RSS

Category Archives: இசைக் கலைஞர்கள்

நாகூர் சேத்தான்


10624554_480631865408785_9154278085195254811_n
நாகூர் சேத்தான் என்கிற M.A.காதர் அவர்கள்

நாகூர் பிரபலங்களில் இவரும் ஒருவர், நாகூர் சேத்தான் என்கிற M.A.காதர் இவர் ஒரு பன்முக கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், புகைப்படக் கலைஞர்,வீடியோ ஒளிப்பதிவாளர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், குறிப்பாக இசையமைப்பாளர் இப்படியாக இன்னும் பல வடிவங்களில் இவரது திறமைகள் தொடர்கிறது. பற்பல பாடகர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்தும் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கொடுத்தும் அனைவரது இதயங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்து, இவர் மறைந்தாலும் இவர் அமைத்துக் கொடுத்த இசையால் உள்ளங்களில் என்றும் நிறைந்து வாழ்ந்துக் கொண்டிருப்பவர், எனது பாடல்கள் பலவிற்கு மெட்டமைத்துக் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கியவர்.

ஒரு பாடகர் என்றால் அவருக்குப் பின்னால் கவிஞர், இசையமைப்பாளர் என்று பல ஏணிப்படிகள் மறைந்திருப்பர். ஆனால் புகழும் பொருளும் பாடகருக்கே குவியும். இது இஸ்லாமிய இசை உலகின் தலையெழுத்தாகி விட்டது. ஒரு இஸ்லாமிய பாடல் ஹிட்டாக வேண்டும் என்றால் பாடகரின் குரல் வளமும், பாடல் வரிகளின் நயமும், கருத்தும் எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்தப் பாட்டுக்கான மெட்டு. பின்னணி இசைக்கூட பின்புதான். நமது சேத்தான் நானா அவர்கள் பாடகர்களுக்கு தகுந்தாற்போல் மெட்டமைத்துக் கொடுப்பதில் வல்லவர். அந்த வகையில் மெட்டமைத்து என்றும் செவிகளையும் சிந்தையையும் ஈர்க்கும் பாடல்கள் பல நூறு பாடல்கள் ஆகும். அவற்றில் நாகூர் இசைமுரசு E.M.ஹனிபா அண்ணன் பாடியவை காலத்தால் அழியாமல் என்றும் இனிப்பவை.இருந்தாலும் அப்பாடல்களில் நமது சேத்தான் நானா ஒளிந்துள்ளார் மறைந்துள்ளார் என்பதுதான் உண்மை. குறிப்பாக இசை முரசு அவர்கள் ஒரு பாடலை மேடையில் பலநூறு முறை பாடியப் பிறகுதான் இசைத்தட்டில் பாடுவார்கள் அப்படி பாடும்போது அதற்கு யாரோ ஒரு இசையமைப்பாளரை பின்னணி இசையமைக்க அழைத்து கொள்வார்கள், வேறு ஒருவர் போட்டு ஹிட்டான பாட்டுக்கு இவர் BGM மட்டும் அமைக்கிறார், இசைத்தட்டு வெளியாகி பாடல் மேலும் ஹிட்டாகிறது.

இப்படித்தான் “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு” என்ற பாடலுக்கு மெட்டுப் போட்டவர் சேத்தான் நானா. பல வருடங்கள் இசைமுரசு அவர்கள் மேடையில் பாடி மக்கள் மனதில் பதிந்த பின் 1973ல் இசைத்தட்டில் பாடுகிறார்கள். அதற்கு பின்னணி இசை அன்றைய பாவலர் பிரதர்ஸ் இளையராஜா. அவர் சினிமாவில் நுழையாத நேரம், இசைத்தட்டு வெளியாகி பாடல் எங்கும் ஒலிக்கிறது. பின்பு இளையராஜா 1976ல் சினிமாவில் நுழைந்து புகழ் உச்சியில் இருக்கும் போது இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்று எல்லா மேடைகளிலும் இசைமுரசு சொல்லுவார்கள். அப்போது புதிதாய் அப்பாடலை கேட்பவர்கள் ”ஆஹா! இளையராஜா இசையமைத்தப் பாட்டு” என ஆர்வமுடன் மீண்டும் மீண்டும் கேட்பார்கள், ஆனால் அதற்கு மெட்டமைத்தவர் சேத்தான் நானா என்பது தெரியாது. கடைசி வரை சேத்தான் நானா குட விளக்காகவே வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களை பாடகர்களும் இந்த சமுதாயமும் கண்டுக் கொள்ளவே இல்லை, பாடகர் ஜெய்னுல் ஆபீதினை 1978ல் சிங்கப்பூர் அழைத்து சென்று முதல் முதலாக மஜீது பிரதர்ஸ் ஆடியோ நிறுவனத்தில் பாட வைத்து அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. இசைமுரசுக்கு பல பாடல் எழுதிக் கொடுத்தும் மெட்டுப் போட்டுக் கொடுத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

சேத்தான் நானா மெட்டமைத்து இசைமுரசு பாடிய பல பாடல்களில் சில:

*திருமறையின் அருள் மொழியில்”
*தக்பீர் முழக்கம்”
*சொன்னால் முடிந்திடுமோ”
*கண்கள் குளமாகுதம்மா”
*தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு”
*எல்லாப் புகழும் இறைவனுக்கு”
*இறைவனிடம் கையேந்துங்கள்”
*ஆதுமகன் சத்தாது குல வலிமை”
*தீன்குலப் பொண்ணு”
*ஆதியருள் கனிந்திலங்கி”
*அல்லாவை நாம் தொழுதால்”

இப்படியாக இவரின் பட்டியல் நீளுகிறது..மேற்கண்ட பாடல்களில் சில இவர் எழுதிய பாடல்கள் ஆகும், இஸ்லாமிய பாடகர் உலகம் இவரை போன்றவரை முன்னிறுத்தி நினைத்து பார்க்க வேண்டும். இசையுலகம் மறக்க முடியாத இனியவர் நாகூர் சேத்தான் அவர்கள். “இது சிறு குறிப்புதான்!”

தகவல்: கவிஞர் நாகூர் காதர்ஒலி

 

தபேலா அம்பி


Ambi 3

மனைவி சரளாவுடன் அம்பி சுவாமிநாதன்

நாகூர் – எத்தனையோ இசைக்கலைஞர்களை ஈன்றெடுத்த ஊர். எத்தனையோ இசைக் கலைஞர்களுக்கு புகலிடம் தந்த ஊர். எத்தனையோ இசைக்கலைஞர்களை கைத்தூக்கி விட்ட ஊர். அதனால்தான் ஆஸ்தான பாடகர்களும் ஆஸ்கார் நாயகர்களும் இவ்வூரை வலம் வருகிறார்கள்.

தமிழகத்தின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர் கே.அம்பி சுவாமிநாதன். இவர் தபேலா வாசிப்பதில் வல்லவர். இவர் செய்யும் தனிஆவர்த்தனம் மற்றும் ‘ஜுகல் பந்தி’ மணிக்கணக்கில் இரசிக்கக்கூடியவை.

இவருக்கு இசையுலகில் அறிமுகம் தேடித்தந்தவர் நாகூர் ஹனிபா அவர்கள்தான். தனது பதினாறாவது வயதிலிருந்து இசைமுரசு நாகூர் ஹனிபாவுக்கு இவர் தபேலா வாசித்து வந்தார். இவரைப்போன்று எத்தனையோ இசைக்கலைஞர்களை கைத்தூக்கிவிட்ட பெருமை நாகூர் ஹனிபாவைச் சாரும். இன்று தமிழகம் முழுவதும் அறியப்படுகின்ற ஒரு இசைக்குழு “கும்பகோணம் ஜேம்ஸ் பேண்டு வாத்தியக்குழு”. அதன் நிறுவனர் ஜேம்ஸ் பலகாலம் நாகூர் ஹனிபாவின் இசைக்குழுவில் கிளாரினெட் இசைத்துக் கொண்டிருந்தவர்.

அம்பியின் இசைப்பயணம் நாகூரிலிருந்து தொடங்கியபின்  சென்னையில் அவருக்கு மென்மேலும் புகழைத் தேடித் தந்தது. அவருடைய அளப்பரிய திறமைக்கு ஏராளமான வாய்ப்புக்கள் கிடைத்தன.  டி.எம்.செளந்தர்ராஜன் இசைக்குழுவில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் வாசித்து வந்தவர் இவர். சீர்காழி கோவிந்தராஜன், குன்னக்குடி வைத்தியனாதன் போன்ற புகழ்மிக்க கலைஞர்களுக்கு வாசித்த பெருமை இவருக்குண்டு.

Ambi 4

அம்பி, ஹாஎமோனியக் கலைஞர் ஆறுமுகம், குன்னக்குடி வைத்தியனாதன்

ஒருசமயம் நாகூரில் நடந்த இசைக்கச்சேரி ஒன்றில் தனிஆவர்த்தனமாய் ஏழு சுதிகளுக்கும் ஏழுவிதமான சுதிகளில் பலவிதமான தபேலாவை மெருகேற்றி வைத்துக்கொண்டு  “அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் இவர் இசைப்பதை கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. வெறும் தோல்கருவியிலேயே ஒரு பாடலை இசைத்து, தபேலாவை பேசவைத்த இவரது அபார திறமையைக் கண்டு அப்போது பிரமித்துப் போனேன்.

Ambi 2

ஆர்மோனியக் கலைஞர் ஆறுமுகம், அம்பி, ஜெயக்குமார் (இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை)

1988-ஆம் ஆண்டு பிரஞ்சு நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரஞ்சு நாட்டவர்களும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். தனிஆவர்த்தனத்தில் நாகூர் அம்பி வெளிக்காட்டிய அபரிதமான பன்முகத்திறமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியந்தனர்.

Ambi 6

அம்பி, ஆர்மோனியக் கலைஞர் ஆறுமுகம், மெல்லிசை மன்னர் பி.ராமமூர்த்தி, எல்.மஹாராஜன்

அம்பி சுவாமிநாதன்,  இசை பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை கல்யாணம் பழம்பெரும் இசையமைப்பாளர்.  ஆரம்பக் கால கட்டங்களில் புலவர் ஆபிதீன் எழுதி நாகூர் ஹனிபா பாடிய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய, கத்தோலிக்க கிறிஸ்த்துவ பாடல்களுக்கும், இந்துமத பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

1953-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” படத்திற்கு இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள் டி.ஏ.கல்யாணம் மற்றும் ஞானமணி, இப்படத்தில் மூன்றாவது இசையமைப்பாளராக வந்து இணைந்தவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இந்த கல்யாணமும் நாகூர் ஹனிபாவின் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த கல்யாணமும் ஒருவர்தான் அல்லது வெவ்வேறு நபர்களா என்ற விவரம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்.

அம்பியின் அறிமுகத்தை இப்படி சொன்னால் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். பிரபல திரைப்படப் பாடகி எஸ்.சரளாவின் கணவர் இவர். சரளா நாகூர் ஹனிபாவுடன் இணைந்து இஸ்லாமியப் பாடல்கள் பாடியிருக்கிறார். இலங்கையின் புகழ்மிக்க இஸ்லாமியப் பாடகர் மெய்தீன் பேக் அவருடன் 70-களில் இணைந்து பாடியிருக்கிறார். மெய்தீன் பேக் அவர்களின் ஏராளமான பாடல்கள் நாகூர் புலவர் ஆபிதீன் அவர்கள் இயற்றியது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அதுமட்டுமின்றி ஏனைய இஸ்லாமியப் பாடகர்கள் தாலிப். வாஹித் போன்றவர்களுடனும் சரளா இணைந்து பாடியிருக்கிறார்.

இவர் பாடகர் தாலிபுடன் இணைந்து பாடிய

அல்லாஹ்வின் தூதே! அருள் தீபமே!
எங்கள் யா நபி! எங்கள் யா நபி!
எல்லோரும் போற்றும் எழில் ரூபமே
எங்கள் யா ஹபீப்! எங்கள் யா ஹபீப்!

என்ற பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

கவிஞர் நாகூர் சலீம் இயற்றிய எண்ணற்ற இஸ்லாமியப் பாடல்கள் சரளாவின் தனிக்குரலில் இசைத்தட்டுக்களாக வெளிவந்துள்ளன.

“பேசும் தெய்வம்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் சூலமங்கலம் ராஜலட்சுமியிடன் சரளா இணைந்து பாடிய

“நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடியில்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே”

என்ற பாடல் சரித்திரச் சாதனை கண்டது. கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், அறுபதாம் கல்யாணம்  என்று எந்தவொரு சடங்கு சம்பிரதாயங்களில் இப்பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்காத நிகழ்ச்சியே கிடையாது என உறுதியாகக் கூறலாம்.

“சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து
எந்தனையே பாட வைத்தான்”

என்ற பாடல் சரளா சீர்காழி கோவிந்தர்ராஜனுடன் இணைந்து பாடியது.

“வருவாயா வேல் முருகா – என்
மாளிகை வாசலிலே”

மேற்கூறிய இந்த இரண்டு பாடல்களும் முருகன் பக்தி பாடல்கள் வரிசையில் முதலிடம் பெற்றவை.

திரைப்படங்களில் இவர் சீர்காழி கோவிந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

பாடகி சரளா பற்றிய மேலும் விவரங்கள் சிலவற்றை என் நண்பர் நாகூர் ரூமியின் வலைப்பதிவில் “குரலுக்கு வயதில்லை”  என்ற தலைப்பில் படித்து மகிழலாம்.

தபேலா அம்பியின் முழுப்பெயர் கே.அம்பி சுவாமிநாதன். இவர் பெயரை நாகூர் அம்பியுடன் குழப்பிக் கொள்வோர் உண்டு. அவரது முழுப்பெயர் நாகூர் எஸ்.அம்பி ஐயர். இவரது குடும்பத்தார் சிலர் நாகூரில் கல்வித்துறையில் பணியாற்றியவர்கள். நாகூர் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள்

ஏழிசை மன்னர் எம்.கே,தியாகராஜ பாகவதருக்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தவர் இந்த நாகூர் அம்பி ஐயர். .

அந்நாட்களில் தியாகராஜ பாகவதருக்கு வாசித்து மிகப் பிரபலமாக திகழ்ந்த பக்க வாத்தியக்காரர்களில் வயலின் சேதுராமைய்யா, மைசூர் குருராஜப்பா, கோவிந்த சாமி நாயக்கர், திருச்சி பால சுப்பராயலு, மதராஸ் ஏ.கண்ணன், குத்தாலம் சிவ வடிவேலுப்பிள்ளை, மீசை முருகேஷ், டி.வி.திரவியம், மன்னார்குடி நடேசப்பிள்ளை மற்றும் நாகூர் அம்பி ஐயர்  – இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

1981-82 -க்கான கலைமாமணி விருது தமிழக அரசால் மிருதங்கக் கலைஞர் நாகூர் எஸ்.அம்பி அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நாகூரில் தொடரும் இசைப் பாரம்பரியம் வரலாற்று பெருமைமிக்கது. கத்துக்குட்டி இசைவாணர்களுக்கெல்லாம் கலிமாமணி விருது வழங்கி கெளரவித்த தமிழக அரசு கர்னாடக சங்கீதத்தில் ஜம்பவனாக விளங்கிய நாகூர் தர்கா வித்துவான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்தது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

 

Tags:

இசை சூழ்ந்த ஊர் – நாகூர்


Vikatan 1

”என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து என்னை வளர்த்து உருவாக்கியது நான் பிறந்து வளர்ந்த நாகூர்தான். பல ஊர்களில் இன்று காலம் சுழன்று ஓடி, பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நாகூர் சிறிது அளவேதான் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. நாங்க வசித்து வந்த ஏரியா ஒரு குடிசைப் பகுதி. எப்போதும் கலகலப்புடன் இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நாட்டு தொடக்கப் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்ப படிப்பு இருந்தது. நாங்க வசித்த தெருவின் பெயர்த கொசத் தெரு. அதை அறிவிக்கும் போர்டு தகரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய ‘எக்ஸைல்’ நாவலில் நாகூரைப்பற்றி எழுத அந்தத் தெருவுக்குச் சென்றபோது, இன்னமும் அதே இடத்தில் அந்த போர்டு இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

Vikatan 2

 எங்கள் ஊர் அனுதினமும் இசை சங்கமத்தில்தான் தத்தளிக்கும். காலையில் எழுந்தவுடன் தர்காவில் இசை ஒலிக்கும். அதைபோல அழகான ஷெனாய் வாத்திய இசையும் கேட்கும். இந்த இசையைக்  கேட்டுக்கொண்டே காலையில் எழுந்திருப்பதற்கு கொடுப்பினை வேண்டும்.  உலகில் நான் கண்ட பல இசைகளில் ஹனிபாவின் இசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 

Vikatan 3 கடல் காற்றின் சத்தம், இரவில் கொத்துப் புரோட்டா போடும்போது எழும் ஓசை என எப்போதும் எங்கள் ஊரைச் சுற்றி பல இசை சூழ்ந்தே இருக்கும். நான் பல ஊர்களுக்குச் சென்று இருக்கிறேன். நாகூரைத் தவிர வேறு எங்கும் கொத்துப் புரோட்டாவில் அப்படி ஒரு சுவையை ருசித்தது இல்லை. மதுரைக்கு எப்படி ஒரு சிறப்பான கலாசாரம், உணவு என்று இருக்கிறதோ.. அதேபோல் நாகூருக்கும் தனிக் கலாசாரம் உண்டு. ‘தம்ரூட்’ என்னும் இனிப்புப் பண்டம், பாக்க அல்வாவைப் போலவே இருக்கும். ஆனால், அல்வா கிடையாது. அதனுடைய சுவையே தனி. நாகூரை விட்டால் வேறு எங்கும் தம்ரூட் கிடைக்காது.

Vikatan 4முத்தமிழும் கலந்த கலாசாரம்  நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாசாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள். 

Vikatan 5

 எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 200 புலவர்களுக்கு மேல் வசித்து பல வரலாற்று நூல்கள், கவிதைகள், பாடல்கள் என பல அரிய படைப்புகள் இயற்றியிருக்கிறார்கள். அதனால் நாகூருக்கு புலவர் கோட்டை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. மறைமலை அடிகளுக்கு ஆசிரியராக இருந்தவர் நாகூரைச் சேர்ந்தவர்தான். கிட்டத்தட்ட 10,000 பாடல்களுக்கு மேல் நாகூரில் இருந்து இயற்றி வெளிவந்து இருக்கிறது. பாட்டைப் போலவே  நாடகத்திற்கும் மிகப் பிரபலம் நாகூர். தூயவன், அக்பர், கவிஞர் சலீம் எனப் பல படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்.

 நாகூர் தர்கா மிகவும் பிரசித்தம் பெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது மனக் குழப்பம், கஷ்டம் வந்தால் தர்காவுக்குச் சென்று  அமர்ந்துவிடுவேன். உடனே மனம் ஆறுதல் அடைந்து விடும். அதேபோல் அங்கு குளிர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. ஏ.சி போட்டால்கூட அப்படி ஒரு இதமான காற்று வராது. குளிர் காற்று, கூட்டமான புறாக்கள் என அந்த இடமே பார்க்க அமைதியாக இருக்கும்.

மூன்று மதங்களும் ஒன்றாக இருக்கும் கலாசாரம் நாகூரில் உண்டு. தர்கா, சிவன் கோயில், சர்ச் என மூன்றும் ஒன்று சேர்ந்த இடம் நாகூர்தான். மத வித்தியாசம் இல்லாமல் மரபை உடைத்து நான் எழுத முடிந்ததற்கு காரணம், இங்கு சிறுவயதில் வாழ்ந்து பதிந்த உணர்வுகள்தான். 40 ஆண்டுகள் கழித்து எங்கள் ஊரைப் பற்றி ‘எக்ஸைல்’ நாவலில் எழுதுவதற்காக அங்கே சென்று இருந்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ இன்னமும் நாகூர் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. மக்களின் அன்பும் கூட!”

 நா.சிபிச்சக்கரவர்த்தி

 படங்கள்: செ.சிவபாலன், சொ.பாலசுப்பிரமணியன்

நன்றி : என் விகடன்

 

கம்பன் அவன் காதலன் (நான்காம் பாகம்)


இசையரசியும் இலக்கியச் செல்வரும் ….…………………………………………………………….   நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு கர்நாடக இசையின் மீது ஓர் அபார ஈர்ப்பு இருந்ததை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் நன்கறிவார்கள். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கேட்பது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.

இஸ்லாமியரான இஸ்மாயீலுக்கு கர்நாடக சங்கீதத்தின் மீது எப்படி ஏற்பட்டது இந்த இசையார்வம் என்று வியப்போருண்டு. பொதுவாகவே முஸ்லீம்களுக்கும் கர்நாடக இசைக்கும் ‘மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்’ என்ற அபிப்பிராயம் பரவலாகவே நிலவி வருகிறது.

‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று வினவத் தோன்றும்.

நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று உண்டானதல்ல. இந்த உண்மையை முழுமையாக விளங்கியவர்கள் “ஆம்! அப்துல் காதருக்கும் அமாவசைக்கும் சம்பந்தம் உண்டு” என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்வார்கள்.

நாகூரில் பிறந்த இஸ்மாயீல் அவர்களின் உள்ளத்தில் சிறுவயது முதலே இசையுணர்வு ஊற்றெடுத்தது என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. காரணம் நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு காலங்காலமாய்த் தொடர்ந்து வருகின்ற ஒன்று.

நீதிபதி அவர்களின் இசையுணர்வை அலசுவதற்குமுன் நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் இடையே நிலவி வரும் பந்தத்தை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்தல் நலம்.

“பதினாறு வயதினிலே” என்ற படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்று தொடங்கும் பாடலில்

“கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா”

பிரபலமான இவ்வரிகளை முணுமுணுத்திருக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. யார் இந்த கிட்டப்பா?

கிட்டப்பா தன் குழுவினருடன்

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா (1906–1933) என்பது ஊரறிந்த விஷயம். இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள் கே.பி.சுந்தரம்பாளின் கணவர் என்பது மற்றுமொரு சுவையான விஷயம்.

செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம் இசை பயில அனுப்பி வைத்தார் என்ற உண்மை பலருக்கும் தெரிய நியாயமில்லை.

தாவூத் மியான்

உஸ்தாத் தாவூத் மியான் (இறப்பு: 1940), இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்தவர். இவரது தாத்தா உஸ்தாத் சோட்டு மியானிடமிருந்தும், நன்னு மியானிடமிருந்தும் இசையைக் கற்றுத் தேர்ந்தார். இவரது சகோதரர் உஸ்தாத் கவுசு மியானும் நாகூரில் புகழ்பெற்ற இசைக்கலைஞராக பெயர் பெற்று திகழ்ந்தார். உஸ்தாத் தாவுத் மியானிடம் பயிற்சி பெற்றதனால் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் செய்வோருண்டு.

உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவரது பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் சங்கீத ஞானத்தைப் பற்றி கேள்வியுற்று ஆசி பெற்றுச் சென்றது இன்னொரு சுவையான செய்தி. ‘குடத்திலிட்ட விளக்காக’ சங்கீத மேதை எஸ்.எம்.ஏ.காதரின் பெருமை ஊருலகத்திற்கு தெரியாமல் போனது ஒரு துரதிருஷ்டமே.

எஸ்.எம்.ஏ.காதரும் இசைமணியும்

இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் முதன்மையான சீடர் “இசைமணி” எம்.எம்.யூசுப் அவர்கள். இவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். அச்சமயம் இவருடன் அதே மேடையில் “இசைமணி” பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.

இவ்வாறாக ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்’ நிறையவே பொருத்தங்கள் நிலவி வந்தன.

ஷெனாய் இசையும், நாதஸ்வர இசையும் ஒருங்கேற கேட்டு வளர்ந்த இஸ்மாயீல் அவர்களின் மனதில் இசையுணர்வு வேரூன்றி இருந்ததற்கு நாகூரின் மண்வாசனையும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

அதுமட்டுமல்லாது பொதுவாகவே நீதிபதிகளுக்கும் கர்நாடக இசைக்கும் ஓர் இணைபிரியாத பந்தம் தொன்றுதொட்டு தொடர்ந்து வருவது மறுக்க முடியாத இன்னொரு உண்மை. நீதிபதி இஸ்மாயீலும் இதற்கு விதிவிலக்கல்ல.

1962-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எல்.வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப்பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி.ராமன் வயலின் வாசிக்க ஓர் அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தேறியது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கும். முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைக் கற்றுத் தந்த ஆசான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நீதிபதி இஸ்மாயீலுக்கு கர்நாடக இசையின் மீது ஒரு பிடித்தம் ஏற்பட்டதற்கு அவர் வளர்ந்த விதம், அவருடன் உறவாடிய வைணவப் பிராமணர்கள், அவரது தொழில்முறை சகாக்கள் – இவர்களும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறலாம்.

 முஸ்லீம் பிரமுகர்களில் நீதிபதி இஸ்மாயீல் ஒருவர் மட்டுமே கர்நாடக இசையின் மீதி அலாதியான பிரியம் வைத்திருந்தவர் என்று கூற இயலாது. டாக்டர் அப்துல் கலாமும் ஒரு நல்ல உதாரணம். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வீணை வாசிக்கவும் தெரியும்.

2002-ஆம் ஆண்டு, சென்னை மியூசிக் அகாதெமி இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கியபோது, உடல்நல குறைவால் அவ்விருதை அவர்கள் நேரே சென்று பெற முடியாத நிலையில், வீட்டிற்கு நேராகவே சென்று அவ்விருதை வழங்கியவர் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் போலவே முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகராவார்.

 இசையரசிக்கும், இலக்கியச் செல்வருக்கும் இடையே இருந்த பரஸ்பர உறவை ஒரு சில வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தேவதாசி குலத்தில் பிறந்தவர். தனது இனிஷியலாக, தான் பிறந்த ஊரையும், தன் தயார் பெயரையும் “எம்.எஸ்.” என்று இணைத்துக் கொண்டவர். சாதாரணமாக தந்தை பெயரையே இனிஷியலாக கொண்டு இயங்கும் சமூகத்தில் எம்.எஸ்.அவர்களின் செயல் புரட்சிகரமாக பேசப்பட்ட அதே சமயத்தில் அவரை சந்தேகக் கண்கொண்டும் உலகம் பார்த்தது.

தாயார் சண்முகவடிவு

“எம்.எஸ்.” என்பதன் விரிவாக்கம் – Madurai Shanmukavadivu – என்பதாகும். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் புகழின் உச்சியில் இருந்தபோதும் கூட தன் தந்தையைப் பற்றிய முழுவிவரத்தை ஏனோ பகிரங்கமாக அறிவிக்காமலேயே இருந்தார். வெகுகாலம்வரை வெளியுலகத்துக்குத் தெரியாதவாறு இந்த ரகசியம் பரம ரகசியமாகவே அவரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தால் போதாதா? புகழ்பெற்ற பாடகர் மதுரை புஷ்பவனம் ஐயர்தான் அவரது தந்தை என்று பலரும் அனுமானித்து பலரும் பலமாதிரி பேசி வந்தனர்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் வாயிலாகத்தான் அவரது தந்தை சுப்பிரமணிய ஐயரைப் பற்றிய விவரங்கள் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிய வந்தது.

சுப்புலட்சுமியின் தந்தைஅதற்கு முன்பு ஒருமுறை, அதாவது 1980-ஆம் ஆண்டு பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய தன் உறவுக்காரப் பெண்ணுக்கு அளித்த பேட்டியில்தான் எம்,எஸ்.அவர்கள் முதன்முறையாக தன் தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். ஆனாலும் அந்த விவரங்கள் பொதுமக்களை பெருமளவு சென்று அடையவில்லை.

1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து, அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

நீதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கம்பராமாயணப் பாடல் பதிவின்போது இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தன் கைவசம் பாடல் குறிப்பு ஏதுமின்றி மனனமாய் தப்புத் தடங்களின்றி சரளமாய் பதிவினை அரங்கேற்றினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதே 1990-ஆம் ஆண்டு “கம்பராமாயண பாடல் வெளியீட்டு விழா”வுக்கான ஆயத்தங்கள் தடபுடலாக நடந்தது. அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நீதிபதி அவர்கள் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ஓர் இன்ப அதிர்ச்சி அளித்தார். யாரும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அது.

தாம் நன்கறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் பற்றி நீண்ட நேரம் புகழ்ந்து பேசினார் நீதிபதி அவர்கள். பக்திமானாக இருந்த அவர் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கூட. இந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் வேறு யாருமல்ல. இசையரசின் தகப்பனார்தான். இந்த மேடையில் அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தந்தை மீது அளவற்ற அன்பு வைத்திருந்த எம்.எஸ்.அவர்கள் மனம் நெகிழ்ந்துப் போனார். தந்தையுடன் தான் கழித்த இளம்பிராய நினைவுகள் ஒவ்வொன்றும் அவரது நினைவில் பெருக்கெடுத்தன. இசையரசியின் தந்தையார் மறைந்தபோது அவருக்கு வெறும் பத்து வயதுதான் நிரம்பியிருந்தது. தந்தையைப் பற்றிய விவரங்களை இதுநாள்வரை பகிரங்கப்படுத்தாமலிருந்த எம்.எஸ்.அவர்களுக்கு தந்தை மீது அன்பும் பாசமும் இல்லாமலில்லை. நிறையவே இருந்தது.

எம்.எஸ்.அவர்களின் கணவர் கல்கி சதாசிவம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்து வைத்திருந்த ஊடகவுலகம், எம்.எஸ். அவர்களின் தந்தையைப் பற்றிய விவரங்களை அன்றுதான் முழுமையாக அறிந்துக் கொண்டது.

தன் தகப்பனாரைப் பற்றிய சில சுவையான செய்திகளை நீதிபதி அவர்கள் மேடையில் பகிர்ந்தபோது இசையரசி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அதைக்காட்டிலும் மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி அவருக்கு அந்த மேடையில் காத்திருந்தது. சொற்பொழிவின் இறுதியில் அவரது தகப்பனாரின் பெரிய உருவப்படத்தை பரிசாக அளித்து அவரை திக்குமுக்காட வைத்தார் நீதிபதி அவர்கள். “தன் வாழ்க்கையில் தான் பேரானந்தம் அடைந்த நாள் இது” என்று இசையரசி தன் சகாக்களிடம் இதுபற்றி பெருமை கொண்டாராம்.

நீதிபதி பரிசளித்த தன் தந்தையின் உருவப்படத்தை பின்னர் அவர் தன் வீட்டின் வரவேற்பறையில், வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதனை மாட்டி வைத்து போற்றி பாதுகாத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.அவர்களின் வீட்டுக்கு வருபவர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருந்த உருவ ஒற்றுமையை சிலாகித்து பேசுகையிலெல்லாம் அவர் ஆனந்தத்தில் திளைத்துப் போவார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் நீதிபதி அவர்களின் மீது எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு அதிகமானது என்பதை கூறவும் வேண்டுமோ?

கெளஸல்யா சுப்ரஜா ராமபூர்வா
ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட தரசார்ந்தூல கர்த்தவியம்
தைவ மாவஹ்நிகம்…

என்று தொடங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிப் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் செய்தி. இப்பாடலை இயற்றியவர் “பிரதிவாதி பயங்கரம்” என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார் என்பவராவார். எம்.எஸ்,சுப்புலட்சுமியை புகழின் உச்சத்துக்கு கொண்டுச் சென்ற பாடல் இது.

அண்ணங்கராச்சாரியார் பெருமளவு மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த நபர் யாரென்றுச் சொன்னால் அவர் நீதிபதி இஸ்மாயில் அவர்கள்தான். இஸ்லாமியராக இருந்த போதிலும் ஹிந்து மத அன்பர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார் நீதிபதி அவர்கள். இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, “உலகம் போற்றும் உத்தம” என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கும் நீதிபதி இஸ்மாயில் அவர்களுக்குமிடையே ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. இருவருமே மூதறிஞர் ராஜாஜியுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

காந்தீயக் கொள்கை மற்றும் கம்பராமாயண ஆய்வு இவைகளினால் இஸ்மாயீலுக்கும் ராஜாஜிக்கும் தொடர்பு இருந்தது. நீதிபதி அவர்கள் எழுதிய “மௌலானா அபுல்கலாம் ஆசாத்” வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் இராஜாஜி.

அதேபோன்று 1966-ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய ‘மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்’ என்னும் ஆங்கிலப்பாடலையும், ” குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று தொடங்கும் தமிழ்ப்பாடலையும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஐ.நா.சபையில் பாடி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார். இப்பாடல்களை எழுதியவரும் மூதறிஞர் ராஜாஜிதான்.

இருவருடைய மரணத்தின்போதும் ஒரு நிகழ்வுப் பொருத்தம் நடந்தது.

2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியபோது டிசம்பர் 26 நிகழ்ந்த சுனாமி பேரழிவில் உயிரிழந்த 8,000 பேர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேறியது. அதே மன்றத்தில் மறைந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், மறைந்த இலக்கியச் செல்வர் இஸ்மாயீல் அவர்களுக்கும் ஒரு சேர இரங்கல் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

இருவரின் இறப்புக்கும் இடையில் இருந்த இடைவெளி நாட்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான நெருக்கத்தில் இருந்தது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் இலக்கிய அறிவை இனிவரும் பதிவில் ஆழமாக ஆராய்வோம்.

– அப்துல் கையூம்

 

Tags: , , ,

கலைமாமணி E. குல் முகம்மது


IMG_297506867733443 IMG_297557729197501 IMG_297567854970989 IMG_297575282607604 IMG_297580781740311

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது

பாரதிய சாகித்திய அகடமி சார்பாக, புது தில்லியில், ஹாஜி .E. குல் முஹம்மது அவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது அகடமி சேர்மன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஷ்மீர் முன்னாள் முதல்வர், ஃபரூக் அப்துல்லாஹ், திரிபுரா,சட்டிஸ்கர், மாநில முதல்வர்கள் , பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Gul 4 Gul 5 Gul Mohd 2 Gul Mohdgul-mohammed

 

Isai Mani with Isai Murasu


 

கலைமாமணி விருது


Gul MOhammed

நாகூரைச் சேர்ந்த‌ பாட‌க‌ர் ஹாஜி இ. குல் முஹ‌ம்ம‌துவுக்கு புதுவை அர‌சு கலைமாம‌ணி விருது வ‌ழ‌ங்கி கௌர‌வித்துள்ள‌து.

ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌ விழாவில் க‌லைமாம‌ணி விருதினை புதுவை முத‌ல்வ‌ர் வைத்திய‌லிங்க‌ம் வ‌ழ‌ங்கினார். விழாவில் பொதுப்ப‌ணித்துறை அமைச்ச‌ர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜ‌ஹான், அமைச்ச‌ர் க‌ந்த‌சாமி, பாண்டிச்சேரி மேய‌ர் உள்ளிட்ட‌ பிர‌முக‌ர்க‌ள் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

பாட‌க‌ர் குல் முஹ‌ம்ம‌துவின் பாட‌ல்க‌ளைக் கேட்க‌ :

http://www.youtube.com/watch?v=u40fPJiOkrk

http://tamilmuslimtube.magnify.net/video/TAMIL-MUSLIM-SONG-NAGORE-KALAI-3