அரைத்த மாவையே அரைத்தெடுத்து
அவலை நினைத்து உரலை இடித்து
ஆளில்லா டீக்கடையில் அஸ்கா டீ ஆத்தி
அதோ பார் வெள்ளை காக்கா என அபாரமாய் கூவி
அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமுதமுமாய்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறி
சுயபுத்தி இழந்து சொற்புத்தியும் களைந்து
கூரைமேலே சோறு போட்டால்
ஆயிரம் காகமென வாய்ச்சவடால் பேசி
போகாத ஊருக்கு பொறுமையாய் வழி சொல்லி
ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்
கொட்டை பாக்குக்கு விலை கூறித் திரிந்து
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என
கொடிபிடிக்கும் தொண்டர்கள் துதிபாட
கோளுஞ் சொல்லி குனிந்தவாறு கும்பிடும் போட்டு
நகத்தாலே கிள்ளுவதை கோடாரியால் வெட்டிச் சாய்த்து
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என பீதி கொண்டு
மடியிலே கனம் ஏந்தி வழியிலே பயம் கவ்வ
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசி
ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமியாய்
சண்டிக் குதிரையை நொண்டி சாரதி ஓட்ட
தேர்தல் நாள் வரை நெடுஞ்சுவராய் காட்சி தந்து
தேர்தல் முடிந்தபின் குட்டிச்சுவராய் காட்சிதரப் போகும்
கட்சிகளின் கூத்துக்கு மங்களம் பாட
காத்திருங்கள் இன்னும் ஒருசில வாரங்கள் !
கவலை மறந்து அமைதியாய் வேடிக்கை பாருங்கள் !!
– அப்துல் கையூம்
ஆரூர் பாஸ்கர்
April 19, 2016 at 7:08 pm
good one!
MAxo
April 20, 2016 at 12:47 pm
Pls Continue – MGR and our NAtives