அல்லாமா என்றால் அறிஞர் என்று பொருள். உலக மகாகவிகளில் ஒருவரான டாக்டர் இக்பாலை “அல்லாமா’ என்ற அடைமொழியிட்டு உலகம் அழைக்கிறது.
நாம் வாள் நிழலிலே வளர்ந்தோம்
வாள் நிழலிலேயே வாலிபமடைந்தோம்
இரு முனையும் கூர்மையான
இளம் பிறையே எங்கள் சமூகச் சின்னம்
என்று பாடினார் அல்லாமா இக்பால். அவரைப்போல பாடல்களில் இளைஞர்களுக்கு உரமேற்றும் கவிஞனை நாம் காண இயலாது.
எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம்
எஃகைப் போல உறுதியாக இருக்கிறதோ,
அந்த இனத்துக்கு வாள் தேவையில்லை
என்று அழகாக எடுத்துரைப்பார்.
இரவின் பயங்கர இருளிலே
களைப்படைந்த என் ஒட்டகப் படையை
வழி நடத்திச் செல்வேன்;
என் மூச்சு தீச்சுடரைக் கொளுத்தும்;
என் பெருமூச்சு தீப்பொறியைக் கக்கும்
என்று இஸ்லாமிய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறி தேற்றுகிறார்.
நாகூர் புலவர் ஆபிதீனின் புகழ்பெற்ற வரிகள் அந்த மகாகவியின் வரிகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. அவரது இந்த ஒரு சில வரிகளில் அவரது உணர்ச்சிகள் மாத்திரம் கொப்பளிக்கவில்லை, அதற்கும் மேலாக ஆதங்கம், வீரம், தன்மானம், இறைபக்தி, கோபம், நாட்டுப்பற்று எல்லாவற்றையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறார் அவர். இத்தனை சிறிய கவிதை மனித உள்ளத்திலிருந்து ஆர்த்தெழும் இத்தனை உணர்ச்சிகளை ஒன்றாக்கி உரைப்பதென்பது அத்தனை எளிதான விடயமா?
இறைவன் மேலாணை
இனத்தின் மேலாணை
இறைமறை மேலாணை
ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விடமாட்டோம்
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓடமாட்டோம்
புலவர் ஆபிதீனை நாகூரின் அல்லாமா என்று அழைப்பதில் என்ன தவறு?