RSS

Category Archives: வேடிக்கை உலகம்

“லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா”


நாகூர் போன்ற கடலோரம் வாழும் முஸ்லீம்களுக்கிடையே இந்த பழமொழி அன்றாடச் சொல்வழக்கில் உள்ளது. பெரும்பாலோனோருக்கு இச் சொற்பதம் எந்த தருணத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும். ஆனால் இதன் உள்ளர்த்தம் என்ன? எதனால் இப்பழமொழி வழக்கத்திற்கு வந்தது என்ற விவரம் தெரிந்திருக்க நியாயமில்லை.

“முந்திரிக்கொட்டை” அல்லது “அதிகப்பிரசங்கி” என்று நாம் சாதாரணமாக வருணிக்கப்படும் ஒருவரைத்தான் இந்த பழமொழியை பயன்படுத்தி ‘பாசத்தோடு'(?) அழைக்கிறார்கள்.

“மீறுபல்” என்ற சொற்பதம் இங்கு வழக்கில் உள்ளது. பீர்பல் தெரியும். அது என்ன மீறுபல்? வரிசையாக இருக்கும் பற்களுக்கு நடுவே சிலருக்கு சிங்கப்பல் ஒன்று முளைக்கும்.
கோரப்பல் எனப்படும் canine teeth – அதைத்தான் நாம் சிங்கப்பல் என்கிறோம். இந்த பல்லைத்தான் “மீறுபல்” என்ற பொருத்தமான இலக்கியத் தமிழில் இங்கு விளிக்கிறார்கள்.
சிங்கப்பல் சிலருக்கு அழகும் சேர்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 70-களில் இந்திப்பட உலகில் பிரபலமாக இருந்த மெளஷ்மி சட்டர்ஜி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

சான்றோர் சபையில் அர்த்தமுள்ள விவாதம் புரிகையில் யாராவது ஒருவர் அர்த்தமற்ற முறையில் அதிகப்பிரசங்கியாக ஒரு கருத்தினை எடுத்துரைப்பார். அல்லது நாம் ஒன்று
சொல்லி முடிப்பதற்கு முன்னரே அதை முழுதும் புரிந்துக்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக ஏதாவது உளறுவார். அப்படிப்பட்டவரை “லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” என்று சாடுவது வழக்கம்.

“லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” – இப்பழமொழியின் விரிவாக்கத்தை இப்போது நாம் காண்போம். “லெப்பை” என்ற வார்த்தை மருவி நாளடைவில் “லெவ்வை” என்று ஆகி
விட்டது. “மிஞ்சிய” என்ற பதம் “மீறிய” என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது. “குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்” என்று சொல்வதைப் போல. இன்னும் சொல்லப்போனால் “ஹராம்ஜாதா” என்ற பதம் மிகவும் அருவருக்கத்தக்கது. ஆங்கிலத்தில் அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமெனில் “Bastard” என்று சொல்ல வேண்டும். இந்த ஆங்கில வார்த்தையை
பயன்படுத்தினால் ‘வெட்டுக்குத்து’ நடக்கும். புரியாத மொழியில் சொல்வதினால் யாரும் ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்வதில்லை. “ஹராத்தில் பிறந்தவன்” “தவறான வழியில்
பிறந்தவன்” என்று இதற்கு பொருள் கொள்ளலாம். அதிகப்பிரசங்கித்தனமாக பேசிய ஒரே காரணத்திற்காக ஒருவரை இப்படிப்பட்ட பதத்தில் சாடி இழிவு படுத்துவது முறைதானா?
யோசித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.

(நல்ல வார்த்தைகளையே உரைக்க வேண்டும் என்ற நோக்கில் “நாசமத்துப் போ” என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழில் சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய
கட்டுரையை மீண்டும் “கடலோரம்” என்ற வலைப்பதிவில் ஒரு வாசக அன்பர் மீள்பதிவு செய்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்கு)

லெப்பை என்பவர் யார்? வர்த்தக சமூகத்தை சார்ந்தவர்கள் இவர்கள். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாட்டிலிருந்து சோழமண்டலம் மற்றும் கடற்கரையோர பகுதியில் வந்து

குடியேறியவர்கள். லெப்பைக் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் லெப்பை. லெப்பைக் என்றால் அரபு மொழியில் “:இதோ வந்துவிட்டேன்” என்று பொருள்.

“லெப்பைக், அல்லாஹும்ம லெப்பைக். லெப்பைக், லாஷரீக்கலக லெப்பைக்” என்ற வாக்கியத்தின் முதற்சொல்.

மக்கமா நகரத்தில், இறையில்ல வழிபாட்டின்போது. “இறைவா! உன் நாட்டப்படி இதோ நான் உன் இல்லத்தை தேடி வந்து விட்டேன்” என்று புனித யாத்ரீகர்கள் எழுப்பும் கோஷத்தின் சாராம்சம்.

பள்ளி வகுப்பில் வாத்தியார் வருகைப்பதிவு (Attendance) எடுப்பார். ஒவ்வொரு பெயராக அவர் வாசிக்கையில் மாணவர் எழுந்து நின்று “உள்ளேன் ஐயா” என்றோ “Present Sir” என்றோ உரக்கச் சொல்வார்கள்.

இறையில்ல சன்னிதானத்தில் “இதோ நான் வந்து விட்டேன்” என்று கொடுக்கப்படும் வருகைப்பதிவுதான் “லெப்பைக்” என்ற தல்பியா.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் லெப்பை என்ற கருத்து பொதுவாகவே நிலவுகிறது. அது தவறு. வேலூர், மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களும் லெப்பை என்று அழைக்கப்படுகிறார்கள். அதற்கு மாறாக கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் போன்ற கடலோரப்  பகுதிகளில் வாழும் லெப்பைமார்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

லெப்பைமார்களில் ஒருசாரார் அரேபியா, எமன், ஈரான் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், இன்னொரு சாரார் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்
என்றும் சரித்திரம் சான்று பகர்கிறது.

லெப்பை என்றதும் என் நினைவுக்கு முதலில் வருவது, முதல் தமிழ் நாவலான “அசன்பே சரித்திரம்” எழுதிய பத்திரிக்கையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளருமான
மு.கா.சித்திலெப்பை. அடுத்து உமர்கய்யாமின் “ரூபாய்யாத்” கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்த அப்துல் காதர் லெப்பை. அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
அப்துல் காதிறு நெய்னா லெப்பை என்ற ஆலிம் புலவர்,

மேலும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் “கருத்த லெப்பை” நாவலில் வரும் கதாபாத்திரம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த “லெப்பைக் குடிகாடு” என்ற ஊரின் கதை நம் பதிவுக்கு மேலும் சுவையூட்டும்.
தஞ்சை மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த ராவுத்தர்மார்கள் கூடியேறிய இவ்வூருக்கு ஏன் லெப்பைக்குடிகாடு என்ற பெயர் வந்தது என்று நம்மை மூளையைக் கசக்க வைக்கிறது. ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லெப்பைகுடிக்காடு என பெயர் சூட்டினராம்.

லெப்பைமார்கள் என்றாலே பாத்திஹா ஓதும் மவ்லவி, ஹஸ்ரத்மார்களை குறிக்கும் வண்ணம் தவறான ஒரு கருத்தை சில மார்க்க இயக்கங்கள் பரப்பி வருவது வருத்தத்திற்குரியது. அரபு மொழியை கற்றுத்தரும் ஆசான் பணிகளை லெப்பைமார்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது உண்மை.

“லெவ்வெக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” என்ற இந்த பழமொழி வழக்குத்தமிழில் வந்த காரணத்தை இப்போது ஆராய்வோம்.

ஒரு ஊரில் ஒரு லெப்பை இருந்தாராம். மாணவர்களுக்கு அரபுமொழி கற்றுக் கொடுப்பது அவரது ஆசிரியப் பணியாக இருந்தது. லெப்பை அவர்கள் அரபு மொழி அட்சரமான முதல்
எழுத்தை “அலீப்” என்று உரக்கச் சொல்லிக் கொடுப்பார். மாணவர்கள் அவரைத் தொடர்ந்து “அலீப்” என்று உரக்க வழிமொழிவார்கள். அடுத்து “பே” என்று சொல்ல, அடுத்து “தே” என்று
சொல்ல, ஆசானை அதுபோலவே மாணவர்கள் பின் தொடருவார்கள்.

இப்படிப்பட்ட மாணவர்களுக்கிடையே ஒரு “மீறுபல்லு” மணவன் ஒருவன் இருந்தான். ஆசான் “அலீப்” என்று சொல்லிக்கொடுக்க இவன் அதிகப்பிரசங்கியாக “பே” என்ற அடுத்த
அட்சரத்தை உச்சரிப்பான். இதுவே அந்த ‘முந்திரிக்கொட்டை’ மாணவனின் வழக்கமாக இருந்தது

இவனைத்தான் அந்த “லெவைக்கி மிஞ்சிய “ஹராம்ஜாதாவாக” உருவகப்படுத்த, இன்று நம் எல்லோர் வாயிலும் இந்த பழமொழி படாதபாடு படுகிறது.

இந்த மூன்று வார்த்தை பழமொழிக்கு இப்படியொரு மூச்சு முட்டும் விளக்கமா என்று வாசகர்கள் பெருமூச்சு விடுவதை என்னால் உணர முடிகிறது.

என்ன செய்வது? இனிமேலாவது இதுபோன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை நாம் தவிர்க்கப் பழகுவதே இப்பதிவின் நோக்கமேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!.

லெப்பைமார்களுக்கு மட்டும்தான் பழமொழியா மற்றவர்களுக்கு கிடையாதா என்ற கேள்வி எழலாம். இதோ ராவுத்தர்களுக்காக ஒரு பழமொழி. “ராவுத்தரே கொக்கா பறக்கிறாராம்.
குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்”.

– அப்துல் கையூம்

 

Tags: ,

காந்திஜியின் நாகூர் விசிட்


(கட்டுரையை படிக்க கிளிக் இங்கே )

 

பழையன கழிதலும் புதியன புகுதலும்


(Click on Photo to view Full Image)

கீழேயுள்ள புகைப்படம் நாகூர் புகைவண்டி நிலையத்தின் புதிய முகப்பு. நாகூர் நண்பர் ஒருவரின் வலைப்பூவிலிருந்து பெற்றது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி என்கிறார்கள்.

மேலேயுள்ள புகைப்படங்கள் இரண்டும் ஒரு கால்நூற்றாண்டுக்கு முன் நான் எடுத்தது.

 Old is Gold என்றார்களே, அது உண்மைதானோ?

 

நாகூர் – ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு


கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் 72-ஆம் பிறந்த நாள் விழாவின்போது, சிலம்புச் செல்வர் மா.பொ.சி.அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் :

“காயிதே மில்லத் வாழும் நாட்டில், அவர்களின் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்.”

“இந்தப் பாரதத் திருநாட்டிலே, ராஜாஜிக்கு அடுத்த நிலையிலே இருக்க வேண்டியவர், வைத்து பாராட்டத்தக்கவர் நம்முடைய காயிதேமில்லத் ஆவார்கள்”

“ஒரிஸ்ஸா, மகாரஷ்டிரம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட காணமுடியாத ஒற்றுமையைத் தமிழ்நாட்டுமக்கள் வேறுபாடின்றிக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக நாகூர் விளங்குகிறது! காயிதே மில்லத் விளங்குகிறார்கள்!”

தொடர்புடைய சுட்டி : யுக பாரதி – சமயத்திற்கப்பால்

 

சீதேவி


சீதேவி (ஸ்ரீதேவி), நடிகர் அனில் கபூரின் சகோதரர் போனிகபூரை மணந்துக் கொண்டு வடநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த அவரை தமிழ்நாடு சுத்தமாக மறந்தே போய் விட்டது.

ஆனால் நாகூர்க்காரர்கள் மட்டும் மூச்சுக்கு முந்நூறு தரம் “சீதேவி சீதேவி” என்று உச்சரித்து நாள்தோறும் அவரை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“நல்லா இருங்க சீதேவி”, “அஹ, சீதேவி மனுசரு”, “சொல்லுங்க சீதேவி” என்ற வார்த்தைகள் நாகூர்க்காரர்களின் வாயிலிருந்து சர்வ சாதாரணமாக புறப்படும்.

“வலிய வர்ற சீதேவியெ ஏன் நாச்சியா வாணான்னு சொல்லுறீஹ?” – தாய்க்குலங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் உரையாடல் இது.

தமிழில் ஆண்களைக் குறிப்பதற்கும், பெண்களைக் குறிப்பதற்கும், வெவ்வேறு சொற்பதங்கள் தனித்தனியே இருக்கிறன. ஆனால் நாகூரைப் பொறுத்தவரை “சீதேவி” என்ற வார்த்தை UNISEX. ஆண்பாலர், பெண்பாலர் இருவரையுமே குறிக்கும் சொல். வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

பெண்பாலுக்கு “தேவி” என்றால் ஆண்பாலுக்கு “தேவா” என்றுதானே அழைக்க வேண்டும்? ‘சரோஜா தேவி’ என்றால் பெண், ‘பிரபு தேவா’ என்றால் ஆண் என்று பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே கூறி விடலாமே!

இலக்கணப்படி பேசுவதாக நினைத்துக் கொண்டு  “வாங்க சீதேவா” என்று நாகூரில் வாய்மலர்ந்தால் நமக்கு பித்துக்குளி பட்டம் சூட்டி பாப்பாவூருக்கு சங்கிலியோடு அனுப்பி விடுவார்கள்.

சீதேவி (ஸ்ரீதேவி) இந்துக்களின் தெய்வம். ஆம். திருமாலின் மனைவி. முப்பெரும் தேவிகளான திருமகள், மலைமகள், கலைமகள் இவற்றுள் ஒருவர்தான் சீதேவி.

திருமகள், லட்சுமி, இலக்குமி, இப்பெயர்கள் யாவும்  சீதேவியையே குறிக்கும். சீதேவி என்றால் ஐஸ்வரியம். செல்வத்தை தருபவள் சீதேவி.

லட்சுமி கடாட்சம் உள்ளவருக்கு அதாவது பரக்கத்தான மனுஷருக்கு ‘சீதேவி மனுஷர்’ என்று அடைமொழி தருவதாகவே வைத்துக் கொள்வோம்.

சீதேவியின் லாத்தா (அக்கா) யார் தெரியுமா? அவரும் நமக்கு பழக்கப்பட்ட பெயர்தான். அவர் பெயர் மூதேவி. அடிக்கடி அப் பெயரைச் சொல்லி தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வசைபாடுவது வாடிக்கையான ஒன்று. பெற்ற பிள்ளை நேரத்தொடு வீடு வந்து சேராமல் போனால் “மூதேவி! எங்கே போயி தொலைஞ்சிச்சோ தெரியலியே!” என்று பாட்டம் விடுவார்கள்.

சீதேவியின் மூத்த அக்காள் மூதேவி என்பதால் மூத்த தேவி என்ற சொற்பதம் மருவி மூதேவி என்று சுருங்கி விட்டது.

ஜேஷ்டாதேவி (ஜேஷ்டா என்றாள் மூத்தவள்)  என அழைக்கப்படும் இந்துக்களின் தெய்வம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாக காணப்படும். மூதேவிக்கு மற்றொரு பெயர்தான் இந்த ஜேஷ்டாதேவி.

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலை நாலாம் வகுப்பில் சரவணா சார் என்னை வற்புறுத்தி மனனம் செய்ய வைத்தது இப்போது இதற்கு பயன்படுகிறது.

சீதேவி, மூதேவி எனும் தொன்மம்/ Concept இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்று ஐயன் கூறுகிறார். இதன் பொருள் : சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

ஒருமுறை சீதேவிக்கும் அவளது அக்கா மூதேவிக்கும் இடையே “யார் அழகி?” என்ற விவாதம் முற்றிப் போய் மன்னன் விக்கிரமாதித்தனிடம் இவ்வழக்கு வந்திருக்கிறது. இருவர் மனமும் நோகாதவாறு ஒரு தீர்ப்பை அவன் கூறினானாம்.

“மூதேவி போகும் போது அழகு. சீதேவி வரும் போது அழகு. ஆகமொத்தம் இருவருமே அழகுதான்” என்று ‘ஐஸ்’ வைத்து இருவரையுமே அனுப்பி விட்டான். பிழைக்கத் தெரிந்த மன்னன்.

ஒரு குறிப்பிட்ட சாராரின் தெய்வத்தின் பெயர், இன்னொரு சாரார் அன்றாட உபயோகிக்கும் வார்த்தையில் ஐக்கியமானது எப்படி என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நாகூர் சுற்று வட்டார முஸ்லீம்களின் வீட்டுத் திருமணங்களில் கலந்துவிட்ட “பாப்பாரக் கோலம்” போன்று இதுவும் நம் அன்றாட உபயோகிக்கும் வார்த்தையில் இரண்டறக் கலந்து விட்டதோ?

‘நாலாம் நீர்’ சடங்கின்போது மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு, கையில் டம்பப்பையையும், (மந்திரக்?)கோலையும் ஏந்திக்கொண்டு “சீதேவி போடுங்கம்மா” என்று கூற, உறவினர்கள் பவுன்காசு போடுவதும் இப்படி வந்த கலாச்சார வழக்கம்தானோ?

சீதேவிகள்தான் விடை கூற வேண்டும்!

 

சகபயணி அமைவதெல்லாம் .. .. ..


“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று சொல்லுவதைப் போல பஸ்ஸிலோ, விமானத்திலோ பிரயாணம் செய்யும் போது நமக்கு பக்கத்தில் உட்காரப் போவது யார் என்பதை நிர்ணயிப்பது நாம் செய்த புண்ணியம்தான் என்று நினைக்கிறேன்.

ஒல்லியான மனிதர் நம் பக்கத்துச் சீட்டு ஆசாமியாக வாய்த்து விட்டால் அது நாம் செய்த புண்ணியம். துரதிர்ஷ்டவசமாக நுஸ்ரத் பதே அலிகான் அல்லது (பழைய உருவம் ) அத்னான் சாமி மாதிரி ஆசாமிகள் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ அதோ கதிதான்.

ஒரு சமயம் ஊரில், பஸ்ஸில் கைப்பிடி இல்லாத இரட்டை இருக்கையில் தடிமனான ஆசாமியோடு நான் உட்காரப் போக, லெதர் சீட்டிலிருந்து வழுக்கி, வழுக்கி பலமுறை கீழே விழுந்து முட்டியை உரசிக் கொண்டது நன்றாக நினைவிருக்கிறது.

அண்மையில் என் உடன்பிறவாத் தங்கை, எமர்ஜென்ஸியாக தாயகம் போய் வர நேர்ந்தது. துணையின்றி தனியாக விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்ததால், கால் வைக்க விஸ்தாரமான, வசதியான இருக்கை கொண்ட, Emergency Exit-யை ஒட்டி இருக்கும் இருக்கையை, Boarding Pass வாங்கும்போது வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவான அவரது கணவர். போராடிப் பெற்ற பிறகு அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. காலரை வேறு தூக்கி விட்டுக் கொண்டாராம். பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

பாவம் அவரது கணிப்பு இப்படி ‘உல்டா’வாகும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ‘புள்ளையார் புடிக்க குரங்கான கதை’தான்.

இவர் நினைத்ததைப் போலவே இன்னொரு ஓவர்வெயிட் ஆசாமி வசதியான இருக்கை வேண்டும் என்று மன்றாடி பெற, அவருக்கு வந்து வாய்த்ததோ நம் கதை ஹீரோயினின் பக்கத்து இருக்கை.

ஆசாமி குண்டு என்றால் குண்டு அப்படியொரு குண்டு. சாயம் போகாத கியாரண்டி கொண்ட கறுப்பு நிறம் வேறு. வந்து படக்கென்று உட்கார்ந்த போதே இருக்கை சற்று குடைச் சாய்ந்தது போலிருந்ததாம்.

ஊரிலே குதிரை வண்டியில் ஏறிப் போகையில் ‘பின்பாரம் அதிகமா இருக்கும்மா. முன்பாரம் வேணும். கொஞ்சம் முன்னாடி தள்ளி வாங்கம்மா” என்று குதிரை வண்டிக்காரன் ஆழி எச்சரிக்கை விடுப்பான். 

இங்கே பிளேனில் முன்பாரம், பின்பாரம் என்று யாரிடம் போய் சொல்லுவது? கை வைப்பதற்காக இருப்பதோ ஒண்ணரை அல்லது இரண்டு இஞ்ச் Hand Rest கைப்பிடி. அதில் ஹாயாக இந்த ஆசாமி தன் 30 கிலோ கையை வைத்து ஆக்கிரமிக்க, இந்தப் பெண்மணி கடுங்குளிரில் அடிப்பட்ட  பூனைக்குட்டி போல் உடலைச் சுருக்கிக் கொண்டு, இருக்கையோடு இருக்கையாக, பல்லிபோன்று ஒட்டிக்கொண்டு, ஒருக்களித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

பட்டி மன்றம் ஒன்றில் லியோனி கூறிய கதை ஒன்று இப்போது நினைவுக்கு வந்தது. பஸ்ஸில் பக்கத்து பக்கத்துச் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு இடையை சண்டை வந்து விட்டது. ‘ஜன்னலை மூடு’ என்று ஒருவர் சொல்ல, ‘ஜன்னலைத் திற’ என்று மற்றவர் சொல்ல, போட்டா போட்டி நடந்துக் கொண்டிருந்தது. சண்டையைத் தீர்த்து வைக்க கண்டக்டர் வந்திருகிறார்.

“எனக்கு குளிர்காத்து  ஒத்துக்காது. தொறந்து வச்சா நான் செத்துப் போயிடுவேன்” என்று ஒருவர் முறையிட,

“எனக்கு காத்து வேணும். மூடி வச்சா மூச்சு முட்டியே நான் செத்துப் போயிடுவேன்” என்று மற்றவர் கூற

“இப்படிச் செய்யலாம். கொஞ்ச நேரம் ஜன்னலைத் தொறந்து வை. இந்த ஆளு செத்து போயிடுவான். ஒரு பிரச்சனை சால்வ் ஆயிடுவோம். கொஞ்ச நேரம் ஜன்னலை மூடி வச்சா, இந்த ஆளும் செத்துப் போயிடுவான். அடுத்த பிரச்சினையும் சால்வ் ஆயிடும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

இது போன்ற புத்திசாலித்தனமாக நாட்டாமை செய்யவும் Gulf Air விமானப் பணிபெண்களுக்கு பயிற்சி அளித்தால் தேவலாம். நல்லவேளை விமானத்தில் ஜன்னலைத் திறந்து மூடும் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பே இல்லை.

‘பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும்’ என்ற முதுமொழி விமானப் பணிப்பெண்களுக்குப் பொருந்தாது போலும். நம் கதாநாயகி, பணிப்பெண்ணிடம் சென்று இருக்கையை வேறு பெண் பயணியின் பக்கத்தில் மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுக்க, அவர் தனது லிப்ஸ்டிக் உதட்டை பிதுக்கி, ‘சாரி’ என்ற குட்டி வார்த்தையோடு கையை விரித்து விட்டார்.

சாப்பாடு முடிந்ததும் ஒரு கடுமையான ஏப்பம் பெரும் சப்தத்துடன் குண்டு ஆசாமி விட, நம் கதாநாயகி மேலும் அதிர்ந்துப் போயிருக்கிறார். சாப்பாட்டுக்கு பிறகு.. ..? வேறன்ன தூக்கம்தான், அதுவும் Sterophonic டிராக்கில் Woofer வைத்ததுபோல் ஒரு குறட்டைச் சத்தம் வேறாம். ரஜினி பாஷையில் சொன்னால் “சும்மா அதிருதில்லே”. 

குறட்டை விட்டுத் தூங்கும் ஆசாமி எங்கே தன் மீது சரிந்து விடுவாரோ என்ற பயம் வேறு. பிரயாணம் முழுதும் ஹிட்ச்காக் படம் பார்ப்பதைப் போன்று ஒரு விதமான திகில் உணர்வோடு பிரயாணம் செய்திருக்கிறார் இந்த பெண்மணி.

சக பிரயாணி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்.

 (நம் கதையின் வில்லன், படத்தில் காணப்படும் நபரைப் போல் அவ்வளவு குண்டாக இல்லாவிட்டால் கூட, சற்றே இளைத்தவராக வாசகர்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்)

 

நாகூர் – தனி மாநிலம்


இப்பல்லாம் உண்ணா விரதம் இருந்தா உடனே தனி மாநிலத்தைக் கொடுத்திடறாங்க. நண்பர் சலீம் சொல்ற மாதிரி வருங்காலத்துலே மதுரை மாநிலம், சிவகங்கை மாநிலம், விருதுநகர் மாநிலம்னு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நாகூர்காரங்க ஒண்ணா சேர்ந்து தனி மாநிலம் கேட்டா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தேன்.

நம்ம ஜனங்க ரமலான் நோம்பு, ஆறு நோம்பு, அரஃபாத் நோம்பு, ஆஷூரா நோம்புன்னு உண்ணா விரதம் இருந்து பழக்கப்பட்டவங்க வேற. ஆந்திராவிலே ஒரு ஆளு உண்ணாவிரதம் இருந்தே மத்திய அரசுக்கு பேதி மாத்திரை கொடுத்துட்டாரு. அப்படியிருக்க நம்ம ஊருலே எல்லாரும் சேர்ந்து உண்ணா விரதம் இருந்தா நிச்சயம் தனி நாகூர் மாநிலம் தாராளமாக கெடச்சுடும்,

அலங்கார வாசலை தலைநகர் ஆக்கிடலாம்.  நாகூர் தர்கா ஆபிஸை தலைமைச் செயலகம் ஆக்கிடலாம். கூட்டு பாத்திஹா கட்டடத்தை ஹைகோர்ட் ஆக்கிடலாம். நூர்சா தைக்கா – அதை ஏர்போர்ட் ஆக்கிடலாம். (ஒருகாலத்துலே அங்கே காலி கிரவுண்ட் இருந்துச்சு. இப்ப இருக்குதான்னு தெரியலே)

அரசு கோப்புகள் எல்லாம் நாகூர் பாஷையிலேயே இருக்குமே! சூப்பரா இருக்கும். ஏன் கோர்ட்டுலே வழக்காடுவதுகூட நாகூர் பாஷையிலேயிலேதான் இருக்கும்.

“ஜனாப் ஜட்ஜ் மாமா அவர்களே! என் சாட்சிக்காரஹ வாஞ்சூர்லே போயி கள்ளுக்குடிச்சிட்டு வந்து, ஆட்டம் போட்டு தவுடு பண்ணுனாஹன்னு எந்த எரிச்சக்கார பொறிச்ச முட்டையோ, சும்மாச்சுக்காச்சும் ஒண்ணுக் கெடக்க ஒண்ணு பழியை போட்டு,  ஓசடி செஞ்சு அஹலெ எடக்கு மொடக்கா முசீபத்துலே மாட்டி உட்டுட்டாஹா” ன்னு வக்கீல்கள் வாதாடுவதைக் கேட்க காதில் குலாப்ஜான் ஷீரா பாய்ந்தது போலிருக்கும்.

இந்தியாவுக்கு தேசிய பறவை மயில், தேசிய விலங்கு புலி என்று சொல்லுவதைப்போல  நாகூர் மாநிலத்துக்கு மாநிலப் பறவை தர்கா புறா என்றும்  மாநில விலங்கு தர்கா யானை என்றும் அறிவித்து விடலாம். நேஷனல் பார்க்? வேறு என்ன தர்கா தோட்டம்தான். பாவுட்டாதான் நம்ம மாநிலத்துக் கொடி. அரசவைக்கவிஞரா என் நண்பர் இதயதாசனையே போட்டு விடலாம். முஸ்லீம் சங்க தொண்டர் படையையே காவல்துறை அதிகாரிகள் ஆக்கி விடலாம்.

நாகூர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டதால் வருமானத்து குறைவிருக்காது. ஓலைப்பெட்டி, தடுக்கு, விசிறி பட்டரை இவைகளை பெரிய தொழிற்கூடங்கள் ஆக்கி ‘ஆஹோ ஓஹோ’வென்று ஏற்றுமதி செய்யலாம். இருக்கவே இருக்கிறது நாகூர் சில்லடி துறைமுகம். நம்ம ஊருக்காரங்க வெளிநாட்டுலே அதிக அளவிலே இருக்குறதுனாலே அந்நிய செலவாணிக்கு குறைவிருக்காது,

உடையிலே கூட நமக்கென்று ஒரு தனித்தன்மையைக் காட்ட முடியும். ஆண்கள் கைலி சட்டை, பெண்கள் பத்தை கைலி, மல்லியப்பட்டீசு தாவணி. பெண்கள் எல்லோரும் யூனிபார்மா வெள்ளை துப்பட்டி போட்டுக்கிட்டு போறதை பாத்து பி.பி.ஸி. காரங்ககூட ஆச்சரியப்பட்டு போயிடுவாங்க. (டைரக்டர் சேரன் கவனத்திற்கு)

என்ன சொல்றீங்க? தனிமாநிலம் கேக்குற ஐடியா இருந்தா சொல்லுங்க. உண்ணா விரதத்தை ஆரம்பிச்சுடலாம்.