RSS

Category Archives: சாயபு மரைக்கார்

நாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு


Sayabu

ஆருயிர்த் தமிழுக்கு காரை நகர், சாரை சாரையாய் தமிழறிஞர்களை தாரை வார்த்துக் கொடுத்துள்ள பட்டியலில் யாரை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் காரை மு.சாயபு மரைக்காயரின் பேரை மாத்திரம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

நாடகங்கள் இயற்றிய ஈடில்லா இவரது பங்கினை ஊடகங்கள் வேண்டுமானால் மறைக்க முயலலாம். இதனை நாடறிய செய்தல் நம் கடமை.

“உங்கள் பேனா, பிரபஞ்சத்தின் தூரிகை ஆகட்டும்” என சாயபு மரைக்காயரை வாயார வாழ்த்துகிறார் கவிப்பேரரசர் வைரமுத்து

காரை மு.சாயபு மரைக்காயரை ஒரு பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகம் நாடகக் கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கிஞ்சித்தும் அறிந்து வைத்திருக்கவில்லை. இயற்றமிழுக்கு இவராற்றிய பணி இன்றிமையாதது என்ற போதிலும் இக்கட்டுரையில் நாடகத்துறைக்கு அவராற்றிய பங்கை மட்டுமே அலசி ஆராய்ந்திருக்கின்றேன்.

101

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்ற தொல்காப்பியரின் பாடலிலிருந்து தொல்காப்பியனார் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாடகக் கலை தழைத்தோங்கியது என்பது வெள்ளிடமலை.

நாடகக் கலைக்கு பங்களித்தவர்கள் பிராமணர்கள் மட்டுமே என்ற ஒரு அபிப்பிராயம் மக்களிடையே பரவலாக இருக்கிறது. கோமல் சுவாமிநாதன், ஒய்.ஜி.பார்த்தசாரதி, கே.பாலச்சந்தர், பூர்ணம் விஸ்வநாதன், மெரீனா, வியட்நாம் விடு சுந்தரம், ஆர்.எஸ்.மனோகர், சோ, விசு, மெளலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர், நீலு, டெல்லி கணேஷ், கிரேஸி மோகன் என நாடகக்கலையின் பங்களிப்புக்கு இவர்கள் பெயரை மட்டும்தான் எல்லோரும் பெரும்பாலும் முன்மொழிகிறார்கள்.

102
இஸ்லாமியர்களும் நாடகத்துறைக்கு தங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

“நாடகப்பணிக்கு நாகூர்க்காரர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் பல ஆண்டுகட்கு முன்பு ஏற்கனவே ஒரு கட்டுரையை நான் வரைந்திருக்கின்றேன். குறிப்பாக, தஞ்சைத் தரணியின் ஒவ்வொரு சிற்றூருக்கும் இதுபோன்று சுவையானதொரு சரித்திரம் உண்டு. இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனையோ அறிஞர் பெருமக்களின் சிறப்புக்கள் முறையாக பதிவு செய்யப்படாததால் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போய் விட்டது. எனவேதான் இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் பெருமையை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து நான் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றேன்.

சாயபு மரைக்காயர் எண்ணற்ற தமிழ் நாடகங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.

103

“நான் யார்?”, “அப்பல்லோ 13”, “கேள்விக்குறி”, “இன்டர்வியூ” , “ஹலோ யாஹ்யா” , “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?”, “அன்னையின் ஆணை” ,“ஒத்திகை” , “தம்பி நீ வாழ்க” போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர் சாயபு மரைக்காயர்.

104

அக்காலத்தில் ஆண்கள், பெண் வேடமேற்று நடிப்பது மிகச் சிறந்த திறமையாக கருதப்பட்டது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி. சிவாஜி கணேசன் போன்றோர்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

108

 

மதுரை தியாகராசர் கல்லூரியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்து கொண்ட முத்தமிழ் விழாவில் சாயபு மரைக்காயர் பெண் வேடமேற்று நடித்து சிறந்த நடிப்பிற்கான பரிசை தட்டிச் சென்றார். மதுரை மருத்துவக் கல்லூரி நடத்திய “அனைத்துக் கல்லூரி நாடகப் போட்டி”யில் இவர் எழுதிய நாடகம் சிறந்த நாடகக் கதைக்கான முதற் பரிசை வென்றது.

இவர் கல்லூரி ஆசிரியரானதும் புதுவை தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி மாணவ மாணவியருக்காக இவர் எழுதிய நாடகங்கள் கல்லூரி ஆண்டு விழாக்களில் அரங்கேறி அனைவரது பாராட்டையும் பெற்றது.

புதுவை வானொலிக்காக சாயபு மரைக்காயர் எழுதிய “ஞானப் பேரொளி நாகூரார்” என்ற நாடகம் பின்னர் நூலாகவும் வெளிவந்து நான்கு பதிப்புகளைக் கண்டது.

1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு குழந்தை எழுத்தாளர் சங்கமும், ஏ.வி.எம்.அறக்கட்டளையும் இணைந்து நடத்திய குழந்தை இலக்கிய போட்டியில் இவர் எழுதிய “வெற்றி யாருக்கு?” என்ற நாடகம் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. புதுவை வானொலியிலும் ஒலிபரப்பட்ட இந்நாடகம் தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் நடிக்கப்பட்ட சிறப்பிற்குரியது.

சாயபு மரைக்காயர் எழுதிய “சொத்தா சொந்தமா?” “வறுமையிலும் பெருமை” “வள்ளுவர் வந்தால்” போன்ற குறுநாடகங்கள் நூல்வடிவிலும் வெளிவந்தன.

“சொத்தா சொந்தமா?” என்ற நாடகம் வரதட்சணை ஒழிப்புக்குவேண்டி எழுதப்பட்ட சமூக சீர்த்திருத்த நாடகம். “வறுமையிலும் பெருமை”ஓர் இலக்கிய நாடகமாகும். பண்டைத் தமிழ்ப் புலவர்களின் பண்பு நலத்துக்கு இந்நாடகம் ஓர் உரைகல். அதேபோன்று “வள்ளுவர் வந்தால்.” என்னும் ,நாடகம் திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் இந்த பூலோகத்திற்கு திரும்பு வந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனையில் நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்ட நாடகம்.

இந்த பன்னூலாசிரியரின் பலதரப்பட்ட திறமைகளை அறிந்தே இவருக்கு “பல்கலைச் செல்வர்” என பொருத்தமான பட்டத்தை வழங்கு இருக்கின்றனர்.

சாயபு மரைக்காயருக்கு நாடகத்துறையில் ஈடுபாடு ஏற்பட காரணமாக இருந்தவர் யாரென்று கேட்கிறீர்களா? தமிழ்ப் பல்கலைக் கழக நாடகக் களஞ்சியத் துறைத் தலைவரும் நாடகக் கலையின் வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் பாடுபட்டவரும், மரைக்காயரின் முனைவர் பட்ட ஆய்விற்கு நெறியாளராய்த் திகழ்ந்த “நாடகச் செம்மல்”, “கலைமாமணி” டாக்டர் ஏன்.என்.பெருமாள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நான் கல்வித்துரைக்கு வராதிருந்தால் ஒருவேளை நான் கலைத்துறைக்கு போயிருக்கக் கூடும் என கூறுகிறார் சாயபு மரைக்காயர். கல்லூரிப் பருவத்தில் பல்வேறு நாடகங்களீல் இவர் நடிப்பதற்கு வாய்ப்பும் பயிற்சியும் அளித்தவர் “கலைக்காவலர்” காரை சுப்பையா அவர்கள்.

“கத்துகடல் சூழ் நாகப் பட்டினத்தில்
—–காத்தானென் பானொருவன் கட்டி வைத்த
சத்திரத்தில் இடம் பெற்ரான் காள மேகம்;
—–சரித்திரத்தில் இடம் பெற்ரான் கரிகாற் சோழன்;
முத்திரையில் இடம் பெற்றான் அசோக மன்னன்;
—–முழுப்புகழுக் குரிய இவர் பெயரோ ‘கின்னஸ்’
புத்தகத்தில் இடம் பெறுதல் வேண்டும்; அந்தப்
—–பொன்னாலை நன்னாலை எதிர்ப்பார்க்கின்றேன்”

என்று பேராசிரியருக்கு புகழ்மாலை சூட்டுகிறார் உவமைக் கவிஞர் சுரதா.

மதுரத் தமிழ்மொழி புதுவை நாயகனின் அதரங்களில் முத்துக்களாய் சிதறுகையில் இதயமெலாம் பூச்சொரியும் ஆச்சரியம்.

காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவராக, பன்னூலாசிரியராக, இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராக பணி புரிந்த இவர் உலகளாவிய ரீதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவராவார். எண்ணற்ற நூல்கள் எழுதியவர். புதுவைக் கவிஞர் பாரதிதாசனின் பித்தர்,

தம்பிடிக்காக தமிழ்ப் பணி ஆற்றுபவர்களுக்கிடையில் தம்பதி சகிதம் தமிழ்த்தொண்டு புரிபவர். இவரது துணைவியார் “இலக்கியத் தென்றல்” பேராசிரியை சா.நசீமா பானு அவர்களின் சிறப்புக்களை வடிக்க தனியொரு பதிவு தேவைப்படும்.

1000

“பாரதி பட்டயம்”, “பாவேந்தர் பட்டயம்”, “பல்கலைச் செல்வர்”, “இலக்கியச் சுடர்”, “எழுத்து வேந்தர்”, “இறையருள் உரைமாலை”, “தாஜுல் கலாம்”, “சேவா ரத்னா”, “தமிழ் மாமணி”, “தமிழ்ப் பணிச் செம்மல்”, “செந்தமிழ்ப் பரிதி”, “கலைமாமணி”, “சமய நல்லிணக்க விருது” என எண்ணற்ற விருதுகள் பெற்றிருந்த போதிலும் குடத்திலிட்ட விளக்காய், சாதனைகள் நிகழ்த்திவிட்டு ஏதுமறியா சாதுவாய் போதுமென்ற மனமென வாழும் பொன்மனச் சீலர் இவர்.

“ஞானப் பேரொளி” என்றும் “ஞானச்சுடர்” என்றும் சில ஞான சூன்யங்கள் அவர்களாகவே அடைமொழியிட்டு தங்களை அழைத்துக் கொள்ளும் இக்காலத்தில், இத்தனை பட்டங்களை ஆன்றோர் சான்றோர்களால் பெற்றபின்பும் அமைதியே உருவாக ஆர்ப்பாட்டமின்றி அருந்தமிழ் பணியாற்றும் அற்புத மனிதரிவரை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை..

சாயபு மரைக்காயரைப் புகழ்ந்து சிங்கப்பூர் கவிஞர் பரணன் எழுதியிருக்கும் மரபுக்கவிதையை இங்கே நினைவு கூர்கிறேன்.

கால்கொண்ட ஆராய்ச்சி மன்றம் போலும்,
—–கைகொண்ட கடல்போலும் பொருள்கள் அள்ளி
நூல் என்று தருபவரே! வெல்லும் சொல்லின்
—–நுணுக்கத்தைக் கற்றவரே! சாய்பே! சால்பே!
பால்கொண்ட நெஞ்சுங்கள் கவிதை நெஞ்சு;
—–பாசத்தை வழங்குகையில் புதிய மஞ்சு;
ஆள்கண்டால் முகம்மட்டும் பார்க்கும் நாளில்
—–அகங்கண்டு பேசுகின்ற புலவர் நீங்கள்!

நிலம் குளிர நடப்பதனால் நதிகட் கெல்லாம்
—–நீண்ட புகழ் வரலாறாய் நிலைத்திருக்கும்;
நலம்வளர உழைப்பதனால் தொண்டர்க் கெல்லாம்
—–நன்றியுளார் தலைவரெனும் மதிப்பி ருக்கும்;
உளம்மகிழ நல்லுரைகள் தந்த தாலும்
குலமகனே! சாய்புமரைக் காயர் என்னும்
—–குளிர்நிலவே! நீ எங்கள் நெஞ்சி ருப்பாய்!

அப்துல் கையூம்