RSS

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 15

14 Jun

FotorCreated

ராஜ ராஜன்…….

“வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?” என்பார்கள். வலுவான அஸ்திவாரத்துடன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் கதை-வசனகர்த்தா ரவீந்தர்.

வடிவேலு ஒரு படத்தில் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பார்.   ரவீந்தரைப் பொறுத்தவரை அவரது பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்காக இருந்தது. அதனால் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருந்தது.

“நேற்று  பெய்த மழையில் இன்று பூத்த காளானாய்” அதிர்ஷ்டக் காற்றடித்து களம் புகுந்தவரல்ல ரவீந்தர். சரியான குருவிடம், முறையான பயிற்சி பெற்று, வசனக்கலையில் வளமான தேர்ச்சி பெற்றவர்

யார் அந்த ரவீந்தரின் குரு? அறிஞர் அண்ணாவா? கலைஞர் மு,கருணாநிதியா.? யார் அவர்?

திரைப்படத்துறையில் ரவீந்தருக்கு குருவாக வாய்த்த அந்த மனித சாதாரண மனிதரல்ல. “வசனகர்த்தாக்களின் பிதாமகன்” என்றழைக்க தகுதி படைத்தவர்.

வெறும் பாடல்களின் தொகுப்பாக இருந்த தமிழ்ப்படங்களுக்கு வசன மழை பொழிவித்த வசீகர படைப்பாளி.

செந்தமிழ் இலக்கியத்தை திரையுலகில் திறம்பட புகுத்திய சீர்த்திருத்தவாதி.

கம்பன் மகன் “அம்பிகாவதி” துன்பவியல் கதைக்கு கன்னித்தமிழல் உரையாடல் எழுதிய கலைஞானி..

ஐம்பெரும் தமிழிலக்கியங்களையும் ஐயமறக் கற்று திரைவானில் வார்த்தை விளையாட்டு ஆடிய வசனவேந்தன். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும், குண்டலகேசியையும் அதன் சுவை சற்றும் குன்றாது அவரால் வெள்ளித்திரையில் வார்த்தெடுக்க முடிந்தது.

அவர் பெயர் இளங்கோவன். ரவீந்தரைப் போன்று சினிமா உலகம் மறந்துபோன முன்னோடிகளில் அவரும் ஒருவர். செங்கல்பட்டு இவரது சொந்த ஊர்.

Ilangovan

இளங்கோவன் இளமையிலும் முதுமையிலும்

“படைப்பாற்றலால் தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்களுள் திரைப்படத் துறையில் எனக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் இளங்கோவன்தான்”

என்று “தனது கலையுலக அனுபவங்கள்’ தொடரில்  எழுத்துலக மேதை ஜெயகாந்தன் இவரைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரம் காவியம் வடித்த இளங்கோவடிகள் மீது கொண்ட அதீத காதலால் தணிகாசலம் என்ற தன் பெயரை இளங்கோவன் என்று மாற்றிக்கொண்டவர்.

“பூம்புகார்” வடித்த கலைஞர் மு.கருணாநிதியை இன்று நாம் சிலாகித்துப் பேசுகிறோம். கலைஞரின் எழுத்துக்கு உந்துதலாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் இளங்கோவன். இதைக் கலைஞரே ஒருமுறை பிரகடனப்படுத்தியுள்ளார்.

1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில்  ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.

மெளனப் படங்கள், பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. அதில் பாடல்கள்தான் நிறைந்திருக்கும். குறைந்த பட்சம் இருபத்தைந்து பாடல்களாவது இடம்பெற்றுவிடும். இளங்கோவனின் வருகைக்குப்பிறகுதான் வசனங்கள் மகத்துவம் பெற்றன. வசனகர்த்தாக்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.

இலக்கியத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்த இளங்கோவனிடம் உதவியாளராக பணியாற்றியபோது ரவீந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்; ஏராளம். இளங்கோவனின் கைவண்ணத்தில் அனல் தெறிக்கும். அடுக்குமொழி வசனங்கள் அரங்கத்தை அதிர வைக்கும். உதவியாளராக இருந்த ரவீந்தரிடமும் அதன் பாதிப்பு வெளிப்பட்டது. பசுந்தமிழில் பக்குவம் பெற இளங்கோவனின் பாசறை அவருக்கு பெரிதும் வழிவகுத்தது. தமிழ்மொழியில் தனித்துவம் கண்ட தணிகாசலத்தின் குருகுலத்தில் ரவீந்தர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார்.

தமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ அதே அளவு ஆங்கிலத்திலும் இளங்கோவன் புலமை வாய்ந்தவர். ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்”  காவியத்தின் சுவையை பருகிய அவர் அதே பாணியில் காதல் ரசம் சொட்டும் வசனங்களை “அம்பிகாவதி”யில் வடித்திருந்தார்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பார்கள். வசனகர்த்தாக்களின் பிதாமகனாக விளங்கிய இளங்கோவனிடம் “ராஜ ராஜன்” படத்தில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் ரவீந்தரின் எழுத்துக்களுக்கு உரமூட்டியது. புடம்போட்ட தங்கமாய் அவரது எழுத்தாற்றல் இன்னும் பெருகேறியது..

1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.

rajarajan collage

எம்.ஜி.ஆரின் மேடை நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ரவீந்தர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய முதற்படம் “குலேபகவாலி” (1956). “இந்தப் படத்துலே நான்தாங்கனி புலி கூட சண்டை போடுற காட்சியிலே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு நடிச்சேன்” என்று பெருமையாக எங்க ஊரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் நாகூர் எஸ்..பரீது பெருமையாகச் சொல்வதை செவியுற்றிருக்கிறேன். “குலேபகவாலி” படத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த தஞ்சை ராமையாஸ் பெயர்தான் காட்டப்பட்டது.

அதன்பிறகு ரவீந்தர் வசனம் எழுதிய “மகாதேவி” (1957) படத்திலும் திரைக்கதை வசனம் : கண்ணதாசன் என்று காட்டப்பட்டது.

“ராஜராஜன்” திரைப்படம் வெகு நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா, எஸ்.சி.சுப்புலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார்  எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் நடித்திருந்தனர்.

“ராஜ ராஜன்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் முத்தான பாடல்கள்.

எழுபதுகளில் சிலோன் ரேடியோவைத் திறந்தாலே இந்தப் பாடல்தான் அடிக்கடி ஒலிக்கும்.

“நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே”

“யமன் கல்யாணி” ராகத்தில் இசையமைக்கப்பட்டு, சீர்காழி கோவிந்தர்ராஜனும்  ஏ.பி.கோமளாவும் பாடிய காலத்தால் அழியாத இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதே படம் பின்னர் 1963-ஆம் ஆண்டு “ராஜாதி ராஜூ கதா” என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.

இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.

இருவரும் திரையுலகம் மறந்துப்போன  முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்

பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.

Victor Hugo எழுதிய  “Les Mis’erables”  என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு”  இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.

அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும்  Justin Huntly Mccarthy  எழுதிய  “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.

இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.

–  அப்துல் கையூம்

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

 

 

 

 

 

 

Tags: , , , ,

One response to “எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 15

  1. Maxo

    April 17, 2016 at 1:33 pm

    Kindly continue further

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: