RSS

Category Archives: கவி.கா.மு.ஷெரீப்

கவி. கா.மு. ஷெரிப்.


ImageImage

இந்த வார்த்தை தமிழ் இலக்கிய உலகின் கவித்துவம் பொங்கும் கல்வெட்டு வார்த்தை.

கவி. கா.மு. ஷெரிப், உன்னதங்கள் நிறைந்த கவிஞர்.

ஆன்மிக சிகரங்களில் வாழ்ந்தவர்.

ஒழுக்கத்தின் வடிவாகத் திகழ்ந்தவர்.

தனக்குள் வற்றாத கவிதைச் சுனையைக் கொண்டிருந்தவர்.

பண்பாளர். தாயுள்ளத்தோடு படைப்பாளிகளைப் பாராட்டும் பேராண்மை கொண்டவர்.

“அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.’
“பாட்டும் நானே பாவமும் நானே’

என்பது போன்ற காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல திரைப்படப் பாடல்களை எழுதி காற்றையும் மணக்கவைத்தவர்.

சீறாப்புராணத்தின் நயங்களை எடுத்தியம்பிய காவியச் செல்வர்.

இத்தகைய கவி.காமு. ஷெரிப் இன்று நம்மிடையே இல்லை.

எனினும் கவிதையாக, பாடல்களாக, பண்பாட்டு நெறிகளாக, அருளார்ந்த நினைவுகளாக நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

வருகிற ஆண்டு அவரது நூற்றாண்டாக மலர இருக்கிறது.

எங்கள் திருவாரூர் மாவட்ட வேலுக்குடிதான் அந்தக் கவிப்பறவையின் தாய்மடி. 1914 செப்டம்பர் 11-ல் இந்த பூமியில் தரையிறங்கிய அந்தக் கவிதை ராஜாளி, தனது வசீகரச் சிறகுகளால் இலக்கிய வானத்தையும் ஞான வானத்தையும் ஒன்றாய் அளந்தது.

இலக்கிய தபோவனத்திற்குள் இருந்தபடியே ஞானத்தை அடைந்தவர் ஷெரிப். அவரது உயரம், சகல உயரங்களையும்விட உயரமானது.

கா.மு. ஷெரிப், அன்றைக்கு இருந்த பிரபல பட நிறுவனமான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் செல்வாக்கோடு திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் திருவாரூரில் இருந்த இளைஞர் கலைஞரை, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அழைத்துச்சென்றதே கவிஞர் ஷெரிப்தான்.

ஷெரிப், திரையில் தீட்டிய காவியப் பாடல்கள் திரையுலகின் திருப்புமுனைப் பாடல்களாகும்.

“ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ இந்தத் திரைப்பாடல், இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் சிந்தையில் சந்தனம் பூசும்! இவர் புலவர் மட்டுமல்லர்; மகத்தான மனிதர். சுதந்திரப் போராட்டத் தியாகி. இவரும் என் தந்தையாரும் சிறந்த நண்பர்கள். நண்பனின் பிள்ளை என்பதால் என்னை அவர் ஆசையும் அன்புமாய் அரவணைத்தார்.

அன்புமழை பொழிந்து தன் வாழ்நாள் நெடுக என்னை இதயமாற நனைத்தார்.

நான் அகில இந்திய வானொலிலி நிலையத்தில் பணியாற்றியபோது அன்றாடம் அவரோடு அணுக்கமாயிருக்கும் பேறினைப் பெற்றேன்.

அந்த அணுக்கம், மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை என்மீது வெளிச்சம் போட்டு விளங்க வைத்தது. அவர் மதம் கடந்த மனிதர். ஆனால் மதக் கோட்பாடுகளை உள்ளுக்குள் வாங்கி, அதன் நடைமுறை வடிவமாய் நடந்து காட்டியவர்.

புத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது, சாத்தியம்தான் என்பதற்கான கண்கண்ட சத்திய சாட்சியங்கள்தான் கவி கா.மு. ஷெரிப் போன்ற கருணாமூர்த்திகள்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனசாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகளை வைத்து கோடிக்கு அதிபதியாய் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசிவரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே. ஒரு வீடு கேளுங்களேன்!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!’ என்றார் அவர்.

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ஐம்பதாவது பொன்விழா.

விழாவில் அவருக்கு ஐம்பது பவுன் பரிசளிப்பதென்று நண்பர்கள்கூடி முடிவு செய்தனர்.

விழாக் குழுவின் முன்னோடியாய் நின்று உழைத்தார் ஷெரிப். விழா நெருங்குகிற நாள்வரை பாதி அளவுக்குமேல் பவுன் தேறவில்லை. பார்த்தார் ஷெரிப்; “சொன்னது சொன்னபடி சொர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று உறுதி பூண்டார். தன் வாழ்க்கைத் துணைவியின் மேனியில் மின்னிக்கிடந்த பொன்நகைகளைக் கழற்றி எடுத்துப் பாதியளவோடு, மீதியளவையும் சேர்த்து, ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் உவந்தளித்தார் அந்த உத்தமர். பின்னர் அந்தத் தொகைதான் கார் நிதியாக மாற்றி, சிலம்புச் செல்வர் பயணம் போகும் “பியட்’ காராகப் பரிசளிக்கப்பட்டது.

“அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய
முன்மாதிரி’ என்று திருவசனம் தெரிவிக்கிறது.

அந்த முன்மாதிரியைப் பின்பற்றிய இவரும் ஒரு முன்மாதிரிதான். “வலக்கையில் சூரியனையும், இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் நாம் நமது கொள்கையை விடப்போவதில்லை’ என்னும் நாயகத்தின் வார்த்தைகளுக்கு இவரும் ஒரு உன்னத இலக்கணம்.

இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண்; காதலன் கைவிட்டுவிட்டான். பெண்ணின் தகப்பனார் கவிஞரின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லிலி நொந்தழுதார். “குடும்ப மானம் கப்பலேறிவிடும்!’ என்று குமைந்தார். “வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாடயிருக்கிறேன்’ என்று கதறினார். ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா?

“உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்லிலி தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். குழந்தை பிறந்ததும், பெண்ணைச் சத்த மின்றி தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி, வளர்த்து ஆளாக்கினார். அப்போது, “இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?’ என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.

இலக்கியங்களில்- காவியங்களில்கூட காணக் கிடைக்காத, ஈடற்ற தியாகம் இது. ஆம்! இந்துக் குழந்தை, இஸ்லாமியத் தாயின் பாலருந்தி வளர்ந்தது! இந்த இடத்தில் முத்துராமலிலிங்கத் தேவர் முஸ்லிலிம் தாயின் பாலருந்தி வளர்ந்ததை நம் நெஞ்சில் பதிப்பது நல்லது; தமிழகத்தின் தனிப் பெரும் மரபு இது. அதுதான் மதம் கடந்த மனிதநேயம்!

தான் பெற்ற பிள்ளைக்கு அரசாங்கப் பதவி கேட்கச் சொன்ன உறவினர்களுக்கு நமது கவிஞர் தந்த பதில், புன்முறுவல்தான். எம்.ஜி.ஆர். தன் மனத் தில் வைத்துப் போற்றிய மகத்தான மனிதர் இவர்.

அவர் முதல்வரானதும் தன் தூதுவர்களை அனுப்பி, எத்தனையோ முறை தன் இல்லத்திற்கு அழைத்தார். நான், “ராமாவரம் போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்!’ என்றார் இவர். ஆம்! துறவிக்கு வேந்தனும் துரும்பு.

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான இதயம் கொண்டவர் ஷெரிப்.

இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், தங்கள் தனித்தன்மையைப் பேணுவதோடு இங்கே வாழும் தமிழ் மக்களோடு இதயம் ஒன்றி வாழவேண்டும் என்று சமத்துவத்தை போதித்தவர் அவர்.

புலால் சாப்பிடுவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றபோதும், கடைசிவரை சைவச் சாப்பாட்டையே உண்டுவந்தார். வள்ளலாரின் காருண்யநெறி அவரை ஆரத்தழுவியிருந்தது.

அவர் காங்கிரஸில் இருந்த நாட்களில் வெளியூர் கூட்டங்களுக்குச் செல்ல நேரும்போதெல்லாம், அங்கே ஆடம்பரமான விடுதி அறைகளில் தங்கமாட்டார். கட்சிப் பிரமுகர்களின் இல்லங்களிலேயே தங்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிவரை எளிமையின் புத்திரராகவே திகழ்ந்தார்.

சீறாப்புராண சொற்பொழிவாற்றத் தொடங்கிய பிறகு, பிரமுகர்களின் இல்லங்களையும் தவிர்த்து, பள்ளிவாசல்களில் தங்குவதையே வழக்கமாக ஆக்கிக்கொண்டார். காரணம் அணுவளவும் மனதில் இறை எண்ணத்தைத் தவிர, பிற எண்ணங்கள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக தனக்குத்தானே வேலிலி போட்டுக்கொண்டு சுதந்தரமாக வாழ்ந்த ஞானவிருட்சம் அவர்.

சீறாப்புராண சொற்பொழிவிற்காக அவர் மீண்டும் மீண்டும் அந்தப் புனித நூலையே படித்துக்கொண்டிருப்பார். கண்ணாடி அணிந்தபோதும், அவரது கண் பார்வை, படிக்கப் போதுமானதாக இருக்கவில்லை. எனவே ஒரு பூதக்கண்ணாடியை வலது பக்கக் கண்ணாடிக்குக் கீழே வைத்துக்கொண்டு ஆழ்ந்து படிப்பார். இது அவரது ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் உன்னத உதாரணம்.

சைவத்தமிழ் அறிஞர்களைவிடவும் புராண, இதிகாச, காவியங்களில் முழுக்கத் தோய்ந்திருந்தவர் கவி. கா.மு. ஷெரிப். ஒருமுறை சைவத்தமிழ் அறிஞரான அ.ச. ஞானசம்மந்தனார், கவிஞர் ஷெரிப்பைப் பார்க்க வந்திருந்தார். அப்போது ஷெரிப்பின் இரண்டு கைகளையும் ஆசையாகப் பற்றித் தனது கண்களில் ஒற்றிக்கொண்டார். இதை வியப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் அ.ச.ஞா, “தம்பி, நாங்கள் பெற்ற அறிவு, படித்துப் பெற்ற அறிவு. ஆனால் இவருடைய ஞானம், இறைவன் கொடுத்த கொடை. இவர் பூவாது காய்க்கும் மரம்’ என்று நெகிழ்ந்து சொன்னதை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தோடு முரண்பாடு ஏற்பட்டபோது, கா.மு. ஷெரிப், பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் சேர முடிவெடுத்தார். காமராஜரோ, கவிஞர் ஷெரிப்பின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். எனவே ஷெரிப், கட்சியில் இணையும் விழாவை தடபுடலாக நடத்தத் தீர்மானித்தார்.

ஆனால் இதற்கெல்லாம் இடம்தராமல், திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜரின் இல்லத்திற்கே கிளம்பிவிட்டார் ஷெரிப். இந்தத் தகவல் அறிந்த பெருந்தலைவர் காமராஜர் அவர் வரும் வரை வாசலிலில் நின்று காத்திருந்து, இரு கைகளையும் நீட்டி “உங்களை எப்படி எப்படியோ வரவேற்கணும்னு நினைச்சேன்’ என்று ஆரத்தழுவிக்கொண்டார். கவிகா.மு. ஷெரிப்போ “நீங்கள் வாசல்வரை வந்து வரவேற்றது, தமிழ்நாடே வரவேற்றது போல’ என காமராஜரின் ஆதங்கத்தை போக்கினார். காமராஜரோ அவர் கையைப் பிணைத்து உள்ளே அழைத்துச்சென்றார்.

அப்போது கவி. கா.மு. ஷெரிப் “பிணைந்த இந்தக் கைகள், பிணைந்ததுதான். இனி எப்போதும் பிரியாது. எனக்கு அரசியலிலில் இனி எந்தத் தலைவரும் இல்லை’ என்று தனது பூரிப்பை வெளிப்படுத்தி பெருந்தலைவரையும் பூரிப்பில் ஆழ்த்தினார்.

ஒருமுறை எல்லீஸ் சாலையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கவி கா.மு. ஷெரிப் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது ஒரு இஸ்லாமிய வர்த்தகப் பிரமுகரும் அவரைப் பார்க்க வந்திருந்தார். அவர் தோல் தொழிற்சாலை வைத்திருந்தார் என்பதாக நினைவு. வந்தவர் ஒரு கவரில் ரூபாய் நோட்டுக்களைப் போட்டு கவிஞரிடம் கொடுத்தார். கவிஞரோ, அதை அப்படியே அவரது பையிலேயே திருப்பிச் செருகி, “வந்தீங்க. பார்த்தீங்க. போய்ட்டு வாங்க. இதைக் கொடுத்து என்னை மேலும் சீக்காளி ஆக்கிடாதீங்க’ என்று அவருக்கு விடைகொடுத்துவிட்டார். அந்த சமயத்தில் கவிஞரிடம் பத்து ரூபாய்கூட இருக்கவில்லை.

அவர் போனதும் கவிஞரிடம், “அய்யா, அவர் அன்போடு கொடுத்த பணத்தை வாங்கியிருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பாரே’ என்றேன். கவிஞரோ “இவர் கொடுப்பது ஹராமான(பாவமான) பணம். இதை நான் வாங்கினால் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்றார். வறுமையிலும் அவரிடமிருந்த செம்மையைப் பார்த்து சிலிலிர்த்துப்போனேன்.

சென்னை வானொலிலியில் பணியாற்றிக்கொண்டி ருந்த நான், சிங்கப்பூர் வானொலிலிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டேன். சிங்கப்பூர் புறப்படுவதற்குமுன், என் ஞானகுருவான கவிகா.மு. ஷெரிப் அவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றேன். அன்போடு விசாரித்தார். பெரியவர் களிடம் ஆசிபெறும் முறைகளின்படி, அவரது இரண்டு திருவடிகளையும் தொட்டு வணங்கினேன்.

பதறிப்போன கவிஞர், “இஸ்லாத்தில் அடுத்தவர் கால்களைத் தொட அனுமதி இல்லை. உனக்குத் தெரியும்தானே’ என்றார். பின் அன்போடு என் உச்சந்தலையில் கைகளை வைத்து, ஏறத்தாழ ஏழு நிமிடங்களுக்கு குர்ரானின் வசனங்களை ஓதி வாழ்த்தினார். அது நான் பெற்ற பேறு.

பின்னர், “எப்போது திரும்பி வருவாய்? ஆறு மாதம் ஆகுமா? ஒரு வருடம் ஆகுமா?’ என்று அன்பொழுகக் கேட்டார். அதில் மீண்டும் பார்க்க முடியுமா என்கிற பரிதவிப்பு இருப்பதை என்னால் உணரமுடிந்தது. “வாய்ப்பு அமைகிறபடி வருவேன் அய்யா. நான் வரும்போது நீங்கள் நல்லபடியா இருப்பீங்கய்யா’ என்றேன்.

ஒரு கணம் நிதானித்த கவிஞர் “அதை இறைவன் தீர்மானிக்கணும். பொழச்சிக்கிடந்தா பார்போம்’ என்றார். பின்னர் சிங்கப்பூர் வானொலிலியில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் ஜே.எம்.சாலிலிக்கு என்னை அறிமுகம் செய்து ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, “வர்றேங் கய்யா’ என வணங்கிவிட்டு விடைபெற்றேன். அது கடைசி விடைபெறுதல் ஆகிவிட்டது.

சிங்கப்பூர் வானொலிலியில் “இரவுப் பூங்கா’ என்ற தலைப்பில் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி
அங்கு ஏகப் பிரபலம். ஒருநாள் அந்த நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தபோது, கவி கா.மு. ஷெரிப் மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதில் தோட்டாக்களைப் பாய்ச்சியது. இருந்தும் கவி கா.மு. ஷெரிப் அவர்களின் பாடல்களையும் அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும் கலந்துகொடுத்து அவருக்கு அஞ்சலிலி செய்தேன். அவரது “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா…’ என்ற பாடலை ஒலிலிபரப்பியபோது, பல வாசகர்கள் தொலைபேசியில் வந்து கதறியழுதார்கள். கடல் கடந்த தமிழர்களையும் கலங்கிக் கதறவைத்த மரணம், அவரது மரணம்.

கவி கா.மு. ஷெரிப்பிற்கு இரங்கல் கூட்டத்தை சிங்கப்பூரில் இருக்கும் பென்கூலன் ஸ்ட்ரீட் பள்ளிவாசலிலில், தமிழ் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதிலே என்னை உரையாற்ற வைத்தனர். என்மீது அளவுகடந்த அன்புகாட்டி வந்த கவி. கா.மு. ஷெரிப்பிற்கு, நான் கண்ணீர் வார்த்தைகளால் அஞ்சலிலி செய்தேன்.

கவி கா.மு. ஷெரிப் எனக்கு ஞானகுருவாக வாய்த்தவர். திருக்குர்ரானுக்குள் என்னை பரவசத்தோடு பிரவேசிக்க வைத்தவர். அதில் இருக்கும் இறை வசனங்களை எனக்குப் போதித்து சுதி சுத்தமாக என் மனதில் அவற்றைப் பதியவைத்த வர். என் மனதை நன்னெறிப்படுத்தியவர். இன்றும் என்னுள் இருந்து வழிகாட்டுகிறவர் அவர்தான். இனி அவர்போல ஒரு அறிஞரை, கவிஞரை, ஞானியை எங்கே நான் பார்ப்பேன்?

நன்றி : நக்கீரன்

 

Tags: , ,

பாட்டும் நானே! பாவமும் நானே!


திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது  கண்ணதாசனா அல்லது  கவி.கா.மு.ஷெரீப்பா?

இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது.

இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ திரு.ஜெயகாந்தன் அவர்கள்தான். அவர் வாயைத் திறந்திருக்காவிட்டால் இந்த ரகசியம் பெட்டிக்குள் வைத்தது வைத்தபடி இருந்திருக்கும். நாமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 

‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் ‘கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது’ என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

இப்படியொரு பெரிய அரிவாளை “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.

இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை.

‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

வேறொருவர் பாட்டை தனது பாடல் என்று கூற வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் வந்தது? நொடிக்கு ஒரு பாடலை அள்ளி வீசக்கூடிய கண்ணதாசன் மீது எப்படி ஒரு பழியா?

பெயர் டைட்டிலில் போடப்பட்டு விட்டதினால், தன் இமேஜைக் காப்பாற்ற இப்படியொரு தற்காப்பு தேவைப்பட்டதோ?

கவி.கா.மு.ஷெரீப்பை அவர்களை உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்படியொரு பழியை தன்னை அறியாமலேயே போட்டு விட்டாரா ஜெயகாந்தன்?

ஜெயகாந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதாவது முன்விரோதமா?

கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார். இதுதான் உண்மை.

இதோ அந்த பாடலின் முழு வடிவம் :

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)

பாடலின் வரிகளை வைத்துக் கொண்டு ‘இது இன்னாருடைய வரிகள்’ என்று சொல்லும் திறமை நமக்கு போதாது. உதாரணத்திற்கு மருதாகாசி, கவி.கா.மு,ஷெரீப் – இவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு குழப்பத்தைத் தரும். எது யாருடைய பாடலென்று சொல்ல முடியாது. 

“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். 

இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை ஏ.பி.என் எதிர்பார்த்தார்.

பாட்டுக்குத்தான் மெட்டு என்பது கண்ணதாசனின் பாலிஸி. அதற்காக மெட்டுக்கு கண்ணதாசனால் பாட்டு எழுத முடியாது என்று யாரும் நினைக்கக் வேண்டாம். கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். அவனால் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைக்கும், எப்படிப்பட்ட மெட்டுக்கும் பாட்டெழுத முடியும்.

Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.

‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும்  ஒகே ஆகிவிட்டது. அதுதான்  இறைவனின் நாட்டம் போலும். 

‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு.

அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு.

நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
 
கா.மு.ஷெரீப், கண்ணதாசன் என்ற இரு மாபெரும் கவிஞர்களை பிரித்து வைத்திருந்தது அரசியல்தான். கண்ணதாசனைப் பொறுத்தவரை தமிழகத்துக் கட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கா.மு.ஷெரீப் கட்சி விஷயத்தில் மிகவும் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர். கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கா.மு.ஷெரீப் அவர்கள் மாபொசி தலைமையின் கீழ் இயங்கிய தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதைக்கூட தவித்தார்கள்.

கண்ணதாசனுக்கும், தி.மு.,க.வுக்குமிடையே இருந்த உறவு கசந்து, கண்ணதாசன் வேறு புகலிடம் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏ.பி.என். அவர்கள் கண்ணதாசனை கோழியை பிடித்து அமுக்குவதைப்போல் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்.  

வடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி போன்ற ஏ.பி.என். படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடலெழுதினார். அதுசமயம் கண்ணதாசனுக்கும், கவி.காமு. ஷெரீப்புக்கும் இடையே இருந்த அரசியல் மனக்கசப்பு விலகி சுமூக உறவு தொடர்ந்தது. 
 
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு. 

நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் – யாருமே இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கின்ற ஒரே நபர் டி.எம்,செளந்தர்ராஜன் ஒருவர்தான். அவரும் இந்த விஷயத்தில் ஏனோ வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். “நல்லா மண்டையைப் பிச்சிக்கிடுங்கோ!” என்று வேடிக்கை பார்க்கிறார் போலும்.

வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.

ஊஹூம்.. .. ..

– அப்துல் கையூம்

 

கவிஞரைப்பற்றி கலைஞர்


 

கவிஞர், கலைஞர், துரை முருகன், டி.ஆர்.பாலு

 

கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள வலைப்பூ

இந்த புகைப்படம் தந்து உதவிய கவி.கா.மு.ஷெரீப் அவர்களுடைய புதல்வர் சீதக்காதி அவர்களுக்கு என் நன்றி.

“திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால் அந்தப் பாடல்களும் கூட நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அண்ணன் கவி கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” என்கின்ற பாடலைக் கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக் கேட்டு அவர்கள் அந்தப் பாட்டிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்”

கலைஞர் மு. கருணாநிதி

 

உள்ளத்தில் நல்ல உள்ளம்


ஜெயகாந்தன்

தமிழகம் கண்ட மகா கவிஞர்களில் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் பெயர் காலத்தால் அழியாதது. அவரது புகழைப் பாடும் வகையில் கவி.கா.மு.ஷெரீப் என்ற ஒரு வலைப்பூவைத் தொடங்கி அவரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து, வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவு செய்தி வருகிறேன்.

தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் கவிஞரின் நற்பண்புகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்கின்றார். அதிலிருந்து சில பத்திகள் :

“ஷெரீப் அவர்கள் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். சினிமா உலகத்தில் தொடர்பு இருந்தும், அந்த சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு கவிஞர் கா,மு,ஷெரீப்பிடமே இருந்தது.

ஒரு கவிஞன் வறுமையிலும், செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமே நான் பயின்று கொண்டேன்.

கவிஞர் கா.மு.ஷெரீப் முஸ்லீமாக இருந்த போதிலும் ஒரு தீவிரமான சைவர். அது குறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.

கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்தமாட்டான். அது போல கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? கவிஞர் கா.மு.ஷெரீப் கறி வியாபாரம் செய்யத் தயாராக இருந்தாலும் இருப்பாரே ஒழியப் புலால் சாப்பிட ஒப்பமாட்டார்.

அவரைப் பார்த்து நானும் கொஞ்சநாள் சைவமாக இருந்தேன். ஷெரீப் புகை பிடிப்பதில்லை. மேலும் புகைப்பிடிப்பவர்களையும், அவருக்குப் பிடிக்காது என்றிருந்தேன்.

நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகைப் பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். அதனை நான் அவர் விஷயத்தில் இன்றுவரை கைக்கொண்டிருக்கிறேன்.

ஷெரீப் அவர்கள் பெரிய குடும்பஸ்தர். நிறைய குழந்தைகள். ஓர் அச்சகம் வைத்திருந்தார். அவரை நம்பி ஐந்தாறு தொழிலாளர்கள் இருந்தனர். ‘தமிழ் முழக்கம்’ என்னும் வாரப் பத்திரிக்கையும், ‘சாட்டை’ பத்திரிக்கையும் அங்குதான் கம்போஸ் ஆயின.

நாள் முழுதும் நான் கவி கா.மு.ஷெரீப்புடன் பொழுது கழித்த நாட்களில் மதியம் சிற்றுண்டியாக வேகவைத்த புளியங்கொட்டைச் சுண்டல் சாப்பிடுவோம். அது மிகவும் புரோட்டீன் சத்து உடையது என்பார் ஷெரீப். அந்தக் காலத்தில் சாப்பிட்டது தவிர, அதன் பின்னர் அவ்வளவு ருசியான அந்தச் சிற்றுண்டியைச் சாப்பிடும் சந்தர்ப்பம் இன்னும் எனக்கு வரவில்லை.

கதையோ, கட்டுரையோ எழுதித் தந்தால் ‘ரூபாய் பத்து மட்டும்’ என்று தமிழில் எழுதிய செக் ஒன்று தருவார் ஷெரீப் அவர்கள். பத்திரிக்கைக்கு எழுதிச் சன்மானம் வாங்கியது ஒரு காலத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்கள் ஒருவரிடமிருந்துதான் என்பதை நன்றியோடு எப்போதும் நினைவு கூர்கிறேன்.

“பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் “கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது” என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

“பாட்டும் நானே, பாவமும் நானே” என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

கவி. கா.மு.ஷெரீப் அவர்களின் படைப்பை விடவும், அவரது பாடல்களை விடவும், அவரையும், அவரது குணாதிசயங்களையும் நான் அதிகம் மதிக்கின்றேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக, சான்றுக்காக ஒன்றைக் குறிப்பிட்டது சர்ச்சையாகலாம் என்று தெரிந்தே அதை நான் எழுதினேன்.

– ஜெயகாந்தன்

[பத்திரிக்கையாளர் ஜே.எம்சாலி எழுதிய கலைமாமணி கவி. கா.மு.ஷெரீப் என்ற கட்டுரையிலிருந்து.]