நான் ஒருமுறை காரில் பயணிக்கையில் “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலை ரசித்துக் கொண்டு வந்தேன். என்னுடன் பயணித்த நண்பரொருவர் “இந்த பாட்டெல்லாமா கேக்குறீங்க? நீங்க என்ன ‘ஷியா’வா மாறிட்டீங்களா?” என்று ஒரு போடு போட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. பாவம் இன்றைய இயக்கவாதிகள் எப்படியெல்லாம் ஒரு சாராசரி முஸ்லீமை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் அப்பட்டமாக புரிந்தது. “பாத்திமா, அலி, ஹசன், ஹுசைன்” போன்றோரை புகழ்ந்து பாடப்பட்டால் அது ‘ஷியா’ பாடல் என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும். போதாதக்குறைக்கு இப்போது காதியானிக்கள், அஹ்மதியாக்கள் வேறு, வெவ்வேறு முகத்தோடு இணையதளத்தில் புகுந்து நம்மை குழப்போ குழப்பு என்று குழப்புகிறார்கள்.
நாயகத்திருமேனி அவர்களின் அன்பு மகளார் பாத்திமா அவர்களைப் பற்றி நாகூர் ஹனீபா பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். “விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த”, “பாத்திமுத்து ஜொஹ்ராவின் பரம்பரையில் வந்த பெண்ணே” “பெண்களுக்குத் தலைவியான பாத்திமா” “கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள், நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்” “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா” போன்ற பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளன.
விண்ணகமும் மண்ணகமும்
இதில் “விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமா” என்ற இனிமையான பாடல் என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் எழுதியது. இப்பாடலில் காணப்படும் சொற்சிலம்பம், வார்த்தை ஜாலம், சந்த விளையாட்டு மெச்சத்தக்க விதத்தில் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு
தங்கு புகழ் அன்னையர்க்கும்
தங்கமான தங்கையர்க்கும்
சங்கமான மங்கையர்க்கும்
சங்கையான பாத்திமா
என்ற அமுத வரிகளில் அடுக்குமொழி வார்த்தைகள் அழகுத்தமிழில் அணை திறந்த வெள்ளமாய் ஆர்ப்பரித்து அப்பாடலைக் கேட்போரை அகங்குளிர வைக்கும்.
பெண்களுக்குக் கண்மணியாய்ப்
பெரியவர்க்கு விண்மணியாய்
பண்பிருக்கும் நன்மணியாய்
பாருயர்த்தும் பாத்திமா
என்ற வரிகளில் மெருகேறியிருக்கும் பண், மென்மையாய் நம் காதில் மெல்ல வந்து மிருதுவாய் தேன் பாய்ச்சுவது போலிருக்கும்.
பூவுறங்கப் புள்ளுறங்கப்
புவனமெல்லாம் ஆழ்ந்துறங்க
நாவுறங்கா திருந்திறையின்
நாமமோதும் பாத்திமா
என்ற எதுகை, மோனை மாறா வண்ணம் சிந்தும் அந்த சந்தச் சொற்கள் நம் சிந்தையை விந்தையில் ஆழ்த்தி அவரை சொந்தம் கொண்டாட வைக்கும்.
“நாவு உறங்காது இருந்து, இறையின் நாமம் ஓதும் பாத்திமா” என்று பிரித்து பொருளறிந்து படிக்கையில் கவிஞரின் புலமைத் திறன் நம்மை புளகாங்கிதம் அடையச் செய்து, புல்லரிக்க வைக்கும்.
கோதுமையை கையரைக்க
கோவுரையை நாவுரைக்க
போதுமென்ற பொன்மனத்தால்
பொலிவடைந்தீர் பாத்திமா
“அரவைக் கல்லில் ஒரு கையால் கோதுமையை அரைத்துக்கொண்டே, “கோ”வின் (இறைவனின்) உரையான திருமறையை மொழிந்துக்கொண்டே, எளிமை வாழ்வு வாழ்ந்த, ‘போதுமென்ற பொன்மனம் படைத்த’ நபிமகளார் பாத்திமா, தன் சொல்லாலும் செயலாளும் பொலிவடைந்தார்” என்ற மகத்தான செய்தியை வெண்கலக் குரலோன் ‘இசைமுரசு’ அரிமாவென முழங்குகையில் அந்த வரலாற்று நிகழ்வுகள் அப்படியே நம் கண்கள் முன் அழகான காணொளியாய் அவதானிக்கும்.
இறையருட் கவிமணி எழுதிய இப்பாடலானது இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் ஆரம்ப காலத்தில் பாடிய பாடல். இந்த சந்தப்பாடல் தந்த வெற்றியை விட, பாத்திமா (ரலி) அவர்களைப் பற்றிய மற்றொரு பாடல் நான்மடங்கு நாடெங்கும் நற்புகழ் ஈட்டித் தந்தது. பட்டி தொட்டிகளெங்கும் ஒலிபெருக்கிகளில் ஓயாது ஒலித்தது. அப்பாடலை முணுமுணுக்காத நாவுகளே இல்லை எனலாம். குறிப்பாக பெண்கள் மத்தியில் அப்பாடல் கற்பனை செய்தும் பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமடைந்தது.
அந்த பாடல் எது தெரியுமா? “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” என்ற பரவசமிகு பாடல்.
பாத்திமா வாழ்ந்த முறை
இறையருட் கவிமணி அவர்களின் “விண்ணகமும் மண்ணகமும்” என்ற பாடலை விட, இசைத்தட்டு விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தப் பாடல். சந்தப் பாடலையும் விஞ்சிய இப்பாடலின் சிறப்புதான் என்ன என்று சற்று ஆராய்ந்துப் பார்த்தால், இப்பாடலில் காணப்படும் எளிமையான வார்த்தைகளும், அதில் இடம்பெற்றிருக்கும் கருத்தாழமிக்க கருத்துக்களும்தான் முக்கிய காரணம் என்ற உண்மை நமக்கு புலப்படும். இப்பாடலை எழுதிய நாகூர் கவிஞரை நாகூர்க்காரர்களுக்கே அதிகம் தெரியாது.
இஸ்லாமிய பாடலுலகை ஒரு கலக்கு கலக்கிய பாடலிது. நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலுக்கு அடுத்தபடியாக நானிலமெங்கும் பெரிதும் பேசப்பட்ட நற்சிந்தனைப் பாடல் இதுதான்.
பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா – அந்த
பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா!
என்று தொடங்கும் இந்த சிறப்பான பாடலின் ஆசிரியர்தான் இன்று நம் கட்டுரையின் கதாநாயகன். அந்த புகழுக்குரிய ஆசாமி யார்?
இதோ சொல்லி விடுகிறேன். அவர் பெயர் கவிஞர் நாகூர் சாதிக்.
இப்பாடலின் மகத்தான விற்பனையை கொண்டாடும் விதமாக அவருக்கு HMV நிர்வாகம் GOLD MEDAL AWARD என்ற தங்கப்பதக்கத்தை வழங்கி கெளரவித்தது. அப்படி என்னதான் சிறப்பு இப்பாடலில் இருக்கிறது?
ஒரு பாடல் என்றுச் சொன்னால் அதற்கு ‘ஆதி’யும் வேண்டும்; ‘அந்தமும்’ வேண்டும். “ஏ பெண்ணே! உனக்கு பாத்திமாவின் வாழ்க்கைமுறை தெரியுமா?” என்ற கேள்விக்கணையோடு பல்லவியை தொடங்கும் போதே, கவிஞர் நம்மிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணி விடுகிறார். ‘எதோ சொல்லப் போகிறார்’ என்ற ஆவல் மிகுந்து நாமும் பாடலோடு ஒன்றிப்போய் அடுத்தடுத்து செவிமடுக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்கிறோம்.
உத்தம திருநபியின் மகள் அல்லவா – நமது
உண்மை வீரர் அலியாரின் மனைவியல்லவா
சத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவா – நல்ல
செல்வங்களாம் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவா
அருமை அன்னையல்லவா.
முதல் அனுபல்லவியிலேயே பாத்திமா என்ற பெண்மணியின் ‘பயோடேட்டா’வைத் தந்து விடுகின்றார் கவிஞர். அவர் யாருடைய மகளார்? அவருடைய கணவர் பெயர் என்ன? அவருக்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்களின் பெயரென்ன? என்ற அனைத்து விவரங்களும் ரசிகனுக்கு ‘உள்ளங்கை நெல்லிக்கனியாய்’ கிடைத்து விடுகின்றது. அதற்கு மேல் அவன் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுவது அந்த மங்கையர்கரசி எப்படிப்பட்டவர்? அவர் குணநலன்கள் யாது? அவரது வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது? என்ற கேள்விக்கான விடை. அதுவும் ரசிகனுக்கு உரித்து வைத்த பலாச்சுளையாய்க் இதோ கிடைத்து விடுகின்றது.
கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோ – பெரும்
கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோ
குணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோ – நல்ல
குடும்பந்தன்னில் குலவிளக்காய் இருந்தவரன்றோ
இருந்தவரன்றோ
இதற்கு மேல் ஒருவரது குணநலன்களை அறிந்துக்கொள்ள ரசிகனுக்கு வேறென்ன வேண்டும்? இரண்டே இரண்டு அனுபல்லவியில் ஒரு மாதர்குல அரசியின் மகத்தான வாழ்க்கை வரலாற்றை சொல்லி முடித்து விட்டாரே கவிஞர். அதுவும் மிக மிக எளிமையான வார்த்தைகளில். பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் எதனால் மாபெரும் வெற்றி அடைந்தது என்ற பரமரகசியம் இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்குமே?
‘ஆதி’யைப் பார்த்து விட்டோம். இப்போது ‘அந்தந்திற்கு’ வருவோம். பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வு நெறிமுறையை வடித்து முடித்து விட்டார் கவிஞர். “Moral of the Story”தான் என்ன? ஒரு Message சொல்லியாக வேண்டுமே? என்ன சொல்வது? இதோ சொல்கிறார் கேளுங்கள்.
இன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா – இந்த
இக வாழ்க்கை நிலையல்ல உணர்ந்து கொள்ளம்மா – உண்மை
தீன் வழியை மறந்ததேனம்மா – நல்ல
உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா – நீ
வாழ்ந்து காட்டம்மா
ஆஹா! ஒரு கருத்தாழமிக்க பாடல் என்ற தகுதியை பெறுவதற்கு இதை விட சிறந்த இலக்கணம் வேறென்ன இருக்க முடியும்? இப்பொழுது புரிந்திருக்குமே இந்த எளிமையான மனிதரின் எளிமையான வரிகள்!
நாகூர் சாதிக் அவர்களின் மற்றொரு மகத்தான சாதனைப் பாடல் “அல்லாஹ்வை நாம் தொழுதால்”, என்ற அற்புதமான பாடலாகும்.
அல்லாஹ்வை நாம் தொழுதால்
அல்லாஹ்வை நாம் தொழுதால் – சுகம்
எல்லாமே ஓடி வரும் – அந்த
வல்லோனை நினைத்திருந்தால். – நல்ல
வாழ்க்கையும் தேடி வரும்…பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)
வழி காட்ட மறை இருந்தும்
வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)
இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை
இகம் எங்கும் பரப்பிடுவோம்
‘பாத்திமா வாழ்ந்த முறை” என்ற பாடலில் நபிமகளாரின் வாழ்க்கைமுறையை வரிசை படுத்திவிட்டு கடைசியில் ஒரு மெஸேஜை வெளிப்படுத்தினார் நம் கவிஞர். ஆனால் இந்த பாடலிலோ அதற்கு நேர்மாறான இலக்கணத்தை கையாண்டுள்ளார். “அல்லஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்” என்ற மெஸேஜை முதற்கண் வெளிப்படுத்திவிட்டு “ஏன் நீங்கள் பள்ளி செல்ல மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சினை? பாங்கு சப்தம் கேட்கவில்லையா? அல்லது பள்ளிவாயில் செல்வதற்கு அலுப்பு ஏற்படுகின்றதா? அல்லது படைத்த இறைவனையே மறந்து போய் விட்டீர்களா? என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்கின்றார். பாடலைக் கேட்பவனின் மனதில் ஒரு சிந்தனை ஊற்றை கிளப்பி விட்டு விடுகின்றார்.
அவனும் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றான். “ஆமாம். சரிதான். நாம் ஏன் பள்ளி செல்வதில்லை? என்ன காரணத்தினால் இருக்கும்? என்று தனக்குத்தானே கேள்வியினால் வேள்விகளை நடத்திக் கொள்கின்றான். கேட்பவனை சிந்திக்க வைப்பதுதான் ஒரு கவிஞனின் தலையாய பணி. நம் கவிஞர் அந்த வேலையை மெச்சத் தகுந்த விதத்தில் கனகச்சிதமாக சிரத்தையோடு செய்து முடிக்கிறார்.
கவிஞர் அத்தோடு அவனை விட்டு விடவில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து அவனுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். “உனக்கு வழிகாட்ட திருமறை இருக்கின்றது. மேலும் உன் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நபிபெருமானின் நல்லுரையாம் “ஹதீஸ்” இருக்கிறது. “அடப்பாவி! நீ கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் இருக்கின்றாயே?” என்று சரமாரியாக ‘அட்வைஸ்’ தர ஆரம்பித்து அவனை தன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறார்.
ஒரு வினாவையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கத்தையும், தெளிவான தீர்வையும் கொடுக்காதவன் உண்மையான கவிஞனல்ல என்பது என் அபிப்பிராயம். இறுதியில் அதற்கான ஒரு தீர்வையும் கவிஞர் நாகூர் சாதிக் இப்பாடலில் தருகிறார். ஆண்டவன் கட்டளையை அடிமனதில் ஏற்றி அகிலமெங்கும் அண்ணல் நபியின் போதனையை பரப்புவதுதான் பிரச்சினைகள் தீர ஒரே வழி என்று ஒரேயடியாக முத்தாய்ப்பாய் முடித்து விடுகிறார். அவரது பாடல் வெற்றியின் பரமரகசியம் இதுதான்.
இந்த பாடலின் வரிகளை ஒருமுறை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது உண்மையென விளங்கும். இப்பாடலில் உள்ள சொற்பதங்கள், -சிறுவர் முதல் பெரியோர் வரை, படித்தோர் முதல் பாமரன் வரை- எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிய நடையில் கையாளப்பட்டுள்ளது. அரபுமொழி சொற்கள் அதிகமாக இடம்பெறும் பாடல்கள் பிறமதத்தவரை அதிகம் சென்றடைவதில்லை. ஆனால் இந்த பாடல் அறிமுகம் ஆனபோது எல்லா மதத்தவரும் முணுமுணுத்ததை நாம் செவிமடுக்க முடிந்தது. காரணம் எளிமையான எந்தமிழ் வார்த்தைகள்.
இந்துமத நண்பர்கள் பாடும் மேடை நிகழ்ச்சிகளில் எப்படி கண்ணதாசன் எழுதிய “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்ற பாடல் முதற்பாடலாக இடம்பெறுகின்றதோ அதுபோன்று எல்லா இஸ்லாமிய பாடகர்களுடைய மேடை நிகழ்ச்சிகளிலும் முதற்பாடலாக “தக்பீர் முழக்கம்; கேட்டால் இனிக்கும்” என்ற பாடல் முழங்கும்.
“அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்ற கண்ணதாசன் பாட்டில் வரும் அதே உற்சாகம், அதே தாள லயம், அதே உத்வேகம் இப்பாடல் கொடுக்கும். எனவேதான் இப்பாடலை முதற்பாடலாக இஸ்லாமியப் பாடகர்கள் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இப்பாடல் வரிகளுக்கும் சொந்தக்காரர் நம் பதிவின் கதாநாயகன் நாகூர் சாதிக் அவர்களேதான்.
நாகூர் சாதிக் அவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்து எல்லோரும் பாராட்டும் வண்ணம் எண்ணமெலாம் நிறைந்திருக்கும் மற்றொரு உதாரணம் “சொன்னால் முடிந்திடுமோ?” என்ற அமுதகானம்.
சொன்னால் முடிந்திடுமோ
நபிகள் நாயகத்தின் பெருமையை பறைசாற்ற எத்தனையோ கவிஞர்கள் புறப்பட்டார்கள். “வாழ்நாளெல்லாம் போதாதே வள்ளல் நபிகளின் புகழ் பாட” என்றும் “கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆன் வந்தே இருக்காது” என்றெல்லாம் நபிநாதரின் புகழ் பாடினார்கள்.
அளவிட முடியா அண்ணல் நபியின் அருமை பெருமைகளை அழகுத் தமிழில், அற்புதமான உருவகத்தோடு அலங்கரிக்கும் அவரது இப்பாடல் காலாத்தால் அழியாத கனிவான கானமாய் காலங்கடந்து நிலைத்துள்ளது.
சொன்னால் முடிந்திடுமோ
சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை
ஆற்றல் மிகும் சொல்லழகை
என பல்லவியைத் தொடங்கும்போதே கவிஞர், தான் எதை பாடப்போகிறார் என்ற முன்னுரையை தந்து விடுகிறார். ஆம் அவர் சொல்லப்போவது அண்ணல் நபிகளின் பேரழகை மற்றும் அவர் சொல்லழகை. இறுதியில் சொல்லப்போகும் ஏந்தலின் பெருமைதனை சஸ்பென்ஸாகவே விட்டு விடுகிறார்.
அண்ணலின் பேரழகு எப்படிப்பட்ட அழகு என்பதை கம்பனின் பாணியில் தன் கவித்திறமையை கையாள்கிறார் கவிஞர் நாகூர் சாதிக்.
வெண்ணிலவும் வியப்படையும்
வேந்தர் முகம் கண்டு விட்டு…
விண்ணகத்துத் தாரகையும்
வெட்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் பேரழகை
ஆகா! என்னமாய் ஒரு கற்பனை. உவமைக்கு இவர் தேடும் “பாடுபொருள்” இவ்வுலகிலேயே இல்லை. அதனால்தான் வானில் தவழும் வெண்ணிலவையும், விண்ணகத்து தாரகையும் உதாரணம் காட்ட உதவிக்கு இழுத்து வருகிறார்.
அண்ணல் நபியின் மேனியழகை சொல்லியாகி விட்டது. அடுத்து அவரது சொல்லழகை கூறுகிறார். யார்கண்ணுக்கும் இதுவரை புலப்படாத “அறிவு” அண்ணல் நபியிடத்தில் வந்து ‘டியூஷன்” கற்று போனதாம். அடுத்து “பண்பு” வந்ததாம். அதுவந்து கற்றுச் சென்ற பாடம் பணிவாம். இதுபோன்ற அட்டகாசமான கற்பனை எப்படி கவிஞர் சாதிக் அவர்களுக்குத் தோன்றியது என்று தெரியவில்லை.
அண்ணலிடம் அறிவு வந்து
ஆயிரம் பாடம் பெறும்…
பண்பு வந்து நபியிடத்தில்
பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் சொல்லழகை
மேனியழகையும் சொல்லழகையும் மெல்ல மொழிந்துவிட்டு அடுத்து நம் மேதகு நபியின் மேன்மையினை மெய்மறந்து மெச்சுகிறார்.
திரும்பும் திசை எல்லாம்
திருநபி செயல் மணக்கும்…
அருள் மறை வேதத்திலே
அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் பெருமைதனை(சொன்னால்…முடிந்திடுமோ…)
“உவமைக் கவிஞர்” என்று கவிஞர் சுரதாவைப் புகழ்வதைப்போல கவியுலகில் சாதிக்கும் நாகூர் சாதிக்கையும் தாராளமாக இந்த அடைமொழியிட்டு அழைக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.
இருலோகம் போற்றும் இறைத்தூதராம்
நாகூர் ஹனீபா, இந்திப்பட மெட்டில் இஸ்லாமியப் பாடல்கள் பாடுவது இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமல்ல. அது அரும்புலவர் ஆபிதீன் காலத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது. , “மறைதீபம் இதோ பாராய்” “பாலைவனம் தாண்டி போகலாமே நாம்” “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்” “தீன்கொடி நாட்டிய தேவா” போன்ற பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தன.
ஜிதேந்திரா நடித்த “ஜீனே கீ ராஹ்” என்ற இந்திப்படத்தில் “ஆனேஸே உஸ்கே ஆயே பஹார்” என்ற மெல்லிசை பாடல் மிகவும் பிரபலமாக இருந்த நேரம் அது. முகம்மது ரஃபி அவர்களின் மென்மையான குரலில் இழையோடும் ராகலயம் மனதைப் பிழிந்தெடுக்கும். அந்த பாடலை சிம்மக்குரலோன் நாகூர் ஹனிபாவின் குரலில் கர்ஜிக்க வைத்தால் என்னவென்று தோன்றியது நாகூர் சாதிக் அவர்களுக்கு.
“இருலோகம் போற்றும் இறைத்தூதராம், இஸ்லாத்தைத் தந்த நபிநாதராம்”
என்ற நாகூர் சாதிக் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல் இசையார்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. “அருள்வடிவானவர்” என்று பாடும்போது நாகூர் ஹனீபா அவர்கள் அந்த “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற எழுத்தை படாதபாடு படுத்தியதுதான் கொடுமையிலும் கொடுமை. நாகூர் சாதிக் அவர்களை நேரில் காண நேர்ந்தால் “இந்த பாடலில் அவர் சாதகம் பண்ணுவதற்கு ஏதுவாக, வேறு ஏதாவது நெடில் வார்த்தை சங்கதியை லாவகமாக நுழைத்து, நாகூர் ஹனீபாவை சோதிக்காமல் இருந்திருக்கலாமே! அவரை இந்த பாடுபடுத்தி எங்களையும் படுத்தி விட்டிர்களே?” என்ற கேள்வியை அவரிடத்தில் கேட்க வேண்டும்.
வெளிச்சத்துக்கு வராத மொட்டுக்கள்
காட்சிக்கு எளிமையானவர் கவிஞர் சாதிக். என் இனிய நண்பர் இதயதாசனையாவது “கவிஞரே!” என்று பலரும் அழைக்க என் காதுகுளிர கேட்டிருக்கிறேன். ஆனால் இவரை யாரும் “கவிஞரே!” என்ற அடைமொழியோடு விளித்து நான் கண்டதில்லை. “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாக்கு இவருக்குத்தான் பொருந்தும். ஆடம்பரமில்லாத அடக்கம், அலட்டிக் கொள்ளாத தன்மை, பந்தா இல்லாத பண்பு, குறைவான பேச்சு; நிறைவான செயல், விளம்பரம் விரும்பாத விந்தையான மனிதரிவர்.
நாகூரில் கவிஞர்கள் என்று சொன்னால் புலவர் ஆபிதீன், நாகூர் சலீம். கவிஞர் இஜட்.ஜபருல்லா – இவர்களைத்தான் சட்டென்று அடையாளம் காட்டுவார்கள். வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ படைப்பாளிகள் இன்னும் திரை மறைவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியுலகிற்கு கொண்டுவர இந்த ஒரு வலைப்பூ காணாது.
சாரு நிவேதிதா நாகூர்க்காரர் என்பதே பல பேருக்குத் தெரியாது. உதாரணத்திற்கு டி.என்.இமாஜான் என்ற எழுத்தாளரை எடுத்துக் கொள்வோம். இவரை எத்தனைப் பேருக்குத் தெரியும்? இவரும் நாகூர்க்காரர்தான். யாரும் இவரை கண்டுக் கொள்வதில்லை. “Master of All Subject” என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட தமிழ்வாணனைப் போன்று நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதித் தள்ளி இருக்கிறார். நாகூரின் அழ.வள்ளியப்பா என்றுகூட இவரைச் சொல்லலாம். (இவருடைய புத்தக வரிசைகளைக் காண இங்கே சொடுக்கவும்)
“நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்” என்ற இவரது நூலில் காணப்பட்ட இக்கவிதை வரிகள் என் மனதைக் கொள்ளை கொண்டன:
தொண்டை சரியில்லை
பொழுது எப்படி விடியும்?
சேவலின் கவலை!
‘இந்த உலகத்தை ரட்சிக்க வந்த புண்ணியவான் நான்தான்’ என்று எண்ணிக்கொண்டு இலவசமாக உபதேசம் வழங்கிக்கொண்டிருக்கும் என் நண்பர்கள் சிலருக்கு ஒரு இக்கூற்று சாலப்பொருந்தும்.
அம்மா, தாயே!
பிச்சைக்காரனின் குரல்
வீட்டில் சிறுமி!
வேடிக்கையான நடைமுறை முரண்பாட்டை சித்தரிக்கும் முத்தான வரிகள்.
தலைப்புக்கள் ஜனரஞ்சகமானவைகளாக இருந்தாலும் நூற்றுக்கணக்கில் நூல்கள் எழுதிக் குவிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் கிடையாது. இதற்காகவே இமாஜானுக்கு முதுகில் ஒரு சபாஷ் தட்டலாம். அதிகமான நூல்கள் எழுதிக் குவித்த நாகூர்க்காரர் நாகூர் ரூமிதான் என்று இதுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை இந்த மனிதர் பொய்யாக்கி விட்டார்.
நாகூர் ஹனிபாவுக்காக எழுதிய நற்றமிழ்க் கவிஞர்கள்
ஒரு கவிஞனின் பாடலானது நாகூர் ஹனிபா அவர்களது சிம்மக்குரலால் பாடப்பட்டு, அது இசைத்தட்டாக வெளிவரவெண்டுமெனில் அதற்காக யாகம் செய்ய வேண்டும். முக்கியமாக யோகம் வேண்டும். தன் பாடல் அரங்கேற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் பல கவிஞர்கள் அவரது வீட்டு வாசலில் தவம் கிடந்துள்ளார்கள். கவிவாணர்கள் அத்தனை பேருக்கும் இந்த பேறு கிடைத்து விடுவதில்லை. இந்த பேறு கிடைத்துவிட்டால் நல்ல பேரும் கிடைத்து விடுவது ‘அக்மார்க் கியாரண்டி’.
இசைமுரசுவின் பாடல்கள் மகத்தான வெற்றி பெற்றமைக்கு அவரது ‘பாடல் தேர்வு’தான் முக்கிய காரணம் என்று கூறுவேன். பிற பாடகர்களின் பாடல்கள் பத்தில் ஒன்றோ இரண்டோ ‘ஹிட்’ ஆகும் பட்சத்தில் இவரது எல்லா பாடல்களுமே சக்கை போடு போட்டு, வெற்றியின் முகட்டை திக்கெட்டும் எட்டும். பாடலின் கருப்பொருள் பொதுப்படையாக, எல்லோர் மனதில் சென்றடைவதாக, பிரச்சினைக்குரியதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிக மிக கவனமாக இருப்பார். அந்த விஷயத்தில் நம் முன்னோடி பாடகர் பயங்கர கில்லாடி.
“நாகூர் ஹனிபா, தனக்கு பாடல் எழுதிக் கொடுக்கும் கவிஞர்களை வெளிச்சத்திற்கு வர விடாமல் இருட்டடிப்புச் செய்வார்” என்ற குற்றச்சாட்டை புகுத்தும் இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் போன்ற அரைவேக்காடுகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை. பாடலெழுதும் கவிஞர்களின் பெயர் இசைமரபுகளுக்கு ஏற்ப இசைத்தட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது வழக்கம். மேடைக் கச்சேரிகளின்போது பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் பாடலுக்கு இடையே பாடல் எழுதிய கவிஞரின் பெயரை அறிவிப்பதையும் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் நாகூர் ஹனிபா. இதைவிட வேறென்ன அவர் செய்ய முடியும்? சில இந்தி கஜல்களில் பாடலாசிரியரின் பெயரை பாடலுக்குள்ளேயே புகுத்துவதுபோல் தமிழ்ப்பாடல்களிலும் ஒரு மரபு இருந்திருந்தால் இந்த குற்றச்சாட்டுக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும். ஒரு சில பழைய பாடல்களில் நாகூர் புலவர் ஆபிதீன் இந்த யுக்தியைக் கையாண்டுள்ளதை கவனிக்க முடிகிறது.
“ஜபருல்லா பிறந்த செய்தியை நான்தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை, நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்” என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா. அவ்வளவு நெருக்கமாக இருந்த நாகூர்க்கவிஞர் இஜட்.ஜபருல்லாவுக்கு கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் கவிஞர் நாகூர் சாதிக் அவர்களுக்கு வாய்த்தது. நாகூர் ஹனிபாவின் குரலில் ஜபருல்லாவின் பாடல் மலர்வதற்கு அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இசைமுரசுக்கு பாடல் எழுதித் தந்தவர்களின் வரிசை கணக்கிலடங்காது. புலவர் ஆபிதீன், மதிதாசன் என்கிற ஷாயிர் H.அப்துர் ரஹீம், தா. காசிம், அப்துஸ் ஸலாம், நாகூர் சலீம், நாகூர் சேத்தான், நாகூர் E.M.நெய்னார், அபிவை தாஜுதீன், இ. பத்ருதீன், மறைதாசன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாகூர் சாதிக் அவர்களைப் பொறுத்தவரை அவர் நாகூர் ஹனீபாவுக்காக எழுதித் தந்த அத்தனைப் பாடல்களுமே முத்தான பாடல்கள்; சத்தான பாடல்கள்; எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தித்திக்கும் பாடல்கள். நாகூர் ஹனிபாவுக்கும் கவிஞர் சாதிக் கைராசி மிகுந்தவர் என்ற எண்ணம் உள்ளூற மனதில் குடிகொண்டிருந்தது.
நாகூர் ஹனீபா என்ற மாபெரும் பிம்பத்திற்கு முன்னாள் அவருக்கு பாடல் எழுதிதந்த கவிஞர்கள் நிழலாக மறைந்து போனார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு நாகூர் ஹனீபாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பயனில்லை. அந்த கறுப்புச் சூரியனின் தோற்றத்தைப் போலவே அவருடைய ‘இமேஜும்’ ஆஜானபாகுவானது. அந்த அதிரடி சூரியனுக்கு முன்பாக எவரெடி ‘டார்ச்’ வெளிச்சம் எடுபடாமல் போவது இயற்கைதானே?
(முனைவர் பட்டத்திற்காக நாகூர் ஹனீபாவின் பாடல்களை ஆய்ந்துவரும் இலங்கை சகோதரர் ஒருவருக்கு என்னுடைய கட்டுரைகள் பேருதவியாக இருக்கிறது என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது)
“நாகூர் ஹனீபாவின் பாடலின் வெற்றிக்கு காரணம் அதை எழுதித் தந்த கவிஞர்களா? அல்லது அவரது பாடல் தேர்வா?” என்ற தலைப்பு வேண்டுமானால் பட்டி மன்றத்திற்கோ அல்லது முனைவர் பட்டம் வாங்க நினைக்கும் கற்றறிந்த மாணவருக்கோ முற்றும் உகந்ததாக இருக்கும். நாகூர் ஹனீபாவின் பாடலின் வெற்றிக்கு பின்னணியில் ஒரே ஒரு நபர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது மட்டும் எனக்கு திட்டவட்டமாகத் தெரியும். அவர் பெயர் இன்பராஜ். திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர். நாகூர் ஹனீபாவின் பெரும்பான்மையான பாடலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அவர். இன்பம் பொங்கும் பாடல்கள் யாவும் இன்பராஜ் இசையமைத்த இன்னிசை.
நடிகை சரோஜாதேவிக்கு கண்கள் பேசுவது போல, சிவாஜி கணேசனுக்கு உதடுகளும் புருவங்களும் பேசுவதைப் போல, இன்பராஜுக்கு கைவிரல்கள் பேசும். ஆம். ஆர்கன் கீ-போர்டில் இவரது விரல்கள் படருகையில் அத்னான் சாமியின் அதே வேகம். குலாம் அலியின் அதே லாவகம். இன்பராஜ் என்ற அற்புதமான இசைக்கலைஞன் வெளிச்சத்துக்கே வராமல் போனான் என்பது ஒரு மாபெரும் துரதிருஷ்டமே. இன்பராஜுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு இதோ வருகிறேன்.
இஸ்லாமியப் பாடகர் ஜெய்னுலாபுத்தீன் என் கல்லூரி காலத்தில் நான் படித்த அதே சென்னை புதுக்கல்லூரியில் படித்தவர். நடிகர் ராதா ரவி, சின்னி ஜெயந்த் மற்றும் ஜெய்னுலாபுத்தீன் ஒரே ‘செட்’ மாணவர்கள். கல்லூரி ஆண்டுவிழாவில் ராதா ரவி ஒரு நாடகத்தில் நடிக்க அவருடைய சகோதரர் எம்.ஆர்.ஆர்.வாசு நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தார். வேகமாக ஊதினால் காற்றில் பறந்துவிடும் ஒல்லியான தேகம் உடைய முஸ்லிம் மாணவர் ஒருவர் Benaam () என்ற படத்தில் இடம் பெற்ற,. சன்ச்சல் பாடிய “யாரா ஓ யாரா” என்ற எட்டுக்கட்டை உச்சஸ்தாயி பாடலை அதே குரல் வளத்துடன் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் அந்த நபர்தான் இன்றைய இஸ்லாமியப் பாடகராக வலம்வரும் “வெள்ளிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வருவேன்” புகழ் ஜெய்னுலாபுத்தீன் பைஜி. அவரை நாங்கள் ” The chanchal of New College” என்றுதான் செல்லமாக அழைப்போம்.
[அது என்னமோ தெரியவில்லை. இஸ்லாமியப் பாடகர் என்றாலே நாகூர் ஹனிபா, காயல் ஷேக் முஹம்மது. ஜெய்னுலாபுதீன் போன்று எட்டுக்கட்டை தொனியில், அடித்தொண்டையிலிருந்து, High Decibel Frequency-யில், ஸ்பீக்கர் தெறிக்க, காது ஜவ்வு கிழிய பாடவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. உதாரணத்திற்கு ஜக்ஜித் சிங் போன்று யாராவது ஒருவர் மென்மையான குரலில் பாடினார் என்று வைத்துக் கொள்வோம். அவரை இஸ்லாமியப் பாடல் பாடுவதற்கு லாயக்கே இல்லை என்று நம் மக்கள் கண்டிப்பாக Disqualify செய்து விடுவார்கள்]
பாடகர் ஜெய்னுலாபுத்தீன் கல்லூரியில் என்னைவிட இரண்டு வருடங்கள் சீனியர். (நடிகர் சரத் குமாரும் அதே கல்லூரியில் வித்தியாசமான ‘பைக்’ வைத்துக் கொண்டு பந்தாவாக ‘அலம்பல்’ பண்ணிக்கொண்டிருந்த காலம் அது) பாடகர் ஜெய்னுலாபுத்தீனுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஜெய்னுலாபுத்தீன் அவர்களுக்கு சுமார் பத்து இஸ்லாமியப் பாடல்களை ஒரே நேரத்தில் எழுதித் தந்தேன். அந்த பத்து பாடல்களுக்கும் இரண்டே நாட்களில் வெறும் ஒரு சிந்தஸைசரை வைத்துக் கொண்டு திறம்பட இசையமைத்துக் கொடுத்தார் இன்பராஜ். ஒவ்வொரு பாடல்களுக்கும் பத்து விதமான மெட்டுக்கள் பலவிதமாக இசைத்துக் காண்பித்து எனக்கும் ஜெய்னுலாபுத்தீன் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அவருடைய இசைத்திறத்தை வெளிக்காட்டியதை என்னால் மறக்க முடியாது. “பாலைவனத்தில் பூத்த மலரே” “அலீஃப் என்ற எழுத்தில் மட்டும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு” “போகும் மேகங்களே! எங்கள் பூமான் நபிக்கு சலாத்தை சொல்லுங்களேன்” போன்ற எனது பாடல்கள் தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியாவிலும் ஜெய்னுலாபுத்தீன் அவர்களின் குரலில் ஒலித்தது.
அதே போன்று, 1987-ஆம் ஆண்டு பாடகர் ஜெய்னுலாபுத்தீன் உடன் நாகூர் சாதிக் அவர்களுக்கு ஏற்பட்ட நட்புறவுக்குப் பிறகுதான் கவிஞருடைய ஏகப்பட்ட பாடல்கள் அரங்கேறின. அவரின் அளவிலா கவியார்வத்திற்கு வடிகாலாக இருந்தார் இந்த பாடகர். “ஆன்மீகத் தென்றல்” என்ற பட்டத்துடன் A.ஜெய்னுலாப்புத்தீன் ஃபைஜி. இசையுலகை வலம் வந்த நேரம் அது.
“நன்றியை வைத்து உனைப் புகழ்ந்தேனே
நல்லருள் செய்வாய் யா ரஹ்மானே!”“என் ஆசை நெஞ்சம் தேடுதே யாரசூலல்லாஹ்”
“மன்னர் நபி நடந்து சென்ற”
போன்ற பாடல்கள் நாகூர் சாதிக் என்ற கவிஞரை மென்மேலும் இஸ்லாமிய இசையுலகில் அடையாளம் காட்டித் தந்தது.
சாதிக்க வந்த ஆதிக்க நாயகன்
75-வயதான நாகூர் சாதிக் பந்தா எதுவுமே இல்லாத பேர்வழி. புகழுக்கு ஆசைப்படாதவர். தன் கவித்திறமையை பகிரங்கமாக வெளிக்காட்டி சமுதாயத்தில் பீற்றிக் கொள்ளாதவர். இன்றைய இளம் தலைமுறையினர் யாருக்கும் கூடுதல் பரிச்சயம் இல்லாதவர். “தானுண்டு தன் வேலையுண்டு” என்றிருப்பவர். மொத்தத்தில் பிழைக்கத் தெரியாத மனிதர்.
1937-ஆம் ஆண்டு அப்துல் கனி, ஹமீதா அம்மா இருவருக்கும் மகனாக பிறந்த இவர் பிறக்கு முன்பே தந்தையை இழந்து, சிறிய தந்தை செய்யது இப்ராஹீம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து ஆளானவர். நாகூர் ஹனிபா பயின்ற அதே நாகூர் செட்டியார் பாடசாலைதான் இவருக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த கலாகேந்திரம். இவர் கவிதை எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து முறையான பயிற்சி தந்தவர் கவி A.S.அலாவுத்தீன் அவர்கள்.
நாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களான ரவீந்தர், தூயவன், நாகூர் சலீம், நாகூர் சேத்தான், டைலர் அஜ்ஜி இவர்களைப்போன்று நாகூர் சாதிக்கின் பெயரும் நாகூர் நாடக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பின்னர் “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
நாகூரில் பல கவிஞர்கள் “பைத்து சபா” மூலமாக கண்டெடுக்கப் பட்டவர்கள்தான். ஏதாவது ஒரு சினிமாப் பாடல் பிரபலமாகி விட்டால் போதும். அதே மெட்டில் உடனே ‘இஸ்லாமியப் பாடலொன்று” முளைத்துவிடும். குத்துப்பாடல் மெட்டில் இஸ்லாமியப் பாடல்கள் அரங்கேறுகையில்தான் சிற்சமயம் நமக்கு இரத்தக்கொதிப்பும் கூடவே எகிருகிறது. நாகூர் சாதிக் அவர்களின் எல்லா பாடல் வரிகளும் கண்ணியம் மிக்கதாக இருக்கும்.
வரந்தரும் மாநபி வையத்தில் பிறந்தாரே
முழு மதி ஒளிவோடு மனிதா!
என்ற பாடலோடுதான் அவரது அறிமுக நுழைவு இருந்தது. அன்று எழுதத் தொடங்கிய பேனா இன்றுவரை நிறுத்துவேன் என்பேனா என்கிறது. கவிதையுலகில் சாதிக்க வந்த சாதிக், ஆதிக்க நாயகனாக இன்றுவரை வலம் வருகிறார்.
நாகூரில் கவிஞர்கள் நிறைய உருவாவதற்கு என்னதான் காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தேன். மண்ணின் மகிமை, புலவர் கோட்டை என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும். இதுபோன்ற பைத்து சபாக்கள், மற்றும் கல்யாண நிகழ்ச்சியில் இடம்பெறும் ‘நாலாம் நீர்’ சடங்கின்போது இசைக்கப்படும் பரிகாசப் பாடல் போன்றவை, வளரும் கவிஞர்களுக்கு ஒரு Platform அமைத்துக் கொடுக்கிறது. இன்று கவிஞர்களாக வலம் வரும் கதிர்தாசன் (காதர் ஒலி), இதயதாசன் (காசிம்) உட்பட எத்தனையோ கவிஞர்கள் பரிகாசப் பாடல்கள் எழுதி கவிஞர்களாக நம்மிடையே அங்கீகாரம் பெற்றவர்கள்தான்.
நாகூர் வருகை தந்து, மேடையேறி இங்கிருந்து பிரபலமடைந்த பாடகர்களில் அதா அலி ஆஜாத், ஹரிகிருஷ்ணன், நாகை ராமகிருஷ்ணன், காயல் ஷேக் முகம்மது, ஜெய்னுலாபுதீன் போன்றோர்கள் அடக்கம். வெளியூர்க்காரர்களான இவர்கள் அனைவரும் நாகூர்க் கவிஞர்களின் பாடலைப் பாடியிருக்கின்றனர். ஆக உள்ளுர்ப் பாடகர்கள் அன்றி வெளியூர்ப் பாடகர்களுக்கும் பாடல் எழுதித் தந்து புகழ் அடையக் கூடிய கூடுதல் வாய்ப்பு நாகூர்க் கவிஞர்களுக்கு தாராளமாகவே ‘போனஸாகக்’ கிடைக்கிறது. நாகூர்மண் கச்சேரிகளுக்கு பேர்போனதால் கவிஞர்களின் பேனாக்களுக்கும் எல்லையில்லா கொண்டாட்டம்தான்.
அண்மையில் (2011-ஆம் ஆண்டு) சமுதாயம் மறந்து போன இக்கவிஞனை Innerlight Moments என்ற சிங்கை நிறுவனம், சிங்கப்பூர், மலேசியாவுக்கு வரவழைத்து கெளரவித்தது. நாகூரைப் பொறுத்தவரை இவருக்கு பாராட்டு விழா நடத்தினால் யாரும் வருவார்களா என்பது சந்தேகமே. காரணம் நாகூர் ஹனீபா என்ற சாதனையாளனுக்கு சில ஆண்டுகட்கு முன்னர் நாகூர் முஸ்லீம் சங்கத்தில், ஜனாப் சுல்தான் மாலிமார் அவர்களின் தலைமையில், ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி, ஊரெல்லாம் கூப்பாடு போட்டு, போஸ்டர் அச்சடித்து, நோட்டீஸ் விநியோகித்து, விளம்பரம் செய்து, அவருக்கு “வாழ்நாள் விருது” கொடுத்தபோது அக்கூட்டத்திற்கு திரண்டு (?) வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதைக்கண்ட கம்பம் சாகுல் ஹமீது “இதே விழாவை கம்பம் நகரில் ஏற்பாடு செய்திருந்தால் ஊரே திரண்டுவந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கும் என்று மனமுடைந்து பேசினார். இதைத்தான் “உள்ளூர் மாடு விலை போகாது” என்று பழமொழி சொன்னார்களோ?
தும்பை விட்டு வாலைப் பிடித்தே பழக்கப் பட்டு போனவர்கள் நாம். ஏனெனில் இருக்கும்போது அவனை கண்டுக்காமல் இருந்துவிட்டு, அவன் போனபின் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான் நமது பண்பாடாக இதுவரை இருந்து வருகிறது. தமிழுக்கு இறவாப் புகழைப் பெற்றுத் தந்த பாரதியின் சவ ஊர்வலத்துக்கு 30 பேர்கள் கூட கலந்துக் கொள்ளவில்லையே? ஒரு கொத்துப் பறாட்டவுக்கு கவிதை பாட தயாராக இருந்து, வறுமை தின்ற கவிஞனான புலவர் ஆபிதீனை நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு அவன் போனபிறகு அவன் பெயரில் “ஆபிதீன் சதுக்கம்” என்று பெயர் மட்டும் வைத்து பொதுக்கூட்டம் போட, அந்த நாற்சந்தியை பயன்படுத்திக் கொள்கிறோம். மகாகவி சாரண பாஸ்கரனை கடைசி காலத்தில் “சீட்டுக்கவி” எழுதி உதவி எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளியதே இந்த சமுதாயம்?
நாகூர் தர்கா நிர்வாகம் கவிஞர் சாதிக் அவர்களுக்கு “ஆன்மீகக் கவிஞர்: என்ற பட்டத்தை தந்து தன் பங்குக்கு கடமையை நிறைவேற்றி விட்டது.
வருங்காலத்தில் நாகூர் சாதிக் அவர்களின் மறைவுக்குப் பின்னால் யாராவது இன்னொரு கவிஞர் வந்து “கவிஞர் சாதிக் வாழ்ந்தமுறை உனக்குத் தெரியுமா?” என்று அவரை வருங்கால சந்ததியினருக்கு நினைவு படுத்துவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.
– அப்துல் கையூம்
தொடர்புடைய சுட்டி: Hawama Majeed
நன்றியை வைத்து உனைப் புகழ்ந்தேனே
நெஞ்சில் உருவாகும் நினைவெல்லாம் பாடும்
கவிஞர் நாகூர் சாதிக் வலைத்தளம்
nagoreismail786
August 10, 2012 at 6:35 am
அருமையான பாடல்கள்.. அற்புதமான வரிகள்.. அலுத்துபோகாத இசை… அறிந்திராத தகவல்களை மிகவும் சுவாரஸ்யமாக படிக்க தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். இது போன்று இசை, எழுத்து, பாடல் போன்ற கலைத்துறையில் பிரபலமாகாத நாகூர் காரர்களை ஒன்று திரட்டி மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
Abdul Qaiyum
August 10, 2012 at 9:45 am
நன்றி இஸ்மாயில். நாகூர் மண்ணைவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாமாங்கம் பிரிந்து வந்துவிட்டபடியால் இன்றைய இளந்தலைமுறையினரின் திறமைகளை நான் அறிந்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது. That’s a very big drwaback for me. இருந்தும் எனக்குத் தெரிந்தவரை எழுதிவருகிறேன்.
ஹமீது ஜாஃபர்
August 10, 2012 at 4:39 pm
நாகூர் அருகிலேயே இருந்துக்கொண்டு நாகூர் சாதனையாளர்களைத் தெரியமால் இருந்திருப்பது எவ்வளவு பெரிய மடமை என்று வருத்தமடைகிறேன். ஒன்று மட்டும் எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. எங்கள் ஊரில் (மஞ்சக்கொல்லை) வருடாவருடம் ஷெய்கு அஹமது ஒலியுல்லாஹ் (மாதிஹிர் ரசூல் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் மூத்த சகோதரர்) அவர்களின் ஹந்தூரியின் போது வெண்கலக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் கச்சேரி நடக்கும். மை செட் மட்டும் நன்றாக இருக்காது. ஒரு முறை என்னை மாற்றுங்கள் அல்லது மைக் செட்டை மாற்றுங்கள் என்று விளையாட்டாக சொன்ன அதே வருடம் இசைக் கருவிக் கலைஞர்கள் மழை அல்லது எதோ காரணத்தால் வரவில்லை. கொண்டுவந்திருந்த ஹார்மோனியம் ஒரு தப்லா ஒரு புல்புல்தாரா இந்த மூன்று கருவிகளையும் வைத்துக்கொண்டு, இரண்டு மணி நேரம் இசையை மழையாகப் பொழிந்தார்.
எந்த ஊரிலும் எந்த கச்சேரியிலும் நிகழாத சாதனையை எங்கள் மஞ்சக்கொல்லையில் சாதித்தார். அன்று மைக் செட் கூட மக்கர் செய்யாமல் சாதனை செய்தது.
வருடங்கள் நாற்பதுக்குமேல் கடந்தாலும் அந்த மகத்தான சாதனை இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. மூன்றே மூன்று கருவிகளுடன் பாடிய பாடல்கள் இன்னும் என் நெஞ்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
Nagore Rumi
August 11, 2012 at 11:48 pm
ரொம்ப அவசியமான பதிவு. சாதிக் நானா உண்மையிலேயே எளிமையான அடக்கமான மனிதர். அவரை நண்பர் பிலால் கவிஞரே என்றுதான் கூப்பிடுவார். எனக்குத் தெரியும். அன்பு கையூம், நாகூர் பற்றி நீங்களும் ஆபிதீனும் தளங்களில் எழுதியும் சேமித்தும் வைத்திருப்பவற்றையெல்லாம் ஒரு நூலாகக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். என்னிடம் பொறுப்பு கொடுத்தால் நாம் சேர்ந்து செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம். அட்டையிலிருந்து எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நாகூர் பற்றியும் நாகூர் எழுத்தாளர்கள் பற்றிய பதிவும் ஃபோட்டோவுடன் மிகவும் அவசியம் என்ன சொல்கிறீர்கள்?
அன்புடன்
நாகூர் ரூமி என்ற ரஃபி’
LKS.Meeran Mohideen
March 18, 2020 at 8:05 am
அன்பு அண்ணன் அவர்களுடைய பதிவினை பார்த்தேன் மனம் நெகிழ்ந்து போனேன் .
இசை முரசு நாகூர் அனிபா அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கவிஞர் எம் அப்துல் ரஹ்மான் அவர்களும் அற்புதமான சில பாடல்களை எழுதியிருக்கிறார்கள் . கவிஞர் விரையம் அப்துர்ரஹ்மான் அவர்கள் தற்போது உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.
இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்கு 1993 ஆம் ஆண்டு தற்போது நான் நிர்வாகியாக ப் பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ,திமுக தலைவர் கலைஞர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது அன்பு அண்ணன் வைகோ உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்ற முத்துவிழா நடைபெற்றது….பல்லாயிரம் மக்கள் கலந்து பங்கேற்றனர். இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்கு முத்து விழா நடந்த சமயம் நான் முத்து விழாக் குழுவின் செயலாளராக பணியாற்றினேன்.
இஸ்லாமிய உலகில் முஸ்லிம் கவிஞர்களை பாராட்டுவதற்கு தற்போது உள்ள காலகட்டத்தில் யாரும் இல்லையோ என்கின்ற கவலையும் இருக்கிறது.
உங்களைப் போன்ற பெருமக்கள் எழுதுகின்ற இந்த கட்டுரைகள் அவர்களுடைய புகழை காலமெல்லாம் பேசிக் கொண்டிருக்கும்.
உங்கள் போன்ற பெருமக்கள் முயற்சித்தால் தமிழக அளவில் குடத்துக்குள் இருக்கின்ற விளக்காக இருக்கின்ற கவிஞர்களின் பெயரை அடையாளம் காட்ட முடியும்.