“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல..”
“இதயக்கமலம்” படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடலை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். தலைவி தலைவனை நினைத்து பாடும் பாடல் அது.
பெருமானார் (ஸல்) அவர்களை தரிசிக்கும் கண்களே கண்கள், அவர்களை நினைத்து தியானம் செய்யும் மனங்களே மனங்கள், அவர்களை வாழ்த்தும் வாய்களே வாய்கள், அவர்களைத் துதிப்பதைக் கேட்கும் செவிகளே செவிகள் என்ற வண்ணக் களஞ்சியப் புலவரின் வைர வரிகள் நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கின்றன.
ஆகம கலைகட்கு அனந்த ஆபரண
அழகு எனும் திருப் பெயர் அரசை
ஏக சிற்பர மெய்ப் பொருள் ஒளி தெளிவை
எமக்கு எமை காட்டு தர்ப்பணத்தை
சேகர பல கற்பனை கடந்த உயர்ந்த
செம்மலை, நரர் உயிர்க்கு உயிராம்
தேக தத்துவ நிர்மல மகுமூதை
தியானம் செய் மனங்களே மனங்கள் !!வள்ளலை ஒருநாள் மறைக்கு அரும்பொருளை
மறைபடாது இலங்கும் ஒண் மதியை
தள்ளுதற்கு அரு மும்மலத்தையும் கடந்தோர்
தவத்தினுள் விளங்கிய கனியை
கள் அவிழ் மரவ மலர்த்தொடைப் புயரை
கருணையங் கடலினில் பிறந்த
தெள் அமுது அனைய முகம்மது நபியைத்
தெரிசிக்கும் கண்களே கண்கள் !!எப்புவியினினும் இருந்து அரசு இயற்றும்
ஏகபூரண வர(ம்) உதயத்தை
அற்புத வடிவை ஞான லோசனத்தை
அளவில் ஆனந்த வாருதியை
ஒப்பு அகன்று அகண்ட வெளியில் வாழ்ஒளியை
உள்இருள் அகற்று செஞ்சுடரை
மைப்புயல் கவிகை நபிகள் நாயகத்தை
வாழ்த்தல் செய் வாய்களே வாய்கள் !!அரிய விண்ணவர்கள் சிரம் மிசை உறையும்
மலர் சரணம் அம்புய நிதியை
உருஅரு அதனில் நடுநிலை பொருந்தும்
உத்தம காட்சி உற்பவத்தை
சரத நித்திய சோபனமணி சுவனம்
தனில் மகுமூது எனும் யானை
கிரிமிசை உலவு நபி தம்தைத் துதிப்பக்
கேட்கும் அச் செவிகளே செவிகள் !!இணைவிழி மணியை உலகின் மங்கையர்கள்
எவர்க்கும் மன் றாட்டு அருள் மானை
உணர்வதற்கு அரிய தனிமுதல் அறுசில்
உறு புலிக்கு அளித்து அவர் ஈன்ற
அணி அரிஏறு என்றிடும் இரு புதல்வர்
அங்கையால் தொட மகிழ் நபிதம்
மணி ஒளிர் திருமேனியில் கஸ்தூரி
வாசம் கொள் நாசியே நாசி !!கந்தமும் தவத்தோர் கதிகளும் நிறைந்து
கடல்வளை புவி தொடாது உயர்ந்து
தந்த வெண்பிறை பாந்தளும் வரிப் புலியும்
தாழ்ந்து பாதலம் கடந்து உருவி
அந்தரம், அவனி, கதிர், மதி அமைந்தோன்
அறுசினில் கபுசொடு நடந்து
சுந்தரம் குலவு முஸ்தபா சரணம்
தொடும் இரு கைகளே கைகள் !!பாரினில் நபிகள் எவர்களும் இவர் உம்
மத்தின் ஓர் பதவிகள் அருள் என்று
ஆரணம் உதவு தனிப்பொருள் இறைபால்
அனுதினம் துவா இரந்து அருள
வாரணத்து அரசர் நவமணி முடிகள்
மலர்ப்பதம் இறைஞ்ச ஈன்று உதித்த
காரணக் கடவுள் அகுமதைப் பிரதட்ச
சணம் வரு கால்களே கால்கள் !!
– வண்ணக் களஞ்சியப் புலவர்