RSS

சொல்ல மறந்த வரலாறு – (பாகம் – 3)

11 Sep
img_2736

முன்ஷி அப்துல்லாஹ்

உலகச் சரித்திர  ஏடுகளில்  இடம் பெற்றிருக்கும் ஒரு உன்னதமான மனிதனின் பூர்வீக ஊர்தான் இந்த நாகூர் என்ற நினைப்பு   நாகூர் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தும்  என்பது திண்ணம்.

அது ஏனோ தெரியவில்லை நாகூரின் மண்ணின் மைந்தர்களுக்கு இலக்கிய ஈர்ப்பு என்பது ஒரு வரமாக அமைந்து விட்டது போலும். இலக்கிய வானில், தமிழிலும் பிற மொழிகளிலும் சுடர்விட்ட பிரகாசித்த பிரபலங்கள் இங்கு கணக்கிலடங்காது. குன்றிலிட்ட விளக்காக சுடர்  விட்டு எரிய வேண்டிய அவர்களது புகழ் குடத்திலிட்ட விளக்காக யாரும் அறியா வண்ணம் மறைக்கப்பட்டது  வருத்தத்தை தருகிறது.  அப்பேர்ப்பட்ட மாமனிதர்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்வதுதான் இவ்வலைத்தளத்தின் நோக்கம்.

‘திரைகடல் ஓடி திரவியம் தேட’ கீழை நாடுகளுக்கு பயணமான நாகூர் வம்சாவழி  குடும்பத்தில் வந்துதித்த, , உலகப் புகழ் பெற்ற “நவீன மலாய் இலக்கியத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் முன்ஷி அப்துல்லாஹ்வின் வாழ்க்கை வரலாற்றை அலசும் நாம், அவருடைய பெயருக்கும் புகழுக்கும் காரணமாக விளங்கிய அவரது எழுத்தாற்றலை சற்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

மலாக்கா காவற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்திய சிப்பாய்களுக்கு மலாய் மொழி கற்றுக் கொடுப்பதுதான் முன்ஷி அப்துல்லாஹ் ஏற்ற முதற்பணியாகும்.  அதன் பிறகு பிரித்தானிய மற்றும் அமெரிக்க கிறித்துவ மிஷனரி பணியாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மலாய் கற்றுக் கொடுக்கும் பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டார்.

img_2751

சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்

சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ் உடனான தொடர்பு

இத்தருணத்தில் சிங்கப்பூர் நிறுவனர் சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ் (Sir Thomas Stamford Raffles) என்பவரைப் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.

இவர், பிரித்தானிய அரசியலாளராகவும், பிரித்தானிய சாவகத்தின்  (British Java) துணைநிலை ஆளுநராகவும் (1811–1815),  பிரித்தானிய பென்கூலனின் (Bencoolen) ஆளுநராகவும் (1817–1822), இன்னும் சொல்லப்போனால் சிங்கப்பூரை நிறுவியவரும் ஆவார்.

அதுமட்டுமின்றி,  நெப்போலியப் போர்களின் அங்கமாக டச்சு மற்றும், பிரான்சு நாட்டு படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான  சாவகத்தை கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை விரிவாக்குவதில் பெரும் பங்காற்றியவரும் இவரே. தொழில்முறை அல்லாத எழுத்தாளராக சாவகத்தின் வரலாறு (தி ஹிஸ்டரி ஆப் ஜாவா) என்ற நூலை எழுதியுள்ளார்.

இவருக்கு உதவியாளராக இருந்து பேரும் புகழும் பெற்றவர்தான் நம் கட்டுரையின் நாயகன் முன்ஷி அப்துல்லாஹ். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட தொடர்பு சுவராஸ்யமானது.

முன்ஷி அப்துல்லாஹ்வுக்கும் சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்க்கும் இடையே உண்டான தொடர்பு வெகுகாலத்திற்கு முந்தியது

ஆங்கிலத்தில் Child Prodigy என்றும் ஜெர்மானிய மொழியில் Wunderkind என்றும் சொல்வார்களே அப்பதத்திற்கு ஒப்ப ‘சிறுமுது அறிஞராக’த் திகழ்ந்தவர் முன்ஷி அப்துல்லாஹ் என்பதை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

இசைத்துறையில் மொசார்ட், சதுரங்கத்தில் பால் மர்ஃபி, கணிதத்தில் காஸ் மற்றும் நியூமான், கலைத்துறையில் பாபுலோ பிக்காசோ, தமிழ்ப் புலவர்களில் திருஞானசம்பந்தர் ஆகியோரை சிறுமுது அறிஞர்களுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

முதன் முதலில் ராபிள்ஸ் மலாக்கா வந்தபோது பன்மொழி பாண்டித்தியம் பெற்ற சிறுவன் அப்துல்லாஹ்வின் திறமையைக் கண்டு வியந்து, தன்னோடு பணியில் அமர்த்திக் கொண்டார். மலாய் நாட்டு சிற்றரசர்களை சந்திக்கவும், உரையாடவும், அவர்களோடு கருத்துக்கள் பரிமாறவும் அப்துல்லாஹ்வின் சேவை அவருக்கு பேருதவியாக இருந்தது.

ராபிள்ஸ் மலாக்காவை விட்டு போகும்போது அப்துல்லாஹ்வையும் அழைத்துப் போகவே விருப்பப்பட்டார். ஆனால் அவருடைய தாயார் சல்மா அவரை விட்டு பிரிய சம்மதிக்கவில்லை, அதன்பின் ஒன்பது  வருடத்திற்கு பிறகு சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்ஸை சிங்கப்பூரில் வைத்து  முன்ஷி அப்துல்லாஹ்வை மீண்டும் சந்திக்கிறார். இந்த திறமையாளர்   தன்னோடு கூடவே இருந்தால் பலவற்றை தன்னால் சாதித்துக் காட்ட முடியும் என்று உறுதியாக நம்புகிறார்.. முன்ஷி  அப்துல்லாஹ்வை இணங்கவைத்து மீண்டும் தன்னுடனேயே பணியில் அமர்த்திக் கொள்கிறார்.

ஜனவரி 29, 1819 தினத்தன்று  ஸ்டம் போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூர் வந்திறங்கிய பின்னர் இத்தீவு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சிங்கப்பூர் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் பாறைகள் இருந்தன. அவற்றில் இருந்த இந்திய மொழி போன்று செதுக்கப்பட்டிருந்த சொற்களை அவரின் பயணக் குழு கண்டுபிடித்தபோது, சிங்கப்பூரில் இந்தியர்களின் செல்வாக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் மறு உறுதிப்படுத்தினார். பாறைகளில் காணப்பட்ட எழுத்துக்கள் நீரலைகளால் உருமாறி தெளிவில்லாமல் இருந்தன.

கிழக்காசிய நாடுகளுள் குறிப்பிடத்தக்க இக்குட்டித்தீவுக்கு  சிங்கப்பூர். முதன் முதலாக, “சிங்கப்பூரா’ என்று பெயர் சூட்டியவர்கள்  நம் தமிழ்நாட்டு அரச பரம்பரையினர்தான். துமாசிக் என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டுக்கு, சிங்கப்பூரா என்று பெயரிட்டவர் இளவரசர் திரிபுவனா என்பது சரித்திரக் குறிப்பு. ராஜேந்திர சோழனின் வாரிசான நீல உத்தமன் கி.பி., 1160-ல் சிங்கப்பூராவை நிறுவியதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் சோழ மன்னர்களுக்கும், பல்லவர்களுக்கும் இந்த நாட்டுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

என்ற சுவையான தகவல்களை அள்ளித் தருகிறார் மூத்த பத்திரிக்கையாளரும், சிறந்த எழுத்தாளருமான ஜே.எம்.சாலி.

அப்துல்லாஹ் தமிழ், உருது, அரபி, மலாய் போன்ற பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த காரணத்தால் அவருடைய மொழித்திறனை சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

அதுமட்டுமின்றி,  மலாய்க்காரர்களுடன் முன்ஷி அப்துல்லா நெருங்கி பழக்கக்கூடியவராக இருந்தமையால் ராபிள்ஸுக்கு அது மேலும் பயனுள்ளதாக இருந்தது.   மலாய்க்காரர்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது.

சர் ஸ்டம்போர்டு ராபிள்ஸ்க்கு மொழிபெயர்ப்பாளராகவும், அந்தரங்க காரியதரிசியாகவும் பல ஆண்டுகள் அவருடன் பணி புரிந்தார் முன்ஷி அப்துல்லாஹ்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் எழுத்துப்பணி

இன்றளவும் சிங்கப்பூர் சரித்திர வரலாற்றுச் சான்றுகளுக்கு முன்ஷி அப்துல்லா வழங்கிய குறிப்புகளே இன்றிமையாத ஒன்றாக விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை.

அழிந்துவரும் கையெழுத்துச் சுவடிகளையெல்லாம் கையால் எழுதி பிரதிகள் எடுத்து பொக்கிஷமாக பாதுகாத்து வைத்த பெருமையும் முன்ஷி அப்துல்லாஹ்வைச் சாரும்.

writings

 

தமிழ் முஸ்லீம்களிடையே அன்றைய காலத்தில் அரபுத்தமிழ் என்ற எழுத்து வடிவம் இருந்தது. அதாவது தமிழ்மொழியாக்கத்தை அரபி லிபியில் எழுதுவது. முன்ஷி அப்துல்லாஹ் நூலாக எழுதிய வடிவமும் அதுபோலத்தான் இருந்தது. அதாவது மலாய்மொழி ஆக்கத்தை அரபி லிபியில் எழுதுவது. பிற்பாடுதான் மலாய் மொழியை ஆங்கில லிபியில் எழுதத் தொடங்கினார்கள்.

அரசு பணியாக இவர் கெலந்தான் என்ற இடத்திற்கு சென்று வந்த அனுபவத்தை நூலாக Kisah Pelayaran Abdullah ke Kelantan என்ற பெயரில் எழுதினார். இவர் இதனை 1843-ஆம் ஆண்டில் எழுதி முடித்தார். 1849-ஆம் ஆண்டில் இது  நூல் வடிவமாக வெளிவந்தது. வியாபார ரீதியாக பிரசுரிக்கப்பட்ட முதல் நூலும் இதுதான் என்கிறார்கள்.

இதனைப்   படித்துப் பார்த்த ஆல்ஃப்ரட் நார்த் என்ற நண்பர்தான் இவரை சுயசரிதம் Hikayat Abdullah (அப்துல்லாஹ்வின் கதை) எழுதத் தூண்டியவர். தன் நூலில் அவர் இந்த நண்பரை நன்றியுடன் குறிப்பிட்டு எழுதுகிறார்.

“இந்த அளவுக்கு மொழி ஆளுமை உடைய நீ, ஏன் உன் அனுபவத்தை தொகுத்து ஒரு நூலாக எழுதி வெளியிட்டு, பிறர் பயன்பட செய்யலாகாது?”

என்று ஆல்ஃப்ரட் ஏற்றி வைத்த தீப்பொறி முன்ஷி அப்துல்லாஹ்வின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி சொல்லொணா ஆர்வத்தைத் தூண்டி கிரியாவூக்கியாய் செயற்பட்டது. கரும்பு தின்ன கூலியா? “எழுத்தாக்கம்  என் உயிர்மூச்சு” என்று ஆகிப்போன அவர் இப்பணியை மனநிறைவுடன் செய்யத் தொடங்கினார்.

“ஹிகாயத் அப்துல்லாஹ்” எனும் நூலை, தனது வாழ்வின் மறக்க முடியாத நினைவலைகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணி நிறைவுற்றது.  இந்நூல் சிங்கப்பூரை பற்றிய தொடக்க கால சரித்திரத்தை விவரித்ததோடு,  19-ஆம் நூற்றாண்டின்   முற்பகுதியின் மலாக்கா சமூகத்தை பற்றிய விவரங்களையும் அப்பட்டமாகச்  சித்தரித்துக் காட்டுகிறது.

1811-ஆம் ஆண்டு பிரிட்டாஷாரின் ஜாவா படையெடுப்புக்கு ஆதாரமாகத் திகழ்வது அப்துல்லாஹ் எழுதிய டயரி குறிப்புக்கள்தான்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் சிறப்புகள் பலவற்றை சி.பி.பக்லி என்பவரின் சிங்கப்பூர் பற்றிய வாய்மொழி வரலாறு (1819- 1867) எனும் நூலில் நாம் காண முடிகின்றது.

முன்ஷி அப்துல்லாஹ்வின் “Kisah Pelayaran Abdullah” என்ற நூலை மொழிபெயர்த்த  E.கூப்பர் அப்துல்லாஹ்வின் எளிமையான எழுத்து நடையை வெகுவாகப் புகழ்கிறார். பாரம்பரிய இலக்கிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எதார்த்தமான வழக்கு மொழியில் மலாய் சொலவடையும் பழமொழிகளும் கலந்து எளிமையான மொழியில் எழுதிய முதற் எழுத்தாளன் இவர் என்று  நற்சான்று வழங்குகிறார்.

முன்ஷி  அப்துல்லாஹ்வின் சுயசரிதம் 1840-1843 –ல் எழுதப்பட்டு 1849 மார்ச் மாதம் பிரசுரமானது

முன்ஷி அப்துல்லாஹ்வின் ஜித்தா பயணம் “Kisah Pelayaran Abdullah ke-Negeri Jeddah” என்ற படைப்பு  அவருடைய  எழுத்தாற்றலுக்கு   மற்றொரு மணிமகுடம் எனலாம்.  இது அவர் மறைந்த பிறகு புத்தகமாக வெளியிடப்பட்டது..இது அவர் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்த அனுபவம், அவரது நண்பர் ஒருவரால் வெளிக்கொணரப்பட்டு நூலாக பதிப்பானது.

1874-ஆம் ஆண்டில் அப்துல்லாஹ்வின் “Hikayat Abdullah” வாழ்க்கை வரலாற்றினை ஜான் டி. தாம்சன்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆனால் அது முழுமையாகவும் துல்லியமாகவும் எழுதப்படவில்லை.

அதன் பின்னர் William Shellabear enpavar 1915- ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

முன்ஷி அப்துல்லாஹ்வின் உயரிய பண்பு

முன்ஷி அப்துல்லாஹ் பன்மொழி வித்தகராகவும் மொழி ஆளுமை மிக்கவராக இருந்தபோதிலும் அவரிடத்தில் காணப்படும் தன்னடக்கம் நம்மை வியக்க வைக்கிறது. தனது சுயசரிதையில் இப்படியாக அவர் எழுதுகிறார்.

“கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பார்கள். இந்த உண்மையை  முன்ஷி அப்துல்லாஹ் மனதளவில் பூரணமாக உணர்ந்திருந்தார்.  அவரது தந்தை அப்துல் காதிரின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்தவரல்லவா?

“Moreover what made me sad in my own heart was that I am an ignorant man, with very little command of language, and unskilled in the art of composition. And then again I am occupied more or less with the work of my profession. So because of all these things I felt worried”.

மொழி பாண்டித்தியம் பெற்ற ஒரு மனிதன் தன்னைத் தானே “அறிவிலி” என்று அடைமொழியிட்டு அழைத்துக் கொள்வதை தன்னடக்கம் என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்க இயலும்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப அப்துல்லாஹ்வின் அமைதியான பண்பும், அடக்கமும், அலட்டிக் கொள்ளாத தன்மையும் காண்போரை வியக்க வைத்தது.

“நான் மிகவும் சாதரணமானவன், எனது கல்வித்திறனும் அறிவும் மிகவும் சாதரணமானது. நான் என் சுயசரிதை எழுதுமளவுக்கு நான் தகுதியானவனா என்பது எனக்குத் தெரியாது” என்று தன்நூலில் தன்னடக்கத்துடன் பணிவாக எழுதுகிறார் அவர்.

முன்ஷியின் மலாய் நடை மிகவும் எளிமையானதாக இருந்தது. கடினமான பாரம்பரிய நடையில் இருந்த மலாய் மொழியின் நடையை இலகுவாக்கி பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்த பெருமை நம் கட்டுரை நாயகனையே சாரும். கடினமான தமிழில் இருந்த தமிழ்த்   திரைப்படப் பாடல்களை   அன்றாடம்  பேசும் மொழியில் எளிமையாக்கி கவிதை வார்த்த கவியரசு கண்ணதாசனைப் போல்  மலாய் மொழியை இலகுவாக்கி   சாமான்ய மனிதனும் புரிந்துக் கொள்ளும் வகையில் வழிவகுத்தவர்  முன்ஷி அப்துல்லாஹ்.

எனவேதான் இவர் “நவீன மலாய் மொழியின் இலக்கியத் தந்தை” என்று எல்லோராலும் இன்றளவும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகிறார்.  மலாய் இலக்கியம் ஒரு மாபெரும் மாற்றத்தைச் சந்தித்தது இவரின் எழுத்தின் மூலம்தான், அதீத கற்பனை புனைவுகள், நாட்டுப்புற கதைகள், மற்றும் புராண இதிகாசங்களில் சிக்கித் தவித்து வந்த மலாய் மொழியை மீட்டி ஜனரஞ்சக முறையில் எளிமையாக்கி யதார்த்த நடையில் கொண்டு வந்த பெருமை  முன்ஷி அப்துல்லாஹ்வைச்  சாரும்.  இவருடைய படைப்புக்கள்   மலேயா சரித்திர சான்றுகளைக் கூறும் ஆவண நூலாகத் திகழ்கிறது.

பிரசித்திப் பெற்ற வணிகர்களாகத் திகழ்ந்த எட்வர்ட் போஸ்டெட் (Edward Boustead) மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங் சகோதரர்கள் (Armstrong Brothers) போன்றவர்களுக்கு மலாய் மொழி ஆசானாகத் திகழ்ந்தவர் முன்ஷி அப்துல்லாஹ்.

முன்ஷி அப்துல்லாஹ்வும் கிறித்துவ மிஷனரிகளும்

முன்ஷி அப்துல்லாஹ்விற்கு கிறித்துவ மிஷினரிகளுடன் தொடர்பு ஏற்பட்டபோது அவர் சந்தித்த தடங்கல்கள் ஏராளம். முதலில் பெரிதாக எதிர்ப்பு கிளம்பியது அவருடைய தந்தையாரிடத்திலிருந்துதான். காரணம் சத்திய மார்க்கத்தின் சன்மார்க்கப் பிடிப்புடன் வளர்க்கப்பட்ட தன் மகன் எங்கே தடம் புரண்டு போய்விடுவானோ என்ற இயல்பான ஓர் அச்சம் அவருக்கு   மேலோங்கி  இருந்தது.. கிறித்துவ மதப் பிரச்சாரத்திற்காக முனைப்புடன் இயங்கும் பாதிரிமார்கள் தன் மகனை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி விடுவார்களோ என்று நினைத்து முன்ஷி அப்துல்லாவிற்கு பல்வேறு தடைகளை விதித்தார்.

முன்ஷி அப்துல்லாஹ் பாதிரிமார்களின் நட்பை விரும்பியதற்கு அவருக்கிருந்த  சுயநலமும் காரணம் எனலாம். முதலாவதாக மிஷனரிகள் ஏற்படுத்தி தரும் மொழிபெயர்ப்பு பணியில் நல்ல ஊதியம் கிடைக்கும் என்று நம்பினார். அடுத்து,  பல மொழிகளில் நிபுணத்துவம் பெற்று பன்மொழியாளனாக ஆகவேண்டும் என்று எதிர்கால கனவு கண்ட முன்ஷி அப்துல்லாஹ்விற்கு அவர்களிடமிருந்து  ஆங்கிலம் பயின்று கொள்ளும் அழகான ஒரு வாய்ப்பை அவர் நழுவவிடத்   தயாராக இல்லை.

இதன் தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை- சச்சரவுகள், மனத்தாங்கல்கள், கருத்து வேறுபாடுகள், கொஞ்ச நஞ்சமல்ல.

முன்ஷி அப்துல்லாஹ் ஒருநாள் தன் தந்தையுடன் தனிமையில் அமைதியாக உட்கார்ந்து அவருக்கு புரிய வைத்தார்.

“வாப்பா,, நான் உங்களுடைய கண்டிப்பில் வளர்ந்த பிள்ளை. என் மனதில் உள்ள ஈமானை, நீங்கள் கற்றுத் தந்த மார்க்க படிப்பினையை ஒருநாளும் மறந்து போகிறவனல்ல. . எனக்கு நல்லது எது; கெட்டது எது; என்று நன்றாகத் தெரியும். அப்படியிருக்க நான் கிறித்துவ சமயபோதகர்களின் பணியை செய்வதினாலும் அவர்களுடன் நெருங்கி பழகுவதினாலும் நான் மதம் மாறிவிடுவேன் என்று  நினைக்காதீர்கள்”

என்று உறுதியளித்தபிறகு அவரது தந்தை அப்துல் காதிர் ஓரளவு சமாதானம் ஆனார். அதன்பிறகு ஒரு நாள் மில்னர் மற்றும் தாம்ஸன் கொடுத்த உறுதிமொழியின் பேரில் தன் பணியைத் தொடங்கினார்.  தொழில் தர்மம் வேறு;  கொண்டிருக்கும் கொள்கை வேறு என்ற அடிப்படையில் பைபிளின் புதிய ஏற்பாட்டினை மொழிபெயர்க்கும் பணியிலும், அதனூடே ஆங்கிலத்தில் புலமை காணும் வகையில் அவர்களிடத்திலிருந்து மொழிதேர்ச்சியும் பெற்றார்.

1815-ஆம் ஆண்டு பைபிளை மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு  இவரை மிஷனரிகள் பயன்படுத்திக் கொண்டனர். “முஸ்லீமான நான் எதற்கு கிறித்துவ மதத்தின் நூலை மொழிபெயர்க்க வேண்டும்?” என்றெல்லாம் அவர் பாரபட்சம் சிறிதளவும் காட்டவில்லை.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

என்ற பொன்னான வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ முன்ஷி அப்துல்லாஹ்வுக்கு முழுமையாக பொருந்தும். தனக்கு இடப்பட்ட பணியினை செவ்வென முடித்து தருவதில் அவர் வல்லவர். இன வேறுபாடோ, மதவேறுபாடோ அவர் பார்க்கவில்லை.

1815 ஆண்டு லண்டன் மிஷனரி சொஸைட்டியைச் சேர்ந்த வில்லியம் மில்னே என்ற என்ற பாதிரியார் மலாயா நாட்டு  மக்களுக்காக இலவச பைபிள் வகுப்பை நடத்த தொடங்கினார்.

பன்மொழி வித்தகராக  ஆகத் துடித்த முன்ஷி அப்துல்லாஹ் ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டி  அந்த வகுப்பில் போய்ச் சேர்ந்ததும் அப்போதுதான்.

மலாய் மொழியில் அப்துல்லாஹ்வுக்கு ஆளுமை உள்ள ரகசியத்தை வில்லியம் மில்னே அறிந்துக்கொண்டார். வயது வித்தியாசம் பாராமல் அவரையே தன்னை ஆசானாக நியமித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மலேயா நாட்டுக்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற மிஷனரிகளும் அப்துல்லாஹ்வின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. அப்துல்லா மொழிபெயர்ப்பில் தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக் கொண்டதோடு ஆங்கிலத்திலும் நன்றாக மொழித்திறனை வளர்த்துக் கொண்டார்.

அதே 1815-ஆம் ஆண்டில் ஜெர்மன் பாதிரியார் கிளாடியஸ் ஹென்றி தாம்ஸன்  (Rev. Claudius Henry Thomsen) அப்துல்லாஹ்வின் இணைபிரியா நண்பரானார். இருவரும் சேர்ந்து பைபிளை மலாய் மொழியில் மொழிபெயர்த்து நூல் வடிவமாக்கினார்கள்.

பைபிளின் புதிய ஏற்பாடு “The Kitab Injil al-Kudus daripada Tuhan Esa al-Masihi” என்ற தலைப்பில் பதிப்பானது.

1818-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி மேஜர் வில்லியம் பர்குஹார் (Major William Farquhar) ஆங்கிலேய-சீன கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகையில் அப்துல்லாஹ்தான் முன்னிலை வகித்தார். பாதிரியார் தாம்ஸன் மே மாதம் 1822-ஆம் ஆண்டு 11-ஆம்தேதி சிங்கப்பூருக்கு பயணமானார்..

முன்ஷி அப்துல்லாஹ் மொழிபெயர்ப்பாளாராக தன் வாழ்க்கையைத் தொடர சிங்கப்பூர் வந்த ஆண்டு ஜூன் மாதம் 1819..

1830 – ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாதிரியார் பெஞ்சமின் பீச் கீஸ்பெர்ரி (Benjamin Peach Keasberry) மலாய் மொழியில் வெளியிட்ட கிறித்துவ அமைப்பினரின்  பைபிளை பல்வேறு நீக்கங்கள் செய்து,  திருத்தங்கள் செய்து, அதனை  மெருகெற்றி தந்ததும் முன்ஷி அப்துல்லாஹ்தான்.

முன்ஷி அப்துல்லாஹ் எப்படிப்பட்ட அரசியல் விமர்சகராக இருந்தார்; அவருடைய துணிச்சல் எப்படிப்பட்டது என்ற விவரங்களை நாம் அடுத்த பாகத்தில் காண்போம்.

– அப்துல் கையூம்

……..இன்னும் வரும்

முற்பகுதி:

சொல்ல மறந்த வரலாறு (பாகம்-1)

சொல்ல மறந்த வரலாறு (பாகம்-2)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: