RSS

Tag Archives: அப்துல் கையூம்

இன்னும் ஒரு சில வாரங்கள்


அரைத்த மாவையே அரைத்தெடுத்து
அவலை நினைத்து உரலை இடித்து
ஆளில்லா டீக்கடையில் அஸ்கா டீ ஆத்தி
அதோ பார் வெள்ளை காக்கா என அபாரமாய் கூவி
அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமுதமுமாய்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறி
சுயபுத்தி இழந்து சொற்புத்தியும் களைந்து
கூரைமேலே சோறு போட்டால்
ஆயிரம் காகமென வாய்ச்சவடால் பேசி
போகாத ஊருக்கு பொறுமையாய் வழி சொல்லி
ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்
கொட்டை பாக்குக்கு விலை கூறித் திரிந்து
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என
கொடிபிடிக்கும் தொண்டர்கள் துதிபாட
கோளுஞ் சொல்லி குனிந்தவாறு கும்பிடும் போட்டு
நகத்தாலே கிள்ளுவதை கோடாரியால் வெட்டிச் சாய்த்து
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என பீதி கொண்டு
மடியிலே கனம் ஏந்தி வழியிலே பயம் கவ்வ
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசி
ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமியாய்
சண்டிக் குதிரையை நொண்டி சாரதி ஓட்ட
தேர்தல் நாள் வரை நெடுஞ்சுவராய் காட்சி தந்து
தேர்தல் முடிந்தபின் குட்டிச்சுவராய் காட்சிதரப் போகும்
கட்சிகளின் கூத்துக்கு மங்களம் பாட
காத்திருங்கள் இன்னும் ஒருசில வாரங்கள் !
கவலை மறந்து அமைதியாய் வேடிக்கை பாருங்கள் !!

– அப்துல் கையூம்

 

Tags:

அம்மாவும் கரகமும்


மதர்

அம்மா… கரகம் போன்றவள்
அலங்கரிக்கப்பட வேண்டியவள்

தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும்
தகுதி பெற்றவள்

அலுங்காமல் குலுங்காமல்
அப்படியே நழுவாமல்
அரவணைத்துப் பாருங்கள்

– அப்துல் கையூம்

 

Tags:

இலங்கை பிஸினஸ்


இலங்கையிலுள்ளோர்
பிஸினஸ் செய்து
ஆதாயம் கண்டதைவிட

இலங்கையை வைத்து
பிஸினஸ் செய்தவர்கள்
அரசியல் ஆதாயம்
அதிகம் கண்டார்கள்

 

Tags:

ஊசி மூஞ்சி மூடா


சென்ற வாரம் ஒரு நண்பரை பார்க்க போயிருந்தேன். நாங்கள் இருவரும் வெளியே போவதாக ஏற்பாடு. “செத்த இருங்க நான் மூஞ்சியை கழுவிட்டு வந்துடறேன்னு” உள்ளே போனார்.
“அழகா இருக்குறதுக்கு பேருதான் சார் முகம். அசிங்கமா இருக்குறதுக்கு பேரு மூஞ்சி. உங்களுக்கு இருப்பது முகம்” என்றேன். மகிழ்ச்சியில் அவருடைய முகத்தில் LED லைட் போட்டதைப்போல அப்படியொரு பிரகாசம்.
முதலாம் வகுப்பில் “ஊசி மூஞ்சி மூடா” என்று தூக்கணாங்குருவியைப் பார்த்து குரங்கு திட்டியது சட்டென்று நினைவுக்கு வந்தது.
பெண்பார்க்கும் படலத்தை முடித்துவிட்டு “பொண்ணோட முகம் அழகா இருக்கு”ன்னு சொல்றதுக்கு பதிலாக “பொண்ணோட மூஞ்சி அழகா இருக்கு”ன்னு சொல்லி பாருங்களேன். அம்புடுதேன்.
யாரையாவது திட்ட வேண்டியிருந்தால் “விடியாமூஞ்சி”, “அழுமூஞ்சி”, “தூங்குமூஞ்சி”, “உம்மணாம் மூஞ்சி”, “குரங்கு மூஞ்சி”, “வில்லன்மூஞ்சி” என்றுதானே ஆசைதீர திட்டுகிறோம்?
“அவளுக்கென்ன அழகிய முகம்”
“முகத்தில் முகம் பார்க்கலாம்”
“மஞ்சள் முகமே வருக! மங்கள விளக்கே வருக!”
என்றுதான் கவிஞர்கள் பாடியிருக்கிறார்களேத் தவிர, “மஞ்சள் மூஞ்சியே வருக!” என்று யாரும் பாடி வைக்கவில்லையே..!
பிறர் நம்மிடம் அன்பாக நடக்கவில்லை என்றாலும் “அவரு கொஞ்சம்கூட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிறார்” என்றுதான் மரியாதையாக நாம் சொல்லுகிறோம். அதுதான் தமிழர் பண்பு.
இந்த FACEBOOK உங்களுக்கு பிடிச்சிருந்தா முகநூல் என்று கெளரவமா சொல்லுங்க. இல்லேன்ன பேசாம “மூஞ்சிபுக்கு”ன்னு திட்டிட்டு போயிடுங்க
 

Tags:

ஒரு ஊருக்கு எத்தனைப் பெயர்கள் !!!


நாகூரின் பழைய பெயர்தான் என்ன?

“நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?” என்ற விளக்கத்தை ஏற்கனவே நான் பல கட்டுரைகளில் பதிந்திருக்கிறேன். நாகூரின் பண்டைய கால பெயர் என்னவாக இருந்தது? அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் இவ்வாய்வு நமக்கு பல அரிய ஆய்வுகளைத் தேடித்தரும்.

நாகூர் பெயர்காரணம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பாக, நாகூரை ஒட்டியுள்ள நாகப்பட்டினத்தின் பழைய பெயர் என்னவாக இருந்தது என்பதை ஆராய்வது இன்றிமையாதது. “ஒரு ஊருக்கு இத்தனை பெயர்களா?” என்று வியப்பில் நாம் ஆழ்ந்து போவோம்.

பூம்புகார் கடலால் கொள்ளப்படுவதற்கு முன் நாகப்பட்டினத்தின் பெயர் “நீர்பெற்று”.

சோழர்களின் ஆட்சியின்போது இதன் பெயர் “சோழகுலவல்லிப்பட்டினம்”

ராஜராஜ சோழன் ஆட்சியில் “சத்திரிய சிகாமணி” என்றிருந்தது.

“நாவல் பட்டினம்” என்ற மற்றொரு பெயர்க்காரணம் மிகவும் சுவையானது. “நாவல்” என்ற சொல் “நாவாய்” என்ற வார்த்தையிலிருந்து உதித்தது. Navy, Naval முதலிய ஆங்கில வார்த்தைகள் “நாவாய்” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான். பட்டினம் என்றால் கடற்சார்ந்த ஊர். நாவல் பட்டினம் என்றால் கப்பல் நகரம்.

”நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ ! (பாடல்-66)

மேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் “நாவாய்”  என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தின் பெயர் நாவாந்துறை (நாவாய்+துறை)

புத்த இலக்கியங்களில் இதன் பெயர் ”படரிதித்த” என்பதாகும். பாலி மொழியில் பதரி என்றால் இலந்தை என்று பொருள். (அதுதாங்க ஜூஜூபி). பதரி திட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டு நிலம் என்று பொருள். பதரிதிட்டா என்ற சொல் படரிதித்த என்று காலப்போக்கில் மருவிப் போனது.

நாகங்கள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இது “நாகப்பட்டினம்” என்றும், நாகமரம் (புன்னை மரம்) மிகுதியாக காணப்பட்டதால் இது நாகப்படினம் என்றும் பெயர் பெற்றதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

நாகர் இன மக்களுக்கும் இவ்வூருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக இவ்வூர் நாகர்பட்டினம் (நாகர்+பட்டினம்) என்று அழைக்கலாயிற்று என்று ரா.பி.சேதுப்பிள்ளை தனது “தமிழகம் ஊரும்பேரும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“நாகப்பட்டினம்” என்று சொல்வதைக் காட்டிலும் “நாகபட்டினம்” என்று சொல்வதே மிக்க பொருத்தமாகும்

நாக்கில் வசம்பு வைத்து தேய்த்தாலும் திருந்தாத டச்சுக்காரர்களில் வாயில் இந்த ஊர் “நேகபேட்டன்” என்று அல்லல் பட்டது

தொலமி (Ptolemy) என்ற கிரேக்க அறிஞர் இதனை “நிகாம்” என்றும் “நிக்காவ்வா” (Nikawa) என்றும் அழைக்கிறார்.

“நாகவதனா” (Nagavadana)  என்று சீனப்பயணி யீஜிங் (Yijing or I-tsing) அழைக்கிறார்.

“மலிபட்டான்” (Mali-pa-tan)  என்று  இரச்புத்தீன் அழைக்கிறார்.

“நவுட்டபட்டனா” (Navwttapattana) என்று கலியாணிப் பட்டயம் கூறுகிறது.

“நெகபட்டன்”  என்று போர்த்துகீசியர்கள் குறிப்பிடுகிறார்கள்

“நெகபெட்டாம்” (Negapettum) என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர்.

“நெகமா”, “நாகானனை”, “நாகநகரம்” என்று புத்த நூல்கள் பகர்கின்றன.

ஒரு ஊருக்கு இத்தனைப் பெயர்களா? என்று நாமும் விழி பிதுங்கிப் போகிறோம்.

 

மகேந்திரவர்மன் பல்லவன் காலத்தில் (604-630) வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசு நாயனார் “வங்கமலி கடல் நாகை” (தேவாரம் 4.108) என்றே குறிப்பிடுகிறார். அவர் நாகை என்று குறிப்பிடுவது நாகூர், நாகப்பட்டினம் இரண்டு ஒன்றிணைந்த பேரூரை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் “நாகை” என்ற பெயரையே காண முடிகின்றது

வங்கம் என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். கப்பல் என்பதற்கு சங்கத்தமிழில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில்  என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வங்கம், நாவாய் இவையிரண்டும் பெரியவகை கப்பல்கள்.

அப்பர் “நாகை” என்றுதானே குறிப்பிடுகிறார். இதில் நாகூர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் எழலாம். நியாயமான கேள்வி.  மேற்கொண்டுபடித்தால் நாகூரும் நாகையும் வெவ்வேறல்ல என்பது பநன்கு விளங்கும்.

அடுத்து திருஞான சம்பந்தர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” என்று பாடுகிறார்.(1.84.7).

பெரிய மலையொன்று கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? பெரிய கப்பல்களாகிய வங்கம் மலைபோல் நகர்ந்தன என்கிறார் திருஞானசம்பந்தர்.

சுந்தரர் பாடிய பாடல்களில் யாவும் நாகையை தென்நாகை என்றே குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக கீழே பத்து பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறேன். சுந்தரர், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840 – 865) காலத்தைச் சேர்ந்தவர்.

துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துனைவண்டு

தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து  –  (7.101.1)

 

முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்

திரைக்கை காட்டும் தென்நாகை  – (7.101.2)

 

முல்லை முறுவல் கொடிஎடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட

செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணம் – (7.101.3)

 

தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க

சேண்தார் புரிசைத் தென்நாகை – (7.101.4)

 

பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்

தெருவில் சிந்தும் தென்நாகை – (7.101.5)

 

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்

சேடை உடுத்தும் தென்நாகை – (7.101.6)

 

கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகை குழாம்

இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகை – (7.101.7)

 

தொள்ளை ஆம் நல்கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்

தொள்ளும் வேலைத் தென்நாகை – (7.101.8)

 

முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்

சித்தம் கவரும் தென்நாகை – (7.101.9)

 

திரை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்கமலர்ச்

சிறைவண்டு அரையும் தென்நாகை – (7.101.10)

தென்துருவம் என்ற ஒன்று இருப்பதினால்தானே மற்றதை நாம் வடதுருவம் என்று அழைக்கிறோம்? கடற்கலம் அணையும் நகரமாக புகழ் பெற்று விளங்கிய நாகையின் தென்பகுதி “தென்நாகை” என்றும், வடக்குப் பகுதியான நாகூர் “வடநாகை” என்று அழைக்கப்பட்டது.

அதன் பிறகு வந்த காலத்தில், மேற்குப் பகுதியிலிருந்த நாகூர் பகுதி “மேலநாகூர்” என்றும் கிழக்குப்புறமிருந்த பகுதி “கீழநாகூர்” என்றும் அழைக்கப்பட்டது. நாகூரில் புலமை வாய்ந்தவர்கள் மிகுதியாக இருந்தமையால் “புலவர்க்கோட்டை” என்ற சிறப்பும் பெயரும் உண்டு.

நாகூர் வடநாகையாகவும், நாகபட்டினமும் தென்நாகையாகவும் ஈருடல் ஓருயிராகவே செயல்பட்டன.

ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம, பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்கிறார்  இரா.பி.சேதுப்பிள்ளை. (தமிழகம் ஊரும்பேரும், பக்கம் :36)

1799-ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனபோது நாகபட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது. இந்த தகவல்களை ஆங்கிலேயக் குறிப்பேடுகளில் காண முடிகின்றது.

நாகூரின் மற்ற மற்ற சிறப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.

அப்துல் கையூம்

 

Tags: ,

தேர்தல் உற்சவம்


மிகெ

காகங்கள் கர்ஜிக்கும் !
கழுதைகள் பிளிறும் !
ஆகா! இவரா அந்த இரட்சகர் என
அப்படியே அசர வைக்கும் !
போகாத ஊருக்கு வழி சொல்லும் !
பொய்மையும் புரட்டும் பல்லிளிக்கும் !
நாகங்கள் நட்பு பாராட்டும் !
நம்தலையில் மிளகாய் அரைக்கும் !

வாலறுந்த பட்டமாய்
வாக்குறுதி வானிலே பறக்கும் !
நீலிக்கண்ணீர் வழிந்தோடும் !
நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் !
கூலிக்கு மாரடிக்கும் குண்டர்களின்
கொட்டம் எல்லை மீறும் !
காலிகளின் பக்கம் காவல்துறை
கால்கடுக்க துணைநிற்கும் !

கூடா நட்புகள்
கூட்டணி அமைக்கும் !
நாடாளத் துடிக்கும் !
நாளும் நிறம் மாறும் !
மாடாய் உழைக்கும்;
மக்களை ஏமாற்றும் !
வீடு வீடாய்ப் படியேறும் !
வீண் ஜாலங்கள் புரியும் !

ஒண்ட வந்த பிடாரிகள்
ஊர்ப்பிடாரியை ஓட்டும் !
கண்ட கண்ட கழிசடைகள்
கண்ணியம் நமக்கறிவுறுத்தும் !
தெண்டச்சோறுகள் திராவிடம் உரைக்கும் !
தறுதலைகள் களிமிறங்கி தேசியம் பேசும் !
வண்டவாளங்கள் சிலரது அரங்கேறும்
வாசலைத்தேடிவந்து கும்பிடுபோடும் !

ஊடகங்கள் ஊரை இரண்டாக்கி
ஊர் சிரிக்க வைக்கும் !
வேடதாரி பேர்வழிகள்
விடம் மறைத்து வேடிக்கை காட்டும் !
ஆடற்காரிகள் தெய்வமாகும் !
அரசியல் வாரிசுகள் உருவெடுக்கும் !
பாடாவதிகள் பாவப்பட்ட மக்களை
பரிதவிக்கவிட்டு அதுகள் பணம் நிரப்பும் !

– அப்துல் கையூம்

 

 

Tags: ,

மாந்தரில் முதலிடம்


சரோஜினி நாயுடு புகழ்ந்த
சன்மார்க்கத் தூதர் !

விவேகானந்தர் போற்றிய
விந்தைக்குரிய மாந்தர் !

பெனார்ட்ஷா வியந்த
பெருமானார் பெருந்தகை !

நெப்போலியன் மெச்சிய
நிறைவான மனிதர் !

மைக்கேல் ஹார்ட் முதலிருத்திய
மாண்புமிகு புனிதர் !

உலக மாந்தர்களில் நூறு
உத்தமர்களில் முதலில் இவர் பேரு !

செல்வாக்கு மிகுந்த மனிதர்களில்
சொல்வாக்கு மாறா இவருக்குத்தான்
எல்லோர்க்கும் மேலாக
இருத்துகிறார் முதலிடம் !

அவர் Humble மட்டுமல்ல
அவர் Simple மட்டுமல்ல
உலக மாந்தர்களுக்கு ஒரு Sample !

ஆம்….
அண்ணலார் நமக்கோர்
அழகிய முன்மாதிரி !

பாலையில் பூத்த இந்த
பாரிஜாத மலருக்கு
சாலையோரங்களில்
சிலைவடிவம் இல்லை !

அரபு தேசங்களிலும்
ஆளுயர பதாகைகள் இல்லை !

வரவேற்பு அறைகளில்
வரைபடங்கள் இல்லை !

அர்ச்சனைகள் இல்லை
அபிஷேகம் இல்லை !

கீர்த்தி பெற்ற இம்மனிதருக்கு
மூர்த்தியெனும் விக்ரகம் இல்லை !

உறைந்து கிடப்பதோ
ஒவ்வொருவர் உள்ளங்களிலும் !

நிறைகுடமாய் நிறைந்து வழிவதோ
நேசிக்கும் அத்தனை நெஞ்சங்களிலும்

மருத்துவம் படிக்காத
மருத்துவர் இவர் !

விஞ்ஞானம் பயிலாத
விஞ்ஞானி இவர் !

பள்ளிச் சென்று பயிலாத
படிக்காத மேதை இவர் !

பளபளக்கும் கிரிடம் அணியா
பாருலக வேந்தர் இவர் !

அரசியல் சீர்த்திருத்தம் கண்டவர்;
அரசியல் இலாபம் ஒருபோதும் காணாதவர் !

ஒவ்வொரு நொடிபொழுதும்
உலக மாந்தர்களின் உதடுகளில்
உச்சரிக்கப்படுவது இவர்பெயர்தான் !

சலாவாத்து எனும் வாழ்த்துத்தூதை
சர்வநேரமும் சார்த்துவது – இந்த
சர்தார் நபிகளுக்குத்தான் !

அவதூறு சொன்னால்
ஆர்த்தெழுகிறோம்;
ஆவேசத்தின் ஆழம்
அவசியம் அறிந்திடுவீர் !

கேவலப்படுத்துவோர்க் கெதிராய்
கிளர்ச்சிகள் செய்கிறோம்;
காரணம் தெரிகிறதா?

பொய்யுரைத்தால் பொங்கி எழுகிறோம்
புரிகிறதா ஏனென்று?

அற்ப பதர்களே !
அறிந்துக் கொள்ளுங்கள் !!

உண்மையான விசுவாசி
எதையும் பொறுத்துக்கொள்வான்

ஆனால்
உயிரினும் மேலான
உத்தமரை இழித்துரைத்தால்
ஒருபோதும் பொறுக்க மாட்டான் !
உயிர்தரவும் தயங்கமாட்டான் ! !

நாடி நரம்புகளில் இரண்டறக் கலந்தவரை
பேடிகள் நீங்கள் பழித்துரைக்க நினைத்தால்
வேடிக்கை மனிதராய் வீழ்வோம் எனமட்டும்
விளையாட்டாகவும் எண்ணாதீர் !!

– அப்துல் கையூம்

 

 

Tags: ,