இல்லை. இதற்காக மட்டும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகள் உண்டு.
சில ஊர்களில் சில முஸ்லிகளின் செயல்பாடுகள் சிறப்பிற்குரியவைகளாக இருப்பதில்லை. இந்நிலை விபரம் தெரிந்தவர்களை வேதனைக்குளாகிட செய்கிறது. இது என்னவோ உண்மை. எங்கோ எப்போதோ சஞ்சலத்திற்குள்ளாகி சங்கடப்பட்டுள்ள புலவர் ஆபிதீன் அவர் பார்த்த பள்ளிவாசலை படம் பிடித்து காட்டுகிறார் இப்படி :
கஞ்சியின் கலயம் நூறு
கவலையாய் பாதுகாத்து
கட்டியே வைத்திருந்தார்
கடமையாய் நோன்புக்காக
பஞ்சுதான் சிதைந்து போன
பழையபல் தலைய ணைகள்
பத்திர மாகப் பாயில்
பதுக்கிய பண்பு பார்த்தேன்!வஞ்சகர் செருப்புத் திருட
வந்திரு ந்தார்க ளங்கே
வயதிலார் தொழுது நின்றார்
வாலிபர் யாரு மில்லை
துஞ்சினோர் செல்லும் பெட்டி
தூர ஓர் மூலை ஓரம்
தூக்கியே சார்த்தி வைத்த
துயர்தரும் காட்சி கண்டேன்.
முன்பொரு காலத்தில் புகழ் மிக்க மீர் முஹம்மது ஜவ்வாது புலவர் , வழிநிலையில் கண்ட பள்ளிவாசல் பற்றி பாடிய பாடல்கள் இன்றும் கூட பலரது நினைவில் நிற்பதை நாம் அறிவோம். ‘வாங்கு சொல்ல மோதீன் இல்லை..’ என்று தொடங்கும் அந்தப் பாடல் பெற்ற பள்ளிவாசல் போல் இது இல்லை என்பது ஆறுதல் தருகிறது. ஆனால் பாடலின் ஒரு வரியில் ‘வாலிபர் யாருமில்லை’ என்று வருகிறது. அவர் வாழ்ந்த காலத்து பள்ளிவாசல் அப்படி. இப்போது நிலைமை மாறிவிட்டது. வாலிபர்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்.
ஆனால் வணக்க வழிபாடு, வழிமுறைகள் இவற்றில் ஏனோ இணக்கம் இல்லை. வேறுபட்டு நிற்பதுவும், விரிசல் ஏற்படுத்துவதும் சமுதாய ஒற்றுமைக்கு ஊறு விளைவித்து வருகிறது. வேதனைக்குரிய செய்தி.
நாடு, மக்கள், மொழி ஆகியவற்றை அழகிய பாட்டுகளாக ஆக்கி தந்தவர் புலவர் ஆபிதீன். அவர் சார்ந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் சிறப்பை பல்வேறு நிலைகளில் புகழ்ந்து புகன்றுள்ளார். முஸ்லிம்களின் நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் மற்ற யாருக்கும் இளைத்தது அல்ல; சளைத்ததும் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வது எனில் முஸ்லிம்கள் சிறப்பில் மற்றவர்களை மிஞ்சி நிற்கிறார்கள்; விஞ்சி நிற்கிறார்கள். மறுக்கவொண்ணா உண்மையை சுருக்கமாக அதே நேரத்தில் சுவை குன்றாமல் சொல்லி செல்கிறார்.
பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோ றென்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!
கொஞ்சமும் ஐயத்திற்கு இடமின்றி சொல்லி வைத்த உண்மை. செம்மொழி தமிழுக்குச் சிறப்பு சேர்த்தவர்கள் நம் முன்னோர்கள். நமக்கு நல்ல வரலாறும் நனி சிறந்த வழிவாரும் உண்டு.
அறிவு செறிவும் ஆழ்ந்த புலமையும், பாட்டுத் திறனும் மிக்க புலவர் ஆபிதீன் கேலியும் கிண்டலுமாக நையாண்டிப் பாடல்களையும் எழுதியுள்ளார். மணமக்களை வாழ்த்தும் வகையிலான சோபனங்களையும் இயற்றியுள்ளார்.
தமிழ் திரைப்படைதுறையில் முத்திரை பதித்த ரவீந்தர் (நாகூரைச் சேர்ந்த இவருடைய இயற்பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா மொய்தீன். கடந்த 4-11-2004ல் இறப்பெய்தினார்). திரைக்கதை, வசனம் எழுதி புகழ் குவித்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர். அவர் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படம் ஒன்றிற்கு புலவர் ஆபிதீன் பாடல்கள் எழுதினார். ரவீந்தர் எடுத்த முயற்சி ஏனோ கைவிடப்பட்டது. படத்துக்காக எழுதப்பட்ட பாட்டுகளும் காற்றோடு போயிற்று. காணக் கிடைக்கவில்லை!
புலவர் ஆபிதீன் நாகூரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் பெயர் முஹம்மது ஹ¥சைன் சாஹிப் மரைக்காயர். தாயார் பெயர் சுல்தான் கனி அம்மாள். உடன்பிறப்புகள் மூவர். சகோதரர் ஒருவர் , சகோதரிகள் இருவர். முதற்மனைவி நாகூர் ஜெய்னம்பு நாச்சியார். மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இரண்டாவது மனைவி சென்னை ஆமினா அம்மாள். ஆமினா பெற்றெடுத்த பிள்ளைகள் நால்வர். புலவர் ஆபிதீன் குடும்பத்தினர் நாகூரிலும் சென்னையிலும் வாழ்கிறார்கள். நீண்டகாலம் சென்னையில் வாழ்ந்திருந்த புலவர் ஆபிதீன் நலமே ஊர் திரும்பினார். ஊருக்குத் திரும்பிய சில நாள்களில் , 23-9-1966 அன்று , மறுமைப் பேறு அடைந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் ஈடு செய்ய முடியாத இழப்பிற்குள்ளாகியது. அவரது இறப்புச் செய்தியை , மு. ஜாபர் முஹ்யித்தீன் எழுதியவாறு 15-10-1996 நாளிட்ட முரசொலி நாளிதழ் செய்தி வெளியிட்டது.
மகாவித்துவான் வா. குலாம் காதிரு அவர்களின் ஒரே மகனான தறுகாஹ் வித்துவான் வா.கு.மு, ஆரிபு நாவலர் உள்ளிட்ட பல புலவர்கள் கையறு நிலையில் இரங்கற்பா கவிதைகள் பாடினர். நாகூர் தெற்குத்தெரு , செய்யது பள்ளித் தெரு, பீரோடும் தெரு சந்திப்பில் புலவர் ஆபிதீன் நினைவில் ஒரு அரங்கம் கட்டப்பட்டு ‘ஆபிதீன் அரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடித்தளம் இட்டு நினைவைப் பசுமையாக்கியவர் மு. ஜாபர் முஹ்யித்தீன் என்பது பதியப்பட்ட வரலாறு.
***
‘நமது முற்றம்’ இதழில் மார்ச் – ஆகஸ்ட் (2005)-ல் வெளியான கட்டுரை
***
பி.கு : ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே மாநிலத்தை தாங்கிடவோ எங்கள் பெருமானே’ போன்ற அருமையான பாடல்களை இயற்றிய புலவர் ஆபிதீன் பற்றிய இன்னொரு கட்டுரை , சமநிலைச் சமுதாயம் (ஜூன் 2006) இதழில் வெளிவந்துள்ளது. எழுதியவர் ஜே.எம். சாலி அவர்கள். ‘ஒரு பெரும் மேதைக்கு வேண்டும் எல்லா அம்சங்களும் என்னிடம் உண்டு- உடம்பும் பணமும்தான் குறை’ என்று புலவர் ஆபிதீன் சொன்னதாக அறிஞர் R.P.M கனி அவர்கள் தனது ‘இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்’ நூலில் (1963) குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழிச் செல்வர் புலவர் ஆபிதீன் – ஜே.எம்.சாலி
(இலக்கிய இதழியல் முன்னோடிகள் தொடரிலிருந்து../ சமநிலைச் சமுதாயம் ஜூன் 2006)
‘சிறந்த கற்பனை என்பது, விரும்பியபோதெல்லாம் வந்து வாய்ப்பது அன்று. அது வாய்த்தபோதெல்லாம் அதனை விரும்பிப் போற்றுவதே கவிஞர் தொழில். தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் போற்றி மகிழ வேண்டும் என்ற நன்னோக்கத்தால் . கவிஞர்கள் அந்தக் கற்பனைகளுக்கு அழகிய வடிவம் தந்து பாட்டுகளாக வாழச் செய்கின்றனர். விழுமிய உணர்ச்சிகளும் அத்தகையனவே. நில்லாமல் மாறிச் செல்லும் அவற்றிற்குப் பாட்டுக்கள் நிலையான வடிவம் தந்து நெடுங்காலம் பலருக்கும் பயன்படுமாறு செய்கின்றன. இந்த நூலில் உள்ள பாட்டுக்களில் புலவர் ஆபிதீன் அவர்களின் உள்ளத்தில் எழுத்த விழுமிய உணர்ச்சிகளையும், சிறந்த கற்பனைகளையும் காண்கின்றோம். ‘என் மனைவி’ என்ற பாட்டு உள்ளத்தைத் தொட்டு உருக்க வல்லது. ‘வேண்டுதல்’ முதலிய பாட்டுக்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமையினும் நல்ல தமிழ் வடிவம் பெற்றுள்ளன. பெருநாள் பிறையைக் கண்டு தன் வறுமையை நினைத்து வாடும் ஏழைப்பெண் பற்றிய பாட்டு, நாட்டில் உள்ள வறுமையை எடுத்துக் காட்டுவது.’
– டாக்டர் மு.வ. அவர்கள் 1960 ஆம் ஆண்டில் புலவர் ஆபிதீனின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியே இந்த வரிகள்.
‘அழகின் முன் அறிவு’ கவிதைத் தொகுப்பு ஒரு ரூபாய் விலையில் அந்த ஆண்டில் வெளிவந்தது.
‘புலவர் ஆபிதீன் அவர்கள் நாடு அறிந்த நல்ல புலவர். அவரின் இசைப் பாட்டுக்கள் தமிழ் நாட்டின் பட்டிதொட்டிகளையும் எட்டியிருக்கின்றன’ என்று அணிந்துரையில் எழுதினார் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல , தமிழ்கூறும் நல்லுலகெங்கும் செம்மொழிப் பாவலராகத் தடம் பதித்த இலக்கிய இதழியல் முன்னோடி , நாகூர் தந்த ஆபிதீன்.
செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.
‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’
விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச் சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகின்றனர்.
புலவர்கோட்டையெனும் புகழ் பெற்ற நாகூரைச் சேர்ந்த ஆபிதீன் நாடு சுற்றிய படைப்பாளர். இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் எழுதிக் குவித்தவர்.
கவிஞர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், ஓவியர், பத்திரிக்கையாளர், பன்மொழி அறிந்தவர், சொற்பொழிவாளர், வணிகர் என் பன்முனைச் சிறப்புக்குரியவர்.
நூல்கள் :
‘அழகின் முன் அறிவு’ கவிதைத் தொகுப்புக்கு முன் ஒன்பது நூல்களை வெளியிட்டதாக புலவர் ஆபிதீன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மூன்று படைப்புகள் அச்சேறாமல் பெட்டியில் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும் சில நூல்கள் மட்டுமே கிடைப்பதாக நாகூர் இலக்கிய ஆய்வாளர் மு. ஜாபர் முஹியித்தீன் குறிப்பிட்டுள்ளார்.
நவநீதகீதம் அவற்றுள் ஒன்று. 10 பாடல்களைக் கொண்ட நூல் இது. நபிகள் பெருமானார், நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை ஆகியோர் மீது பாடப்பட்ட பாடல்களே நவநீத கீதம்.
இந்த நூல் 1934 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் லெஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது.
திருநபி வாழ்த்துப்பா எனும் பதிப்பு 1935ம் ஆண்டில் ரங்கூன் நகரில் வெளியிடப்பட்டது.
பர்மியத் தலைநகரில் நடைபெற்ற மீலாத் விழாவை முன்னிட்டு அந்நகரிலேயே இப்பதிப்பு வெளியிடப்பட்டது. கவிஞரின் பெயர் மு. ஜெய்னுல் ஆபிதீன், மு.ஜெ.ஆபிதீன் என அந்நாளில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘தேன்கூடு’ புலவர் ஆபிதீனின் மற்றொரு படைப்பு. இலங்கைத் தலைநகர் கொழும்பில் 1949-ஆம் ஆண்டில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
முஸ்லிம் லீக் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் ஆகியவை 1961-ல் வெளியிடப்பட்ட நூல்கள். மற்ற நூல்கள் கிடைக்கவில்லை.
யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1961-இல் வெளியிட்ட ‘அழகின் முன் அறிவு’ பல்சுவைப் பாடல்களின் இனிய தொகுப்பு.
இதில் பொதுஅறிவுப் பாக்களே அதிகம். இஸ்லாமியப் பண்பாடு பேசும் பாக்கள் மிகமிகக் குறைவு. காரணம் முஸ்லீம்கள் மட்டுமின்றித் தமிழ்ப் பெருங்குடி மக்களும் படிக்க வேண்டுமென்பது என் பேரவா’ என் முன்னுரையில் குறிப்ப்பிட்டிருக்கிறார் புலவர் ஆபிதீன்.
அந்நாளில் 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கிய சங்கு மார்க் நிறுவன முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு இந்த நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் அவர்.
இசைப் பாடல்கள் :
இசைப்பாடல்களை எழுதி, புகழ் குவித்த முன்னோடி தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆபிதீன்.
இளமையிலேயே அந்தத் திறனை வளர்த்துக் கொண்டதால் எடுத்த எடுப்பில் யார் கேட்டாலும் இசைப்பாடல்களை எழுதித் தந்தார். ஒரு கோப்பை தேநீருக்காவும் அவர் பாடல் எழுதியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அவர் பெற்ற கூடுதல் தொகை ரூபாய் 80 என்று கூறியதாக நாகூர் மு. ஜாபர் முஹியித்தீன் தெரிவிக்கிறார்.
ஆண்டாண்டு காலமாக ஒலித்து வருகின்றன அவருடைய பாடல்கள்.
‘மண்ணிலே பிறந்ததேனோ
எங்கள் பெருமானே
மாநிலத்தைத் தாங்கிடவோ
எங்கள் பெருமானே!’
இந்த அரிய பாடலை மறக்க முடியுமா?
இன்னொன்று
‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விடமாட்டோம்
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓடமாட்டோம்’
இசைத்தட்டில் அன்றும் இன்றும் ஒலித்து வரும் பாடல்கள் பல.
முஸ்லிம் லீக், நீதிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்குக் கொள்கை விளக்கப் பாடல்களையும் புலவர் ஆபிதீன் எழுதினார்.
நாகூர் தர்ஹா ஆஸ்தான இசைக்கலைஞர் எஸ்.எம்.ஏ. காதர், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்.யூசுப், ஹெச்.எம். ஹனிபா, காரைக்கால் எம்.எம்.தாவுது, திருச்சி கலிபுல்லா, மதுரை ஹூசைன் தீன், இலங்கை மொய்தீன் பேக் முதலானோர் புலவர் ஆபிதீனின் பாடல்களை இசையமைத்துப் பாடி வசப்படுத்தியுள்ளனர்.
இதழாசிரியர் :
நாகூரில் பிறந்து வளர்ந்த புலவர் ஆபிதீன் ஓவியராகவும் பத்திரிக்கையாளராகவும் சிலகாலம் பணிபுரிந்தார்.
மும்பை நகரில் தங்கியிருந்த காலத்தில் வணிகத்துடன் நடிக்க வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.
இலங்கையில் இருந்தபோது பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபட்டார்.
பர்மாவிலும் அவருடைய இலக்கியப் பணி தொடர்ந்தது.
அன்றைய மலாயா நாட்டில் ஆபிதீன் ஓவியப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஓவியக் கூடம் ஒன்றையும் நடத்தினார்.
சிங்கப்பூரில் இயங்கிவந்த ‘மலாயா நண்பன்’ இதழின் ஆசிரியராக (1947) அவர் பணியாற்றினார்.
காயிதே மில்லத் முதலான அரசியல் தலைவர்களின் அன்பைப் பெற்ற அவர், அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தார்.
‘அண்ணா பேச்சு; ஆட்சியாளர் அதிர்ச்சி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய அரசியல் விமர்சனத்தின் சில வரிகள் :
‘ஒரு வீட்டில் பிச்சைக்காரியொருத்தி யாசகம் கேட்டாள்.அந்த வீட்டு மருமகள் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அந்த பிச்சைக்காரி வயிற்றெரிச்சலுடன், போகும்போது மாமியார் வந்து கூவியழைத்தாள். பிச்சைக்காரி மகிழ்ச்சியோடு திரும்பி வந்தாள்.
‘எவள் உனக்கு இல்லையென்று சொன்னவள்? இந்த வீட்டுக்கு நான் எஜமானத்தி. உண்டு என்றாலும் இல்லையென்றாலும் அதை நான் தான் சொல்ல வேண்டும். இப்போழுது நான் சொல்கிறேன்: ‘இல்லை, போ’ என்றாளாம் மாமி. பாவம், பிச்சைக்காரியின் நிலையைப் பேசவேண்டுமா?
இந்த மாமியாருடைய நிலையில்தான் காங்கிரஸ் கண்ணோட்டம் இருக்கிறது’ என்று தமது பார்வையில் அந்த நாள் அரசியலை எழுதுகிறார் பத்திரிக்கையாளர் ஆபிதீன்.(மலாயா நண்பன் இதழ்). அண்ணா, காயிதே மில்லத், அனந்த நாயகி, அன்றைய பிரதமர் நேரு ஆகியோரை அந்த விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.
புலவர் ஆபிதீனை பலரும் பார்த்ததில்லை.அவரைப் பார்த்தவர்களும் இவர்தான் ஆபிதீன் என்று அடையாளம் கண்டு கொண்டதில்லை. அந்த அனுபவங்களைப் பாடலாக்கியிருக்கிறார் அவர்.
காரில்தான் போவார், கண்டால் பேச
மாட்டார் என்று நினைப்பவர்களெல்லாம்
நேரில் என்னைக் கண்டுவிட்டால் ‘பூ’
இவர்தானா என்று போய்விடுவார்கள்
என எழுதியுள்ளார். எளிமையும் வறுமையும் காரணம்
சென்னை நடைபாதையில் காய்கறிகளைப் பரப்பி கடை விரித்த அனுபவமும் அவருக்கு உண்டு. அந்த காட்சியைக் கண்ணால் கண்ட எழுத்தாளரும் நூலாசிரியருமான ஆர்.பி.எம். கனி பி.ஏ.பி.எல் அவர்கள் உடனடியாக அவருக்கு வேலை வாங்கித் தந்தார். சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் இயங்கிய ஓர் அச்சகத்தில் பிழைதிருத்தும் பணியில் சேர்ந்தார் புலவர். (வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் அவரை மண்ணடியில் (1960) பார்த்த அனுபவம் என் நினைவில் பதிந்திருக்கிறது).
சமுதாயக் கவிஞர் :
‘இறைவன் மேலாணை
இனத்தின் மேலாணை
இறைமறை மேலாணை’
என்று சங்கநாதம் செய்து உரிமைக்குரல் எழுப்பி இன முழக்கம் புரிந்த கவிஞரின் புதுப்புது பாடல்களை இனி நாம் பெற முடியாது.
சென்று முடிந்த செப்டம்ப மாதத்தில் தமிழக முஸ்லீம்கள் இரு சமுக ஊழியர்களை அடுத்தடுத்து இழக்க நேர்ந்தது. முஸ்லிம் முரசு ஆசிரியர் எஸ். அப்துல் ரஹீம் அவர்களின் மறைவுக்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பாக சமுதாயக் கவிஞர் ஆபிதீன் அவர்கள் தமது சொந்த ஊரான நாகூருக்குச் சென்றிருந்தபோது அங்கேயே (23.09.1966) காலமானார்.
‘புலவர் ஆபிதீன் அவர்களின் தீந்தமிழ்ப் பாடல்களைச் செவியுறாத தமிழ் முஸ்லிம் எவரும் இருக்க முடியாது. கேட்டவுடன் அவைகளின் ஓசை நயத்தாலும் கருத்தாழத்தினாலும் கவரப்பட்டு அவற்றை திரும்பப் பாடிப் பார்க்காத நாவும் இருக்க இயலாது. நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல பயத்தக்க நல்ல கருத்துக்கள் பலவற்றை அவ்வப்போது இயற்றிக் கொண்டு வந்தார் அவர். இஸ்லாமிய இசைச் செல்வர்கள் அவற்றைப் பாடிப்பாடி பரப்பி வந்தார்கள். சமுதாயம் பெரும் பயன் பெற்றது. ஆனால், அவற்றை அளித்த கவிஞரோ காலமெல்லாம் வறுமையில் உழன்றார்’.
‘வறுமை என்னிடம் தோற்றது’ என்று பெருங்கவிஞர்களுக்கே உரிய பாணியில் அவர் எள்ளி நகையாடும் அளவுக்கு வறுமை அதன் கைவரிசையை காட்டியது. நோயும் அதற்கு துணை நின்று பார்த்தது. அத்தகையதொரு லட்சியக் கவிஞரின் மரணத்தினால் இன்று தமில் முஸ்லிம் சமுதாயம் ஏழ்மைப்பட்டுள்ளது.’
முஸ்லிம் முரசு அக்டோபர் 1966 இதழில் சமுதாயக் கவிஞர் மறைவு எனும் இரங்கல் கட்டுரையில் சில பகுதிகள் இவை.
நினைவுச் சின்னமாக அவர் படைத்து விட்டுச் சென்ற பாட்டுச் செல்வம் நிலைத்து நிற்க சமுதாயம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
ஐம்பது வயதுக்குள் அவர் ஆற்றிய இலக்கிய சாதனைகள் அதிகம். அவர் நினைவாக நாகூரில் ஆபிதீன் அரங்கம் இருக்கிறது.
நாற்பது ஆண்டுகள் விரைந்துவிட்டன. செம்மொழிப் புலவர் ஆபிதீனின் படைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?
***
நன்றி : ஜே.எம். சாலி அவர்கள் / சமநிலைச் சமுதாயம்
‘புலவர் ஆபிதீன் அவர்கள் வாழ்வில் பெருந்துயர் அடைந்திருக்கிறார். அது அவரைப் பண்படுத்தி விட்டது. எனவே அவரின் பாக்களில் அடைவின் நிறைவை, அறிவின் செறிவைப் பரக்கக் காணலாம்’ – M.R.M. அப்துற் றஹீம் –
***
பணம் பேசுகிறது!
– புலவர் ஆபிதீன்
கடவுளால் ஆகாத காரியம் – கூடக்
கனிவுடன் செய்திங்குக் காட்டுவேன்!
மடையனை நான்மட்டும் நாடினால் – தேச
மனிதரில் மேதையாய் மாற்றுவேன்!கல்விமான் என்றாலும் என்னவோய் – இரு
கைகளைக் கூப்பிடப் பண்ணுவேன்
வல்விதி யாயினும் சத்தியம் – தனி
வல்லமை யாலதை வெல்லுவேன்!வானத்துச் சூரியன் வேண்டுமா? – அதை
வருவித்துப் பந்தயம் கட்டுவேன்!
சீனத்து வித்தையி தல்லடா! – என்னைச்
சீமையில் கேட்டாலும் சொல்லுவார்!அரசனை ஆண்டியாய் ஆக்கவா? – நல்ல
அறிவுக்குத் திரையிட்டு மூடவா?
நரகத்துக் கதவினைப் பூட்டவா? – சக்தி
நிறையவே எனக்குண்டு நம்புவாய்.உச்சியில் வைத்துனைப் போற்றவா – முழு
உண்மையைப் பொய்யாக்கிக் காட்டவா?
கச்சிதம் சேரிளம் பெண்களா? – அவர்
கற்பையே காசுக்கு வாங்கவா?பணமாக்கும் என்பெயர் தெரியுமா? – வீண்
பரிகாசம் பண்ணுதல் மடமையே
பிணங்கூட ‘ஆ’வெனத் திறக்குமே – வாய்
பிடிவாதம் செல்லாது அறிகுவாய்.
***
– ‘அழகின் முன் அறிவு’ தொகுதி (1960) –
நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
பிறையே பேசு !
பகலெல்லாம் பட்டினியாய்ப் படுத்துமிகத் தூங்கிவிட்டுப்
பண்பான நோன்பனைத்தும் பக்தியுடன் நோற்றதுவாய்
இகல்தாங்கிப் பேசுகின்ற இழிமாந்தர் தம்கூற்றை
இருணீக்கும் இன்னொளியே இளமதியே பார்த்தாயா?
சகியாமல் பசிக்கொடுமை சாப்பாடு தின்றுதின்று
சலியாது உடல்வளர்ப்பர் சற்றேனும் வெட்கமிலர்
முகிலாடை போர்த்தொளிந்து மெல்லவெளி வந்ததிரு
முழுமதியே தண்சுடரே மென்கதிரே பார்த்தாயா?
தொழுவதிலை ஏழைவரி தருவதிலை என்றாலும்
துணிமணியில் வெளிப்பகட்டில் தொங்குதவர் சன்மார்க்கம்
புழுதியுடை வாள்போலப் பூவைப்புரு வம்போலப்
புதிர்கொண்டு வளைவடிவே புதுப்பிறையே பார்த்தாயா?
பெருநாளை மட்டுமவர் பெருமைக்குக் கொண்டாடப்
புறப்பட்டார் சொகுசாகப் பள்ளிக்குக் காலிழுக்க
வருமின்பத் தென்றலுக்கு வழிகாட்டும் வட்டுருவே
வளர்ந்தேறு வென்ணிலவே வான்விளக்கே பார்த்தாயா?
உனதந்த லோகத்தில் உண்டோசொல் இத்தகைய
உரிமைகள் கொண்டாடும் உத்தமர்கள் பாதகர்கள்
எனதிந்த வையத்தில் எத்தனையோ எண்ணரிது
எழிலூட்டும் வெண்ணமுதே எம்பிறையே பார்த்தாயா?
***
– புலவர் ஆபிதீன் –
(’அழகின் முன் அறிவு’ தொகுப்பிலிருந்து)
ashraf ameen (@ZeroDesigns)
April 20, 2012 at 8:00 am
so nice….very good article…nana