RSS

Category Archives: Nagore

வைரத்தூறல் – மதிப்புரை


நாகூரில் காதர் ஒலியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்படி நான் சொன்னதும் “நீங்கள் சுன்னத் ஜமாஅத்தா அல்லது தவ்ஹீதா?” என்ற அடுத்த கேள்வி எழக்கூடும்.

நான் சொல்ல வருவது நம்மூர் கவிஞர் காதர் ஒலியை.

இவர் பரிகாசப் பாடலில் தொடங்கி இதிகாசப் பாடல்களை எட்டி இருப்பவர். இதுவரை வாழ்த்துப்பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தவரை நாம் வாழ்த்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

குடத்திலிட்ட விளக்கு இன்று குன்றின் மேல் ஒளிர்கிறது.

இவரது “வைரத்தூறல்” மழையில் நனைந்த நான் இவரது கவிதைகளுக்கு மதிப்புரை வரைந்தால் என்ன என்று தோன்றியது.
—————————————————————————————-

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் E.M.ஹனீபா மற்றும் A.ராணி இணைந்து பாடிய இந்த அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

‘மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே?’ என்று நாகூர் ஹனீபா அவர்கள் கேள்வி தொடுக்க ‘மக்கா என்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே’ என்று ராணி பதிலுரைக்கும் இந்த பாடல் எத்தனை ஆண்டுகளானாலும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

கவிஞர் காதர் ஒலியின் “பிரிவினை எதற்கு?” என்ற இந்த கவிதையைப் படித்தபோது ஆபிதீன் காக்காவுடைய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

பிறந்த உலகில் பற்பலப் பிரிவாய்
பிரிந்துக் கிடப்பது எதனாலே?
சிறந்த அறிவும் செயல்படுத்திறனும்
சிதைந்து போகுது அதனாலே!
தெரிந்து இருந்தும் தெளிவு படாமல்
திருந்த மறுப்பது எவராலே?
புரிந்து கொண்டால் பலமே பெறலாம்
புண்ணியம் படரும் செயலாலே!

நம் மக்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்துக் கிடப்பதை கவிஞரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றொரு இடத்தில்

விண்மீன்கள் சிதறிக் கிடந்தால்
விண்ணுக்கு அழகு!
மூமீன்கள் சிதறிக் கிடந்தால்
முளைக்குமா விடிவு?

என்று குமுறுகிறார். மீனை வைத்து “விண்மீன்கள்” “மூமீன்கள்” என்ற வார்த்தை விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. கவுச்சியாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தது.

———————————————————————————————————————-

1993-ஆம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படம் எல்லோர் நினைவிலும் பசுமையாக இருக்கிறது. நம் கவிஞரின் “வைரத்தூறல்” தொகுப்பில் “திருடா! திருடா” என்ற தலைப்பைக் கண்டதும், இவர் எந்த திருடனைப் பற்றி சொல்லப் போகிறார்? ஒருவேளை கிரானைட் திருடனைப் பற்றி இருக்குமோ என்ற ஆவலில் கவிதையைப் படிக்க நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அப்பா அம்மா சொல்லைப் பின்னே தள்ளாதிருடா
அச்சம் அகந்தை அழுக்கு நெஞ்சில் கொள்ளாதிருடா
தப்பித் தவறி தறுதலை வழியில் செல்லாதிருடா
தரங்கள்கெட்ட வார்த்தையை வாயால் சொல்லாதிருடா

என நாசுக்காக நம் கவிஞர் நல்லுபதேசம் நயம்பட உரைக்கிறார்.
———————————————————————————————————————

இன்றைய இளந் தலைமுறையினருக்கு உவமைக் கவிஞர் சுரதாவைப் பற்றி அதிகம் தெரியாது. பாரதிதாசன் மிது கொண்டிருந்த பேரன்பின் காரணமாய் “சுப்பு ரத்தின தாசன்” என்ற தன் புனைப்பெயரை மேலும் சுருக்கி “சுரதா” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக் கொண்டவர்.

“விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்”

என்ற கே.பாலச்சந்தரின் “நாணல்” படத்தில் இடம்பெற்ற பாடலின் சாயலை கவிஞர் காதர் ஒலியின் “ஆடையோ ஆடை!” என்ற கவிதையில் காண முடிகிறது.

கவர்ச்சி கன்னிக்கு காலாடை
காற்றில் பறக்குது மேலாடை
கட்டழகு பெண்ணுக்கு நூலாடை
காய்ச்சிய பாலுக்கு பாலாடை

என்று பாடும் கவிஞர் மேலும் தொடர்கிறார்.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

கவிஞர் காதர் ஒலியின் ஆடை வரிகளில் வீசிய பா-வாடை என் மனதிற்குள் பலவிதமான சிந்தனையை தோற்றுவித்தது.

‘…அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை…” (அல்குர்ஆன் 2:187) என்ற திருக்குர்ஆன் வரிகள் நினைவுக்கு வந்தன.

ஒருவர் மற்றவருக்கு ஆடை என்றால் இருவரும் சரிசமம் என்று அர்த்தமாகிறது அல்லவா? ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பார்கள். இந்துமதம் கூட சிவபெருமானை ஆண்பாதி, பெண்பாதியாக – உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக, அர்த்தநாரீஸ்வரராக உருவகப் படுத்துகிறது.

வாழ்க்கைத்துணை இல்லாத மனித வாழ்க்கையும் அரைகுறையாகத்தான் ஆகிவிடுகிறது. பரிபூரணம் ஆவதில்லை. அதனால்தான் இஸ்லாம் சன்னியாசத்தை ஆதரிப்பதில்லை.

கவிக்கோ அவர்கள் ஜூனியர் விகடனில் இவ்வரிகளுக்கு விளக்கம் தந்ததை சற்று கூர்ந்து கவனித்தால் பலப்பல உண்மைகள் கண்முன் புலப்படுகின்றது.

ஆடையை ஏன் உதாரணம் காட்ட வேண்டும்?

ஆடை, மானத்தை பாதுகாக்கின்றது; மரியாதை கூட்டுகின்றது; மதிப்பை உயர்த்துகின்றது. ஆணுக்குப் பெண் ஆடையாகவும், பெண்ணுக்கு ஆண் ஆடையாகவும் இருப்பது கட்டாயமாகின்றது. குர்ஆன் கவிதைநயமிக்கது என்பதற்கு இவ்வசனமே நல்லதொரு சான்று.

மனைவியின் மானத்திற்கு பங்கம் ஏற்படுகையில் கணவன்தான் கேடயமாக செயல்பட்டு அவளுக்கு கேடு விளையா வண்ணம் பாதுகாக்கின்றான். கணவனுக்கு அவள் மனைவியானவள், தன் சொல்லாலும் செயலாலும், மதிப்பையும் மரியாதையையும் தேடித் தருகிறாள். எனவேதான் அவனுக்கு அவள் ஆடை, அவளுக்கு அவன் ஆடை என்ற பொருத்தமான உதாரணம் சுட்டிக் காட்டப் படுகின்றது.

உயிரினங்களில் மனிதன் மாத்திரம்தான் ஆடை அணிகிறான். அதேபோன்று ‘திருமணம்’ என்ற புனித பந்தம் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. “வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்பது வெறும் கற்பனைக்குத்தானே அன்றி நிஜவாழ்க்கைக்கு அல்ல.

பொருத்தமான ஆடையைத் தெர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவசியம் தேவை என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

தட்பவெப்ப காலங்களில் குளிர் நம்மை தாக்காமலும், வெயில் நம்மை சுட்டெரிக்காமலும் ஆடை நம்மைக் காக்கின்றது. இன்பங்களிலும் துன்பங்களிலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அளித்து, ஆடை நம் அங்கங்களை மறைப்பதுபோல் அவரவர் தத்தம் குறைகளை மறைத்து இல்லறவாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து.

God Makes Man. Tailor makes him Gentleman என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஆடையை அணிந்ததும் மனிதனுக்கு மதிப்பு கூடி விடுகின்றது. பாதுகாப்பாக உணர்கிறான். மானம் காக்கப் படுகின்றது.

நன்மதிப்பு, சமுதாய அந்தஸ்து, கெளரவம் – இவைகளை ஈட்டித் தருகின்றது ஆடை, அணிகலன்.

ஆடை அணியாதவனை காட்டுமிராண்டி என்று பழித்துரைக்கிறோம்.

ஆடை நாகரீகத்துக்கான குறியீடு; சமூகத்தின் பண்பாடு. ‘அறிவுக்கனி’யை உண்டதும் ஆதாமும் ஏவாளும் புரிந்த முதற்காரியம் இலைதழைகளை ஆடையாக்கிக் கொண்டதுதான். சுயநினைவு இழக்கும் பைத்தியக்காரன் செய்யும் முதற்காரியம் ஆடைகளை கிழித்துக் கொள்வதுதான். புரிதலின்றி இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தாம்பத்திய வாழ்வை கெடுத்துக் கொள்வதும் பைத்தியக்காரர்கள் செய்யும் செய்கைகளுக்குச் சமம். அவர்களது வாழ்க்கை தாறுமாறாய்க் கிழிந்து சின்னாபின்னமாகி விடுகின்றது.

கவிஞர் காதர் ஒலியின் மேற்கூறிய இவ்வரிகள் மனநிறைவைத் தந்தது.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

——————————————————————————————————————–
இதோ கவிஞர் காதர் ஒலியின் மற்றொரு கவிதை:

கொசுக்களுக்கு கொண்டாட்டம்
நன்றி சொல்லும் பொதுக்கூட்டம்
முன்னிரவிலும் பின்னிரவிலும்
மூக்குப்பிடிக்க ரத்த விருந்து
மிக்க நன்றி! மின்வெட்டுக்கு!

நாகூரில் விருந்து என்றால் “சஹன் சாப்பாட்டில்” நாலுபேர்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். கவிஞர் சொல்லும் இந்த ரத்த விருந்தில் கூட்டம் கூட்டமாக அல்லவா உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்?

இம்முறை தாயகம் சென்ற நான் மின்வெட்டினால் ரொம்பவே நொந்து போய்விட்டேன். கலைஞர் ஆட்சியின்போது வெளிவந்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.

அரவிந்த் சாமிக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் என்ன வித்தியாசம்?

அரவிந்த் சாமி வந்தது “மின்சாரக் கனவு”, ஆற்காடு வீராசாமி வந்ததும், மின்சாரமே கனவு.

இதுக்கு அது எவ்வளவோ தேவலாம் என்று தோணுகின்றது.

இவ்வளவு அருமையாக கவிதை எழுதும் என் நண்பருக்கு அடுத்த முறை ஊர் செல்லுகையில் ஏதாவதொன்று பரிசளிக்க வேண்டும். ‘டார்டாய்ஸ்’ கொசுவர்த்திச் சுருள் பொருத்தமான பரிசாக இருக்குமோ?  “அனுபவம்தான் கவிதை” என்பான் கவியரசு கண்ணதாசன். கொசுக்கடியால் எந்த அளவுக்கு நம் கவிஞர் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்ற அனுபவக் கவிதைகளை அவர் எழுதி இருப்பார் என்று நம்மால் எளிதில் கற்பனைச் செய்து ஊகிக்க முடிகின்றது.

“கடிஜோக்” கேள்விப்பட்டிருப்பீர்கள். இது “கடிகவிதை”

அசுக்கடி புசுக்கடி கொசுக்கடி
அவரவர் உடம்பினில் அடிதடி
இசுக்கடி நசுக்கடி பொசுக்கடி
இரவினில் நடக்குது அதிரடி

கொசுத்தொல்லையை விவரிப்பதோடு நிற்கவில்லை. அதை போக்குவதற்கும் ஆலோசனை தருகிறார் கவிஞர். ஒரு பிரச்சினையை எடுத்துச் சொல்வதோடு மட்டும் கவிஞனின் பங்களிப்பு நின்று விடுவதில்லை. அதற்கு நிவர்த்தி வைத்தியமும் சொல்ல வேண்டும்.

கொசுக்கு பயந்தா வலையடி?
குப்பைக் கூளத்தைத் தொலையடி
அசுத்த அசிங்கத்தை அகற்றடி
அதுதான் கிருமிக்கு சவுக்கடி.

வேப்பிலை புகையைப் போடடி
வெகுண்டு ஓடிடும் கொசுவடி
காப்பில்லை கொசுவத்தி சுருளடி
காசுக்குத் தாண்டி அழிவடி

என்று இப்பிரச்சினைக்கு தீர்வு காண விழைகிறார். இதை படித்துவிட்டு கொசுவத்திச் சுருள் விற்பனையாளர்கள் நிச்சயம் இவர்மீது கடுப்பாவார்கள் என்பது நிச்சயம்.
———————————————————————————————————————–

தினக்கூலித் தொழிலாளிகளின் அவல வாழ்க்கையை எடுத்துரைக்கையில் இப்படி கூறுகிறார் நம் கவிஞர்:

ஒருவேளை அடுப்பெரிக்க
மூன்று வேளை வெயிலில் காயும்
விறகுகள்

தன்னைச் சார்ந்தோரை வாழவைப்பதற்கு தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான் தினக்கூலிக்காரன். மனிதனை விறகாய் உருவகப்படுத்துகையில் சித்தர் பாடல்களில் காணும் தத்துவக்கருத்தை   இந்த ‘ஹைக்கூ’ கவிதையில் நம்மால் உணர முடிகிறது.

பார்த்தா பசுமரம்
படுத்து விட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஞானப்பாடல்தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. (இது கண்ணதாசன் எழுதிய பாடலா அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பாடலா என்ற விவாதம் நமக்கு இப்போது தேவையில்லாதது.)  [பார்க்க]

———————————————————————————————————————

எட்டு வயது சிறுமியாக இருந்த என் மகள் ஒரு முறை என்னிடம் “ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?” என கேள்வி கேட்டாள். “தெரியாது” என்று நான் பதில் சொன்னதும் “அவர் அழுதா நோட்டு நனைந்து விடுமே!” என்று சிரித்தபடி கூறிவிட்டு ஓடிவிட்டாள். இதை நகைச்சுவையாக ரசித்த எனக்கு, கவிஞர் காதர் ஒலியின் இதே கருத்தைக்கொண்ட கவிதை சீர்தூக்கி சிந்திக்க வைத்தது.

வாக்களித்து விட்டு வெளியே வந்தவன்
வாழ்க காந்தி என்றான்!! கேட்டால்
வேட்பாளர் கொடுத்த பணத்தில்
காந்தி சிரிக்கிறாராம்

ஊழல் நிறைந்த தேர்தல் களங்களின் அவலத்தை உரித்துக் காட்ட இந்த வரிகள் போதாதா?

———————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலி எழுதியுள்ள “திருப்புகழ் தமிழ்”, “தமிழச்சித் தாலாட்டு”, “தாய் மண்ணை மதி” “தமிழா! தமிழா”, “திருக்குறள் சுவை”  “முண்டாசுக் கவிஞன்” “புதுவையின் புயல்”  போன்ற கவிதைகள், அவருக்கு தமிழ்மொழியின் மீதுள்ள ஈடில்லா பற்றையும் தமிழ் தாக்கத்தையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

“புதியதோர் உலகம் செய்வோம்” என்றான் பாரதிதாசன் “புதிய பாரதம் செய்வோம்” என்று முழக்கமிடுகிறார் நம் கவிஞர். “ஓடி விளையாடு பாப்பா” என்று பாலர்களுக்கு கவிதை பாடினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி.

ஓடி நடக்காதே தாத்தா; உன்
உடம்புக்கு நல்லதல்ல தாத்தா
பீடி குடிக்காதே தாத்தா; பல
பிணிகளை உண்டாக்கும் தாத்தா

மாடி ஏறாதே தாத்தா; திடீர்
மயக்கம் வந்துவிடும் தாத்தா
ஆடி அலையாதே தாத்தா; அது
ஆகாது உந்தனுக்கு தாத்தா

மாமிசம் தின்னாதே தாத்தா; அந்த
மருத்துவர் சொல்கேளு தாத்தா
பூமியை நம்பாதே தாத்தா; அதை
புரிந்தவன் நீதானே தாத்தா

என பேத்தி தாத்தாவுக்கு அறிவுரை கூறுவதுபோல் கவிதை வடித்துள்ளார். இந்த ஐடியா ஏனோ பாரதிக்கு வராமல் போய்விட்டது. வந்திருந்தால் ‘பாப்பா பாட்டு’ பாடியதைப்போன்று ‘தாத்தா பாட்டையும்’ அவன் பாடிச் சென்றிருப்பான்.

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்

என்று பைந்தமிழ்த்தேனீ பாரதி பாடினான். கவிஞர் காதர் ஒலியின் கனவு சற்று மாறுபட்டு இருக்கின்றது.

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்
பசுமையும் வளமையும் பெருகிட வேண்டும்
லஞ்சம் வாங்காத அலுவலர் வேண்டும்
லட்சியம் எல்லாம் நடந்திட வேண்டும்

என தான் காணும் கனவை எடுத்தியம்புகிறார். படிக்கின்ற வாசகன் மனதிலும் கவிஞரின் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை உள்மனதில் எழுகின்றது.

——————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலியின் கவிதைகளில் காணப்படும் உவமை, உவமேயம், உருவகம், சொல்நயம், வார்த்தை சந்தம் – இவைகள் பாராட்டும்படி இருக்கின்றது. உதாரணத்திற்கு பூமியை உயிருள்ள ஒரு பொருளாய் கற்பனை செய்திருப்பது நம்மை ரசிக்கத் தூண்டுகிறது.

பூமி விடும் பெருமூச்சுதான் புயல் காற்றாம், நரம்புத் தளர்ச்சி பூகம்பமாம், திடீர் வயிற்றுப்போக்கு சுனாமியாம், சிறுநீரகக் கோளாறு வெள்ளப் பெருக்காம், செரிமான இல்லாமல் எடுக்கப்படும் வாந்திதான் எரிமலை வெடிப்பாம்.

கத்திரிக்காயை மகுடம் அணிந்த இளவரசியாக கற்பனைச் செய்வதும், துகில் உரிப்பவரை அழவைக்கும் சக்தி எங்களுக்குத்தான் உள்ளது என்று பாஞ்சாலிக்குகூட இல்லாத சக்தியை வெங்காயத்திற்கு அளித்து அழகு பார்ப்பதும், தரம் மாறாமல் நிறம் மாறும் கர்ப்பிணி என்று மிளகாயை உருவகப் படுத்துவதும், கவிஞரின் கற்பனாச் சக்திக்கு ஒரு சபாஷ் போட வைக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

‘விவசாயி’ படத்தில் மருதகாசி வெளியிட்ட அதே ஆதங்கத்தை அவர் பானியில் வெளியிடுகிறார் கவிஞர் காதர் ஒலி

பிறந்து வளர்ந்து படித்த மண்ணில்
பிழக்கத் தொழிலா உனக்கில்லை?
பறந்து சென்று இளமையைத் தொலைத்து
பணத்தைக் குவிப்பது கணக்கில்லை!
சிறந்த மனையால் சிரிக்கும் மழலை
செழித்த முகத்தில் பொலிவில்லை
திறந்து சொன்னால் அயலகம் சென்று
திறம்பட உழைபதில் புகழில்லை

என்று நம் கவிஞர் நடைமுறை வாழ்க்கையை, அயல்நாட்டு மோகத்தைச் சாடுகையில் பங்கஜ் உதாஸ் அவர்களின் “சிட்டி ஆயிஹே” கஜல்தான் நினைவில் வந்தது.

“ரோட்டி கப்படா அவுர் மக்கான்” என்ற படத்தில் “மெஹங்காயி மார்கயி” என்ற இந்தி பாடலில் அருமையான ஒன்று வரி வரு.ம் அதன் சாராம்சம் இதுதான்:

கைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருவோம் அன்று
பைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருகிறோம் இன்று

கவிஞர் காதர் ஒலி அவர்களின் கவிதையிலும் அதே கருத்துச்செறிவு காணக்கிடைக்கின்றது.

நோட்டு புத்தகத்துடன்
பள்ளிக்குச் சென்றேன் அன்று
நான் படிக்க!!

நோட்டுக் கட்டுடன்
பள்ளிக்கூடம் செல்கிறேன் இன்று
என் பிள்ளை படிக்க!!

என்று கல்வியின் அவலத்தை துகிலுரித்துக் காட்டுகின்றார்.

எத்தனையோ முறை திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் தேடி வந்தும் அதில் இவர் ஆர்வம் காட்டவில்லை என்ற இவரைப் பற்றிய சுவையான செய்தி நமக்கு மகிழ்வைத் தருகிறது. எண்ணற்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவி. கா.மு,ஷெரீப் அவர்கள் திரையுலகில் பிரவேசித்தமைக்கு, பிற்காலத்தில் மனம் வருந்தியிருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தேடிவந்தபோது “அம்மி கொத்த ஏன் சிற்பியை அழைக்கிறீர்கள்?” என்ற வினாவை அவர்களிடத்திலேயே தொடுத்தார். நம் கவிஞரும் அதேபோன்ற தெளிவான சிந்தனையில் இருப்பது புலனாகிறது. புகழ் என்ற போதை அவரை மசிய வைக்கவில்லை. பணத்தாசை என்ற பாப்பாவூர் பேய் அவரைப் பிடித்து ஆட்டவில்லை.

நீ துளியில் பிறந்த உளி
சிற்பம் செத்துக்கவா?
அம்மிக் கொத்தவா?
தீர்மானிப்பது உன் விதி!!

எனக்கென்னவோ கவிஞரின் இக்கவிதை, கேள்விகளால் வேள்விகள் நடத்தி, தனக்குத்தானே கேட்டுக்கொண்ட கேள்வியாகத்தான் தோன்றுகின்றது. இக்கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணம் தன் வாழ்க்கையையும் சீர்பட அமைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது.

வளரட்டும் மேலும் இவரது கவித்திறமை என்று நம் இதயம் வாழ்த்துகின்றது.

 

Tags: , , ,

நாடகப்பணிக்கு நாகூர்க்காரர்களின் பங்களிப்பு


“நாகூர் என்ற சிறிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டீர்களா?” என் அபிமான வாசகர்கள் பலர் இதே கேள்வியைத்தான் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். நான் பிறந்த மண்ணைப்பற்றி சிந்தித்து சிலாகித்து எழுதுவதற்கு அளப்பரிய விஷயங்கள் அமுதசுரபியாய் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கின்றன.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, நான் பிறந்த மண், தனக்கென ஒரு பிரத்தியேக  மகரந்த வாசனையை சுவீகரித்து வைத்திருக்கிறது. படித்து தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை விட, பரிச்சயமான விஷயங்களை நுகர்ந்து, அனுபவக் கலப்போடு அலசி ஆராய்வதில் உள்ள சுகந்தமே தனி.

நாடகப் பணியையும் நாகூரையும் இணைத்துப் பேசுகையில், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இச்சிற்றூரில் நாடகத்திற்கான பங்களிப்பு பெரிதாக என்ன இருந்துவிட  முடியும் என்றுதான் மேலோட்டமாக யாருக்கும் தோன்றும்.  ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் முடியும்?’ என்று பலரும் நினைக்கக் கூடும்.

இசையும், நாடகமும் இஸ்லாத்துக்கு எதிர்மறையான விஷயங்கள். ஆதலால் இவைகளுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு எதுவுமே இருக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே நிலவி வருகிறது. முன்னோடியான காரியங்களை முஸ்லீம்கள் நிகழ்த்தி அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்பதற்கு நாகூரின் கடந்தகால வரலாறு நல்லதோர்  எடுத்துக்காட்டு.

“நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்று சமுதாயக் கவிஞர் தா.காசிம் அடிக்கடி குறிப்பிடுவார். ஆட்டுக்கால் சூப்பு விற்பவரும், கசாப்புக்கடை வைத்திருப்பவரும், முடிதிருத்தும் நாவிதரும், சாயம் பூசுபவரும் இரவு நேரமானால் மேடையேறி  தத்தம் இனிய குரலால் ரசிகர்களை வசீகரிப்பது இங்கு சர்வ சாதாரணம். யாரும் அவர் செய்யும் தொழிலை வைத்து குறைத்து எடை போடுவதில்லை. மாறாக கலைக்கும், கலைஞனுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் தருபவர்கள் இவ்வூர் மக்கள்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் முடிதிருத்தும் நாவிதர்கள்தான் “பதம்” என்னும் இசைக்கலையை இவ்வூரில் அழிந்து போகாமல் காப்பாற்றியவர்கள்.  சரளமாகவும், சமயோசிதமாகவும், மடை திறந்த வெள்ளமென அந்தந்த நேரத்தில் அவர்கள் வாயிலிருந்து வந்துவிழும் பாடல்வரிகள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கும்.

 “காரைக்கால் ரோட்டைப் பாரு

காதர் சுல்தான் வூட்டைப் பாரு”

“ஆண்டி குளத்தைப் பாரு

அஜீஸ் சன்ஸ் வூட்டைப் பாரு”

போன்ற எதுகை மோனை வரிகள் அவர்கள் இடம், பொருள், ஏவல், அறிந்து அனாயாசமாக உதிர்க்கும் கவிதைத் தொடர்கள்.

நாகூர் வழிபாட்டுத்தளம் என்று புகழ் பெற்றிருந்த காரணத்தினாலேயே வடநாட்டு இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து நாகூர் தர்காவில் ‘கவ்வாலி’ என்ற சூஃபி இசையை அறிமுகம் செய்து, ஹிந்துஸ்தானி இசையின் மீதும் இவ்வூர் மக்களிடையே ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போனார்கள். அஜ்மீருக்கும் நாகூருக்கும் ஏதோ ஒரு இசைவழி தொடர்பு இருந்தது.

தமிழிசையும்,  வடநாட்டு இசையும் ஒன்றோடொன்று இணைந்து Fusion-ஆகி ‘இஸ்லாமிய இசை’ என்னும் ஒரு புதுவடிவத்திற்கு நாகூர் அடிகோலிட்டது எனலாம். பெரும்பாலான நாகூர்க்காரர்களுக்கு உருதுமொழி தெரியாத போதிலும் கூட விடிய விடிய அமர்ந்து இசையைக் கேட்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தது அவர்களது இசையார்வத்திற்கும், கலையுணர்வுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றும் நாகூர் கடைவீதிகளில் சென்று சற்றே நோட்டம் விட்டால் நுஸ்ரத் பதே அலிகான் ‘கவ்வாலி’ ஒருபுறம் பாடல் பாடி அசத்திக் கொண்டிருப்பார் அல்லது குலாம் அலி ‘கஸல்’ மற்றொருபுறம் இசைத்துக்கொண்டு இருப்பார் அல்லது கடைத்தெருக்கோடியில் உவைஸ் ரிஸா காதிரி “நாத்” பாடி பரவசப்படுத்திக் கொண்டிருப்பார். ஆம். கேசட் கடையின் விற்பனையுக்தியாக நாலாபக்கமும் இசைநாதம் முழங்கிக்கொண்டிருக்கும்.

Nagore session

சூஃபி இசை என்ற பெயரில் டெல்அவிவ் வரை பயணம் மேற்கொண்டு  நாகூரின் பெருமையை பறைசாற்றியவர்கள் ‘பாவா’க்கள் என்று அழைக்கப்படும் பக்கீர்மார்கள்தான்.

நான் முன்னமேயே சொன்னதுபோல் நாகூர்க்காரர்கள் இசைக்கலையை போற்றி வளர்த்தார்களேயொழிய இசைப்பவர்களின் சமுதாய அந்தஸ்தோ அல்லது பொருளாதார அந்தஸ்தோ அவர்களுக்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தது.

இயல். இசை, நாடகம் இம்மூன்றும் கலந்ததுதான் முத்தமிழ். “முத்தமிழ் வளர்த்த நாகூர்” என்று வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டும் சொல்லப்படும் வார்த்தை அல்ல. நாகூரார்களின் இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பங்களிப்பை பிறிதொருமுறை நாம் அலசி ஆராய்வோம். அதற்கென நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டிவரும்.

நாடகத்துறைக்கு நாகூரின் பங்களிப்பு எந்த வகையில் இருந்தது என்பதே இன்று நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு.

எத்தனையோ சிற்றூர்கள் தத்தம் பங்களிப்பை தமிழுக்காக வாரி வாரி வழங்கி இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க நாகூரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு என்ன அப்படியொரு முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழ நியாயமிருக்கிறது. நாகூரைப் பற்றிய சில வியக்கத்தக்க விடயங்களை படிக்கும்போது என்னுடைய கூற்றில் நியாயம் இருப்பது வாசகர்களுக்கு நன்கு விளங்கும்.

நாகூரைப் பொறுத்தவரை நாகூரின் இலக்கிய மேன்மைகளை அதிகம் பேசுபவர்கள் நாகூர்க்காரர்கள் அல்ல. வெளியூர்க்காரர்ளும் வெளிநாட்டுக்காரர்களும்தான். “புதையல் மூட்டை மீது அமர்ந்துக் கொண்டே, புதையலைத் தேடுகின்றோம் நாம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வதைப் போல நாகூரின் பெருமை நாகூரில் வசிப்பவர்களுக்குத் தெரிவதில்லை.

நாகூரின் வரலாற்றுச் சிறப்பைக் நமக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு புதுக்கோட்டை ராஜா முஹம்மதோ, ஜெர்மனி நா.கண்ணனோ, பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்க பெண்மணியோ, அல்லது யதார்த்தா கி.பென்னேஸ்வரனோ தேவைப்படுகிறது.

முத்தமிழ்

வேந்தர்கள் மூவர்: சேர, சோழ, பாண்டியர்; சங்கங்கள் மூன்று: தலைச் சங்கம், இடைச் சங்கம், கடை சங்கம்; குறளின் அதிகாரம் மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்; குற்றங்கள் மூன்று: காமம், வெகுளி மயக்கம்;  தோஷங்கள் மூன்று: வாதம், பித்தம், சிலேட்டுமம்; முக்கனிகள் மூன்று: மா, பலா வாழை; இப்படி எல்லாவற்றையும் மும்மூன்றாக பிரித்தார்கள் தமிழர்கள்.

த-மி-ழ் : மூன்றெழுத்து. வல்லினத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தையும், மெல்லினத்திலிருந்து  ‘மி’என்ற எழுத்தையும், இடையினத்திலிருந்து ‘ழ்’ என்ற எழுத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் மொழிக்கு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்  என்பதற்கு ‘இனிமை’ என்ற மூன்றேழுத்து பொருளையும் கொடுத்தார்கள்.

நா-கூ-ர் என்ற மூன்றெழுத்து ஊர் முத்தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பை ஒரு கட்டுரைச் சிமிழுக்குள் அடக்கிவிட முடியாது.  “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல ஊடகங்கள் மறைத்தாலும் ஊரின் பெருமை மங்கி விடாது.

இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்று முறையே பிரித்து முத்தமிழ் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். இம்மூன்றும் ஒன்றை ஒன்று  சார்ந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இயலின்றி இசையில்லை. இசையின்றி நாடகமில்லை, இயலின்றி நாடகமுமில்லை. இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து வைத்திருந்தவர்கள் நாகூர்க்காரர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

“மூன்று தமிழ் சேர்ந்ததுவும் உன்னிடமோ?” என்று வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் நாகூருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற காரணப்பெயர் ஏற்பட்டதற்கு இந்த வாதம் வலிமை சேர்க்கிறது. மூன்று தமிழையும் ஒருசேர முறையே போற்றி வளர்த்தது இந்தச் சிற்றூர் என்றால் அது வியப்பில் ஆழ்த்துகின்ற விடயம்தானே?

அன்றைய பத்திரிக்கைகள், நூல்கள் சமஸ்கிருத மொழியைக் கலந்து தமிழ் வார்த்தைகளுக்கு சமாதி கட்டிக் கொண்டிருந்த காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று நடத்தினார். அவர் நாகையைச் சார்ந்தவராக இருந்ததால் அதன் பாதிப்பு நாகூரிலும் தெரிந்தது. தூயதமிழ் வார்த்தைகள் நாகூர் வாழ் பாமர மக்களின் வாயில் புழக்கத்திலிருப்பது இன்றும் கண்கூடு. மணிப்பிரவாளத் தமிழில் சிக்காமல் தப்பிப் பிழைத்த ஊர் நாகூர் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

Maraimalai

மறைமலை அடிகள்

நாகூர் குலாம் காதிறு நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் பாடிய பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.

வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து

பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்

நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட

ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ

என்ற பாடல் இருவருக்குமிடையே இருந்த நெருக்கம், கபிலர்-பிசிராந்தையார் போன்று அவர்களுக்குள் இருந்த நட்பை உணர்த்த போதுமானது.

புலவர் ஆபிதீன்

பாத்திரத்தை ஏனம் என்போம்

பழையதுவை நீர்ச் சோறென்போம்,

ஆத்திரமாய் மொழி குழம்பை

அழகாக ஆணம் என்போம்,

சொத்தை யுரை பிறர் சொல்லும்

சாதத்தை சோறு என்போம்

எத்தனையோ தமிழ் முஸ்லீம்

எங்களுயிர்த் தமிழ் வழக்கே!

என்ற நாகூர் புலவர் ஆபிதீனின், காலத்தால் அழியாத இக்கவிதை வரிகள் நாகூரில் பேச்சுவழக்கில் நிலவும் தூயதமிழ் வார்த்தைகளுக்கு சான்றாக  விளங்குகிறது.

நாகூர் வளர்த்த நாடகத்துறையை ஆராய்வதற்கு முன்னர் சின்னதாக ஒரு முன்வரலாற்றுச்சுருக்கம்.  உலகளவில் அரேபியர்கள் நாடகத்திற்கு செய்திருக்கும் மகத்தான பங்கு அளவிட முடியாது. தமிழகத்திற்கு அரேபியர்களின் வருகைக்குப் பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரபு வார்த்தைகளை தமிழ்மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுப்புது வார்த்தைகளை தன்னகப்படுத்த ஒரு மொழி கொடுக்கும் அங்கீகாரம்தான் அம்மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதென்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

“ஆயிரத்தொரு இரவுகள்” “அலாவுத்தீனும் அற்புத விளக்கும்” “லைலா-மஜ்னு” “யூசுப்-ஜுலைகா” போன்ற கதைகள், தமிழ் நாடக உலகில் மகத்தான  வரவேற்பைப் பெற்றதற்கு அதில் காணப்பட்ட “Fantasy” எனப்படும் கற்பனையுலக அனுபவமும், பிரமாண்டமும், நவீனத்துவமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

பாக்தாத் திருடன்

“குலேபகவாலி” “பாக்தாத் திருடன்” போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றமைக்கு காரணம் தமிழுக்குப் புதிதான விஷயங்களை இறக்குமதி செய்ததினாலேதான்.  இதுபோன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய நாகூரைச் சேர்ந்த ரவீந்தரை பற்றி மேலும் பல தகவல்களை கீழே தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று கண்மூடித்தனமாக எழுதுவது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை; மரபுக்கவிதை காலம் முதல் புதுக்கவிதை காலம்வரை; சித்தி ஜுனைதா முதல் கவிஞர் சல்மா வரை; இஸ்லாமியர்கள் இலக்கியத்துறையில் ஆர்ப்பாட்டமின்றி அவர்களது முத்திரையை  பதித்து வந்திருக்கிறார்கள்… வருகிறார்கள். இது நாடறிந்த உண்மை.

எம்.ஜி.ஆரின் “குடியிருந்த கோயில்” (1968) படம் வெளிவந்த காலத்திலேயே  ‘ரோஷனாரா பேகம்’ என்ற முஸ்லீம் பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ என்ற பாட்டு எல்லோரையும் முணுக்கவைத்தது. மஞ்சள் மகிமையையும், தாலியின் சிறப்பையும், குங்குமப்பொட்டின் மங்கலத்தையும் ஒரு முஸ்லிம் பெண்மணி பாடினார் என்றுச் சொன்னால் மதநல்லிணக்கத்திற்கு இதைவிட வேறென்ன இருக்க முடியும்? தமிழ்த் திரையுலகிலேயே பாடல் எழுதிய ஒரே முஸ்லிம் பெண்மணி இவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  “ஒரே ஒரு பெண்கவிஞர் எழுதிய பாடலுக்குத்தான் இதுவரை நான் பாடியிருக்கிறேன். அது ரோஷனாரா பேகம்” என்று ஒரு பேட்டியில் டி.எம்.எஸ் கூறியிருக்கிறார். “குங்குமப் பொட்டிட்டுக் கொள்ளாத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சகோதரி, குங்குமப் பொட்டின் மங்களத்தைப் பற்றிப் பாடியுள்ளது பெரும் சிறப்பல்லவா.?”என்று எம். ஜி. ஆரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவர் இவர்.

திருவாளர் ஜெயமோகன் தயைகூர்ந்து தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி வைப்பது நல்லது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஒரு சாதாரணச் சிற்றூர் முத்தமிழை எப்படி வளர்த்துள்ளது என்பதை, மனதில் இருத்திக் கொண்டால் நாகூரைப் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற எத்தனையோ பேரூர்கள் தங்களது பங்களிப்பை எப்படியெல்லாம் செய்திருக்கிறது என்பதை சுலபமாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாறு பதிவாகி இருக்கிறது. அத்தனைப்பேரும் காவியம் படைத்தவர்கள். இலக்கியக் கர்த்தாக்கள். தமிழகமெங்குமுள்ள இஸ்லாமிய இலக்கியவாதிகளின் சரணாலயமாக நாகூர் விளங்கியுள்ளது.

வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவரான செய்யது ஹமீத் இப்ராஹீமுக்கு “வண்ணக் களஞ்சியப்புலவர்” என்ற சிறப்புப் பெயரை நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

தங்களது இயற்பெயரால் அனைத்து தரப்பு வாசகர்கள் மனதிலும் நிலைத்து நிற்க இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான இஸ்லாமிய எழுத்தாளர்களை அவரது பெயர்களை வைத்து தனியே இனம்காண முடியவில்லை. ஜெயமோகனின் குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு தவறான புரிதலாக இருக்கக்கூடும்.

எஸ்.அப்துல் ஹமீதுதான் “மனுஷ்யபுத்திரன்”, ஹபீபுல்லாதான் “அபி”, முஹம்மது மேத்தாதான் “மு.மேத்தா”, சாகுல் ஹமீதுதான் “இன்குலாப்” என்கின்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?

ஒருமுறை சுஜாதாவிடம் ஒரு முஸ்லிம் வாசகர் கேள்வி கேட்டிருந்தார்: “அதென்ன, நாவலாசிரியர்கள் நிறைய பேர் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள்?” அதற்கு சுஜாதாவின் பதில் இப்படியாக “நச்”சென்று இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள்? – இது சுஜாதாவின் பதில். புதுக்கவிதையின் தாத்தாக்களான கவிக்கோ அப்துல் ரகுமானும், மு,மேத்தாவையும்  மற்றும் இன்குலாப், அபி, போன்றவர்களை மனதில் வைத்து சுஜாதா இப்படி கூறியிருக்கலாம்.

எண்ணற்ற இஸ்லாமிய இலக்கியவாதிகள் தங்களது அரபிப்பெயரை தமிழ்ப்படுத்தியும், யாரோ ஒருவருக்கு “தாசன்” ஆகவோ அல்லது தன் துணைவியாரின் பெயரை இணைத்து “மணாளன்” என்ற புனைப்பெயரைச் சூட்டியோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதை நாம் காண்கிறோம். கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்  போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

இன்றளவும் இச்சிற்றூரில் எண்ணற்ற சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மின்னிதழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என பன்முக படைப்பாளிகள் இலக்கிய உலகில் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாரு நிவேதிதா, நாகூர் ரூமி, ஆபிதீன், ஏ.எச்.ஹத்தீப் சாஹிப், கவிஞர் இஜட் ஜபருல்லா, (அண்மையில் மறைந்த) கவிஞர் நாகூர் சலீம், நாகூர் சாதிக், காதர் ஒலி, இதயதாசன், அபுல் அமீன், கவிஞர் சாதிக், T.இமாஜான் போன்றவர்களை இக்கால கட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

திருமண ‘நாலாம்நீர்’ சடங்குக்கு பரிகாசப் பாடல்கள் என்று எழுதத் தொடங்கி இப்போது வெண்பா எழுதிவரும் நாகூர் காதர் ஒலி போன்ற கவிஞர்களே இதற்கு நல்லதோர் உதாரணம். இவர்கள் எந்த பல்கலைக் கழகத்திற்குச் சென்றும் “புலவர்” பட்டம் பெற்றவர்களில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற வரிசையில் முதலில் நாடகத்துறையில் நாகூர் காட்டிய ஈடுபாட்டை மட்டும் இங்கு ஆராய்வோம்.

 நாகூரின் நாடகத் தந்தை

இந்த காமெடிக் கதையை நாகூரில் பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம்.  நாகூரில் ஒரு நாடகம் அரங்கேற்றினார்களாம். அதில் ஒரு  துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோ குத்துச் சண்டை விளையாட்டில் திறம் வாய்ந்த ஒரு உள்ளூர் பிரமுகர். அவருடைய வாயில் தூயதமிழ் வசனங்கள் அவ்வளவு எளிதில் நுழையாதாம். நாடகமோ சரித்திர நாடகம்.

“மன்னா! நம் நந்தவனத்தில் செந்நிறத்திலும், நீல நிறத்திலும், வெந்நிறத்திலும் மலர்கள் மலர்ந்திருக்கின்றன, மன்னா!”

இந்த வசனத்தை காவலாளியாக பாத்திரமேற்றிருக்கும் அந்த நபர் வசனம் பேச வேண்டும். மனனம் செய்த வசனம் மறந்துப்போய் மேடையில் அவர் லோக்கல் பாஷையிலேயே புகுந்து விளையாடி விட்டாராம்.

“ராசாவே! நம்ம பங்களா தோட்டத்துலே ரோஜு கலருன்னும், ஹூதா கலருன்னும், ஆனந்தா கலருன்னும், ஹேந்தி கலருன்னும், காக்கா முட்டை கலருன்னும் சோக்கு சோக்கா பூவு பூத்திக்கிது ராசாவே” என்றாராம்.

இன்னொருமுறை அவர் வில்லனைப் பார்த்து “நீ என்கிட்டேயே லாடுரியா?” என்று சூளுரைத்தாராம். “காக்கா. லாடுறியா அல்ல விளையாடுறியான்னு சொல்லுங்க”ன்னு கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து கூக்குரல் இட அந்த நாடக அரங்கமே அதிர்ந்த கதையை ஊரிலுள்ள ‘பெருசு’கள்  நினைவுகூறுவதை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ரசிக்கத்தக்கதாக இருக்கிறது இந்நகைச்சுவை. ‘குத்துச்சண்டை வீரர்’ என்று நான் குறிப்பிட்டது “நாகூர் பரீத்” என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பரீது காக்கா  அவர்களைத்தான்.

“ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர்.  நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி நாகூரில் பல பிரபலங்கள் உண்டு” என்று தன் பழைய நினைவுகளை பரிமாறுகிறார் நாகூரைச் சேர்ந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா

1966-ஆம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா இணைந்து நடித்த “குமரிப்பெண்” படம் வெளிவந்தது. டைட்டிலில் சண்டைப் பயிற்சி “நாகூர் பரீது” என்ற பெயர் கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். நாகூர் விஜயலட்சுமி டூரிங் கொட்டகையில் அது திரையிடப்பட்டபோது கூட்டத்தோடு கூட்டமாக நானும் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்திருக்கிறேன். நாகூரின் “நாடகத் தந்தை”அவர்.

அவரைத்தான் நாகூர்க்காரர்கள் இப்படிப் போட்டு கலாய்ப்பார்கள். கேலி, கிண்டல், குசும்பு, நக்கல், நையாண்டி இவற்றுக்கு பிரசித்தி பெற்ற ஊரன்றோ இது. தவிர இந்த காமெடிக் கதையில் இட்டுக்கட்டிய ஜோடனைகளும் உண்டு. ஏனெனில், ‘ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது’ இவர்களுக்கு கைவந்தக் கலை.

‘நாடகத்தந்தை’ பரீது அரங்கேற்றிய நாடகங்கள் நிறையவே உண்டு.  பெரும்பாலான நாடகங்களில் அவர்தான் ஹீரோ. “சந்தர்ப்பம்” “விதவைக்கன்னி” போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. பாடல்கள் எழுதுவது பெரும்பாலும் நாகூர் சலீம்தான். இவர் இப்போது திரைப்பட பாடலாசிரியரும் கூட. இவ்வூரில் முதல் முதலாக நாடகத்துக்கு பாட்டு புத்தகம் போட்டு புரட்சி செய்தது “விதவைக்கன்னி” நாடகத்திற்குத்தான்.

 நாகூர் சலீம்

நாகூர் சலீம்

நாகூர் சலீம்

நாடகத்துறைக்கு நாகூர் சலீம் அவர்களின் பங்கு அளவிடத்தக்கது. சினிமா, தொலைக்காட்சி சானல் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாத காலம் அது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுஇடங்களில், வானொலியில் ஒலிபரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ மற்றும் சினிமா பாடல்கள் ஒலிபெருக்கியில் இடம்பெறச் செய்வார்கள். கூட்டம் கூட்டமாக அமர்ந்து ரசிப்பார்கள்.

நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல ஊர்களிலும் நம்மூர்க்காரர்கள் நாடகம் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான நாடகங்களுக்கு கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் பாடலும் வசனமும் எழுதியுள்ளார்.

கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் அளித்த இந்த பேட்டியில் பற்பல சுவையான செய்திகளை நாம் அறிய முடிகின்றது.

நாகை பேபி தியேட்டரில் ‘விதவைக் கண்ணீர்’ என்ற ஒரு நாடகம் போட்டோம். அதற்கு எல்லாமே  நான்தான். அதில் ’ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் புகழ் ஆதித்தனும், ஸ்ரீலதா என்று ஒரு நடிகையும் நடித்தனர். மேக்-அப் மென் எல்லாம் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து வந்தார்கள். ’ஹவுஸ்ஃபுல்’ ஆகி ஒரு ரூபாய் டிக்கட் பத்து ரூபாய்க்கு விற்றது. ஃபரீது மாமாதான் தயாரிப்பாளர்.

 “நாகூரில் ’சந்தர்ப்பம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் “திருக்குர்ஆனே ஓடிப்போய் முஹம்மது நபியின் நெஞ்சில் ஒளிந்து கொள்” என்று ஒரு வசனம் வரும். அதனால் பெரிய கலாட்டா ஆனது. ’சோக்காளி’, ’மிஸ்டர் 1960’ என்றெல்லாம் பல நாடகங்களை நாகை, நாகூர், திருவாரூர், திருமருகல் போன்ற ஊர்களில் போட்டுள்ளோம்.

“சென்னையில், நடிகர் கே கண்ணன் தயாரித்த ’ஆனந்த பைரவி’ என்ற நாடகத்துக்கு நானும் ஆபிதீன் காக்காவும் பாடல்கள் எழுதினோம். கதை, வசனம் ’மஹாதேவி’ புகழ் ரவீந்தர். அதில் சில வரிகள்:

 எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்

என் சொந்தக் கதையை எழுதிப் பூர்த்தியாகு முன்னே

எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்.

‘என் தங்கை’ நடராசனின் நாடகத்துக்காக எழுதிய பாடலின் சில வரிகள்:

நினைவினிலே கலந்து

கனவினிலே தோன்றி

நிலைபெறும் காதலின்

ராணி எங்கே?

அணையா ஒளி வீசும்

நிலவே நீ கூறு

அடையாளம் சொல்கிறேன்

நானும் இங்கே

மங்கையின் மணி மொழிகள் தேனாகும்

அவள் மலர் விழிகள் அசையும் மீனாகும்

தங்க உடல் மாலை வானாகும்

அவள் துணை வரும் தனிச் சொந்தம் நானாகும்

வண்ணமோ புள்ளியில்லா மானாகும்

ஒளி வழியும் தொடை பளிங்குத் தூணாகும்

சின்ன இடை உடுக்கை தானாகும் — அது

தென்றல் பட்டால் ஒடிந்து வீணாகும்

 சன்னிதானம்’ என்ற நாடகம் நாகூரில் அரங்கேறியது. அதில் என் பாட்டை மேஜர் சுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார். கெட்டவனாகிப் போன ஒருவனை விரும்பும் ஒருத்தியும் அவனும் பாடும் பாடல்:

 பட்டுவிட்ட மரக்கிளையில்

பச்சைக்கொடி படருவதோ

பாவி என்னை நிழல்போதே

பாவை நீ தொடருவதோ

உள்ளத்தில் நானிருந்தால் தள்ளிவிடு

இந்த உண்மையை உனக்கு நீயே சொல்லிவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறாய்

ஆகாது எனத் தெரிந்தும்

ஆசையினைத் தேடுகிறாய்

பழி பட்டுப் போனது என் பாதை — என்னை

வழிபடத் துடிக்கிறாய் பேதை

முன்னாளில் தவறு செய்து

பின்னாளில் திருந்தியவன்

என்றாலும் உலகத்தின் முன்

ஏளனத்தைப் பொருந்தியவன்

 அவள்:

பட்ட மரம் சில சமயம்

பச்சை விட்டு வளர்வதுண்டு

பாவி என்று போனவனும்

பண்பு கொண்டு வருவதுண்டு

உள்ளத்தில் என் நினைவை

விதைத்துவிடு

இந்த உண்மையை உனக்கு நீயே

உணர்த்திவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறேன்

ஆகாது எனத் தெரிந்தும்

ஆசையினைத் தேடுகிறேன்

ஏனென்று புரிகிறது எனக்கு — நான்

என்னுயிரை இழந்துவிட்டேன் உனக்கு

==

வானம் கருத்ததடி

எழில் நிலவே நீ இன்றி நலிந்த என்

இதய வானம் கருத்ததடி

காணும் இடம் யாவும்

கார்மேகக் கூட்டம்

கண்கள் பெய்த மழை

கடலுக்கு வளமூட்டும்

மானே உன் நினைவால்

மூண்டது போராட்டம்

முடிந்தது என் வாழ்வு

மடிந்தது உயிரோட்டம்

வீணையைப் பறிகொடுத்த

பாடகி நிலையானாய்

கைப்பொருள் இழந்தவனும்

மெய்ப்பொருள் கலையானாய்

நானறியேன் கண்ணே

துயருக்கு விலையானாய்

மணந்துவிட்டேன் உன்னை

மனதில் ஏன் நிலையானாய்

===

 ”ஏ.கே.வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோ”. அந்த வரிகள்:

வெண் முத்து மாலைகள்

வெள்ளி நுரையினில்

சூடி வருகின்றாள்

இங்கே வேண்டிய பேருக்கு

வாரிக் கொடுத்திட

ஓடி வருகின்றாள்

இன்னொருத்தி:

கண்ணியர் கண்ணென

மாவடுப் பிஞ்சுகள்

நீரில் மிதக்குதடி

அது கண்ணல்ல பிஞ்சல்ல

கெண்டைகள் அம்மாடி

கும்மியடிங்கடி

==

ஏகே வேலன் கொடுத்த பாடலுக்கான சூழல் ஒரு ரிக்சாக்காரன் மனைவி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறாள். ஒரு குழந்தை எங்கோ போய் விடுகிறது. இன்னொரு குழந்தையை ரிக்சாவிலேயே ஊஞ்சல் கட்டி தகப்பன் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கிறான். அழும் குழந்தைக்குத் தாலாட்டு இது:

நடக்குற உலகத்தைப் பார்த்துக்கோ

எது நடந்தாலும் அதை ஏத்துக்கோ

சுமக்கிறதெல்லாம் சுமந்துக்கோ — மனம்

சோர்ந்து விடாமல் நிமிர்ந்துக்கோ

அப்பாடி கொஞ்சம் தூங்கப்பா

இந்த அப்பா சொல்றதைக் கேளப்பா

மாணிக்க ஊஞ்சல் இல்லை

என்ற மனக்குறை போலும் உனக்கு

சாலையின் ஓரத்திலேதான்

நம்ம சமுதாயம் இன்னும் கிடக்கு

ஏழைகள் கொதிப்பது தீமை

நாம் ஏக்கத்தில் வாழும் ஊமை

அன்னை சுமந்தாள் உன்னை — இன்று

அவளோ இங்கே இல்லை

நம்மைச் சுமக்குது பூமி

இது ஏனோ விளங்கிடவில்லை

அவனுக்குத் தெரியும் அருத்தம்

எனக்கு அதுதான் கொஞ்சம் வருத்தம்

விட்டு விட்டு இழுக்குற மூச்சு

அது வெளி வந்து போனாலும் போச்சு

தட்டு கெட்டுப் பேசுற பேச்சு

பல தவறுக்குக் காரணமாச்சு

எலும்பால் அமைந்த தேகம் — இதற்கு

ஏன் தான் இத்தனை சோகம்

நாகூர் சலீம் அவர்களின் நாடக பங்களிப்பிற்கு மேற்கண்ட அவரது பேட்டி பல சுவையான நிகழ்வுகளை நமக்கு தொகுத்து வழங்குகின்றது.

 வில்லன் “டான்

“படித்தவன்” நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜப்பார் நானா (விறகுவாடி),  “டான்” என்று அழைக்கப்படும் ஹமீது சுல்தான் ஏனையோர் நடித்த நாடகமிது. ரஜினிகாந்த், ஷாரூக்கான், அஜீத் இவர்களையெல்லாம் “டான்” என்று அழைப்பதற்கு முன்னால்  இவர்தான் இப்பெயரால் இவ்வூரில் அழைக்கப்பட்டார். வில்லன் பாத்திரமென்றால் இவரைத்தான் அழைப்பார்கள். நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று “டான்” நடிக்கையில் ஒரு சுவையான நிகழ்வு நடந்தேறியது.

கதநாயகியிடம் வில்லன் முறை தவறி நடந்துக் கொள்ளும் காட்சி. கதாநாயகி “அடப்பாவி! சண்டாளா! உனக்கு கண்ணில்லையா?” என்று வசனம் பேச வேண்டும். பாத்திரமேற்று  நடித்த டானுக்கு உண்மையிலே ஒருகண் ஊனம். “டானுக்கு கண்ணில்லைதான்” என்று கூட்டதில் ஒருவர் கூச்சல் போட,  தர்ம சங்கடமான சூழ்நிலையில் அரங்கத்தில் நிசப்தம். அதையும் திறம்பட சமாளித்துக் கொண்டு “எனக்கு கண்ணில்லாமல் இருக்கலாம். ஆனால் ஞானக்கண் இருக்கிறது” என்று சமயோசிதமாக பேசி நிலைமையைச் சமாளித்து ‘டான்’ கைத்தட்டலை அள்ளிச் சென்றது மறக்க முடியாத நிகழ்வு. இவர்களின் நாடகங்கள் நாகூர் மட்டுமின்றி திருவாரூர் வரையிலும் அரங்கேறியது.

நாகூர் சாதிக்

நாகூர் சாதிக்

நாகூர் சாதிக்

நாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களில் நாகூர் சாதிக் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பிறகு “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.

 மாடர்ன் ஸ்டேஜ்

அதற்கு அடுத்தக் கட்டமாக வேறோரு கலைக் கூட்டணி ‘மாடர்ன் ஸ்டேஜ்’ என்ற பெயரில் இணைந்தது. நாகூர் சேத்தான், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், டைலர் அஜ்ஜி, “வானவன்” இவர்களது கூட்டணி நாடக ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது முழுநேர எழுத்துப்பணியில் மூழ்கியிருக்கும் ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிப்தான் அந்த “வானவன்”.  “சிவப்புக்கோடு”, “சன்னிதானம்” போன்ற நாடகங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. நாகூர் சேத்தானை ஒரு “versatile Personality” என்று கூறலாம். ஒரு சிறந்த புகைப்படக்கலை நிபுணராகவும், நடிகராகவும், நாடக எழுத்தாளராகவும், கவிஞராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பிரகாசித்தவர்.  நாகூர் ஹனிபா பாடிய “ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம்”, காயல் ஷேக் முஹம்மது பாடிய “தமிழகத்தின் தர்காக்களை” போன்ற ஏராளமான பாடல்கள் இவர் எழுதியவை.

 நொண்டி நாடகம்

நொண்டி நாடகங்கள் தனி நடிப்பு முறையில் (Mono Acting) ஒரு திருடனின் கதையைச் சொல்பவை. கதாநாயகன் கெட்டவனாக  இருந்து காமவலையில் சிக்கிப் பிறகு தண்டனைக்குட்பட்டு உறுப்புகளை இழந்து நொண்டியாகி இறைவனை வேண்டி வழிபட, இழந்த உறுப்புகளை மீண்டும் பெறுகிறான் என்பதே எல்லா நொண்டி நாடகங்களிலும் உள்ள மூலக்கரு ஆகும்.  இவை சிந்து நடையில் எழுதப்பட்டவை.  இந்தக் கதை அமைப்பை எல்லாச் சமயத்தினரும் தங்கள் தெய்வங்களைப் போற்றவும் பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டனர்.  “திருக்கச்சூர் நொண்டி நாடகம்” (இந்துசமயம்), “சண்பகமன்னார் ஞான நொண்டி நாடகம்” (கிறித்துவ சமயம்), இவகளைப் போன்று முஸ்லீம்களும் “சீதக்காதி நொண்டி நாடகம்” என்ற ஒன்றை இயற்றி அரங்கேற்றினர்.

 கூத்துப் பட்டறை

இஸ்லாமிய நாட்காட்டியில் ‘முஹர்ரம்’ எனப்படும் முதலாம் மாதத்தில் கூத்துப் பட்டறைகள் அரங்கேறும். நாகூர் இதற்கு முக்கிய கேந்திரமாக விளங்கியது.  “காசீம் படைவெட்டு” என்ற பெயரில் “நூறு மசலா” பாணியில் விடுகதைச்சரங்கள் தொடுப்பார்கள். “மசலா” என்றால் அரபியில் விடுகதை என்று பொருள். இது “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” கதை பாணியில் இருக்கும்.

மல்யுத்தம், சிலம்பு, குத்துச் சண்டை, ஜூடோ என்று தற்காப்பு சண்டை வீரர்கள் மலிந்திருந்த ஊர் நாகூர். இவர்கள் அனைவரும் கலையுணர்வோடு இந்தக் கூத்துப் பட்டறையில் பங்கு கொள்வார்கள். முஹர்ரம் என்று வந்துவிட்டாலே பாஜிலால் பாய் மற்றும் செய்யது மெய்தீன்பாய் இவர்கள் ஹீரோவாகி விடுவார்கள்.

நாடகத் கூத்தில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் நாகூர் அரவாணிகள். யாத்ரீகர்களின் வருகையின் மிகுதியினாலோ என்னவோ நாகூர் ஏராளமான அரவாணிகளின் புகலிடமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர்களிடம் நாடகம்,  நாட்டியம் என்ற கலையுணர்வுகள் பொதிந்துக் கிடந்தது நிதர்சனமான உண்மை.

Peacock Dancer

நாகூர் சுல்தான் என்ற அரவாணி தமிழகத்து மயில் டான்ஸ் கலைஞருள் மிகவும் போற்றத் தக்கவர். இந்த பாரம்பரியக்கலை இப்போது முற்றிலும் அழிந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. பிழைப்புக்காக “வாடா” என்ற தின்பண்டங்களை பொறித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இவர் நடனக் களத்தில் இறங்கி விட்டால் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துவார். மயில் டான்ஸ் கலையில் புதுப்புதுயுக்திகளை கையாண்டதாக தஞ்சை கரகாட்டக் கலைஞர்கள் இவரைக் குறித்து நினைவு கூர்கிறார்கள்.

கூத்துப் பட்டறையில் சுல்தான், ஹாஜி, காசீம் போன்ற அரவாணிகள் நாடக வசனம் பேசி, நாட்டியமாடி ரசிகர்களைக் கவருவார்கள். டி.ராஜேந்தர் இயக்கிய முதற்படமான “ஒரு தலை ராகம்” படத்தில் இடம்பெற்ற “கூடையிலே கருவாடு” என்ற பாடலுக்கு குரூப் நடனமாட அரவாணிகள் தேவைப்பட்டபோது நாகூரிலிருந்துதான் ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றார்கள்.

 ரவீந்தர்

ravindar

ரவீந்தர்

நாடகத் துறைக்கு கலைமாமணி நாகூர் ரவீந்தர் ஆற்றிய பணி அளவிட முடியாதது. அவரது சொந்தப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் . ரவீந்திரநாத் தாகூர் நினைவாக அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது எம்.ஜி.ஆர்.தான். நாகூருக்கு பக்கத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ‘டணால்’ தங்கவேலு. வலைத் தொப்பியொன்று அணிந்துக் கொண்டு உருவத்தில் முஸ்லீம் அன்பர் போலவே காட்சியளிப்பார். ரவீந்தர் கதைவசனம் எழுதி தங்கவேலு நடித்த “மானேஜர்”  என்ற மேடைநாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நாடகம் அவருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகத்தை பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் கதாசிரியராக பணியாற்றினார்.

குலேபகவாலி (1956) படத்திற்கு கதை வசனம் எழுதியதும் ரவீந்தர்தான்.  ரவீந்தருக்கு அரபி, பார்ஸி மொழிகள் தெரிந்திருந்ததால் அரேபிய  கலாச்சாரத்தை அருந்தமிழுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடிந்தது. இவர் அப்போது புதியவர் என்ற காரணத்தினால் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக தஞ்சை ராமையாதாஸின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கலையரசி, சந்திரோதயம், பாக்தாத் பேரழகி, அடிமைப்பெண் என்று 32 படங்களுக்கு மேல் கதை வசன எழுதினார்.

தூயவன்

thooyavan

தூயவன்

 தூயவன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கிய அக்பர், நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா. 84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார் “வைதேகி காத்திருந்தாள்” “அன்புள்ள ரஜினிகாந்த்” உட்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர். இவர் கதை, வசனம் எழுதி ஏ.வி.எம். ராஜன் & புஷ்பலதா ஜோடி நடித்த “பால்குடம்” நாடகம் தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது. நாகை பாண்டியன் தியேட்டரில் “பால்குடம்”  நாடகம் அரங்கேறியபோது பிரமாண்டமான ‘செட்டிங்’கண்டு நான் பிரமித்துப் போனேன்.

ஆவுக்கெச்சேனோ

வீடியோ கேமரா புழக்கத்தில் வந்த புதிதில் “ஆவுகெச்சேனோவில் ஆவியுலக ஆராய்ச்சி” என்ற குறும்படத்தை நான் எழுதி இயக்க நாகூர் சேத்தான் ஒளிப்பதிவு செய்ய, நண்பர் கபீர் ஒலிப்பதிவு செய்தது சுவையான அனுபவம். நகுதா, சாஹுல் ஹமீது, இதயதாசன், பாரூக் ராஜா, அலி, சின்னக் காமில் மற்றும் நான் எல்லோரும் நடித்திருந்தோம். தற்செயலாக நான் ஒருநாள் நான் பாண்டிச்சேரியிலிருந்து நாகூர் வருகையில் “மரைக்கார்  டிரான்ஸ்போர்டில்” இந்த வீடியோ படம் போட்டார்கள். நாம் விளையாட்டாக எடுத்த படம் இவ்வளவு தூரம் பரவி விட்டதே என்று அசந்தே போய்விட்டேன்.  நான் பஹ்ரைன் வந்த பிறகு இந்த குறும்படத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டதாக கேள்வியுற்றேன்.

நாடகங்கள் என்பது நாகூருக்கு புதிதல்ல. அந்த காலத்திலிருந்தே ஜனங்களை விடிய விடிய உட்காரவைத்து வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, சாட்டிலைட் சேனல் இல்லாத காலம் அது.

கோயில் கும்பாபிசேஷங்களில் இராமயண கதை, சீதா கல்யாணம், கதாகாலேட்சபம், நாட்டார் கூத்து, புராண நாடகம் என்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை “நூறு மசலா” “அப்பாஸ் நாடகம்” என்று அவர்களை இழுத்துப் பிடிக்க இது உதவியது. டேப்ரிக்கார்டு கேசட் வந்த புதிதில் “நூறுமசலா” கேசட்டைப் போட்டுவிட்டு பக்தி பரவசத்தோடு(!) குறிப்பாக தாய்மார்கள் நாள்முழுக்க வீட்டில் அமர்ந்து ரசிப்பதை கண்டிருக்கிறேன்.

லால் கெளஹர்

பெரும்புலவர் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் இயற்றிய ‘லால் கௌஹர்’ நாடகம் நாடகத்துறைக்கு ஒரு மைல் கல் எனலாம். எம்.ஆர்.ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் போன்று திருப்பத் திரும்ப அந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது. நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மேடை நாடகமாக நடிக்கப்பெற்று ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றதை நாகூர் மூத்த குடிமகன்கள் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார்கள்.  நாகூரில் கவ்வாலி கச்சேரிகள் நடக்கையில், மொழி புரியாவிட்டாலும் கூட விடிய விடிய உட்கார்ந்து ரசிக்கும் நாகூர்க்காரர்கள், புரிகின்ற மொழியில் நாடகங்கள் என்றால் அவர்கள் காட்டிய ஆர்வத்தைச் சொல்லவா வேண்டும்?

“லால் கெளஹர்” என்ற இந்த நாடக நூலினை 1892-ஆம் ஆண்டில் பெரும்புலவர் வித்வான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் பதிப்பித்தும் இருக்கிறார்கள்.  1990 – ஆம் ஆண்டில் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் பதிப்பாக  வெளியிடப்பட்டது அந்நாடகத்திற்கு இத்தனை ஆண்டுகட்குப் பின்னும் வரவேற்பு உள்ளதற்கு இதுவே ஒரு நற்சான்று.

‘லால் கௌஹர்’ நாடகத்தைத் தொடர்ந்து வாஞ்சூர் பக்கீர் (இவர் பக்கீர் முஹியித்தீனுடைய புதல்வர்) எழுதிய ‘அப்பாஸ் நாடகம்’ பெரும் வரவேற்பைக் கண்டது. நாகூர் , நாகப்பட்டினம் மட்டுமன்றி மலேயா (குறிப்பாக பினாங்கு), சிங்கப்பூர், சிலோன்  போன்ற நாடுகளிலும் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி இருக்கிறது.

நாகூர் கோசா மரைக்காயர் (கோ. முகம்மது நைனா மரைக்காயர் அவர்களின் புதல்வர்)  இவர் , “சராரே இஷ்க்”, “ஷிரீன் பரஹாத்”, “ஜூஹுரா முஸ்திரி”, “லைலா மஜ்னூன்” போன்ற  நாடகங்கள் எழுதி  புரட்சி செய்தவர்.

 நாகூர் புலவர்ஆபிதீனும், நாகூர் ஹனிபாவும்

Nagore_Hanifa

நாகூர் புலவர் ஆபிதீன் நிறைய நாடகங்கள் எழுதி, இயக்கி, அவரே  நடித்தும் இருக்கிறார். இஸ்லாமியப் பாடகராக எல்லோரும் நன்கறிந்த நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு திறமையான  நாடக நடிகரும் கூட என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1950-ல் புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேறியது.  நாடகத்திற்கு தலைமை தாங்கியவர்  பேரறிஞர் அண்ணா அவர்கள்  . வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் கலைஞர் மு, கருணாநிதி. நாடகத்தில் ஒரு கவிஞராக நாகூர் ஹனீபா நடித்திருந்தார். “அந்த பாத்திரத்திற்கு அனிபா என்று பெயர் வைக்கலாம், அவ்வளவு சிறப்புற நடித்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினாராம் அறிஞர் அண்ணா. கலைஞர் பேசுகையில் “ஹனி; என்றால் தேன்.  ‘பா’ என்றால் பாட்டு.  ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது” என்று வார்த்தை அலங்காரம் செய்ய அரங்கத்தில் பலத்த கரகோஷம்.

தமிழகத்தில் நாடக வளர்ச்சியில் சமயம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவுசெய்யும் நோக்கத்தில் இந்துமதம், இஸ்லாமிய மதம், கிறித்துவ மதம் ஆகிய மூன்று மதங்களும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

தமிழகத்தில் முஸ்லீம்கள் முதன்முதலாக அரங்கேற்றம் செய்த நாடகங்களுள் மூன்று நாடகங்கள் சரித்திரமச் சாதனை படைத்தவை. 1) முகமது இப்ராகிமின் “அப்பாஸ் நாடகம்” (1873), 2) வண்ணக் களஞ்சியப் புலவரின் “அலிபாதுஷா” நாடகம் மற்றும் தையார் சுல்தான் நாடகம்,  3) “லால்கெளஹர் நாடகம்” ஆகியன.

கிறித்துவ நாடகாசிரியர்கள் வழங்கிய “ஆதாம் ஏவாள் விலாசம்”, “ஞான சௌந்தரி அம்மாள் நாடகம்”, “ஞானதச்சன் நாடகம்”, “ஊதாரிப் பிள்ளை நாடகம்”, “நல்ல சமாரித்தன் நாடகம்” முதலான நாடகங்களும் பிரபலம்.இவை இசை நாடகங்களாக இருந்தன.

பின்வந்த சங்கரதாச சுவாமிகளும் நவாப் ராஜமாணிக்கமும் இவற்றை மேடையில் நடித்தனர். சோகி நாடகம், ஒட்ட நாடகம் என்று சாதிய நாடகங்களும் தோன்றின. தமிழ் நாடக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒன்று 1889 இல் வேப்பம்மாள் என்ற பெண் நாடக ஆசிரியர் சீதா கல்யாணம் எனும் நாடகத்தை இயற்றிய நிகழ்வு ஆகும்.

மேலே நான் குறிப்பிட்ட இஸ்லாமியர்கள் எழுதிய நாடகங்களின் முக்கிய கேந்திரமாக நாகூர் விளங்கியது என்பது எல்லோரும் ஒத்துக் கொண்ட விடயம்.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை; கண்ணீரால் காத்தோம்” என்று முத்தமிழில் ஒன்றான நாடகக் கலையை நாகூர் மக்கள் கண்ணின் மணியாக போற்றிப் பாதுகாத்தார்கள் என்பது வெள்ளிடமலை.

நாகூர்வாசிகள் இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு பற்றிய கட்டுரைகளை மென்மேலும் தொடர ஆசை.

  – அப்துல் கையூம்

 

Tags: , , , , , , ,