RSS

மொஹிதீன் பேக்

21 Oct

இவரை இஸ்லாமியப் பாடகராக நினைவு கூறுபவர்களை விட சிங்கள பெளத்த பக்தி பாடகராக நினைவு கூறுபவர்களே அதிகம். உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஹைதரபாத்தைச் சேர்ந்த கரீம் பேக் வேலை நிமித்தம் காவல் துறை அதிகாரியாக சேலத்தில் பணிபுரிந்தபோது மொஹிதீன் பேக் பிறந்தார். மொஹிதீன் பேக் உடைய தாயார் பெயர் பீஜான் பீவி.

சேலத்தில் தொடக்க பள்ளியில் இவர் படிக்கும்போதே இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசை பயின்றார். உருது கஜல் மற்றும் கவ்வாலி பாடல்களில் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது.

இவர் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளி தலைமையாசிரியர் ஒருநாள் இவரது தந்தைக்கு தகவல் அனுப்பினார்.

“உங்க மகனுக்கும் படிப்பில் கொஞ்சம் கூட நாட்டமில்லை. ஆகவே இவனைக் கொஞ்சம் கண்டித்து வைக்கவும்”

வீட்டுக்குச் சென்றால் ஒரு பெரிய பூகம்பமே காத்திருக்கிறது என்பதை அறிந்த சிறுவன் மொய்தீன் பேக், அப்படியே திருச்சிக்கு ஓடிப் போய் விடுகிறான். அங்கு பாய்ஸ் இசை/ நடனப் பள்ளி ஒன்றுக்குச் சென்று தன்னை அங்கு சேர்த்துக் கொள்ளும்படி அங்குள்ளவர்களிடம் கெஞ்சுகிறான். தனக்கு நன்றாக பாடவரும் என்று சொல்லி, அப்போது பிரபலமாக இருந்த கண்பார்வையற்ற கே.சி.தே (Krishna chadra Dey) அவர்களுடைய பாடலை அங்கு அட்டகாசமாக பாடிக் காண்பிக்கிறான்.

(கல்கத்தாவைச் சேர்ந்த கே.சி தே என்ற இசைக்கலைஞர் இந்தி இசையமைப்பாளர். எஸ்.டி.பர்மனின் குரு என்பது கூடுதல் தகவல்)

சிறுவனுடைய குரலைக் கேட்டு பரவசமடைந்த பள்ளி நிர்வாகிகள் அவனை அங்கு சேர்த்துக் கொள்கிறார்கள். அவனுக்கு அந்த இசைப்பள்ளியில் பாடல்கள் பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது

ஓடிப்போன சிறுவனை காவல்துறையில் பணிபுரிந்த தந்தை கரீம் பேக் தனது தொடர்புகளை வைத்து நாலாபுறமும் வலைவீசி தேடுகிறார். திருச்சியில் இருப்பதாக செய்தி கிடைக்கிறது. கரீம் பேக்கின் நண்பரொருவர் அப்போது மெட்ராஸ் போலீஸ் பேண்டு குழுவில் ஊதுகுழல் வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார்.

இவருடைய ஏற்பாட்டின்படி ஓடிப்போன சிறுவனை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அந்த இசைப்பள்ளிக்குச் சென்றபோது, ஒரு மேடை நிகழ்ச்சியில் மொஹிதீன் பேக் பாடிக்கொண்டிருக்கிறான்.. பாட்டு முடியும் வரை காவல்துறையினர் காத்திருந்து குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுச் சென்று சேலத்தில் இவனது பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர்.

இசையார்வம் சிறுவனை விடுவதாக இல்லை. உஸ்தாத் அஹ்மது பக்ஸ் என்பவரிடம் கவ்வாலி, கஜல், பஜன் அனைத்தும் கற்றுத் தேறுகிறான்.

மொஹிதீன் பேக்குடன் கூடப் பிறந்தவர்கள் 13 பேர்கள். இவருடைய தகப்பனார் மட்டுமின்றி பாட்டனார், சகோதரர் உட்பட பலரும் காவல்துறையிலேயே பணியாற்றினர். இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு படகு விபத்தில் கொழும்பு நகரத்தில் மரணித்தபோது தன் பெற்றொருடன் இவர் கொழும்பு செல்ல நேருகிறது.

இலங்கை வந்தவர் அங்கேயே தங்கி விடுகிறார்.. 18வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து விடுகிறார்.

13வது வயதிலிருந்தே இவர் பாடத் தொடங்கி விட்டார். இவருடைய குடும்பத்தில் பலரும் உருது கஜல் பாடகர்களாக இருந்தனர். தனது உறவினர் சேக் அமீர், சேக் பரீது போன்றவர்கள் இவருக்கு அளித்த இசைப்பயிற்சி இவருடைய திறனை மேலும் மெருகெற்றியது.

இலங்கையில் கவுஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் இவரது திறமையைக் கண்டெடுத்து இவரை உற்சாகப்படுத்தி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பணக்கார வீடுகளுக்கு சென்று பாடத் தொடங்கியவர் பிறகு இலங்கை வானொலியில் ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவருடைய மனைவியின் பெயர் சகீனா பேக். உறவுக்காரப் பெண்ணான இவரை 1947ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். இவரது மகன்கள் இஷாக் பேக், இல்யாஸ் பேக், மகள் முனீரா பேக் அனைவரும் பிரபலமான பாடகர்கள்.

கொலம்பியா இசைத்தட்டில் இவர் பாடிய முதற்பாடல் (1936) பாடல் “கருணா முகுதே நமு கிலீலா” என்ற சிங்களப்பாடல். சிங்கள மொழியில் வெளிவந்த இரண்டாம் திரைப்படமான “அசோகமாலா” என்ற படத்தில் பின்னணி பாடினார் (1947). இப்படத்தில் இவர் 4 பாடல்கள் பாடினார். ஒரு பாடல் காட்சியில் இவரே நடித்தும் இருந்தார்.

இஸ்லாமியப் பாடல்கள் அவ்வப்போது இவர் பாடினாலும் இவர் அதிகமாக பாடியது பெளத்தமத பக்தி பாடல்களே. இவர் பாடிய “புத்தம் சரணம் கச்சாமி” மிகவும் பிரபலம்.

1950களில் சிங்களத் திரைப்படங்களில் பிரபலமான பின்னணிப்பாடகராக வலம் வந்தார். “கெலே நந்த” மற்றும் “தைவோ கய” ஆகிய சிங்களத் திரைப்படங்கள் இவர் பாடிய பாடல்கள், 1953 ஆம் ஆண்டில் “சுஜாதா” திரைப்படத்தில் இவர் பாடிய நான்கு பாடல்களில் ஒரு பாடல் ஜமுனாராணியுடன் இணைந்து பாடியது, 1955ல் “சடசுலங்க” என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து சிங்களப் பாடலைப் பாடியது, – இவை யாவும் இவரை தலைச்சிறந்த ஒரு சிங்களப் பாடகராக உயர்த்தியது. இலங்கை வானொலியில் ஒருக்காலத்தில் நான்கு மொழிகளில் பாடும் திறம் பெற்ற பாடகராய் வலம் வந்தவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இலங்கை அரசாங்கம் இவருக்கு “கலா சூரி” என்ற உயர்ந்த விருதையும் தந்து கெளரவித்தது. (1983, 1987). 450 சிங்கள மொழி படங்களிலும் 9,500 பாடல்களுக்கும் மேலாகவும் பாடியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’ போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

இலங்கையின் முதலாவது சுதந்திர நாள் வைபவம், மற்றும் 1974 பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார். 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா இவருக்கு இலங்கை குடியுரிமை வழங்கிக் கௌரவித்தார்

55 ஆண்டுகள் இசைத்துறை அனுபவத்தில் ஏராளமான இஸ்லாமியப் பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். புகழ்ப்பெற்ற கவிஞர்/இசையமைப்பாளர் நெ.மு.நூர்தீன் பாடல்கள் உட்பட பல சிறந்த கவிஞர்களுடைய இஸ்லாமியப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கவிஞர் மறைதாசன் எழுதி டி.எ.கல்யாணம் இசையமைத்த

“தீனெனும் இஸ்லாம் நெறிதனைத் தாங்கி

திகழ்ந்திடும் சோதரனே”

என்ற பாடல் கேட்போர் உள்ளத்தைக் கவர்ந்தது

“இறையோனின் சுடரான நபிநாதரே!

இணையேதும் இல்லாத மஹ்மூதரே !”

“உலகெங்கும் வழிகாட்டும் தீபமே – நலம்

தினம் கூறும் மாபுர்கான் வேதமே”

“தாரணி யாவுமே போற்றிடும் மேதையே

தன்மை மேவும் நாதரே !”

1991ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தனது 72வது வயதில் மரணமுற்றார்.

“நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன். ஆகையால் நான் புத்த பாடல்கள் பாடுவதை விரும்புகிறேன். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாமெல்லோரும் சகோதரர்கள். நான் இறக்குவரை பெளத்தமத பக்தி பாடல்கள் பாடுவேன். நான் இந்த இலங்கை நாடு மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்,” என்று பேட்டியளித்தார்.

ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட பிறகு அல்ஹாஜ் மொய்தீன் பேக் என்று அழைப்பதையே அவர் விரும்பினார்.

இவ்வருடம் பிப்ரவரி மாதம் இவர் நினைவாக இலங்கை அரசாங்கம் தபால்தலை வெளியிட்டிருந்தாலும் இவருக்கான போதிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பது சிலரது அபிப்பிராயமாக இருக்கிறது.

#அப்துல்கையூம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: