நான் கவிஞர் கண்ணதாசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன். அவரது மகன் கலைவாணன் கண்ணதாசன் பள்ளியில் என்னுடன் படித்தார் என்பதால் கவிஞரின் விட்டுக்கு மூன்று முறை சென்று அவரைச் சந்தித்துப் பேசிய அனுபவங்கள் உண்டு. என் பள்ளியில் கவிஞர் நாஞ்சில் ஷா ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் கவிஞர் கண்ணதாசன் தலைமை தாங்க “அழுகை” என்ற என் முதல் கவிதையைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றதை என்னால் மறக்க முடியாது.
இப்போது நேராக விடயத்திற்கு வருகிறேன். கவிஞரின் அன்புத் திருமகன் அண்ணாதுரை கண்ணதாசன் , கலைவாணனுக்கும் இளைவர். அவருக்கு பழைய விடயங்களை அவர் படித்தோ அல்லது கேட்டுத்தான் தெரிந்திருக்க வேண்டும்., அவர் சொல்வதெல்லாம் வரலாறு ஆகிவிடும் என்பதல்ல.
என் பிரியமான நண்பன் கலைவாணன் கண்ணதாசன் துரதிருஷ்டவசமாக உயிரோடில்லை. ஒரு விபத்தில் மரணமுற்றார்.
(எனக்கு கவியரசருக்குமிடையே இருந்த நெருக்கத்தை ஏற்கனவே “வல்லமை” இதழில் எழுதியிருக்கிறேன். முதல் கமெண்டில் அதன் சுட்டி இணைத்துள்ளேன்)
அண்மையில் தினத்தந்தி பத்திரிக்கையில் மகாதேவி படத்தில் வரும் “பஞ்ச் டயலாக்” அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை என எழுதியுள்ளார். “தினத்தந்தி” போன்ற பத்திரிக்கை எப்படி எதுவும் ஆராயாமல் பிரசுரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதற்கு முறையான மறுப்பை வெளியிட வேண்டுகிறேன்.
மகாதேவியில் எழுதிய “பஞ்ச் வசனங்கள்” யாவும் நாகூர் ரவீந்தர் (காஜா மொய்தீன் எழுதியது என்பதில் துளியளவும் ஐயமில்லை. மகாதேவியில் வசனங்கள் எழுத எம்.ஜி.ஆர் நியமித்தது ரவீந்தரைத்தான்.
அக்காலத்தில் பிரபல இயக்குனராகத் திகழ்ந்த சுந்தர்ராவ் நட்கர்னி, விஜயா வாகிணி ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த தன்னுடைய மைத்துனர் பி.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தானே தயாரிக்க விரும்பி எடுத்த படம்தான் “மகாதேவி” .
எம்.ஜி.ஆர். அவர்கள் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ரவீந்தரை வசனம் எழுத சிபாரிசு செய்தபோது நட்கர்னி மிகவும் தயங்கினார். ரவீந்தர் படவுலகுக்கு புதியவராக இருந்ததாலும். பிரபலம் இல்லாததாலும் ஏற்பட்ட தயக்கமிது.
எனவே கண்ணதாசன் பெயரை வசனம் என்று டைட்டிலில் போட்டு ரவீந்தரின் பெயரை “வசனம் உதவி : ‘இன்பக்கனவு’ ரவீந்தர்” என்று காண்பிக்க முடிவானது.
ரவீந்தர் புகழ் விரும்பி இல்லாததாலும் கவிஞர் கண்ணதாசனின் தீவிர ரசிகராக இருந்ததாலும் “இது அருமையான முடிவு” என்று தன் கருத்தை வெளியிட்டார். மகாதேவியின் வசனங்கள் கவிஞரின் மேற்பார்வையிலும் , அவரது சிறு சிறு திருத்தங்களாலும் வெளியானது. ரவீந்தரின் வசனம் எழுதும் திறமையைப் பார்த்து கவியரசரே வியந்து வாழ்த்தினார் என்பதே நிதர்சனமான உண்மை.
தம்பி அண்ணாதுரை கண்ணதாசன் கலைமாமணி வாமனன் 22.01.2018-ல் தினமலர் பத்திரிக்கையில் எழுதிய “நிழலல்ல நிஜம்” என்ற தொடரிலிலிருந்துதான் அத்தனை தகவல்களையும் திரட்டி எழுதியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் வாமனன் அதில் ரவீந்தர் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். அண்ணாதுரை கண்ணதாசனின் எழுத்துக்களில் அவர் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது எல்லா இயக்குனர்களும் “பஞ்ச் டயலாக்” அவசியம் இடம்பெற வேண்டும் என்று கேட்கிறார்கள். அக்டோபர் 2, 2014-ல் நான் எழுதிய என் வலைப்பதிவில் “பஞ்ச் டயலாக்”கின் முன்னோடி ரவீந்தர் என எழுதியிருந்தேன். இப்பொழுதும் அதையே நான் முன் மொழிகிறேன், மறுப்பவர்கள் தாராளமாக விவாதிக்க வரலாம்.
“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்”
“மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி”
போன்ற ‘பஞ்ச் டயலாக்’குகள் இன்னும் இளைஞர்களிடையே “வைரல்” ஆகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. பி.எஸ்.விரப்பாவின் அந்த வில்லத்தனமான சிரிப்பும், வெடித்து பிழம்பாய் விழும் வீர வசனத்தையும் மறக்கத்தான் முடியுமா?”
“அத்தான்…..”
“அப்படிச் சொல்..அத்தான்…. இந்த வார்த்தையைக் கேட்டு கருணாகரன் செத்தான்”
“சொல்லுக்கெல்லாம் சக்தி இருந்தால் இந்த உலகம் என்றோ அழித்திருக்கும்”
“ஆத்திரமே நீதிபதி ஆகி விட்டால் அங்கு அறிவுக்கு இடமில்லை மன்னா..!”
“இந்தக் காதல் ஒரு பாதி அல்ல. சரிபாதி”
“உங்களுக்கு கண்ணிலே இதயம். எனக்கு இதயத்திலே கண்”
“கற்புக்கு நெருப்பு துணை என்பதை அறியாத கயவனே!”
இதுபோன்று எத்தனையோ வசன மழையில் “மகாதேவி”யில் நனைய முடியும்
OCT 2, 2014-ல் நான் என் வலைப்பதிவில் எழுதிய ஒரு பகுதியை மட்டும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,
//1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான “குலேபகவாலி” வெளிவந்தது. அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில் ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.
1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது. அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது. கதை-வசனம் கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.
1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்” படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும் “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.
1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.
1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்” படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.
1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.
1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்” படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் டைட்டிலில் காண்பிக்கப்படும்.
அதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன. எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.
1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில் கதை-வசனம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள். ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.
1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.
மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா?
#அப்துல்கையூம்
(இப்பதிவையும் சிலர் என் பெயரை நீக்கிவிட்டு தாங்கள் எழுதியதாக “காப்பிரைட்” போட்டு பத்திரிக்கையில் பிரசுரிக்கக் கூடும்)