RSS

Tag Archives: நாகூர் தூயவன்

அன்புள்ள தூயவன்


தூயவன்

பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய ‘தூயவன்’, ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர் ‘தூயவன். ‘இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் ‘பி.ஏ’ பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர். தாயார் பெயர் ஜொகரான்.

ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

‘தினத்தந்தி’, ‘ராணி’, ‘ஆனந்தவிகடன்’, ‘தினமணி கதிர்’ உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

1967-ம் ஆண்டில், ‘ஆனந்த விகடன்’ அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.

‘தூயவன்’ எழுதிய ‘உயர்ந்த பீடம்’ என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.

உடனே மேஜர், ‘நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை… என்ன எழுத்து!’ என்றார்.

அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், ‘நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!’ என்று நிதானமாகக் கூறினார்.

மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

மேஜருக்காக ‘தீர்ப்பு’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.

இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் ‘பால்குடம்.’ இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

எம்.ஜி.ஆருடன் தூயவன்

‘தீர்ப்பு’ நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

‘நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்’ என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

‘பால்குடம்’ நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

தூயவன் திருமணம்

இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக – எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

‘தினமணி கதிர்’ வார இதழின் ஆசிரியராக ‘சாவி’ இருந்த நேரம் அது. ‘தூயவன்’ எழுதிய ‘சிவப்பு ரோஜா’ என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், ‘செல்வி’ என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

‘செல்வி’ என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.

உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.

இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

ஏ.வி.எம்.ராஜன்

திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன

ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, “அன்புள்ள ரஜினிகாந்த்”, “வைதேகி காத்திருந்தாள்” உள்பட சில படங்களை தயாரித்தார்.

தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, “பால்குடம்” கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

அதே சமயம், “பால்குடம்” கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.

தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் – ஜெயபாரதி நடித்த “புதிய வாழ்க்கை”, சிவாஜிகணேசன் நடித்த “மனிதருள் மாணிக்கம்”, “ஜெயலலிதா- முத்துராமன் நடித்த “திக்குத் தெரியாத காட்டில்” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். “முடிசூடா மன்னன்”, “கல்யாணமாம் கல்யாணம்”, “எங்களுக்கும் காலம் வரும்”, “கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன” ஆகியவை, அவற்றில் சில.

தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து “கோமாதா என் குலமாதா”, “மாணவன்”, “ஆட்டுக்கார அலமேலு”, “அன்புக்கு நான் அடிமை”, கமலஹாசன் நடித்த “தாயில்லாமல் நான் இல்லை”, ரஜினிகாந்த் நடித்த “தாய் மீது சத்தியம்”, “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்” முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த “தவப்புதல்வன்” படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த “பொல்லாதவன்” படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

ஜாவர் சீதாராமன் எழுதிய “பணம், பெண், பாசம்” என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.

நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.

இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.

இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

பாக்கியராஜுடன் தூயவன்

நண்பர் சக்திவேலுடன் இணைந்து “எஸ்.டி.கம்பைன்ஸ்” என்ற பட நிறுவனத்தை தொடங்கி, “விடியும் வரை காத்திரு” என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்

நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், “ஆன்டி ஹீரோ”வாக – அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் “விடியும் வரை காத்திரு” படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க “கேள்வியும் நானே பதிலும் நானே” படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. “படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்” என்றார்.

அந்தப்படம்தான் “அன்புள்ள ரஜினிகாந்த்.” எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.

1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-

“ரஜினி சார் நடித்த “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்”, “அன்புக்கு நான் அடிமை”, “ரங்கா” முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் “அன்புள்ள ரஜினிகாந்த்.”

கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.

படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். “கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்” என்ற பேனரில், “அன்புள்ள ரஜினிகாந்த்” தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.

சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.”

இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.

ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த “வைதேகி காத்திருந்தாள்” அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார். விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, “அழகு மலராட…” நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.

1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

விஜயகாந்த் – ராதிகா நடித்த “நானே ராஜா நானே மந்திரி”, கவுண்டமணி கதாநாயகனாக நடித்த “தலையாட்டி பொம்மைகள்” ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் “உள்ளம் கவர்ந்த கள்வன்.” இந்தியில் வெளியான “சிட்சோர்” படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.

படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.

அப்போது அவருக்கு வயது 41 தான்.

தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் “பி.காம்” படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். “அபர்ணா” அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.

ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.

நன்றி : மாலைமலர் -1

நன்றி ” மாலை மலர் – 2

தூயவனும் “அழகன்” தமிழ்மணியும்

“அன்புள்ள எம்.ஜி.ஆர்” என்ற பெயரில் தயாராக இருந்த படம், பிறகு “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது.

இந்தப் படத்தை கதை-வசன ஆசிரியர் தூயவனும், “அழகன்” தமிழ்மணியும் சேர்ந்து தயாரித்தனர்.

தூயவன், புகழின் உச்சியில் இருந்தபோதே எதிர்பாராதவிதமாக காலமானார்.

தமிழ்மணி, பின்னர் “தர்மபத்தினி”, “சோலைக்குயில்”, “சித்திரைப்பூக்கள்”, “அன்பே உன் வாசம்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இப்போது, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளராக இருக்கிறார்.

படம் உருவான கதை

“அன்புள்ள ரஜினிகாந்த்” படம் உருவானபோது நடந்த ருசிகர நிகழ்ச்சிகளை அழகன் தமிழ்மணி வெளியிட்டார்.

1

அவர் கூறியதாவது:-

“25 ஆண்டுகளுக்கு முன், நான் பத்திரிகையாளராக இருந்தேன். நிருபராக பணிபுரிந்ததால், திரை உலகத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து, “மலையூர் மம்பட்டியான்” படத்தைத் தயாரித்தேன். இதில் தியாகராஜன் (பிரசாந்த்தின் தந்தை), சரிதா ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் டைரக்ட் செய்தார். இளையராஜா இசை அமைத்தார்.

இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம்.

இந்தப்படம் வெளியான பிறகு, பங்குதாரர்கள் தனித்தனியே பிரிந்தோம்.

பட விழா

இந்தக் காலக்கட்டத்தில், நானும், பிரபல கதை – வசன கர்த்தாவாக விளங்கிய தூயவனும் நெருங்கிய நண்பர்களானோம்.

டெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நாங்கள் சென்றோம். அங்கு ஒரு திரை அரங்கில் “டச் ஆப் லவ்” (அன்பின் ஸ்பரிசம்) என்ற படத்தை திரையிட்டார்கள். எங்கள் இரண்டு பேரைத் தவிர, மேலும் 3 பேர்தான் அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார்கள்!

ஊனமுற்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. எங்களைத் தவிர, மற்ற மூன்று பேரும் நடுவிலேயே தூங்கி விட்டார்கள்! நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தோம்.

இந்தப் படத்தின் கதாநாயகனாக எல்விஸ் பிரஸ்லி என்ற பாப் பாடகர் நடித்திருந்தார். படத்தின் தொடக்கத்தில், அவர் தோன்றமாட்டார். டெலிபோனில் பேசுவது, கடிதங்கள் எழுதுவது போன்ற காட்சிகளில்தான் (முகத்தை காட்டாமல்) வருவார். உச்சகட்ட காட்சியில்தான் நேரடியாகத் தோன்றுவார்.

படத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டோம். அந்த அளவுக்கு படம் உருக்கமாக இருந்தது.

“இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும். அது நமது லட்சியப்படமாக அமையவேண்டும்” என்று நானும், தூயவனும் முடிவு செய்தோம்.

சென்னை திரும்பியவுடன், ஒரு மாத காலத்தில் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தோம். ஒரு பிரபல நடிகரை கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.

2

எம்.ஜி.ஆர். அப்போது, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து, கதை முழுவதையும் சொன்னோம். உருக்கமான கட்டங்களை சொன்னபோது, அவர் கண் கலங்கினார். “இந்தப் படத்தில் தாங்கள் கவுரவ வேடத்தில் தோன்றவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.

“அரசாங்க அலுவல்கள் பல இருந்தாலும், கவுரவ வேடத்தில் தோன்றுகிறேன். இதுபற்றி, மேற்கொண்டு அமைச்சர் அரங்கநாயகத்திடம் சென்று பேசுங்கள்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்தோம். “படத்தின் பெயர் என்ன?” என்று அவர் கேட்டார். நான் சட்டென்று “அன்புள்ள எம்.ஜி.ஆர்” என்று கூறினேன். உண்மையில், படத்தின் பெயர் அதுவரை முடிவாகவில்லை. ஏதோ என் மனதில் தோன்றியது; சொன்னேன்.

கதை முழுவதையும் கூறும்படி அரங்கநாயகம் கேட்டார். தூயவன் முழுக்கதையையும் சொன்னார். அரங்கநாயகத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. “கதை, திரைக்கதை, வசனத்துக்காக ஒரு நல்ல தொகை கொடுக்கிறேன். படமாக்கும் உரிமையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றார்.

யோசித்துச் சொல்வதாக கூறிவிட்டுத் திரும்பினோம்.

இதை எங்கள் லட்சியப் படமாகத் தயாரிக்க நாங்கள் முடிவு செய்திருந்ததால், உரிமையை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. “பிச்சை எடுத்தாவது, நாமே இந்த படத்தைத் தயாரிப்போம்” என்றார், தூயவன். நாங்கள் ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் அது.

ரஜினியிடம் தூது

தேவர் பிலிம்சில் உதவி டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரஜினியின் நண்பர் கே.நட்ராஜை சந்தித்தோம். “எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். உங்களை டைரக்டராகப் போடுகிறோம். நீங்கள் ரஜினியை சந்தித்து, அவரிடம் தூயவன் கதை சொல்ல, நேரம் கேளுங்கள்” என்று கூறினேன்.

அதேபோல் நட்ராஜ், ரஜினியிடம் சென்று நேரம் கேட்டு வந்தார். குறிப்பிட்ட நாளில், ரஜினியை தூயவன் சந்தித்து கதையை விரிவாகச் சொன்னார். கதை ரஜினிக்குப் பிடித்து விட்டது. கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆறு நாட்கள் கால்ஷீட் தருவதாகக் கூறினார்.

படத்தின் பெயர் என்ன என்பதை நாங்கள் அவரிடம் கூறவில்லை.

பணம் திரட்டினோம்

அந்த நேரத்தில் என்னிடமும், தூயவனிடமும் பணமே கிடையாது. தெரிந்தவர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி, ரூ.15 ஆயிரம் திரட்டினோம்.

ரஜினியுடன் நடிக்க அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். பேபி மீனா, பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு ஆகியோரை குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் செய்தோம்.
3

1983 மார்ச் 31-ந்தேதி ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. அன்றைய தினம்தான், “தினத்தந்தி”யில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற பெயரைக் குறிப்பிட்டோம். ரஜினிக்கும் அன்றுதான் படத்தின் பெயர் தெரியும்!

படப்பிடிப்பு முழுவதும் சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப்பள்ளியில், 300 மாணவ-மாணவிகளை வைத்து நடந்தது.

ரஜினி உதவி

இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாது. படம் முழுவதும், 15 “செட்” உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி ஒப்பனையாளர், “டச்சப்” உதவியாளர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு செலவு வராமல் பார்த்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் 6 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருந்த ரஜினி, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்டு 10 நாட்கள் ஒதுக்கி, பத்து பைசாகூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.

ரஜினி வீட்டில் படப்பிடிப்பு

ரஜினிகாந்தை அவர் வீட்டில் மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அதைச் சொன்னதும், “இந்தக் காட்சியை வேறு எங்கும் போய் எடுக்க வேண்டாம். என் வீட்டிலேயே படமாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அது மட்டுமல்ல; தன் மனைவி லதாவையே டிபன் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்.

படத்தில் வரும் “கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே” என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடினார். திரைப்படத்துக்காக அவர் பாடியது இதுவே முதல் தடவை.

டைரக்டர் கே.பாக்யராஜ் மிகவும் `பிசி’யாக இருந்த நேரம் அது. அவருடன் ரஜினியே பேசி, கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்தார். அந்த காமெடி ஓரங்க நாடகம் (கிருஷ்ண தேவராயர் – தெனாலிராமன்) இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.

படம் நன்றாக அமைந்ததால், என்னையும், தூயவனையும் அழைத்து ரஜினி பாராட்டிய சொற்கள், இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.

லாபம்

அந்தக் காலக்கட்டத்தில், எங்களுக்கு வசதி அதிகம் கிடையாது. 24 பிரதிகள் எடுத்து, ரூ.24 லட்சத்துக்கு விற்றோம். எனக்கும், தூயவனுக்கும் ஆளுக்கு 1 லட்சம் லாபமாகக் கிடைத்தது.

எனினும், படம் பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதை பெரிய லாபமாகக் கருதினோம்.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பினால்தான் இந்தப் படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. இதற்காக வாழ்நாள் முழுவதும், நானும், தூயவன் குடும்பத்தினரும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.”

இவ்வாறு அழகன் தமிழ்மணி கூறினார்.

நன்றி : Rajini Fans.com 

தூயவன் எழுதிய “தீர்ப்பு” நாடகத்தில் ‘வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு கிடைத்த எம்.ஜி.ஆரின் பாராட்டு

சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் ‘வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம்! கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்!

viinaradai murthy

இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

‘எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து 2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.

அவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய ‘தீர்ப்பு’ என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, ‘மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு’ என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்’ என்றார்.

நாடகத்தில் `ராமு’வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி’யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.

தொடர்புடைய சுட்டி:

தூயவன் – ஓர் அறிமுகம்

தூயவன் எம்.எஸ்.அக்பர்

தூயவன் 

தினத்தந்தி

தூயவன் கதை – 2

தூயவன் கதை – 1

தூயவனின் மகன் – பாபு தூயவன்

 

Tags:

நாடகப்பணிக்கு நாகூர்க்காரர்களின் பங்களிப்பு


“நாகூர் என்ற சிறிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டீர்களா?” என் அபிமான வாசகர்கள் பலர் இதே கேள்வியைத்தான் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். நான் பிறந்த மண்ணைப்பற்றி சிந்தித்து சிலாகித்து எழுதுவதற்கு அளப்பரிய விஷயங்கள் அமுதசுரபியாய் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கின்றன.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, நான் பிறந்த மண், தனக்கென ஒரு பிரத்தியேக  மகரந்த வாசனையை சுவீகரித்து வைத்திருக்கிறது. படித்து தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை விட, பரிச்சயமான விஷயங்களை நுகர்ந்து, அனுபவக் கலப்போடு அலசி ஆராய்வதில் உள்ள சுகந்தமே தனி.

நாடகப் பணியையும் நாகூரையும் இணைத்துப் பேசுகையில், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இச்சிற்றூரில் நாடகத்திற்கான பங்களிப்பு பெரிதாக என்ன இருந்துவிட  முடியும் என்றுதான் மேலோட்டமாக யாருக்கும் தோன்றும்.  ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் முடியும்?’ என்று பலரும் நினைக்கக் கூடும்.

இசையும், நாடகமும் இஸ்லாத்துக்கு எதிர்மறையான விஷயங்கள். ஆதலால் இவைகளுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு எதுவுமே இருக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே நிலவி வருகிறது. முன்னோடியான காரியங்களை முஸ்லீம்கள் நிகழ்த்தி அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்பதற்கு நாகூரின் கடந்தகால வரலாறு நல்லதோர்  எடுத்துக்காட்டு.

“நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்று சமுதாயக் கவிஞர் தா.காசிம் அடிக்கடி குறிப்பிடுவார். ஆட்டுக்கால் சூப்பு விற்பவரும், கசாப்புக்கடை வைத்திருப்பவரும், முடிதிருத்தும் நாவிதரும், சாயம் பூசுபவரும் இரவு நேரமானால் மேடையேறி  தத்தம் இனிய குரலால் ரசிகர்களை வசீகரிப்பது இங்கு சர்வ சாதாரணம். யாரும் அவர் செய்யும் தொழிலை வைத்து குறைத்து எடை போடுவதில்லை. மாறாக கலைக்கும், கலைஞனுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் தருபவர்கள் இவ்வூர் மக்கள்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் முடிதிருத்தும் நாவிதர்கள்தான் “பதம்” என்னும் இசைக்கலையை இவ்வூரில் அழிந்து போகாமல் காப்பாற்றியவர்கள்.  சரளமாகவும், சமயோசிதமாகவும், மடை திறந்த வெள்ளமென அந்தந்த நேரத்தில் அவர்கள் வாயிலிருந்து வந்துவிழும் பாடல்வரிகள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கும்.

 “காரைக்கால் ரோட்டைப் பாரு

காதர் சுல்தான் வூட்டைப் பாரு”

“ஆண்டி குளத்தைப் பாரு

அஜீஸ் சன்ஸ் வூட்டைப் பாரு”

போன்ற எதுகை மோனை வரிகள் அவர்கள் இடம், பொருள், ஏவல், அறிந்து அனாயாசமாக உதிர்க்கும் கவிதைத் தொடர்கள்.

நாகூர் வழிபாட்டுத்தளம் என்று புகழ் பெற்றிருந்த காரணத்தினாலேயே வடநாட்டு இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து நாகூர் தர்காவில் ‘கவ்வாலி’ என்ற சூஃபி இசையை அறிமுகம் செய்து, ஹிந்துஸ்தானி இசையின் மீதும் இவ்வூர் மக்களிடையே ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போனார்கள். அஜ்மீருக்கும் நாகூருக்கும் ஏதோ ஒரு இசைவழி தொடர்பு இருந்தது.

தமிழிசையும்,  வடநாட்டு இசையும் ஒன்றோடொன்று இணைந்து Fusion-ஆகி ‘இஸ்லாமிய இசை’ என்னும் ஒரு புதுவடிவத்திற்கு நாகூர் அடிகோலிட்டது எனலாம். பெரும்பாலான நாகூர்க்காரர்களுக்கு உருதுமொழி தெரியாத போதிலும் கூட விடிய விடிய அமர்ந்து இசையைக் கேட்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தது அவர்களது இசையார்வத்திற்கும், கலையுணர்வுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றும் நாகூர் கடைவீதிகளில் சென்று சற்றே நோட்டம் விட்டால் நுஸ்ரத் பதே அலிகான் ‘கவ்வாலி’ ஒருபுறம் பாடல் பாடி அசத்திக் கொண்டிருப்பார் அல்லது குலாம் அலி ‘கஸல்’ மற்றொருபுறம் இசைத்துக்கொண்டு இருப்பார் அல்லது கடைத்தெருக்கோடியில் உவைஸ் ரிஸா காதிரி “நாத்” பாடி பரவசப்படுத்திக் கொண்டிருப்பார். ஆம். கேசட் கடையின் விற்பனையுக்தியாக நாலாபக்கமும் இசைநாதம் முழங்கிக்கொண்டிருக்கும்.

Nagore session

சூஃபி இசை என்ற பெயரில் டெல்அவிவ் வரை பயணம் மேற்கொண்டு  நாகூரின் பெருமையை பறைசாற்றியவர்கள் ‘பாவா’க்கள் என்று அழைக்கப்படும் பக்கீர்மார்கள்தான்.

நான் முன்னமேயே சொன்னதுபோல் நாகூர்க்காரர்கள் இசைக்கலையை போற்றி வளர்த்தார்களேயொழிய இசைப்பவர்களின் சமுதாய அந்தஸ்தோ அல்லது பொருளாதார அந்தஸ்தோ அவர்களுக்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தது.

இயல். இசை, நாடகம் இம்மூன்றும் கலந்ததுதான் முத்தமிழ். “முத்தமிழ் வளர்த்த நாகூர்” என்று வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டும் சொல்லப்படும் வார்த்தை அல்ல. நாகூரார்களின் இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பங்களிப்பை பிறிதொருமுறை நாம் அலசி ஆராய்வோம். அதற்கென நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டிவரும்.

நாடகத்துறைக்கு நாகூரின் பங்களிப்பு எந்த வகையில் இருந்தது என்பதே இன்று நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு.

எத்தனையோ சிற்றூர்கள் தத்தம் பங்களிப்பை தமிழுக்காக வாரி வாரி வழங்கி இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க நாகூரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு என்ன அப்படியொரு முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழ நியாயமிருக்கிறது. நாகூரைப் பற்றிய சில வியக்கத்தக்க விடயங்களை படிக்கும்போது என்னுடைய கூற்றில் நியாயம் இருப்பது வாசகர்களுக்கு நன்கு விளங்கும்.

நாகூரைப் பொறுத்தவரை நாகூரின் இலக்கிய மேன்மைகளை அதிகம் பேசுபவர்கள் நாகூர்க்காரர்கள் அல்ல. வெளியூர்க்காரர்ளும் வெளிநாட்டுக்காரர்களும்தான். “புதையல் மூட்டை மீது அமர்ந்துக் கொண்டே, புதையலைத் தேடுகின்றோம் நாம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வதைப் போல நாகூரின் பெருமை நாகூரில் வசிப்பவர்களுக்குத் தெரிவதில்லை.

நாகூரின் வரலாற்றுச் சிறப்பைக் நமக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு புதுக்கோட்டை ராஜா முஹம்மதோ, ஜெர்மனி நா.கண்ணனோ, பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்க பெண்மணியோ, அல்லது யதார்த்தா கி.பென்னேஸ்வரனோ தேவைப்படுகிறது.

முத்தமிழ்

வேந்தர்கள் மூவர்: சேர, சோழ, பாண்டியர்; சங்கங்கள் மூன்று: தலைச் சங்கம், இடைச் சங்கம், கடை சங்கம்; குறளின் அதிகாரம் மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்; குற்றங்கள் மூன்று: காமம், வெகுளி மயக்கம்;  தோஷங்கள் மூன்று: வாதம், பித்தம், சிலேட்டுமம்; முக்கனிகள் மூன்று: மா, பலா வாழை; இப்படி எல்லாவற்றையும் மும்மூன்றாக பிரித்தார்கள் தமிழர்கள்.

த-மி-ழ் : மூன்றெழுத்து. வல்லினத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தையும், மெல்லினத்திலிருந்து  ‘மி’என்ற எழுத்தையும், இடையினத்திலிருந்து ‘ழ்’ என்ற எழுத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் மொழிக்கு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்  என்பதற்கு ‘இனிமை’ என்ற மூன்றேழுத்து பொருளையும் கொடுத்தார்கள்.

நா-கூ-ர் என்ற மூன்றெழுத்து ஊர் முத்தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பை ஒரு கட்டுரைச் சிமிழுக்குள் அடக்கிவிட முடியாது.  “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல ஊடகங்கள் மறைத்தாலும் ஊரின் பெருமை மங்கி விடாது.

இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்று முறையே பிரித்து முத்தமிழ் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். இம்மூன்றும் ஒன்றை ஒன்று  சார்ந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இயலின்றி இசையில்லை. இசையின்றி நாடகமில்லை, இயலின்றி நாடகமுமில்லை. இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து வைத்திருந்தவர்கள் நாகூர்க்காரர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

“மூன்று தமிழ் சேர்ந்ததுவும் உன்னிடமோ?” என்று வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் நாகூருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற காரணப்பெயர் ஏற்பட்டதற்கு இந்த வாதம் வலிமை சேர்க்கிறது. மூன்று தமிழையும் ஒருசேர முறையே போற்றி வளர்த்தது இந்தச் சிற்றூர் என்றால் அது வியப்பில் ஆழ்த்துகின்ற விடயம்தானே?

அன்றைய பத்திரிக்கைகள், நூல்கள் சமஸ்கிருத மொழியைக் கலந்து தமிழ் வார்த்தைகளுக்கு சமாதி கட்டிக் கொண்டிருந்த காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று நடத்தினார். அவர் நாகையைச் சார்ந்தவராக இருந்ததால் அதன் பாதிப்பு நாகூரிலும் தெரிந்தது. தூயதமிழ் வார்த்தைகள் நாகூர் வாழ் பாமர மக்களின் வாயில் புழக்கத்திலிருப்பது இன்றும் கண்கூடு. மணிப்பிரவாளத் தமிழில் சிக்காமல் தப்பிப் பிழைத்த ஊர் நாகூர் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

Maraimalai

மறைமலை அடிகள்

நாகூர் குலாம் காதிறு நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் பாடிய பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.

வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து

பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்

நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட

ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ

என்ற பாடல் இருவருக்குமிடையே இருந்த நெருக்கம், கபிலர்-பிசிராந்தையார் போன்று அவர்களுக்குள் இருந்த நட்பை உணர்த்த போதுமானது.

புலவர் ஆபிதீன்

பாத்திரத்தை ஏனம் என்போம்

பழையதுவை நீர்ச் சோறென்போம்,

ஆத்திரமாய் மொழி குழம்பை

அழகாக ஆணம் என்போம்,

சொத்தை யுரை பிறர் சொல்லும்

சாதத்தை சோறு என்போம்

எத்தனையோ தமிழ் முஸ்லீம்

எங்களுயிர்த் தமிழ் வழக்கே!

என்ற நாகூர் புலவர் ஆபிதீனின், காலத்தால் அழியாத இக்கவிதை வரிகள் நாகூரில் பேச்சுவழக்கில் நிலவும் தூயதமிழ் வார்த்தைகளுக்கு சான்றாக  விளங்குகிறது.

நாகூர் வளர்த்த நாடகத்துறையை ஆராய்வதற்கு முன்னர் சின்னதாக ஒரு முன்வரலாற்றுச்சுருக்கம்.  உலகளவில் அரேபியர்கள் நாடகத்திற்கு செய்திருக்கும் மகத்தான பங்கு அளவிட முடியாது. தமிழகத்திற்கு அரேபியர்களின் வருகைக்குப் பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரபு வார்த்தைகளை தமிழ்மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுப்புது வார்த்தைகளை தன்னகப்படுத்த ஒரு மொழி கொடுக்கும் அங்கீகாரம்தான் அம்மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதென்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

“ஆயிரத்தொரு இரவுகள்” “அலாவுத்தீனும் அற்புத விளக்கும்” “லைலா-மஜ்னு” “யூசுப்-ஜுலைகா” போன்ற கதைகள், தமிழ் நாடக உலகில் மகத்தான  வரவேற்பைப் பெற்றதற்கு அதில் காணப்பட்ட “Fantasy” எனப்படும் கற்பனையுலக அனுபவமும், பிரமாண்டமும், நவீனத்துவமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

பாக்தாத் திருடன்

“குலேபகவாலி” “பாக்தாத் திருடன்” போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றமைக்கு காரணம் தமிழுக்குப் புதிதான விஷயங்களை இறக்குமதி செய்ததினாலேதான்.  இதுபோன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய நாகூரைச் சேர்ந்த ரவீந்தரை பற்றி மேலும் பல தகவல்களை கீழே தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று கண்மூடித்தனமாக எழுதுவது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை; மரபுக்கவிதை காலம் முதல் புதுக்கவிதை காலம்வரை; சித்தி ஜுனைதா முதல் கவிஞர் சல்மா வரை; இஸ்லாமியர்கள் இலக்கியத்துறையில் ஆர்ப்பாட்டமின்றி அவர்களது முத்திரையை  பதித்து வந்திருக்கிறார்கள்… வருகிறார்கள். இது நாடறிந்த உண்மை.

எம்.ஜி.ஆரின் “குடியிருந்த கோயில்” (1968) படம் வெளிவந்த காலத்திலேயே  ‘ரோஷனாரா பேகம்’ என்ற முஸ்லீம் பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ என்ற பாட்டு எல்லோரையும் முணுக்கவைத்தது. மஞ்சள் மகிமையையும், தாலியின் சிறப்பையும், குங்குமப்பொட்டின் மங்கலத்தையும் ஒரு முஸ்லிம் பெண்மணி பாடினார் என்றுச் சொன்னால் மதநல்லிணக்கத்திற்கு இதைவிட வேறென்ன இருக்க முடியும்? தமிழ்த் திரையுலகிலேயே பாடல் எழுதிய ஒரே முஸ்லிம் பெண்மணி இவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  “ஒரே ஒரு பெண்கவிஞர் எழுதிய பாடலுக்குத்தான் இதுவரை நான் பாடியிருக்கிறேன். அது ரோஷனாரா பேகம்” என்று ஒரு பேட்டியில் டி.எம்.எஸ் கூறியிருக்கிறார். “குங்குமப் பொட்டிட்டுக் கொள்ளாத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சகோதரி, குங்குமப் பொட்டின் மங்களத்தைப் பற்றிப் பாடியுள்ளது பெரும் சிறப்பல்லவா.?”என்று எம். ஜி. ஆரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவர் இவர்.

திருவாளர் ஜெயமோகன் தயைகூர்ந்து தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி வைப்பது நல்லது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஒரு சாதாரணச் சிற்றூர் முத்தமிழை எப்படி வளர்த்துள்ளது என்பதை, மனதில் இருத்திக் கொண்டால் நாகூரைப் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற எத்தனையோ பேரூர்கள் தங்களது பங்களிப்பை எப்படியெல்லாம் செய்திருக்கிறது என்பதை சுலபமாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாறு பதிவாகி இருக்கிறது. அத்தனைப்பேரும் காவியம் படைத்தவர்கள். இலக்கியக் கர்த்தாக்கள். தமிழகமெங்குமுள்ள இஸ்லாமிய இலக்கியவாதிகளின் சரணாலயமாக நாகூர் விளங்கியுள்ளது.

வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவரான செய்யது ஹமீத் இப்ராஹீமுக்கு “வண்ணக் களஞ்சியப்புலவர்” என்ற சிறப்புப் பெயரை நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

தங்களது இயற்பெயரால் அனைத்து தரப்பு வாசகர்கள் மனதிலும் நிலைத்து நிற்க இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான இஸ்லாமிய எழுத்தாளர்களை அவரது பெயர்களை வைத்து தனியே இனம்காண முடியவில்லை. ஜெயமோகனின் குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு தவறான புரிதலாக இருக்கக்கூடும்.

எஸ்.அப்துல் ஹமீதுதான் “மனுஷ்யபுத்திரன்”, ஹபீபுல்லாதான் “அபி”, முஹம்மது மேத்தாதான் “மு.மேத்தா”, சாகுல் ஹமீதுதான் “இன்குலாப்” என்கின்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?

ஒருமுறை சுஜாதாவிடம் ஒரு முஸ்லிம் வாசகர் கேள்வி கேட்டிருந்தார்: “அதென்ன, நாவலாசிரியர்கள் நிறைய பேர் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள்?” அதற்கு சுஜாதாவின் பதில் இப்படியாக “நச்”சென்று இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள்? – இது சுஜாதாவின் பதில். புதுக்கவிதையின் தாத்தாக்களான கவிக்கோ அப்துல் ரகுமானும், மு,மேத்தாவையும்  மற்றும் இன்குலாப், அபி, போன்றவர்களை மனதில் வைத்து சுஜாதா இப்படி கூறியிருக்கலாம்.

எண்ணற்ற இஸ்லாமிய இலக்கியவாதிகள் தங்களது அரபிப்பெயரை தமிழ்ப்படுத்தியும், யாரோ ஒருவருக்கு “தாசன்” ஆகவோ அல்லது தன் துணைவியாரின் பெயரை இணைத்து “மணாளன்” என்ற புனைப்பெயரைச் சூட்டியோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதை நாம் காண்கிறோம். கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்  போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

இன்றளவும் இச்சிற்றூரில் எண்ணற்ற சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மின்னிதழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என பன்முக படைப்பாளிகள் இலக்கிய உலகில் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாரு நிவேதிதா, நாகூர் ரூமி, ஆபிதீன், ஏ.எச்.ஹத்தீப் சாஹிப், கவிஞர் இஜட் ஜபருல்லா, (அண்மையில் மறைந்த) கவிஞர் நாகூர் சலீம், நாகூர் சாதிக், காதர் ஒலி, இதயதாசன், அபுல் அமீன், கவிஞர் சாதிக், T.இமாஜான் போன்றவர்களை இக்கால கட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

திருமண ‘நாலாம்நீர்’ சடங்குக்கு பரிகாசப் பாடல்கள் என்று எழுதத் தொடங்கி இப்போது வெண்பா எழுதிவரும் நாகூர் காதர் ஒலி போன்ற கவிஞர்களே இதற்கு நல்லதோர் உதாரணம். இவர்கள் எந்த பல்கலைக் கழகத்திற்குச் சென்றும் “புலவர்” பட்டம் பெற்றவர்களில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற வரிசையில் முதலில் நாடகத்துறையில் நாகூர் காட்டிய ஈடுபாட்டை மட்டும் இங்கு ஆராய்வோம்.

 நாகூரின் நாடகத் தந்தை

இந்த காமெடிக் கதையை நாகூரில் பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம்.  நாகூரில் ஒரு நாடகம் அரங்கேற்றினார்களாம். அதில் ஒரு  துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோ குத்துச் சண்டை விளையாட்டில் திறம் வாய்ந்த ஒரு உள்ளூர் பிரமுகர். அவருடைய வாயில் தூயதமிழ் வசனங்கள் அவ்வளவு எளிதில் நுழையாதாம். நாடகமோ சரித்திர நாடகம்.

“மன்னா! நம் நந்தவனத்தில் செந்நிறத்திலும், நீல நிறத்திலும், வெந்நிறத்திலும் மலர்கள் மலர்ந்திருக்கின்றன, மன்னா!”

இந்த வசனத்தை காவலாளியாக பாத்திரமேற்றிருக்கும் அந்த நபர் வசனம் பேச வேண்டும். மனனம் செய்த வசனம் மறந்துப்போய் மேடையில் அவர் லோக்கல் பாஷையிலேயே புகுந்து விளையாடி விட்டாராம்.

“ராசாவே! நம்ம பங்களா தோட்டத்துலே ரோஜு கலருன்னும், ஹூதா கலருன்னும், ஆனந்தா கலருன்னும், ஹேந்தி கலருன்னும், காக்கா முட்டை கலருன்னும் சோக்கு சோக்கா பூவு பூத்திக்கிது ராசாவே” என்றாராம்.

இன்னொருமுறை அவர் வில்லனைப் பார்த்து “நீ என்கிட்டேயே லாடுரியா?” என்று சூளுரைத்தாராம். “காக்கா. லாடுறியா அல்ல விளையாடுறியான்னு சொல்லுங்க”ன்னு கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து கூக்குரல் இட அந்த நாடக அரங்கமே அதிர்ந்த கதையை ஊரிலுள்ள ‘பெருசு’கள்  நினைவுகூறுவதை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ரசிக்கத்தக்கதாக இருக்கிறது இந்நகைச்சுவை. ‘குத்துச்சண்டை வீரர்’ என்று நான் குறிப்பிட்டது “நாகூர் பரீத்” என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பரீது காக்கா  அவர்களைத்தான்.

“ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர்.  நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி நாகூரில் பல பிரபலங்கள் உண்டு” என்று தன் பழைய நினைவுகளை பரிமாறுகிறார் நாகூரைச் சேர்ந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா

1966-ஆம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா இணைந்து நடித்த “குமரிப்பெண்” படம் வெளிவந்தது. டைட்டிலில் சண்டைப் பயிற்சி “நாகூர் பரீது” என்ற பெயர் கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். நாகூர் விஜயலட்சுமி டூரிங் கொட்டகையில் அது திரையிடப்பட்டபோது கூட்டத்தோடு கூட்டமாக நானும் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்திருக்கிறேன். நாகூரின் “நாடகத் தந்தை”அவர்.

அவரைத்தான் நாகூர்க்காரர்கள் இப்படிப் போட்டு கலாய்ப்பார்கள். கேலி, கிண்டல், குசும்பு, நக்கல், நையாண்டி இவற்றுக்கு பிரசித்தி பெற்ற ஊரன்றோ இது. தவிர இந்த காமெடிக் கதையில் இட்டுக்கட்டிய ஜோடனைகளும் உண்டு. ஏனெனில், ‘ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது’ இவர்களுக்கு கைவந்தக் கலை.

‘நாடகத்தந்தை’ பரீது அரங்கேற்றிய நாடகங்கள் நிறையவே உண்டு.  பெரும்பாலான நாடகங்களில் அவர்தான் ஹீரோ. “சந்தர்ப்பம்” “விதவைக்கன்னி” போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. பாடல்கள் எழுதுவது பெரும்பாலும் நாகூர் சலீம்தான். இவர் இப்போது திரைப்பட பாடலாசிரியரும் கூட. இவ்வூரில் முதல் முதலாக நாடகத்துக்கு பாட்டு புத்தகம் போட்டு புரட்சி செய்தது “விதவைக்கன்னி” நாடகத்திற்குத்தான்.

 நாகூர் சலீம்

நாகூர் சலீம்

நாகூர் சலீம்

நாடகத்துறைக்கு நாகூர் சலீம் அவர்களின் பங்கு அளவிடத்தக்கது. சினிமா, தொலைக்காட்சி சானல் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாத காலம் அது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுஇடங்களில், வானொலியில் ஒலிபரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ மற்றும் சினிமா பாடல்கள் ஒலிபெருக்கியில் இடம்பெறச் செய்வார்கள். கூட்டம் கூட்டமாக அமர்ந்து ரசிப்பார்கள்.

நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல ஊர்களிலும் நம்மூர்க்காரர்கள் நாடகம் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான நாடகங்களுக்கு கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் பாடலும் வசனமும் எழுதியுள்ளார்.

கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் அளித்த இந்த பேட்டியில் பற்பல சுவையான செய்திகளை நாம் அறிய முடிகின்றது.

நாகை பேபி தியேட்டரில் ‘விதவைக் கண்ணீர்’ என்ற ஒரு நாடகம் போட்டோம். அதற்கு எல்லாமே  நான்தான். அதில் ’ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் புகழ் ஆதித்தனும், ஸ்ரீலதா என்று ஒரு நடிகையும் நடித்தனர். மேக்-அப் மென் எல்லாம் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து வந்தார்கள். ’ஹவுஸ்ஃபுல்’ ஆகி ஒரு ரூபாய் டிக்கட் பத்து ரூபாய்க்கு விற்றது. ஃபரீது மாமாதான் தயாரிப்பாளர்.

 “நாகூரில் ’சந்தர்ப்பம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் “திருக்குர்ஆனே ஓடிப்போய் முஹம்மது நபியின் நெஞ்சில் ஒளிந்து கொள்” என்று ஒரு வசனம் வரும். அதனால் பெரிய கலாட்டா ஆனது. ’சோக்காளி’, ’மிஸ்டர் 1960’ என்றெல்லாம் பல நாடகங்களை நாகை, நாகூர், திருவாரூர், திருமருகல் போன்ற ஊர்களில் போட்டுள்ளோம்.

“சென்னையில், நடிகர் கே கண்ணன் தயாரித்த ’ஆனந்த பைரவி’ என்ற நாடகத்துக்கு நானும் ஆபிதீன் காக்காவும் பாடல்கள் எழுதினோம். கதை, வசனம் ’மஹாதேவி’ புகழ் ரவீந்தர். அதில் சில வரிகள்:

 எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்

என் சொந்தக் கதையை எழுதிப் பூர்த்தியாகு முன்னே

எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்.

‘என் தங்கை’ நடராசனின் நாடகத்துக்காக எழுதிய பாடலின் சில வரிகள்:

நினைவினிலே கலந்து

கனவினிலே தோன்றி

நிலைபெறும் காதலின்

ராணி எங்கே?

அணையா ஒளி வீசும்

நிலவே நீ கூறு

அடையாளம் சொல்கிறேன்

நானும் இங்கே

மங்கையின் மணி மொழிகள் தேனாகும்

அவள் மலர் விழிகள் அசையும் மீனாகும்

தங்க உடல் மாலை வானாகும்

அவள் துணை வரும் தனிச் சொந்தம் நானாகும்

வண்ணமோ புள்ளியில்லா மானாகும்

ஒளி வழியும் தொடை பளிங்குத் தூணாகும்

சின்ன இடை உடுக்கை தானாகும் — அது

தென்றல் பட்டால் ஒடிந்து வீணாகும்

 சன்னிதானம்’ என்ற நாடகம் நாகூரில் அரங்கேறியது. அதில் என் பாட்டை மேஜர் சுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார். கெட்டவனாகிப் போன ஒருவனை விரும்பும் ஒருத்தியும் அவனும் பாடும் பாடல்:

 பட்டுவிட்ட மரக்கிளையில்

பச்சைக்கொடி படருவதோ

பாவி என்னை நிழல்போதே

பாவை நீ தொடருவதோ

உள்ளத்தில் நானிருந்தால் தள்ளிவிடு

இந்த உண்மையை உனக்கு நீயே சொல்லிவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறாய்

ஆகாது எனத் தெரிந்தும்

ஆசையினைத் தேடுகிறாய்

பழி பட்டுப் போனது என் பாதை — என்னை

வழிபடத் துடிக்கிறாய் பேதை

முன்னாளில் தவறு செய்து

பின்னாளில் திருந்தியவன்

என்றாலும் உலகத்தின் முன்

ஏளனத்தைப் பொருந்தியவன்

 அவள்:

பட்ட மரம் சில சமயம்

பச்சை விட்டு வளர்வதுண்டு

பாவி என்று போனவனும்

பண்பு கொண்டு வருவதுண்டு

உள்ளத்தில் என் நினைவை

விதைத்துவிடு

இந்த உண்மையை உனக்கு நீயே

உணர்த்திவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறேன்

ஆகாது எனத் தெரிந்தும்

ஆசையினைத் தேடுகிறேன்

ஏனென்று புரிகிறது எனக்கு — நான்

என்னுயிரை இழந்துவிட்டேன் உனக்கு

==

வானம் கருத்ததடி

எழில் நிலவே நீ இன்றி நலிந்த என்

இதய வானம் கருத்ததடி

காணும் இடம் யாவும்

கார்மேகக் கூட்டம்

கண்கள் பெய்த மழை

கடலுக்கு வளமூட்டும்

மானே உன் நினைவால்

மூண்டது போராட்டம்

முடிந்தது என் வாழ்வு

மடிந்தது உயிரோட்டம்

வீணையைப் பறிகொடுத்த

பாடகி நிலையானாய்

கைப்பொருள் இழந்தவனும்

மெய்ப்பொருள் கலையானாய்

நானறியேன் கண்ணே

துயருக்கு விலையானாய்

மணந்துவிட்டேன் உன்னை

மனதில் ஏன் நிலையானாய்

===

 ”ஏ.கே.வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோ”. அந்த வரிகள்:

வெண் முத்து மாலைகள்

வெள்ளி நுரையினில்

சூடி வருகின்றாள்

இங்கே வேண்டிய பேருக்கு

வாரிக் கொடுத்திட

ஓடி வருகின்றாள்

இன்னொருத்தி:

கண்ணியர் கண்ணென

மாவடுப் பிஞ்சுகள்

நீரில் மிதக்குதடி

அது கண்ணல்ல பிஞ்சல்ல

கெண்டைகள் அம்மாடி

கும்மியடிங்கடி

==

ஏகே வேலன் கொடுத்த பாடலுக்கான சூழல் ஒரு ரிக்சாக்காரன் மனைவி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறாள். ஒரு குழந்தை எங்கோ போய் விடுகிறது. இன்னொரு குழந்தையை ரிக்சாவிலேயே ஊஞ்சல் கட்டி தகப்பன் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கிறான். அழும் குழந்தைக்குத் தாலாட்டு இது:

நடக்குற உலகத்தைப் பார்த்துக்கோ

எது நடந்தாலும் அதை ஏத்துக்கோ

சுமக்கிறதெல்லாம் சுமந்துக்கோ — மனம்

சோர்ந்து விடாமல் நிமிர்ந்துக்கோ

அப்பாடி கொஞ்சம் தூங்கப்பா

இந்த அப்பா சொல்றதைக் கேளப்பா

மாணிக்க ஊஞ்சல் இல்லை

என்ற மனக்குறை போலும் உனக்கு

சாலையின் ஓரத்திலேதான்

நம்ம சமுதாயம் இன்னும் கிடக்கு

ஏழைகள் கொதிப்பது தீமை

நாம் ஏக்கத்தில் வாழும் ஊமை

அன்னை சுமந்தாள் உன்னை — இன்று

அவளோ இங்கே இல்லை

நம்மைச் சுமக்குது பூமி

இது ஏனோ விளங்கிடவில்லை

அவனுக்குத் தெரியும் அருத்தம்

எனக்கு அதுதான் கொஞ்சம் வருத்தம்

விட்டு விட்டு இழுக்குற மூச்சு

அது வெளி வந்து போனாலும் போச்சு

தட்டு கெட்டுப் பேசுற பேச்சு

பல தவறுக்குக் காரணமாச்சு

எலும்பால் அமைந்த தேகம் — இதற்கு

ஏன் தான் இத்தனை சோகம்

நாகூர் சலீம் அவர்களின் நாடக பங்களிப்பிற்கு மேற்கண்ட அவரது பேட்டி பல சுவையான நிகழ்வுகளை நமக்கு தொகுத்து வழங்குகின்றது.

 வில்லன் “டான்

“படித்தவன்” நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜப்பார் நானா (விறகுவாடி),  “டான்” என்று அழைக்கப்படும் ஹமீது சுல்தான் ஏனையோர் நடித்த நாடகமிது. ரஜினிகாந்த், ஷாரூக்கான், அஜீத் இவர்களையெல்லாம் “டான்” என்று அழைப்பதற்கு முன்னால்  இவர்தான் இப்பெயரால் இவ்வூரில் அழைக்கப்பட்டார். வில்லன் பாத்திரமென்றால் இவரைத்தான் அழைப்பார்கள். நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று “டான்” நடிக்கையில் ஒரு சுவையான நிகழ்வு நடந்தேறியது.

கதநாயகியிடம் வில்லன் முறை தவறி நடந்துக் கொள்ளும் காட்சி. கதாநாயகி “அடப்பாவி! சண்டாளா! உனக்கு கண்ணில்லையா?” என்று வசனம் பேச வேண்டும். பாத்திரமேற்று  நடித்த டானுக்கு உண்மையிலே ஒருகண் ஊனம். “டானுக்கு கண்ணில்லைதான்” என்று கூட்டதில் ஒருவர் கூச்சல் போட,  தர்ம சங்கடமான சூழ்நிலையில் அரங்கத்தில் நிசப்தம். அதையும் திறம்பட சமாளித்துக் கொண்டு “எனக்கு கண்ணில்லாமல் இருக்கலாம். ஆனால் ஞானக்கண் இருக்கிறது” என்று சமயோசிதமாக பேசி நிலைமையைச் சமாளித்து ‘டான்’ கைத்தட்டலை அள்ளிச் சென்றது மறக்க முடியாத நிகழ்வு. இவர்களின் நாடகங்கள் நாகூர் மட்டுமின்றி திருவாரூர் வரையிலும் அரங்கேறியது.

நாகூர் சாதிக்

நாகூர் சாதிக்

நாகூர் சாதிக்

நாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களில் நாகூர் சாதிக் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பிறகு “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.

 மாடர்ன் ஸ்டேஜ்

அதற்கு அடுத்தக் கட்டமாக வேறோரு கலைக் கூட்டணி ‘மாடர்ன் ஸ்டேஜ்’ என்ற பெயரில் இணைந்தது. நாகூர் சேத்தான், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், டைலர் அஜ்ஜி, “வானவன்” இவர்களது கூட்டணி நாடக ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது முழுநேர எழுத்துப்பணியில் மூழ்கியிருக்கும் ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிப்தான் அந்த “வானவன்”.  “சிவப்புக்கோடு”, “சன்னிதானம்” போன்ற நாடகங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. நாகூர் சேத்தானை ஒரு “versatile Personality” என்று கூறலாம். ஒரு சிறந்த புகைப்படக்கலை நிபுணராகவும், நடிகராகவும், நாடக எழுத்தாளராகவும், கவிஞராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பிரகாசித்தவர்.  நாகூர் ஹனிபா பாடிய “ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம்”, காயல் ஷேக் முஹம்மது பாடிய “தமிழகத்தின் தர்காக்களை” போன்ற ஏராளமான பாடல்கள் இவர் எழுதியவை.

 நொண்டி நாடகம்

நொண்டி நாடகங்கள் தனி நடிப்பு முறையில் (Mono Acting) ஒரு திருடனின் கதையைச் சொல்பவை. கதாநாயகன் கெட்டவனாக  இருந்து காமவலையில் சிக்கிப் பிறகு தண்டனைக்குட்பட்டு உறுப்புகளை இழந்து நொண்டியாகி இறைவனை வேண்டி வழிபட, இழந்த உறுப்புகளை மீண்டும் பெறுகிறான் என்பதே எல்லா நொண்டி நாடகங்களிலும் உள்ள மூலக்கரு ஆகும்.  இவை சிந்து நடையில் எழுதப்பட்டவை.  இந்தக் கதை அமைப்பை எல்லாச் சமயத்தினரும் தங்கள் தெய்வங்களைப் போற்றவும் பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டனர்.  “திருக்கச்சூர் நொண்டி நாடகம்” (இந்துசமயம்), “சண்பகமன்னார் ஞான நொண்டி நாடகம்” (கிறித்துவ சமயம்), இவகளைப் போன்று முஸ்லீம்களும் “சீதக்காதி நொண்டி நாடகம்” என்ற ஒன்றை இயற்றி அரங்கேற்றினர்.

 கூத்துப் பட்டறை

இஸ்லாமிய நாட்காட்டியில் ‘முஹர்ரம்’ எனப்படும் முதலாம் மாதத்தில் கூத்துப் பட்டறைகள் அரங்கேறும். நாகூர் இதற்கு முக்கிய கேந்திரமாக விளங்கியது.  “காசீம் படைவெட்டு” என்ற பெயரில் “நூறு மசலா” பாணியில் விடுகதைச்சரங்கள் தொடுப்பார்கள். “மசலா” என்றால் அரபியில் விடுகதை என்று பொருள். இது “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” கதை பாணியில் இருக்கும்.

மல்யுத்தம், சிலம்பு, குத்துச் சண்டை, ஜூடோ என்று தற்காப்பு சண்டை வீரர்கள் மலிந்திருந்த ஊர் நாகூர். இவர்கள் அனைவரும் கலையுணர்வோடு இந்தக் கூத்துப் பட்டறையில் பங்கு கொள்வார்கள். முஹர்ரம் என்று வந்துவிட்டாலே பாஜிலால் பாய் மற்றும் செய்யது மெய்தீன்பாய் இவர்கள் ஹீரோவாகி விடுவார்கள்.

நாடகத் கூத்தில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் நாகூர் அரவாணிகள். யாத்ரீகர்களின் வருகையின் மிகுதியினாலோ என்னவோ நாகூர் ஏராளமான அரவாணிகளின் புகலிடமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர்களிடம் நாடகம்,  நாட்டியம் என்ற கலையுணர்வுகள் பொதிந்துக் கிடந்தது நிதர்சனமான உண்மை.

Peacock Dancer

நாகூர் சுல்தான் என்ற அரவாணி தமிழகத்து மயில் டான்ஸ் கலைஞருள் மிகவும் போற்றத் தக்கவர். இந்த பாரம்பரியக்கலை இப்போது முற்றிலும் அழிந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. பிழைப்புக்காக “வாடா” என்ற தின்பண்டங்களை பொறித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இவர் நடனக் களத்தில் இறங்கி விட்டால் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துவார். மயில் டான்ஸ் கலையில் புதுப்புதுயுக்திகளை கையாண்டதாக தஞ்சை கரகாட்டக் கலைஞர்கள் இவரைக் குறித்து நினைவு கூர்கிறார்கள்.

கூத்துப் பட்டறையில் சுல்தான், ஹாஜி, காசீம் போன்ற அரவாணிகள் நாடக வசனம் பேசி, நாட்டியமாடி ரசிகர்களைக் கவருவார்கள். டி.ராஜேந்தர் இயக்கிய முதற்படமான “ஒரு தலை ராகம்” படத்தில் இடம்பெற்ற “கூடையிலே கருவாடு” என்ற பாடலுக்கு குரூப் நடனமாட அரவாணிகள் தேவைப்பட்டபோது நாகூரிலிருந்துதான் ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றார்கள்.

 ரவீந்தர்

ravindar

ரவீந்தர்

நாடகத் துறைக்கு கலைமாமணி நாகூர் ரவீந்தர் ஆற்றிய பணி அளவிட முடியாதது. அவரது சொந்தப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் . ரவீந்திரநாத் தாகூர் நினைவாக அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது எம்.ஜி.ஆர்.தான். நாகூருக்கு பக்கத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ‘டணால்’ தங்கவேலு. வலைத் தொப்பியொன்று அணிந்துக் கொண்டு உருவத்தில் முஸ்லீம் அன்பர் போலவே காட்சியளிப்பார். ரவீந்தர் கதைவசனம் எழுதி தங்கவேலு நடித்த “மானேஜர்”  என்ற மேடைநாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நாடகம் அவருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகத்தை பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் கதாசிரியராக பணியாற்றினார்.

குலேபகவாலி (1956) படத்திற்கு கதை வசனம் எழுதியதும் ரவீந்தர்தான்.  ரவீந்தருக்கு அரபி, பார்ஸி மொழிகள் தெரிந்திருந்ததால் அரேபிய  கலாச்சாரத்தை அருந்தமிழுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடிந்தது. இவர் அப்போது புதியவர் என்ற காரணத்தினால் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக தஞ்சை ராமையாதாஸின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கலையரசி, சந்திரோதயம், பாக்தாத் பேரழகி, அடிமைப்பெண் என்று 32 படங்களுக்கு மேல் கதை வசன எழுதினார்.

தூயவன்

thooyavan

தூயவன்

 தூயவன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கிய அக்பர், நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா. 84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார் “வைதேகி காத்திருந்தாள்” “அன்புள்ள ரஜினிகாந்த்” உட்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர். இவர் கதை, வசனம் எழுதி ஏ.வி.எம். ராஜன் & புஷ்பலதா ஜோடி நடித்த “பால்குடம்” நாடகம் தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது. நாகை பாண்டியன் தியேட்டரில் “பால்குடம்”  நாடகம் அரங்கேறியபோது பிரமாண்டமான ‘செட்டிங்’கண்டு நான் பிரமித்துப் போனேன்.

ஆவுக்கெச்சேனோ

வீடியோ கேமரா புழக்கத்தில் வந்த புதிதில் “ஆவுகெச்சேனோவில் ஆவியுலக ஆராய்ச்சி” என்ற குறும்படத்தை நான் எழுதி இயக்க நாகூர் சேத்தான் ஒளிப்பதிவு செய்ய, நண்பர் கபீர் ஒலிப்பதிவு செய்தது சுவையான அனுபவம். நகுதா, சாஹுல் ஹமீது, இதயதாசன், பாரூக் ராஜா, அலி, சின்னக் காமில் மற்றும் நான் எல்லோரும் நடித்திருந்தோம். தற்செயலாக நான் ஒருநாள் நான் பாண்டிச்சேரியிலிருந்து நாகூர் வருகையில் “மரைக்கார்  டிரான்ஸ்போர்டில்” இந்த வீடியோ படம் போட்டார்கள். நாம் விளையாட்டாக எடுத்த படம் இவ்வளவு தூரம் பரவி விட்டதே என்று அசந்தே போய்விட்டேன்.  நான் பஹ்ரைன் வந்த பிறகு இந்த குறும்படத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டதாக கேள்வியுற்றேன்.

நாடகங்கள் என்பது நாகூருக்கு புதிதல்ல. அந்த காலத்திலிருந்தே ஜனங்களை விடிய விடிய உட்காரவைத்து வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, சாட்டிலைட் சேனல் இல்லாத காலம் அது.

கோயில் கும்பாபிசேஷங்களில் இராமயண கதை, சீதா கல்யாணம், கதாகாலேட்சபம், நாட்டார் கூத்து, புராண நாடகம் என்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை “நூறு மசலா” “அப்பாஸ் நாடகம்” என்று அவர்களை இழுத்துப் பிடிக்க இது உதவியது. டேப்ரிக்கார்டு கேசட் வந்த புதிதில் “நூறுமசலா” கேசட்டைப் போட்டுவிட்டு பக்தி பரவசத்தோடு(!) குறிப்பாக தாய்மார்கள் நாள்முழுக்க வீட்டில் அமர்ந்து ரசிப்பதை கண்டிருக்கிறேன்.

லால் கெளஹர்

பெரும்புலவர் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் இயற்றிய ‘லால் கௌஹர்’ நாடகம் நாடகத்துறைக்கு ஒரு மைல் கல் எனலாம். எம்.ஆர்.ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் போன்று திருப்பத் திரும்ப அந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது. நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மேடை நாடகமாக நடிக்கப்பெற்று ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றதை நாகூர் மூத்த குடிமகன்கள் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார்கள்.  நாகூரில் கவ்வாலி கச்சேரிகள் நடக்கையில், மொழி புரியாவிட்டாலும் கூட விடிய விடிய உட்கார்ந்து ரசிக்கும் நாகூர்க்காரர்கள், புரிகின்ற மொழியில் நாடகங்கள் என்றால் அவர்கள் காட்டிய ஆர்வத்தைச் சொல்லவா வேண்டும்?

“லால் கெளஹர்” என்ற இந்த நாடக நூலினை 1892-ஆம் ஆண்டில் பெரும்புலவர் வித்வான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் பதிப்பித்தும் இருக்கிறார்கள்.  1990 – ஆம் ஆண்டில் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் பதிப்பாக  வெளியிடப்பட்டது அந்நாடகத்திற்கு இத்தனை ஆண்டுகட்குப் பின்னும் வரவேற்பு உள்ளதற்கு இதுவே ஒரு நற்சான்று.

‘லால் கௌஹர்’ நாடகத்தைத் தொடர்ந்து வாஞ்சூர் பக்கீர் (இவர் பக்கீர் முஹியித்தீனுடைய புதல்வர்) எழுதிய ‘அப்பாஸ் நாடகம்’ பெரும் வரவேற்பைக் கண்டது. நாகூர் , நாகப்பட்டினம் மட்டுமன்றி மலேயா (குறிப்பாக பினாங்கு), சிங்கப்பூர், சிலோன்  போன்ற நாடுகளிலும் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி இருக்கிறது.

நாகூர் கோசா மரைக்காயர் (கோ. முகம்மது நைனா மரைக்காயர் அவர்களின் புதல்வர்)  இவர் , “சராரே இஷ்க்”, “ஷிரீன் பரஹாத்”, “ஜூஹுரா முஸ்திரி”, “லைலா மஜ்னூன்” போன்ற  நாடகங்கள் எழுதி  புரட்சி செய்தவர்.

 நாகூர் புலவர்ஆபிதீனும், நாகூர் ஹனிபாவும்

Nagore_Hanifa

நாகூர் புலவர் ஆபிதீன் நிறைய நாடகங்கள் எழுதி, இயக்கி, அவரே  நடித்தும் இருக்கிறார். இஸ்லாமியப் பாடகராக எல்லோரும் நன்கறிந்த நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு திறமையான  நாடக நடிகரும் கூட என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1950-ல் புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேறியது.  நாடகத்திற்கு தலைமை தாங்கியவர்  பேரறிஞர் அண்ணா அவர்கள்  . வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் கலைஞர் மு, கருணாநிதி. நாடகத்தில் ஒரு கவிஞராக நாகூர் ஹனீபா நடித்திருந்தார். “அந்த பாத்திரத்திற்கு அனிபா என்று பெயர் வைக்கலாம், அவ்வளவு சிறப்புற நடித்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினாராம் அறிஞர் அண்ணா. கலைஞர் பேசுகையில் “ஹனி; என்றால் தேன்.  ‘பா’ என்றால் பாட்டு.  ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது” என்று வார்த்தை அலங்காரம் செய்ய அரங்கத்தில் பலத்த கரகோஷம்.

தமிழகத்தில் நாடக வளர்ச்சியில் சமயம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவுசெய்யும் நோக்கத்தில் இந்துமதம், இஸ்லாமிய மதம், கிறித்துவ மதம் ஆகிய மூன்று மதங்களும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

தமிழகத்தில் முஸ்லீம்கள் முதன்முதலாக அரங்கேற்றம் செய்த நாடகங்களுள் மூன்று நாடகங்கள் சரித்திரமச் சாதனை படைத்தவை. 1) முகமது இப்ராகிமின் “அப்பாஸ் நாடகம்” (1873), 2) வண்ணக் களஞ்சியப் புலவரின் “அலிபாதுஷா” நாடகம் மற்றும் தையார் சுல்தான் நாடகம்,  3) “லால்கெளஹர் நாடகம்” ஆகியன.

கிறித்துவ நாடகாசிரியர்கள் வழங்கிய “ஆதாம் ஏவாள் விலாசம்”, “ஞான சௌந்தரி அம்மாள் நாடகம்”, “ஞானதச்சன் நாடகம்”, “ஊதாரிப் பிள்ளை நாடகம்”, “நல்ல சமாரித்தன் நாடகம்” முதலான நாடகங்களும் பிரபலம்.இவை இசை நாடகங்களாக இருந்தன.

பின்வந்த சங்கரதாச சுவாமிகளும் நவாப் ராஜமாணிக்கமும் இவற்றை மேடையில் நடித்தனர். சோகி நாடகம், ஒட்ட நாடகம் என்று சாதிய நாடகங்களும் தோன்றின. தமிழ் நாடக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒன்று 1889 இல் வேப்பம்மாள் என்ற பெண் நாடக ஆசிரியர் சீதா கல்யாணம் எனும் நாடகத்தை இயற்றிய நிகழ்வு ஆகும்.

மேலே நான் குறிப்பிட்ட இஸ்லாமியர்கள் எழுதிய நாடகங்களின் முக்கிய கேந்திரமாக நாகூர் விளங்கியது என்பது எல்லோரும் ஒத்துக் கொண்ட விடயம்.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை; கண்ணீரால் காத்தோம்” என்று முத்தமிழில் ஒன்றான நாடகக் கலையை நாகூர் மக்கள் கண்ணின் மணியாக போற்றிப் பாதுகாத்தார்கள் என்பது வெள்ளிடமலை.

நாகூர்வாசிகள் இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு பற்றிய கட்டுரைகளை மென்மேலும் தொடர ஆசை.

  – அப்துல் கையூம்

 

Tags: , , , , , , ,