RSS

Category Archives: கலைமாமணி ரவீந்தர்

மகாதேவி படத்தில் வசனங்கள் எழுதியது யார்?


Screenshot_20191006_181155

Screenshot_20191006_181221
நான் கவிஞர் கண்ணதாசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன். அவரது மகன் கலைவாணன் கண்ணதாசன் பள்ளியில் என்னுடன் படித்தார் என்பதால் கவிஞரின் விட்டுக்கு மூன்று முறை சென்று அவரைச் சந்தித்துப் பேசிய அனுபவங்கள் உண்டு. என் பள்ளியில் கவிஞர் நாஞ்சில் ஷா ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் கவிஞர் கண்ணதாசன் தலைமை தாங்க “அழுகை” என்ற என் முதல் கவிதையைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றதை என்னால் மறக்க முடியாது.

இப்போது நேராக விடயத்திற்கு வருகிறேன். கவிஞரின் அன்புத் திருமகன் அண்ணாதுரை கண்ணதாசன் , கலைவாணனுக்கும் இளைவர். அவருக்கு பழைய விடயங்களை அவர் படித்தோ அல்லது கேட்டுத்தான் தெரிந்திருக்க வேண்டும்., அவர் சொல்வதெல்லாம் வரலாறு ஆகிவிடும் என்பதல்ல.
என் பிரியமான நண்பன் கலைவாணன் கண்ணதாசன் துரதிருஷ்டவசமாக உயிரோடில்லை. ஒரு விபத்தில் மரணமுற்றார்.

(எனக்கு கவியரசருக்குமிடையே இருந்த நெருக்கத்தை ஏற்கனவே “வல்லமை” இதழில் எழுதியிருக்கிறேன். முதல் கமெண்டில் அதன் சுட்டி இணைத்துள்ளேன்)

அண்மையில் தினத்தந்தி பத்திரிக்கையில் மகாதேவி படத்தில் வரும் “பஞ்ச் டயலாக்” அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை என எழுதியுள்ளார். “தினத்தந்தி” போன்ற பத்திரிக்கை எப்படி எதுவும் ஆராயாமல் பிரசுரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதற்கு முறையான மறுப்பை வெளியிட வேண்டுகிறேன்.

மகாதேவியில் எழுதிய “பஞ்ச் வசனங்கள்” யாவும் நாகூர் ரவீந்தர் (காஜா மொய்தீன் எழுதியது என்பதில் துளியளவும் ஐயமில்லை. மகாதேவியில் வசனங்கள் எழுத எம்.ஜி.ஆர் நியமித்தது ரவீந்தரைத்தான்.

அக்காலத்தில் பிரபல இயக்குனராகத் திகழ்ந்த சுந்தர்ராவ் நட்கர்னி, விஜயா வாகிணி ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த தன்னுடைய மைத்துனர் பி.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தானே தயாரிக்க விரும்பி எடுத்த படம்தான் “மகாதேவி” .

எம்.ஜி.ஆர். அவர்கள் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ரவீந்தரை வசனம் எழுத சிபாரிசு செய்தபோது நட்கர்னி மிகவும் தயங்கினார். ரவீந்தர் படவுலகுக்கு புதியவராக இருந்ததாலும். பிரபலம் இல்லாததாலும் ஏற்பட்ட தயக்கமிது.

எனவே கண்ணதாசன் பெயரை வசனம் என்று டைட்டிலில் போட்டு ரவீந்தரின் பெயரை “வசனம் உதவி : ‘இன்பக்கனவு’ ரவீந்தர்” என்று காண்பிக்க முடிவானது.

ரவீந்தர் புகழ் விரும்பி இல்லாததாலும் கவிஞர் கண்ணதாசனின் தீவிர ரசிகராக இருந்ததாலும் “இது அருமையான முடிவு” என்று தன் கருத்தை வெளியிட்டார். மகாதேவியின் வசனங்கள் கவிஞரின் மேற்பார்வையிலும் , அவரது சிறு சிறு திருத்தங்களாலும் வெளியானது. ரவீந்தரின் வசனம் எழுதும் திறமையைப் பார்த்து கவியரசரே வியந்து வாழ்த்தினார் என்பதே நிதர்சனமான உண்மை.

தம்பி அண்ணாதுரை கண்ணதாசன் கலைமாமணி வாமனன் 22.01.2018-ல் தினமலர் பத்திரிக்கையில் எழுதிய “நிழலல்ல நிஜம்” என்ற தொடரிலிலிருந்துதான் அத்தனை தகவல்களையும் திரட்டி எழுதியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் வாமனன் அதில் ரவீந்தர் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். அண்ணாதுரை கண்ணதாசனின் எழுத்துக்களில் அவர் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது எல்லா இயக்குனர்களும் “பஞ்ச் டயலாக்” அவசியம் இடம்பெற வேண்டும் என்று கேட்கிறார்கள். அக்டோபர் 2, 2014-ல் நான் எழுதிய என் வலைப்பதிவில் “பஞ்ச் டயலாக்”கின் முன்னோடி ரவீந்தர் என எழுதியிருந்தேன். இப்பொழுதும் அதையே நான் முன் மொழிகிறேன், மறுப்பவர்கள் தாராளமாக விவாதிக்க வரலாம்.

“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்”

“மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி”

போன்ற ‘பஞ்ச் டயலாக்’குகள் இன்னும் இளைஞர்களிடையே “வைரல்” ஆகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. பி.எஸ்.விரப்பாவின் அந்த வில்லத்தனமான சிரிப்பும், வெடித்து பிழம்பாய் விழும் வீர வசனத்தையும் மறக்கத்தான் முடியுமா?”

“அத்தான்…..”
“அப்படிச் சொல்..அத்தான்…. இந்த வார்த்தையைக் கேட்டு கருணாகரன் செத்தான்”

“சொல்லுக்கெல்லாம் சக்தி இருந்தால் இந்த உலகம் என்றோ அழித்திருக்கும்”

“ஆத்திரமே நீதிபதி ஆகி விட்டால் அங்கு அறிவுக்கு இடமில்லை மன்னா..!”

“இந்தக் காதல் ஒரு பாதி அல்ல. சரிபாதி”

“உங்களுக்கு கண்ணிலே இதயம். எனக்கு இதயத்திலே கண்”

“கற்புக்கு நெருப்பு துணை என்பதை அறியாத கயவனே!”

இதுபோன்று எத்தனையோ வசன மழையில் “மகாதேவி”யில் நனைய முடியும்

OCT 2, 2014-ல் நான் என் வலைப்பதிவில் எழுதிய ஒரு பகுதியை மட்டும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,

//1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான “குலேபகவாலி” வெளிவந்தது. அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில் ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது. அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது. கதை-வசனம் கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்” படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும் “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.

1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.

1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்” படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.

1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.

1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்” படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் டைட்டிலில் காண்பிக்கப்படும்.

அதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன. எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.

1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில் கதை-வசனம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள். ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.

1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா?

#அப்துல்கையூம்

(இப்பதிவையும் சிலர் என் பெயரை நீக்கிவிட்டு தாங்கள் எழுதியதாக “காப்பிரைட்” போட்டு பத்திரிக்கையில் பிரசுரிக்கக் கூடும்)

 

 

 

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும்- தொடர் – 18


ரவீந்தரும் எம்.கே முஸ்தபாவும்

mustafa

“முஸ்தபா! முஸ்தபா! டோன்ட் வொர்ரி முஸ்தபா!!” பாடல் பாடும் இளைய தலைமுறையினருக்கு எம்.கே.முஸ்தபாவைப் பற்றி தெரிந்திருக்க அறவே வாய்ப்பில்லை.

எம்.கே.முஸ்தபா என்பவர் யார் என்று நான் சொல்வதற்கு முன்பு ஒரு சிறிய ப்ளாஷ்பேக் தேவைப்படுகிறது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை அறிமுகம் செய்து வைத்த கவி கா.மு.ஷெரீப் அவர்களைப்போல, காஜா மொய்தீனை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் டணால் கே.தங்கவேலு அவர்கள்.

1953-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு நடிகர் தங்கவேலு அவர்களுடைய சிபாரிஸின் பேரில் முதன் முதலாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் செல்கிறார் காஜா மொய்தீன்.

எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது லாயிட்ஸ் சாலையில் (தற்போது ஒளவை சண்முகம் சாலை) 160-ஆம் எண் இல்லத்தில் குடியிருந்தார். கருப்பு நிற டாட்ஜ் காரை அனுப்பி ஓட்டுனர் கதிரேசனிடம் காஜா மொய்தீனை அழைத்து வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

வீட்டு வாசல் முகப்பில் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி, சின்னவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் இடையே காஜா மொய்தீனை பணிக்கும் அமர்த்தும் தேர்வில் நடுவில் வீற்றிருந்தவர் யார் தெரியுமா? சாட்சாத் இந்த எம்.கே.முஸ்தபாவேதான். எம்.ஜி.ஆரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். குறிப்பாக பெரியவர் எம்.ஜி.சக்கரபாணியின் பாசத்திற்குரியவர்.

“வாங்க.. வாங்க….” என்று அன்புடன் அழைத்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமரச் சொல்கிறார் எம்.ஜி,ஆர்.

எம்.ஜிஆர் அவர்களின் உபசரிப்பை விவரிக்கையில் இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவது கலீபாவான உதுமான் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தனது பதிவொன்றில் நினைவு கூர்கிறார் இவர்.

“உலகில் பெரிய பண்பு எது?” என்று கலீபா உதுமான் அவர்களிடம் கேட்கிறார் ஒருவர்.

“நம்மைத் தேடி வருபவர்களை உட்கார வைத்து பேசுவது” என்று வருகிறது கலீபாவின் பதில்.

இந்தச் சொல் என் நினைவுக்கு வந்தது என்று மனம் நெகிழ்ந்துப் போகிறார் பணித்தேர்வுக்குச் சென்ற காஜா மொய்தீன்.

வேலை தேடி வந்த அவரிடம் எம்.ஜி.ஆர். தொடர்கிறார். “உங்க ஊர் பெயரை தங்கவேலு சொன்னார். முஸ்லீம் மதத்தில் பிறந்த உங்கள் எழுத்து, தமிழுக்கு ரொம்ப சிறப்பைத் தருவதாக இருக்குதுன்னு சொன்னாரு. இவங்களும் உங்க இனம்தான் எம்.கே.முஸ்தபா, எங்க குடுமப நண்பர்.” என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள்.

காஜா மொய்தீனைப்பற்றி பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த எம்.கே.முஸ்தபா மேலும்சில தகவல்களை பகிர்கிறார், “சுதந்திர நாடு தின இதழில் இவர் நிறைய எழுதி வருகிறார். அதுமட்டுமின்றி பூவிழி என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தவர்”

“முஸ்தபா சொல்வதைப் பார்த்தால் நீங்க ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே நல்லா எழுதியிருக்கீங்க. இனிமேலும் பெரிய சந்தர்ப்பங்கள் வரலாம். உங்க சொந்த பெயரில் எழுதுவதைவிட ஒரு பொதுப் பெயரிலே எழுதினா நல்லாயிருக்கும். அதனால பெயரை மாத்தி வச்சுக்கிறீங்களா?”

“உங்க இஷ்டம். மாத்தி வைங்க” என்கிறார் காஜா மொய்தீன்.

“உங்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும்?. பெரியவங்களா இருக்கணும்” – இது எம்.ஜி.ஆர்.

“ரவீந்திரநாத் தாகூரை எனக்குப் பிடிக்கும். அவுங்க கதை கவிதைங்க நிறைய படித்திருக்கிறேன்”

“சரி. அவர் ரவீந்திரநாத் தாகூர். நீங்க தாகூர்”

“ஆகா.. நாகூரிலிருந்து வந்த தாகூர், நல்ல பெயர்ப் பொருத்தம்” என்று சிரித்தபடியே சொல்கிறார் முஸ்தபா.

“நாத், வேண்டாம். உங்க பேரை ரவீந்தரன் என்று வச்சுக்குங்க” என்கிறார் பெரியவர் எம்.ஜி,சக்கரபாணி

“சரி” என்று சம்மதித்து தலையாட்டுகிறார் இவர்.

சிறிது நேரம் மெளனத்திற்குப் பிறகு ஏதோ மனக்கணக்கு போட்டவாறு “அதுகூட வேணாம். புனைப்பெயரா தெரியணும். அதனாலே “ரவீந்தர்” என்ற பெயர் சரியா இருக்கும். அப்படிப் பார்த்தா நியூமராலஜி 6 வரும். கலைக்கு நல்லது” என்கிறார் எம்.ஜி,ஆர்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக்கொண்ட நாளில் அவருக்கும் புதுப்பெயர் சூட்டப்படுகிறது. பெரியவர், சின்னவர், எம்.கே.முஸ்தபா மூவரும் அவருக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.

“சரி. இனிமே உமக்கு எல்லாம் வரும். போய்ட்டு நாளைக்கு வாரும். கார் அனுப்பறோம்.” என்று வழியனுப்பி வைக்கிறார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி.

காஜா மொய்தீனாகச் சென்ற அவர் ரவீந்தராக வீடு திரும்புகிறார். ஒளிமயமான எதிர்காலம் அவர் உள்ளத்தில் தெரிகிறது

இப்போது எம்.கே.முஸ்தபாவின் கலைத்துறை வாழ்க்கையை சற்று பார்ப்போம். ரவீந்தருடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த எம்.கே.முஸ்தாபாவின் பெயரும் பெரிதாக வெளியில் தெரிய வரவில்லை. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். இயக்குனர் சமுத்திரகனியின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “இந்த இருவருமே இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போய்விட்டார்கள்’.

1940-1980-களில் எம்.கே ராதா, எஸ்.எஸ்.ஆர். எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், கே.ஆர்.ராமசாமி போன்ற முன்னணிக் கலைஞர்கள் பலருடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகரான எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகத் திகழ்ந்தவர்.

எம்.ஜி.ஆரின் நாடக மன்றம் ரவீந்தரின் வருகைக்குப் பிறகு சூடு பிடித்தது. ‘இடிந்த கோயில்’, ‘இன்பக்கனவு’, ‘அட்வகேட் அமரன்’, ‘ஆசை நினைவு’, ‘பகைவனின் காதலி’ என அடுத்தடுத்து நாடகங்கள் தொடர்ச்சியாக அரங்கேறின
.
“எம்.ஜி.ஆர் நாடக மன்றம்” உருவான துவக்க காலத்திலிருந்தே எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றியவர். எந்த வேடங்கள் கொடுத்தாலும் அது சிறிய வேடமாக இருந்தாலும் சரி முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, முகஞ் சுழிக்காமல் திறம்பட நடித்து ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தவர். அவருடைய குரல் கம்பீரமாக இருக்கும். அலட்டிக் கொள்ளாமல் நடிப்பவர். படிப்பிடிப்பின்போது சொன்ன நேரத்திற்கு முன்கூட்டியே ஆஜாராகிவிடும் பழக்கத்தைக் கொண்டவர்.

எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் நடிக்க வருவதற்கு முன்ப்பு காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த “ஸ்ரீ ராம பால கான வினோத சபா” என்ற நாடகக் கம்பேனியில் எம்.கே.முஸ்தபா நடித்து வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், “சட்டாம்பிள்ளை” வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன், சாயிராம், ஏ. ஆர். அருணாசலம் எம்.எஸ்.எஸ். பாக்கியம், கே. மனோரமா, போன்ற கலைஞர்கள் அதே சபாவில் அப்போது நடித்து வந்தனர்.

“வைரம் செட்டியார் கம்பெனியில் பல நடிகமணிகள் தோன்றிப் புகழ் பெற்றனார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.கே. முஸ்தபா” என்று புகழ்மாலை சூட்டுகிறார் மறைந்த நாடக மேதை அவ்வை தி.க.சண்முகம்

எம்.கே.முஸ்தபா 40-களிலிருந்து 80-கள் வரை நடிப்புத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்திருந்தும் கூட அவர் பெயரை யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம்.

99

தாயின் மேல் ஆணை படத்தில் சி.எல்.ஆனந்தன், புஷ்பவல்லி, எம்.கே.முஸ்தபா

112

”ஹரிச்சந்திரா” படத்தில் ஜி.வரலட்சுமி, மாஸ்டர் ஆனந்தன், சிவாஜிகணேசன், எம்.கே.முஸ்தபா

113

‘யார் பையன்’ படத்தில் பி.எஸ்.ஞானம், டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.கே.முஸ்தபா

111

கடவுள் மாமா படத்தில் மனோரமாவுடன் எம்.கே.முஸ்தபா

102

‘கங்கா கெளரி’ படத்தில் எம்.கே.முஸ்தபா

கே.பி.நாகபூசணம் இயக்கத்தில் ஹரிச்சந்திரா (1944)., கே.ராம்நாத் இயக்கத்தில் மர்மயோகி (1951), எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் கைதி (1951), எல்.வி.பிரசாத் இயக்கத்தில் ராணி (1952), கே.வேம்பு இயக்கத்தில் போர்ட்டர் கந்தன் (1955), நீதிபதி (1955),), நானே ராஜா (1956), ஆர்.ஆர்.சந்திரன் இயக்கத்தில் நானே ராஜா (1956), கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் குலதெய்வம் (1956), யார் பையன் (1957), டி.எஸ்.துரைராஜ் இயக்கத்தில் பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958), கே,ஷங்கர் இயக்கத்தில் சிவகங்கை சீமை (1959), ப.நீலகண்டன் இயக்கத்தில் திருடாதே (1961), எஸ்.ஏ.சுப்புராமன் இயக்கத்தில் மாடப்புறா (1962), யோகானந்த் இயக்கத்தில் பரிசு (1963), ஜி.வி.ஐயர் இயக்கத்தில் தாயின் கருணை (1965), எஸ்.ராமதாஸ் இயக்கத்தில் தாழம்பூ (1965), தேடி வந்த திருநாள் (1966), மனசாட்சி (1969), ஸ்நேகிதி (1970), கங்கா கெளரி (1973) பொன்னகரம் (1980), நீதிபதி, கே.சிங்கமுத்து இயக்கத்தில் கடவுள் மாமா (1974), தாயின் மேல் ஆணை, ரிக்ஷாக்காரன், சங்கே முழங்கு, தாயின் மடியில், பரிசு, ஏழைப்பங்காளன், சின்னஞ்சிறு உலகம், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், மற்றும் எண்ணற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்தவர்.

கிராமத்துக்காரராக, இன்ஸ்பெக்டராக, போலீஸாக, அப்பாவாக, ஒட்டுனராக, அமைச்சராக, வில்லனாக இப்படி பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்தவர்.

1985 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் கொடுத்ததோடு பொற்கிழியும் கொடுத்து இவரைக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் இவருக்கு ‘கலைமாமணி’ பட்டம் வழங்கியபோது பத்திரிக்கைகள் இவரை மணவை முஸ்தபா என்று குறிப்பிட்டிருந்ததுதான். என்னத்தைச் சொல்ல..?

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகில் அனைத்து குணச்சித்திர வேடங்களும், துணை கதாபாத்திரங்களும் ஏற்று நடித்த ஒரு மனிதரை யாரும் நினைவு வைத்திருக்கவில்லை என்பது துரதிருஷ்டமான ஒன்று. ஒரு படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் வரும் சிரிப்பு நடிகரை ஞாபகத்தில் வைத்திருக்கும் நாம், படம் முழுவதும் வரும் துணைகதாபாத்திரங்களை நாம் கண்டுக் கொள்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அப்துல் கையூம்

இன்னும் தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 15

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 16

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 17

 

Tags:

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 17


காலப்பேழையில் காஜா மொய்தீன்

0

“எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள் ஆர்.எம்.வீரப்பன் என்ற பெயரை உச்சரிக்காமல் கடந்து போக முடியாது” என்று என்னிடம் சொன்னார் என் திரையுலக நண்பர் ஒருவர்.

“ஆம். அதேபோன்று ரவீந்தர் என்ற பெயரைக் குறிப்பிடாமல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முழுமையே அடையாது” என்று அழுத்தம் திருத்தமாக  நானும் கூறினேன்.

“என்ன பைத்தியக்காரத்தனமாக பேசுகிறீர்கள்? ரவீந்தருக்கும், எம்.ஜி.ஆருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?  ரவீந்தர் அறிமுகமானதே ‘ஒருதலை ராகம்’ படத்தின்போது தானே?” என்று பதில் சொன்னார் அவர். இத்தனைக்கும் அவர் சினிமாத்துறையில் பலகாலமாக இருப்பவர்.

“நான் சொல்லும் ரவீந்தரின் உண்மையான பெயர் காஜா மெய்தீன் என்பதையும், அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்ற தகவலையும், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அவருடன் ஒன்றாக திரைத்துறையில் பயணித்தவர் என்பதையும், “எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். அவர்களே அன்போடு “எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று உரிமை கொண்டாடிய நபர் அவர் என்ற நிதர்சனத்தையும், ஆர்.எம் வீரப்பனுக்கு   முன்பே அவர் எம்.ஜி.ஆரிடம் பணிக்குச் சேர்ந்தவர் என்பதையும், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் அவர் ஒரு முக்கிய அங்கம் என்ற உண்மையையும் நான் எடுத்துரைத்தபோது “அப்படியா..? இப்படியும் ஒரு இஸ்லாமிய அன்பர் புரட்சித்தலைவரின் வாழ்க்கையில் நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறாரா..?” என்று விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

எடப்பாடியின் அரசு என்னென்ன சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆரின் மனதில் நிறைந்து நின்ற இந்த ரவீந்தர் என்ற திறமையான மனிதரை தமிழக மக்களுக்கு நினைவூட்டும் வகையில் புரட்சித் தலைவரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் “எம்,ஜிஆர், காலப்பேழை” என்ற ஆவண நூலை வெளியிட்டு அவருக்கு அழியாப் புகழைத் தேடித் தந்துள்ளது. அந்த வகையில் இவர்களை பாராட்டியே தீரவேண்டும்.

8

அந்த ஆவணப்பேழையில் ரவிந்தரைப் பற்றிய அரிய தகவல்களும், எம்.ஜி,ஆர். நாடக மன்ற வரலாறு, ரவீந்தர் எழுதிய நாடகங்கள், புகைப்படங்கள் அத்தனையும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். திராவிடக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு அண்ணாவின் நாடகங்களும், கலைஞரின் வசனங்களும் எந்தளவுக்கு  பங்கு வகித்தனவோ அதுபோன்று எம்.ஜி.ஆரின் நாடகங்களில்  கூறப்பட்ட அரசியல் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு ரவீந்தரின் கதை வடிவமைப்பும். கனல் தெறிக்கும் வசனங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

அவரெழுதிய ‘இன்பக்கனவு’, ‘இடிந்த கோயில்’, ‘ஆசை நினைவு’, ‘அட்வகேட் அமரன்’ போன்ற நாடகங்கள் மக்களிடையே புரட்சிக் கருத்துக்களை விதைத்தன.

1

உண்மைகளை பொய்கள் விழுங்கிவிடும் இக்காலத்தில் இதுபோன்ற உண்மைகளை ஆவணப்படுத்தி வைப்பது மிகவும் அவசியம்.

2

3

4

5

6

7

புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 2018-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும். பல்வேறு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் நடந்தேறின. 30.09.2018 அன்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவின்போது எம்.ஜி.ஆரின் காலப்பேழை என்ற 290 பக்கங்கள் அடங்கிய சிறப்பு நூலொன்றை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை தொகுத்து வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிச்சாமி ‘காலப்பேழை’ வெளியிட்ட அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்களும் அரசு அதிகாரிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

என்ற திருக்குறளுக்கு ஒப்ப மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; இன்பத்ஜ்திலும் துன்பத்திலும் உறுதுனையாக நின்ற மாசற்ற உறவை மறக்காத வண்ணம் ரவீந்தரின் பெயரை மீண்டும் உச்சரிக்க வைத்த தமிழக அரசுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

அப்துல் கையூம்

இன்னும் தொடரும் ….

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 15

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 16

 

Tags:

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 16


Raveenar photo

ரவீந்தர்

ரவீந்தரும் சத்யராஜும்

ஆரம்பகாலம் முதற்கொண்டு மக்கள் திலகம் அவர்களுடைய அதிதீவிர ரசிகராக நடிகர் சத்யராஜ் இருந்தார் என்பது பலரும் அறிந்த ஒன்று.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய தங்கையின் திருமணத்திற்கு நேரில் சென்று அழைத்தபோது,  அவர் சற்றும் எதிர்பாக்காதவண்ணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி கோயமுத்தூரில் நடந்த திருமணத்திற்கு ஆஜாராகி அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து அன்பினால் அவரை திக்குமுக்காடச் செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அதன் பிறகு, தன் தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியதற்கு நன்றி கூற தன் மனைவியுடன் அவரது வீட்டுக்குச் சென்றபோது, “உங்கள் ஞாபகமாக  ஏதாவதொரு நினைவுப் பொருளைத் தாருங்கள்” என்று சத்யராஜ் வேண்டுகோள் விடுக்க, எம்.ஜி.ஆர். தினமும் தான் உடற்பயிற்சி செய்துவந்த கர்லா கட்டையை தன் உதவியாளர் மாணிக்கத்தை அனுப்பி மேல்மாடியிலிருந்த அந்த சாதனத்தை வரவழைத்து அவருக்கு பரிசாக அளித்தார். அத்துடன் “தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம்” என்று அறிவுரையும் கூறி வாழ்த்தி அனுப்பினார் அந்த பண்பாளர்.

sathiraja-680x365

சத்யராஜ் தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து தினமும் வணங்கி வருகிறார். அந்த அளவுக்கு அவர் எம்.ஜி,ஆரின் முரட்டு பக்தர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சத்யராஜ் பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே “பொம்மை” பத்திரிக்கையை தவறாமல் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு ஐந்து தங்கைகள். மாதந்தோறும் 1-ஆம் தேதி வீட்டுக்கு வரும் “பொம்மை” இதழை யார் முதலில் படிப்பது என்பதில் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். காரணம் அதில் தொடர் கட்டுரையாக வெளிவந்த ரவீந்தர் அவர்களின் கட்டுரையைப் படிக்கத்தான் இத்தனை போட்டா போட்டிகள்.

“போன மாசத்து ‘பொம்மை’யை நீ படிச்சே இல்லையா? இந்த மாசத்து பொம்மையை இவங்க முதலில் படிக்கட்டும்” என்று சத்யராஜின் தாயார் இவர்களுடைய சண்டையை மத்திசம் செய்து வைப்பார்.

b84f3s

“சாண்டில்யன் அவர்கள் ‘கடல் புறா’ என்ற நாவலை எழுதினார். அதை படிக்கும்போது அந்தக் கப்பலில் நாம் பயணிப்பதைப் போன்ற உணர்வு இருக்கும். ‘யவனராணி’ என்னும் நாவலில் யவனராணி உடைந்த கப்பல் கரை ஒதுங்கும்போது நாமும் அங்கே கரை ஒதுங்குவதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அதாவது அந்த காலகட்டத்திற்கே அழைத்துப் போய் நிறுத்தும் எழுத்து. – அதுவே அந்த எழுத்தாளரின் சிறப்பு. ரவீந்தர் அவர்களின் “பொன்மனச்செம்மல்” தொடரை படிக்கும்போது எம்.ஜி,ஆர் அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே ஓர் உணர்வு எனக்குள் ஏற்பட்டது.” என்று ரவீந்தரின் எழுத்தாற்றலுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் சத்யராஜ்.

இன்னும் ஒருபடி மேலே சென்று “சினிமாவில் கதாபாத்திரங்களை காட்சியமைப்பு மூலமாக சுலபத்தில் காட்டிட முடியும். ஆனால் எழுத்து மூலமாக கதாபாத்திரங்களை, அவற்றின் சிறப்புகளை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. ‘பொன்மனச்செம்மல்’  தொடரைப் படிக்கும்போது அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என்று அவருடைய எழுத்துத்திறமைக்கு மகுடம் சூட்டுகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எத்தனையோ பேர்கள் எழுதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தரின் எழுத்துக்களில் மட்டும் அப்படியென்ன ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா…?

ஆம். வேரு யாருடைய எழுத்துக்களுக்கும் இல்லாத நம்பகத்தன்மை, துல்லியம், சுவையான அனுபவங்கள் ரவீந்தரின் கைவண்ணத்தில் காணப்படுவது தனிச்சிறப்பு . அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல இந்த ஒரு சம்பவமே போதுமானது.

1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இயற்கை எய்திய பின்னர் ‘பொம்மை’ இதழை நடத்திவந்த நாகிரெட்டியாருக்கு தனது பத்திரிக்கையில் அவரைப்பற்றிய தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.

ஜானகியம்மாள் சொன்ன ஒரே ஒரு பதில் எம்.ஜி.ஆருக்கும் வசனகர்த்தா ரவீந்தர் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பின் இறுக்கத்தை எடுத்துக்காட்ட போதுமானது.

“மக்கள் திலகம் என்னும் மாமனிதருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் திரு கே.ரவீந்தர் அவர்களிடம் தமக்கேற்பட்ட அனுபவங்களை ‘பொம்மை’யில் எழுதச் சொல்லுங்கள். சுவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். என் கணவரைப் பற்றி எழுத அவரைவிட தகுதியான நபர் வேறு யாரும் கிடையாது”

மக்கள் திலகம் மறைந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தேறியது.   நாகிரெட்டியாரின் விருப்பத்திற்கு ரவீந்தர் அவர்கள் இசைந்து “நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தலைப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்து 30 இதழ்களில் தொடராக எழுதியபோது அது வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. ‘பொம்மை’ இதழின் வருமானமும் எகிறியது.

“எம்.ஜி.ஆர் என்னும் அந்த மாமனிதரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டதையும், படித்ததையும் கொண்டு பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்தபோதிலும் எம்.ஜி.ஆருடன் பல்லாண்டுகள் உடனிருந்து பழகிய ஒருவர் எழுதுகிறார் என்றால் அதற்குள்ள சிறப்பே தனித்துவமானது. அந்த எழுத்து திரு ரவீந்தருடையது” என்று புகழாரம் சூட்டுகிறார்  ‘பொம்மை’ பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர்.

இந்த தொடர் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷமாகவும், பெருத்த கொண்டாட்டமாகவும் இருந்தது. யாரும் அறிந்திராத அத்தனை சுவையான நிகழ்வுகள். இந்த தொடரைப் படித்த பிறகு இன்னமும் கூடுதலாக எம்.ஜி.ஆரின் பித்தனாகிப் போனவர் நடிகர் சத்யராஜ்.

ஒருநாள் பொம்மை பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பொறுப்பாசிரியர் வீரபத்திரன் என்பவரிடம் பேசுகிறார்.

“நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தொடரை எழுதும் திரு.ரவீந்தர் அவர்களை நான் எப்படியாவது சந்திக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். சத்யராஜின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வீரபத்திரன் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறார்.

சென்னையிலுள்ள ரவீந்தரின் இல்லம் சென்று சத்யராஜ் முதன் முதலாக அவரை சந்தித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தான் வணங்கும் தலைவனின் அன்புக்கு பாத்திரமானவரை கண்டபோது மக்கள் திலகத்தையே நேரில் பார்த்ததுபோன்று பரவசமடைகிறார். பொன்மனச் செம்மலுடன் ரவீந்தர் பழகுகையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும், அந்த தொடர் கட்டுரைகளில் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவங்களும் சத்யராஜ் அவர்களின் மனக்கண்ணில் வந்து நிழலாடுகிறது.

முகமன் கூறி வரவேற்று உபசரித்த ரவீந்தர் அவர்கள் ஒரு இனிப்பு பொட்டலத்தை சத்யராஜிடம் பரிவுடன் தந்து “புரட்சித் தலைவர் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு இது. இதை திருவல்லிக்கேணியில் உள்ள இனிப்பகத்திலிருந்து வாங்கி வந்தேன்” என்று சொல்ல சத்யராஜ் அப்படியே எம்.ஜி.ஆரின் நினைவில் மூழ்கிப் போகிறார்.

ரவீந்தர் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பைக் குறித்து பேசும்போது “புரட்சித்தலைவர் அவர்களை பார்க்கும்போது முதலில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார். தலைவரைப் போலவே அவரிடம் பணியாற்றியவர்களும் அந்த பண்பை தொடர்ந்தது…  எனக்கு ஒரு ஸ்வீட் பாக்கெட்  தந்தபோது எனக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் சத்யராஜ்.

ரவீந்தரிடம் விடைபெற்று சென்ற சத்யராஜுக்கு சினிமா உலகத்தில் இத்தனை காலங்கள் ரவீந்தர் சத்தமின்றி சாதனைகள் புரிந்தும் அது வெளியுலகிற்கு தெரியாமலே போய்விட்டதே என்ற ஆதங்கம் மனதுக்குள் தேங்கி இருந்தது. ரவீந்தரை எப்படியாவது ஒரு பொதுநிகழ்ச்சியில் கெளரவிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

download

சத்யராஜ் கொண்டிருந்த நாட்டத்திற்கேற்ப அதற்கான ஒரு நல்ல வாய்ப்பும் அமைந்தது. 1993-ஆம் ஆண்டு பி.வாசுவின் இயக்கத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “வால்டர் வெற்றிவேல்” என்ற திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடி 200-வது நாள் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தொண்ணூறுகளில் வெளியான சத்யராஜ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் “எஸ்.பி. பரசுராம்” என தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் “குத்தார்” என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

வால்டர் வெற்றிவேல் 200-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு  ரவீந்தர் அவர்களுக்கு  சத்யராஜ் பிரத்யேக அழைப்பு விடுத்திருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த மேடையிலேயே ரவீந்தர் அவர்களுக்கு புரட்சித்தலைவரின் உருவப்படம் பதித்த மோதிரத்தை வழங்கி கெளரவித்தபோது ரவீந்தர் நெகிழ்ந்துப் போனார்.

தன்னை கண்ணியப்படுத்திய சத்யராஜ் அவர்களின் சிறந்த பண்பை பாராட்டி அதே ‘பொம்மை’ பத்திரிக்கையில் கட்டுரையாக வரைந்தார்.

“எம்.ஜி,ஆர். அவர்கள் என் வாழ்க்கையில் எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால் மோதிரம் மட்டும் எனக்கு அணிவிக்கவில்லை. அதை சத்யராஜ் நிறைவேற்றிவிட்டார். அதன் மூலமாக எம்.ஜி.ஆர் தமது படத்தில் பாடிய எல்லா பாடல்களையும் ஜெயித்து விட்டார். “நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்” உட்பட. ஆனால் ஒரேயொரு பாடல் மட்டும் அவரது வாழ்க்கையில் நிறைவேறாமல் இருந்தது. அது “எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப்போலவே இருப்பான்” என்பது. அவரது நிஜவாழ்க்கையில் மகன் இல்லை. ஆனால் இந்த மோதிரத்தை அணிவித்ததன் மூலமாக சத்யராஜ் அவருக்கு மகன் மாதிரி. பெற்றால்தான் பிள்ளையா?” என்று அந்த கட்டுரையை ரவீந்தர் முடித்திருந்தார். சத்யராஜ் இந்த நிகழ்வினை நினைத்துக் கூறும்போது “இதைப்படித்து என் கண்கள் குளமாகின” என்று மனம் நெகிழ்கிறார்.

முத்தாய்ப்பாக இதோ சத்யராஜ் கூறும் விஷயங்கள் நம் மனதில் ரவீந்தர் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையும் மேலும் அதிகப்படுத்துகின்றன.

“ரவீந்தர் அவர்கள் பொன்மனச்செம்மலைப் பற்றி நிறைய விஷயங்கள் சுவைபடச் சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கும்போது நான் ரசிகனாக.. தூரத்தில் இருந்து புரட்சித் தலைவரைப் பார்த்தபோது அவரை நடிகராக, அரசியல் கட்சித் தலைவராக, ஏழைகளின் பசியைத் தீர்த்தவராக, சத்துணவு திட்டம் கொண்டு வந்தவராக… இப்படி பெரிய பெரிய விஷயங்கள்தாம் வெளியே தெரியுமே தவிர, நெருக்கமாக நட்பு முறையில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வாய்ப்பில்லை. அவற்றை கூடவே இருந்து தன்னலம் கருதாமல் புரட்சித் தலைவரை நேசித்து பழகியவர்களால் மட்டுமே எழுத முடியும்” என்று புகழாரம் சூட்டுகிறார்.

அப்துல் கையூம்

இன்னும் தொடரும்

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 15

 

 

 

 

Tags: ,

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 15


FotorCreated

ராஜ ராஜன்…….

“வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?” என்பார்கள். வலுவான அஸ்திவாரத்துடன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் கதை-வசனகர்த்தா ரவீந்தர்.

வடிவேலு ஒரு படத்தில் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பார்.   ரவீந்தரைப் பொறுத்தவரை அவரது பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்காக இருந்தது. அதனால் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருந்தது.

“நேற்று  பெய்த மழையில் இன்று பூத்த காளானாய்” அதிர்ஷ்டக் காற்றடித்து களம் புகுந்தவரல்ல ரவீந்தர். சரியான குருவிடம், முறையான பயிற்சி பெற்று, வசனக்கலையில் வளமான தேர்ச்சி பெற்றவர்

யார் அந்த ரவீந்தரின் குரு? அறிஞர் அண்ணாவா? கலைஞர் மு,கருணாநிதியா.? யார் அவர்?

திரைப்படத்துறையில் ரவீந்தருக்கு குருவாக வாய்த்த அந்த மனித சாதாரண மனிதரல்ல. “வசனகர்த்தாக்களின் பிதாமகன்” என்றழைக்க தகுதி படைத்தவர்.

வெறும் பாடல்களின் தொகுப்பாக இருந்த தமிழ்ப்படங்களுக்கு வசன மழை பொழிவித்த வசீகர படைப்பாளி.

செந்தமிழ் இலக்கியத்தை திரையுலகில் திறம்பட புகுத்திய சீர்த்திருத்தவாதி.

கம்பன் மகன் “அம்பிகாவதி” துன்பவியல் கதைக்கு கன்னித்தமிழல் உரையாடல் எழுதிய கலைஞானி..

ஐம்பெரும் தமிழிலக்கியங்களையும் ஐயமறக் கற்று திரைவானில் வார்த்தை விளையாட்டு ஆடிய வசனவேந்தன். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும், குண்டலகேசியையும் அதன் சுவை சற்றும் குன்றாது அவரால் வெள்ளித்திரையில் வார்த்தெடுக்க முடிந்தது.

அவர் பெயர் இளங்கோவன். ரவீந்தரைப் போன்று சினிமா உலகம் மறந்துபோன முன்னோடிகளில் அவரும் ஒருவர். செங்கல்பட்டு இவரது சொந்த ஊர்.

Ilangovan

இளங்கோவன் இளமையிலும் முதுமையிலும்

“படைப்பாற்றலால் தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்களுள் திரைப்படத் துறையில் எனக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் இளங்கோவன்தான்”

என்று “தனது கலையுலக அனுபவங்கள்’ தொடரில்  எழுத்துலக மேதை ஜெயகாந்தன் இவரைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரம் காவியம் வடித்த இளங்கோவடிகள் மீது கொண்ட அதீத காதலால் தணிகாசலம் என்ற தன் பெயரை இளங்கோவன் என்று மாற்றிக்கொண்டவர்.

“பூம்புகார்” வடித்த கலைஞர் மு.கருணாநிதியை இன்று நாம் சிலாகித்துப் பேசுகிறோம். கலைஞரின் எழுத்துக்கு உந்துதலாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் இளங்கோவன். இதைக் கலைஞரே ஒருமுறை பிரகடனப்படுத்தியுள்ளார்.

1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில்  ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.

மெளனப் படங்கள், பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. அதில் பாடல்கள்தான் நிறைந்திருக்கும். குறைந்த பட்சம் இருபத்தைந்து பாடல்களாவது இடம்பெற்றுவிடும். இளங்கோவனின் வருகைக்குப்பிறகுதான் வசனங்கள் மகத்துவம் பெற்றன. வசனகர்த்தாக்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.

இலக்கியத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்த இளங்கோவனிடம் உதவியாளராக பணியாற்றியபோது ரவீந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்; ஏராளம். இளங்கோவனின் கைவண்ணத்தில் அனல் தெறிக்கும். அடுக்குமொழி வசனங்கள் அரங்கத்தை அதிர வைக்கும். உதவியாளராக இருந்த ரவீந்தரிடமும் அதன் பாதிப்பு வெளிப்பட்டது. பசுந்தமிழில் பக்குவம் பெற இளங்கோவனின் பாசறை அவருக்கு பெரிதும் வழிவகுத்தது. தமிழ்மொழியில் தனித்துவம் கண்ட தணிகாசலத்தின் குருகுலத்தில் ரவீந்தர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார்.

தமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ அதே அளவு ஆங்கிலத்திலும் இளங்கோவன் புலமை வாய்ந்தவர். ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்”  காவியத்தின் சுவையை பருகிய அவர் அதே பாணியில் காதல் ரசம் சொட்டும் வசனங்களை “அம்பிகாவதி”யில் வடித்திருந்தார்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பார்கள். வசனகர்த்தாக்களின் பிதாமகனாக விளங்கிய இளங்கோவனிடம் “ராஜ ராஜன்” படத்தில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் ரவீந்தரின் எழுத்துக்களுக்கு உரமூட்டியது. புடம்போட்ட தங்கமாய் அவரது எழுத்தாற்றல் இன்னும் பெருகேறியது..

1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.

rajarajan collage

எம்.ஜி.ஆரின் மேடை நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ரவீந்தர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய முதற்படம் “குலேபகவாலி” (1956). “இந்தப் படத்துலே நான்தாங்கனி புலி கூட சண்டை போடுற காட்சியிலே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு நடிச்சேன்” என்று பெருமையாக எங்க ஊரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் நாகூர் எஸ்..பரீது பெருமையாகச் சொல்வதை செவியுற்றிருக்கிறேன். “குலேபகவாலி” படத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த தஞ்சை ராமையாஸ் பெயர்தான் காட்டப்பட்டது.

அதன்பிறகு ரவீந்தர் வசனம் எழுதிய “மகாதேவி” (1957) படத்திலும் திரைக்கதை வசனம் : கண்ணதாசன் என்று காட்டப்பட்டது.

“ராஜராஜன்” திரைப்படம் வெகு நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா, எஸ்.சி.சுப்புலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார்  எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் நடித்திருந்தனர்.

“ராஜ ராஜன்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் முத்தான பாடல்கள்.

எழுபதுகளில் சிலோன் ரேடியோவைத் திறந்தாலே இந்தப் பாடல்தான் அடிக்கடி ஒலிக்கும்.

“நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே”

“யமன் கல்யாணி” ராகத்தில் இசையமைக்கப்பட்டு, சீர்காழி கோவிந்தர்ராஜனும்  ஏ.பி.கோமளாவும் பாடிய காலத்தால் அழியாத இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதே படம் பின்னர் 1963-ஆம் ஆண்டு “ராஜாதி ராஜூ கதா” என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.

இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.

இருவரும் திரையுலகம் மறந்துப்போன  முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்

பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.

Victor Hugo எழுதிய  “Les Mis’erables”  என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு”  இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.

அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும்  Justin Huntly Mccarthy  எழுதிய  “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.

இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.

–  அப்துல் கையூம்

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

 

 

 

 

 

 

Tags: , , , ,

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 14


Arasa kattalai poster

“அரச கட்டளை” படத்தில் ரவீந்தரின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது மறுக்கப்படாத உண்மை.  வேண்டுமென்றே அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

பாடுபடுபவன் ஒருவன். புகழ் தேடிக் கொள்பவன் மற்றொருவன். மாடாய் உழைப்பவன் ஒருத்தன். மார்தட்டிக் கொள்பவன் இன்னொருத்தன். உடல் உழைப்பு செய்பவன் ஒருத்தன். மெடல் குத்திக் கொள்பவன் இன்னொருத்தன். மரம் வைத்தவன் ஒருவன். பலனை அனுபவித்தவன் வேறொருவன். “அரச கட்டளை” படத்தில் இக்கூற்று ரவீந்தருக்கு நன்கு பொருந்தும்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்தபோது ரவீந்தர் புதியவராக இருந்தார். அதனால் அவருடைய பெயர் கண்ணதாசன் பெயரோடு இணைத்து காட்டப்பட்டது என்றார்கள். போகட்டும் என்று விட்டு விடலாம்.

10690323_787541447950751_1365779854726549063_n

ஆனால் “அரச கட்டளை” படம் வெளிவந்தபோது ரவீந்தர் எத்தனையோ படங்களுக்கு கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றி அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயரை இருட்டடிப்புச் செய்தார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “சிரிக்கும் சிலை” என்ற படத்தில் கூட இதே நிலைமைதான் ரவீந்தருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளிவரவில்லை. இரவு பகல் பாராது கண்துஞ்சாது கஷ்டப்பட்டு அந்தப் படத்திற்கு ரவீந்தர் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் ஓடவேண்டுமென்றால் நிச்சயமாக “Face Value” மிகுந்த பிரபலம் தேவை என்ற கண்ணோட்டத்தில்  “திரைக்கதை – வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரம் செய்யப்பட்டு ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ ரவீந்தர் பெயரையும் இணைத்துக் காண்பித்தார்கள்.

சிரிக்கும் சிலை

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத “சிரிக்கும் சிலை” திரைப்படம்

அந்தக் கால கட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு,  குறிப்பாக திராவிட இயக்க வசனகர்த்தாக்களுக்கு அதீத மவுசு கூடியிருந்தது.     கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி பிரபலமடைந்த  மந்திரிகுமாரி (1950), பராசக்தி (1952), திரும்பிப்பார் (1953), மனோகரா (1954),  போன்ற படங்களுக்குப் பிறகு அரசியல் பின்னணி கொண்ட வசனகர்த்தாக்களுக்கு தனியொரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. ஏ,வி,பி,.ஆசைத்தம்பி முதற்கொண்டு முரசொலி சொர்ணம் உட்பட  திரைப்பட வசனகர்த்தாக்களாக மாறி இருந்தனர். முரசொலி மாறன் “மறக்க முடியுமா (1966)” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதானித்திருந்தார்.  அதற்கு முன்பே நல்லதம்பி (1949), வேலைக்காரி படத்தின் மூலம் சி.என்.அண்ணாத்துரை பிரபலமாகியிருந்த செய்தி அனைவரும் அறிவர்.

ரவீந்தர் ஏன்  தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டார்? எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை? என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார்? ஏன் அவர் மீது மட்டும் இந்த ஓர வஞ்சனை?

அவர் அரசியல் பின்புலம் இல்லாத மனிதர் என்ற ஒரே காரணத்தினாலா? இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

உண்மையைக் கூற வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரின் பெயர் முதற்கொண்டு அவரது கார் ஓட்டுனர் பெயர்வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக, எப்போதும் அவர் கூடவே இருந்த காஜா மெய்தீன் என்கின்ற ரவீந்தரின் பெயர் மட்டும் யாருக்குமே தெரியாது. ‘யாருக்குமே தெரியாது’ என்று சொல்வதை விட யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் நாட்டாமை செய்து வந்தவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தார்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தம்.

“யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை”

என தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனே கூறுகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உலக நடப்புகளை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ரூமி உட்பட ரவீந்தரின் மறைவுச் செய்தியை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எதர்த்தமான உண்மை.

ரவீந்தர் உயிரோடிருந்த போதும். அவர் நோய் வாடப்பட்டு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் கூட அனைத்து ஊடகங்களும் சினிமாத்துறையினரும் பாராமுகமாகவே இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

“அரச கட்டளை” படத்தின்  ஸ்டில்கள் காண்பிக்கையில் அதன் திரைக்கதையை வடிவமைத்தது “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று காண்பிப்பார்கள்.

Arasa kattalai-1

அரச கட்டளை படத்தின் Screenshot

“எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்பதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கீழே R.M.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், S.K.T.சாமி என்று மூன்று பேர்களுடைய பெயர்களை மட்டும் காண்பித்து ரவீந்தரின் பெயரை இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

இப்பொழுது இயற்கையாகவே நம் மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. “அரச கட்டளை” படத்தில் உண்மையிலேயே ரவீந்தரின் பங்களிப்புதான் என்ன?

ஆர்.எம்.வீ. ஒரு மாபெரிய கதாசிரியர், பிரமாண்டமான படத்தயாரிப்பாளர்,  சிறந்த நிர்வாகி, தமிழார்வலர், கம்பராமாயணச் சிற்பி என்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கியிருந்தார். அவருடைய உண்மையான முகம் என்னவென்று சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்து நாகரிகம் கருதியும், சில பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நல்லெண்ணத்தாலும் அவரது வஞ்சகச் சூழ்ச்சி அனைத்தையும் இங்கு என்னால் வடிக்க இயலவில்லை.

“அரச கட்டளை” படத்தின் கதை எப்படி பிறந்தது என்பதற்கு சின்னதாக ஒரு “FLASHBACK”  தேவைப்படுகின்றது. அதை ரவீந்தர் வாயிலாகவே அறிந்துக் கொள்வோம். இப்படத்தில் ரவீந்தரின் பங்கு என்ன என்பது அப்போது விளங்கும்.

1962 ம் ஆண்டு , தேர்தல் சமயம்.

தி மு க வினர் அன்றைய முதல்வர் காமராஜரை மிக மோசமாக, தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தக் காலக் கட்டம். ஆனால் மக்கள் திலகமோ காமராஜரை மரியாதைக் குறைவாக விமர்சிக்க மறுத்தார்.

MGR_With_Kamaraj

காமராஜரும் எம்.ஜி.ஆரும்

அப்பொழுது நடந்த நிகழ்வு …

தேர்தல் பிரசாரத்துக்காக போகிறோம். கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு ரயில்வே கேட் அப்பொழுது பிரசித்தம் . மூடினால் சீக்கிரம் திறக்க மாட்டார்கள். சில துரித ரயில்கள் போனப் பின்னர் தான் திறப்பார்கள்.

அங்கு மக்கள் திலகத்தின் வண்டி நின்றது. அந்தக் காரின் எண் எல்லோருக்கும் தெரியும் .  கூட்டம் கூடிவிட்டது. மக்கள் திலகத்தின் காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவரது உதவியாளர் சபாபதியிடம் சொல்கிறார் …

” அது யார் கார் ? காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, சபாபதி போய் பார்த்து வா… ”

சபாபதி போய் பார்த்து விட்டு வந்து “ஆமா அவுங்க தான்” என்று சொல்ல , உடனே மக்கள் திலகம் தன் காரை விட்டு இறங்கிப் போய் அவருக்கு வணக்கம் சொன்னார்.

காமராஜர் கீழே இறங்க எத்தனிக்க, மக்கள் திலகம் தடுத்து விட்டார் .

“இதென்ன தனியே செக்கியூரிட்டி இல்லையா? ” என்று கேட்டார் மக்கள் திலகம். அப்பொழுது காமராஜர் முதல்வர் .

“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க எனக்கு பாடி கார்டு வைச்சுக்க ” என்றார் காமராஜர் .

இருவரும் கொஞ்ச நேரம் குசலம் விசாரித்தப் பின் வந்து அமர்ந்தார்கள்.  ரயில் போனதும் கார் புறப்பட்டது .

மக்கள் திலகம் என்னைப் பார்த்துச் சொன்னார் “ரவீந்திரன், அடுத்த படத்துக்கு , ஐடியா கிடைச்சிட்டது , நம்ம காமராஜர் ஐயா தான் ஹீரோ. ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாம, தனக்கு சவால் இல்லாம யார் மக்கள் மத்தியிலே பவனி வருகிறானோ அவன் தான்.  இதை வச்சு கதை எழுதணும், நானல்ல டைரக்டர் என் அண்ணனை செய்யச் சொல்லப் போறேன் ” என்றார் …

அப்படி உருவானப் படம் தான் “அரசக் கட்டளை” .

இது ரவீந்தரே பொம்மை இதழில் எழுதியது. தான் ஏற்கனவே பலமுறை மாற்றியமைத்து எழுதிய “இணைந்த கைகள்” படத்தின் ஒரு சில பகுதியை மையமாக வைத்தும், எம்.ஜி.ஆர். சொன்ன குறிப்புகளை வைத்தும் ரவீந்தர் தீட்டிய திரைக்கதைதான் “அரச கட்டளை”.

இந்தக் காட்சியை இப்படி வைக்கலாம், அப்படி வைக்கலாம் என்று ஏதாவது ஆலோசனை கூறிவிட்டு, ரவீந்தரின் மூளையை கசக்கிப் பிழிய வைத்து விட்டு, கஷ்டப்படாமல் பெயரைத் தட்டிக் கொண்டு போவது ஆர்.எம்,வீரப்பனின் வழக்கமாக இருந்தது. திரைக்கதை என்று பெயர் போடுகையில் ஆர்.எம்.வீரப்பன் பெயர்தான் முதலாவதாக இடம்பெறும்.

கதை எழுதும் கலையையும், வசனம் எழுதும் கலையையும் கற்று வைத்திருந்த ரவீந்தர் ஒரே ஒரு கலையைக் கற்க தவறியாதால்தான் அவரால் முன்னுக்கு வர முடியாத நிலை.ஆம். ஜால்ரா அடிக்கும் கலை ரவீந்தருக்கு வரவேயில்லை.

AraSAKATTALAI 2

அரச கட்டளை படத்தின் SCREENSHOT

.சரி.. திரைக்கதையில்தான் ரவீந்தர் பெயர் இடம்பெறவில்லை. விழுந்து விழுந்து “அரச கட்டளை” படத்திற்கு வசனம் எழுதிய அவருடைய பெயர் “உரையாடல்” என்ற தலைப்பிலாவது காட்டப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. அதற்கும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே. முரசொலி சொர்ணத்தின் பெயர் காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். தனது அண்ணன் குடும்பத்திற்காக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென விரும்பினார். எம்.ஜி.ஆர்.  தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.சி.ராமமூர்த்தி மற்றும் மூத்த மகள் சத்யபாமா இவர்களுக்காக “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற  பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க வைத்து தன் அண்ணனையே டைரக்ட் செய்ய வைத்த படம்தான் “அரசகட்டளை”.

சத்யபாமா

தன் அண்ணன் மகள் சத்யபாமாவுடன் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும், சந்திரகாந்தாவும், “அரச கட்டளை” படத்தில் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று சத்யராஜா பிக்சர்ஸ் “அரச கட்டளை”. மற்றொன்று சத்யா மூவிஸ் “காவல்காரன்” ஆகியவை.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில்  “எடிட்டிங்”, “ரீ ரிக்கார்டிங்” போன்ற ஒரு சில வேலைகளே மிச்சமிருந்தது.  அந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது,.

இப்படத்தில் வாலி, முத்துகூத்தன் மற்றும் ஆலங்குடி சோமு எழுதிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள்

“ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே – உன்

அரசகட்டளை  என்னாகும்”

என்ற பல்லவியை எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர்.  வாலியை கடிந்துக் கொண்டார். காரணம் “ஆண்டவன் கட்டளை” சிவாஜி நடித்த படம். “அரச கட்டளை” அச்சமயம் தயாரிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். படம்.   எம்.ஜி.ஆர். இதனை சுட்டிக்காட்டிய போது வாலிக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. இப்படியொரு பொருள்படும் என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவேயில்லை. இப்பாடல் வரிகளில் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர். கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து வேறொரு பாடலை எழுத வைத்தார்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை”  – என்று தொகையறாவாகத் தொடங்கி “ஆடி வா ! ஆடி வா! ஆடி வா!  ….. ஆளப் பிறந்தவனே! ஆடிவா!” என்ற பாடல்தான் அந்த மாற்றுப் பாடல்.

இந்த சம்பவத்தைச் சொன்னவர் ரவீந்தர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இதே சம்பவத்தை கவிஞர் வாலி அவர்கள் விலாவாரியாக “எனக்குள் எம்.ஜி.ஆர்”. என்ற தன் நூலில் எழுதியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் தன் சொந்த அனுபவங்களை, எண்ணங்களை, மனத்தாங்கல்களை எத்தனையோ பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றார். “அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே” போன்ற பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்.

“நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை.  ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்.”

என்று கவிஞர் வாலி, பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்ற பாடல், வாலிக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய வாழ்வில் ஒளியேற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செய்யும் வகையில் எழுதப்பட்ட பாடல்.

இப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மனங்கவர் பாடல்களாக அமைந்திருந்தன.

”அரசகட்டளை”யில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும்  இடம்பெறும் ஒரு காட்சி. சொர்ணத்தின் உரையாடல் என்று நம்பப்படும் ரவீந்தரின் வசனங்கள்  இன்றைய அரசியல் நாடகங்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் வகையில் உள்ளன.

”எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்தப் பாவிகளின் நாக்கை துண்டுத்துண்டாக வெட்டி..”

”அதனால்தான் அதிகாரம் உன் கையில் இல்லை. மதனா.. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல்படி, அரசியல் அகராதிப்படி”

“அப்படியா, இப்படி இன்னும் எத்தனைப் படிகளோ, உருப்படியாய் ஓடிவிடுவோம் வாருங்கள்”

”ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்றுதான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும்வரை”

”ஆபத்து இருந்தாலும் (ஆட்சி) எவ்வளவு சுகமாக இருக்கிறது”

” இந்த சுகத்திலேதான் பதவி வெறியே பிறக்கிறது மதனா..இதில் மயங்கித்தான் ஆட்சியிலே இருந்தவர்கள் மக்களை மறந்தார்கள்..துன்பத்தை விதைத்தார்கள். துயரத்தை வளர்த்தார்கள்.”

“உன் உயிரைப் பறிப்பேன்” என்று உடைவாளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைத் தாக்க வரும் நம்பியார் கூற “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லும் எம்.ஜி.ஆர். சற்று இடைவெளி விட்டு புன்னகை சிந்த “.நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். நறுக்குத் தெறித்தார்போல் காணப்பட்ட இதுபோன்ற வசனங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

புகழ் யாவும் சொர்ணத்திற்கு அர்ப்பணமாயின. ரவீந்தருக்கு வழக்கப்படி பிஸ்கோத்து, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின்  பாடல்தான் என் நினைவில் நிழலாடியது.

கதாசிரியர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்று அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்த காலத்தில் ரவீந்தர் எழுதிக் கொண்டிருந்தபோதும் கூட அவரால் ஒளிவிட்டு பிரகாசிக்க முடியவில்லை; அவரது பெயர் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பது வருத்தத்திற்குரிய விடயம்.

– அப்துல் கையூம்

…………தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

 

Tags: , , ,

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 13


inaintha-kaigal

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “இணைந்த கைகள்” படத்தைக் குறித்து முன்பு எழுதிய அத்தியாயத்தில் சுருக்கமாக எழுதியிருந்த நான் இப்போது அதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன்.

நித்தின் போஸ் இயக்கத்தில் “நியு தியேட்டர்ஸ்” நிறுவனம் 1934-ஆம் ஆண்டு “டாக்கு மன்சூர்” (கொள்ளைக்காரன் மன்சூர்) என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. அதில் ராஜ்கபூரின் தந்தை பிரித்திவிராஜ் கபூர், கே.எல்.சைகல் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நடித்திருந்தனர்.

“வார்த்தைகள் சொல்லமுடியாதவற்றை காமிராக் கண்கள் படம்பிடித்துக் காட்டிய படம்“ என்று இப்படத்திற்கு புகழாரம் சூட்டப்பட்டது.

“இது ஒளிப்பதிவாளர்களின் படம்” என அமர்க்களமாக விமர்சிக்கப்பட்டது.

இப்படத்தின் கதையைப் பற்றி யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லப்போக அவருக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையே மையமாக வைத்து ரவீந்தரை கதை எழுத வைத்து வடிவமைக்கப்பட்ட படம்தான் “இணைந்த கைகள்”.

1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக  எடுக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதற்காக இரவு பகல் பாராது கண்முழித்து பாடுபட்டார் ரவீந்தர். “ ‘நாடோடி மன்னன்’  படத்தில்தான் நம்முடைய பெயர் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதன் மூலமாவது நமக்கு ஒரு திருப்பம் கிடைக்கும்” என திடமாக நம்பினார்

ஈரானில் வாழ்ந்த மன்சூர் என்ற குடித்தலைவனின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை  மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. பன்மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் தெலுங்கு தயாரிப்பில் என்,டி,ராமராவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்திற்கான தொடக்கம் சத்யா ஸ்டூடியோவில் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் தடபுடலான ஏற்பாடுகளுடன் நடந்தது. கலைஞர் சம்மந்தப்பட்டால் அவருடைய உறவினரின் ஊடுருவல் இல்லாமலா? வழக்கம்போல் வசனம் எழுதும் பொறுப்பு “முரசொலி சொர்ணம்” என அறிவிக்கப்பட்டது.

கரைவேட்டிக்காரர்களை திருப்திபடுத்த அவ்வப்போது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் வளைந்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காலந்தொட்டு இருந்து வந்தது. அரசியல் ஆளுமை பெற்றவர்கள் அப்பாவி கலைஞர்களின் திறமைகளை களவாடிய அநியாயம் கணக்கிலடங்காது.

முரசொலி செல்வம்

எம்.ஜி.ஆருடன் சொர்ணம்

சொர்ணத்திற்கு வசனம் எழுதக்கூடிய திறமையுண்டு. அதை மறுப்பதற்கில்லை. எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். ஆனால் விளம்பரத்தில் “வசனம் : சொர்ணம்” என்று காட்டப்பட்ட அத்தனைப் படங்களின் வசனங்களும் அவர் எழுதியதல்ல. “அரசகட்டளை”, “உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற பல படங்களை இக்கூற்றுக்கு உதாரணம் காட்டலாம்.  “இணைந்த கைகள்” படத்தை பொறுத்த வரையில் கதை, வசனம், திரைக்கதை யாவும்  ரவீந்தரின் பங்களிப்பாகவே இருந்தது.

டி.ஆர்.ராஜேந்தர் பாணியில் கதை, திரைக்கதை, வசனம் யாவுமே ரவீந்தர் என்றால் அப்போதெல்லாம் எடுபடாது. படம் வெற்றி பெறுவதற்கு அரசியல் அல்லது தனிப்பட்ட  செல்வாக்கு உள்ள பிரபலங்களின் பெயர் கண்டிப்பாக இடம்பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இது சினிமா உலகின் மற்றொரு இருண்ட பக்கம்

எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ரவீந்தரை கருவேப்பிலையாகத்தான் கருதியது என்பது கசப்பான உண்மை. காரியம் முடிந்தபின் அவரை தூக்கி எறிந்து விடுவார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவானாலும் சரி, அப்படத்தின் வெற்றிவிழாவானாலும் சரி ரவீந்தரை கண்ணில் காட்ட மாட்டார்கள். எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் ரவீந்தரை பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அலுவலக அறைதான் அவரது வீடு, அவரது உலகம் யாவுமே.

ரவீந்தர் மாதச் சம்பளத்திற்குத்தான் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகைக்கு அவர் பழச்சாறாய் பிழிந்தெடுக்கப்பட்டார். வாழ்க்கை முழுவதும் பேனா பிடித்தே அவரது கைரேகை தேய்ந்துப் போனது என்று சொல்லலாம். ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் ஆளாளுக்கு அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்கள். சந்தடி சாக்கில் சிந்துபாடி ரவீந்தருக்கு பல வகையில் மன அழுத்தத்தை ஏற்படுத்திய புண்ணியம் ஆர்.எம்.வீரப்பனைச் சாரும். எம்.ஜி.ஆரையே கைப்பாவையாக இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை அலைக்கழித்து வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி போயிருந்ததுது.  அது மட்டுமல்ல பெரியவர் சக்ரபாணியை சமாளிப்பதே பெரும்பாடுதான்.

“இணைந்த கைகள்” படத்தை தயாரிக்க முடிவானபோது விரக்தியின் விளிப்புக்கே ரவீந்தர் கொண்டு செல்லப்பட்டார்.

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

ஒரு படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி எவ்வளவுதான் உழைத்தாலும் “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்றுதான்  விளம்பரப்படுத்தப்படுமே அன்றி ரவீந்தரின் பெயர் பிரபலமாகிவிடக்கூடாது என்பதில் ஆர்.எம்.வீரப்பன் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார்  என்றுதான் சொல்ல வேண்டும்..

எந்த நாகூர்க்காரரின் (நீதிபதி மு.மு.இஸ்மாயீல்) புண்ணியத்தில் ஆர்.எம்.வீரப்பன் கம்பன் கழகத் தலைவராக பதவி வகித்தாரோ அதே ஆர்.எம்.வீரப்பன்தான் இன்னொரு நாகூர்க்காரரின் வயிற்றிலும் எட்டி உதைத்து விளையாடி வந்தார்.

“இணைந்த கைகள்” படத்திற்கு அதிசயமாக “கதை:ரவீந்தர்” என அவரது பெயர் விளம்பர போஸ்டர்களில் அலங்கரித்தன. ரவீந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை.

கதை-ரவீந்தர், வசனம்–சொர்ணம், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள்-வாலி, புலவர் வேதா, ஒளிப்பதிவு-வி,ராமமூர்த்தி, , எடிட்டிங்-ஜம்பு, சண்டைப் பயிற்சி-ஷியாம் சுந்தர், கலை-அங்கமுத்து, இயக்கம்-சாணக்யா என விளம்பரப்படுத்தப்பட்டு “இணைந்த கைகள்” படம் பெரும் பரபரப்பையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலையும் உண்டு பண்ணியிருந்தது.

இப்படத்தின் கதையையும் “தினத்தந்தி” பத்திரிக்கையில் வெளிவரச் செய்தனர். இப்படத்தின் கதையை வடிவமைப்பதற்குள் ரவீந்தருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. காரணம் கதையை  ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, ஐந்துமுறை மாற்றியமைத்து எழுத வேண்டியிருந்தது.

Daku_Mansoor_(1934) (1)

“டாக்கு மன்சூர்” இந்திப் படத்தில் கதாநாயகன் மன்சூர் ஒரு கொள்ளைக்காரன்.

கதையின்படி (“யாதோன் கீ பாராத்” பாணியில்) தாயும், மகனும் தனித்தனியே பிரிகின்றனர். கதாநாயகன் மன்சூர், மூசா என்ற ஏழையினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஏழை எளியவர்களுக்கு உதவுகிறான். மக்களின் ஆதரவை பெறுகிறான், மன்சூர், அரசனை எதிர்த்து போராட்டம் புரிகிறான்.

இளவரசியுடன் அவனுக்கு காதல் மலர்கிறது. மன்சூருக்கு பலவிதத்திலும் உதவி புரிகிறாள். அவ்வூரில் பயங்கரமான தண்ணீர்ப் பற்றாக் குறை நிலவுகிறது. இளவரசி மன்சூருக்கு துணை நிற்கின்றாள். ஒரு மலையை உடைத்து அவ்வூரில் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழிவகுக்கிறார்.  மன்சூருக்கு தன் தாயைப் பற்றிய இரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இளவரசியின் தந்தை ஹாரூன் ரஷீதுக்கும் மன்சூரின் பிறப்பைப் பற்றிய ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் மன்சூர் அரசாட்சியைப் பிடிக்கிறான், இதுதான் கதை.

இப்படம் முழுக்க முழுக்க ஈரானில் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது.  இந்திப் படமாக வெளிவந்த “டாக்கு மன்சூர்” படக்கதையிலிருந்து சற்று மாறுபட்டு எழுத வேண்டி ரவீந்தரை எம்.ஜி.ஆர். பணித்தார். அதன் பிறகு கொள்ளைக்காரன் பாத்திரத்தை ஒரு குடித்தலைவனாக மாற்றி கதையமைக்கப்பட்டது.

ஆனால் ஈரான் அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லை. எப்படி அனுமதி தரும்? வம்சாவழியாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில் ஒரு கொள்ளைக்காரன்  புரட்சி செய்தி முடியாட்சியை கைப்படுத்துவதாக அமைந்த கதைக்கு படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி வழங்குமா?

ஈரானில் பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும். அந்நாட்டின் கடைசி அரசருமான முஹம்மது ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஷாவின் ஆட்சியில் அரசரைக் கிண்டல் செய்தால் நேராக மரணதண்டனைதான்.

சித்ரா கிருஷ்ணசாமியை வைத்து ஈரான் நாட்டு அரசாங்கத்திற்கு படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்கள். உலகப் புகழ்ப் பெற்ற ஈரானிய நடிகை பர்தீன் மூலமாக இதற்கு அனுமதி கோரி எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதன் பிறகு இந்தியாவில் நடப்பது போன்று கதையை மாற்றியமைத்து உயர்மட்ட சிபாரிசு வைத்து அனுமதி கோரினார்கள். எதிர்பார்த்ததுபோல் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

inaintha kaigal

நடிகை கீதாஞ்சலி  எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து  நடித்த படக்காட்சிகள் படமாக்கப்பட்டன.  சத்யா ஸ்டூடியோவிலேயே பிரமாண்டமான காடு, குகை  போன்ற ஒரு செட் நிர்மாணிக்கப்பட்டது, நான்கு பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றும், அனாதைக் குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே உரையாடல்கள் நடப்பது போன்றும்,காட்சிகள் படமாக்கப்பட்டன.

வெறும் இரண்டே இரண்டு நாட்கள் நடந்த படப்பிடிப்போடு இப்படம் தடைபட்டு போனது, படத்தயாரிப்பும் கைவிடப்பட்டது. இதனால் மிகவும் துவண்டு போனது ரவீந்தர் மட்டும் தான். எம்.ஜி.ஆர். வழக்கம்போல் இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தயாரிப்புக்கான ஆயத்த வேலைகளை தொடங்கச் சொல்லி ரவீந்தருக்கு உத்தரவு போட்டு விட்டார்.

இப்படத்திற்கு ஈரானிய நாட்டு கதாநாயகியை அறிமுகம் செய்ய எம்.ஜி.ஆர். நினைத்திருந்தார்.  திட்டமிட்டதுபோல் இப்பட்டம் மட்டும் வெளிவந்திருந்தால் இது மற்றொரு தங்க வாள் பரிசு பெறும் “நாடோடி மன்ன”னாக இருந்திருக்கக்கூடும்.

இப்படத்திற்காக எழுதப்பட்ட அத்தனை பாடல்களும் “சூப்பர் டூப்பர் – ஹிட்” பாடல்கள்.

  • “உலகம் சுற்றும் வாலிபன்”  படத்தில்  “நிலவு ஒரு பெண்ணாகி” என்ற பாடல்  –  [எம்.ஜி.ஆர். – மஞ்சுளா]
  • அதே படத்தில் இடம்பெற்ற “அவளொரு நவரச நாடகம்” என்ற பாடல்  [எம்.ஜி.ஆர். – லதா]
  • “சிரித்து வாழ வேண்டும்” படத்தில்  “கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடல் [ எம்.ஜி.ஆர். – லதா]
  • மேலும் ஒரு நீண்ட கவ்வாலி பாடல்

மேற்கண்ட இந்த நான்கு பாடல்களும் “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள். இப்படத் தயாரிப்பு கைவிடப்பட்டபின் இப்பாடல்கள் வேறு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு  மகத்தான வரவேற்பைப் பெற்றன.

பலமுறை மாற்றியமைக்கப்பட்ட “இணைந்த கைகள்” படத்தின் கதைதான் பின்னர் “உழைக்கும் கரங்கள்” மற்றும் “அரசகட்டளை” படமாக உருமாறியது.

MGR Nanjil

எம்.ஜி.ஆருடன் நாஞ்சில் மனோகரன்

“உழைக்கும் கரங்கள்” படத்தில் மன்சூர் கதாபாத்திரத்தை ரங்கன் என்று மாற்றியமைத்து அதை அரசியல் தாளிப்பு நிறைந்த திரைக்கதையாக ரவீந்தர் மாற்றியமைத்தார். படவிளம்பரத்திலோ கதை-வசனம் நாஞ்சில் மனோகரன் என்றிருக்கும். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் விஷயத்தில்அரசியல் ஆளுமை கொண்டவர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்தது என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டு. இது போன்றுதான் “நாடோடி மன்ன”னிலும் கண்ணதாசன் பெயரும் ரவீந்தர் பெயரோடு இணைத்துக் காட்டப்பட்டது.

“கணவன்” படக்கதை எம்.ஜி.ஆரே எழுதியதாகத்தான் இதுவரை எல்லோராலும் நம்பப்படுகிறது. “Wood Cutter” ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வைத்து எம்.ஜி.ஆரின் தூண்டுதலால் கதையை வரிக்குவரி வடித்தவர் ரவீந்தர்,

MGR-with-his-ghost-writer-Vidwan-V.-Lakshmanan

எம்.ஜி.ஆருடன் வித்வான் வி. லக்ஷ்மணன்

அதேபோன்று எம்.ஜி.ஆர். எழுதி வந்த “நான் ஏன் பிறந்தேன்” தொடரை எழுதியது யாவும் வித்வான் வி.லக்ஷ்மணன், இதைச் சொன்னதும் ரவீந்தர்தான்.  இப்படி வெளியில் வராத உண்மைகள் இன்னும் எத்தனையோ உண்டு.

– அப்துல் கையூம்

– தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

 

Tags: , ,