
Judge M.M.Ismail addressing the audience

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் கம்ப ராமாயணத்தை ஆராய்ந்து எழுதிய “மூன்று வினாக்கள்”, “கம்பன் கண்ட ராமன்”, “கம்பன் கண்ட சமரசம்”, “வள்ளலின் வள்ளல்”, போன்ற நூல்களைத்தான் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்களேத் தவிர அவர் வரைந்த இஸ்லாமிய நூல்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் மிக மிகக் குறைவு.
அவர் இஸ்லாமியப் பணி எதுவுமே ஆற்றவில்லை என்ற தவறான ஓர் எண்ணம் பொதுவாகவே நம் மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது.
தமிழிலக்கியத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஒர் அளவிலா ஈர்ப்பும், ஈடுபாடும் இருந்ததோ அதே அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் அசைக்கமுடியாத ஒரு பற்றும் பிடிப்பும் இருந்தது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
கம்பராமாயணத்தை ஆய்ந்து அதில் முழுமையான தேர்ச்சி பெற்றதினால் அவருக்கு இஸ்லாமிய இலக்கியத்தின் மீது ஈர்ப்பு கிடையாது என்று அர்த்தம் கொள்ளல் ஆகாது.
இலக்கிய ஆர்வத்திற்கு மதம் ஒரு பொருட்டே அல்ல. இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவரைவிட இஸ்லாமியர் ஒருவர் இந்து சமய இலக்கியத்தில் வல்லுனராக விளங்கினார் என்றால் அது நிச்சயம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்.
அவர் எழுதிய இஸ்லாமிய நூல்களில் “அல்லாவுக்கு ஆயிரம் திருநாமங்கள்” என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பாகும். எத்தனை ஆண்டுகளானாலும் இது வாசகர்கள் மனதில் நிலைத்திருக்கும். காரணம் அதில் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார் அவர்.
அரபு மொழியிலும், தமிழ் மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர இயலும். நீதிபதி அவர்களின் மொழியாற்றலை இந்நூலை முழுவதுமாக வாசிக்கையில் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.
“அஸ்மாவுல் ஹுஸ்னா” என்றால் அழகிய திருநாமங்கள் என்று அர்த்தம்.
நாட்டை ஆளும் ராஜாவையே “ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, வீராதி வீர, வீர மார்த்தாண்ட” என்றெல்லாம் மனிதன் புகழாரம் சூட்டும்போது, உலகாளும் இறைவனை எப்படியெல்லாம் நாம் போற்றிப் புகழ வேண்டும்? அவனது சிறப்புக்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு அந்த வல்லவனை நாம் தியானிக்கையில்தான் எப்பேர்ப்பட்ட பேரின்பம்? உதாரணமாக, ரஹ்மான் (அருளாளன்), ரஹீம் (அன்பாளன்), என்று பொருளுணர்த்தும் ஒவ்வொரு பெயரும் இறைவனின் தன்மையையும், சிறப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
வணக்கத்திற்குரிய ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு பல வேதங்களிலும், பல மொழிகளிலும் சுமார் மூவாயிரம் திருப்பெயர்கள் உண்டு. இதற்கு வேதவாரியாகப் பட்டியலும் பிற விவரங்களும் உண்டு. இறுதி வேதமான திருக்குர்ஆனிலும் நபிமொழியிலும் சேர்த்து 99 -அழகுத் திருப்பெயர்கள் உள்ளன.
“வணக்கதிற்குரிய ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்” (அல்-அஃராப் 7:180) என்றுரைக்கிறது திருக்குர்ஆன்
திருமறையில் 81 பெயர்களும், நபிமொழியில் 18 பெயர்களும் ஆக மொத்தம் 99 அழகுத் திருப்பெயர்களால் இறைவனை முஸ்லீம்கள் துதிக்கிறார்கள்.
நம் இடது உள்ளங்கையில் அரபி எண் 81-ம், வலது உள்ளங்கையில் அரபி எண் 18-ம் காணப்படுவது இதனால்தானோ?.


“அல்லாஹ்விற்கு 99 – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். – புஹாரி:6410 அபூஹூரைரா (ரலி).
“நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – அதனை மனனம் செய்தவர் – என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா – ரலி, நூற்கள்: புகாரீ 2531, முஸ்லிம்)
ஒவ்வொரு திருப்பெயர்களில் அடங்கியிருக்கும் அர்த்தங்களும் அதில் வெளிப்படும் விளக்கங்கள், அற்புத கருத்துக்கள் மற்றும் ஆழ்ந்த பொருட்செறிவும் இறைவனின் தன்மையை உணர்த்தும் அற்புதப் பிழிவாகும்.
“யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்'” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் – 199)
இறைவனின் திருநாமங்களின் சிறப்புகளை எடுத்தியம்பும் வகையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
டாக்டர் இப்ராஹிம் கரீம் என்ற மருத்துவ ஆய்வாளர் இறைவனின் சில குறிப்பிட்ட பெயர்களை ஒவ்வொன்றாக உச்சரிக்கையில் மனித உடலில் சில குறிப்பிட்ட உறுப்புக்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். தனது மூன்றாண்டு ஆராய்ச்சியின் முடிவில் மருத்துவ ரீதியாக நோய்களை குணமாக்கக்கூடிய அபூர்வ சக்தி (Healing Power) அப்பெயர்களுக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்.
எல்லா வல்ல இறைவனின் தன்மையை உணர்த்தும் பெயர்களை உச்சரிக்கையில் இத்தனை சிறப்புக்களா? என்று நாம் வியந்து போகிறோம்.
அஸ் ஸமி (As-Sami) என்று தியானிக்கையில் காதுகள், அல் நஃபி (Al Nafi) என்று தியானிக்கையில் எலும்புகள், அல் கவி (Al-Qawi) என்று தியானிக்கையில் தசைகள், அல் முக்னி (Al Mughni) என்று தியானிக்கையில் நரம்புகள் – இப்படியாக இறைவனின் ஒவ்வொரு பெயரின் துதிபாடலுக்கும் ஒவ்வொரு உடலுறுப்புகள் வலிமை பெறுவதற்கான அறிகுறிகளை டாக்டர் இப்ராஹீம் கரீம் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இறைவனின் 99 நாமங்களில் சில நாமங்கள், தீராத வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்தாக விளங்குகிறது என்று அவரது ஆராய்ச்சி பறைசாற்றுகின்றது. எடுத்துக்காட்டாக அல் ஜலீல் (Al-Jalil) என்ற நாமம் கேன்ஸர் வியாதிக்கும், அல் ஜப்பார் (Al-Jabbar) என்ற நாமம் Thyroid சிகிச்சைக்கும், அல் கனி (Al-Ghani) என்ற துதி Migraine (ஒற்றைத் தலைவலி) சிகிச்சைக்கும், அல் காஃபித் (Al-Khafed) என்ற இறைநாமம் இரத்தக்கொதிப்புக்கு நிவாரணியாக அமைவதாகவும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
இப்படியாக அனைத்து 99 திருநாமங்களுக்கும் குணப்படுத்தும் அற்புதத் தன்மை உள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. சில இல்லங்களில் திருஷ்டி பொம்மையை கட்டி தொங்க விடுவதைப்போன்று இந்த இறைவனின் நாமங்களை கண்ணாடி பிரேம் இட்டு மாட்டி வைப்பதினால் மட்டும் பயன் ஏதும் கிட்டி விடப்போவதில்லை. இறை நம்பிக்கையோடு ஆத்மார்த்த ரீதியில் உள்ளச்சத்தோடு இந்த அழகிய திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமே பயனடைய முடியும்.
மருத்துவ உலகில் இல்லாத மருந்துகளா? அவைகள் தராத நிவாரணத்தையா இந்த இறைநாமத்தின் துதிப்பு நிவாரணம் தந்து விடப்போகின்றது என்று சிலர் எண்ணக்கூடும். “Be faithful in small things because it is in them that your strength lies.” என்ற அன்னை தெரசாவின் பொன்மொழிதான் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது.
“More things are wrought by prayer than this world dreams of.” என்ற லார்ட் டென்னிஸனின் வார்த்தைகள் பொய்யல்ல. மனிதன் நினைத்துக்கூட பார்க்க முடியாத சில அதிசயங்களை அவரவர் வாழ்வில் இறைநம்பிக்கை நிகழ்த்திக் காண்பித்திருக்கிறது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு மருத்துவர் கூறும் இறுதி வார்த்தைகள் “இனி எங்கள் கைகளில் எதுவும் இல்லை. இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” என்பதாகத்தான் இருக்கும்.
அந்த இறை வேண்டுதலின் ஒரு பகுதிதான் இந்த இறைநாமங்களின் உச்சரிப்பு. இசைக்கு வியாதிகளை குணப்படுத்தும் அபூர்வசக்தி உண்டென்று நம்புபவர்கள, அகில உலகத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆண்டவனின் தன்மையை எடுத்துரைக்கும் அவனது பெயர்களுக்குள்ள அபூர்வசக்தியை ஏன் உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.
இறைவனின் திருப்பெயர்களின் தன்மைகளை தெள்ளத் தெளிவாக விளங்கியதோடன்றி அதனை பலரும் அறிந்துக்கொள்ளும் வண்ணம் “அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்” என்ற பெயரில் நூல் எழுதிய பெருமை நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

ஏம்பல் தஜம்மல் முகம்மது
“அஸ்மாவுல் ஹுஸ்னா – இவற்றின் அருமையை உணர்ந்து விரித்துரைத்த பேரறிஞர் – எனக்குத் தெரிந்தவரையில் – ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள்தாம். அஸ்மாவுல் ஹுஸ்னாவில் உள்ள ஒவ்வொரு திருப்பெயரைப் பற்றியும் ஒரு மாத இதழில் தொடராக வருடக் கணக்கில் எழுதி நிறைவு செய்தார்- எண்பதுகளின் இறுதியில்; அந்தத் தொடர் பின்னர் ஒரு நூலாகவும் வெளியானது. அது இப்போது கிடைத்தாலும் ஆழ்ந்து, பொறுமையாகப் படிக்கக்கூடியவர்கள் அரிதாகிப் போன காலம் இது. எனினும் எனக்கு மட்டும் “அஸ்மாவுல் ஹுஸ்னா”வை இளைய தலை முறையினருக்கு எளிய முறையில் எத்தி வைத்துவிடவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது” என்று நீதிபதி ஐயா அவர்களுக்கு புகழ்மாலை சூட்டுகிறார் இஸ்லாமிய அறிஞரான ஏம்பல் தஜம்மல் முகம்மது.
நமது அடுத்த பதிவில் நீதிபதி அவர்கள் எழுதிய இனிக்கும் இராஜநாயகம் என்ற இஸ்லாமிய இலக்கிய நூலைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.
– இன்னும் வரும்

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்
கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்
எழுதிய நூல்கள்
வாழ்க்கைக் குறிப்பு
பிறர் பார்வையில்
ஜெயமோகன் பார்வையில்
தந்தை பெரியாரைப் பற்றி
கவிஞர் வாலியின் பார்வையில்
இராம வீரப்பன் பார்வையில்
டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்
10.812780
79.839100