RSS

Tag Archives: நாகூர் மண்வாசனை

ரவீந்தரும் சத்யஜித் ரேயும் – தொடர் 12


Raveendar aSatyajit Ray a

வங்காளத்தில் பிறந்த உலகப் புகழ்ப் பெற்ற சத்யஜித் ரேயுக்கும், நாகூரில் பிறந்த காஜா மொய்தீன் என்ற ரவீந்தருக்கும் அப்படியென்ன தொடர்பு இருக்க முடியும்?

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நான் முடிச்சு போடுவதாக வாசகர்கள் நினைக்கக்கூடும்.

இருவரும் Science Fiction (அறிபுனை) திரைப்படங்களுக்கு இந்தியத் திரையுலகில் வித்திட்ட முதல் இந்தியர்கள். மேலை நாட்டவர்களை வியக்க வைத்தவர்கள்.

சத்யஜித் ரே வடநாட்டில் பிறந்ததினால் புகழ்க்கொடி நாட்டினார். ரவீந்தர் தென்னாட்டில் பிறந்ததினால் யாராலும் கண்டுக்கொள்ளப் படாமல் நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கிக்கிடந்து, எழுதிக் குவிக்கும் இயந்திரமாகச்  செயல்பட்டு மறைந்தும் போனார்.

சத்யஜித்ரே விருதுகளைத் தேடிப் போகவில்லை. இவரைத் தேடி விருதுகள் வந்தன. ஆம். மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்க இரண்டுபேர் கொண்ட ஆஸ்கார் குழு உடல்நலம் குன்றியிருந்த  சத்யஜித் ரேயைத் தேடி மருத்துவமனை வந்து, தந்து கெளரவித்தனர். பிரஞ்சு நாட்டு “லிஜியன் டி” பரிசு, யூகோஸ்லோவியா நாட்டு “கொடி விருது”  “மகஸாஸே” விருது, இந்திய நாட்டு “பாரதரத்னா”, “பத்மஸ்ரீ”, “பத்மபூஷன்”, “பத்மவிபூஷன்”  போன்ற விருதுகள் அனைத்தும் இவருக்குத் தானாகவே வந்துக் குவிந்தன.

காலங்காலமாக எம்.ஜி.ஆருக்கு உழைத்த காரணத்தால் ரவீந்தருக்கு பெரிய மனது படைத்து ஒரே ஒரு விருது – “கலைமாமணி” என்ற பட்டம் கொடுத்தார்கள். அதுவும் அவரது அபிமானக் காவலர் எம்.ஜி.ஆர். கையால் பெற அவர் கொடுத்து வைக்கவில்லை. எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வர இயலாததினால் நெடுஞ்செழியன் கையால் கொடுக்க வைத்தார்கள். கலைமாமணி விருதைப் பொறுத்தவரை கழுதைகள், குதிரைகள் யாவும் ஒன்றுதான். ஏன்…? தமன்னா, அனுஷ்கா கூட கலைமாமணி விருது பெற்றவர்கள்தானே?

சத்யஜித் ரே மறைந்த போது திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ரவீந்தர் மறைந்தபோது திரையுலகத்தினரும் யாருமே கண்டுக் கொள்ளவில்லை, ஊடகங்களும் அவரது மறைவுச் செய்தியைத் தரவில்லை.

இறக்கும் தறுவாயில் சத்யஜித் ரே பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் இருந்தார். ரவீந்தரை தமிழ்த் திரையுலகம் கைகொடுத்து தூக்கவில்லை.   இறுதிவரை அவர் வாடகை வீட்டிலேயே காலம் தள்ள வேண்டியதாயிருந்தது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழ்ந்து மறைந்த நடன ஆளுமை பால சரஸ்வதி குறித்துக் கலாபூர்வமான ஆவணப்படத்தை எடுத்தவர் என்ற வகையில் தமிழகத்தோடும் தொடர்புகொண்டவர்  சத்யஜித் ரே.

ஏன்? ரவீந்தருக்கு மட்டும் வங்காளத்தோடு தொடர்பு இல்லாமலா?

ரவீந்தர் கதை வசனம் எழுதி அவர் வெளிச்சத்திற்கு வந்தப் படம் “நாடோடி மன்னன்”. எம்.ஜிஆர்.  “மாயா மச்சீந்தரா” படப்பிடிப்புக்காக கல்கத்தா சென்றபோது அங்கு பார்த்த “If I were King” ஆங்கிலப் படத்தின் கருவை ரவீந்தரிடம் சொல்ல, அதுவே  “நாடோடி மன்னன்” உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

நாகூர் காஜா மொய்தீனுக்கு “ரவீந்தர்” என்ற புனைப்பெயரே வங்காளத்துக் கவிக்குயில் ரவீந்தரநாத் தாகூரின் அபிமானத்தால் வைத்துக் கொண்ட பெயர்தான். இவரை நாகூரின் தாகூர் என்றாலும் அது மிகையாகாது. சத்யஜித் ரே ஓவியக் கலை பயின்றது ரவீந்தர்நாத் தாகூர் தோற்றுவித்த சாந்தி நிகேதன் பல்கலைக் கழகத்தில்தான்.

இவ்வகையில் அறிந்தோ அறியாமலோ, வங்காளத்திற்கும் தமிழகத்திற்குமான தற்செயலான நிகழ்வுப் பொருத்தங்களை நாம் காண முடிகின்றது.

தமிழ்மொழியில்   அறிபுனைத் திரைப்படங்களுக்கு  முன்னோடி யார்?” என்ற கேள்வியை முன்வைத்தால் எல்லோரும் ஒருமுகமாக எழுத்தாளர் சுஜாதாவின் பெயரைத்தான் கூறுவார்கள். நாகூர் ரவீந்தர்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள். யாரும் நம்ப மாட்டார்கள். இது வெளிச்சத்திற்கு வராத உண்மை. இந்த உண்மையை எந்த மீடியாக்களும் வெளிக்கொணர்ந்தது கிடையாது என்பதுதான் வருத்தம் தரக்கூடிய செய்தி.

1982-ஆம் ஆண்டு ஸ்பீல்பெர்க்கின் E.T. (the Extra Terrestrial) என்ற ஆங்கிலத் திரைப்படம் மேலைநாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் சக்கைப் போடு போட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். இதே போன்று  2003-ஆம் ஆண்டு ஹிர்த்திக் ரோஷன் நடித்த “Koi Milgaya” என்ற இந்திப்படத்தையும் இந்தியத் திரையுலகில் நவீனயுக்தி, புதுசிந்தனை, மாறுபட்ட படைப்பு என்றெல்லாம் ஊடகங்கள் பாராட்டுமழை பொழிந்தன.

112

தமிழ்த் திரைப்படஉலகில் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய திரைப்படம் 1963-ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஆம். எம்.ஜி.ஆர் நடித்த “கலைஅரசி” படம்தான் அந்த முதல் தமிழ்த் திரைப்படம்.

“கலைஅரசி” படச் சாதனையில் ரவீந்தருக்கு தலையாய பங்களிப்பு உண்டு.  டி.இ.ஞானமூர்த்தி எழுதி வைத்த அறிவியல் புனைவிலிருந்து மூலக்கருவைக் கையாண்டிருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் முழுவதையும் எழுதி வடிவமைத்தது ரவீந்தர் ஒருவரேதான்.

தமிழ்த் திரையுலகிற்கு பாரசீக, அரபு நாட்டுக்கதைகளை அறிமுகம் செய்து முஸ்லீம் கதாபாத்திரங்களை புகுத்தி வெற்றி பெற்றதோடல்லாமல் இதுபோன்ற எண்ணற்ற  புதுமைகளை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ரவீந்தரைச் சாரும்.  புதுப்புது யுக்திகளை கையாண்டு சினிமா உலகில் பரிசோதனை செய்து வெற்றி கண்டவர்.

பஞ்ச் டயலாக் என்ற Concept-யை தமிழ்ப்பட உலகில் முதன்முதலில் புகுத்திய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசிய “மணந்தால் மகாதேவி இல்லயேல் மரணதேவி” என்ற காலத்தால் அழியாத பஞ்ச் டயலாக் ரவீந்தர் எழுதியதுதான்.

தமிழ் மொழியில் எத்தனையோ அறிபுனைத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. “விக்ரம்”,  “நியு”, “இரண்டாம் உலகம்”, “அம்புலி”, “எந்திரன்” என எத்தனையோ சினிமாக்களை உதாரணம் காட்ட முடியும். இவை யாவற்றிற்கும் முன்னோடியாகத் திகழ்ந்த படம்தான் “கலையரசி”.

வேற்றுக் கிரக மனிதர்களை மையமாக வைத்து எழுதப்பட்டு, இந்தியத் திரையுலகில் மாபெரும் புரட்சியை உண்டு பண்ணிய முதல் அறிபுனைத் திரைப்படம் இதுதான்.

இதுபோன்ற அறிவியல் தொடர்பான கதைகளை கையாண்ட சுஜாதா, அரவிந்தன் நீலகண்டன், ராஜ்சிவா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் நாகூர் ரவீந்தருக்கு பின்னர் வந்தவர்கள்தான் என்பதை இங்கு நான் பதிவு செய்வதன் மூலம் உண்மை நிலவரம்  இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியவரும்.

kalai-arasi08

“கலைஅரசி”  வெள்ளித்திரையில் திரையிடப்பட்டபோது வெகுவாகப் பேசப்பட்டது. பறக்கும் தட்டு Concept-யை இந்தியத் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்தது ரவீந்தர்தான். கதையை உருவாக்கி ஏ.காசிலிங்கத்திடம் தனது கற்பனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ஆர்ட் டைரக்டர் ஏ.கே.பொன்னுச்சாமியை விண்கலம் மற்றும் அயல்கிரகத்து வடிவமைப்பை வரையச் செய்தவர் ரவீந்தர்.

1950-களின் தொடக்கம்வரை வேற்றுக்கிரக விண்கலத்தை பறக்கும் தட்டு (Flying Saucers) என்றே அழைத்து வந்தனர். பிற்காலத்தில் இதனை  ‘அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள்” ’(UFO-Unidentified Flying Object)  என்று அழைக்கலாயினர். அரிஸ்டாட்டில் இதனை “சொர்க்கத்தின் தட்டு” என்று அழைத்தார்.

கி.பி. பதினோறாம் நூற்றாண் டிலேயே  சீனக் கல்வியாளரான ஷென்குவே என்பவர், தான் எழுதிய கட்டுரையில் “பறக்கும் தட்டு” பற்றிய தன் கற்பனையை வடித்திருந்தார். பறக்கும் பொருளின் கதவுகள் திறக்கப்படக் கூடியதாகவும் அது ஒளி வீசக் கூடியதாகவும் அதிவேகமாகச் செல்லக் கூடியதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கலைஅரசி படத்தில் பறக்கும் தட்டின் வடிவமைப்பு இதுபோலத்தான் இருந்தது.

kalai-arasi19

விளம்பரத்தையோ, புகழையோ நாடாத ரவீந்தர் தன்னுடைய பெயரை போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி, அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத ஒரு மனோபாவம் கொண்டவராக – Don’t Care Master-ஆக  இருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம். ஜி. ஆர், கதாநாயகனாகவும்  பி. பானுமதி மற்றும் பலரும் “கலைஅரசி: படத்தில் நடித்தனர். இவர்களைத் தவிர  ராஜஸ்ரீ, பி.எஸ்.வீரப்பா, கண்ணன், எம்.என்.நம்பியார், சச்சு, சி.டி.ராஜகாந்தம், எஸ்.ஆர்.ஜானகி, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா  என்று ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

இதில் இடம்பெற்றிருந்த சச்சு, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா, பாடகி ரத்னமாலா போன்ற கலைஞர்கள் ரவீந்தர் கதாசிரியராக இருந்த எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்திலிருந்து பயிற்சிபெற்று உருவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும்,   இப்படத்தில் எம்.ஜி.ஆர் பெயரும் ரவீந்தர் பெயரும் ஒன்றாக இடம் பெற்றிருந்ததாலும், இதனை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் படம் என்றே பலரும் நினைத்தனர். உண்மையில்  “சரோடி பிரதர்ஸ்” என்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரித்து வழங்கியிருந்தார்கள்.

114

1950-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இப்படம் எடுத்து முடிப்பதற்கு நீண்ட காலம் பிடித்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. காரணம், இப்படத்தின் பாடலாசிரியர்களின் ஒருவரான பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் 1959-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இப்படம் 1963-ஆம் ஆண்டுதான் திரைக்கு வந்தது. ரத்னமாலா, பி.லீலா, ஜிக்கி போன்ற பாடகிகள் 50-களில்தான்  புகழ்வெளிச்சத்தில் இருந்தார்கள். .

“சரோடி பிரதர்ஸ் திரையுலகிற்கு புதியவர்களாக இருந்தார்கள்.  சில காரணங்களுக்காக எம்ஜிஆரின் பட நிறுவனத்துக்கு முன் இப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது”

என்று பிலிம் நியூஸ் ஆனந்தன் தகவல் தருகிறார். இவரைத் “தமிழ்த்திரைப்பட உலகத்தின் என்சைக்ளோபீடியா” என்று பாராட்டினாலும் தகும். மனுஷர் அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்.

எம்.ஜி.ஆர். தன் சொந்த நிறுவனத்தின் படத்தயாரிப்பு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் இப்படத்தை முடிப்பதற்கு போதுமான ஒத்துழைப்புத் தரவில்லை என்பதை வேறொரு மூத்த தயாரிப்பாளர் ஒருவர் வாயிலாக அறிந்தேன்.

113

“கலைஅரசி” படத்தில், கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் யாவும் மனதில் நிற்கும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தன. சீர்காழி கோவிந்தராஜனும், பி. பானுமதியும் இணைந்து பாடும் இப்பாடல் அதில் இடம் பெற்றிருந்தது.

ஆண்: “கலையே உன் எழில்மேனி கலையாவதேன்?
காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்?

பெண்: உறவாடும் இவ்வேள் பிரிவென்பதேன்? – நம்
உயிரோடு உயிர்சேர்ந்து பெறும் இன்பத்தேன்!

ஆண்: இருவேறு பொருள் கூறும் கண் பார்வை ஏன்?
ஒன்று நோய் தந்ததேன்? ஒன்று மருந்தானதேன்?”

கவித்துவம் நிறைந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். பாடிய “நீலவான பந்தலின் கீழே”, ஆலங்குடி சோமு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “அதிசயம் பார்த்தேன்” போன்ற இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஜனரஞ்சகமான பாடல்களாகவே இருந்தன

மூலக்கதை டி.இ.ஞானமூர்த்தி என்று விளம்பரம் செய்திருப்பார்கள். ஆனால் திரைக்கதை, திரைப்பட வசனம் அனைத்தையும் எழுதியது ரவீந்தர்.  பட டைட்டிலில் வசனம்:ரவீந்தர் என்று மட்டுமே காண்பிப்பார்கள்.

அரச படங்களுக்கு தூயதமிழில் அடுக்குமொழி வசனங்கள் மட்டுமல்லாது, வழக்குத் தமிழில் எதார்த்தமான உரையாடல்களை எழுதுவதிலும் ரவீந்தர் திறம் பெற்றிருந்தார். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது

காதல், சாகசம், அறிவியல் புனைவு, அதிரடி, நவீனம் என்று அத்தனை பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்த படமாக பல புதுமைகளை கொண்ட படமாக “கலைஅரசி” இருந்தபோதிலும், இப்படம் அடித்தட்டு ரசிகர்களை ஏனோ சென்று அடையவில்லை.

அன்றைய சூழ்நிலையில் அரச கதைகள், சமூக கதைகள் மட்டுமே வெற்றியை தேடித் தந்தன. இது போன்ற அறிவியல் புனைவுகள் தமிழ்த்திரையுலகிற்கு பரிசோதனை ஓட்டம் (Experimental) என்றுதான் சொல்ல வேண்டும். இதே படம் பிற்காலத்தில் வெளிவந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்குமோ என்னவோ தெரியாது. “கலைஅரசி” எம்.ஜி.ஆரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பெறாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு நட்டத்தை உண்டு பண்ணவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று கருதலாகாது. மற்ற எம்.ஜி.ஆர். படங்களைவிட வசூல் சற்று குறைவாக இருக்குமே தவிர  பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ பண இழப்பை உண்டு பண்ணிவிடாது.   தமிழில் ஒரு பழமொழி உண்டு, “யானை படுத்தால் குதிரை மட்டம்” என்று. நட்டம் ஏற்படாத அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூலை பெற்றுத் தந்து விடும்.

எம்.ஜி.ஆர்  இரட்டைவேடங்களில் நடித்த 17 படங்களில் “கலைஅரசி”, நாடோடிமன்னன் – இவையிரண்டும் ரவீந்தரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த படைப்புகள். இவையிரண்டும் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைத் தழுவிய அத்தனை இரட்டைவேட எம்.ஜி.ஆர். படங்களுக்கும் இவைகள்தான் முன்னோடியாகத் திகழ்ந்தன.

ரவீந்தரின் அத்தனை சாதனைகளும் முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று மறைக்கப்பட்டு, அவரது திறமைகள் மறுக்கப்பட்டு, இறுதிவரை அவர் புகழை குன்றிலிட்ட விளக்காக வெளிக்காட்டாமல் குடத்திலிட்ட விளக்காகவே மூடி மறைத்து வஞ்சித்த தமிழ்த் திரையுலகத்தை என்னவென்றுச் சொல்வது?

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” என்பார்களே. அதுபோல பேசாமடந்தையாக இருந்த ரவீந்தரின் தலையில் மிளகாய் அரைத்தவர்கள் ஏராளம். 32-படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதிய ரவீந்தரின் பெயர் படடைட்டிலில் காட்டப்பட்ட படங்கள் ஒரு சில படங்கள்தான். ஒரு படைப்பாளி வஞ்சிக்கப்பட்டதை எடுத்துக்காட்ட  இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?.

“கலைஅரசி” படத்தில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதாநாயகன் எம்.ஜி,ஆர் மற்றும் கதாநாயகி பி.பானுமதி இருவருமே இரட்டை வேடமேற்று நடித்திருப்பார்கள். இதுபோன்று வேறுபடம் ஏதாவது வெளிவந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர்.  “மோகன்” மற்றும் “கோமாளி”  என்ற இரு மாறுபட்டவேடம் ஏற்று நடித்திருப்பார். பி.பானுமதி, “வாணி”  மற்றும்  “வள்ளி”  என்ற இரு பாத்திரங்களில் நடித்திருப்பார்.

வேற்றுக் கிரகத்திலிருந்து விண்கலம் ஒன்று பூமிக்கு வருகிறது. அதில் வேற்றுக்கிரகவாசிகள் இருவர் உள்ளனர். அவர்கள் பார்வைக்கு பூமிவாசிகள் போலிருப்பினும் விஞ்ஞான ரீதியாக பெரிதும் முன்னேற்றம் கண்டவர்கள்

இந்த படத்தில் காமிரா அபாரமாக கையாளப்பட்டிருக்கும். காமிராமேன் ஜே.ஜி.விஜயம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார்.  இவர் ‘ஜெனோவா’, ‘ஆனந்த ஜோதி’. ‘அன்னையின் ஆணை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

“Zoom Lens”  தமிழ்த்திரையுலகில் புழக்கத்தில் இல்லாத காலம் அது. விஞ்ஞான நுட்பங்கள் அதிகம் கையாளப்படாத காலம். பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ஒளிப்பதிவாளர் எப்படிப்பட்ட சவால்களையெல்லாம்  எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். “ஹாலிவுட்” சினிமா உலகைப் போன்று தொழில்நுட்பம் வசதி  இல்லாத அந்தக் காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க மிகுந்த மனோதைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.

தந்திரக் காட்சிகள் எடுப்பதில் வல்லவர்களான, ஜெர்மனியில் இருந்து  டி.ஆர்.சுந்தரம் அவர்களால் வரவழைக்கப்பட்ட  ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களிடம் பயிற்சி பெற்றவர்  ஜே.ஜி.விஜயம். “கலைஅரசி” படம் வெளியானபோது இந்திப்பட உலகில் அனைவரும் வியந்துப் போயினர். தமிழர்களின் திரைப்பட நுட்பங்களைக் கண்டு அதிசயித்தனர்.

ரவீந்தரின் வித்தியாசமான அறிவியல் திரைக்கதை, எஸ்.நடராஜனின் படத்தொகுப்பு, ஏ.கே.பொன்னுச்சாமியின் கலை வடிவமைப்பு, ஜே.ஜி.விஜயத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒளிப்பதிவு அத்தனையும் இப்படத்தில் அபாரமாக இருந்தது.

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாதபோதும் மேலைநாட்டு படங்களுக்கு நிகராக தமிழ் மொழியில் நம்மாலும் தயாரிக்க இயலும் என்று சரோடி பிரதர்ஸுக்கு நம்பிக்கையூட்டி உற்சாகப் படுத்தியவர் ரவீந்தர். ரவீந்தரின் புதுப்புது யோசனைகளுக்கு பக்கபலமாக இருந்தவர் மக்கள் திலகம் அவர்கள்.

அறிபுனை திரைக்கதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இந்தியர்களான ரவீந்தருக்கும் சத்யஜித்ரேயுக்கும் இடையேயான ஒற்றுமையை இப்போது பாப்போம்.

The Alien என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் (ஏப்ரல் 1967) சத்யஜித்ரே ஈடுபட்டிருந்தார். இந்திய – அமெரிக்க கூட்டுத்தயாரிப்பில் இப்படம் வெளியாகவிருந்தது. இந்தப் படம் இடையில் நிறுத்தப்பட்டு, 2006-ல் தொலைக்காட்சித் திரைப்படமாக   வெளிவந்தது.

வேற்றுக்கிரக மனிதர்களைப் பற்றிய முந்தைய படங்களில் அவர்கள் கொடூரமானவர்களாகவே காட்டப்பட்டு வந்தனர். நட்புணர்ச்சியோடு பூமிக்கு வந்து இறங்கும் ஏலியன் பற்றிய சித்தரிப்பை முதன்முதலில் திரைக்கதை வடித்தவர் சத்யஜித்ரே என்பது பலரும் அறிந்திராத செய்தி.

ரவீந்தருக்கு அவர் கூடவே பணிபுரிந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் “நாகூர் அல்வா” கொடுத்ததைப் போன்று, சத்யஜித்ரேயுக்கும் அவருக்கு மேனேஜராக பணிபுரிந்த மைக் வில்சன் என்ற அமெரிக்கர் அல்வா கொடுத்தார்.

சத்யஜித்ரேயின் “ஏலியன்” கதையைத் திருடி தன் பெயரில் காப்புரிமை செய்திருந்தார். கொலம்பியா பிக்சர்ஸ் சார்பில் மார்லன் பிராண்டோ மற்றும் பீட்டர் செல்லர்ஸ் நடித்து தயாரிக்கப்படவிருந்த “ஏலியன்” படம் வெளிவரவில்லை. காரணம் கூட்டுத்தயாரிப்பில் இடம்பெறுவதாக இருந்த சத்யஜித்ரே, அந்த அமெரிக்கரின் வஞ்சிக்கப்பட துரோகச் செயலின் காரணமாகவே மனம் வெறுத்துப் போய் இந்தியா திரும்பி வந்துவிட்டார்.

உலக சினிமா புத்தகத்தில் E.T. திரைப்படத்தைப் பற்றி எஸ்.ரா. எழுதிய வரிகள் இவை:

“சத்யஜித்ரே இது போல வேற்றுகிரகவாசி ஒருவனைப் பற்றிய குழந்தைகள் திரைப்படம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று விரும்பி அதற்கான ஓவியங்களை வரைந்திருந்தார். அனால் அவரால் கடைசிவரை அது போன்ற ஒரு படத்தை இயக்க முடியவில்லை. ஸ்பீல் பெர்க்கின் இத்திரைப்படம் அக்கனவை நினைவாக்கியது போல அமைந்திருந்தது”

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் E.T. திரைப்படம் சத்யஜித்ரே யின் கனவுகளை நனவாக்கவில்லை. அதற்கு பதிலாக அவருடைய கனவுகளை கள்ளத்தனமாக  களவாடியிருந்தது.

“திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட போது சந்தோஷமாகவும் தற்போதைய அவரது நிலையை அறிந்த போது நெகிழ்வாகவும் இருந்தது”

என்று ரவீந்தரின் இறுதி காலத்தின்போது அவரைப் பற்றி எழுதி மனது வெம்பிய எழுத்தாளரும் எஸ்.ரா.அவர்கள்தான்.

1982-ல் வெளியான  ஸ்பீல்பெர்க்கின் E.T. படத்தின் பெரும்பான்மையான பகுதி சத்யஜித்ரேயின் திரைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதற்கு ஆதாரங்களை என்னால் அடுக்கி வைக்க முடியும்.

கூடவே இருந்து குழிபறித்த மைக் வில்சன் வாயிலாக சத்யஜித் ரேயின் முழுக்கதையையும் எழுத்துவடிவில் பிரிண்ட் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட அத்தனை ஹாலிவுட் பெரிய தாயரிப்பாளர்களிடமும் வினியோகிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு காப்பிதான் E.T, படத்தின் இயக்குனர் ஸ்பீல் பெர்க்கின் கையில் பலாச்சுளையாக கிடைத்தது.

E.T. பட வெற்றிக்குப் பிறகு இது சத்யஜித் ரேயின் கதைதானே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது “இல்லவே இல்லை. இந்தக் கதையின் பிரிண்ட் ஹாலிவுட்டில் நோட்டீஸ் போன்று வினியோகிக்கப்பட்டபோது நான் பள்ளிச் சிறுவனாக இருந்தேன்” என்று மழுப்பினார்.

இதுவும் பச்சைப் பொய். 1965-ல்  ஸ்பீல் பெர்க் கலிபோர்னியாவில் பள்ளி உயர்நிலைப்படிப்பை முடித்திருந்தார். இந்தக் கதை1967-ல் ஹாலிவுட் சினிமா உலகத்தில் பரவியது. 1969-ஆம் ஆண்டிலேயே இளவயது இயக்குனராக ஹாலிவுட்டில் அவர் அறிமுகம் ஆகியிருந்தார். இதிலிருந்து அவரது புளுகு நன்றாக வெளிப்படுகிறது.

“Bankubabur Bandhu” என்ற பெயரில் சத்யஜித் ரே எழுதிய சிறுகதையே E.T. படத்திற்கு மூலக்காரணமாக இருந்தது. புகழ்பெற்ற Science Fiction எழுத்தாளர் ஆர்தர் C. கிளார்க் ஸ்பீல்பெர்க்கின் இந்த திருட்டு வேலையை உலகறிய அம்பலப்படுத்தியிருந்தார். இவரை லண்டனில் சந்தித்தபோதுதான் சத்யஜித்ரே “ஏலியன்” கதைக்கருவைப் பற்றி எடுத்துச் சொன்னார். பிறகு, ஆர்தர் கிளார்க் தன்  நண்பர் மைக் வில்சனிடன் இந்த வித்தியாசமான கதையை எடுத்துச் சொல்ல அவர் உடனே கல்கத்தா சென்று சத்யஜித்ரேயுடனேயே இருந்து முழுக்கதையையும் எழுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ரேயுடன் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் “ஹாலிவுட்”தயாரிப்புக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தரகராகச் சென்றார்.

Arthur C.Clarke

ஆர்தர் சி. கிளார்க்

ஹாலிவுட் திரையுலகத்தின் புகழ்ப்பெற்ற மற்றொரு தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான Martin Scorses  என்பவர் இவ்வாறு கூறுகிறார்.

“I have no qualms in admitting that Spielberg’s E.T. was influenced by Ray’s Alien. Even Sir Richard Attenborough pointed this out to me”.

சத்யஜித் ரேயின் கதையில் ஒரு நீர்க்குட்டையில் வேற்றுக் கிரகத்து விண்கலம் ஒன்று வங்காளத்தின் ஒதுக்குப்புற பகுதியில் தரையிறங்குகிறது. அந்த விண்கலத்தை பூமியிலிருந்த எழுந்தருளிய கோயிலாக பாவித்து அந்த கிராம மக்கள் வழிபடுகிறார்கள். அந்த விண்கலத்திலிருந்து வந்திறங்கிய வேற்றுக்கிரகத்து விநோத பிராணியுடன் “ஹபா” என்ற சிறுவன் நட்புறவு கொள்கிறான். அந்த வேற்றுக்கிரகத்து பிராணி பூமியில் வசிக்கும் குறுகிய காலத்தில் அவ்வூர் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில்  சிறு சிறு குறும்புகளும், யாருக்கும் பாதிப்பில்லா  சேட்டைகளையும் ஒவ்வொன்றாகப் புரிகிறது.

இந்தக் கதை முற்றிலும் ஆங்கிலப்படம் E.T. யுடன் ஒத்துப் போகிறது.  சத்யஜித்ரே கற்பனையில் வடித்த வேற்றுக்கிரக   பிராணியின் அப்பட்டமான காப்பி ஸ்பீல்பெர்க் வடிவமைத்த E.Tயின் உருவமைப்பு என்பது இப்போது நமக்கு விளங்கும்.

alien

சத்யஜித் ரே ஒரு மிகச்சிறந்த ஓவியர். ஆகையால் அந்த வேற்றுக்கிரகத்து பிராணியின் உருவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட   தத்ரூபமாக வரைந்து வைத்திருந்தார்.

சத்யஜித்ரே யின் கதையில் வரும் ஒரு காட்சியமைப்பு இது. வேற்றுக்கிரக பிராணி நீர்க்குட்டையில் அருகாமையில் இருக்கும் புற்செடியின் இலையை ஆராய்கையில் அதன் கண்கள் மஞ்சள் நிற ஒளியில் பிரகாசமாக மின்னும். தன் நீண்ட விரல்களை மெதுமெதுவாக அதை நோக்கி நீட்டுகையில் அதிலிருந்து மலர் மொட்டு விரியும். அப்போது கீச்சுக் குரலில் மென்மையான சிரிப்பை உதிர்த்தவாறு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும். E.T. ஆங்கிலப் படத்தை பார்த்தவர்கள் காட்சிக்கு காட்சி இந்த பிரதிபலிப்பை உணரலாம்.

E.T படத்துக்கு முன்னால் 1977-ல் வெளிவந்திருந்த படமான ஸ்பீல்பெர்க்கின் “Close Encounters of the Third Kind” படத்திலும் ஓரிரண்டு காட்சிகளை சத்யஜித்ரே திரைக்கதையிலிருந்து பயன்படுத்தியிருக்கிறார்..

ரவீந்தரைப் போலவே சத்யஜித்ரேயும் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதை அறியும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. “கோயி மில்கயா” இந்திப்படம் சத்யஜித்ரேயின் கதையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது. இந்த உண்மை அறியாமல் இப்படம் வெளிவந்தபோது இது E.T. படத்தின் அப்பட்டமான காப்பி என்று ஊடகங்கள் வர்ணித்தது வேடிக்கையான ஒன்று.

பெரிய மனது படைத்த சத்யஜித் ரே,  நீதி கேட்டு வழக்கு எதுவும் போடவில்லை. பத்திரிக்கையாளர்கள் இதைப்பற்றி ரேயிடம் வினவியபோது, “என்னுடைய ‘ஏலியன்’ படக்கருவின் தூண்டுதலின்றி E.T. படத்தை எடுத்திருக்க சாத்தியமே இல்லை” என்ற பதிலோடு மட்டும் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார். தொடக்கத்திலிருந்து இந்த உண்மையை அறிந்து வைத்திருந்த ஆர்தர் சி. கிளார்க், சத்யஜித் ரேயை தொடர்பு கொண்டு “உங்கள் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள். ஸ்பீல்பெர்க்கிடம் தொலைபேசியில் இதைப்பற்றி பேசுங்கள். அல்லது வழக்கு தொடுங்கள்”  என்று அறிவுறுத்தியபோது “போனால் போகட்டும். ஒரு உண்மையானக் கலைஞனுக்கு இதுவெல்லாம் சகஜம். நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது” என்று பெருந்தன்மையோடு பதிலளித்தார்.

இவருடைய பெருந்தன்மையை பார்க்கும்போது ரவீந்தரின் கதைகளைத் திருடி மற்றவர்களின் பெயரில் வெளியிட்டபோது ரவீந்தர் கூறிய அதே பதில் போன்றுதான் இருக்கிறது..

ரவீந்தர் ஒருக்கால் வடநாட்டில் பிறந்திருந்தால் அவருடைய திறமைக்கு போதிய அங்கீகாரம் கிடைத்திருக்குமோ? அவருக்கும் விருதுகள் தேடி வந்திருக்குமோ ? அவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்களோ?

– அப்துல் கையூம்

இதோ “கலைஅரசி” படத்தின் முழுநீளப் படத்தைக் காண

A Glimpse of the Story in English:

116Kalai_Arasi

Kalai Arasi Penned by Raveendar is an outstanding Science Fiction Movie ever tried in Indian Cinema. Raveendar tries to explain Tamil audience, what is space and how the Extraterrestrial looks. Nobody in the Indian Film Industry ever dared to take up such script. Kalai Arasi’ is a well-blended story of romance, science fiction, action and drama with the main cast of MGR and Bhanumathi playing double roles.

Amazing, in 1963 how people understood about the aliens and the space ship. This is definitely an Experimental film tried with much confidence and courage.

The plot is very simple and adaptable for the Tamil culture. Mohan is a poor, but honest and hard-working farmer. Vani is the daughter of the rich landlord who lives in the city while their lands are under the supervision of her cousin and suitor, the wily Kannan. On a visit to the village with her friends, Vani meets Mohan. Mohan and Vani find themselves falling in love with each other gradually.

Meanwhile a spacecraft is moving rapidly towards the earth. Inside are two alien creatures who resemble earthly humans. From their conversation we understand that they are traveling to the earth on a strange mission.

Apparently their planet has made far-reaching strides in science, but is woefully backward in performing arts. Hence they are coming to the earth to identify and take back a talented artiste who could teach their denizens music and dance.

As they near the earth, one of the aliens, Thinna, who is the commander-in-chief of their planet, switches on a monitor, and the screen shows music and dance performances in various parts of the earth. He seems to be dissatisfied with them all, until he comes across Vani singing. He is mesmerized with her performance and decides that she would best suit their purpose.

Returning home after a clandestine moonlight rendezvous with Mohan, Vani falls into the clutches of the aliens. Thinna drags her inside the spacecraft, while the other alien Malla elects to stay on in the earth for a while. Vani is shocked when she finds herself far away from the earth. The king of the alien planet assures her that she will return safely after she had taught them dance and music. Vani is defiant and furious. However, princess Rajini treats her kindly and Vani agrees to teach her. Meanwhile back in the earth Vani’s father blames Kannan for Vani’s disappearance. Kannan goes in search of Vani and comes across a mentally deranged girl called Valli who bears a startling resemblance to Vani. Assuming that she is Vani, he gets her kidnapped and brings her home. Saddened to see his daughter a lunatic, Vani’s father agrees for Kannan to get married to her, and thus Kannan marries the poor Valli, under the assumption that he is marrying the rich heiress Vani.

Mohan spies the alien Malla one night as Malla is getting ready to return to his planet. They have a brief skirmish and Malla dies. Thinna lands in his spacecraft just then to take Malla home. He sees Malla’s corpse and places it in an ante-chamber inside the craft.

Watching all this, Mohan enters the craft quickly, and dragging Malla’s corpse out, he jumps into the ante-chamber. Thinna does not notice this and takes off from the earth. When he nearing his planet, he ejects what he assumes to be Malla’s corpse from his spacecraft, but it is actually Mohan who falls into the alien planet.

By happenstance Mohan comes across a kind-hearted jester from another planet who is on the way to the palace. This jester takes Mohan to his house and feeds him. As they step outside, the jester is struck dead by a passing meteor. As luck would have it, the jester had resembled Mohan in facial features, and so Mohan takes his place and goes to the palace. There he meets Vani and manages to make her realize his true identity. They outwit the cunning Thinna and return to the earth. Meanwhile Kannan is caught strangling Valli and is arrested by the police. Mohan and Vani reach home.

All is well that ends well

தொடரும்

 

Tags: , , ,

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 8


ஆர்.எம்.வீ.யின் மறுபக்கம்…..

drama_actors

வலது பக்கம் இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் ஆர்.எம்.வீரப்பன்

“எம்,ஜி.ஆர் நாடக மன்றம்” தொடங்கிய காலத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள் இரண்டு பேர்கள். ஒருவர் ரவீந்தர். மற்றொருவர் ஆர்.எம்.வீரப்பன். ரவீந்தர் கடந்து வந்து சினிமா பாதையை எழுதும்போது ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி எழுதாமல் தவிர்க்க முடியாது. அப்படி எழுதாமல் விட்டால் அது முழுமை  பெறாது.

ஆர்.எம்.வீ. அவர்கள் சினிமாத்துறையில் கோலோச்சிவிட்டு, அரசியலில் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர். அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அவரைப்பற்றி நான் கண்டதும், கேட்டதும்,எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் மற்றும்   சினிமாத்துறையில் அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் பகிர்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும், அவரைப் பற்றி சேகரித்த தகவலின் பேரிலும்,  இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்.

“Your freedom ends where my Nose begins” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒருவரது தனிப்பட்ட குணாதிசயம் எப்பொழுது மற்றவருடைய வாழ்க்கையில் இடையூறாக அமைகிறதோ அப்போது அந்த மனிதனை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

காஜா மெய்தீன் என்கிற ரவீந்தரை திரையுலகில் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்” என்றால்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எம்.ஜி.ஆருடைய நிறுவனத்தில் முதல் பணியாளராக வேலைக்கு அமர்ந்ததும் நாகூர் ரவீந்தர்தான். அந்த நிறுவனத்தில் எல்லோரையும்விட சீனியரும் அவரேதான். அதன் பிறகு வந்து பணிக்கு அமர்ந்தவர்தான் ஆர்.எம்.வீரப்பன்.

ஆர்.எம்.வீ. சைக்கிள் கேப்பில் ஆட்டோவை நுழைக்கத் தெரிந்தவர். எம்.ஜி.ஆரையை தன்வசப்படுத்த தெரிந்த ஆர்.எம்வீக்கு ரவீந்தரை ஓவர்டேக் செய்வது அப்படியொன்றும் கம்பச் சித்திரமாக  இருக்கவில்லை.

எம்.ஜி.ஆரிடம் 500 ரூபாய் கைநீட்டி சம்பளம் வாங்கிய இவர் பிற்காலத்தில் எம்.ஜி.ஆரையே தன்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் நிலைக்கு கொண்டு வந்தார் என்றால் இவர் எப்படிப்பட்ட ‘எம்டன்’ என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இவர் இருந்தார். சில சமயங்களில் எம்.ஜி.ஆரிடமும் சக்கரபாணியிடமும் துணிச்சலாக  கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்வார். ‘கணக்கு விஷயத்தில் இவ்வளவு கறாராக இருக்கிறாரே, இவரைப் போன்ற ஒரு சிறந்த நிர்வாகி வேறு யாரும் இருக்க முடியாது’ என்ற நம்பிக்கையில் நிர்வாகப் பொறுப்பு அனைத்தையும் ஆர்,எம்.வீ.யிடமே ஒப்படைத்திருந்தார் எம்.ஜி,ஆர். இவர் வைத்ததுதான் சட்டம், இவர் சொல்வதுதான் வேதவாக்கு என்ற நிலை நாளடைவில் ஏற்பட்டது.

சாதாரண பணியாளராக வந்துச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் நிர்வாக இயக்குனராகவும், 1963-ஆம் ஆண்டு சத்யா மூவீஸின் அதிபராகவும் எப்படி ஆனார் என்பது எல்லோரையும் பிரமிக்க வைக்கும். அது அவரது உழைப்பின் பலனாலா அல்லது அவரது சாணக்கியத் தந்திரத்தாலா என்ற உண்மையை இதைப் படித்தபின் வாசகர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

எம்.ஜி.ஆர். பிக்சர்சை பொறுத்தவரை ரவீந்தரின் வாழ்க்கையில் பலவிதமான முட்டுக்கட்டைகள் ஆர்.எம்.வீ போட்டிருக்கிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் ரவீந்தரைப்போல் இன்னும் பலர் இருக்கின்றனர். அவை அத்தனையும் இங்கு விவரிக்க இயலாது.

எம்.ஜி.ஆரின் சொந்த நிறுவனத்தை ஆர்.எம்.வீ . எப்படி முழுவதுமாகவே தன் வசம் கொண்டு வந்து மற்றவர்களை கைப்பாவையாக்கினார் என்பதை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சில சம்பவங்களிலிருந்து நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

“நாடோடி மன்னன்” படம் வெளிவந்ததற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு “வசூல் மன்னன்” என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. எதிர்பார்த்ததைவிட மிகுந்த இலாபம் கிடைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு திரை மறைவிலிருந்து கடுமையாக உழைத்த ரவீந்தருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாக குடிகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். நாகூரிலிருக்கும்  ரவீந்தருடைய இல்லத்திற்கு வருகை தந்ததும் இச்சமயத்தில்தான்.

அடையாறு பகுதியில் ஒரு நல்ல இடம் விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி அப்படியே ரவீந்தருக்கு கொடுத்து விடுவது என்று எம்,ஜி.ஆர். முடிவு செய்கிறார். தன் எண்ணத்தை எம்.ஜி.சக்கரபாணியிடம் சொன்னபோது அவரும் மனமகிழ்கிறார். எம்.ஜி.சக்கரபாணிக்கு தொடக்க முதலே ரவீந்தர் மீது தனிப்பட்ட பிரியம் இருந்து வந்தது. அவர்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தவர் அவர். ஆனால் ஆர்.எம்.வீரப்பனுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. எந்தக் காலத்திலும் ரவீந்தருக்கு தன்னை விட முக்கியத்துவம் எம்.ஜி.ஆர். கொடுத்து விடக்கூடாது என்பதில் ஆர்.எம்.வீ. படுதீவிரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் தனிமையில் இருந்தபோது ரவீந்தரைப் பற்றி என்ன போட்டுக் கொடுத்தாரோ தெரியாது.

ஒருநாள் ரவீந்தரை தனியே அழைத்த எம்.ஜி.ஆர். அவருக்காக அடையாறு பகுதியில் ஒரு இடம் வாங்கித்தர விரும்புவதாக கூறிவிட்டு அதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கிறார். அதாவது, அந்த இடத்தை அவர் பெயரில் இல்லாமல் அவருடைய மனைவி பெயரிலேயே ரிஜிஸ்டர் செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்..

ரவீந்தருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றுவிடுகிறார். ஒருபக்கம் சந்தோஷம். இன்னொருபக்கம் வேதனை. எதற்காக தன்பெயரில் ரிஜிஸ்டர் செய்ய எம்.ஜி.ஆர். தயக்கம் காட்ட வேண்டும்?  புரியாமல் ரவீந்தர் தவிக்கிறார்.

யாரோ ஒருவர் எம்.ஜி.ஆரிடம் உண்மைக்கு மாறான விஷயங்களை விஷமத்தனமாக காதில் ஓதி, தன்னைப் பற்றிய  ஒரு தவறான தோற்றத்தை உண்டாக்கி,  அவர் மனதை கலைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் திட்டவட்டமாகத் தெரிந்தது.

ரவீந்தர் அப்படியொன்றும் ஊதாரித்தனமாகச் செலவு செய்பவர் அல்ல. எந்தவித அனாவசியமான செலவுகளும். அடாவடிப் பழக்கங்களும் இல்லாத மனிதரவர். குணத்தில் குன்றாகத் திகழ்ந்தவர். அப்படிப்பட்டவரிடம் “நான் உன் பெயரில் இடத்தை வாங்கித்தர மாட்டேன். வேண்டுமென்றால் உன் மனைவியின் பெயரில் நான் வாங்கித் தருகிறேன்” என்று சூசகமாக எம்.ஜி.ஆர் சொன்னது ரவீந்தருக்கு பெரிய அவமானமாக இருந்தது.

தன்மானமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டான். அல்லும் பகலும் விசுவாசமாக உழைக்கின்ற நம்மையே நம் முதலாளி சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறாரே என்று மனம் நொந்து போன ரவீந்தர் எம்.ஜி.ஆரிடமே நேரடியாக வேண்டாம் என மறுத்து விடுகிறார்.அவரும் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறார். யாருடைய உபகாரத்தையும் எதிர்பார்த்து நிற்கும் பழக்கமில்லாத மனிதர் ரவீந்தர். அதனைத் தொடர்ந்து,  தன் வாழ்நாள் முழுதும் வாடகை வீட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலை அவருக்கு ஏற்படுகிறது. அதற்காக அவர் ஒருபோதும் மனம் வருந்தியதில்லை.

எம்.ஜி.ஆர். மிகப்பெரிய தயாள மனப்பான்மைகொண்டவர்  என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றவர் மனம் புண்படும் வகையில் ஒருக்காலும் பேசக்கூடியவரல்ல அவர். ரவீந்தரைப் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை எம்.ஜி.ஆரின் மனதில் உண்டாக்கியவர் ஆர்.எம்.வீ.தான் என்று நாம் அடித்துக் கூற முடியவில்லை என்றாலும் எம்.ஜி.ஆரிடம் துணிச்சலாகச் சென்று மற்றவர்களைப் பற்றி ‘போட்டுக் கொடுக்கும்’ தைரியம் ஆர்.எம்.வீ.யைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது என்கிறார்கள் ரவீந்தருக்கு சினிமாத்துறையில் நெருக்கமானவர்கள்.

நாடோடி மன்னன் பணச்சிக்கல்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் ரவீந்தர் வசனம் எழுதிய இப்படத்தை “கண்ணதாசன்” என்று பெயர் போட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை

தனது பண சேமிப்பு அத்தனையும் முதலீடு செய்து, சொத்து யாவற்றையும் அடமானம் வைத்து முடக்கி “நாடோடி மன்னன்” படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்தார். “இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். இல்லையெனில் நான் நாடோடி” என்றுகூட அறிவித்தார். படத்தை எடுத்து முடிந்த தறுவாயில் பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை. அக்காலத்தில் அது ஒரு பெரிய தொகை. யாரிடமாவது கடன் வாங்கி பணத்தை புரட்டி படத்தை வெளியிடவேண்டிய நிலைக்கு எம்.ஜி.ஆர் தள்ளப்படுகிறார் . வாரி வாரி வழங்கிய அந்த வள்ளலுக்கு இப்படியொரு எதிர்பாராத பணச்சிக்கல்.

‘கெயிட்டி’ திரையரங்கத்தை நடத்தி வந்த ராமச்சந்திர ஐயர்  ஏ.வி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித் தருவதாக உறுதி யளிக்கிறார்.  இதற்கான பேச்சு வார்த்தையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் பேச எம்.கே.சீனிவாசன் முன்வந்தபோது எம்.ஜி.ஆர். சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்..

“கடன் பத்திரத்தில் கையெழுத்து நீங்கள் போட வேண்டாம் அது பின்னர் உங்கள் சொத்துக்கே பிரச்சனையாக வந்துவிடும். நிலைமையை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்” என்று ஆர்.எம்,வீரப்பன் சொன்னதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் ஆறுதல். தன்னுடைய “இமேஜ்” எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது  என்பதில் ஆர்.எம்.வீ.  இந்த அளவுக்கு தன் மீது கரிசனமாக இருக்கிறாரே என்று எம்.ஜி.ஆர். அப்படியே மனம் குளிர்ந்து போகிறார்.

“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பதை அவர் அப்போது அறிந்து வைத்திருக்கவில்லை போலும்.

ஆர்.எம்.வீ.யின் ஆலோசனை எம்.ஜி.சக்கரபாணியின் மனதிலும் சரியாகவே படுகிறது. இக்கட்டான இச்சூழ்நிலையில் கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தன் அருமை தம்பி சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் அவரும் முன்ஜாக்கிரதையாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு தருணத்தைத்தான் ஆர்.எம்.வீ. ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்கிறார். அது எப்படிப்பட்ட திட்டம் என்பது சற்று நேரத்திற்குள் உங்களுக்குத் தெரிய வரும்

இதற்கிடையில், ஏ.வி.எம். நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய எ,ம்.கே.சீனிவாசன் எம்.ஜி.ஆரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை விளக்குகிறார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தரப்பினருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  படம் வெளியாவது தாமதமானால் பலவிதத்தில் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிவருமே என்று எம்.ஜி.ஆர். கலங்குகிறார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இலங்கைங்கான வெளியீட்டு உரிமையை “சினிமாஸ் லிமிடெட்” என்ற கம்பெனிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தைக் “Surity”யாக காண்பித்து அந்த நிறுவனத்திலிருந்து வரவிருக்கும் தொகையை அப்படியே ஏ.வி.எம் நிறுவனத்திடம் கொடுத்து விடுவது என்றும், அந்த கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை அவர்களிடமே அடமானம் வைத்து விடுவது என்றும் முடிவாகிறது. இந்த திட்டத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் முன்மொழிகிறார். இந்தப் பிரச்சினையை சுலபமாக தீர்க்கும் வகையில் புத்திசாலித்தனமாக இப்படியொரு அற்புதமான ஆலோசனையை வழங்கிய அவரை எம்.ஜி.சகோதரரர்கள் இருவரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.

ஒப்பந்தத்தில் ஆர்.எம்.வீரப்பனும் எம்,.ஜி.சக்கரபாணியும் கையெழுத்துப் போடுவது என்றும் அதுதான் எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பு என்றும் வீரப்பன் எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்கிறார். எம்.கே.சீனிவாசனும் இந்த முறையான திட்டத்திற்கு ஏ.வி.எம்.நிறுவனம் நிச்சயம் சம்மதம் கிடைத்துவிடும் என உறுதியளிக்கிறார்.

பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது. படச்சுருள் வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனே எம்.ஜி.ஆர்.  ஆரம்பித்து விடுகிறார். பட வெளியீட்டுக்கான தேதியும் அறிவிக்கப்படுகிறது.

ஏ.வி.எம். நிறுவனத்திற்கு பணம் வாங்கச் சென்றபோது எதிர்பாராத வேறொரு சிக்கல் முளைக்கிறது. காரணம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் இலங்கையின் “சினிமாஸ் லிமிடேட்” நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்துதான் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த கடன் பத்திரத்திலும் எம்.ஜி.ஆர்.தான் கையெழுத்திட்டாக வேண்டும் என்று ஏ.வி.எம்.நிறுவனத்தினர் கறாராகச் சொல்லிவிடுகின்றனர்.

வேறுவழியின்றி எம்.ஜி.ஆரும் ஒப்பந்தத்தில் தானே கையெழுத்துப் போட தயார் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். பெரும் எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்திருக்கும் நாடோடி மன்னன் படத்தை உரிய காலத்தில் வெளியிட்டாக வேண்டுமே என்ன செய்வது?

ஊஹும். ஆர்.எம்வீ. தன் நிலைபாட்டில் உறுதியாக இருப்பதோடல்லாமல் மீண்டும் எம்.ஜி.ஆரை உரிமையுடன் தடுத்துவிடுகிறார். “பணம் திருப்பிக் கொடுப்பதில் ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால் உங்களுடைய எதிர்காலமே பாழாகிவிடும். உங்களுக்கு ஏதாவதொன்று என்றால் அதை நான் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பிரச்சினையை நானே சமாளித்துக் கொள்கிறேன். கவலையை விடுங்கள். நீங்கள் ஒருபோதும் கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ஆர்.எம்.வீ. கூறியதும் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போய் விடுகிறார். “இப்படி ஒரு விசுவாசியை அடைவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று அவர் மனதிற்குள் நினைத்திருக்க வேண்டும்,

இப்பொழுதுதான் ஆர்.எம்.வீரப்பனின் கிரிமினல் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது, சாணக்கியத்தனமாக ஒரு திட்டத்தை தீட்டுகிறார்.

“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் என்றிருக்கும் கம்பேனியின் பெயரை உடனே ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று பெயர் மாற்றுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று எம்.ஜி.சக்கரபாணிக்கு ஆலோசனை வழங்குகிறார். பெரியவரிடம் கலந்தாலோசித்த பிறகு “இவ்விஷயத்தில் எது நல்லதோ அதன்படி செய்யுங்கள்” என்று கூறி முழு அதிகாரத்தையும் எம்.ஜி.ஆர். அவருக்கே அளித்து விடுகிறார்.

இந்த தருணத்தை எப்படி அவர் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார் என்பதைப் பாருங்கள். “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடேட்” என்ற புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தன் பெயரை இணைத்துக்கொண்டதோடு மற்றொரு இயக்குனராக எம்.ஜி.சக்ரபாணியின் பெயரை முறைப்படி பதிவு செய்துக் கொள்கிறார்.

“இலங்கையைச் சேர்ந்த  ‘சினிமாஸ் லிலிடேட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர்  ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்றிருந்தது. அச்சமயத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால்தான்  ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து இடம்பெற்றிருந்தது. இப்போது கம்பெனியின் பெயர்  “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடேட்” என்று மாற்றப்பட்டுவிட்டது. அதன் நிர்வாக இயக்குநராக நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் இருக்கிறோம் எனவே நாங்கள் இருவரும் கையெழுத்துப் போட்டாலே சட்டப்படி இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்” என்று ஏ.வி.எம்.நிறுவனத்தாரிடம் வாதிட்டு அதில் வெற்றியும் காண்கிறார்.. கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான அத்தனை கோப்புகளையும் ஒப்படைக்கிறார். ஆர்.எம்.வீ. எடுத்து வைக்கும் வாதம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. அவர்களால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை

ஒப்பந்தம் கையெழுத்தாகி பணம் கைமாறியபின் ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.  “கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சித்தோம். கடைசியில் நீங்கள்தான்  ஜெயித்தீர்கள்” என்று ஆர்.எம்.வீ.யின் முதுகில் செல்லமாகத் தட்டி ‘சபாஷ்’ சொல்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸின் முழு அதிகாரமும் ஆர்.எம்.வீ.யின் கைக்கு வந்து விடுகிறது. “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை” ஓட்டியது போல் நாளடைவில் எம்.ஜி.சக்கரபாணியையும் நிர்வாகத்தில் தலையிடாதவண்ணம் ஒதுக்கி வைத்து விடுகிறார்.

இத்தனை சாணக்கியத்தனம் நிறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை பெட்டிப் பாம்பாக ஆக்கி, அடக்கி ஆளத் தெரியாதா என்ன? ரவீந்தரை இவர் மட்டம் தட்டி வைத்திருக்கின்ற விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இல்லை. நிர்வாகம் அனைத்தும் ஆர்.எம்.வீயின் கைகளில் இருந்ததால் அவர் பேச்சை கேட்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு.

அரசியல் தகிடுதத்தம்

எம்.ஜி.ஆர். - கருணாநிதி

2010-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கருணாநிதி மேடையில் சொன்ன செய்தி நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945-ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்”

எம்.ஜி.ஆருக்கு விசுவாசியாக வேஷம் போட்டுக் கொண்டிருந்த ஆர்.எம்.வீ. அதேசமயத்தில் அவருடைய அரசியல் எதிரியாக விளங்கிய எதிரணி தலைவரிடத்திலும் எப்படி விசுவாசமாக இருந்தார் என்பதை அறிந்து வியந்து போகிறோம். “கள்ளக்காதல்” என்று சரியான சொற்பதத்தை பயன்படுத்தியிருக்கும் கலைஞரின் மொழித்திறமையையும் நாம் போற்றுகிறோம்.

எம்.ஜி.ஆர்  - வீரப்பன்

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய மற்றொரு விசுவாசியான ரவீந்தரிடம் இப்படியொரு இரட்டை வேடத்தை நம்மால் காண இயலாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி கபட நாடகம் ஆடித்திரியும் மனிதர்களுக்குத்தான் யோகம் போலும். இது எம்.ஜி.ஆருக்கு செய்யப்பட்ட பச்சைத் துரோகம் என்றே நான் நினைக்கிறேன்.

1981-ஆம் ஆண்டு  திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.

அப்போது ஆர்.எம்.வீரப்பன்  அற நிலைய துறை அமைச்சராக பதவி வகித்தார். கோவில் அதிகாரி பணத்தை திருடி மாட்டிக் கொண்டதாகவும், அதனால் அவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார் எனவும்  ஆர்.எம்.வீ. அறிவித்தார்.

அப்போது திமுக தரப்பில் விடுத்த அறிக்கை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் பகிரங்கமாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, ஆர்.எம்.வீக்கு எதிராக போர்கொடி தூக்கி, நீதி கேட்டு நெடும் பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் நியாயம் கேட்டதும் நம்ம கருணாநிதிதான்.

இப்பொழுது ஆர்.எம்.வீ.யின் நட்பைப் பாராட்டி கருணாநிதி நற்சான்றிதழ் வழங்குவது நகைப்பிற்கிடமாகத் திகழ்கிறது. கள்ளக்காதல் நற்குணமெல்லாம் பார்க்காது போலும்.

பகுத்தறிவாதியாக, பெரியாரின் சீடராகத் திகழ்ந்த சுயமரியாதைச் சீலர் ஆர்.எம்.வீ “ஆழ்வார்கள் ஆய்வு மைய”த்தின் தலைவராக பதவி வகித்தார். எந்த இராமனை கடுமையாக விமர்சித்து “கம்ப ரசம்” எழுதினாரோ அந்த அண்ணாவின் அன்புத் தம்பி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட ஆர்.எம்.வீ.தான் பிற்காலத்தில் நாகூர் மு.மு.இஸ்மாயிலுக்குப் பிறகு கம்பன் கழகத் தலைவராக பதவியில் அமர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  கருணையே வடிவான (?) அவரை இப்பொழுது எல்லோரும்  “அருளானந்தர்” என்றுதான் அழைக்கிறார்கள். நாளை சுவாமி அருளானந்தாவாகக் கூட அழைக்கப்படலாம்.

1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகையில், கட்சிக்காரர்களைத் ஒன்று திரட்டி தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்துக் கொண்டு தந்திரமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தையே கையில் எடுத்துக்கொண்ட ‘ராஜகுரு’தான் இந்த ஆர்.எம்.வீ.

1981-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது  “காவிரி தந்த கலைசெல்வி” என்னும் நாட்டிய நாடகத்தில் நடிக்க சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்து அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்டவர் அப்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன்தான். வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான் என் ஞாபகத்திற்கு வந்தது.

அதேசமயம் எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாத வண்ணம் அவரை விமான நிலையத்திலிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ததும் ஆர்.எம்.வீரப்பன்தான்.

1996-ஆம் ஆண்டு “பாட்சா படத்தின் வெள்ளி விழாவின்போது தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்துவிட்டது என்று ரஜினி பேசியதை மறுப்பேதும் கூறாமல் ரசித்துக் கொண்டிருந்தார் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்ட சம்பவத்தையும் நம்மால் மறக்க இயலாது.

ஆர்.எம்.வீ.யைப் பொறுத்தவரை அவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார் அல்லது கொள்கைப் பிடிப்போடு இருந்தார் என்று யாரும் கூறிட முடியாது. ‘பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவன் நான்’, ‘அண்ணாவின் அன்புத்தம்பி நான்’ என்று பறைசாற்றிக் கொண்ட அவர் எப்படியெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார் என்பதை நாடறியும்.

ஆர்.எம்.வீ.யின் திருவிளையாடல்  ரவீந்தரின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் இடையூறாகத் திகழ்ந்தது என்பதை பின்னர் பார்ப்போம்.

– அப்துல் கையூம்

தொடரும்

 

Tags: , ,

சாருவுக்கு என் பதில்


charu

அன்புசால் சாரு நிவேதிதா என்னும் ரவி அண்ணன் அவர்களுக்கு,

நாகூர் பற்றி நான் பெருமை பேசினால் அது மிகப் பெரிய ஃபாஸிஸத்தில் போய் முடியும்.  என்று எழுதி இருக்கிறீர்கள்.

மேற்கே
ரொமாண்டிசிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்ப்ரஷனிஸம்
என் மனைவிக்கு
தக்காளி ரஸம்
 

என்று பசுவய்யா எழுதிய புதுக்கவிதைதான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

அண்ணாயிசம் போன்று ஃபாஸிஸம் என்றால் என்னவென்று நிறைய பேருக்கு புரியவே போவதில்லை.

நாகூர் பற்றி பெருமை பேசினால் அது எப்படி ஃபாஸிஸத்தில் (அதுவும் “மிகப் பெரிய” ஃபாஸிஸத்தில்) போய் முடியும்? அதை இந்த ட்யூப்லைட்டுக்கு சற்று விளக்க முடியுமா?

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் ஏனைய விஷயங்களைத் தீர்மானிக்கப்படும் கொள்கை ஃபாஸிஸம் என்பது என் கருத்து.

அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே ஃபாஸிஸம். முதலாம் உலக மகா யுத்தத்தின் போது இத்தாலியில் தோன்றிய ஃபாஸிஸத்தின் அடையாளமாக இத்தாலியின் முசோலினி மற்றும் ஜெர்மனியின் ஹிட்லரை உதாரணம் காட்ட முடியும்.

சாரி சாரு.  உங்களுடைய இந்த கருத்துடன் என்னால் ஒத்துப்போகவே முடியவில்லை.

நீங்கள் பிறந்த வளர்ந்த ஊரின் பெருமைகளை சொல்வதால் உங்களை ஃபாஸிஸ்ட் என்று சமுதாயம் முத்திரை குத்தி விடுமோ என்று பயந்து நடுங்குவது தெரிகிறது. ஊர் பெருமைகளைச் சொல்வது எப்படி ஃபாஸிஸம் ஆகும் என்று புரியாமல் விழிக்கிறேன் நான்.

உங்களை நாகூர்க்காரன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படவோ, வேதனைப்படவோ, துன்பப்படவோ,  துயரப்படவோ, துவண்டுபோகவோ வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

உங்களுடைய கருத்துக்களோடு நான் மட்டும்தான் ஒத்துப்போக முடியவில்லையா அல்லது என்னைப்போன்று பலரும் முரண்பட்டு குழம்புகிறார்களா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

 “தமிழ் பேசும் பலரும் தமிழ்தான் உலகிலேயே சிறந்த மொழி என்கிறார்கள்.  நான் அவர்களிடம் அரபியும் உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்று என்றும், தமிழுக்கு எத்தனை பெருமைகள் உண்டோ அத்தனை பெருமையும் அரபிக்கு உண்டு என்றும் சொல்வது உண்டு.  சொல்வது மட்டும் இல்லை.  பல கட்டுரைகளில் அப்படி எழுதியிருக்கிறேன்”

என்று எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் நாகூர்க்காரர்கள் எல்லாம் அரபி மொழி பேசுபவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நாகூர் ஏதோ அரேபிய பிரதேசத்தில் இருக்கிறது என்று தமிழ்நாட்டு பக்கமே இதுவரை எட்டிப்பார்த்திராத உங்கள் யு.எஸ்.வாசக அபிமானிகள் தவறாக புரிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உலக மாந்தர்களுக்காக அருளப்பட்ட திருக்குர்ஆன் எனும் வேதம் அரபு மொழியில் இருப்பதினால் அதனைப் படித்து புரிந்துக் கொள்ளும் வண்ணம் இஸ்லாமியர்கள் அந்த மொழியை கூடுதலாக கற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

எனவே இஸ்லாமியர்கள் தமிழை வெறுக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாகாது. “நான்காம் தமிழ்சங்க நக்கீரர்” என்று போற்றப்படும் நாகூரைச் சேர்ந்த மகாவித்வான் குலாம் காதிறு நாவலர் மதுரையில் தமிழ் வளர்த்த வரலாறு உங்களுக்குத் தெரிந்ததுதானே?

“தமிழுக்கு அமுதென்று பேர்; அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றும் “பாண்டியர் ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த பைந்தமிழ் அமுதமே நீ” என்றும் “தலைவாரி பூச்சூடி உன்னை; பாடசாலைக்கு போவென்று சொன்னால் உன் அன்னை” என்ற புரட்சிக் கவிஞனின் பாடலையும் “இன்பத்தமிழ் எங்கள் மொழியாகும்; இஸ்லாம் எங்கள் வழியாகும்” என்று வாழ்நாள் முழுதும் தொண்டைக் கிழிய பாடி இன்று பேசக்கூட முடியாமல் தடுமாறும் நாகூர் ஹனிபாவும் ‘உங்கள்’ ஊர்க்கார்தான் என்பதை மறந்து விடாதீர்கள் சாரு. தமிழ்மொழியை சீராட்டி பாராட்டி வளர்ந்த நாகூர்க்காரர்களின் பட்டியலை இட்டால் அது அனுமார் வாலென நீண்டு கொண்டே போகும்.

“காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனிச்சிறப்புகள் உண்டு.. தமிழைப்போன்று அரபி மொழிக்கும் பெருமைகள் உண்டு என்றுதானே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்? தமிழை விட அரபுமொழிக்குத்தான் பெருமை என்று சொன்னால்தான் யாராவது முரண்பாடு கொள்வார்களேத் தவிர நீங்கள் சொன்ன கருத்துக்கு யாரும் ஆட்சேபனை செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

தமிழ் மொழியைப் போன்று அரபி மொழியும் உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை எல்லோரும் அறிவர்.. அரபி மொழியின் ஒரு சில சிறப்புகளை மட்டும் இங்கு நான் எடுத்து வைக்கிறேன்.:

தமிழ் இலக்கணத்தில் ஒருமை, பன்மை (Singular, Plural) தான் இருக்கிறது. அரபி மொழியில் ஒருமை, இருமை பன்மை (Singular, Dual, Plural) இம்மூன்றும் இருக்கிறன. அரபி மொழியில் சிங்கத்தைக் குறிப்பதற்கு முன்னூறுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் இருக்கின்றன. அதை விட ஆச்சரியம் தரக்கூடிய செய்தி என்ன தெரியுமா? ஒட்டகத்தைக் குறிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் அம்மொழியில் உள்ளன. அரபி மொழி எத்துணை சொல்வளம் பொருந்தியது என்பதற்கு இது ஒன்றே எடுத்துக்காட்டு.

அரபியில் உள்ள “அல்லாஹ்” என்ற சொற்பதத்திற்கு இணையாக வேறு எந்த மொழிகளிலும் வார்த்தைகள் கிடையாது. ஆங்கிலத்தில் “GOD” என்ற சொற்பதமும் பொருந்தி வராது. ஆணுக்கு “GOD” என்றும் பெண்ணுக்கு “GODDESS” என்றும் சொல்கிறார்கள்.  “அல்லாஹ்” என்ற சொல்லிற்கு பாலினம் (Gender) கிடையாது. தமிழில் கடவுள் என்ற சொல்லுக்கு “ஆண்கடவுள்” “பெண்கடவுள்” என்ற இரண்டு பொருள்களும் உண்டு. தெய்வம் என்ற வார்த்தையும் அப்படித்தான். ஆண் தெய்வம், பெண் தெய்வம் உண்டு. ஆண்டவன், இறைவன், கர்த்தர் இச்சொற்கள் யாவும் ஆணைத்தான் குறிக்கின்றன.

“இறைவன் உருவமில்லாதவன்; அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அலியுமில்லை” என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கை. பழந்தமிழரின் கடவுள் சித்தாந்தமும் இதுவாகத்தான் இருந்தது.

அரபி மொழியின் சிறப்பை நான் இங்கு எடுத்துரைத்திருப்பதால் எந்தத் தமிழரும் என்னை வெறுத்து ஒதுக்கி விலக்கி வைத்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

எண் ஒலிப்பு, இறங்குமுக எண்கள், அளவைகள், பொன் நிறுத்தல், பண்டங்கள் நிறுத்தல், முகத்தல் அளவு, பெய்தல் அளவு போன்றவற்றிற்கு தமிழ் மொழி போன்று வேறு எந்த மொழிகளிலும் அத்தனை சொல்வளம் இல்லை என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். அரபி மொழியில் இதுபோன்று கிடையாது. செம்மொழியான தமிழ் மொழிக்கு இப்படி எத்தனையோ தனிச்சிறப்புகள் உண்டு. தமிழுக்கு ‘ழகரம்’ தனியொரு சிறப்பு. இப்படி நான் எழுதியதால் “நான் அரபி மொழிக்கு எதிரி” என்று யாரும் எனக்கு “ஃபத்வா” கொடுத்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

பிறந்த ஊரைப்பற்றி எழுதினால் அது ஃபாஸிசத்தில் போய் முடியும் என்று நீங்கள் பயப்படுவது அர்த்தமற்றது சாரு.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘ஏழாவது வானத்தில் பேசப்படும் மொழி நம் தமிழ்மொழிதான்’  என்கிறார் கவிக்கோ அவர் நேரடியாக அப்படிச் சொல்லவில்லைதான். பெரும்புலவர் கல்வத்து நாயகம் அப்படி சொன்னதாகக் கூறி பெருமை கொள்கிறார். உலகத்தின் முதல் மனிதனான ஆதாம் பேசிய மொழி தமிழ் மொழிதான் என்று கூறுகிறார். இக்கருத்து பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு  உடன்பாடு இல்லை என்றபோதிலும் முஸ்லீம்கள் அவரைக் கொண்டாடத்தானே செய்கிறார்கள்?

 தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதி பாடியதே பொய் என்று எழுதியிருக்கிறேன்.

என்று சொல்லுகிறீர்கள். உண்மைதான் “சிந்துநதியின்மிசை நிலவினிலே” என்ற பாட்டில் கேரளப் பெண்களுடன் சேர்ந்து ஜாலியாக தோணியில் Outing சென்றுவிட்டு “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்” என்கிறான். தமிழில் பாட்டிசைக்க அவன் ஏன் விரும்பவில்லை என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. கர்னாடக இசையில் உள்ள தெலுங்கு கீர்த்தனைகள்தான் உயர்ந்தது என்று அவன் சொல்ல வருகிறானா?

ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்காரருக்கும் அவர் மொழி இனிதுதான்.  அதைப் புரிந்து கொள்ளாமல், அந்த சுதந்திரத்தை மாற்றானுக்குக் கொடுக்காமல் என் மொழி தான் இந்த உலகிலேயே சிறந்தது என்றும் என் மதம் தான் இந்த உலகிலேயே சிறந்தது என்றும் என் நாடுதான் இந்த உலகிலேயே சிறந்தது என்று பேசுவதும் ஃபாஸிசத்தில் கொண்டு போய் விடும்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே என் கொள்கை.  எனக்கு எல்லா ஊருமே என் ஊர் தான்.  இந்தப் பூமியே இறைவனின் கொடை என்கிற போது நாகூர் மட்டுமே என் ஊர் என்று சொல்ல முடியுமா?

அகில உலக Celebrity ஆகிவிட்ட நீங்கள் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று முழங்கினால்தான் உங்களை டெல்லிவாசிகளும் சென்னை வாசிகளும் மற்றும் பாரீஸ், அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் உங்கள் அபிமானிகள் உங்களை “நம்மவர்” என்று போற்றுவார்கள் என்று நினைக்கிறீர்களா? எல்லா ஊர்க்காரர்களும் உங்களுடைய புத்தகத்தை வாங்கி நீங்கள் பலனடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்கள் இப்படி பேச வேண்டியிருக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

நாகூரில் 20 ஆண்டு, தில்லியில் 12 ஆண்டு.  மீதியெல்லாம் சென்னை.  ஆனால் சென்னை என் ஊரே இல்லை. இந்த ஊர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  நாகூரும் தில்லியும் தான் நான் வளர்ந்த ஊர்கள்.

என்கிறீர்கள். நாகூரும் தில்லியும் ஒன்றாக முடியாது ரவி அண்ணா!  நீங்கள் எந்த ஊரில் சென்று தஞ்சம் அடைந்தாலும் (நாகூர் பாஷையில் சொல்ல வேண்டுமெனில்) உங்களை “வந்தாவரத்தான்”தான் என்றுதான் அந்த ஊர்க்காரர்கள் கருதுவார்கள். நீங்கள் குறிப்படும் கலீஃபா சார் போன்றவர்களிடம் உங்களை பற்றி யாராவது கேட்டால் “அட அஹலா? அஹ நம்ம ஊரு புள்ளையாச்சே” என்று அன்பொழுக பாசத்தோடு சொல்வார் என்பது மட்டும் நிச்சயம்.

நான்கூட கடந்த 36 வருடங்களாக பஹ்ரைன் மண்ணில்தான் வசித்து வருகிறேன். அதற்காக நான் பஹ்ரைனி என்று பீற்றிக் கொள்ள முடியுமா என்ன? East or West. Home is the Best  என்பதென்னவோ நூற்றுக்கு நூறு உண்மை.

ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவிதான். சென்னையும், டெல்லியும் நீங்கள் பணிநிமித்தமாக சென்று வசித்த இடங்களாக இருக்கலாம். அதற்காக நீங்கள் பிறந்த ஊரை சொல்லிக்கொள்ள கூச்சப்பட வேண்டியதில்லை.

இது போன்ற வாசகங்களை ஒருவர் அதன் சந்தர்ப்பத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும், அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர தமிழைத் திட்டி விட்டான், நாகூரைப் புறக்கணித்து விட்டான் என்று சொல்வது நியாயம் அல்ல. இன்னமும் என் சுவாசத்தில் நாகூர் எஜமான் கொடுத்த காற்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது.  இன்னமும் நான் தர்ஹாவின் குளுந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருக்கிறேன்.

உங்க கேரக்டரையே என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை சாரு. உங்களுடைய வார்த்தைகளிலேயே எத்தனை முரண்பாடுகள் என்பதைப் பாருங்கள். உங்களுடைய சுவாசமே நாகூர் எஜமான் கொடுத்த காற்று என்று கூறும் நீங்கள் முன்னொருமுறை

 “எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது”

என்று எழுதியது ஏனென்று புரியாமல் விழிபிதுங்குகிறேன்.

அவருடைய கவர்ச்சியான சிரிப்பை யாரால் மறக்க முடியும்?  எப்போதும் ஒரு மனிதனால் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா?  கலிஃபா சார் அதற்கு உதாரணம்.  சினீ சண்முகம் சார் மற்றவர்களை சிரிக்க வைப்பார்.

நீங்கள் பழகி மகிழ்ந்த கலீஃபா சார், சீனி சண்முகம் சார், பரீது காக்கா, பி.ஏ.காக்கா,  இவர்களும் நாகூர் பெருமையின் அங்கம்தானே சாரு?

உங்கள் இளம்பிராயத்தில் நீங்கள் பழகியவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்பது சத்தியமாக உண்மை. அதை உரக்கச் சொல்வதினால் எழுத்துலகம் உங்களை ஓரங்கட்டி விடும் என்ற ஒரு தவறான கண்ணோட்டதில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நாகூரைச் சேர்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் பேச்சு வழக்கிலும், உடை மற்றும் உணவு முறையிலும் ஆசார பிராமணர் போன்றே வாழ்ந்தவர். அவர் சுத்த சைவம். அவருடைய நண்பர்கள் யாவரும் பிராமணர்கள். ஆய்வு செய்தது அனைத்தும் இராமரைப் பற்றிதான். தலைவராக இருந்தது கம்பன் கழகத்தில். அதற்காக முஸ்லீம்கள் அவரை ஒதுக்கி வைத்து விட்டார்களா என்ன?.

“வடுகப்பட்டி முதல் வால்காவரை” என்று வைரமுத்து நூலெழுதினார். கவிஞர் தன் ஊர்ப்பெருமையை பேசியதற்காக அவரை யாரும் ஃபாஸிஸ்ட் என்று வசைபாடவில்லையே?.

இளையராஜா சகோதர்கள் தங்களை  “பண்ணைபுரத்து சகோதரர்கள்” என்று அழைக்கப்படுவதை பெருமையாக கருதினார்கள். அதற்காக அவர்களை யாரும் ஃபாஸிஸ்ட் என்று முத்திரை குத்தவில்லையே?

நடிகர் பிரபு தன்னை “சூரக்கோட்டை சிங்கக்குட்டி” என்று சொல்லி மார்தட்டிக் கொண்டார். .

சீர்காழி சிவ சிதம்பரம் தன் முன்னோர்கள் நாகூரிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறார். நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் சாரு?

பின் குறிப்பு:

சொல்ல மறந்து விட்டேனே. உங்களுடைய “புதிய எக்ஸைல்”  நாவல் பாதிவிலைக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு விற்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள். அதில் நாகூரின் அஞ்சுவகை சோறையும். நாகூருக்கும் இசைக்கும்  இடையே உள்ள தொடர்பினையும் எழுதியிருக்கிறீர்கள்  என்று அறிந்தேன், மிக்க சந்தோஷம்.

நாகூரில் நீங்கள் கண்டு களித்து உணர்ந்த அனுபவங்களை எல்லாம் எழுதி காசு பார்க்கத் தெரிந்த உங்களுக்கு நாகூரை பற்றி எழுதினால் மட்டும் ஃபாஸிஸ்ட் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து நடுங்குவது ஏன் சாரு.?

– அப்துல் கையூம் 

சாருவைப்பற்றி

சாரு நிவேதிதாவும் நோஸ்டால்ஜியாவும்

 

இன்று முகநூலில் நண்பர் சுரேஷ் கண்ணன் பகிர்ந்த ஜோக் இது:

“ஏங்க புதுசா எக்சல் -னு வந்திருக்காமே?” என்றார் இல்லாள்.

‘இந்த இலக்கிய நியூஸ் ரமணிசந்திர இல்லத்தரசிகள் வரை பரவிடுச்சா, தேவலையே..’ என்று நினைத்தபடி

“ஆமாம்.. ஐனூறு ரூபாயாம்.. என்ன இப்ப?” என்றேன்.

“ரெண்டு ரூபா பாக்கெட்டுல கூட கிடைக்குதாமே?” என்றார்.

சற்று அதிர்ச்சியாகி “ரெண்டு ரூபாய்க்கா.. ? ஒவ்வொரு அத்தியாயமாவா விப்பாங்க?” என்றேன்..

“ஹலோ.. நான் சொல்றது துணி துவைக்கிற சர்ப் எக்சல் பத்தி.. நீங்க எதைச் சொல்லித் தொலைக்கறீங்க?” என்று சீறின குரலில் பதில் வந்ததும்தான் தெளிவான நிலைக்கு வந்து பூமியை அடைந்தேன்.

 

Tags: , , ,

வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்


w2

வஹிதா ரஹ்மானுக்கும் நாகூருக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. இதனைப் படிப்பவர்கள் நான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடு’வதாக நினைக்கத் தோன்றும்.

அகில இந்திய அளவில் கனவுத் தாரகையாக, இந்தி திரைப்பட உலகில் கொடிகட்ட பறந்த அந்த பிரபல பத்மஸ்ரீ பத்மபூஷண் நடிகைக்கும், தென்னிந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் இருக்கும் சிறிய ஊரான நாகூருக்கு அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும்?

இதற்கு ஒரு சின்ன ‘ப்ளாஷ்பேக்’ தேவைப்படுகிறது.

என் இளம்பிராயத்தில் நான் முதன் முதலாக பார்த்த இந்திப்படம் “பீஸ் சால் பாத்”. திருச்சிக்குச் சென்றிருந்தபோது மதுரை ரோட்டில் அமைந்திருந்த ராஜா திரையரங்கில் அப்படத்தை பார்த்த அனுபவம் என் மனதில் ஒரு ‘திகில்’ உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இரவில் உறங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த படத்தில் வெள்ளை உடை அணிந்து பாட்டு பாடித்திரியும் அந்த பெண் பேயின் நினைவு கனவில் வந்து என்னை பயமுறுத்தும். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தபடி அழுவேன்.

எனது பாட்டி அம்மாஜி திருமறை வசனங்கள் என் மீது ஓதி ஊதி பயம் தெளிய வைப்பார்கள். மறுநாள் “அந்த படம் யார் நடித்தது?” என்ற பேச்சு எழுந்தபோது நான் அவர்களிடம் ”வஹிதா ரஹ்மான்” என்று கூறினேன்,

சற்று நேரம் மெளனம் நீடித்தது, காலை நீட்டிக்கொண்டு இரும்பாலான உரலில் சிறிய உலக்கையைக் கொண்டு பாக்கு இடித்துக் கொண்டிருந்த அவர்களின் முகத்தில் ‘பளீச்’சென்று ஒரு பிரகாசம். தோன்றியது.

பழைய நினைவுகளில் அப்படியே மூழ்கிப்போனார். “ஓஹோ! வஹிதா ரஹ்மானா? என்று கூறி விட்டு ஒருவிதமான அர்த்தமுள்ள புன்னகையை உதிர்த்தார். அவருடைய மெளனப் புன்னகைக்குப் பின்னே ஏதோ ஒரு பின்னணிக் கதை இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தயாரானார். நானும் அவர் வாயிலிருந்து வரப்போகும் சுவையான அனுபவங்களைக் கேட்பதற்கு ஆவலுடன் காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.

“இதோ பார்த்தியா இந்த முற்றம். இங்கேதான் வஹிதா ரஹ்மான் சின்னக் குழந்தையாக இருக்கும் போது கவுன் அணிந்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவாள்” என்று ஆரம்பித்தார்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! இந்தி நடிகை வஹிதா ரஹ்மான் நம் வீட்டுக்கு வந்து போவாரா?. என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்வத்துடன் அவர் சொல்வதை கேட்கத் தொடங்கினேன்.

பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் அசைபோட்டு கூறலானார். பாட்டி அம்மாஜி கூறியதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொண்டேன். அதை எழுத்து வடிவில் ஆவணப்படுத்துவதற்கு இன்றுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.

நாகூரில் நல்ல வசதி வாய்ப்போடு வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக ஜவுளிக்கடை, தொப்பிக்கடை, கைத்தறி கைலிகள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் பத்தை கைலிகள் ஸ்க்ரீன் பிரிண்ட்ஸ் கம்பேனி இருந்தது. என்னுடைய பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸ் அரசு அதிகாரிகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். நாகை மாவட்ட கமிஷனராக இருந்த முகம்மது அப்துல் ரஹ்மான் அதுபோன்று அறிமுகமானவர்தான்.

ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாலை வேளையில் தவறாமல் நாகூருக்கு அவர்களுடைய குடும்பம் நாகப்பட்டினத்திலிருந்து வந்து விடும். எங்கள் வீட்டில்தான் வந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள், வியாழக்கிழமை இரவை “கிழமை ராவு” என்று விசேஷமாக எங்களூரில் சொல்வார்கள்.

அன்றைய தினம் மின்விளக்குகளால் தர்கா அலங்கரிக்கப்பட்டு தர்காவைச் சுற்றியுள்ள வெளிநாட்டு பொருட்கள் விற்பனையாகும் கடைகள் மற்றும் இனிப்புப் பலகாரம் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த பகுதிக்குள் நுழைந்தாலே சுடச்சுட பட்டாணிக்கடலை வறுக்கும் மணம் ‘கமகம’வென்று மூக்கைத் துளைக்கும்

நாலாபுறமுள்ள சுற்றுபுற ஊர்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பார்கள். தர்காவின் உட்புறத்திலுள்ள திண்ணையில் நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெறும். ‘நகரா மேடை’யில் ஷெனாய் இசை ஒலிக்கும். மொத்தத்தில் விழாக்கோலம் பூண்டு ஊரே கலகலப்பாக களைகட்டும்.

அப்துல் ரஹ்மான் நாகூருக்கு வரும்போதெல்லாம் நாகூரில் பிரசித்திப் பெற்ற “உப்புரொட்டி” என்ற ஒரு வகை cookies தவறாமல் வாங்கிக்கொண்டு போவார். என் பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸின் சகோதரர் இஸ்மாயீல் நாகூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு நேரெதிரே அமைந்திருந்த ரொட்டிக்கிடங்கிலிருந்து (Bakery) சுடச்சுட பெரிய தகரடின்னில் பேக் செய்து தருவிப்பார். வஹிதாவுக்கும் அவர் சகோதரிகளுக்கும் இந்த தின்பண்டம் என்றால் உயிர்.

[உப்புரொட்டியை நாகூரில் முதன் முதாலாக அறிமுகம் செய்து வைத்தது இஸ்மாயில் சாஹிப்தான், அதற்குப் பிறகு அதனை மேலும் பிரபலப்படுத்தியது சஹ்பான் என்பவர், இன்றளவும் இந்த உப்புரொட்டி நாகூரின் பிரசித்திபெற்ற தின்பண்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.]

வஹிதாவின் தந்தை அப்துல் ரஹ்மானுடைய குடும்பம் சற்று மாடர்னான குடும்பம். நாகையில் மாவட்டக் கமிஷனராக பணிபுரிந்த அவரிடம். கார், பணியாட்கள், ஓட்டுனர் என சகல வசதி வாய்ப்புகளும் இருந்தது. உருதுமொழிதான் அவர்களது தாய் மொழி, அப்துல் ரஹ்மானுக்கு தன் குழந்தைகளுக்கு உருது மொழி பயிற்றுவிக்க ஆசை,, நாகூரில் அந்த வசதி இருந்தது. நாகூரில் உருதுமொழி கற்பிக்க கோஷா ஸ்கூல் இருந்தது. ஆனால் நாகையிலிருந்து வந்துபோக அது அவர்களுக்கு சாத்தியப்படவில்லை.

அப்துல் ரஹ்மான் – மும்தாஜ் பேகம் தம்பதியினருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். நான்கும் பெண்குழந்தைகள். சயீதா, வஹிதா, ஷாஹிதா, ஜாஹிதா (Zahida), ஆகிய நால்வர் ஆண் வாரிசு கிடையாது. வஹிதாவும் அவருடைய மூத்த சகோதரி சயீதாவும் துறுதுறு’வென்று இருப்பார்கள்.

வஹிதாவின் தந்தை சற்று மாநிறமாக இருந்தாலும், தாயார் மும்தாஜ் நல்ல எடுப்பான நிறம். தாயின் செக்கச்செவேலென்ற நிறம்தான் பெண்பிள்ளைகளுக்கு வாய்த்திருந்தது. அப்போது வஹிதாவுக்கு ஏழோ, எட்டோ வயதிருக்கும் குட்டைப்பாவாடை அணிந்த சிறுமியாக வலம் வந்துக் கொண்டிருப்பார். .

வஹிதாவுக்கு யானை என்றால் கொள்ளை இஷ்டம். அவரை அழைத்துக் கொண்டு தர்கா அலங்கார வாசல்முன் நிற்கும் அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் உட்கார வைத்து மகிழ்வார் அவரது தந்தை. தன் மகளின் முகத்தில் பூக்கும் அந்த புன்சிரிப்பை கண்டு ரசிப்பார்.

ஒரு சமயம் தர்கா யானை எங்கள் வீட்டு வழியே சென்றது. வீட்டின் முன் வந்து நிற்கும் யானைக்கு சில்லறை காசு கொடுத்தால், யானை தன் தும்பிக்கையால் சுழற்றி வாங்கிக் கொண்டு அதை அப்படியே யானைப் பாகனிடத்தில் ஒப்படைக்கும். அதை வேடிக்கை பார்க்கும் வஹிதாவுக்கும் அவரது சகோதரி சயீதாவுக்கும் ஆச்சரியம் சொல்லி மாளாது.

மேலும் அதற்கு உரித்த தேங்காயை கொடுத்தால் தும்பிக்கையால் லாவகமாக தரையில் அடித்து உடைத்து சில்கள் சிதற அதன் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே வாரி எடுத்து யானைப் பாகனிடத்தில் கொடுக்கும். இந்தக் காட்சியைக் காணும் வஹிதாவும் அவரது சகோதரி சயீதாவும் உற்சாகத்தில் துள்ளுவார்கள்.

“டாடி! டாடி எனக்கு அந்த யானையை வாங்கித் தாருங்கள்” என்று வஹிதா தன் தந்தையிடம் அடம் பிடிப்பார். “இந்த பெரிய யானை வேண்டாம். கொஞ்சம் பொறு. உனக்காக ஒரு குட்டியானை வாங்கித் தருகிறேன். அதனை வளர்த்து நீ பெரிய யானையாக ஆக்கலாம்” என்று சமாதானம் செய்வார்.

வஹிதாவுக்கு யானை மீது ஒரு அபார பைத்தியம் எற்பட்டதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே இருந்த ஊர். அப்துல் ரஹ்மான் நாகப்பட்டினத்திற்கு மாற்றல் ஆவதற்கு முன்பு இருந்ததோ பாலக்காட்டில். தமிழகம்-கேரளா எல்லையிலிருந்த பாலக்காடு இயற்கை வளம் நிறைந்த பகுதி. அங்குள்ளவர்கள் தமிழ் பேசினாலும் அவர்களது கலாச்சாரம் முழுக்க முழுக்க கேரளாவைச் சார்ந்ததாக இருந்தது.

ஓணம் பண்டிகையின் போது பாலக்காடு கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு பிரமாதமாக நடக்கும். ஐந்து வயதுச் சிறுமியான வஹிதா ரஹ்மானை அழைத்துக் கொண்டு அப்துல் ரஹ்மான் பாலக்காடு கோட்டைக்குச் செல்வார். தோளில் அவரை தூக்கிப்பிடித்து தூரத்தில் நடக்கும் அணிவகுப்பை வேடிக்கை காட்டுவார். யானைகளின் அணிவகுப்பு பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், கம்பீரமாகவும் பிரமாண்டமான காட்சியாக இருக்கும். அதிலிருந்தே வஹிதாவுக்கு யானைகள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது

சினிமா, நாடகம். நாட்டியம் என அனைத்து கலைநிகழ்ச்சிகளுக்கும் தன் பெண்பிள்ளைகளை அப்துல் ரஹ்மான் அழைத்துச் செல்வார். அவருக்கும் இசை என்றால் கொள்ளைப் பிரியம். வஹிதாவுக்கு நாட்டியத்தின் மீது சிறுவயது முதற்கொண்டே ஒர் ஈடுபாடு ஏற்பட்டது.

“நான் திரைத்துறைக்கு வந்ததே எனக்கு நடனத்தின் மீது இருந்த அளப்பரிய ஈடுபாட்டினால்தான்” என்று அண்மையில் ஒரு பேட்டியின்போது கூறியுள்ளார்.

வஹிதா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருந்தார். சோகமான காட்சிகள் திரைப்படத்தில் வந்தால் தியேட்டரிலேயே ‘கேவிக் கேவி’ அழுவார். அவரை சமாதானம் படுத்துவதற்கே அவருடைய தாயாருக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.

அப்துல் ரஹ்மானுக்கு வேட்டை என்றால் மிகவும் இஷ்டம். எனது பாட்டனார் அவரை அழைத்துக்கொண்டு வேதாரண்யம் அருகேயுள்ள பகுதிக்கு மான் வேட்டைக்குச் செல்வார். என் பாட்டனாருடன், வேறு சில நண்பர்களும் சேர்ந்துக் கொள்வார்கள். கோடியக்கரையிலிருந்த எனது பாட்டனாரின் நண்பரின் பங்களாவில்தான் தங்குவார்கள். மான்கறி சமைத்து ‘கூட்டாஞ்சோறு’ ஏற்பாடு செய்வார்கள்.

அப்துல் ரஹ்மான் மும்தாஜ் பேகத்தை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அப்துல் ரஹ்மான் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கேரள எல்லையிலிருந்த பாலக்காட்டிலும், ஆந்திராவிலிருந்த விசாகப்பட்டினத்திலும் இம்பீரியல் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். இப்போதைய I.A.S. அதிகாரி வகிக்கும் பதவிக்குச் சமமான பதவி அது. 1936-ஆம் ஆண்டு அவர் செங்கல்பட்டில் இருந்தபோதுதான் வஹிதா பிறந்தார்.

உருது மொழிதான் அவர்களுடைய தாய்மொழி. என்றாலும் வஹிதாவின் தந்தை அப்துல் ரஹ்மான் நன்றாக தமிழ்பேசக் கற்றுக் கொண்டார். அப்துல் ரஹ்மானின் தந்தை வடநாட்டில் ஜமீந்தாராக இருந்தவர். அவர் வேறொரு திருமணம் செய்துக் கொண்டபோது மனமுடைந்து சென்னை மாகாணத்திற்கு பணிமாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்தார்.

photo 1

வஹிதா ரஹ்மான், அவரது தாயார் மும்தாஜ் பேகம், சகோதரி சயீதா ரஹ்மான்

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தபோது அதற்கு கதை – வசனம் எழுதியவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய சிபாரிசின் பேரில்தான் அந்தப் படத்தில் வஹிதா ரஹ்மானுக்கு நர்ஸ் வேடம் கிடைத்தது.

[‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல் கா.மு.ஷெரீபுடன் இணைந்து ம.பொ.சிக்கு பக்கபலமாக இருந்தவர் இவர்.]

w1

வஹிதா ரஹ்மான் பருவ வயதை எட்டியிருந்தபோது 1951-ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் மரணம் திடீரென சம்பவித்தது. மருத்துவப்பட்டம் பெற்று மருத்துவர் ஆகவேண்டும் என்ற அவரது கனவு தூள் தூளாகத் தகர்ந்து போனது, அவரது குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலைக் கருதி சினிமாத் துறையில் புகுந்து சம்பாதிக்க முற்பட்டார். அதற்கான அழகும், உருவமும், திறமையும் தன்னிடம் உள்ளது என்று திடமாக நம்பினார். செல்வச் செழிப்போடு வாழ்ந்த அவர்கள் அதேபோன்று ஆடம்பர வாழ்க்கையைத் தொடர நிறைய பணம் தேவைப்பட்டது.

1953-ஆம் ஆண்டு வஹிதாவின் மூத்த சகோதரி சயீதாவுக்கு திருமணம் நடந்தது.

இதற்கிடையில், அவரது தாயாரும் நோய்வாடப்பட்டார். 1955-ஆம் ஆண்டு அவரும் மரணம் எய்தினார். குடும்பத்தை வழிநடத்த சகோதரர்கள் யாரும் இல்லை. பெற்றோர்களுடைய மரணம் அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியது.

வஹிதாவின் தாய்வழித் தாத்தா நல்ல ரோஜாப்பூ நிறம். ஆஜானுபாகுவான தோற்றம். இந்திய பிரிவினைக்கும் முன் அவரது முன்னோர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து குடியேறினார்கள். வஹிதா ரஹ்மானின் தாயாரின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். அவருடைய தாயாருக்கு ஐந்து சகோதரிகளும், நான்கு சகோதரர்களும் இருந்தனர். பிறகு வஹிதாவின் தாயாரின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் சென்று குடியேறினர்.

வஹிதாவின் தாய்மாமன்கள் அத்தனை பேரும் வஹிதா ரஹ்மானிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் வடநாட்டில்தான் இருந்தார்கள். அவர் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு தடுப்பதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார்கள். சினிமா வழிக்கேட்டில் சென்று விட்டுவிடும் என்று எச்சரித்தார்கள். அம்மாவின் அளவுக்கு அதிகமான செல்லம், வஹிதாவின் பிடிவாதம் இவையிரண்டிற்கும் முன்னால் தாய்மாமன்களின் எதிர்ப்பு சற்றளவும் எடுபடவில்லை.

w5

நடிப்புத்துறையில் நுழைவதற்கு தேவையான அத்தனை பயிற்சிகளையும் சிரமத்துடன் மேற்கொண்டார். சென்னையில் திருச்செந்தூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்ற குருவிடம் பரதநாட்டியம் பயின்றார். சென்னையில் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடும் “ரெட்ஹில்ஸ்” பகுதியில் விவசாய நிலங்களும் இருந்தன.

வஹிதா ரஹ்மானுக்கு தமிழ், தெலுங்கு மொழிகள் தெரியாது என்றாலும் பேசினால் ஓரளவு புரிந்துக் கொள்வார். காலப்போக்கில் அவர் அதனை மறந்தும் போனார்.

1955-ஆம் ஆண்டு அப்துல் ரஹ்மானின் நண்பராகத் திகழ்ந்த ராமகிருஷ்ண பிரசாத் என்பவர் “ரோஜுலு மாராயி” என்ற பெயரில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்தார். அதில் ஒரு பாடலுக்கு நடனமாட வஹிதாவுக்கு வாய்ப்பளித்தார். .இப்படித்தான் அவருடைய திரையுலக பிரவேசம் தொடங்கியது.

hqdefault

அதே வருடம் தெலுங்கில் வெளிவந்த “ஜெயசிம்ஹா” என்ற படத்தில் சிறிய வேடமேற்று நடித்தார். 1956-ஆம் ஆண்டு, ஜெமினி கணேசன் அஞ்சலி தேவி ஜோடியாக நடித்து வெளிவந்த “காலம் மாறிப்போச்சு” என்ற படத்தில் இடம் பெற்ற

“ஏறு பூட்டி போவாயே அண்ணே ! சின்னண்ணே !! – உன்

துன்பமெல்லாம் தீருமே அண்ணே ! சின்னண்ணே !!

என்ற பாடலுக்கு அமர்க்களமாக அவர் ஆடிய நடனம் திரையுலகினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. “ரோஜுலு மாராயி” என்ற படத்தில் இடம்பெற்ற தெலுங்கு பாடலின் தமிழ் “ரீமேக்” அது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற படத்தில் “சலாம் பாபு” என்ற பாடலுக்கு குரூப் டான்சராகவும் வந்து ஆடியிருக்கிறார்.

w4

எம்.டி.ஆர் – வஹிதா ரஹ்மான்

எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெமினி ஆகியோர் நடித்த தென்னிந்திய மொழிப் படங்களில் பெரும்பாலும் நடனக் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த வஹிதாவுக்கு 1956-ஆம் ஆண்டு இந்தி பட உலகில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய பெரிய வாய்ப்புகள் காத்திருந்தன. அவரை இந்தியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் குருதத்.

வஹிதா ரஹ்மான் என்ற பெயரை சினிமாவுக்கு ஏற்றவாறு வேறு பெயர் மாற்றிக்கொள்ளும்படி அவருக்கு பரிந்துரை செய்தபோது அதனை ஏற்க மறுத்து விட்டார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முகம்மது யூசுப்கான் திலீப்குமாராகவும், மஹ்ஜாபீன் பானு மீனா குமாரியாகவும், மும்தாஜ் ஜஹான் பேகம் மதுபாலாவாகவும் பெயர் மாற்றம் செய்து இந்திப் படவுலகை கலக்கிக்கொண்டிருந்தனர்.

வஹிதாவுக்கு இந்த பெயர் மாற்றத்தில் சற்றும் உடன்பாடு இல்லை. “ரசிகர்கள் என் நடிப்பைத்தான் பார்ப்பார்களேத் தவிர என் பெயரை அல்ல. பெயரை மாற்ற ஒருக்காலும் நான் மாட்டேன்” என்று ஒரே பிடிவாதமாக அவர் இருந்து விட்டார்.

குருதத்துக்கும் வஹிதா ரஹ்மானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது என்ற வதந்தி பலமாக பரவியிருந்தது. கடைசிவரை வஹிதா அதைப்பற்றி எந்தவித கருத்தும் கூறாமலே காலத்தைக் கடத்தினார்.

காலப்போக்கில் அனைத்து இந்தி முன்னணி காதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து தொட முடியாத உச்சத்திற்கு சென்று சாதனைகள் படைத்தார்.

அவர் தனது 38-வது வயதில்தான் – 1974-ஆம் ஆண்டு – சஷி ரேக்கி (திரைப்படப் பெயர் கமல்ஜீத்) திருமணம் புரிந்துக்கொண்டு பெங்களூரில் குடியேறினார். 2000-ஆம் ஆண்டு தன் கணவருடைய மரணத்திற்குப்பின் மீண்டும் பம்பாய் சென்று பாந்த்ராவில் உள்ள அவரது பங்களாவில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

w3

வஹிதா ரஹ்மான் – குருதத் (படத்தில்)

 

கிட்டத்தட்ட 55 வருடங்களுக்குப் பிறகு வஹிதா ரஹ்மானை மீண்டும் “விஸ்வரூபம்-2” படத்தில் அம்மா வேடத்தில் தமிழ்த்திரையுலகில் பிரவேசம் செய்வதற்கு நடிகர் கமல ஹாசன் வாய்ப்பு அளித்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. சென்னைக்கு படப்பிடிப்புக்கு அவர் வருகையில் பழைய நினைவுகளைச் சுமந்துக் கொண்டு நாகூர் வந்து நாகூர் யானைக்கு ‘சலாம்’ சொல்லிவிட்டு, ஹாரீஸ் பேக்கரியிலிருந்து ‘உப்புரொட்டி’ வாங்கிப் போவாரா என்று தெரியவில்லை!!.

– நாகூர் அப்துல் கையூம்

 

Tags: , ,

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3


டால்மியாபுரம் போராட்டம் (1953)

டால்மியாபுரம் போராட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி

டால்மியாபுரம் போராட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி

டால்மியாபுரம் போராட்டம் என்றாலே அத்தனை பேருக்கும் நினைவில் வருவது கலைஞர் மு.கருணாநிதி மட்டும்தான். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ என்று போற்றப்படுபவர் அல்லவா அவர்? “ஓடாத ரயில் முன்னே தண்டவாளத்தில் தலைவைத்து விளம்பரம் தேடிக் கொண்டார் கருணாநிதி” என்று கண்ணதாசன் அவரை தன் சுயசரிதையில் கிண்டலடித்திருப்பார்.

அந்த போராட்ட நிதிக்காக எத்தனையோ செயல்வீரர்கள் திரை மறைவில் இருந்துக்கொண்டு பாடுபட்டார்கள். அவர்கள் யாரும் வெளிச்சத்திற்கு வரவேயில்லை. அப்படிப்பட்டவர்களில் நம் கட்டுரை நாயகன் ரவீந்தரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?’ ரவீந்தருக்கும் டால்மியாபுரம் போராட்ட நிதிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்று படிப்போர் நினைக்கக்கூடும். இன்னும் சொல்லப் போனால் அவர் தி.மு.க. கட்சிக்காரர்கூட கிடையாது. உண்மை இப்படியிருக்க அவருடைய பங்களிப்பு இந்த போராட்டத்தில் என்னவாக இருக்க முடியும்?

அந்நாளைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், “டால்மியாபுரம்” என்ற பெயரை “கல்லக்குடி” என்று பெயர் மாற்றக்கோரியும், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 1953-ஆம் ஆண்டு ஜூலை 14, 15 தேதிகளில் மும்முனை கருப்புக்கொடி போராட்டங்களை தி.மு.க. நடத்த முடிவு செய்தது.

“தமிழர்களை மிகக் கேவலமான முறையிலே, இழிமொழி புகன்று மனதைப் புண்படச் செய்கிறார் நேரு . மக்களின் கிளர்ச்சிகளை எல்லாம் மட்டரகமான மொழியால் ஏசுகிறார் . “நான்சென்ஸ்“ என்றும், “முட்டாள்“ என்றும் வைகிறார். ஒரு பெரிய துணைக் கண்டத்தின் தலைவர் இப்படி ஒரு இனமக்களைத் துச்சமாகக் கருதி இழிமொழி கூறுவதைக் கண்டிக்கவும், நாட்டின் மனப் போக்கை அவர் அறியச் செய்யவும், தமிழகமெங்கும், ஜூலை 15-ல் பகலில் எல்லா ரயில் வண்டிகளையும் நிறுத்திக் கண்டனக் குறியைக் காட்ட நாங்கள் தீர்மானித்துள்ளோம்”

என்று அறிஞர் அண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார்.

(உண்மையில், இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்ததைத்தான் பிரதமராக இருந்த நேரு “childish nonsense behavior” என்று கூறினாரே தவிர தமிழக மக்களை கேவலமான முறையில் திட்டினார் என்பதெல்லாம் கொஞ்சம் ‘ஓவர்’. மக்களை உசுப்பேத்துவதற்கு அறிக்கை சற்று காரசாரமாக இருக்க வேண்டும் அல்லவா?)

“டால்மியாபுரம்” என்ற பெயரை “கல்லக்குடி” என்று மாற்றுவதற்காக ‘தண்டவாளத்தில் தலை வைத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்’ என்று பத்திரிக்கைகள் யாவும் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. ஆனால், பதினாறு ஆண்டுகளுக்கு பிறகுதான் அதற்கான பலன் கிடைத்தது என்பது வேறு விஷயம்.

இந்த வெற்றியை போற்றும் வகையில் கூத்தாநல்லூரைச் சேர்ந்த சாரணபாஸ்கரன் (டி.எம்.எம்.அஹ்மத்) பாடல் எழுத. நாகூர் ஹனிபா பாடிய “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற அந்தப் பாடல் சரித்திரம் படைத்தது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

சினிமா கலைஞர்களின் நலன்கருதி இந்த போராட்டத்தில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்ள தேவையில்லை என்று அறிஞர் அண்ணா விதிவிலக்கு அளித்திருந்தார். கே.ஆர். ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, எம்.ஜி.ஆர் போன்ற நட்சத்திரங்களை போராட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்பாணை விடுத்திருந்தார்.

அதற்கு நியாயமான காரணம் இருந்தது. சிறை செல்ல நேர்ந்தால் அது அவர்களின் தொழிலையும் வருமானத்தையும் பாதிக்கும் என்ற நல்ல எண்ணத்தினால்தான் அறிஞர் அண்ணா அப்படிச் சொன்னார்.

தி.மு.க. மீது பற்று கொண்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், படங்களில் நடித்தபடியே, கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, நிதி திரட்டிக் கொடுத்தார். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அதே போன்று, எம்.ஜி.ஆர். நேரடியாக போராட்டக்களத்தில் குதிக்கவில்லை என்றாலும் கூட ரவீந்தரைப் பயன்படுத்தி , போராட்ட நிதிக்காக தன்னுடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்ற நோக்கில் நாடகம் ஒன்றை தயார் செய்வது என்று முடிவெடுத்தார்.

“போராட்ட நிதிக்காக நாடகமொன்றை அரங்கேற்றியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக செயல்படுத்த வேண்டும். நாடகத்தில் இடம்பெறும் வசனங்களில் அரசியல் நெடி வேண்டும். அவை நெத்தியடியாக இருக்க வேண்டும்” என்று ரவீந்தரை அழைத்து அன்புக்கட்டளை இட்டார்

எம்.ஜி.ஆர். கதையின் கருவை விஸ்வம் கோடிட்டுக் காட்ட, ‘எள் என்றால் எண்ணையாக’ நிற்கக்கூடிய ரவீந்தர் விறுவிறுவென்று செயலில் இறங்கினார். ஒரு மாத அவகாசத்திற்குள் நாடகத்தை எழுதி முடித்துவிட்டு ரிகர்சலும் தொடங்கி விட்டது. எல்லா வேலைகளும் அசுர வேகத்தில் நடைபெற்று முடிந்தன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடகமாக இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு தக்கபடி காட்சிகளை ரவீந்தர் அமைத்துக் கொடுத்தார்.

நாடகத்துறையில் அனுபவித்த கஷ்டங்கள்

நாகூர் ரவீந்தர் கலைத்துறையில் சாதனை புரிய எம்.ஜி.ஆருடன் கைக்கோர்த்த அதே 1952-ஆம் ஆண்டில்தான், எம்.ஜி.ஆர். தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். படிப்படியாக பொதுமக்களிடையே மிகுந்த செல்வாக்கு அடைந்துவரும் இந்தக் கட்சியின் மூலம் சினிமாத்துறையில் ஆழமாக காலூன்றி விடலாம் என்ற அவரது துல்லியமான எதிர்ப்பார்ப்பு சற்றும் வீண் போகவில்லை.

அவர் நினைத்தபடியே அவருக்கு ‘சீனியராக’ கட்சியில் சேர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த எஸ்.எஸ்.ஆர். போன்ற மற்ற கலைஞர்களை எளிதாக ‘ஓவர்டேக்’ பண்ணி விட்டு, மளமளவென்று உயர்ந்து கட்சியில் நல்ல பெயர் சம்பாதித்தார். அவரது அபார வளர்ச்சி எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

நாடகத்துறையானது அவரது வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. மக்களுடனான நேரடி தொடர்பை வலுப்படுத்த “மேடை நாடகம் என்ற கருவி அவருக்கு ஓர் இணப்புப் பாலமாக அமைந்தது. மேலும் நாடகங்களின் வாயிலாக அவருடைய நடிப்பில் மெருகேறியது. “சதிலீலாவதி”யில் காணப்பட்ட அவரது நடிப்பிற்கும், “நாடோடி மன்ன”னில் காணப்பட்ட அவரது நடிப்பிற்கும் ‘மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்’ புலப்படும்.

பொதுவாக சினிமாத்துறையில் புகுந்து நல்ல முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்தக் கலைஞனும் நாடகத்துறையை  தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்க மாட்டான். ஆனால் எம்.ஜி.ஆரின் குணாதிசயம் அதற்கு நேர்மாறாக இருந்தது. அவர் நாடகத்தில் நடிப்பதை மிகவும் விரும்பினார். சிரத்தையுடனும் தொழில் பக்தியுடனும் அதில் ஈடுபாடு காண்பித்தார்.

ஏராளமான பொருட்செலவில் தனது சொத்துக்களை யாவும் அடமானம் வைத்து “நாடோடி மன்னன்” என்ற படத்தை சொந்தமாக எடுத்தபோதும்கூட, அவர் நாடகக் குழுவை கலைக்கவில்லை; நாடகத்தில் நடிப்பதையும் நிறுத்தவில்லை.

Mirror Image

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய நாடகங்கள் “இன்பக்கனவு”, “அட்வகேட் அமரன்”, “பகைவனின் காதலி”, “சுமைதாங்கி”  ஆகியவை. ரவீந்தர் எழுதிய நாடகங்களிலேயே எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான நாடகம் “இன்பக்கனவு” தான். தமிழகத்து பட்டி தொட்டிகளெங்கும் பரவலாக பேசப்பட்ட பிரசித்தி பெற்ற கலைப்படைப்பு அது.

புஷ்பலதா, ஜி.சகுந்தலா, ஆகியோர் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க எம்.ஜி.ஆர். நாடக மன்றம்தான் நுழைவாயிலாக இருந்தது. கே.ஏ.தங்கவேலு நிறைய நாடகங்களிலும்,”திருப்பிப்பார்” போன்ற  படங்களில் நடித்திருந்த போதிலும்கூட மிகவும் பிரபலமானது எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்தின் வாயிலாகத்தான்,

சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாத காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். தனது நாடக மன்றத்தை துவக்கினார். மாதத்தில் முதல் ஓரிரு நாட்களில் சென்னையிலிருந்து இவர்கள் புறப்பட்டால் ஒவ்வொரு ஊராக நாடகத்தை முடித்துக் கொண்டு திரும்ப இருப்பிடம் வந்து சேர குறைந்த பட்சம் 20 நாட்களாவது பிடிக்கும்.

நாடகத்தில் நடிப்பதற்காக இவர்கள்  பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சகல வேலைகளையும் வலிய வந்து பொறுப்புகளை தலையில் சுமந்துக்கொண்டு எந்நேரமும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தவர் ரவீந்தர்.

“மனிதாபிமானத்தை எனக்கு கற்றுத் தந்ததே நான் வாழ்க்கையில் அனுபவித்த இதுபோன்ற கஷ்டங்கள்தான்” என்று பழைய நினைவுகளை ஒருமுறை ரவீந்தர் பகிர்ந்தார். அதே கருத்தை எம்.ஜி.ஆர், ‘டாக்டர்’ பட்டம் பெற்றபோது, திரையுலகம் அவரது கலையுலகப் பணியை பாராட்டும்  வகையில் விழா ஒன்றை தடபுடலாக ஏற்பாடு செய்தபோது கூறினார். . அவ்விழாவில் அவர் மேடையில் பேசியதை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

“சினிமாவுக்கு முன் நாடகத்தில் நான் பட்ட கஷ்டம், சினிமாவுக்கு வந்த பின் அனுபவித்த கஷ்டம், வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம், காசில்லாததால், ‘கெல்லீஸ்’ முதல் ‘யானை கவுனி’ வரை நடந்து சென்ற அனுபவம் – அந்த துன்பங்கள்தான் இன்று மனிதாபிமானம் என்றால் என்ன என்று உடன்பிறப்புகள் பாராட்டும் நிலையைப் பெற்றுத் தந்தது.”

என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள்  அனுபவப்பூர்வமானது.

ஒரு நாடகம் நடத்த எம்.ஜி.ஆரின் நாடக மன்றம் கிட்டத்தட்ட 8,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தது.  நாடகக் குழுவினரின் உணவு, உடை, இருப்பிடம், கலைஞர்களின் ஊதியம், பயணச் செலவு இவைபோக மிகச்சொற்பமான தொகைதான் மிச்சமாகியது. இருந்தபோதிலும் திரைப்படங்களின் மூலம் கிடைக்க முடியாத ரசிகர்களுடனான நேர்காணல் சந்திப்பு, பரஸ்பர நெருக்கம் போன்றவை எம்.ஜி.ஆருக்கு பொதுஜனத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒப்பனையெல்லாம் அதிகம் இருக்காது. பவுடர் மட்டும் பூசிக் கொள்வார். வெறும் சட்டை பேண்ட்தான். திரைப்படத்தில் வருவதுபோல, நாடகத்தில் கனவுக்காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் என ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே இடம்பெறும்.

கதாநாயகன் எம்.ஜி.ஆர். கனவுக்காட்சிகளில் கலர் கலரான உடைகள் அணிந்துக் கொண்டு வந்து  ரசிகர்களை மகிழ்விப்பார்.  மின்னல் வேகத்தில் திரைக்குப் பின்னால் அவர் போவதும் தெரியாது; வருவதும் தெரியாது. அப்படியொரு துடிப்பான, சுறுசுறுப்பான ஆளுமை பொருந்திய மனிதர் அவர். கண்ணிமைக்கும் நேரத்தில் எப்படி இவர் உடை மாற்றிக் கொண்டு வந்தார் என்று ரசிகர்கள் அப்படியே பிரமித்துப் போவார்கள்.

எல்லா நாடகத்திலும் “Prompter” ஒருவர் இருப்பார். நாடக கதாபத்திரங்கள் வசனம் பேச தாமதிக்கையில் அல்லது தடுமாறுகையில் திறவுச்சொல்லை (Keyword) மேடையின் ஒதுக்குப்புரத்தில் இருந்துக்கொண்டு எடுத்துக் கொடுக்க வேண்டும். நாடகத்தில் ரவீந்தரின் பணியாக இது இருந்தது. மேடையில் கே.ஏ.தங்கவேலு வசனம் மறந்துபோகும் பட்சத்தில் அதிரடியாக, சமயோசிதமாக, நெத்தியடி வசனங்கள் சொந்தமாக பேசிச் சமாளித்து ரசிகர்களை மகிழ்விப்பார். .”டைமிங் ஜோக்ஸ்” அவரைப் போன்று யாரும் உதிர்க்க முடியாது.அப்படியொரு கெட்டிக்காரத்தனம் அவரிடம்  இருந்தது.

நாடகம் இரவு 10.00 மணிக்குத்தான் தொடங்கும். சிலநேரம் நாடகம் தொடங்குவதற்கு 11.00 மணி கூட ஆகிவிடும் நள்ளிரவு 2.00 மணிக்கு முடிவடையும். ஒருசில நேரம் 4.00 மணிவரைகூட நீடிக்கும். அடுத்தநாள் விடியற்காலை எம்,ஜி.ஆர். ஒவ்வொரு இடங்களாகச் சென்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்வார்.

அந்த அளவுக்கு  தன் நடிப்புத் தொழிலையும், கட்சியையும் ஒருசேர அவர் நேசித்தார்.  நாடகம் முடிந்த ம றுநாள் நாடகக்குழுவினர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அடுத்த ஊருக்கு பயணமாவார்கள். வேன்கள் படை சூழ நாடகக் குழுவினர் கூடாரத்தை காலி செய்வார்கள்.  உறங்குவதற்கு மிக மிகக் குறைவான நேரமே கிடைக்கும். நாடகம் வெற்றி பெறுவதற்கு எல்லோருடைய கூட்டுமுயற்சியும், ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது.

யாருமே கையாளாத இன்னொரு மிக அருமையான நுட்பத்தை எம்.ஜி.ஆர். கையாண்டார்.  நாடகம் முடிந்த கையோடு ரசிகர்கள் வீட்டுக்கு கிளம்ப தயாராகுகையில் “இதோ கதையின் நாயகன் எம்.ஜி.ராமச்சந்திரன் உங்கள்முன் மேடையில் தோன்றுவார்” என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியாகும். அதனைத் தொடர்ந்து பலத்த கரகோஷத்திற்கிடையே மேடையில் எம்,ஜி,ஆர். தோன்றுவார்

அவர் சொற்பொழிவு ஒன்றை அமர்க்களமாக நடத்துவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பம்சத்தையும் அதன் கொள்கைகளையும் ரசிகர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்து விளக்குவார். இந்த சொற்பொழிவை ஊருக்கு ஊர் சிறிது மாற்றங்களோடு எழுதித் தருவது ரவீந்தரின் பணிகளில் ஒன்றாக இருந்தது. அறிஞர் அண்ணாவின் புரட்சிகரமான சிந்தனைகளையும் கட்சியின் கொள்கைகளையும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் ரவீந்தர். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

நாடக அரங்கத்தின் மூலம் கட்சிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது ஜனங்களிடையே நன்றாகவே எடுபட்டது. பொதுமக்களின் மனதில் கருத்துக்கள் பசுமரத்தாணியாய் பதிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கலையை சூசகமாக அறிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

திருச்சியில் இடிந்த கோயில்

photo (25) தேர்தல் பிரச்சாரம், போராட்டம் என்று எந்தக் காரியமானாலும் திருச்சியிலிருந்து தொடங்குவதையே ‘ராசி’ அல்லது ‘அதிர்ஷ்டமென’ நினைத்தார்கள் (பகுத்தறிவுவாதிகளான) தி.மு.க.வினர்.

1953-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் மூன்றாம் தேதியிலும், நான்காம் தேதியிலும் முதன்முதலாக எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்தின் நாடகம் திருச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. நாடகத்தின் மூலம் கிடைக்கும் வசூல் அனைத்தையும் அப்படியே “டால்மியாபுரம் போராட்ட  நிதி”க்காக அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அந்த நாடகத்தை வெற்றிபெறச் செய்ய  முழுவீச்சாய் களத்தில் இறங்கி செயல்பட்டனர்.

மந்திரிகுமாரி (1950), சர்வாதிகாரி (1951), மர்மயோகி (1951),  நாம் (1953), ஜெனோவா (1953) , ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற புரட்சி நடிகர் எம்.ஜி,.ராமச்சந்திரன் முதன் முதலாக மேடை ஏறுவதைக் காண்பதற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.   ‘புரட்சி நடிகர் தரும் முதல் காணிக்கை’ என்ற தலைப்போடு சுவரொட்டிகள் திருச்சி மாநகர் வீதிகளை அலங்கரித்தன.

ரவீந்தர் வசனங்கள் எழுத, எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த சரித்திரம் படைத்த அந்த நாடகம் “இடிந்த கோவில்” என்ற பெயரில் அரங்கேற்றமானது. திருச்சி இப்ராஹிம் பார்க் அருகிலிருந்த தேவர் மன்றத்தில் (இப்போது அது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக மாறிவிட்டது) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேவர் மன்றம்

தேவர் மன்றம் என்றதும் எனக்கு அதன் பழைய மகத்துவம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மன்றத்தின் முக்கியத்தைப் பற்றி சொல்லாமல் போனால் இந்த கட்டுரையே முழுமை பெறாது.

இடதுகோடியில் மாநகராட்சி தலைவர் ரத்தினவேலு தேவர்

இடதுகோடியில் மாநகராட்சி தலைவர் ரத்தினவேலு தேவர்

நகரின் மையப் பகுதியில் வீற்றிருந்த தேவர் மன்றம் மிகப்பெரிய சரித்திர பின்னணி கொண்டது, திருச்சி மாநகராட்சியின் சேர்மனாக இருந்த பி,ரத்தினவேலு தேவர் அவர்களின் முயற்சியால் 1926-ஆம் ஆண்டு அது கட்டப்பட்டது. பிறகு அவருடைய பெயரையே அதற்கு வைத்து அவரை சிறப்பித்தது நகராட்சி.

2500 பேர்கள் உட்காரக்கூடிய இருக்கைகள் வசதியோடு, பால்கனியோடு கூடிய பெரிய அரங்கமாக அது திகழ்ந்தது. நாடகத்தில் வீடு, அரண்மணை, நந்தவனம்  போன்ற அரங்கம் வடிவமைக்க ஏற்ற வகையிலான விசாலமான மேடை கொண்டது.

“தீவார்” என்ற புகழ்ப்பெற்ற நாடகத்தை நடத்துவதற்காக இந்தி திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பிருத்திவிராஜ் கபூர் தன் மகன் ராஜ்கபூருடன் பம்பாயிலிருந்து வந்து இதே அரங்கத்தில்தான் நாடகம் நடத்தினார்.

பிரமாண்டமான நாடகம் போடுவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளும் கொண்ட அரங்கமாக அது திகழ்ந்தது.. நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பிரமாண்டமான ரதம் மேடையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்திற்கு நகரும் தத்ரூபமான காட்சிகள் ரசிகர்களை வியப்பிலாழ்த்தும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த அனைத்து நாடகத்திலிருந்து, சிலோன் லைலாவின் ‘ரிகார்டு டான்ஸ்’ முதற்கொண்டு இங்குதான் நடக்கும்.

அறிஞர் அண்ணாவின் “சந்திரோதயம்”, சிவாஜி கணேசனின் “என் விதி”, எம்.ஜி.ஆர் அவர்களின் “இடிந்தகோயில்”, “அட்வகேட் அமரன்”, மு.கருணாநிதியின் “காகிதப்பூ” போன்ற புகழ்ப்பெற்ற எத்தனையோ நாடங்கள் அரங்கேறிய மன்றம் அது.

1950-ல் நாகூரைச் சேர்ந்த புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் இங்குதான் நடந்தது.  நாகூர் ஹனிபா கவிஞராக பாத்திரமேற்று, நடிக்க அறிஞர் அண்ணாவின் தலைமையில் அரங்கேறிய நாடகம் அது. ஆபிதீன் நாடகக்குழுவை திருச்சிக்கு அழைத்துச் சென்று அதற்கான  ஏற்பாடுகளைச் செய்தவர் நாகூரைச் சேர்ந்த எம்.ஜி.கே. மாலுமியார். (இவர் நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்,ஜி,கே,நிஜாமுத்தீனின் தந்தை) . 

“இடிந்த கோயில்” நாடகம் தேவர் மன்றத்தில் நடத்த திட்டமிட்டபோது திருச்சிவாசிகளிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் ஒரு சில படங்களில்  நடித்து பிரபலமாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். முதன் முதலாக மேடையில் தோன்றுகிறார் என்பதால்.

1947-ஆம் ஆண்டு “எம்.ஜி.ராம்சந்தர்” என்ற பெயரில் மக்களுக்கு அறிமுகமான பொன்மனச்செம்மல் தன் பெயரை மாற்றிக்கொண்டு “எம்.ஜி.ராமச்சந்திரன்” என்ற பெயரில் வலம் வந்தார். “ராம்சந்தர்” என்ற பெயர் தமிழ்ப்பெயராக தோன்றவில்லை என்பதால் இருக்கலாம்.

இந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும், ரவீந்தரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்துவைத்த’ டணால்’ தங்கவேலுவும் நடித்திருந்தனர். மேலும் எம்.கே.முஸ்தபா, குண்டுமணி, என்.எஸ்.நாராண பிள்ளை, எஸ்.எம்.திருப்பதிசாமி, சேதுபதி, முத்துக்கூத்தன், ஏ.எஸ்.மணி, என்.எஸ்.நடராஜன்,  ரத்னமாலா, ராஜேஸ்வரி, டி.எஸ்.மரகதம், சுலோசனா, என்று ஒரு பெரிய நடிக-நடிகையர் பட்டாளமே நடித்திருந்தது

இதில் சண்டை கலைஞர்களாக எம்.ஜி.ஆரிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மெய்க்காப்பாளராக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து, போன்ற ஏராளமானோர் நடித்திருந்தார்கள்.

விஸ்வம் சொன்ன கதைக்கருவை மையமாக வைத்து திரைக்கதை வசனத்தை ரவீந்தரே வடிவமைத்திருந்தார். எம்.ஜி.ஆரின். வேண்டுகோளுக்கு இணங்க இந்த நாடகத்தில் அரசியல் நெடி வீசும் வசனங்கள் அதில் இடம்பெறச் செய்தார். எம்.ஜி.ஆர் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாகவே அமைத்துக் கொடுத்தார் ரவீந்தர்.

எம்.ஜி.ஆர். மேடையில் புரியும் அறிமுகத் தோற்றமே பந்தாவாக இருக்கும். விசில் சப்தமும், கைத்தட்டலும் வாழ்த்தொலிகளும், ஆரவாரமும் அரங்கத்தையே அதிர வைக்கும். சிறு வயதில் பிரிந்து சென்ற மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும், பின்னர் மீண்டும் ஒன்று சேருவது தான் கதை.அந்தக் காலத்து “யாதோன் கீ பாராத்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நாடகத்தில் எம்.ஜி.ஆர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் ராஜன்.

என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைக்க, பாடல்களை முத்துக்கூத்தன் மற்றும் லட்சுமணதாஸ் எழுதி இருந்தார்கள். நடனத்தை ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்திருந்தார்.

திருச்சியில் அரங்கேறிய இந்த நாடகம் நல்ல வசூலை ஈட்டித்தந்தது.  பெரிய அளவில் விளம்பரத்தை தேடித்தந்தது. நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 1953-ஆம் ஆண்டு திருச்சியில் ஆரம்பித்த இந்த நாடகம் அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழகத்திலுள்ள அத்தனை நகரங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றது.

நடனம், பாடல்கள், அதிரடி என அனைத்தும் நிறைந்த  ஒரு கலவையாக ஒரு திரைப்படத்தையே பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பொழுதுபோக்கு குறைவாக இருந்த அந்தக் காலத்தில் ஜனரஞ்சகமான இதுபோன்ற நாடகங்களையே எல்லோரும் விரும்பினர்.

இடிந்த கோயில் இன்பக்கனவானது

திருச்சியில் நாடகம் நடந்தேறிய அதே ஆண்டு சுமார் இரண்டு மாதங்கள் கழித்து சேலம் விக்டோரியா அரங்கில் அதே நாடகம் அரங்கேறியது. சேலம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் “இடிந்தக் கோயில்” என்ற பெயரில் அல்ல. “இன்பக்கனவு” என்ற பெயரில். ஏன் இந்த பெயர் மாற்றம்?

drama_notice (1)

“இன்பக்கனவு” சுவரொட்டி

திராவிட பாரம்பரியத்தில் வந்த அதிமுக கட்சியின் தலைவி ஜெயலலிதா நியுமராலஜி, ராசிபலன், நல்ல நேரம், அபசகுனம் யாவும் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டை இப்போது எல்லோரும் வைக்கிறார்கள். திராவிட பாரம்பரியத்தில் தன்னை இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆரும் அபசகுனம், பெயர்ராசி போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“இடிந்த கோயில்” என்ற பெயரே துக்கிரித்தனமாக இருக்கிறது என்று எம்.ஜி.ஆரிடம் யாரோ சொல்ல, நாடகத்தின் பெயரை உடனே மாற்றும்படி ரவீந்தருக்கு உத்தரவிட்டார்.

“பெயரை மாற்றச் சொல்லி எம்.ஜி.ஆருக்கு ஐடியா கொடுத்தது எந்த பிரகஸ்பதி?” என்று எனக்கு நெருக்கமான திரையுலக மூத்த ‘பெருசு’களிடம் தொடர்புகொண்டு வினவியபோது, பெயர் மற்றத்தை அபசகுனமாகக் கருதி ஆலோசனை தந்தது ஆர்.எம்.வீரப்பன்தான் என்று ஒருவரும், “இல்லவேயில்லை அப்பொழுதெல்லாம் ஆர்.எம்,வீரப்பன் எம்.ஜி.ஆரோடு வந்து சேரவேயில்லை” என்று மற்றொருவரும் கூறினார்கள். உண்மை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பெயர்மாற்றத்தில் ரவீந்தருக்கு உடன்பாடு இல்லாத போதிலும் அவருடைய வாதம் அங்கு எடுபடவில்லை. “இன்பக்கனவு” என்ற மாற்றுப்பெயரை ரவீந்தர் சிபாரிசு செய்தபிறகுதான் எம்.ஜி.ஆருக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டது

[அபசகுனமாக கருதப்பட்ட “இடிந்த கோயில்” என்ற பெயர், மங்கலகரமான “இன்பக்கனவு” என்று பெயர்மாற்றம் செய்த பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டு காலொடிந்து போனது என்பது வேறொரு தனிக்கதை]

நாடகத்தில் தனக்கு ஜோடியாக, கதாநாயகியாக,  நடித்துக் கொண்டிருந்த ரத்னமாலாவுக்கு பதிலாக ஜி.சகுந்தலாவை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.  “ரத்னமாலாவை ஏன் மாற்றினார்?” என்பது மற்றொரு சுவையான உபரி கதை. அதை பிறகு பார்க்கலாம். இப்பொழுது கூறினால் கட்டுரையின் தொடர்ச்சி விட்டுப்போகும்.

தில்லையாடி சிவராமன்

“இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தவர் தில்லையாடி சிவராமன் என்பவர். திருவாரூரில் நாடகம் நடத்துவதற்கு அவர் சந்தித்த இடையூறுகளை நாம் படிப்பதற்கு முன்னர் தில்லையாடி சிவராமனைப் பற்றி சிறிது தெரிந்துக் கொள்வது அவசியம்.  யார் இந்த சிவராமன்?

ஒரு சின்ன “பிளாஷ்பபேக்”. ஒருசமயம் லாயிட்ஸ் ரோட்டில் உள்ள முத்து முதலி தெருவில் உள்ள  இல்லத்தில் எம்.ஜி.ஆர். தங்கி இருந்தபோது, எம்.ஜி.ஆர் நாடக மன்றம் நடத்தும் மேடை நாடகங்களில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமனை வரவழைத்து வரச்சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்.ஜி.ஆர்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்ந்த ஆடிப்போகிறார் அவர்.

அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்.ஜி.ஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது  அவர் அங்கு இல்லை. நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.

‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.

தஞ்சையில் இன்பக்கனவு நாடகம்

இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார், “இன்பக்கனவு”  நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.

எம்.ஜி.ஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்.ஜி.ஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் நாடகத்தை இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.

தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.

நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்.ஜி.ஆர் எப்படி இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார். தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும் என்று நினைத்திருந்த எம்.ஜி.ஆர். இதனை ஒரு தகுந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

திருவாரூரில் இன்பக்கனவு நாடகம்

திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, “தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம்” என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன்.

பொறையார் பார்த்தசாரதி உரிமையாளராக இருந்த சக்தி விலாஸ் பஸ் கம்பெனிக்கு சொந்தமாக கிட்டத்தட்ட 150 பேருந்துவண்டிகள் தஞ்சை மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்தன. பொறையார், காரைக்கால், நன்னிலம் மாயவரம், சீர்காழி, சிதம்பரம். நாகூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து திருவாரூருக்கு வந்துச் செல்லும் அத்தனை சக்தி விலாஸ் பேருந்துகளிலும் “இன்பக் கனவு” நாடகத்தின் சுவரொட்டிகளை அமர்க்களமாக விளம்பரப்படுத்தியிருந்தார் தில்லையாடி சிவராமன்.

தில்லையாடி சிவராமன் ஒருநாள் கருணாநிதியை கருணை ஜமாலின் அச்சகத்தில் வைத்து சந்திக்கிறார். இளமைக் காலமுதலே கருணாநிதியுடன் நெருக்கமாகப் பழகியவர் கருணை ஜமால்.  அவர் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்துவைக்க காரணமாக இருந்தவர் இந்த கருணை ஜமால்தான். இருவர்களுக்குமிடையே இருந்த நெருக்கத்தை ஏற்கனவே எனது வேறொரு கட்டுரையில் வரைந்திருக்கிறேன். இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளாமல் திரும்பி போனார் என்ற செய்தி அவர்களுக்குள் இருந்த பரஸ்பர நெருக்கத்தைச் சான்று பகரும்.

கருணை ஜமாலின் அச்சகமே கதியென்று கிடந்த கருணாநிதியை தில்லையாடி சிவராமன் சந்தித்தபோது அவருக்கு ஒரு புத்திமதி கூறுகிறார். “இந்த ஊரைப்பற்றி உனக்குத் தெரியாது. நீயோ தஞ்சாவூர்க்காரன், நாடகம் போடுற உன்னை இந்த ஊர்க்காரங்க லாபத்தோடு அனுப்புவார்கள் என்று கனவு காணாதே!” என்று அறிவுரை கூறுகிறார்.

கருணாநிதியின் வார்த்தைகள் அவருடைய வயிற்றில் புளியைக் கரைக்கிறது. உற்சாகத்தை குறைக்கிறது. என்றாலும் தில்லையாடி சிவராமன் மனம் தளரவில்லை. கருணாநிதி நல்ல எண்ணத்தினால்தான் கூறினாரா அல்லது கட்சியில் மளமளவென்று வளர்ந்துவரும் எம்.ஜி.ஆரின் மேலிருந்த காழ்ப்புணர்ச்சியால் கூறினாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இங்குமங்கும் ஓடி அலைந்து கடன் வாங்கியும், கையில் இருந்த காசுகளை முதலாக போட்டும் விளம்பரத்திற்கான செலவையும், அரங்கம் மற்றும் இதர ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்து முடித்திருந்தார் தில்லையாடி சிவராமன். அவர் சர்மா பங்களாவில் எம்.ஜி.ஆரைத் தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தார். புளிச்சகுடி கருணாநிதி என்ற அடாவடிப்பேர்வழி தன் அடியாட்களுடன் அங்கு வந்து கலாட்டா செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற செய்தி தில்லையாடி சிவராமனின் காதுகளுக்கு எட்டுகிறது.

உடனே பழக்கடை ராஜன் வீட்டில் எம்.ஜி.ஆரை தங்க வைப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறார். நிலைமையை தஞ்சை டி.எஸ்.பி.குழந்தைவேலுவுக்கு புரிய வைத்து, அவரும் இவருக்கு முழுஒத்துழைப்பு தந்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் எம்.ஜி.ஆருக்கு போதிய பாதுகாப்பு வழங்குகிறார். அதிகாலை பிளைமவுத் சொகுசுக் காரில் வந்திறங்கிய எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு நடந்த விஷயம் எதுவுமே எட்டாதபடி பார்த்துக் கொண்டனர் நாடகத்தை  ஏற்பாடு செய்தவர்கள். நாடகம் முடிந்து எம்.ஜி.ஆரை. பத்திரமாக ஏற்றி விட்டபிறகுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார் தில்லையாடி.

சீர்காழியில் இன்பக்கனவு நாடகம்

1953 – ஆம் ஆண்டு அரங்கேறிய “இடிந்த கோயில்” நாடகம் “இன்பக்கனவாக” பெயர் மாறி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சக்கை போடு போட்டு அனைத்து ஊர்களிலும் அரங்கம் நிரம்பி வழிகிறது. நாடகத்திற்கான வரவேற்பு சற்றும் குறைந்தபாடில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

1958 – ஆம் ஆண்டு  சீர்காழியில் “இன்பக்கனவு” நாடகம் அரங்கேற தடபுடலாக ஏற்பாடுகள்  நடக்கிறது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மனங்கவர்ந்த நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்தார்.

முன்னணி அந்தஸ்த்தை எட்டியிருந்தபோதிலும் படபிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவுடன் புறப்பட்டு அவ்வப்போது மேடைகளில் தன் நடிப்பு முத்திரையை பதித்து வந்தார். மாபெரும் வெற்றிப்படமான ‘நாடோடி மன்னன்‘ வெளிவந்து வசூலைக் குவித்துக் கொண்டிருந்த நேரமது.

சீர்காழியில் பிடாரி வடக்கு வீதி பின்புறம் அமைந்திருந்த “சாமி மேடை”யில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியிருந்தது. இந்த மேடையில்தான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட அந்த நிகழ்வினை நினைவு கூறுகிறார் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி சிவ சிதம்பரம் :

“அந்தக் காலத்தில் சீர்காழியில் ஐந்து திரையரங்குகள் இருந்தன. இப்போதுபோல சேர், பெஞ்ச் எல்லாம் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட ஈஸி சேர்கள் கொண்ட திரையரங்குகள் அவை. திரையரங்குகள் இருந்தபோதும் நாடகங்களும் கச்சேரிகளும் வளர்ந்துதான் வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்பக் கனவு” நாடகம் இங்குதான் அரங்கேறியது.”

என்று பழைய நினைவுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “இன்பக்கனவு” நாடகம்  அமர்க்களமாகத் தொடங்குகிறது. இந்த நாடகத்தில் ரத்னமாலாவுக்கு பதிலாக கதாநாயகியாக அபிநயித்தவர்  ஜி.சகுந்தலா.

பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் வரும் ஜி.சகுந்தலாவை குண்டுமணியும், புத்தூர் நடராஜனும் – சினிமா பாணியில் – பலாத்காரம் செய்வதுபோல்  ஒரு காட்சி, அழுக்கான ஆடை அணிந்து மண்டபத்தின் ஒதுக்குப்புரத்தில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு ஜி.சகுந்தலாவின் அபயக்குரல் கேட்கிறது. அட்டகாசமாக பாய்ந்து வரும் எம்.ஜி.ஆர், குண்டர்களை அடித்து வீழ்த்தி சண்டையிட வேண்டும். இது தான் காட்சியமைப்பு.

கதைப்படி எம்.ஜி.ஆரின் முதல் “என்ட்ரி”யும் இப்போதுதான். எம்.ஜி.ஆர். அதிரடியாக காட்சியினுள் நுழைந்ததுமே வழக்கம்போல் கரகோஷம் விண்ணை முட்டுகிறது. ரசிகர்களின் ஆரவாரமும், கைத்தட்டல்களும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதலாவதாக புத்தூர் நடராஜனை குனிந்து தனது இரு தோள்களிலும் அப்படியே தூக்கி கீழே விழச் செய்கிறார்.

G1

 

அடுத்து குண்டுமணி எம்.ஜி.ஆரை அடிப்பதற்கு பாய்ந்து வருவார். தனது வலதுபுற தோளில் அவரை அலக்காகத் தூக்கி விழச் செய்யுமாறு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையின்போது சரியாக விழுந்தார் குண்டுமணி. ஆனால் சம்பவத்தன்று அவர் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தார்.

பெயருக்கு ஏற்றார்போல் மிகப் பருமனான நபர் இந்த குண்டுமணி. 250 பவுண்டு எடையுடன் கூடிய ஆஜானுபாகுவான தோற்றம். எம்.ஜி.ஆரின் எடையோ வெறும் 70 கிலோதான்.  உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு அது ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. எத்தனையோ முறை சர்வசாதரணமாக தூக்கி அரங்கில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

அன்று அவருடைய போதாத நேரம். எம்.ஜி.ஆரின் கால் இடறி,  நிலைதடுமாறி அவரது கைகளிலிருந்து வழுக்கி விழுந்த குண்டுமணி நேராக அவருடைய கால் மீதே விழுந்து விடுகிறார். எம்.ஜி.ஆரால் எழக்கூட முடியவில்லை. “களுக்” என்ற சப்தத்துடன் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் துடிதுடித்துப் போகிறார்.

அடுத்து சண்டைக்காட்சியில் வரவிருந்த எம். ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து  உட்பட அத்தனை பேரும்  அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். பதறிப்போன  குண்டுமணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.  குண்டுமணி இன்னும் சுதாரிப்புக்கு வரவில்லை.

நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர்.  சீன் முத்துவிடம் சைகை காண்பித்து திரைச்சீலையை கீழே இறக்கும்படி உத்தரவிடுகிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “என்னாச்சு? ஏதாச்சு?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது என்ற செய்தி தீப்பொறியாய் பரவியவுடன் ரசிகர்களுடைய ஓலமும் ஒப்பாரிச் சத்தமும் நாலாபுரமும் ஒலிக்கிறது. அரங்கமே களேபரம் ஆகி பீதி நிலவுகிறது.

திரைக்குப்பின்னால்,  உணர்ச்சிவசப்பட்டு குண்டுமணியும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழத் தொடங்கி விடுகிறார். “என்னால்தானே உங்களுக்கு இப்படி ஏற்பட்டது” என்று புலம்புகிறார். எம்.ஜி.ஆரோ அலட்சியமாக  குண்டுமணியின் தோளில் தட்டிக் கொடுத்து “என்ன இது, சின்ன குழந்தைபோல் அழுகிறாய்?. எனக்கு ஒன்றுமேஆகவில்லை” என்று சமாதானம் கூறுகிறார்.

அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் குண்டுமணியை வசைபாடி தீர்க்கின்றனர். நாடகம் பார்க்க வந்த கூட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி கிடைக்க  எம்.ஜி.ஆருக்கு முதலுதவி சிகிச்சை புரிய அவசர அவசரமாக அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார். தற்காலிகமாக அவரது காலில் கட்டு போடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக உடனே சென்னைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. .

“எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆரின் காலில் சிறிய காயம் ஏற்பட்டு விட்டது. யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தயவு செய்து கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும் ரசிகர்களின் கூக்குரல்கள் அடங்கியபாடில்லை,. அவர்கள் கலைந்துச் செல்வதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

இப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்கிறார் எம்.ஜி.ஆர். திரைச்சீலையை உயர்த்துமாறு சீன்முத்துவுக்கு கட்டளை இடுகிறார். நாலைந்து பேர்கள் அவரை சாய்வாகப் பிடித்துக் கொள்கிறார்கள். கால் எலும்பு முறிந்து வலியால் துடித்க்கின்ற  போதும் உட்கார்ந்தவாறே மைக்கைப் பிடித்துக் கொண்டு உரையாற்ற ஆரம்பித்து விடுகிறார்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, காலில் சிறிய காயம் அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம், மீண்டும் இதே சீர்காழி மண்ணில் திரும்ப வந்து நாடகம் நடத்துவேன்” என்று உறுதி கூறிவிட்டு மக்களைத் தேற்றுகிறார்.  கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பேசிய பிறகுதான் ரசிகர்கள் ஓரளவு சமாதானம் அடைகின்றனர்.

photo (22) இதுபோன்ற இக்கட்டான நேரத்திலும் எம்.ஜி.ஆர் காட்டிய  பெருந்தன்மையைக் கண்டு  கூடியிருந்த ரசிகர்கள் மெய்ச்சிலிர்ந்து போகின்றனர்.  வேன் அரங்கத்திலிருந்து வெளியாகிறது.  இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று தங்கள் மனங்கவர் நாயகனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர்.

எம்.ஜி.ஆரை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னரே  அவரது குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சென்னை வந்துச் சேர்ந்ததும் எலும்புமுறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற  பிரபல டாக்டர் நடராஜனும் அங்கு  தயாராகக் காத்திருக்கிறார்.

கால்முறிந்த நிலையில் எம்.ஜி.ஆரின் கோலத்தைக் கண்ட  அவரது மனைவியர் சதானந்தவதியும், ஜானகி அம்மையாரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து  அழத் தொடங்கி விடுகின்றனர். அவர்களை தேற்றுவது எம்.ஜி.ஆருக்கு பெரும்பாடாகி விடுகிறது.

தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்திலும் கூட எம்.ஜி.ஆர். சென்னைக்கு தன் வீடு சென்று சேருவதற்கு முன்பாகவே விபத்துச் செய்தி தீப்பொறியாகப் பரவ, அவரது இல்லத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது.

சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்துப் போகிறார்.   “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் செல்கிறார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள “ராமாராவ் நர்சிங் ஹோமில்” எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உடனடியாக ஊடுகதிர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.  கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை  விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி எல்லோருக்கு சற்று மனஆறுதல் தருகிறது. தகுந்த சிகிச்சை மற்றும் “பிஸியோதெரபி” சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.

சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்ற மருத்தவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி காலில் கட்டு போடப்பட்டிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து கதறிக்கதறி அழுகிறார். அவரை எம்.ஜி.ஆரே சமாதானப்படுத்துகிறார். “எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுகிறீர்களே!” என்று அவரை தேற்றுகிறார்.

இந்த அளவிற்கு பலமான எலும்பு முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால்  இந்நேரம் கதறித் துடித்து இருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தனது வேதனை மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாதென்று மிகச் சாதாரணமாக நடந்து கொண்டார்.

சுமார் 1 மாத காலம் எம்.ஜி.ஆர் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பிறகு லாயிட்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில்  சுமார் 5 மாதம் ஓய்வெடுக்கிறார்.

சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் அதுதான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. “வெறும் வாய்க்கு மெள்ள அவல் கிடத்ததைப்போல” எம்.ஜி.ராமச்சந்திரனின் கலைவாழ்வு சகாப்தம் இத்தோடு முடிந்து விட்டது என்ற ரீதியில் பத்திரிக்கைகள் முகாரி ராகம் பாடுகின்றன.

“நாடோடிமன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கண் திருஷ்டியை[ப்போல இந்த சம்பவம் அமைந்து விட்டது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்   கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவுகிறது.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்:

 “எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னைவிடவும் அதிக வலிமையோடு காட்சி தந்தார்.  நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!

அது மட்டுமின்றி கால்கள் மேலும் வலுபெற தனது ராமாவரம் தோட்டத்தில் நீச்சல் குளம் ஒன்றை அமைத்து கால்களுக்கு பலம் சேர்த்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட இந்த பலத்த கால் முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இவ்வளவு விரைவில் குணமடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு தனது உடல் நலத்தில் அக்கறை காட்டினார்

தன்னைக் காண வரும் ஒரு சிலர் அவரது காயத்திற்கு அனுதாபம் ஏற்படும் வகையில் பேசினாலும், “இப்படியெல்லாம் பேசி என்னை நோயாளியாக்கி விடாதீர்கள் எனக்கு ஒன்றுமே இல்லை” என்று அன்பு வேண்டுகோள் விடுப்பார்.

இதற்கு காரணம் எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மிகுந்த மனோதைரியத்துடன் எம்.ஜி.ஆர் இருந்ததே ஆகும். நோய்களின் விரைவான நலத்திற்கு மருத்துவ சிகிச்சை ஒருபுறம் இருப்பினும், அதைவிட முக்கியம் நமது மன உறுதியே என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மீது தில்லையாடி சிவராமன் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை முன்பே பார்த்தோம். சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ் மூலம் ‘அட்ஜஸ்டபல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து ஒரு ஆள் மூலம் அனுப்பி வைக்கிறார். பிற்பாடுதான்தான் யார் இதனை அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது.

– நாகூர் அப்துல் கையூம்

பின்குறிப்பு:

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டவுடன் முதலுதவி செய்வதற்காக ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் மேடைக்கு அழைக்கப்பட்டதாக மேலே குறிப்பிட்டிருந்தேன். அவர் பெயர் டாக்டர் சம்பந்தம் பிள்ளை. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தேர் மேலவீதியில் இருந்த கொஞ்சம் பெரிய சைஸ் ஓட்டு வீடுதான் அவருடைய கிளினிக். .அவரது கிளினிக்கில் வைத்து எம்.ஜி.ஆருக்கு தீவிர முதலுதவி சிகிச்சை மேற்கொண்டபின்தான் சென்னைக்கு எம்.ஜி.ஆர். காரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு முதலுதவி தந்த காரணத்தினாலேயே அந்த டாக்டர் ஊரில் பிரபலமடைந்து இருக்கிறார். ‘குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்’ என்று இதற்காகத்தான் சொல்கிறார்கள் போலும். தங்களின் மனங்கவர்ந்த நாயகன் சிகிச்சை பெற்ற அந்த புண்ணியஸ்தலத்தைக் (?)  காண தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் அவரது பக்தகோடிகள் வந்து தரிசித்துவிட்டுப் போவது வாடிக்கையான நிகழ்வாக  இருக்கிறதாம். தனக்கு உதவி செய்பவர்களுக்கு பரிகாரமாக ஏதாவதொன்றைச திரும்பச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த உயர்ந்த உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். பிற்பாடு டாக்டர் சம்பந்த பிள்ளையின் புதல்வருக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு இடம் வாங்கித் தந்தார் என்ற செய்தி மனதுக்கு நிறைவாக இருக்கிறது. –தகவல் உதவி: சீர்காழி கவிஞர் தாஜ் .

 

 – தொடரும் 

 

Tags: , ,

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)


 நாகூர் ரவீந்தர்

1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான  “குலேபகவாலி” வெளிவந்தது.  அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில்   ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது.  அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது.  கதை-வசனம்  கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்”  படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும்  “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.

1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று  காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.

1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்”  படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை  எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.

1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.

1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்”  படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும்  டைட்டிலில் காண்பிக்கப்படும்.

அதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன.  எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.

1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில்  கதை-வசனம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள்.  ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.

1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை  ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா?

இதில் பெரும்பான்மையான  படங்களுக்கு வசனம் மாத்திரம் அல்ல மூலக்கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துக் கொடுத்ததும் இந்த வாயில்லா பூச்சிதான்.

எழுதியது இவர். ஆனால் பேரையும் புகழையும் குவித்ததோ வேறொருவர். என்ன இது அநியாயமாக இருக்கிறது என்கிறீர்களா?  சந்தேகமேயின்றி இது பெரிய அநியாயமேதான். This is just a tip of the iceberg. இப்படி வெளிவராத உண்மைகள் எத்தனை எத்தனையோ..!!

‘காத்திருந்தவன் பொண்டாடியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப்போன கதை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதுதான்  இது.

‘முழுபூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது’  போன்று அவரது புகழை வெளியுலகத்திற்கு தெரியாதவாறு மறைத்தார்கள்’. கேட்டால் ‘சினிமா உலகில் இதெல்லாம் சகஜமப்பா’ என்பார்கள். மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பது வேறொருவன் என்ற கதை.

 படைப்பாளிகளை செதுக்கிய நாகூர்

இந்த காஜா மொய்தீன்தான் ரவீந்தர் என்ற புனைப்பெயரில் திரைப்பட உலகில் மகத்தான புரட்சி செய்தவர். அமைதியே உருவாக நின்று, கலைத்துறையில் அரிய பல சாதனைகள் புரிந்தவர். எந்தக் காலத்திலும் புகழுக்கு ஆசைப்படாத மனிதரிவர். தானுண்டு தன் பணியுண்டு என்ற சுபாவம்.  “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற்றவர். வேறொரு கோணத்தில் இவரை விமர்சிக்க வேண்டுமென்றால் “பிழைக்கத் தெரியாதவர்” என்று நாம் பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.

அல்வாவுக்கு பிரசித்தப்பெற்ற ஊர் நாகூர். நாகூர்க்காரரான இவருக்கு அல்வாவை அள்ளி அள்ளித் தந்தார்கள் சினிமாக்காரரர்கள். ‘குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டினால் போதும்’ என்ற வித்தையை இவருக்கு கற்றுத் தந்தது சினிமா உலகம். “வாங்குகிற சம்பளத்துக்கு வக்கனையாக வேலை பார்த்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற பாடத்தை இவருக்கு போதித்தார்கள்.

நாகூரிலிருந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்க இரண்டு சூறாவளிகள் புறப்பட்டன. ஒன்று காஜா மொய்தீன் என்கிற “ரவீந்தர்”, மற்றொன்று  அக்பர் என்கிற “தூயவன்”.  (தூயவனைப் பற்றி பிற்பாடு விவரமான பதிவுகள் எழுத நினைக்கிறேன் – இன்ஷாஅல்லாஹ்)

நாகூர் தேசிய உயர்நிலை பள்ளி   –  இது எத்தனையோ படைப்பாளிகளை உருவாக்கிய கலாகேந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிக்கூடம் அதே தோற்றத்தில்தான்  இருக்கிறதே தவிர பலபேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பள்ளி இது. நாகூரில் பிறந்த பெரும்பாலான பிரபலங்கள் இங்குதான் தங்களை செதுக்கிக் கொண்டார்கள். காஜா மொய்தீனுக்கு சிறுவயது முதலே எழுத்தாளன் ஆக வேண்டுமென்ற ஒரு பேரார்வம் மனதுக்குள் பொதிந்திருந்தது. அவருக்கு படிப்பில் இருந்த நாட்டத்தை விட கதை கட்டுரை, நாடகம் இதுபோன்ற இலக்கியத்துறையில்தான் ஆர்வம் மேலிட்டிருந்தது.

இன்பத்தமிழ் மணம் கமழும் இவ்வூரில் சுனாமி அலைகளைப்போன்று எளிதில் இளைஞர்கள் இலக்கியத் தாக்கத்திற்கு ஆளாகி விடுவார்கள் . ஏனெனில். இயல், இசை, நாடகம் இவை மூன்றும் பின்னிப் பிணைந்த ஊர் இது. ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அன்பர்கள் ஆர்வத்தோடு முன்வருவார்கள்.

1947-ஆம் ஆண்டு நாகூரில் இருந்துக்கொண்டே `பூ ஒளி` என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை நடத்துகிறார் ரவீந்தர்.  அவருடைய வீட்டில்  இதற்கு கடும் எதிர்ப்பு இருந்த போதிலும் நண்பர்கள் அவரை  மென்மேலும் ஊக்குவிக்கின்றனர். “இது தேவையில்லாத வேலை. உருப்படுவதற்குள்ள வேலயைப் பார்” என்று வீட்டார் அறிவுறுத்துகிறார்கள். அவருடைய எழுத்தாற்றலுக்கு நண்பர்களிடம் கிடைத்த பாராட்டுக்களில் திக்குமுக்காடிப் போன அவர் வாழ்க்கையில் ஏதெனும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு தள்ளப்படுகிறார். எழுத்தார்வத்தால் தடைபட்டுப்போன தனது பள்ளிப்படிப்பை முடிக்க பிற்பாடு விடாமுயற்சியால் லண்டன் மெட்ரிக் பரிட்சை எழுதி தேர்ச்சியும் பெறுகிறார்.

“சமீபத்தில் நாடோடி மன்னன் படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை” என்று மனம் புழுங்குகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நாடறிந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கே இந்த ஆச்சரியமென்றால் சராசரி பாமர மனிதன் ரவீந்தரை எங்கே தெரிந்து வைத்திருக்கப் போகிறான்?

“சொர்ணம்”, போன்றவர்களை அறிந்து வைத்திருக்கின்ற சினிமா ஆர்வலர்கள் ரவீந்தர் பெயரை அறிந்து வைத்திருக்கவில்லை, அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்கத்தின் பிரபலங்களுக்கு தனியொரு முக்கியத்துவம் இருந்தது. மற்றவர்களுக்கு எத்தனை திறமை இருந்த போதிலும் அவர்களை இருட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடைய படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் கிட்டத்தட்ட 11 பேர் கதை-வசனம் எழுதினார்கள். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம் ,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் முதலானோர். இவர்களுடைய பெயர்கள் பெரிதாக சுவரொட்டிகளிலும் பத்திரிக்கை விளம்பரங்களிலும் அலங்கரிக்கும். இந்த அதிர்ஷ்டம் ரவீந்தர் போன்ற படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை.

என் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு நண்பரிடம்  “திரைப்படத்துறையில் ரவீந்தர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டுப்பார்த்தேன்.  “இதுகூடத் தெரியாதா.. என்ன? ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தாரே!” என்று ஒரு போடு போட்டார். நான் நொந்தே போனேன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சினிமா ஊடகங்கள் அவரை நினைத்தும் பார்க்கவில்லை. நினைவிலும் வைக்கவில்லை. அவர் மறைந்தபோதும் கூட ஊடகங்கள் அவரைக் கண்டுக்கொள்ளவில்லை.

பாடுபட்டு எழுதுவது ஒருவர். பெயரையும் புகழையும் தட்டிப் பறித்துக் கொண்டு போவது வேறொருவர். யார் இந்த கொடுமையை  தட்டிக் கேட்பது? தயாரிப்பாளர்கள் தங்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற Publicity Gimmicks கையாண்ட வண்ணம் இருந்தார்கள்.  பிரபலமானவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில் இருந்தால் மட்டுமே படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்ற எண்ணம் சினிமாக்காரர்களிடம் நிலை கொண்டிருந்தது. அதிகாரத்திற்கு முன்பு கலைத்திறமை கைகட்டி வேடிக்கை பார்த்தது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

முப்பத்திரண்டு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியவர் இந்த எழுத்துலக வேந்தர். ஆனால் இவர் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது சில படங்களுக்கு மாத்திரமே. பணத்தையும் பொருளையும் கொள்ளையடிப்பதை விட மிகக் கொடுமையானது பிறரின் திறமையை சூறையாடி அதில் ஆதாயம் தேடுவது. ரவீந்தர் இந்த சூழ்ச்சியில் பலிகடா ஆனது வருந்தத்தக்கது.

இப்பொழுதுதான் கதை வசனகர்த்தாவுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் அன்றிருந்த சூழ்நிலை வேறு.  அக்காலத்தில்  வசனகர்த்தாக்களுக்கு இருந்த மரியாதையே தனி. படம் பார்க்க விழைபவர்கள் முதலில் வசனம் எழுதியது யார் என்றுதான் பார்ப்பார்கள்.. கதாநாயகனின் பெயரை டைட்டிலில் காண்பிப்பதற்கு முன்பாகவே மூலக்கதை அல்லது கதை-வசனம் எழுதியவரின் பெயரை பெரிய எழுத்தில் காண்பிப்பார்கள். வசனகர்த்தாக்களாக வந்து முதலமைச்சர் ஆனவர்களைப் பற்றி நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

கலைஞரின் பராசக்தி வசனம் காலத்தால் அழியாத ஒன்று.  அதில் இடம்பெற்ற வசனத்திற்காகவே படம் வெற்றிகரமாக ஓடியது. அறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் மிளிர்ந்த  “வேலைக்காரி”, மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, “சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு” எமறு சொன்ன வசனம் நிலைபெற்று விட்டது.

ரவீந்தருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது? அது ஒரு பெரிய கதை

டணால் தங்கவேலுவும் ரவீந்தரும்.

எம்.கே. ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாரின்  மதுரை  ட்ராமாட்டிக் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ‘பதி பக்தி’போன்ற நாடகத்தில் 1935-ஆம் ஆண்டு முதலே எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். , என்.எஸ். கிருஷ்ணன், , எம்.ஜி.சக்ரபாணி, வீர்ராகவன் இவர்களோடு ஒன்றாக இணைந்து நடித்து வந்தவர் கே.ஏ.தங்கவேலு.

கலைஞர் கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரிடம் அறிமுகம் செய்த கா.மு.ஷெரீப்பை போன்று, எம்.ஜி.ஆரிடம் காஜா மொய்தீனை அறிமுகம் செய்து, அவருடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் சிரிப்பு நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு.  இது நடந்தது 1952 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்.

நாகூர் காஜா மொய்தீனுக்கு நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனை ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் எதார்த்தமாக சொல்லப்போக “ரவீந்தர்” என்ற அந்த பெயரையே அவருக்கு சூட்டி விட்டார். இந்த புனைப்பெயரே அவருக்கு இறுதிவரை நிலைத்தும் விட்டது. ரவீந்தருக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட அறிமுகம் ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.

டணால்’ தங்கவேலுவின் சொந்த ஊர்  நாகூரை அடுத்த திருமலைராயன்பட்டினம். தங்கவேலுவுக்கும் ரவீந்தருக்குமிடையே நாடக ரீதியாகத்தான் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவர்களுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது,

டணால் கே.ஏ.தங்கவேலு சினிமா உலகில் நுழைந்து சிரிப்பு நடிகராக முத்திரை பதித்த நேரம் அது. “சிங்காரி”, “அமரகவி”, “கலியுகம்” , “பணம்” , “அன்பு” , “திரும்பிப்பார்”  போன்ற படங்களில் நடித்து பிரபல்யமாகியிருந்தார், “சிங்காரி” படத்தில் ‘டணால்’ ‘டணால்’ என்று கூறி நடித்ததினால் இவர் பெயர் ‘டணால் தங்கவேலு’ என்ற பெயர் ஏற்பட்டது.  சொந்த நாடகக்குழுவொன்றை ஏற்படுத்தி “மனைவியின் மாங்கல்யம்”, “விமலா”, “பம்பாய் மெயில்”, “லட்சுமிகாந்தன்” உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

ரவீந்தரின் திறமை எடுத்த எடுப்பிலேயே புரிந்துக் கொண்ட தங்கவேலு அவரை பயன் படுத்திக் கொண்டார். தன்னுடய நாடகத்திற்கு கதை-வசனம் எழுதும் பொறுப்பை அவருக்களித்தார். ரவீந்தரும் தன் பங்கைச் சரியாக செய்தார்..

தங்கவேலுவும்,  ‘நாம் இருவர்  படத்தின் மூலம் புகழ்ப்பெற்ற  சி.ஆர்..ஜெயலட்சுமியும்  இணைந்து  நடிக்க “மானேஜர்” என்ற மேடை நாடகம் அரங்கேறியது. கதை வசனம் யாவற்றிற்கும் ரவீந்தரே பொறுப்பேற்றிருந்தார்.  நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரவீந்தரின் எழுத்தாற்றலில் மனதைப் பறிகொடுத்திருந்த தங்கவேலு அவரது திறமைக்கு தீனி போடும் வகையில் “உன்னை கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தில் நான் போய்ச் சேர்த்து விடுகிறேன்” என்று உறுதிபூண்டு எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்று அவரை அறிமுகம் செய்தார்.

ரவீந்தருக்கு எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் கிடைத்தது இப்படித்தான்.

எம்.ஜி.ஆர். சினிமாத் துறையில் பெரிய அளவில் பிரபலமாகாத காலமது. அவர் தன்னை கலைத்துறையில் நிலைநாட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்த நேரம். சொந்தமாக நாடகக் குழு அமைத்து நாடகங்கள் போட திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ‘கும்பிடப்போன தெயவம் குறுக்கே வந்தது போல’ ரவீந்தரின் எழுத்துத்திறமையை தங்கவேலு மூலம் தெரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர். பூரித்துப் போனார். ரவீந்தரை முறையாக பயன்படுத்தி கொண்டார்.

இவர் எம்.ஜி.ஆரோடு இணைந்த பிறகுதான் “எம்.ஜி.ஆர். நாடக மன்ற”மே உருவாகியது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்கு பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் வந்துச் சேர்ந்தார். ரவீந்தரை முன்னுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டதில் ஆர்.எம்.வீரப்பனுக்கு கணிசமான பங்கு உண்டு.  எம்.ஜி.ஆரிடம் தன்னைத் தவிர வேறு யாரும் நெருக்கமாகி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். ரவீந்தரின் தலையில் யாரெல்லாம் மிளகாய் அரைத்தார்கள்; யாரெல்லாம் அவர் மீது குதிரைச் சவாரி செய்தார்கள்; அவரை எப்படி ஒப்புக்குச் சப்பாணியாக சேர்த்துக் கொண்டார்கள்;  எப்படியெல்லாம் அவர் ஓரம் கட்டப் பட்டார்;  என்பதை நாம் பின்னர் தெரிந்துக் கொள்ளலாம்.

பஞ்ச் டயலாக்

இப்போது வெளிவரும் படங்கள் அது ரஜினி படம் அல்லது  விஜய் படம் எதுவுமே ஆனாலும் அதில்  அதிரடி வசனங்கள் இருக்கவேண்டுமென ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். சண்டைக்காட்சிகள் இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் ஹீரோக்களின் படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது.

இந்த பஞ்ச் டயலாக் Trend-யை சினிமாவுக்கு கொண்டு வந்த வசனகர்த்தாக்களில் ரவீந்தர் முன்னோடி வரிசையில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்து ரசிகர்களிடயே பெருத்த வரவேற்பை பெற்றவர்  பி.எஸ்.வீரப்பா. இப்போதுகூட யாராவது அட்டகாசமாகச் சிரித்தால் பி.எஸ்.வீரப்பாவின் நினைவுதான் சட்டென்று எல்லோருக்கும் வரும். ஒரு குரூரச் சிரிப்பைக்கூட ரசனையாக மாற்றியவர் அவர். காமெடிச் சிரிப்பால் வேண்டுமானால் குமரிமுத்து நம்மை கவர்ந்திருக்கலாம். அப்படியொரு வில்லத்தனமான சிரிப்பால் பி.எஸ்.வீரப்பாவிற்குப் பிறகுஎந்தவொரு வில்லனும் இதுவரை நம் மனதில் முத்திரை பதிக்கவில்லை,

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசிய அந்த ஒரு வசனம் இன்றுவரை பரபரப்பாக பேசப்படுகிறது.  “சபாஷ்.. சரியான போட்டி” என்ற அவரது கணீர்க் குரல், ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலுக்கிடையே ஒலிக்கும். இப்படம் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம். ஆதலால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால், “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படம்  வெளிவருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே 1957-ஆம் வருடம்  “மகாதேவி” படம் வெளிவந்தது. மகாதேவியாக சாவித்திரியும், கதாநாயகனாக எம்.ஜி.ஆரும் நடித்திருப்பார்கள்.  பி.எஸ்.வீரப்பா அட்டகாச தொனியில் பேசிய “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்ற வசனம் திரைப்பட உலகில் ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணியது.  படம் வந்த புதிதில் எல்லோருடைய உதடுகளிலும் இந்த வசனம்தான் முணுமுணுக்கப்பட்டது. இன்றளவும் இது காலத்தால் அழியாத வசனமாக திரைப்பட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது.

குறிப்பாக, காதல் வயப்பட்டு காதலியை கைப்பிடிக்க நினைக்கும் அத்தனை வாலிபர்களுக்கும் இந்த வசனம்தான் கைகொடுக்கும். பெரும்பாலோரின் தாரகமந்திரம். காதலர்களின் தேசிய கீதம். இப்படத்தில் இடம்பெறும் “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை ” என்ற வசனமும் மிகவும் பிரபலம் ஆனது.

 “மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு” , 

“ஆணியைப் புடுங்க வேணாம்”, 

“என்னை வச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே?”,  

“சரோஜா சாமான் நிக்காலோ !…”,

 ‘கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்களா தான் வரும்‘…

போன்ற இன்றைய வசனகர்த்தாக்கள் எழுதும் பஞ்ச் டயலாக்கையும், ரவீந்தர் அவர்கள் அன்று எழுதிய பஞ்ச் டயலாக்கையும் ஒருசேர ஒப்பிட்டு நோக்கினால் உண்மையான தரம் நமக்கு விளங்கவரும்..

ரவீந்தரின் கலைத்துறை வாழ்க்கையில் அவருக்கு  ஏற்பட்ட திருப்பங்கள், அவர் எப்படியெல்லாம் திரையுலகில் ஓரம் கட்டப்பட்டார் என்பதை இனிவரும் தொடர்களில் விவரமாகக் காண்போம்.

– நாகூர் அப்துல் கையூம்

(ரவீந்தர் அவர்களின் இளமைக்கால புகைப்படத்தை மிகுந்த பிரயாசத்துடன் அவரது குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தந்த முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி)

– தொடரும்

 

Tags: , , ,

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)


நாகூர் ஹனிபாவை கட்சியின் கொள்கைப் பாடல்களைப் பாடும் வெறும் ஒரு கட்சிப்பாடகராக மட்டும் கருத முடியாது. கட்சித் தலைமையுடன் அன்றிலிருந்தே அவருக்கிருந்த ஆளுமை மிகஅதிகம். கட்சித் தலைமைக்கும் அவரது அருமை பெருமை நன்றாகவே தெரியும்.

கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பிறகாவது நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி அளித்து தகுந்த மரியாதை செய்திருக்கலாம். ஆனால் ஏனோ கலைஞர் அவர்களுக்கு அந்த நட்புணர்வு இல்லாமல் போனது மிகவும் ஆச்சரியம்.

கலைஞர் அவர்கள் தாராள மனது பண்ணி கட்சியில் நாகூர் ஹனிபாவுக்கு ஒரே ஒரு புரொமோஷன் கொடுத்தார். அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆமாம். அவரை பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியிலிருந்து உயர்த்தி செயற்குழு உறுப்பினர் என்ற பதவியை மனமிறங்கி அளித்தார்.

சமநிலைச் சமுதாயத்தில் ஆளுர் ஷாநவாஸ் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி மிகவும் நியாயமானதாக நம் மனதுக்குப் படுகிறது.

“தி.மு.க. சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி. அண்ணா, அதன் தலைவராக இருந்தபோது, பொருளாளராக சாதிக் பாட்சா இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவிற்குப் பிறகு அப்பதவி சமூகநீதி அடிப்படையில் முஸ்லீம் ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.

அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயளாளர் பொறுப்பை உட்கட்சிப் பூசலின் காரணமாக பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த இடத்திற்கு உடனடியாக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும்போது, அதே தலித் சமூகத்திலிருந்தே இன்னொருவரைத் தேர்வு செய்து சமூகநீதியை நிலைநாட்டியுள்ளது தி.மு.க. ஆனால் இந்த அளவுகோல் ஏன் கழகத்தில் உள்ள முஸ்லீம்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே நம் கேள்வி?”

என்ற வாதத்தை நம் முன் வைக்கிறார் ஆளூர் ஷாநவாஸ். மிகவும் நியாயமான கேள்வி.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்த தங்களுக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, பதவிகளை கேட்டுப் பெற்று, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டபோது, சுயமரியாதைக்காரரான நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாததாலேயே அவரை நாம் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று அழைக்க வேண்டியதுள்ளது.

ஓடி வருகிறான் உதயசூரியன்

நாகூர் ஹனிபா இதுவரை பாடியிருக்கின்ற கட்சியின் கொள்கைப் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றுப் பின்னணியில் பல சுவையான நிகழ்வுகள் மறைந்திருப்பதுண்டு. திமுகவின் தொடக்க காலத்தில் உதயசூரியன் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கட்சியின் தலைமைக்கு நாகூர் ஹனிபா என்ற பிரபலத்தின் காந்தக்குரல்தான் தேவைப்பட்டது.

ஆரம்ப காலத்தில் திமுகவின் ஆஸ்தான பிரச்சார பீரங்கியாய் கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு திமுகவிற்கு இரண்டு பிரபலங்கள் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். ஒன்று மக்கள் கலைஞர் எம்.ஜி.ஆர். அவர்கள். மற்றொருவர் மக்கள் பாடகர் நாகூர் ஹனிபா.

“ஓடி வருகிறான் உதய சூரியன்” என்று நாகூர் ஹனிபாவின் குரல் தெருக்கோடியின் ஒலிபெருக்கியில் அதிரடியாய் ஒலிக்கையில் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேற கட்சித்தொண்டன் மகுடி ஊதிய பாம்பாய் கட்டுண்டு படையெடுத்துப் போவான்.

இன்னொருபுறம், “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று படங்களில் எம்.ஜி.ஆர். வாயசைத்துப்பாடி உதயசூரியன் சின்னத்தை மார்கெட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது “வேறுதுவும் வேண்டாம். தொகுதிகளில் வெறுமனே எம்.ஜி.ஆர் தன் முகத்தை காட்டினாலே போதும். ஜெயித்து விடலாம்” என்பார் அறிஞர் அண்ணா. பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி,ஆர். பிரச்சாரத்திற்கு போக இயலாதிருந்த நேரத்தில் வெறுமனே அவரது ‘கட்-அவுட்’டை காண்பித்தே அவரை ஜெயிக்க வைத்தார்கள் திமுக தொண்டர்கள்.

அதே போன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு நாகூர் ஹனிபா நேரடியாக போக வேண்டும் என்பதில்லை. அவருடைய வெண்கலக் குரல் முழங்கும் இசைத்தட்டு அல்லது கேசட் போதும். ஆயிரமாயிரம் ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு வர.

அழைக்கின்றார் அண்ணா

இன்று எங்கு நோக்கினாலும் தலைவர்களின் ஆளுயர கட்-அவுட்களை வைத்து “மருத்துவர் ஐயா அழைக்கிறார்” “கேப்டன் அழைக்கிறார்” “திருமா அழைக்கிறார்” “வைகோ அழைக்கிறார்” என்ற வாசகத்தைப் பொறிக்கிறார்கள். இந்த மோகஅலை (Trend) அமோகமாக பரவுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையாகாது.

“1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில் வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் வேண்டினார் ஹனிபா. அதை மறுத்த அந்த நிறுவனம், ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னது. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என்று மறுத்து, பின்னர் வென்றார் ஹனிபா. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”

என்று குமுதம் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியில் வாசகருக்கு அளித்த பதில் ஒன்றில் சுவையான தகவலைப் பரிமாறுகிறார் அரசு.

மற்ற பாடல்களைக் காட்டிலும் பல்வேறு சிறப்புக்கள் இந்த பாட்டுக்கு உண்டு.

“திருவாடுதுறை இராசரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ஹனிபாவுக்கு இந்தப் பாடல்” என்று சான்றிதழ் வழங்குகிறார் டாக்டர் கலைஞர்.

“‘அழைக்கின்றார் அண்ணா’ என்று ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால், திராவிட நாடு பெற்று விடுவேன்”

என அடிக்கடி குறிப்பிடுவாராம், அண்ணா என்று சமநிலைச் சமுதாயம் (ஜனவரி 2012) இதழில் குறிப்பிடுகிறார் ஆளுர் ஷாநவாஸ்.

கட்சியில் அனிபாவிற்கு இருந்த ஆளுமைக்கு இதைவிட வேறு ஒரு நற்சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன்.

திண்ணை இதழில் நானெழுதிய ஹனிபாவைப் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து விட்டு அதே இதழில் திரு. மலர் மன்னன் அவர்கள்

“அந்த நாட்களில் ஹனிஃபா தி.மு.க. மாநாடுகளில் தவறாமல் பாடும் பாடல் “அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா” என்பது. இதனைக் கட்டுரை ஆசிரியர் கையூம் மறந்து விடாமல் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்”

என்று நான் எழுத மறந்ததை குறைப்பட்டு எழுதியிருந்தார்.

திரைப்படத்தில் முதல் சீனில் கதாநாயகனை அறிமுகம் செய்ய வேண்டுமெனில் ஒரு யுக்தியை பயன் படுத்துவார் படத்தின் இயக்குனர். இந்த யுக்தி இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. கதாநாயகன் ஒரு காரில் வந்து இறங்குவதாக இருந்தால் முதலில் காரின் டயரைக் காட்டுவார்கள். பிறகு காரின் கதவுகள் திறக்கப்பட்டு கதாநாயகனின் “Entry”-யை, அவரது காலணியிலிருந்து காமிரா Focus செய்யப்பட்டு கடைசியில்தான் முகம் காட்டுவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் தியேட்டரில் கரகோஷமும் விசில் சத்தமும் கூரையைப் பிளக்கும். இதே பாணியைத்தான் திமுகவினர் கையாண்டனர்.

1960களில் அறிஞர் அண்ணா கலந்துக் கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பலவிதமான யுக்திகள் கையாளப்படும். விழா மண்டபத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடியிருப்பார்கள். சிறுவர் முதல் பெரியோர் மட்டுமின்றி தாய்க்குலங்களும் தத்தம் குழந்தைகளுடன் அணிஅணியாகத் திரண்டிருப்பார்கள். அலங்கார வளைவும், வரவேற்புத் தோரணங்களும், வண்ணப் பூக்கோவைகளும், வண்ண ஒளி அமைப்புக்களும், அந்த கூட்டத்திடலை விழாக்கோலம் காணச் செய்யும். மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டு இரவு 10-மணி வரை நேரத்தை இழுத்தடிப்பார்கள்.

கிரிக்கெட் மைதானத்தில் அறிவிக்கப்படும் கமெண்டரி போன்று “அண்ணா புறப்பட்டுவிட்டார்” “அண்ணா வருகிறார்” “அண்ணா வந்துக்கொண்டே இருக்கிறார்”. “அண்ணா இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார்” “அண்ணா இதோ வந்து விட்டார்” என்று அவ்வப்போது அறிவிப்பு செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்குவதற்காக வேண்டுமென்றே காலதாமதத்தை உண்டாக்குவார்கள். மாலையில் வந்து பேசவேண்டிய ஒரு கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக வருகிறார் அறிஞர் அண்ணா. “மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை” என்று பேச்சைத் தொடங்கியதும் சோர்வடைந்திருந்த பொதுமக்களுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் பீறிட்டிக்கொண்டு வந்ததோ தெரியவில்லை; கைத்தட்டல் வானை முட்டியது. இதே பாணியை பின்பற்றி கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவிஞர் கண்ணதாசன் “சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்று வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார் என்பது நினைவில் நிற்கும் நிகழ்வு.

திமுக காரர்கள் மக்களை எதிர்ப்பார்ப்பின் நுனியில் இருக்க வைத்து அவர்களைப் பரவசப் படுத்துவதை ஒரு கலையாகவே கற்றிருந்தார்கள். ஆர்வக்களை சொட்டும் முகங்களை அதிசயிக்க வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு கைவந்தக் கலையாக இருந்தது.

அண்ணா வந்த பிறகும் மேடையில் உடனே ஏறி மைக்கை பிடித்து விடமாட்டார். மேடைக்குப் பின் நின்று அவர் மூக்குப்பொடி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் நாகூர் ஹனிபாவை மேடை ஏற்றுவார்கள். ஹனிபா மேடை ஏறியதுமே கூட்டம் களைகட்டத் தொடங்கிவிடும். ஹனிபாவின் ஆஜானுபாகுவான உயரம், மிடுக்கான தோற்றம், கணீரென்ற குரல் இவைகள் அவர்மீது காந்தசக்தி போன்ற ஓர் ஈர்ப்பை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியது.

பொதுமக்கள் ஆர்வமிகுதியால் எதிர்பார்ப்பின் உச்சகட்ட நிலைக்கு எட்டியிருப்பார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். “அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என்று அந்த சிம்மக்குரலோன் ராகமெடுத்து பாடலை கர்ஜிக்கையில் மெய்மறந்து போவார்கள் கூட்டத்தினர். பாடல் முடியும் தறுவாயில் ஒரு அட்டகாசமான Entry கொடுப்பார் அறிஞர் அண்ணா. பொதுமக்கள் அடையும் பரவசநிலையை சொல்லவா வேண்டும்? காமிராக்கள் மின்னலாய் பளிச்சிட ‘கிளிக், கிளிக்‘ என்ற சப்தம் தொடர்ச்சியாய் கேட்கும். பெரும் பரபரப்புக்கிடையே ‘அண்ணா வாழ்க’ ‘அண்ணா வாழ்க’ என்ற முழக்கம் இடைவிடாது ஒலிக்கும். அதற்குப் பிறகுதான் அண்ணா பேசத் தொடங்குவார்.

“நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்” என்று நாகூர் ஹனிபாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக அன்றிலிருந்து இன்றுவரை நாகூர் ஹனிபா ஒரு பகடைக்காயாக, பலிகடாவாக, பரிசோதனை எலியாக, கறிவேப்பிலையாகவே திமுகவிற்கு பயன்பட்டு வந்தார் என்பதில் நன்றாகவே நமக்கு விளங்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா

19.4.1961-ல் கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. கண்ணதாசனும் திமுகவிலிருந்து வெளியேறியிருந்த காலம் அது. அவர்கள் இருவரையும் சாடுவதுபோல் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற ஆவல் நாகூர் ஹனிபாவின் எண்ணத்தில் உதித்தது. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான்’ என்பது போல மேடை நாடகங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்த உள்ளுர்க் கவிஞர் நாகூர் சலீமை அணுகி தன் எண்ணத்தை வெளியிட்டார்.

“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற சரணத்தைக் கேட்டதுமே பரவசப்பட்டுப் போனார் நாகூர் ஹனிபா. அவர் நினைத்தைப் போலவே அப்பாடல் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றார்போல் அப்பாடல் பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறிய போதும், வைகோ அவர்கள் கலைஞரை விட்டு பிரிந்தபோதும் இதே பாடல்தான் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மாறன் சகோதரர்கள் கலைஞர் அவர்களை பகைத்துக்கொண்டு கிளம்பியபோது “கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு, ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு” என்ற பாடல் ஒலிக்கவில்லை.

அச்சமயத்திலும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல்தான் கைகொடுத்தது. தற்போது வைகோவின் கட்சியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். “பட்ட பாடுகளும் பதிந்த சுவடுகளும்” என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதத் துவங்கி விட்டார். இனி சற்று காலத்திற்கு ம.தி.மு.க.வின் மேடைகளில் மறுபடியும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல் ஒலிப்பதை நாம் கேட்க முடியும்.

நாகூர் ஹனிபாவை வெறும் ஒரு பாடகனாக மட்டும் தராசில் வைத்து தரம் பார்க்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். அவருடைய இடத்தை நிரப்ப இன்னொருவர் அவ்வளவு சீக்கிரம் வருவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு கிண்டல்

காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அக்கட்சியை கிண்டல் செய்து ஒரு பாடலைப் பாடினார் நாகூர் ஹனிபா.

“கீழே இறங்கு..
மக்கள் குரலுக்கு இறங்கு.
ஆண்டது போதும்.
மக்கள் மாண்டது போதும்”

என்ற பாடல் வரிகள் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கியது. மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைவிட வார்த்தைகளாலே ‘சுருக்’கென்று காங்கிரஸ்காரர்களின் நெஞ்சங்களை தைத்த பாடல் ஒன்று உண்டு.

“சோறு போடாத சோம்பேறியே!
பதவி நாற்காலி உனக்கொரு கேடா?
ஏறிய பீடத்தில் இருந்து சுவைத்திட,
இது உன் பாட்டன் வீடா?”

என்ற பாடல்தான் அது. இந்த இருபாடல்களை எழுதியதும் நாகூர் சலீம்தான். “எலிக்கறியைத் தின்னச் சொன்ன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?” என்ற தெரு வாசகங்களும், இந்தப் பாடலும்தான் காங்கிரஸ் கட்சியை அரியாசனத்திலிருந்து கீழே இறக்க உதவிய பயங்கர ஆயுதங்களாக இருந்தன என்றால் அது மிகையாகாது.

“வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது” என்றான் நெப்போலியன். ஹனிபாவின் பாடல்கள் பேனாமுனையைக் காட்டிலும் வலிமையானதாக இருந்தது.

(இன்னும் வரும்)

அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

 

Tags: , , ,