RSS

Category Archives: நாகூர் சலீம்

நாகூர் சலீமும் அந்தாதியும்


ஒரு சொல்லின் முடிவெழுத்து ஒரு சொல்லின் தொடக்கமாக வருவது ‘அந்தாதி. அந்தம் + ஆதி என்பதன் கூட்டெழுத்தே இந்த அந்தாதி. அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்

அந்தாதி என்ற வகையானது ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசை, சொல், அடி இவற்றுள் ஒன்றோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாவதாக வரும்படி அமைத்துப் பாடுவது. இது எளிமையான வடிவம் அல்ல. கவியாற்றலும் மிகுந்த சொல்லாற்றலும் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய கவித்துவமான பாடல்களை புனைய முடியும்.

சிற்றிலக்கியங்களுள் அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி முதலிய அந்தாதிகள் உள்ளன. இவையன்றி கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி இப்படி ஏராளம்.

தான் பயின்ற இலக்கியக் கருத்துக்களை தன்னுள் மாத்திரம் அசைபோட்டு சுவைக்காமல், அதனை பிறரும் அனுபவிக்க வேண்டுமென திரைப்படங்களிலும் எளிமையாக்கித் தந்த கவியரசர் கண்ணதாசனை எல்லோரும் அறிவார்கள். ஜனரஞ்சக சினிமாவில் இத்தகைய இலக்கண யுக்தியை கையாண்ட அவரைப் புகழாத மாந்தர்களே கிடையாது.

பழந்தமிழ் இலக்கியத்தில் காணும் இலக்கண வடிவங்களை இஸ்லாமியப் பாடல்களிலும் புகுத்தி புதுமை கண்ட ‘கலைமாமணி’ நாகூர் கவிஞர் சலீமை இதுபோன்ற திறமைக்காக யாரும் இதுவரை அவரை கண்டுக் கொள்ளாதது வருத்தம் தருகிறது.

இஸ்லாமியப் பாடல்களில் இலக்கியச் சுவையா? இது என்ன புது உருட்டாக இருக்கிறது என்று யாரும் எண்ணக்கூடும், என்னை சாடக் கூடும்.

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி.

‘செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே’ என்று தண்டியலங்காரமும்,
‘அந்தம் முதலாத் தொகுப்பது அந்தாதி’ என்று யாப்பருங்காலக்காரிகையும் இலக்கண சாத்திரம் வரையறுக்கின்றது..

‘முப்பது உடனெடுத்து மூங்கில் இலைமேலே
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரை
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’

என்ற நாட்டுப்புறப்பாடல் அத்தகைய அந்தாதிப் பாடலுக்கு உட்பட்டது.

சைவம், வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய எல்லா சமயத்து புலவர்களும் அந்தாதிப் பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களை இலக்கிய கர்த்தாக்களாக போற்றுகின்றனர்.

1976-ஆம் ஆண்டு கமல் ஹாஸன் & ரஜினிகாந்த் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்திற்கு கண்ணதாசனிடம் கே.பாலச்சந்தர் பாட்டெழுத கேட்டபோது மனுஷர் செம இலக்கிய மூடில் இருந்தார் போலிருக்கு. அதில் இடம் பெற்ற இரண்டு பாடல்களையும் அந்தாதியிலேயே எழுதி கொடுத்துவிட்டார்.

வரியின் முடிவில் எந்த வார்த்தையோடு முடித்தாரோ, அதே வார்த்தை அடுத்த வரியின் தொடக்கமாக அமைவதுபோல் எழுதி கொடுத்து விட்டார்.

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்

மனுஷனுக்கு மண்டையெல்லாம் மூளையிருக்கும் போலிருக்கு. இந்த ஒரு பாட்டு மட்டுமல்ல. எழுதிக் கொடுத்த இன்னொரு பாடலும் அந்தாதிதான்.

ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
என்ன ஒரு அபாரமான திறமை இந்த கண்ணதாசனுக்கு. திரையிசைப் பாடல்களில் இலக்கியத்தை கொண்டு வந்ததற்கு கண்ணதாசன் வெகுவாக பாராட்டப் பட்டார். அவருடைய இலக்கிய ஆர்வத்தை எல்லொரும் போற்றிப் புகழ்ந்தனர்.

இப்போது நாகூர் சலீமுக்கு வருவோம்.

‘நாகூர் ஹனிபா பாடும் ஜனரஞ்சக ஆன்மீக பாடலில் இலக்கியச் சுவை என்ன வேண்டிக் கிடக்கு?’ என்று யாராவது கேள்வி கேட்கக் கூடும், ஜனரஞ்சகத்திலும் ஆன்மீகத்திலும் இலக்கியத்தைப் புகுத்துவதுதான் திறன் வாய்ந்த கவிஞனுக்கு அழகு,

1976-ஆம் ஆண்டு ‘மூன்று முடிச்சு’ படம் வருவதற்கு முன்னரே நாகூர் சலீம் நாகூர் ஹனிபாவுக்கு எழுதிக் கொடுத்த பாடலில் இந்த இலக்கியச் சுவை அனுபவிக்க வேண்டி அந்தாதி இலக்கணத்தை கடைப்பிடித்து பாடல் எழுதி இருக்கிறார். இதுவும் ஒரு இலக்கியப் புரட்சிதானே? இதோ அந்த அந்தாதி பாடல் :

திருமறையின் அருள்மொழியில் விளைந்திருப்பது என்ன? – அறிவு.
இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? – அன்பு.

அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? -ஞானம்
அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன?
மௌனம் அது மௌனம்.

உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? – உள்ளம்.
அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? – உண்மை
உண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? – பொறுமை
அந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன?
கடமை ஐந்து கடமை

ஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? – கலிமா
அந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? – தொழுகை
தொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? – நோன்பு
நோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? – ஜக்காத்து
அந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன?
ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஒரு நெய்ச்சோறு போதுமென நினைக்கிறேன்

நாகூர்அப்துல்கையூம்

 

நாகூர் சலீமின் திரைப்படப் பாடல்


 

நாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் சலீம்


சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆண்டு ‘இசைமுரசு’ பாடல்களைப் பாடியது எனக்குப் பல இந்திய ரசிகர்களை ஈட்டிக்கொடுத்தது.

“சென்னை அதிர்ந்தது” என்று என்னைத் தழுவி உளமார பாராட்டியவர்களில் ஒருவர் பிரபல வர்த்தகர், கலைப் பித்தர் காயல் ஷேக்னா.

தமிழகத்தின் தலை சிறந்த மாபெரும் கவிஞரை காயல் ஷேக்னா அறிமுகம் செய்து வைத்தார்.

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்!

பிறப்பு 1936 பெப்ரவரி 21. பொருளாதார வளமுடைய கவிஞராக விளங்குகிறார்.

நாகூரிலும் பாப்பாவூரிலும் பாட கவிஞர் சலீம் என்னை அழைத்தார்.

‘கித்ராத்’ இசைக்கலைஞர் மொஹமட் ஸியாட் சகிதம் நாகூர் போய்ச் சேர்ந்தேன்.

மகத்தான வரவேற்பு: நா ஊறும் பகல் விருந்து முதல் சந்திப்பிலேயே நாகூர் சலீம் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

சங்கீதக் குயில் எஸ். சரளா இங்கிதக் கவிஞர் சலீம் வீட்டில் நிகழ்ச்சிக்காகத் தங்கியிருந்தார்.

சரளாவின் குரலினிமை இன்றும் மாறாமல் இத்தனை வயதிலும் தித்திக்கின்றதே…….

கடலுக்கே உப்பா? நாகூரில் பாடகி சரளாவுடன் இணைந்து ‘இசைமுரசு’வின் பாடல்களைப் பாடினேன்.

“நாகூர் ஹனிபா – காயல் ஷேக் முஹம்மதுவுக்குப் பிறகு உச்ச ஸ்தாயியில் பாடல் கேட்கிறேன்” என்று உளமார பாராட்டினார் பாவலர் சலீம். எனது குரல் இறைவன் தந்த அருள் என்றேன்.

காரைக்கால் தாவூத், நாகூர் இ.எம். ஹனிபா, சங்கநாதச் செம்மல் காயல் ஷேக் முஹம்மது, நெல்லை எஸ்.எம். அபுல்பரகாத் உட்பட நூற்றி எழுபத்து ஐந்து பாடகர்களுக்குப் பாடல் இயற்றிய பெருமை நாகூர் சலீமுக்கு உண்டு.

அதிகமான பாடகர்களுக்கும், பெரும் எண்ணிக்கையான பாடல்களையும் எழுதி யுள்ள கவிஞர் சலீம் தமிழ்த் திரை உலகில் முறையாக உள்வாங்கப்பட்டிருந்தால, இன்னுமொரு கண்ணதாசனை இனங்கண் டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

நீங்கள் இயற்றிப் பிரபலமான பாடல்கள் எவை? நாகூர் சலீம் வரிசையாய் வழங்கியதில் கவிப் பானைச் சோற்றிலிருந்து சில மணி பதமாக….

“அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே” பாடியவர்: இ.எம். ஹனிபா

“அல்லாஹ்வின் பாதையிலே வாருங்கள், அண்ணல் நபி சொன்னபடி வாழுங்கள்” பாடியவர்: ஷேக் முஹம்மது.

ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை – ஷேக்முஹம்மது.

“எல்லாமே நீதான் வல்லோனே அல்லாஹ்” – எஸ். சரளா

“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.” – இசைமுரசு

“வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி

வழங்கிய நெறிகளிலே

வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்

வாய் மலர் மொழிகளிலே” – இசைமுரசு – கே. ராணி

“நபிநாதர் வாசலுக்குச் செல்லப்போறேன் – இங்கே நடக்கிற கொடுமைகளைச் சொல்லப்போறேன்”

ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக! – ஷேக் முஹம்மது.

இன்று வந்து நாளை போகும் நிலையிலே நிலையிலே என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே…. உலகிலே – இசைமுரசு

தீனோரே ஞாயமா? மாறலாமா? தூதர் நபி போதனையை மீறலாமா? உள்ளம் சோரலாமா? இசைமுரசு – கே. ராணி.

“மக்கா யாத்திரை மறுமை யாத்திரை இரண்டும் ஒன்றேதான்…”

“கப்பலுக்கு போன மச்சான்

கண்ணிறைஞ்ச ஆச மச்சான்

எப்பதான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் – நான்

இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்” – ஷேக் முஹம்மது

ஜனரஞ்சகமான பாடல்களின் நாயகனை, நாகூரில், சந்தித்த சந்தோஷ பூரிப்பில் புறப்படுகிறேன் ‘இசைமுரசு’ இல்லம் நோக்கி…..!

கலைக்கமல்

Source

1. தொடர்புடைய சுட்டி 

2. தொடர்புடைய சுட்டி

3. தொடர்புடைய சுட்டி

 

அண்ணாவை நெகிழ வைத்த நாகூர் சலீம்


 

Night & Day


PagalIravu

கலைமாமணி நாகூர் சலீமின் பாடல்களைக் கேட்க :

ஆடியோ இசை

கப்பலுக்கு போன மச்சான் / Lyrics

 

இறைவனும் இருட்டும்


saleem

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவன் நான். அவரது பாடல்களில் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களை காண முடியும். நாகூர் ஈன்றெடுத்த நற்றமிழ்க் கவிஞர்களில் அவரும் ஒருவர். 

“நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்
நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம்”

என்ற உணர்ச்சி பூர்வமான வரிகளை கேட்கையில் மரண பயம் நம்மைக் கவ்விக் கொள்ளும்.

“பூவிருக்கும் மேனி
புழுக்களின் தீனி
புரிந்தவன் ஞானி
புத்தி பெறுவாய் நீ”

என்ற இரண்டிரண்டு வார்த்தை வரிகளில் “வீதி வரை உறவு” என்ற  கவியரசு கண்ணதாசன் பாடலில் காணப்படும் அதே தத்துவார்த்த கருத்துக்களை நாம் உளமார உணர முடியும். (பாடல் வரிகளை நினைவில் இருந்ததை வைத்து இதை எழுதுகிறேன்)

“அந்த ஒரு தூக்கத்துக்கு
ஆளாகும் முன்னே
இந்த ஒரு தூக்கத்திலும்
என்ன சுகம் கண்ணே?”

என்ற வரிகள் பக்குவமடைந்த ஒரு தத்துவவாதியின் பண்பட்ட சிந்தனைகள். 

“But I have Promises to keep
Miles to go before I sleep
Miles to go before I sleep”

என்ற ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளை எனக்கு அது நினைவுறுத்தும். அந்த ஒரு “தூக்கம்” நம்மைத் தழுவுவதற்கு முன்பு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆழ்ந்த சிந்தனை மிகுந்த அற்புதமான பாடல் அது.

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மற்றொரு பாடலில் ஏனோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை.

உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!
உண்மைதானே சொல்லுங்கள்?

என்று அவர் எழுதி, காயல் ஷேக் முகம்மது அவர்கள் பாடிய உச்ச ஸ்தாயி பாடலின் இனிமை நம் காதுகளில் தேனாகப் பாயும். அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இதன் உள்ளர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. பாடலின் இசையில் லயித்ததோடு சரி. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கையில் இந்த பாடலில் உள்ள கருத்துக்களோடு  என்னால் அறவே ஒத்துப் போக முடியவில்லை. “உலக முஸ்லீம்களே!” என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. “உண்மைதானே சொல்லுங்கள்?” என்று நம்மையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்பதால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு ஏற்படுகிறது.

பாடலின் அடித்த அடி :

இறைவனை யாருக்குத் தெரியும் – நபி
இரசூல் இல்லை யென்றால்
நபியை யாருக்குப் புரியும் – வல்ல
நாயன் இல்லையென்றால்!

இஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்னும் தவறான கருத்து மேலை நாட்டவரிடம் குடி கொண்டுள்ளது. எனவேதான் நம்மை “Mohammadans” என்று கூறும் அவர்களிடம் நாங்கள் “முஸ்லீம்கள்” என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நபிமார்களை இறைவன் இந்த அவனிக்கு அனுப்பி வைத்ததை நாம் அறிகிறோம். இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்திருக்கிறது. அத்தனை தூதர்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் போதித்து வந்திருக்கின்றனர்.
ஆகையால் மேற்கூறிய நாலு வரிகளில் முதல் இரண்டு வரிகள் சற்றும் பொருந்தவில்லை. அடுத்த வரிகள் இப்படியாகத் தொடர்கிறது :

ஆயிரமாயிரம் தூதர்கள் வந்தார்
ஆண்டவனை யார் காட்டிவைத்தார்?
ஓயாதுழைத்த உயர்நபி யன்றோ
ஓரிறைக் கொள்கையை நாட்டிவைத்தார்!
வேதம் கொடுத்தான் இறைவன்! – செயல்
விளக்கம் கொடுத்தார் நபிகள்!

நபி ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்தினார்கள். அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே ஆண்டவனை அடையாளம் காட்டினார்கள் என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.

(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது.

எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதாணத்தை நபிமொழி கூறுகிறது.

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம். குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது.

கவிஞரின் முடிவுரை மீண்டும் முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது.

இருட்டில் இருந்தான் இறைவன் – நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் – அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!
காவியம் வடித்தான் இறைவன் – அதன்
கருவாய் அமைந்தார் நபிகள்!

நபிகள் நாயகத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைமாமணி அவர்கள் ஒளிபொருந்திய அந்த மூலவனை இருட்டில் அடைத்து விட்டாரோ?

– அப்துல் கையூம்

 

சிராஜுல் மில்லத்


e0ae85e0ae95e0aebee0ae85e0aeaae0af8de0aea4e0af81e0aeb2e0af8d-e0ae9ae0aeaee0aea4e0af81

சிறகில்லாமல் பறந்து போன
சிராஜுல் மில்லத் செம்மலே!
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக
அன்பை வழங்கிய வள்ளலே!
கபருஸ்தானில் மறைந்தபோதிலும்
கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே – நம்
கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்-

கவிஞர் நாகூர் சலீம்