RSS

Tag Archives: நாகூர் சாதிக்

சாதிக்க வந்த கவிஞன் – நாகூர் சாதிக்


நான் ஒருமுறை காரில் பயணிக்கையில் “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலை ரசித்துக் கொண்டு வந்தேன். என்னுடன் பயணித்த நண்பரொருவர் “இந்த பாட்டெல்லாமா கேக்குறீங்க? நீங்க என்ன ‘ஷியா’வா மாறிட்டீங்களா?” என்று ஒரு போடு போட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. பாவம் இன்றைய இயக்கவாதிகள் எப்படியெல்லாம் ஒரு சாராசரி முஸ்லீமை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் அப்பட்டமாக புரிந்தது. “பாத்திமா, அலி, ஹசன், ஹுசைன்” போன்றோரை புகழ்ந்து பாடப்பட்டால் அது ‘ஷியா’ பாடல் என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும். போதாதக்குறைக்கு இப்போது காதியானிக்கள், அஹ்மதியாக்கள் வேறு, வெவ்வேறு முகத்தோடு இணையதளத்தில் புகுந்து நம்மை குழப்போ குழப்பு என்று குழப்புகிறார்கள்.

நாயகத்திருமேனி அவர்களின் அன்பு மகளார் பாத்திமா அவர்களைப் பற்றி நாகூர் ஹனீபா பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். “விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த”, “பாத்திமுத்து ஜொஹ்ராவின் பரம்பரையில் வந்த பெண்ணே” “பெண்களுக்குத் தலைவியான பாத்திமா” “கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள், நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்” “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா” போன்ற பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளன.

விண்ணகமும் மண்ணகமும்

இதில் “விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமா” என்ற இனிமையான பாடல் என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் எழுதியது. இப்பாடலில் காணப்படும் சொற்சிலம்பம், வார்த்தை ஜாலம், சந்த விளையாட்டு மெச்சத்தக்க விதத்தில் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு

தங்கு புகழ் அன்னையர்க்கும்
தங்கமான தங்கையர்க்கும்
சங்கமான மங்கையர்க்கும்
சங்கையான பாத்திமா

என்ற அமுத வரிகளில் அடுக்குமொழி வார்த்தைகள் அழகுத்தமிழில் அணை திறந்த வெள்ளமாய் ஆர்ப்பரித்து அப்பாடலைக் கேட்போரை அகங்குளிர வைக்கும்.

பெண்களுக்குக் கண்மணியாய்ப்
பெரியவர்க்கு விண்மணியாய்
பண்பிருக்கும் நன்மணியாய்
பாருயர்த்தும் பாத்திமா

என்ற வரிகளில் மெருகேறியிருக்கும் பண், மென்மையாய் நம் காதில் மெல்ல வந்து மிருதுவாய் தேன் பாய்ச்சுவது போலிருக்கும்.

பூவுறங்கப் புள்ளுறங்கப்
புவனமெல்லாம் ஆழ்ந்துறங்க
நாவுறங்கா திருந்திறையின்
நாமமோதும் பாத்திமா

என்ற எதுகை, மோனை மாறா வண்ணம் சிந்தும் அந்த சந்தச் சொற்கள் நம் சிந்தையை விந்தையில் ஆழ்த்தி அவரை சொந்தம் கொண்டாட வைக்கும்.

“நாவு உறங்காது இருந்து, இறையின் நாமம் ஓதும் பாத்திமா” என்று பிரித்து பொருளறிந்து படிக்கையில் கவிஞரின் புலமைத் திறன் நம்மை புளகாங்கிதம் அடையச் செய்து, புல்லரிக்க வைக்கும்.

கோதுமையை கையரைக்க
கோவுரையை நாவுரைக்க
போதுமென்ற பொன்மனத்தால்
பொலிவடைந்தீர் பாத்திமா

“அரவைக் கல்லில் ஒரு கையால் கோதுமையை அரைத்துக்கொண்டே, “கோ”வின் (இறைவனின்) உரையான திருமறையை மொழிந்துக்கொண்டே, எளிமை வாழ்வு வாழ்ந்த, ‘போதுமென்ற பொன்மனம் படைத்த’ நபிமகளார் பாத்திமா, தன் சொல்லாலும் செயலாளும் பொலிவடைந்தார்” என்ற மகத்தான செய்தியை வெண்கலக் குரலோன் ‘இசைமுரசு’ அரிமாவென முழங்குகையில் அந்த வரலாற்று நிகழ்வுகள் அப்படியே நம் கண்கள் முன் அழகான காணொளியாய் அவதானிக்கும்.

இறையருட் கவிமணி எழுதிய இப்பாடலானது இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் ஆரம்ப காலத்தில் பாடிய பாடல். இந்த சந்தப்பாடல் தந்த வெற்றியை விட, பாத்திமா (ரலி) அவர்களைப் பற்றிய மற்றொரு பாடல் நான்மடங்கு நாடெங்கும் நற்புகழ் ஈட்டித் தந்தது. பட்டி தொட்டிகளெங்கும் ஒலிபெருக்கிகளில் ஓயாது ஒலித்தது. அப்பாடலை முணுமுணுக்காத நாவுகளே இல்லை எனலாம். குறிப்பாக பெண்கள் மத்தியில் அப்பாடல் கற்பனை செய்தும் பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமடைந்தது.

அந்த பாடல் எது தெரியுமா? “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” என்ற பரவசமிகு பாடல்.

பாத்திமா வாழ்ந்த முறை

இறையருட் கவிமணி அவர்களின் “விண்ணகமும் மண்ணகமும்” என்ற பாடலை விட, இசைத்தட்டு விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தப் பாடல். சந்தப் பாடலையும் விஞ்சிய இப்பாடலின் சிறப்புதான் என்ன என்று சற்று ஆராய்ந்துப் பார்த்தால், இப்பாடலில் காணப்படும் எளிமையான வார்த்தைகளும், அதில் இடம்பெற்றிருக்கும் கருத்தாழமிக்க கருத்துக்களும்தான் முக்கிய காரணம் என்ற உண்மை நமக்கு புலப்படும். இப்பாடலை எழுதிய நாகூர் கவிஞரை நாகூர்க்காரர்களுக்கே அதிகம் தெரியாது.

இஸ்லாமிய பாடலுலகை ஒரு கலக்கு கலக்கிய பாடலிது. நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலுக்கு அடுத்தபடியாக நானிலமெங்கும் பெரிதும் பேசப்பட்ட நற்சிந்தனைப் பாடல் இதுதான்.

பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா – அந்த
பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா!

என்று தொடங்கும் இந்த சிறப்பான பாடலின் ஆசிரியர்தான் இன்று நம் கட்டுரையின் கதாநாயகன். அந்த புகழுக்குரிய ஆசாமி யார்?

இதோ சொல்லி விடுகிறேன். அவர் பெயர் கவிஞர் நாகூர் சாதிக்.

இப்பாடலின் மகத்தான விற்பனையை கொண்டாடும் விதமாக அவருக்கு HMV நிர்வாகம் GOLD MEDAL AWARD என்ற தங்கப்பதக்கத்தை வழங்கி கெளரவித்தது. அப்படி என்னதான் சிறப்பு இப்பாடலில் இருக்கிறது?

ஒரு பாடல் என்றுச் சொன்னால் அதற்கு ‘ஆதி’யும் வேண்டும்; ‘அந்தமும்’ வேண்டும். “ஏ பெண்ணே! உனக்கு பாத்திமாவின் வாழ்க்கைமுறை தெரியுமா?” என்ற கேள்விக்கணையோடு பல்லவியை தொடங்கும் போதே, கவிஞர் நம்மிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணி விடுகிறார். ‘எதோ சொல்லப் போகிறார்’ என்ற ஆவல் மிகுந்து நாமும் பாடலோடு ஒன்றிப்போய் அடுத்தடுத்து செவிமடுக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்கிறோம்.

உத்தம திருநபியின் மகள் அல்லவா – நமது
உண்மை வீரர் அலியாரின் மனைவியல்லவா
சத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவா – நல்ல
செல்வங்களாம் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவா
அருமை அன்னையல்லவா.

முதல் அனுபல்லவியிலேயே பாத்திமா என்ற பெண்மணியின் ‘பயோடேட்டா’வைத் தந்து விடுகின்றார் கவிஞர். அவர் யாருடைய மகளார்? அவருடைய கணவர் பெயர் என்ன? அவருக்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்களின் பெயரென்ன? என்ற அனைத்து விவரங்களும் ரசிகனுக்கு ‘உள்ளங்கை நெல்லிக்கனியாய்’ கிடைத்து விடுகின்றது. அதற்கு மேல் அவன் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுவது அந்த மங்கையர்கரசி எப்படிப்பட்டவர்? அவர் குணநலன்கள் யாது? அவரது வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது? என்ற கேள்விக்கான விடை. அதுவும் ரசிகனுக்கு உரித்து வைத்த பலாச்சுளையாய்க் இதோ கிடைத்து விடுகின்றது.

கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோ – பெரும்
கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோ
குணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோ – நல்ல
குடும்பந்தன்னில் குலவிளக்காய் இருந்தவரன்றோ
இருந்தவரன்றோ

இதற்கு மேல் ஒருவரது குணநலன்களை அறிந்துக்கொள்ள ரசிகனுக்கு வேறென்ன வேண்டும்? இரண்டே இரண்டு அனுபல்லவியில் ஒரு மாதர்குல அரசியின் மகத்தான வாழ்க்கை வரலாற்றை சொல்லி முடித்து விட்டாரே கவிஞர். அதுவும் மிக மிக எளிமையான வார்த்தைகளில். பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் எதனால் மாபெரும் வெற்றி அடைந்தது என்ற பரமரகசியம் இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்குமே?

‘ஆதி’யைப் பார்த்து விட்டோம். இப்போது ‘அந்தந்திற்கு’ வருவோம். பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வு நெறிமுறையை வடித்து முடித்து விட்டார் கவிஞர். “Moral of the Story”தான் என்ன? ஒரு Message சொல்லியாக வேண்டுமே? என்ன சொல்வது? இதோ சொல்கிறார் கேளுங்கள்.

இன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா – இந்த
இக வாழ்க்கை நிலையல்ல உணர்ந்து கொள்ளம்மா – உண்மை
தீன் வழியை மறந்ததேனம்மா – நல்ல
உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா – நீ
வாழ்ந்து காட்டம்மா

ஆஹா! ஒரு கருத்தாழமிக்க பாடல் என்ற தகுதியை பெறுவதற்கு இதை விட சிறந்த இலக்கணம் வேறென்ன இருக்க முடியும்? இப்பொழுது புரிந்திருக்குமே இந்த எளிமையான மனிதரின் எளிமையான வரிகள்!

நாகூர் சாதிக் அவர்களின் மற்றொரு மகத்தான சாதனைப் பாடல் “அல்லாஹ்வை நாம் தொழுதால்”, என்ற அற்புதமான பாடலாகும்.

அல்லாஹ்வை நாம் தொழுதால்

அல்லாஹ்வை நாம் தொழுதால் – சுகம்

எல்லாமே ஓடி வரும் – அந்த

வல்லோனை நினைத்திருந்தால். – நல்ல
வாழ்க்கையும் தேடி வரும்…

பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ

(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)

வழி காட்ட மறை இருந்தும்
வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ

(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)

இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை
இகம் எங்கும் பரப்பிடுவோம்

‘பாத்திமா வாழ்ந்த முறை” என்ற பாடலில் நபிமகளாரின் வாழ்க்கைமுறையை வரிசை படுத்திவிட்டு கடைசியில் ஒரு மெஸேஜை வெளிப்படுத்தினார் நம் கவிஞர். ஆனால் இந்த பாடலிலோ அதற்கு நேர்மாறான இலக்கணத்தை கையாண்டுள்ளார். “அல்லஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்” என்ற மெஸேஜை முதற்கண் வெளிப்படுத்திவிட்டு “ஏன் நீங்கள் பள்ளி செல்ல மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சினை? பாங்கு சப்தம் கேட்கவில்லையா? அல்லது பள்ளிவாயில் செல்வதற்கு அலுப்பு ஏற்படுகின்றதா? அல்லது படைத்த இறைவனையே மறந்து போய் விட்டீர்களா? என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்கின்றார். பாடலைக் கேட்பவனின் மனதில் ஒரு சிந்தனை ஊற்றை கிளப்பி விட்டு விடுகின்றார்.

அவனும் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றான். “ஆமாம். சரிதான். நாம் ஏன் பள்ளி செல்வதில்லை? என்ன காரணத்தினால் இருக்கும்? என்று தனக்குத்தானே கேள்வியினால் வேள்விகளை நடத்திக் கொள்கின்றான். கேட்பவனை சிந்திக்க வைப்பதுதான் ஒரு கவிஞனின் தலையாய பணி. நம் கவிஞர் அந்த வேலையை மெச்சத் தகுந்த விதத்தில் கனகச்சிதமாக சிரத்தையோடு செய்து முடிக்கிறார்.

கவிஞர் அத்தோடு அவனை விட்டு விடவில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து அவனுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். “உனக்கு வழிகாட்ட திருமறை இருக்கின்றது. மேலும் உன் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நபிபெருமானின் நல்லுரையாம் “ஹதீஸ்” இருக்கிறது. “அடப்பாவி! நீ கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் இருக்கின்றாயே?” என்று சரமாரியாக ‘அட்வைஸ்’ தர ஆரம்பித்து அவனை தன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறார்.

ஒரு வினாவையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கத்தையும், தெளிவான தீர்வையும் கொடுக்காதவன் உண்மையான கவிஞனல்ல என்பது என் அபிப்பிராயம். இறுதியில் அதற்கான ஒரு தீர்வையும் கவிஞர் நாகூர் சாதிக் இப்பாடலில் தருகிறார். ஆண்டவன் கட்டளையை அடிமனதில் ஏற்றி அகிலமெங்கும் அண்ணல் நபியின் போதனையை பரப்புவதுதான் பிரச்சினைகள் தீர ஒரே வழி என்று ஒரேயடியாக முத்தாய்ப்பாய் முடித்து விடுகிறார். அவரது பாடல் வெற்றியின் பரமரகசியம் இதுதான்.

இந்த பாடலின் வரிகளை ஒருமுறை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது உண்மையென விளங்கும். இப்பாடலில் உள்ள சொற்பதங்கள், -சிறுவர் முதல் பெரியோர் வரை, படித்தோர் முதல் பாமரன் வரை- எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிய நடையில் கையாளப்பட்டுள்ளது. அரபுமொழி சொற்கள் அதிகமாக இடம்பெறும் பாடல்கள் பிறமதத்தவரை அதிகம் சென்றடைவதில்லை. ஆனால் இந்த பாடல் அறிமுகம் ஆனபோது எல்லா மதத்தவரும் முணுமுணுத்ததை நாம் செவிமடுக்க முடிந்தது. காரணம் எளிமையான எந்தமிழ் வார்த்தைகள்.

தக்பீர் முழக்கம்

இந்துமத நண்பர்கள் பாடும் மேடை நிகழ்ச்சிகளில் எப்படி கண்ணதாசன் எழுதிய “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்ற பாடல் முதற்பாடலாக இடம்பெறுகின்றதோ அதுபோன்று எல்லா இஸ்லாமிய பாடகர்களுடைய மேடை நிகழ்ச்சிகளிலும் முதற்பாடலாக “தக்பீர் முழக்கம்; கேட்டால் இனிக்கும்” என்ற பாடல் முழங்கும்.

அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்ற கண்ணதாசன் பாட்டில் வரும் அதே உற்சாகம், அதே தாள லயம், அதே உத்வேகம் இப்பாடல் கொடுக்கும். எனவேதான் இப்பாடலை முதற்பாடலாக இஸ்லாமியப் பாடகர்கள் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்பாடல் வரிகளுக்கும் சொந்தக்காரர் நம் பதிவின் கதாநாயகன் நாகூர் சாதிக் அவர்களேதான்.

நாகூர் சாதிக் அவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்து எல்லோரும் பாராட்டும் வண்ணம் எண்ணமெலாம் நிறைந்திருக்கும் மற்றொரு உதாரணம் “சொன்னால் முடிந்திடுமோ?” என்ற அமுதகானம்.

சொன்னால் முடிந்திடுமோ

நபிகள் நாயகத்தின் பெருமையை பறைசாற்ற எத்தனையோ கவிஞர்கள் புறப்பட்டார்கள். “வாழ்நாளெல்லாம் போதாதே வள்ளல் நபிகளின் புகழ் பாட” என்றும் “கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆன் வந்தே இருக்காது” என்றெல்லாம் நபிநாதரின் புகழ் பாடினார்கள்.

அளவிட முடியா அண்ணல் நபியின் அருமை பெருமைகளை அழகுத் தமிழில், அற்புதமான உருவகத்தோடு அலங்கரிக்கும் அவரது இப்பாடல் காலாத்தால் அழியாத கனிவான கானமாய் காலங்கடந்து நிலைத்துள்ளது.

சொன்னால் முடிந்திடுமோ
சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை
ஆற்றல் மிகும் சொல்லழகை

என பல்லவியைத் தொடங்கும்போதே கவிஞர், தான் எதை பாடப்போகிறார் என்ற முன்னுரையை தந்து விடுகிறார். ஆம் அவர் சொல்லப்போவது அண்ணல் நபிகளின் பேரழகை மற்றும் அவர் சொல்லழகை. இறுதியில் சொல்லப்போகும் ஏந்தலின் பெருமைதனை சஸ்பென்ஸாகவே விட்டு விடுகிறார்.

அண்ணலின் பேரழகு எப்படிப்பட்ட அழகு என்பதை கம்பனின் பாணியில் தன் கவித்திறமையை கையாள்கிறார் கவிஞர் நாகூர் சாதிக்.

வெண்ணிலவும் வியப்படையும்
வேந்தர் முகம் கண்டு விட்டு…
விண்ணகத்துத் தாரகையும்
வெட்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் பேரழகை

ஆகா! என்னமாய் ஒரு கற்பனை. உவமைக்கு இவர் தேடும் “பாடுபொருள்” இவ்வுலகிலேயே இல்லை. அதனால்தான் வானில் தவழும் வெண்ணிலவையும், விண்ணகத்து தாரகையும் உதாரணம் காட்ட உதவிக்கு இழுத்து வருகிறார்.

அண்ணல் நபியின் மேனியழகை சொல்லியாகி விட்டது. அடுத்து அவரது சொல்லழகை கூறுகிறார். யார்கண்ணுக்கும் இதுவரை புலப்படாத “அறிவு” அண்ணல் நபியிடத்தில் வந்து ‘டியூஷன்” கற்று போனதாம். அடுத்து “பண்பு” வந்ததாம். அதுவந்து கற்றுச் சென்ற பாடம் பணிவாம். இதுபோன்ற அட்டகாசமான கற்பனை எப்படி கவிஞர் சாதிக் அவர்களுக்குத் தோன்றியது என்று தெரியவில்லை.

அண்ணலிடம் அறிவு வந்து
ஆயிரம் பாடம் பெறும்…
பண்பு வந்து நபியிடத்தில்
பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் சொல்லழகை

மேனியழகையும் சொல்லழகையும் மெல்ல மொழிந்துவிட்டு அடுத்து நம் மேதகு நபியின் மேன்மையினை மெய்மறந்து மெச்சுகிறார்.

திரும்பும் திசை எல்லாம்
திருநபி செயல் மணக்கும்…
அருள் மறை வேதத்திலே
அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் பெருமைதனை

(சொன்னால்…முடிந்திடுமோ…)

“உவமைக் கவிஞர்” என்று கவிஞர் சுரதாவைப் புகழ்வதைப்போல கவியுலகில் சாதிக்கும் நாகூர் சாதிக்கையும் தாராளமாக இந்த அடைமொழியிட்டு அழைக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

இருலோகம் போற்றும் இறைத்தூதராம் 

நாகூர் ஹனீபா, இந்திப்பட மெட்டில் இஸ்லாமியப் பாடல்கள் பாடுவது இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமல்ல. அது அரும்புலவர் ஆபிதீன் காலத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது. , “மறைதீபம் இதோ பாராய்” “பாலைவனம் தாண்டி போகலாமே நாம்” “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்” “தீன்கொடி நாட்டிய தேவா” போன்ற பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தன.

ஜிதேந்திரா நடித்த “ஜீனே கீ ராஹ்” என்ற இந்திப்படத்தில் “ஆனேஸே உஸ்கே ஆயே பஹார்” என்ற மெல்லிசை பாடல் மிகவும் பிரபலமாக இருந்த நேரம் அது. முகம்மது ரஃபி அவர்களின் மென்மையான குரலில் இழையோடும் ராகலயம் மனதைப் பிழிந்தெடுக்கும். அந்த பாடலை சிம்மக்குரலோன் நாகூர் ஹனிபாவின் குரலில் கர்ஜிக்க வைத்தால் என்னவென்று தோன்றியது நாகூர் சாதிக் அவர்களுக்கு.

“இருலோகம் போற்றும் இறைத்தூதராம், இஸ்லாத்தைத் தந்த நபிநாதராம்”

என்ற நாகூர் சாதிக் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல் இசையார்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. “அருள்வடிவானவர்” என்று பாடும்போது நாகூர் ஹனீபா அவர்கள் அந்த “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற எழுத்தை படாதபாடு படுத்தியதுதான் கொடுமையிலும் கொடுமை. நாகூர் சாதிக் அவர்களை நேரில் காண நேர்ந்தால் “இந்த பாடலில் அவர் சாதகம் பண்ணுவதற்கு ஏதுவாக, வேறு ஏதாவது நெடில் வார்த்தை சங்கதியை லாவகமாக நுழைத்து, நாகூர் ஹனீபாவை சோதிக்காமல் இருந்திருக்கலாமே! அவரை இந்த பாடுபடுத்தி எங்களையும் படுத்தி விட்டிர்களே?” என்ற கேள்வியை அவரிடத்தில் கேட்க வேண்டும்.

வெளிச்சத்துக்கு வராத மொட்டுக்கள்

காட்சிக்கு எளிமையானவர் கவிஞர் சாதிக். என் இனிய நண்பர் இதயதாசனையாவது “கவிஞரே!” என்று பலரும் அழைக்க என் காதுகுளிர கேட்டிருக்கிறேன். ஆனால் இவரை யாரும் “கவிஞரே!” என்ற அடைமொழியோடு விளித்து நான் கண்டதில்லை. “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாக்கு இவருக்குத்தான் பொருந்தும். ஆடம்பரமில்லாத அடக்கம், அலட்டிக் கொள்ளாத தன்மை, பந்தா இல்லாத பண்பு, குறைவான பேச்சு; நிறைவான செயல், விளம்பரம் விரும்பாத விந்தையான மனிதரிவர்.

நாகூரில் கவிஞர்கள் என்று சொன்னால் புலவர் ஆபிதீன், நாகூர் சலீம். கவிஞர் இஜட்.ஜபருல்லா – இவர்களைத்தான் சட்டென்று அடையாளம் காட்டுவார்கள். வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ படைப்பாளிகள் இன்னும் திரை மறைவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியுலகிற்கு கொண்டுவர இந்த ஒரு வலைப்பூ காணாது.

சாரு நிவேதிதா நாகூர்க்காரர் என்பதே பல பேருக்குத் தெரியாது. உதாரணத்திற்கு டி.என்.இமாஜான் என்ற எழுத்தாளரை எடுத்துக் கொள்வோம். இவரை எத்தனைப் பேருக்குத் தெரியும்? இவரும் நாகூர்க்காரர்தான். யாரும் இவரை கண்டுக் கொள்வதில்லை. “Master of All Subject” என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட தமிழ்வாணனைப் போன்று நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதித் தள்ளி இருக்கிறார். நாகூரின் அழ.வள்ளியப்பா என்றுகூட இவரைச் சொல்லலாம். (இவருடைய புத்தக வரிசைகளைக் காண இங்கே சொடுக்கவும்)

“நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்” என்ற இவரது நூலில் காணப்பட்ட இக்கவிதை வரிகள் என் மனதைக் கொள்ளை கொண்டன:

தொண்டை சரியில்லை
பொழுது எப்படி விடியும்?
சேவலின் கவலை!

‘இந்த உலகத்தை ரட்சிக்க வந்த புண்ணியவான் நான்தான்’ என்று எண்ணிக்கொண்டு இலவசமாக உபதேசம் வழங்கிக்கொண்டிருக்கும் என் நண்பர்கள் சிலருக்கு ஒரு இக்கூற்று சாலப்பொருந்தும்.

அம்மா, தாயே!
பிச்சைக்காரனின் குரல்
வீட்டில் சிறுமி!

வேடிக்கையான நடைமுறை முரண்பாட்டை சித்தரிக்கும் முத்தான வரிகள்.

தலைப்புக்கள் ஜனரஞ்சகமானவைகளாக இருந்தாலும் நூற்றுக்கணக்கில் நூல்கள் எழுதிக் குவிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் கிடையாது. இதற்காகவே இமாஜானுக்கு முதுகில் ஒரு சபாஷ் தட்டலாம். அதிகமான நூல்கள் எழுதிக் குவித்த நாகூர்க்காரர் நாகூர் ரூமிதான் என்று இதுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை இந்த மனிதர் பொய்யாக்கி விட்டார்.

நாகூர் ஹனிபாவுக்காக எழுதிய நற்றமிழ்க் கவிஞர்கள்

ஒரு கவிஞனின் பாடலானது நாகூர் ஹனிபா அவர்களது சிம்மக்குரலால் பாடப்பட்டு, அது இசைத்தட்டாக வெளிவரவெண்டுமெனில் அதற்காக யாகம் செய்ய வேண்டும். முக்கியமாக யோகம் வேண்டும். தன் பாடல் அரங்கேற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் பல கவிஞர்கள் அவரது வீட்டு வாசலில் தவம் கிடந்துள்ளார்கள். கவிவாணர்கள் அத்தனை பேருக்கும் இந்த பேறு கிடைத்து விடுவதில்லை. இந்த பேறு கிடைத்துவிட்டால் நல்ல பேரும் கிடைத்து விடுவது ‘அக்மார்க் கியாரண்டி’.

இசைமுரசுவின் பாடல்கள் மகத்தான வெற்றி பெற்றமைக்கு அவரது ‘பாடல் தேர்வு’தான் முக்கிய காரணம் என்று கூறுவேன். பிற பாடகர்களின் பாடல்கள் பத்தில் ஒன்றோ இரண்டோ ‘ஹிட்’ ஆகும் பட்சத்தில் இவரது எல்லா பாடல்களுமே சக்கை போடு போட்டு, வெற்றியின் முகட்டை திக்கெட்டும் எட்டும். பாடலின் கருப்பொருள் பொதுப்படையாக, எல்லோர் மனதில் சென்றடைவதாக, பிரச்சினைக்குரியதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிக மிக கவனமாக இருப்பார். அந்த விஷயத்தில் நம் முன்னோடி பாடகர் பயங்கர கில்லாடி.

“நாகூர் ஹனிபா, தனக்கு பாடல் எழுதிக் கொடுக்கும் கவிஞர்களை வெளிச்சத்திற்கு வர விடாமல் இருட்டடிப்புச் செய்வார்” என்ற குற்றச்சாட்டை புகுத்தும் இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் போன்ற அரைவேக்காடுகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை. பாடலெழுதும் கவிஞர்களின் பெயர் இசைமரபுகளுக்கு ஏற்ப இசைத்தட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது வழக்கம். மேடைக் கச்சேரிகளின்போது பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் பாடலுக்கு இடையே பாடல் எழுதிய கவிஞரின் பெயரை அறிவிப்பதையும் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் நாகூர் ஹனிபா. இதைவிட வேறென்ன அவர் செய்ய முடியும்? சில இந்தி கஜல்களில் பாடலாசிரியரின் பெயரை பாடலுக்குள்ளேயே புகுத்துவதுபோல் தமிழ்ப்பாடல்களிலும் ஒரு மரபு இருந்திருந்தால் இந்த குற்றச்சாட்டுக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும். ஒரு சில பழைய பாடல்களில் நாகூர் புலவர் ஆபிதீன் இந்த யுக்தியைக் கையாண்டுள்ளதை கவனிக்க முடிகிறது.

“ஜபருல்லா பிறந்த செய்தியை நான்தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை, நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்” என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா. அவ்வளவு நெருக்கமாக இருந்த நாகூர்க்கவிஞர் இஜட்.ஜபருல்லாவுக்கு கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் கவிஞர் நாகூர் சாதிக் அவர்களுக்கு வாய்த்தது. நாகூர் ஹனிபாவின் குரலில் ஜபருல்லாவின் பாடல் மலர்வதற்கு அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இசைமுரசுக்கு பாடல் எழுதித் தந்தவர்களின் வரிசை கணக்கிலடங்காது. புலவர் ஆபிதீன், மதிதாசன் என்கிற ஷாயிர் H.அப்துர் ரஹீம், தா. காசிம், அப்துஸ் ஸலாம், நாகூர் சலீம், நாகூர் சேத்தான், நாகூர் E.M.நெய்னார், அபிவை தாஜுதீன், இ. பத்ருதீன், மறைதாசன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாகூர் சாதிக் அவர்களைப் பொறுத்தவரை அவர் நாகூர் ஹனீபாவுக்காக எழுதித் தந்த அத்தனைப் பாடல்களுமே முத்தான பாடல்கள்; சத்தான பாடல்கள்; எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தித்திக்கும் பாடல்கள். நாகூர் ஹனிபாவுக்கும் கவிஞர் சாதிக் கைராசி மிகுந்தவர் என்ற எண்ணம் உள்ளூற மனதில் குடிகொண்டிருந்தது.

நாகூர் ஹனீபா என்ற மாபெரும் பிம்பத்திற்கு முன்னாள் அவருக்கு பாடல் எழுதிதந்த கவிஞர்கள் நிழலாக மறைந்து போனார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு நாகூர் ஹனீபாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பயனில்லை. அந்த கறுப்புச் சூரியனின் தோற்றத்தைப் போலவே அவருடைய ‘இமேஜும்’ ஆஜானபாகுவானது. அந்த அதிரடி சூரியனுக்கு முன்பாக எவரெடி ‘டார்ச்’ வெளிச்சம் எடுபடாமல் போவது இயற்கைதானே?

(முனைவர் பட்டத்திற்காக நாகூர் ஹனீபாவின் பாடல்களை ஆய்ந்துவரும் இலங்கை சகோதரர் ஒருவருக்கு என்னுடைய கட்டுரைகள் பேருதவியாக இருக்கிறது என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது)

“நாகூர் ஹனீபாவின் பாடலின் வெற்றிக்கு காரணம் அதை எழுதித் தந்த கவிஞர்களா? அல்லது அவரது பாடல் தேர்வா?” என்ற தலைப்பு வேண்டுமானால் பட்டி மன்றத்திற்கோ அல்லது முனைவர் பட்டம் வாங்க நினைக்கும் கற்றறிந்த மாணவருக்கோ முற்றும் உகந்ததாக இருக்கும். நாகூர் ஹனீபாவின் பாடலின் வெற்றிக்கு பின்னணியில் ஒரே ஒரு நபர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது மட்டும் எனக்கு திட்டவட்டமாகத் தெரியும். அவர் பெயர் இன்பராஜ். திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர். நாகூர் ஹனீபாவின் பெரும்பான்மையான பாடலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அவர். இன்பம் பொங்கும் பாடல்கள் யாவும் இன்பராஜ் இசையமைத்த இன்னிசை.

நடிகை சரோஜாதேவிக்கு கண்கள் பேசுவது போல, சிவாஜி கணேசனுக்கு உதடுகளும் புருவங்களும் பேசுவதைப் போல, இன்பராஜுக்கு கைவிரல்கள் பேசும். ஆம். ஆர்கன் கீ-போர்டில் இவரது விரல்கள் படருகையில் அத்னான் சாமியின் அதே வேகம். குலாம் அலியின் அதே லாவகம். இன்பராஜ் என்ற அற்புதமான இசைக்கலைஞன் வெளிச்சத்துக்கே வராமல் போனான் என்பது ஒரு மாபெரும் துரதிருஷ்டமே. இன்பராஜுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு இதோ வருகிறேன்.

பாடகர் ஹெய்னுலாபுத்தீன்

இஸ்லாமியப் பாடகர் ஜெய்னுலாபுத்தீன் என் கல்லூரி காலத்தில் நான் படித்த அதே சென்னை புதுக்கல்லூரியில் படித்தவர். நடிகர் ராதா ரவி, சின்னி ஜெயந்த் மற்றும் ஜெய்னுலாபுத்தீன் ஒரே ‘செட்’ மாணவர்கள். கல்லூரி ஆண்டுவிழாவில் ராதா ரவி ஒரு நாடகத்தில் நடிக்க அவருடைய சகோதரர் எம்.ஆர்.ஆர்.வாசு நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தார். வேகமாக ஊதினால் காற்றில் பறந்துவிடும் ஒல்லியான தேகம் உடைய முஸ்லிம் மாணவர் ஒருவர் Benaam () என்ற படத்தில் இடம் பெற்ற,. சன்ச்சல் பாடிய “யாரா ஓ யாரா”  என்ற எட்டுக்கட்டை உச்சஸ்தாயி பாடலை அதே குரல் வளத்துடன் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் அந்த நபர்தான் இன்றைய இஸ்லாமியப் பாடகராக வலம்வரும் “வெள்ளிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வருவேன்” புகழ் ஜெய்னுலாபுத்தீன் பைஜி. அவரை நாங்கள் ” The chanchal of New College” என்றுதான் செல்லமாக அழைப்போம்.

[அது என்னமோ தெரியவில்லை. இஸ்லாமியப் பாடகர் என்றாலே நாகூர் ஹனிபா, காயல் ஷேக் முஹம்மது. ஜெய்னுலாபுதீன் போன்று எட்டுக்கட்டை தொனியில், அடித்தொண்டையிலிருந்து, High Decibel Frequency-யில், ஸ்பீக்கர் தெறிக்க, காது ஜவ்வு கிழிய பாடவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. உதாரணத்திற்கு ஜக்ஜித் சிங் போன்று யாராவது ஒருவர் மென்மையான குரலில் பாடினார் என்று வைத்துக் கொள்வோம். அவரை இஸ்லாமியப் பாடல் பாடுவதற்கு லாயக்கே இல்லை என்று நம் மக்கள் கண்டிப்பாக Disqualify செய்து விடுவார்கள்]

பாடகர் ஜெய்னுலாபுத்தீன் கல்லூரியில் என்னைவிட இரண்டு வருடங்கள் சீனியர். (நடிகர் சரத் குமாரும் அதே கல்லூரியில் வித்தியாசமான ‘பைக்’ வைத்துக் கொண்டு பந்தாவாக ‘அலம்பல்’ பண்ணிக்கொண்டிருந்த காலம் அது) பாடகர் ஜெய்னுலாபுத்தீனுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஜெய்னுலாபுத்தீன் அவர்களுக்கு சுமார் பத்து இஸ்லாமியப் பாடல்களை ஒரே நேரத்தில் எழுதித் தந்தேன். அந்த பத்து பாடல்களுக்கும் இரண்டே நாட்களில் வெறும் ஒரு சிந்தஸைசரை வைத்துக் கொண்டு திறம்பட இசையமைத்துக் கொடுத்தார் இன்பராஜ். ஒவ்வொரு பாடல்களுக்கும் பத்து விதமான மெட்டுக்கள் பலவிதமாக இசைத்துக் காண்பித்து எனக்கும் ஜெய்னுலாபுத்தீன் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அவருடைய இசைத்திறத்தை வெளிக்காட்டியதை என்னால் மறக்க முடியாது. “பாலைவனத்தில் பூத்த மலரே” “அலீஃப் என்ற எழுத்தில் மட்டும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு” “போகும் மேகங்களே! எங்கள் பூமான் நபிக்கு சலாத்தை சொல்லுங்களேன்” போன்ற எனது பாடல்கள் தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியாவிலும் ஜெய்னுலாபுத்தீன் அவர்களின் குரலில் ஒலித்தது.

அதே போன்று, 1987-ஆம் ஆண்டு பாடகர் ஜெய்னுலாபுத்தீன் உடன் நாகூர் சாதிக் அவர்களுக்கு ஏற்பட்ட நட்புறவுக்குப் பிறகுதான் கவிஞருடைய ஏகப்பட்ட பாடல்கள் அரங்கேறின. அவரின் அளவிலா கவியார்வத்திற்கு வடிகாலாக இருந்தார் இந்த பாடகர். “ஆன்மீகத் தென்றல்” என்ற பட்டத்துடன் A.ஜெய்னுலாப்புத்தீன் ஃபைஜி. இசையுலகை வலம் வந்த நேரம் அது.

“நன்றியை வைத்து உனைப் புகழ்ந்தேனே
நல்லருள் செய்வாய் யா ரஹ்மானே!”

“என் ஆசை நெஞ்சம் தேடுதே யாரசூலல்லாஹ்”

“மன்னர் நபி நடந்து சென்ற”

போன்ற பாடல்கள் நாகூர் சாதிக் என்ற கவிஞரை மென்மேலும் இஸ்லாமிய இசையுலகில் அடையாளம் காட்டித் தந்தது.

சாதிக்க வந்த ஆதிக்க நாயகன்

75-வயதான நாகூர் சாதிக் பந்தா எதுவுமே இல்லாத பேர்வழி. புகழுக்கு ஆசைப்படாதவர். தன் கவித்திறமையை பகிரங்கமாக வெளிக்காட்டி சமுதாயத்தில் பீற்றிக் கொள்ளாதவர். இன்றைய இளம் தலைமுறையினர் யாருக்கும் கூடுதல் பரிச்சயம் இல்லாதவர். “தானுண்டு தன் வேலையுண்டு” என்றிருப்பவர். மொத்தத்தில் பிழைக்கத் தெரியாத மனிதர்.

1937-ஆம் ஆண்டு அப்துல் கனி, ஹமீதா அம்மா இருவருக்கும் மகனாக பிறந்த இவர் பிறக்கு முன்பே தந்தையை இழந்து, சிறிய தந்தை செய்யது இப்ராஹீம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து ஆளானவர். நாகூர் ஹனிபா பயின்ற அதே நாகூர் செட்டியார் பாடசாலைதான் இவருக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த கலாகேந்திரம். இவர் கவிதை எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து முறையான பயிற்சி தந்தவர் கவி A.S.அலாவுத்தீன் அவர்கள்.

நாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களான ரவீந்தர், தூயவன், நாகூர் சலீம், நாகூர் சேத்தான், டைலர் அஜ்ஜி இவர்களைப்போன்று நாகூர் சாதிக்கின் பெயரும் நாகூர் நாடக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பின்னர் “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

நாகூரில் பல கவிஞர்கள் “பைத்து சபா” மூலமாக கண்டெடுக்கப் பட்டவர்கள்தான். ஏதாவது ஒரு சினிமாப் பாடல் பிரபலமாகி விட்டால் போதும். அதே மெட்டில் உடனே ‘இஸ்லாமியப் பாடலொன்று” முளைத்துவிடும். குத்துப்பாடல் மெட்டில் இஸ்லாமியப் பாடல்கள் அரங்கேறுகையில்தான் சிற்சமயம் நமக்கு இரத்தக்கொதிப்பும் கூடவே எகிருகிறது. நாகூர் சாதிக் அவர்களின் எல்லா பாடல் வரிகளும் கண்ணியம் மிக்கதாக இருக்கும்.

வரந்தரும் மாநபி வையத்தில் பிறந்தாரே
முழு மதி ஒளிவோடு மனிதா!

என்ற பாடலோடுதான் அவரது அறிமுக நுழைவு இருந்தது. அன்று எழுதத் தொடங்கிய பேனா இன்றுவரை நிறுத்துவேன் என்பேனா என்கிறது. கவிதையுலகில் சாதிக்க வந்த சாதிக், ஆதிக்க நாயகனாக இன்றுவரை வலம் வருகிறார்.

நாகூரில் கவிஞர்கள் நிறைய உருவாவதற்கு என்னதான் காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தேன். மண்ணின் மகிமை, புலவர் கோட்டை என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும். இதுபோன்ற பைத்து சபாக்கள், மற்றும் கல்யாண நிகழ்ச்சியில் இடம்பெறும் ‘நாலாம் நீர்’ சடங்கின்போது இசைக்கப்படும் பரிகாசப் பாடல் போன்றவை, வளரும் கவிஞர்களுக்கு ஒரு Platform அமைத்துக் கொடுக்கிறது. இன்று கவிஞர்களாக வலம் வரும் கதிர்தாசன் (காதர் ஒலி), இதயதாசன் (காசிம்) உட்பட எத்தனையோ கவிஞர்கள் பரிகாசப் பாடல்கள் எழுதி கவிஞர்களாக நம்மிடையே அங்கீகாரம் பெற்றவர்கள்தான்.

நாகூர் வருகை தந்து, மேடையேறி இங்கிருந்து பிரபலமடைந்த பாடகர்களில் அதா அலி ஆஜாத், ஹரிகிருஷ்ணன், நாகை ராமகிருஷ்ணன், காயல் ஷேக் முகம்மது, ஜெய்னுலாபுதீன் போன்றோர்கள் அடக்கம். வெளியூர்க்காரர்களான இவர்கள் அனைவரும் நாகூர்க் கவிஞர்களின் பாடலைப் பாடியிருக்கின்றனர். ஆக உள்ளுர்ப் பாடகர்கள் அன்றி வெளியூர்ப் பாடகர்களுக்கும் பாடல் எழுதித் தந்து புகழ் அடையக் கூடிய கூடுதல் வாய்ப்பு நாகூர்க் கவிஞர்களுக்கு தாராளமாகவே ‘போனஸாகக்’ கிடைக்கிறது. நாகூர்மண் கச்சேரிகளுக்கு பேர்போனதால் கவிஞர்களின் பேனாக்களுக்கும் எல்லையில்லா கொண்டாட்டம்தான்.

அண்மையில் (2011-ஆம் ஆண்டு) சமுதாயம் மறந்து போன இக்கவிஞனை Innerlight Moments என்ற சிங்கை நிறுவனம், சிங்கப்பூர், மலேசியாவுக்கு வரவழைத்து கெளரவித்தது. நாகூரைப் பொறுத்தவரை இவருக்கு பாராட்டு விழா நடத்தினால் யாரும் வருவார்களா என்பது சந்தேகமே. காரணம் நாகூர் ஹனீபா என்ற சாதனையாளனுக்கு சில ஆண்டுகட்கு முன்னர் நாகூர் முஸ்லீம் சங்கத்தில், ஜனாப் சுல்தான் மாலிமார் அவர்களின் தலைமையில், ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி, ஊரெல்லாம் கூப்பாடு போட்டு, போஸ்டர் அச்சடித்து, நோட்டீஸ் விநியோகித்து, விளம்பரம் செய்து, அவருக்கு “வாழ்நாள் விருது” கொடுத்தபோது அக்கூட்டத்திற்கு திரண்டு (?) வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதைக்கண்ட கம்பம் சாகுல் ஹமீது “இதே விழாவை கம்பம் நகரில் ஏற்பாடு செய்திருந்தால் ஊரே திரண்டுவந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கும் என்று மனமுடைந்து பேசினார். இதைத்தான் “உள்ளூர் மாடு விலை போகாது” என்று பழமொழி சொன்னார்களோ?

தும்பை விட்டு வாலைப் பிடித்தே பழக்கப் பட்டு போனவர்கள் நாம். ஏனெனில் இருக்கும்போது அவனை கண்டுக்காமல் இருந்துவிட்டு, அவன் போனபின் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான் நமது பண்பாடாக இதுவரை இருந்து வருகிறது. தமிழுக்கு இறவாப் புகழைப் பெற்றுத் தந்த பாரதியின் சவ ஊர்வலத்துக்கு 30 பேர்கள் கூட கலந்துக் கொள்ளவில்லையே? ஒரு கொத்துப் பறாட்டவுக்கு கவிதை பாட தயாராக இருந்து, வறுமை தின்ற கவிஞனான புலவர் ஆபிதீனை நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு அவன் போனபிறகு அவன் பெயரில் “ஆபிதீன் சதுக்கம்” என்று பெயர் மட்டும் வைத்து பொதுக்கூட்டம் போட, அந்த நாற்சந்தியை பயன்படுத்திக் கொள்கிறோம். மகாகவி சாரண பாஸ்கரனை கடைசி காலத்தில் “சீட்டுக்கவி” எழுதி உதவி எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளியதே இந்த சமுதாயம்?

நாகூர் தர்கா நிர்வாகம் கவிஞர் சாதிக் அவர்களுக்கு “ஆன்மீகக் கவிஞர்: என்ற பட்டத்தை தந்து தன் பங்குக்கு கடமையை நிறைவேற்றி விட்டது.

வருங்காலத்தில் நாகூர் சாதிக் அவர்களின் மறைவுக்குப் பின்னால் யாராவது இன்னொரு கவிஞர் வந்து “கவிஞர் சாதிக் வாழ்ந்தமுறை உனக்குத் தெரியுமா?” என்று அவரை வருங்கால சந்ததியினருக்கு நினைவு படுத்துவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.

– அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி: Hawama Majeed 

நன்றியை வைத்து உனைப் புகழ்ந்தேனே

நெஞ்சில் உருவாகும் நினைவெல்லாம் பாடும்

கவிஞர் நாகூர் சாதிக் வலைத்தளம் 

 

 

Tags: , , , , ,

நாடகப்பணிக்கு நாகூர்க்காரர்களின் பங்களிப்பு


“நாகூர் என்ற சிறிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டீர்களா?” என் அபிமான வாசகர்கள் பலர் இதே கேள்வியைத்தான் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். நான் பிறந்த மண்ணைப்பற்றி சிந்தித்து சிலாகித்து எழுதுவதற்கு அளப்பரிய விஷயங்கள் அமுதசுரபியாய் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கின்றன.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, நான் பிறந்த மண், தனக்கென ஒரு பிரத்தியேக  மகரந்த வாசனையை சுவீகரித்து வைத்திருக்கிறது. படித்து தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை விட, பரிச்சயமான விஷயங்களை நுகர்ந்து, அனுபவக் கலப்போடு அலசி ஆராய்வதில் உள்ள சுகந்தமே தனி.

நாடகப் பணியையும் நாகூரையும் இணைத்துப் பேசுகையில், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இச்சிற்றூரில் நாடகத்திற்கான பங்களிப்பு பெரிதாக என்ன இருந்துவிட  முடியும் என்றுதான் மேலோட்டமாக யாருக்கும் தோன்றும்.  ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் முடியும்?’ என்று பலரும் நினைக்கக் கூடும்.

இசையும், நாடகமும் இஸ்லாத்துக்கு எதிர்மறையான விஷயங்கள். ஆதலால் இவைகளுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு எதுவுமே இருக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே நிலவி வருகிறது. முன்னோடியான காரியங்களை முஸ்லீம்கள் நிகழ்த்தி அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்பதற்கு நாகூரின் கடந்தகால வரலாறு நல்லதோர்  எடுத்துக்காட்டு.

“நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்று சமுதாயக் கவிஞர் தா.காசிம் அடிக்கடி குறிப்பிடுவார். ஆட்டுக்கால் சூப்பு விற்பவரும், கசாப்புக்கடை வைத்திருப்பவரும், முடிதிருத்தும் நாவிதரும், சாயம் பூசுபவரும் இரவு நேரமானால் மேடையேறி  தத்தம் இனிய குரலால் ரசிகர்களை வசீகரிப்பது இங்கு சர்வ சாதாரணம். யாரும் அவர் செய்யும் தொழிலை வைத்து குறைத்து எடை போடுவதில்லை. மாறாக கலைக்கும், கலைஞனுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் தருபவர்கள் இவ்வூர் மக்கள்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் முடிதிருத்தும் நாவிதர்கள்தான் “பதம்” என்னும் இசைக்கலையை இவ்வூரில் அழிந்து போகாமல் காப்பாற்றியவர்கள்.  சரளமாகவும், சமயோசிதமாகவும், மடை திறந்த வெள்ளமென அந்தந்த நேரத்தில் அவர்கள் வாயிலிருந்து வந்துவிழும் பாடல்வரிகள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கும்.

 “காரைக்கால் ரோட்டைப் பாரு

காதர் சுல்தான் வூட்டைப் பாரு”

“ஆண்டி குளத்தைப் பாரு

அஜீஸ் சன்ஸ் வூட்டைப் பாரு”

போன்ற எதுகை மோனை வரிகள் அவர்கள் இடம், பொருள், ஏவல், அறிந்து அனாயாசமாக உதிர்க்கும் கவிதைத் தொடர்கள்.

நாகூர் வழிபாட்டுத்தளம் என்று புகழ் பெற்றிருந்த காரணத்தினாலேயே வடநாட்டு இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து நாகூர் தர்காவில் ‘கவ்வாலி’ என்ற சூஃபி இசையை அறிமுகம் செய்து, ஹிந்துஸ்தானி இசையின் மீதும் இவ்வூர் மக்களிடையே ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போனார்கள். அஜ்மீருக்கும் நாகூருக்கும் ஏதோ ஒரு இசைவழி தொடர்பு இருந்தது.

தமிழிசையும்,  வடநாட்டு இசையும் ஒன்றோடொன்று இணைந்து Fusion-ஆகி ‘இஸ்லாமிய இசை’ என்னும் ஒரு புதுவடிவத்திற்கு நாகூர் அடிகோலிட்டது எனலாம். பெரும்பாலான நாகூர்க்காரர்களுக்கு உருதுமொழி தெரியாத போதிலும் கூட விடிய விடிய அமர்ந்து இசையைக் கேட்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தது அவர்களது இசையார்வத்திற்கும், கலையுணர்வுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றும் நாகூர் கடைவீதிகளில் சென்று சற்றே நோட்டம் விட்டால் நுஸ்ரத் பதே அலிகான் ‘கவ்வாலி’ ஒருபுறம் பாடல் பாடி அசத்திக் கொண்டிருப்பார் அல்லது குலாம் அலி ‘கஸல்’ மற்றொருபுறம் இசைத்துக்கொண்டு இருப்பார் அல்லது கடைத்தெருக்கோடியில் உவைஸ் ரிஸா காதிரி “நாத்” பாடி பரவசப்படுத்திக் கொண்டிருப்பார். ஆம். கேசட் கடையின் விற்பனையுக்தியாக நாலாபக்கமும் இசைநாதம் முழங்கிக்கொண்டிருக்கும்.

Nagore session

சூஃபி இசை என்ற பெயரில் டெல்அவிவ் வரை பயணம் மேற்கொண்டு  நாகூரின் பெருமையை பறைசாற்றியவர்கள் ‘பாவா’க்கள் என்று அழைக்கப்படும் பக்கீர்மார்கள்தான்.

நான் முன்னமேயே சொன்னதுபோல் நாகூர்க்காரர்கள் இசைக்கலையை போற்றி வளர்த்தார்களேயொழிய இசைப்பவர்களின் சமுதாய அந்தஸ்தோ அல்லது பொருளாதார அந்தஸ்தோ அவர்களுக்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தது.

இயல். இசை, நாடகம் இம்மூன்றும் கலந்ததுதான் முத்தமிழ். “முத்தமிழ் வளர்த்த நாகூர்” என்று வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டும் சொல்லப்படும் வார்த்தை அல்ல. நாகூரார்களின் இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பங்களிப்பை பிறிதொருமுறை நாம் அலசி ஆராய்வோம். அதற்கென நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டிவரும்.

நாடகத்துறைக்கு நாகூரின் பங்களிப்பு எந்த வகையில் இருந்தது என்பதே இன்று நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு.

எத்தனையோ சிற்றூர்கள் தத்தம் பங்களிப்பை தமிழுக்காக வாரி வாரி வழங்கி இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க நாகூரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு என்ன அப்படியொரு முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழ நியாயமிருக்கிறது. நாகூரைப் பற்றிய சில வியக்கத்தக்க விடயங்களை படிக்கும்போது என்னுடைய கூற்றில் நியாயம் இருப்பது வாசகர்களுக்கு நன்கு விளங்கும்.

நாகூரைப் பொறுத்தவரை நாகூரின் இலக்கிய மேன்மைகளை அதிகம் பேசுபவர்கள் நாகூர்க்காரர்கள் அல்ல. வெளியூர்க்காரர்ளும் வெளிநாட்டுக்காரர்களும்தான். “புதையல் மூட்டை மீது அமர்ந்துக் கொண்டே, புதையலைத் தேடுகின்றோம் நாம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வதைப் போல நாகூரின் பெருமை நாகூரில் வசிப்பவர்களுக்குத் தெரிவதில்லை.

நாகூரின் வரலாற்றுச் சிறப்பைக் நமக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு புதுக்கோட்டை ராஜா முஹம்மதோ, ஜெர்மனி நா.கண்ணனோ, பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்க பெண்மணியோ, அல்லது யதார்த்தா கி.பென்னேஸ்வரனோ தேவைப்படுகிறது.

முத்தமிழ்

வேந்தர்கள் மூவர்: சேர, சோழ, பாண்டியர்; சங்கங்கள் மூன்று: தலைச் சங்கம், இடைச் சங்கம், கடை சங்கம்; குறளின் அதிகாரம் மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்; குற்றங்கள் மூன்று: காமம், வெகுளி மயக்கம்;  தோஷங்கள் மூன்று: வாதம், பித்தம், சிலேட்டுமம்; முக்கனிகள் மூன்று: மா, பலா வாழை; இப்படி எல்லாவற்றையும் மும்மூன்றாக பிரித்தார்கள் தமிழர்கள்.

த-மி-ழ் : மூன்றெழுத்து. வல்லினத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தையும், மெல்லினத்திலிருந்து  ‘மி’என்ற எழுத்தையும், இடையினத்திலிருந்து ‘ழ்’ என்ற எழுத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் மொழிக்கு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்  என்பதற்கு ‘இனிமை’ என்ற மூன்றேழுத்து பொருளையும் கொடுத்தார்கள்.

நா-கூ-ர் என்ற மூன்றெழுத்து ஊர் முத்தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பை ஒரு கட்டுரைச் சிமிழுக்குள் அடக்கிவிட முடியாது.  “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல ஊடகங்கள் மறைத்தாலும் ஊரின் பெருமை மங்கி விடாது.

இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்று முறையே பிரித்து முத்தமிழ் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். இம்மூன்றும் ஒன்றை ஒன்று  சார்ந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இயலின்றி இசையில்லை. இசையின்றி நாடகமில்லை, இயலின்றி நாடகமுமில்லை. இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து வைத்திருந்தவர்கள் நாகூர்க்காரர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

“மூன்று தமிழ் சேர்ந்ததுவும் உன்னிடமோ?” என்று வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் நாகூருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற காரணப்பெயர் ஏற்பட்டதற்கு இந்த வாதம் வலிமை சேர்க்கிறது. மூன்று தமிழையும் ஒருசேர முறையே போற்றி வளர்த்தது இந்தச் சிற்றூர் என்றால் அது வியப்பில் ஆழ்த்துகின்ற விடயம்தானே?

அன்றைய பத்திரிக்கைகள், நூல்கள் சமஸ்கிருத மொழியைக் கலந்து தமிழ் வார்த்தைகளுக்கு சமாதி கட்டிக் கொண்டிருந்த காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று நடத்தினார். அவர் நாகையைச் சார்ந்தவராக இருந்ததால் அதன் பாதிப்பு நாகூரிலும் தெரிந்தது. தூயதமிழ் வார்த்தைகள் நாகூர் வாழ் பாமர மக்களின் வாயில் புழக்கத்திலிருப்பது இன்றும் கண்கூடு. மணிப்பிரவாளத் தமிழில் சிக்காமல் தப்பிப் பிழைத்த ஊர் நாகூர் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

Maraimalai

மறைமலை அடிகள்

நாகூர் குலாம் காதிறு நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் பாடிய பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.

வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து

பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்

நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட

ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ

என்ற பாடல் இருவருக்குமிடையே இருந்த நெருக்கம், கபிலர்-பிசிராந்தையார் போன்று அவர்களுக்குள் இருந்த நட்பை உணர்த்த போதுமானது.

புலவர் ஆபிதீன்

பாத்திரத்தை ஏனம் என்போம்

பழையதுவை நீர்ச் சோறென்போம்,

ஆத்திரமாய் மொழி குழம்பை

அழகாக ஆணம் என்போம்,

சொத்தை யுரை பிறர் சொல்லும்

சாதத்தை சோறு என்போம்

எத்தனையோ தமிழ் முஸ்லீம்

எங்களுயிர்த் தமிழ் வழக்கே!

என்ற நாகூர் புலவர் ஆபிதீனின், காலத்தால் அழியாத இக்கவிதை வரிகள் நாகூரில் பேச்சுவழக்கில் நிலவும் தூயதமிழ் வார்த்தைகளுக்கு சான்றாக  விளங்குகிறது.

நாகூர் வளர்த்த நாடகத்துறையை ஆராய்வதற்கு முன்னர் சின்னதாக ஒரு முன்வரலாற்றுச்சுருக்கம்.  உலகளவில் அரேபியர்கள் நாடகத்திற்கு செய்திருக்கும் மகத்தான பங்கு அளவிட முடியாது. தமிழகத்திற்கு அரேபியர்களின் வருகைக்குப் பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரபு வார்த்தைகளை தமிழ்மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுப்புது வார்த்தைகளை தன்னகப்படுத்த ஒரு மொழி கொடுக்கும் அங்கீகாரம்தான் அம்மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதென்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

“ஆயிரத்தொரு இரவுகள்” “அலாவுத்தீனும் அற்புத விளக்கும்” “லைலா-மஜ்னு” “யூசுப்-ஜுலைகா” போன்ற கதைகள், தமிழ் நாடக உலகில் மகத்தான  வரவேற்பைப் பெற்றதற்கு அதில் காணப்பட்ட “Fantasy” எனப்படும் கற்பனையுலக அனுபவமும், பிரமாண்டமும், நவீனத்துவமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

பாக்தாத் திருடன்

“குலேபகவாலி” “பாக்தாத் திருடன்” போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றமைக்கு காரணம் தமிழுக்குப் புதிதான விஷயங்களை இறக்குமதி செய்ததினாலேதான்.  இதுபோன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய நாகூரைச் சேர்ந்த ரவீந்தரை பற்றி மேலும் பல தகவல்களை கீழே தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று கண்மூடித்தனமாக எழுதுவது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை; மரபுக்கவிதை காலம் முதல் புதுக்கவிதை காலம்வரை; சித்தி ஜுனைதா முதல் கவிஞர் சல்மா வரை; இஸ்லாமியர்கள் இலக்கியத்துறையில் ஆர்ப்பாட்டமின்றி அவர்களது முத்திரையை  பதித்து வந்திருக்கிறார்கள்… வருகிறார்கள். இது நாடறிந்த உண்மை.

எம்.ஜி.ஆரின் “குடியிருந்த கோயில்” (1968) படம் வெளிவந்த காலத்திலேயே  ‘ரோஷனாரா பேகம்’ என்ற முஸ்லீம் பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ என்ற பாட்டு எல்லோரையும் முணுக்கவைத்தது. மஞ்சள் மகிமையையும், தாலியின் சிறப்பையும், குங்குமப்பொட்டின் மங்கலத்தையும் ஒரு முஸ்லிம் பெண்மணி பாடினார் என்றுச் சொன்னால் மதநல்லிணக்கத்திற்கு இதைவிட வேறென்ன இருக்க முடியும்? தமிழ்த் திரையுலகிலேயே பாடல் எழுதிய ஒரே முஸ்லிம் பெண்மணி இவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  “ஒரே ஒரு பெண்கவிஞர் எழுதிய பாடலுக்குத்தான் இதுவரை நான் பாடியிருக்கிறேன். அது ரோஷனாரா பேகம்” என்று ஒரு பேட்டியில் டி.எம்.எஸ் கூறியிருக்கிறார். “குங்குமப் பொட்டிட்டுக் கொள்ளாத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சகோதரி, குங்குமப் பொட்டின் மங்களத்தைப் பற்றிப் பாடியுள்ளது பெரும் சிறப்பல்லவா.?”என்று எம். ஜி. ஆரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவர் இவர்.

திருவாளர் ஜெயமோகன் தயைகூர்ந்து தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி வைப்பது நல்லது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஒரு சாதாரணச் சிற்றூர் முத்தமிழை எப்படி வளர்த்துள்ளது என்பதை, மனதில் இருத்திக் கொண்டால் நாகூரைப் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற எத்தனையோ பேரூர்கள் தங்களது பங்களிப்பை எப்படியெல்லாம் செய்திருக்கிறது என்பதை சுலபமாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாறு பதிவாகி இருக்கிறது. அத்தனைப்பேரும் காவியம் படைத்தவர்கள். இலக்கியக் கர்த்தாக்கள். தமிழகமெங்குமுள்ள இஸ்லாமிய இலக்கியவாதிகளின் சரணாலயமாக நாகூர் விளங்கியுள்ளது.

வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவரான செய்யது ஹமீத் இப்ராஹீமுக்கு “வண்ணக் களஞ்சியப்புலவர்” என்ற சிறப்புப் பெயரை நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

தங்களது இயற்பெயரால் அனைத்து தரப்பு வாசகர்கள் மனதிலும் நிலைத்து நிற்க இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான இஸ்லாமிய எழுத்தாளர்களை அவரது பெயர்களை வைத்து தனியே இனம்காண முடியவில்லை. ஜெயமோகனின் குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு தவறான புரிதலாக இருக்கக்கூடும்.

எஸ்.அப்துல் ஹமீதுதான் “மனுஷ்யபுத்திரன்”, ஹபீபுல்லாதான் “அபி”, முஹம்மது மேத்தாதான் “மு.மேத்தா”, சாகுல் ஹமீதுதான் “இன்குலாப்” என்கின்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?

ஒருமுறை சுஜாதாவிடம் ஒரு முஸ்லிம் வாசகர் கேள்வி கேட்டிருந்தார்: “அதென்ன, நாவலாசிரியர்கள் நிறைய பேர் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள்?” அதற்கு சுஜாதாவின் பதில் இப்படியாக “நச்”சென்று இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள்? – இது சுஜாதாவின் பதில். புதுக்கவிதையின் தாத்தாக்களான கவிக்கோ அப்துல் ரகுமானும், மு,மேத்தாவையும்  மற்றும் இன்குலாப், அபி, போன்றவர்களை மனதில் வைத்து சுஜாதா இப்படி கூறியிருக்கலாம்.

எண்ணற்ற இஸ்லாமிய இலக்கியவாதிகள் தங்களது அரபிப்பெயரை தமிழ்ப்படுத்தியும், யாரோ ஒருவருக்கு “தாசன்” ஆகவோ அல்லது தன் துணைவியாரின் பெயரை இணைத்து “மணாளன்” என்ற புனைப்பெயரைச் சூட்டியோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதை நாம் காண்கிறோம். கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்  போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

இன்றளவும் இச்சிற்றூரில் எண்ணற்ற சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மின்னிதழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என பன்முக படைப்பாளிகள் இலக்கிய உலகில் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாரு நிவேதிதா, நாகூர் ரூமி, ஆபிதீன், ஏ.எச்.ஹத்தீப் சாஹிப், கவிஞர் இஜட் ஜபருல்லா, (அண்மையில் மறைந்த) கவிஞர் நாகூர் சலீம், நாகூர் சாதிக், காதர் ஒலி, இதயதாசன், அபுல் அமீன், கவிஞர் சாதிக், T.இமாஜான் போன்றவர்களை இக்கால கட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

திருமண ‘நாலாம்நீர்’ சடங்குக்கு பரிகாசப் பாடல்கள் என்று எழுதத் தொடங்கி இப்போது வெண்பா எழுதிவரும் நாகூர் காதர் ஒலி போன்ற கவிஞர்களே இதற்கு நல்லதோர் உதாரணம். இவர்கள் எந்த பல்கலைக் கழகத்திற்குச் சென்றும் “புலவர்” பட்டம் பெற்றவர்களில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற வரிசையில் முதலில் நாடகத்துறையில் நாகூர் காட்டிய ஈடுபாட்டை மட்டும் இங்கு ஆராய்வோம்.

 நாகூரின் நாடகத் தந்தை

இந்த காமெடிக் கதையை நாகூரில் பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம்.  நாகூரில் ஒரு நாடகம் அரங்கேற்றினார்களாம். அதில் ஒரு  துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோ குத்துச் சண்டை விளையாட்டில் திறம் வாய்ந்த ஒரு உள்ளூர் பிரமுகர். அவருடைய வாயில் தூயதமிழ் வசனங்கள் அவ்வளவு எளிதில் நுழையாதாம். நாடகமோ சரித்திர நாடகம்.

“மன்னா! நம் நந்தவனத்தில் செந்நிறத்திலும், நீல நிறத்திலும், வெந்நிறத்திலும் மலர்கள் மலர்ந்திருக்கின்றன, மன்னா!”

இந்த வசனத்தை காவலாளியாக பாத்திரமேற்றிருக்கும் அந்த நபர் வசனம் பேச வேண்டும். மனனம் செய்த வசனம் மறந்துப்போய் மேடையில் அவர் லோக்கல் பாஷையிலேயே புகுந்து விளையாடி விட்டாராம்.

“ராசாவே! நம்ம பங்களா தோட்டத்துலே ரோஜு கலருன்னும், ஹூதா கலருன்னும், ஆனந்தா கலருன்னும், ஹேந்தி கலருன்னும், காக்கா முட்டை கலருன்னும் சோக்கு சோக்கா பூவு பூத்திக்கிது ராசாவே” என்றாராம்.

இன்னொருமுறை அவர் வில்லனைப் பார்த்து “நீ என்கிட்டேயே லாடுரியா?” என்று சூளுரைத்தாராம். “காக்கா. லாடுறியா அல்ல விளையாடுறியான்னு சொல்லுங்க”ன்னு கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து கூக்குரல் இட அந்த நாடக அரங்கமே அதிர்ந்த கதையை ஊரிலுள்ள ‘பெருசு’கள்  நினைவுகூறுவதை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ரசிக்கத்தக்கதாக இருக்கிறது இந்நகைச்சுவை. ‘குத்துச்சண்டை வீரர்’ என்று நான் குறிப்பிட்டது “நாகூர் பரீத்” என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பரீது காக்கா  அவர்களைத்தான்.

“ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர்.  நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி நாகூரில் பல பிரபலங்கள் உண்டு” என்று தன் பழைய நினைவுகளை பரிமாறுகிறார் நாகூரைச் சேர்ந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா

1966-ஆம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா இணைந்து நடித்த “குமரிப்பெண்” படம் வெளிவந்தது. டைட்டிலில் சண்டைப் பயிற்சி “நாகூர் பரீது” என்ற பெயர் கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். நாகூர் விஜயலட்சுமி டூரிங் கொட்டகையில் அது திரையிடப்பட்டபோது கூட்டத்தோடு கூட்டமாக நானும் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்திருக்கிறேன். நாகூரின் “நாடகத் தந்தை”அவர்.

அவரைத்தான் நாகூர்க்காரர்கள் இப்படிப் போட்டு கலாய்ப்பார்கள். கேலி, கிண்டல், குசும்பு, நக்கல், நையாண்டி இவற்றுக்கு பிரசித்தி பெற்ற ஊரன்றோ இது. தவிர இந்த காமெடிக் கதையில் இட்டுக்கட்டிய ஜோடனைகளும் உண்டு. ஏனெனில், ‘ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது’ இவர்களுக்கு கைவந்தக் கலை.

‘நாடகத்தந்தை’ பரீது அரங்கேற்றிய நாடகங்கள் நிறையவே உண்டு.  பெரும்பாலான நாடகங்களில் அவர்தான் ஹீரோ. “சந்தர்ப்பம்” “விதவைக்கன்னி” போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. பாடல்கள் எழுதுவது பெரும்பாலும் நாகூர் சலீம்தான். இவர் இப்போது திரைப்பட பாடலாசிரியரும் கூட. இவ்வூரில் முதல் முதலாக நாடகத்துக்கு பாட்டு புத்தகம் போட்டு புரட்சி செய்தது “விதவைக்கன்னி” நாடகத்திற்குத்தான்.

 நாகூர் சலீம்

நாகூர் சலீம்

நாகூர் சலீம்

நாடகத்துறைக்கு நாகூர் சலீம் அவர்களின் பங்கு அளவிடத்தக்கது. சினிமா, தொலைக்காட்சி சானல் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாத காலம் அது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுஇடங்களில், வானொலியில் ஒலிபரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ மற்றும் சினிமா பாடல்கள் ஒலிபெருக்கியில் இடம்பெறச் செய்வார்கள். கூட்டம் கூட்டமாக அமர்ந்து ரசிப்பார்கள்.

நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல ஊர்களிலும் நம்மூர்க்காரர்கள் நாடகம் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான நாடகங்களுக்கு கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் பாடலும் வசனமும் எழுதியுள்ளார்.

கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் அளித்த இந்த பேட்டியில் பற்பல சுவையான செய்திகளை நாம் அறிய முடிகின்றது.

நாகை பேபி தியேட்டரில் ‘விதவைக் கண்ணீர்’ என்ற ஒரு நாடகம் போட்டோம். அதற்கு எல்லாமே  நான்தான். அதில் ’ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் புகழ் ஆதித்தனும், ஸ்ரீலதா என்று ஒரு நடிகையும் நடித்தனர். மேக்-அப் மென் எல்லாம் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து வந்தார்கள். ’ஹவுஸ்ஃபுல்’ ஆகி ஒரு ரூபாய் டிக்கட் பத்து ரூபாய்க்கு விற்றது. ஃபரீது மாமாதான் தயாரிப்பாளர்.

 “நாகூரில் ’சந்தர்ப்பம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் “திருக்குர்ஆனே ஓடிப்போய் முஹம்மது நபியின் நெஞ்சில் ஒளிந்து கொள்” என்று ஒரு வசனம் வரும். அதனால் பெரிய கலாட்டா ஆனது. ’சோக்காளி’, ’மிஸ்டர் 1960’ என்றெல்லாம் பல நாடகங்களை நாகை, நாகூர், திருவாரூர், திருமருகல் போன்ற ஊர்களில் போட்டுள்ளோம்.

“சென்னையில், நடிகர் கே கண்ணன் தயாரித்த ’ஆனந்த பைரவி’ என்ற நாடகத்துக்கு நானும் ஆபிதீன் காக்காவும் பாடல்கள் எழுதினோம். கதை, வசனம் ’மஹாதேவி’ புகழ் ரவீந்தர். அதில் சில வரிகள்:

 எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்

என் சொந்தக் கதையை எழுதிப் பூர்த்தியாகு முன்னே

எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்.

‘என் தங்கை’ நடராசனின் நாடகத்துக்காக எழுதிய பாடலின் சில வரிகள்:

நினைவினிலே கலந்து

கனவினிலே தோன்றி

நிலைபெறும் காதலின்

ராணி எங்கே?

அணையா ஒளி வீசும்

நிலவே நீ கூறு

அடையாளம் சொல்கிறேன்

நானும் இங்கே

மங்கையின் மணி மொழிகள் தேனாகும்

அவள் மலர் விழிகள் அசையும் மீனாகும்

தங்க உடல் மாலை வானாகும்

அவள் துணை வரும் தனிச் சொந்தம் நானாகும்

வண்ணமோ புள்ளியில்லா மானாகும்

ஒளி வழியும் தொடை பளிங்குத் தூணாகும்

சின்ன இடை உடுக்கை தானாகும் — அது

தென்றல் பட்டால் ஒடிந்து வீணாகும்

 சன்னிதானம்’ என்ற நாடகம் நாகூரில் அரங்கேறியது. அதில் என் பாட்டை மேஜர் சுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார். கெட்டவனாகிப் போன ஒருவனை விரும்பும் ஒருத்தியும் அவனும் பாடும் பாடல்:

 பட்டுவிட்ட மரக்கிளையில்

பச்சைக்கொடி படருவதோ

பாவி என்னை நிழல்போதே

பாவை நீ தொடருவதோ

உள்ளத்தில் நானிருந்தால் தள்ளிவிடு

இந்த உண்மையை உனக்கு நீயே சொல்லிவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறாய்

ஆகாது எனத் தெரிந்தும்

ஆசையினைத் தேடுகிறாய்

பழி பட்டுப் போனது என் பாதை — என்னை

வழிபடத் துடிக்கிறாய் பேதை

முன்னாளில் தவறு செய்து

பின்னாளில் திருந்தியவன்

என்றாலும் உலகத்தின் முன்

ஏளனத்தைப் பொருந்தியவன்

 அவள்:

பட்ட மரம் சில சமயம்

பச்சை விட்டு வளர்வதுண்டு

பாவி என்று போனவனும்

பண்பு கொண்டு வருவதுண்டு

உள்ளத்தில் என் நினைவை

விதைத்துவிடு

இந்த உண்மையை உனக்கு நீயே

உணர்த்திவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறேன்

ஆகாது எனத் தெரிந்தும்

ஆசையினைத் தேடுகிறேன்

ஏனென்று புரிகிறது எனக்கு — நான்

என்னுயிரை இழந்துவிட்டேன் உனக்கு

==

வானம் கருத்ததடி

எழில் நிலவே நீ இன்றி நலிந்த என்

இதய வானம் கருத்ததடி

காணும் இடம் யாவும்

கார்மேகக் கூட்டம்

கண்கள் பெய்த மழை

கடலுக்கு வளமூட்டும்

மானே உன் நினைவால்

மூண்டது போராட்டம்

முடிந்தது என் வாழ்வு

மடிந்தது உயிரோட்டம்

வீணையைப் பறிகொடுத்த

பாடகி நிலையானாய்

கைப்பொருள் இழந்தவனும்

மெய்ப்பொருள் கலையானாய்

நானறியேன் கண்ணே

துயருக்கு விலையானாய்

மணந்துவிட்டேன் உன்னை

மனதில் ஏன் நிலையானாய்

===

 ”ஏ.கே.வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோ”. அந்த வரிகள்:

வெண் முத்து மாலைகள்

வெள்ளி நுரையினில்

சூடி வருகின்றாள்

இங்கே வேண்டிய பேருக்கு

வாரிக் கொடுத்திட

ஓடி வருகின்றாள்

இன்னொருத்தி:

கண்ணியர் கண்ணென

மாவடுப் பிஞ்சுகள்

நீரில் மிதக்குதடி

அது கண்ணல்ல பிஞ்சல்ல

கெண்டைகள் அம்மாடி

கும்மியடிங்கடி

==

ஏகே வேலன் கொடுத்த பாடலுக்கான சூழல் ஒரு ரிக்சாக்காரன் மனைவி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறாள். ஒரு குழந்தை எங்கோ போய் விடுகிறது. இன்னொரு குழந்தையை ரிக்சாவிலேயே ஊஞ்சல் கட்டி தகப்பன் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கிறான். அழும் குழந்தைக்குத் தாலாட்டு இது:

நடக்குற உலகத்தைப் பார்த்துக்கோ

எது நடந்தாலும் அதை ஏத்துக்கோ

சுமக்கிறதெல்லாம் சுமந்துக்கோ — மனம்

சோர்ந்து விடாமல் நிமிர்ந்துக்கோ

அப்பாடி கொஞ்சம் தூங்கப்பா

இந்த அப்பா சொல்றதைக் கேளப்பா

மாணிக்க ஊஞ்சல் இல்லை

என்ற மனக்குறை போலும் உனக்கு

சாலையின் ஓரத்திலேதான்

நம்ம சமுதாயம் இன்னும் கிடக்கு

ஏழைகள் கொதிப்பது தீமை

நாம் ஏக்கத்தில் வாழும் ஊமை

அன்னை சுமந்தாள் உன்னை — இன்று

அவளோ இங்கே இல்லை

நம்மைச் சுமக்குது பூமி

இது ஏனோ விளங்கிடவில்லை

அவனுக்குத் தெரியும் அருத்தம்

எனக்கு அதுதான் கொஞ்சம் வருத்தம்

விட்டு விட்டு இழுக்குற மூச்சு

அது வெளி வந்து போனாலும் போச்சு

தட்டு கெட்டுப் பேசுற பேச்சு

பல தவறுக்குக் காரணமாச்சு

எலும்பால் அமைந்த தேகம் — இதற்கு

ஏன் தான் இத்தனை சோகம்

நாகூர் சலீம் அவர்களின் நாடக பங்களிப்பிற்கு மேற்கண்ட அவரது பேட்டி பல சுவையான நிகழ்வுகளை நமக்கு தொகுத்து வழங்குகின்றது.

 வில்லன் “டான்

“படித்தவன்” நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜப்பார் நானா (விறகுவாடி),  “டான்” என்று அழைக்கப்படும் ஹமீது சுல்தான் ஏனையோர் நடித்த நாடகமிது. ரஜினிகாந்த், ஷாரூக்கான், அஜீத் இவர்களையெல்லாம் “டான்” என்று அழைப்பதற்கு முன்னால்  இவர்தான் இப்பெயரால் இவ்வூரில் அழைக்கப்பட்டார். வில்லன் பாத்திரமென்றால் இவரைத்தான் அழைப்பார்கள். நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று “டான்” நடிக்கையில் ஒரு சுவையான நிகழ்வு நடந்தேறியது.

கதநாயகியிடம் வில்லன் முறை தவறி நடந்துக் கொள்ளும் காட்சி. கதாநாயகி “அடப்பாவி! சண்டாளா! உனக்கு கண்ணில்லையா?” என்று வசனம் பேச வேண்டும். பாத்திரமேற்று  நடித்த டானுக்கு உண்மையிலே ஒருகண் ஊனம். “டானுக்கு கண்ணில்லைதான்” என்று கூட்டதில் ஒருவர் கூச்சல் போட,  தர்ம சங்கடமான சூழ்நிலையில் அரங்கத்தில் நிசப்தம். அதையும் திறம்பட சமாளித்துக் கொண்டு “எனக்கு கண்ணில்லாமல் இருக்கலாம். ஆனால் ஞானக்கண் இருக்கிறது” என்று சமயோசிதமாக பேசி நிலைமையைச் சமாளித்து ‘டான்’ கைத்தட்டலை அள்ளிச் சென்றது மறக்க முடியாத நிகழ்வு. இவர்களின் நாடகங்கள் நாகூர் மட்டுமின்றி திருவாரூர் வரையிலும் அரங்கேறியது.

நாகூர் சாதிக்

நாகூர் சாதிக்

நாகூர் சாதிக்

நாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களில் நாகூர் சாதிக் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பிறகு “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.

 மாடர்ன் ஸ்டேஜ்

அதற்கு அடுத்தக் கட்டமாக வேறோரு கலைக் கூட்டணி ‘மாடர்ன் ஸ்டேஜ்’ என்ற பெயரில் இணைந்தது. நாகூர் சேத்தான், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், டைலர் அஜ்ஜி, “வானவன்” இவர்களது கூட்டணி நாடக ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது முழுநேர எழுத்துப்பணியில் மூழ்கியிருக்கும் ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிப்தான் அந்த “வானவன்”.  “சிவப்புக்கோடு”, “சன்னிதானம்” போன்ற நாடகங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. நாகூர் சேத்தானை ஒரு “versatile Personality” என்று கூறலாம். ஒரு சிறந்த புகைப்படக்கலை நிபுணராகவும், நடிகராகவும், நாடக எழுத்தாளராகவும், கவிஞராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பிரகாசித்தவர்.  நாகூர் ஹனிபா பாடிய “ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம்”, காயல் ஷேக் முஹம்மது பாடிய “தமிழகத்தின் தர்காக்களை” போன்ற ஏராளமான பாடல்கள் இவர் எழுதியவை.

 நொண்டி நாடகம்

நொண்டி நாடகங்கள் தனி நடிப்பு முறையில் (Mono Acting) ஒரு திருடனின் கதையைச் சொல்பவை. கதாநாயகன் கெட்டவனாக  இருந்து காமவலையில் சிக்கிப் பிறகு தண்டனைக்குட்பட்டு உறுப்புகளை இழந்து நொண்டியாகி இறைவனை வேண்டி வழிபட, இழந்த உறுப்புகளை மீண்டும் பெறுகிறான் என்பதே எல்லா நொண்டி நாடகங்களிலும் உள்ள மூலக்கரு ஆகும்.  இவை சிந்து நடையில் எழுதப்பட்டவை.  இந்தக் கதை அமைப்பை எல்லாச் சமயத்தினரும் தங்கள் தெய்வங்களைப் போற்றவும் பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டனர்.  “திருக்கச்சூர் நொண்டி நாடகம்” (இந்துசமயம்), “சண்பகமன்னார் ஞான நொண்டி நாடகம்” (கிறித்துவ சமயம்), இவகளைப் போன்று முஸ்லீம்களும் “சீதக்காதி நொண்டி நாடகம்” என்ற ஒன்றை இயற்றி அரங்கேற்றினர்.

 கூத்துப் பட்டறை

இஸ்லாமிய நாட்காட்டியில் ‘முஹர்ரம்’ எனப்படும் முதலாம் மாதத்தில் கூத்துப் பட்டறைகள் அரங்கேறும். நாகூர் இதற்கு முக்கிய கேந்திரமாக விளங்கியது.  “காசீம் படைவெட்டு” என்ற பெயரில் “நூறு மசலா” பாணியில் விடுகதைச்சரங்கள் தொடுப்பார்கள். “மசலா” என்றால் அரபியில் விடுகதை என்று பொருள். இது “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” கதை பாணியில் இருக்கும்.

மல்யுத்தம், சிலம்பு, குத்துச் சண்டை, ஜூடோ என்று தற்காப்பு சண்டை வீரர்கள் மலிந்திருந்த ஊர் நாகூர். இவர்கள் அனைவரும் கலையுணர்வோடு இந்தக் கூத்துப் பட்டறையில் பங்கு கொள்வார்கள். முஹர்ரம் என்று வந்துவிட்டாலே பாஜிலால் பாய் மற்றும் செய்யது மெய்தீன்பாய் இவர்கள் ஹீரோவாகி விடுவார்கள்.

நாடகத் கூத்தில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் நாகூர் அரவாணிகள். யாத்ரீகர்களின் வருகையின் மிகுதியினாலோ என்னவோ நாகூர் ஏராளமான அரவாணிகளின் புகலிடமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர்களிடம் நாடகம்,  நாட்டியம் என்ற கலையுணர்வுகள் பொதிந்துக் கிடந்தது நிதர்சனமான உண்மை.

Peacock Dancer

நாகூர் சுல்தான் என்ற அரவாணி தமிழகத்து மயில் டான்ஸ் கலைஞருள் மிகவும் போற்றத் தக்கவர். இந்த பாரம்பரியக்கலை இப்போது முற்றிலும் அழிந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. பிழைப்புக்காக “வாடா” என்ற தின்பண்டங்களை பொறித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இவர் நடனக் களத்தில் இறங்கி விட்டால் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துவார். மயில் டான்ஸ் கலையில் புதுப்புதுயுக்திகளை கையாண்டதாக தஞ்சை கரகாட்டக் கலைஞர்கள் இவரைக் குறித்து நினைவு கூர்கிறார்கள்.

கூத்துப் பட்டறையில் சுல்தான், ஹாஜி, காசீம் போன்ற அரவாணிகள் நாடக வசனம் பேசி, நாட்டியமாடி ரசிகர்களைக் கவருவார்கள். டி.ராஜேந்தர் இயக்கிய முதற்படமான “ஒரு தலை ராகம்” படத்தில் இடம்பெற்ற “கூடையிலே கருவாடு” என்ற பாடலுக்கு குரூப் நடனமாட அரவாணிகள் தேவைப்பட்டபோது நாகூரிலிருந்துதான் ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றார்கள்.

 ரவீந்தர்

ravindar

ரவீந்தர்

நாடகத் துறைக்கு கலைமாமணி நாகூர் ரவீந்தர் ஆற்றிய பணி அளவிட முடியாதது. அவரது சொந்தப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் . ரவீந்திரநாத் தாகூர் நினைவாக அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது எம்.ஜி.ஆர்.தான். நாகூருக்கு பக்கத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ‘டணால்’ தங்கவேலு. வலைத் தொப்பியொன்று அணிந்துக் கொண்டு உருவத்தில் முஸ்லீம் அன்பர் போலவே காட்சியளிப்பார். ரவீந்தர் கதைவசனம் எழுதி தங்கவேலு நடித்த “மானேஜர்”  என்ற மேடைநாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நாடகம் அவருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகத்தை பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் கதாசிரியராக பணியாற்றினார்.

குலேபகவாலி (1956) படத்திற்கு கதை வசனம் எழுதியதும் ரவீந்தர்தான்.  ரவீந்தருக்கு அரபி, பார்ஸி மொழிகள் தெரிந்திருந்ததால் அரேபிய  கலாச்சாரத்தை அருந்தமிழுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடிந்தது. இவர் அப்போது புதியவர் என்ற காரணத்தினால் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக தஞ்சை ராமையாதாஸின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கலையரசி, சந்திரோதயம், பாக்தாத் பேரழகி, அடிமைப்பெண் என்று 32 படங்களுக்கு மேல் கதை வசன எழுதினார்.

தூயவன்

thooyavan

தூயவன்

 தூயவன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கிய அக்பர், நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா. 84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார் “வைதேகி காத்திருந்தாள்” “அன்புள்ள ரஜினிகாந்த்” உட்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர். இவர் கதை, வசனம் எழுதி ஏ.வி.எம். ராஜன் & புஷ்பலதா ஜோடி நடித்த “பால்குடம்” நாடகம் தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது. நாகை பாண்டியன் தியேட்டரில் “பால்குடம்”  நாடகம் அரங்கேறியபோது பிரமாண்டமான ‘செட்டிங்’கண்டு நான் பிரமித்துப் போனேன்.

ஆவுக்கெச்சேனோ

வீடியோ கேமரா புழக்கத்தில் வந்த புதிதில் “ஆவுகெச்சேனோவில் ஆவியுலக ஆராய்ச்சி” என்ற குறும்படத்தை நான் எழுதி இயக்க நாகூர் சேத்தான் ஒளிப்பதிவு செய்ய, நண்பர் கபீர் ஒலிப்பதிவு செய்தது சுவையான அனுபவம். நகுதா, சாஹுல் ஹமீது, இதயதாசன், பாரூக் ராஜா, அலி, சின்னக் காமில் மற்றும் நான் எல்லோரும் நடித்திருந்தோம். தற்செயலாக நான் ஒருநாள் நான் பாண்டிச்சேரியிலிருந்து நாகூர் வருகையில் “மரைக்கார்  டிரான்ஸ்போர்டில்” இந்த வீடியோ படம் போட்டார்கள். நாம் விளையாட்டாக எடுத்த படம் இவ்வளவு தூரம் பரவி விட்டதே என்று அசந்தே போய்விட்டேன்.  நான் பஹ்ரைன் வந்த பிறகு இந்த குறும்படத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டதாக கேள்வியுற்றேன்.

நாடகங்கள் என்பது நாகூருக்கு புதிதல்ல. அந்த காலத்திலிருந்தே ஜனங்களை விடிய விடிய உட்காரவைத்து வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, சாட்டிலைட் சேனல் இல்லாத காலம் அது.

கோயில் கும்பாபிசேஷங்களில் இராமயண கதை, சீதா கல்யாணம், கதாகாலேட்சபம், நாட்டார் கூத்து, புராண நாடகம் என்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை “நூறு மசலா” “அப்பாஸ் நாடகம்” என்று அவர்களை இழுத்துப் பிடிக்க இது உதவியது. டேப்ரிக்கார்டு கேசட் வந்த புதிதில் “நூறுமசலா” கேசட்டைப் போட்டுவிட்டு பக்தி பரவசத்தோடு(!) குறிப்பாக தாய்மார்கள் நாள்முழுக்க வீட்டில் அமர்ந்து ரசிப்பதை கண்டிருக்கிறேன்.

லால் கெளஹர்

பெரும்புலவர் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் இயற்றிய ‘லால் கௌஹர்’ நாடகம் நாடகத்துறைக்கு ஒரு மைல் கல் எனலாம். எம்.ஆர்.ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் போன்று திருப்பத் திரும்ப அந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது. நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மேடை நாடகமாக நடிக்கப்பெற்று ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றதை நாகூர் மூத்த குடிமகன்கள் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார்கள்.  நாகூரில் கவ்வாலி கச்சேரிகள் நடக்கையில், மொழி புரியாவிட்டாலும் கூட விடிய விடிய உட்கார்ந்து ரசிக்கும் நாகூர்க்காரர்கள், புரிகின்ற மொழியில் நாடகங்கள் என்றால் அவர்கள் காட்டிய ஆர்வத்தைச் சொல்லவா வேண்டும்?

“லால் கெளஹர்” என்ற இந்த நாடக நூலினை 1892-ஆம் ஆண்டில் பெரும்புலவர் வித்வான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் பதிப்பித்தும் இருக்கிறார்கள்.  1990 – ஆம் ஆண்டில் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் பதிப்பாக  வெளியிடப்பட்டது அந்நாடகத்திற்கு இத்தனை ஆண்டுகட்குப் பின்னும் வரவேற்பு உள்ளதற்கு இதுவே ஒரு நற்சான்று.

‘லால் கௌஹர்’ நாடகத்தைத் தொடர்ந்து வாஞ்சூர் பக்கீர் (இவர் பக்கீர் முஹியித்தீனுடைய புதல்வர்) எழுதிய ‘அப்பாஸ் நாடகம்’ பெரும் வரவேற்பைக் கண்டது. நாகூர் , நாகப்பட்டினம் மட்டுமன்றி மலேயா (குறிப்பாக பினாங்கு), சிங்கப்பூர், சிலோன்  போன்ற நாடுகளிலும் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி இருக்கிறது.

நாகூர் கோசா மரைக்காயர் (கோ. முகம்மது நைனா மரைக்காயர் அவர்களின் புதல்வர்)  இவர் , “சராரே இஷ்க்”, “ஷிரீன் பரஹாத்”, “ஜூஹுரா முஸ்திரி”, “லைலா மஜ்னூன்” போன்ற  நாடகங்கள் எழுதி  புரட்சி செய்தவர்.

 நாகூர் புலவர்ஆபிதீனும், நாகூர் ஹனிபாவும்

Nagore_Hanifa

நாகூர் புலவர் ஆபிதீன் நிறைய நாடகங்கள் எழுதி, இயக்கி, அவரே  நடித்தும் இருக்கிறார். இஸ்லாமியப் பாடகராக எல்லோரும் நன்கறிந்த நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு திறமையான  நாடக நடிகரும் கூட என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1950-ல் புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேறியது.  நாடகத்திற்கு தலைமை தாங்கியவர்  பேரறிஞர் அண்ணா அவர்கள்  . வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் கலைஞர் மு, கருணாநிதி. நாடகத்தில் ஒரு கவிஞராக நாகூர் ஹனீபா நடித்திருந்தார். “அந்த பாத்திரத்திற்கு அனிபா என்று பெயர் வைக்கலாம், அவ்வளவு சிறப்புற நடித்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினாராம் அறிஞர் அண்ணா. கலைஞர் பேசுகையில் “ஹனி; என்றால் தேன்.  ‘பா’ என்றால் பாட்டு.  ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது” என்று வார்த்தை அலங்காரம் செய்ய அரங்கத்தில் பலத்த கரகோஷம்.

தமிழகத்தில் நாடக வளர்ச்சியில் சமயம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவுசெய்யும் நோக்கத்தில் இந்துமதம், இஸ்லாமிய மதம், கிறித்துவ மதம் ஆகிய மூன்று மதங்களும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

தமிழகத்தில் முஸ்லீம்கள் முதன்முதலாக அரங்கேற்றம் செய்த நாடகங்களுள் மூன்று நாடகங்கள் சரித்திரமச் சாதனை படைத்தவை. 1) முகமது இப்ராகிமின் “அப்பாஸ் நாடகம்” (1873), 2) வண்ணக் களஞ்சியப் புலவரின் “அலிபாதுஷா” நாடகம் மற்றும் தையார் சுல்தான் நாடகம்,  3) “லால்கெளஹர் நாடகம்” ஆகியன.

கிறித்துவ நாடகாசிரியர்கள் வழங்கிய “ஆதாம் ஏவாள் விலாசம்”, “ஞான சௌந்தரி அம்மாள் நாடகம்”, “ஞானதச்சன் நாடகம்”, “ஊதாரிப் பிள்ளை நாடகம்”, “நல்ல சமாரித்தன் நாடகம்” முதலான நாடகங்களும் பிரபலம்.இவை இசை நாடகங்களாக இருந்தன.

பின்வந்த சங்கரதாச சுவாமிகளும் நவாப் ராஜமாணிக்கமும் இவற்றை மேடையில் நடித்தனர். சோகி நாடகம், ஒட்ட நாடகம் என்று சாதிய நாடகங்களும் தோன்றின. தமிழ் நாடக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒன்று 1889 இல் வேப்பம்மாள் என்ற பெண் நாடக ஆசிரியர் சீதா கல்யாணம் எனும் நாடகத்தை இயற்றிய நிகழ்வு ஆகும்.

மேலே நான் குறிப்பிட்ட இஸ்லாமியர்கள் எழுதிய நாடகங்களின் முக்கிய கேந்திரமாக நாகூர் விளங்கியது என்பது எல்லோரும் ஒத்துக் கொண்ட விடயம்.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை; கண்ணீரால் காத்தோம்” என்று முத்தமிழில் ஒன்றான நாடகக் கலையை நாகூர் மக்கள் கண்ணின் மணியாக போற்றிப் பாதுகாத்தார்கள் என்பது வெள்ளிடமலை.

நாகூர்வாசிகள் இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு பற்றிய கட்டுரைகளை மென்மேலும் தொடர ஆசை.

  – அப்துல் கையூம்

 

Tags: , , , , , , ,