RSS

சித்தி ஜுனைதா பேகத்தின் பெண்ணியச் சிந்தனை

21 Jul

(இந்த ஆய்வுக் கட்டுரை பேராசிரியை மு. ஆயிஷாம்மா அவர்களால் 2007-ஆம் ஆண்டு நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது)

முன்னுரை

இஸ்லாமியத் தொழில் இலக்கிய உலகில் ஒளியுமிழ் தாரகையாக மின்னிய முதல் பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம் ஆவார். இவர் இயற்றிய முதல் தமிழ் நாவல் “காதலா? கடமையா?” ஆகும். இவரது மற்ற படைப்புகளில் ஒன்றான “இஸ்லாமும் பெண்களும்” என்ற தலைப்பில் இஸ்லாம் பற்றியும் பெண்களின் பல்வேறு உரிமைகள் பற்றியும், முஸ்லிம் சமுதாய பெண்களிடையே நிலவும் சூழ்நிலை பற்றியும் கூறி பெண்ணிணத்திற்கே புரட்சியை ஏற்படுத்தியவர். அவரது முற்போக்குச் சிந்தனைகள் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.

சித்தி காலச் சமுதாயச் சூழல்:

ஆண் பெண் இருபாலரும் இணைந்தே மனித சமுதாயம். சமூக வாழ்வில் பெண், ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பை வகிக்கின்றாள். மேலும், தனி ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பை வகிக்கின்றாள். மேலும் தனி வாழ்வோ, பொது வாழ்வோ அல்லது வாழ்க்கையின் எந்தத் துறையோ ஆகட்டும், எதிலும் பெண்ணை விட்டும் நீங்கிய ஒரு சமூக அமைப்பைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. எனவே, சமூக அமைப்பில் பெண்களின் பங்கு முக்கியமானது எனும் அடிப்படையில் தான் இஸ்லாத்தின் கொள்கைகளும் வாழ்வில் தத்துவங்களும் பெண்களிடையே பரவுவதற்கு எண்பது ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி செய்த ஒரு பெண் படைப்பாளி என்று சொன்னால் மிகையாகாது.

இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் காரணம் அவருடைய கதைகள், கட்டுரைகள் அல்ல, அவைகள் எழுதப்பட்ட காலம், சூழல் பின்புலம், சித்தி ஜுனைதாவின் பள்ளிப்படிப்பின்மை ஆகியன ஆகும். அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எழுதுவதற்கு அஞ்சினர். இப்படி முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி எழுதி, தன் பெயரையும் போட்டு தன் வீட்டு முகவரியையும் மறவாமல் கொடுத்து, புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள் என்பது தான் இளம் வயதிலிருந்த இவருடைய முதிர்ச்சிக்கும் துணிச்சலுக்கும் அடையாளமானது. ஆகவே இவரை வரலாறு படைத்த, படிக்காத மேதை என்று வர்ணித்தாலும் தகும்.

சித்தி ஜுனைதா ஒரு முற்போக்கு புரட்சி எழுத்தாளர்:

“காலம் காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து ஆண்களுக்கு நிகரான மதிப்பினை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கும் செயற்பாடும் ஆகும்”, (பிரேமா, இரா.1994 ப.5)

சித்தி ஜுனைதாவும் பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று விளங்க வேண்டும் என்ற புரட்சி எண்ணத்தை தமது கட்டுரையின் வாயிலாக பரப்பியவர். ‘பெண்கள் சினிமா பார்க்கலாமா?’ என்னும் கட்டுரையில் “இஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் கிடையாது. ஆண் மகனுக்கு ஆகும் என்றால் பெண் மகளுக்கும் ஆகும் என்பதுதான் என் கருத்து ஆகும்” என்று கூறியவர். ஆண் வன்மை உடையவன்; பெண் மென்மை உடையவள். ஆணுக்குள்ள கடமைகள் வேறு; பெண்ணுக்குள்ள கடமைகள் வேறு; உரிமைகளும் வெவ்வேறுதான். ஆனால் நீதி ஒன்றாகத்தான் இருத்தல் வேண்டும் என்று பெண்களின் தனித்துவத்தை தமது ‘பெண்ணியம் அணுகுமுறைகள்’ என்பதில் இரா. பிரேமா குறிப்பிடுகிறார்.

“அறச்செல்வி ராபியா” என்னும் கட்டுரையில் ஆன்மிகத்துறையில் அதியுன்னத அந்தஸ்தைப் பெறுவதற்குப் பெண்களும் வழிகாட்டியுள்ளனர் என்பதையும், ஆன்மீக மெய்ஞ்ஞான விசாரணை என்பது ஆண்களுக்கு மட்டும் உரியது என்று நினைக்கும் எண்ணம் தவறானது என்பதையும் தமது கட்டுரையில் நிலைநிறுத்திக் காட்டியிருக்கிறார். “பாராளப் பிறந்தவள் பேயாட்டம் போடுவதா” என்னும் கட்டுரையில் பெண் கல்வியினால் இஸ்லாமியப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கலாம். ஆண்களின் மேலாதிக்கப் போக்கிற்குப் பெண் கல்வி சவாலாக அமைகிறது என்று ஒரு புரட்சிப் பெண்ணாக மாறி விதண்டாவாதம் புரிவோர் மீது சீறிப் பாய்கிறார் என்பதை அவரது கட்டுரைகள் மூலம் நாம் அறிந்துக்கொண்டு அவரை பெண்ணிய முற்போக்குச் சிந்தனைவாதி என்று சொல்வதில் ஐயமில்லை.

திருமண உரிமை :

ஜான் ஸ்டூவர்ட்மில், தன் பெண்ணடிமை என்ற நூலின் வழி “திருமணம் என்ற நிறுவனம் பெண்ணுக்கு மிகப் பாதகமானது, பெண்ணடிமைத்தனத்திற்கு இத் திருமணமே காரணமாக உள்ளது என்றும், இவற்றை போக்கினாலொழிய பெண் விடுதலைக்கு வழியில்லையென்றும் குரல் எழுப்பினார். இத் திருமணத்திற்குப்பின், மனைவி, தனக்கென்று சுய விருப்பம் ஆர்வம், தனித்துவம் கொண்டிருப்பதை ஆணாதிக்கச் சமுதாயம் மறுக்கிறது” என்று பெண்ணிய திறனாய்வில் திருமண உரிமையினால் பெண் சுதந்திரம் இழக்கிறாள் என்ற கருத்தும் அறியப்படுகிறது. சித்தி ஜுனைதா பேகம் தமது கட்டுரையில் பெண்கள் தமக்கு பிடித்தவரையே மணஞ்செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது என்று குறிப்பிடுகின்றார்.

ஒத்த நலனும். ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடு மாடுகளைப் பிணைப்பதைப்போல் பிணைத்து விடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமில்லாத ஒருவனை மணந்துகொள்ள பெற்றோராலும் மற்றோராலும் வற்புறுத்தப் படுவாளேயானால், அப்பெண் அத்திருமணத்தை நிறைவேற்றி வைக்கும் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள்ளலாம். என்றும் இஸ்லாமிய பெண்கள் தங்கள் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்வதின் மூலம் குடும்ப பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் முற்படுத்துகிறார்.

மேலும் இஸ்லாம் பலதார மணத்தையும் ஆதரிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்த ஒருவன் ஊண், உடை, வீடு தங்கும் நேரம் எல்லாவற்றிலும் சமத்துவமாக ஆக்கக் கடமைப் பட்டிருக்கின்றான் என்றும் இவ்வாறு நடக்கத் தகுதியற்றவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணக்கும் உரிமையை இழந்து விடுகின்றான் என்றும் பரிசுத்த திருமறை தெளிவாக உணர்த்தியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இஸ்லாத்தின் பெயரால் பெண்ணுலகை ஏமாற்றி ஆண்கள் தன்னலத்தின் பொருட்டு செய்யும் இந்த அடாத செய்கைக்கு இடமில்லை. ஆனால் எதற்கும் விதிவிலக்குண்டு. தீராத நோய் காரணமாக அல்லது தன் மனையாட்டியை அணுக முடியாத விலக்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவன் மற்றொருத்தியை மணம் புரியலாம். இஸ்லாம் எப்பொழுதும் தன்னலத்தை வெறுக்கின்றது. பிறர் நலம் ஓம்பலே இஸ்லாத்தின் ஆணிவேர் என்று இவர் கூறிய கருத்துகள் யாவும் திருக்குர்ஆன் அடிப்படையிலேயே அமைந்துள்ளன,

கல்வி உரிமை :

“பாரம்பரிய லட்சியங்களுக்கு ஏற்பவும் அதே நேரத்தில் நவீன தேவைக்கு ஏற்பவும், பெண்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். பெண்களின் மனதில் குடிகொண்டுள்ள ‘இந்து தர்மத்தை’ப் பாதுகாத்துக் கொண்டே அவர்களுக்குக் கல்வியோடு வாழ்க்கையும் நல்க முடியும். இது வேத காலம் நோக்கித் திரும்ப விழைகிற தியோசோபிகல் சொசைட்டியின் சிந்தனைக்கு ஏற்பவே உள்ளது; எனினும் அன்றைய சூழலில் பெண்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதே பெரிய விஷயம்தான்” என முற்றுமுணர்ந்த கற்றோர் பலரும் அறிவிற் சிறந்த பெரியார் பலரும் இங்ஙனம் பெண் கல்வி பெண் கல்வி என்று கூவிக்கொண்டிருக்கும்போது 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பெண் கல்வியைக் கட்டாய கடமையாக்கினார் என்று நபியின் திருவாக்கியத்தினை எடுத்துக்கூறி இஸ்லாமிய பெண்களுக்குத் தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தைப் பற்றி சித்தி ஜுனைதா பேகம் தமது கட்டுரையில் அழகாக பறைசாற்றியுள்ளார்.

சம உரிமை :

பெண்ணின் தாழ்வு எண்ணங்களும் கருத்துப் படிமங்களும் சமுதாயத்தில் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். பெண்மையின் மகத்துவம் எல்லா நிலைகளிலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட வேண்டும். ஆண், பெண் சமத்துவம் குடும்பத்திலும் சமூகத்திலும் நிலைபெற வேண்டும். தகவல் தொடர்புச் சாதனங்கள், பெண்கள் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் விழிப்புணர்வையும் மனித நேயத்துடன் வலியுறுத்த வேண்டும். இவை முழுமையாகச் செயற்படும்போது பெண் மீதான வன்முறைகளும், அநீதிகளும் அழிவுகளும் சிதைவடையும் என்பதில் ஐயமில்லை. இப்பெண்ணியக் கோட்பாடுகளுக்கு முன்பே பெருமானார் ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அவர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது. எளியோன், பணக்காரன், முதலாளி, தொழிலாளி, தொழிலாளி என்ற வேற்றுமையே கிடையாது என்று முதன் முதலாக உலகத்தின் நீண்ட சரித்திரத்தில் வீர முழக்கஞ் செய்தார்.

சித்திக்கு எதிர்ப்புகள்:

ஏறத்தாழ இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண் நலம் காக்க அவர் தீட்டிய சொற்சித்திரங்களை யாவும் இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மார்க்கம் எனப் பசப்பித் திரிவோர்க்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கின்றன. மேலும், பெண்கள் குடும்பம் தவிர கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் அன்பது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்தும்படி வைத்த ஒரு பெண் ஆசிரியை சித்தி ஜுனைதா; இவர் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதைவிட, எழுதிக் குவித்தார், என்பதே உண்மை. இவர் எழுதி வந்தபோது அதனைத் தடுக்கப் பலரும் முனைந்துள்ளனர். அதையும் மீறி எழுதியபோது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்து இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார். இவ்வாறு முதல் முஸ்லிம் பெண்மணி தனது முதல் படைப்பினை வெளியிடும்போது, பலவகை அனுபவங்களையும், தடைகளையும் சந்தித்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவுரை:

சித்தி ஜுனைதா பேகம் அவர்கள் வெளிப்படுத்தும் பெண்ணியச் சிந்தனைகள் யாவும் தன் சமயம் சார்ந்த பெண்களுக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் போராட்ட வாழ்வில் சிக்கிப் புதைந்துக் கிடக்கும் எல்லாப் பெண்களுக்காகவும் கருணை ஒளி சிந்தியதை அவரது கட்டுரைகள் மூலம் நமக்குப் புலப்படுத்தியுள்ளார். மென்மையில் உயிர்த்தெழுந்த பெண்மைக்கு எத்தகைய எழுத்து வன்மை இருக்கிறது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அடிக்குறிப்புகள்:

1. பெண்ணிய அணுகுமுறைகள் – இரா. பிரேமா
2. பெண்ணியத் திறனாய்வு – முனைவர் வீ. நிர்மலா ராணி
3. இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானதா? – கவிக்கோ அப்துல் ரகுமான்
4. தமிழகத்தின் சமூகச் சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு – அருணன்

Related Links:

சித்தி ஜுனைதா – நா. கண்ணன், ஜெர்மனி

சித்தி ஜுனைதா – ஓர் இனிய அறிமுகம் 

காதலா? கடமையா? – குறுநாவல்

மகிழம் பூ – நாவல்

சித்தி ஜுனைதா –  குமுதத்தில் வெளிவந்த கட்டுரை 

சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும் 

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் – ஜே.எம்.சாலி

சித்தி ஜுனைதா –  ஒரு நேர்காணல்

சித்தி ஜுனைதா – பிறரின் பார்வையில்

 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: