நாகூர் பல ஆளுமைகளையும் , பல்வேறு விசித்திரமான குணநலன் கொண்ட நபர்களையும் கண்டுள்ளது. எனது இளம் பிராயத்தில் இதுபோன்ற பலபேர்களைக் கண்டு வியந்துள்ளேன்.
நாகூரில் பெரும்பாலானோர் கைலி அணிந்து வீதியில் வலம் வரும் காலத்தில் ஒரே ஒருவர் மட்டும் முழங்கால் வரை அரை டிராயர் அணிந்து , ஆங்கிலேயர் போல் வாயில் பைப் வைத்து புகைத்த வண்ணம், கையில் வாக்கிங் ஸ்டிக் சகிதம் ஸ்டைலாக நடந்து வருவார். சில சமயம்அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது OPEL வாகனத்தில் அவரே ஒட்டிக்கொண்டு உலா வருவார்.
அவர் பெயர் அபுல் கலாம் ஆஸாத். பெயருக்கேற்ற மிடுக்கு. அசால்ட்டான பார்வை.’ஹாய்’யான நடை. மிகவும் கெளரவம் பார்ப்பவர். யாரிடமும் அநாவசியாமாக உரையாட மாட்டார். அளவோடு பேசுவார்.
இவர் சிங்கப்பூரில் மிகப்பெரிய கஸ்டம்ஸ் உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர். யாரோ ஒருவர் அவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தவர். லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியென சிங்கப்பூர் அரசாங்கத்திடம் நற்பெயர் பெற்றவர்.
பல காலம் சிங்கப்பூரில் பணிபுரிந்தபின் ஓய்வூதியம் பெற்று தாயகத்திற்கே திரும்பி வந்து தனது வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தவர். இளமை பருவத்தில் இந்தியாவின் முன்னாள் ராணுவ மந்திரியாகவும் பொருளாதார மந்திரியாகவும் இருந்த சி,சுப்பிரமணியனின் முகசாயலில் இருப்பார்.
தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தவர். அதே சமயம் நுனிநாக்கில் ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவர். தமிழ் மீது கொண்டிருந்த பற்றால் தன் மகனுக்கு செல்வமணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். தன் மகனுக்கு தன்னைப்போன்று நல்ல ஆங்கிலமும் கற்பிக்க வேண்டுமென ஊட்டி லவ்டேல் பகுதியிலுள்ள “தி லாரன்ஸ் கான்வெண்ட்”டுக்கு அனுப்பி வைத்தவர்.
இவரிடம் தமிழில் உரையாட வேண்டுமென்றால் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றாலும் கலப்பில்லாமலேயே பேச வேண்டும். ஆங்கிலம் பேசுகையில் தமிழ் வார்த்தையையும், தமிழில் பேசுகையில் ஆங்கில வார்த்தையையும் கலந்து பேசினால் இவருக்கு கோவம் வந்துவிடும்.
பெரும்பாலான வேளைகளில் தந்தையும் மகனுமாக கடைத்தெருவிற்கும், என் வீட்டுக்கு எதிரே இருக்கும் செய்யது பள்ளிவாயிலுக்கும் நண்பர்களைப்போல ஒன்றாக உரையாடிக் கொண்டே வருவார்கள்.
“பிள்ளை நம் தலைக்கு மேல் உயர்ந்தால் தோழன்” என்று தன் நண்பர்களிடம் சொல்வாராம்.
இவரைப் பற்றி குறிப்பிடத்தக்க வேறொரு தகவலும் உண்டு. இவர் திருமணம் முடித்தது பாரம்பர்யமிக்க எழுத்தாளர் குடும்பத்தில். இவரது மாமியார் சித்தி ஜுனைதா பேகம். தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர். புரட்சி பெண்மணி சித்தி ஜுனைதாவின் தாத்தா தென் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்த மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர்.
சித்தியின் மூத்த சகோதர் அறிஞர் அண்ணாவால் புகழப்பட்ட பன்னூல் அறிஞர் ஹூசைன் முனவ்வர் பெய்க். இன்னொரு சகோதரர் முஜீன் பெய்க் “பால்யன்” பத்திரிக்கை ஆசிரியர். இக்குடும்பத்தில் பிறந்த எத்தனையோ தமிழறிஞர்கள் உண்டு. வண்ணக் களஞ்சிய புலவர் வழிவந்த சித்தி அவர்களின் குடும்பத்திற்கு கவிஞர் நாகூர் சலீம், பன்னூலாசிரியர் நாகூர் ரூமி, திரைப்பட எழுத்தாளர் தூயவன் ஆகியோருக்கு நெருங்கிய உறவுமுறை உண்டு
இது அபுல் கலாம் ஆசாத் அவர்களைப் பற்றிய பதிவு என்பதால் மற்ற விடயங்களை நான் விவரமாக குறிப்பிடவில்லை.
#அப்துல்கையூம்