RSS

Tag Archives: நாகூர்

சாருநிவேதிதாவும் நோஸ்டால்ஜியாவும்


 

charu

ஒரு மனிதனுக்கு தேசப்பற்று, மொழிப்பற்று எந்தளவுக்கு முக்கியமோ அதேபோன்று  “ஊர்ப்பாசம்”என்பதும் இன்றிமையாத ஒன்று.  இதனை “ஊர்ப்பற்று” என்று கூறுவதை விட “ஊர்ப்பாசம்” என்று சொல்வதே சாலப்பொருத்தம் என்பேன். பற்றினைக் காட்டிலும் பாசமென்பதை ஆகுமான மட்டும் அள்ளி அள்ளி பொழிய முடியும் அல்லவா?

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” என்று பாடினார் கவிஞர் வைரமுத்து. “அதெப்படி அவ்வளவு தீர்க்கமாக சொல்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டதற்கு “சேலை கட்டும் பெண்கள் தங்களின் கூந்தலில் மல்லிகைப்பூ சூடுவார்கள். அதற்கென்று பிரத்யேக மயக்கும் வாசம் உண்டு” என்றார் ‘நச்’சென்று.

சேலைகட்டும் பெண்களுக்கு வாசமுண்டோ இல்லையோ  யாமறியேன் பராபரமே. ஆனால்  அவரவர் பிறந்த மண்ணிற்கென தனியொருவாசம்; தனித்தன்மை;  தவறாமல் உண்டு.    “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற திரைப்படப்பாடல்தான் இத்தருணம் என் நினைவுக்கு வந்தது.

ஊர்ப்பாசத்தை உலகுக்கு பறைசாற்ற தங்கள் பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரை சூட்டிக்கொண்ட பிரபலங்கள்தான் எத்தனை எத்தனை?

நாகூர் ஹனீபா,  திருச்சி லோகநாதன்,   குன்னக்குடி வைத்யனாதன், மதுரை சோமு, வலையப்பட்டி சண்முகசுந்தரம், லால்குடி ஜெயராமன், மகாராஜபுரம் சந்தானம், செம்மங்குடி சீனிவாச ஐயர், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், உமையாள்புரம் கே. சிவராமன்,  சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், தாராபுரம் சுந்தர்ராஜன், தஞ்சை ராமையாதாஸ், ஆரூர் தாஸ்,  நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார் என்று  ஏராளமான பெயர்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

ஊர்ப்பாசம் என்பது உள்ளார்ந்த உணர்வு. தானாகவே வருவது. தன்னை அறியாமலேயே பீறிட்டெழுவது. அதற்கு வயதில்லை. அளவுகோல் இல்லை. ஆறிலும் வரும்; ஐம்பதில் வரும். ஆத்மார்த்த ரீதியில் ஏற்படும் உள்ளுணர்வு அது. இசையையும் எழுத்தையும் நேசிப்பவர்களுக்கு சற்று அதிகமாகவே வருவது.

இசையை நேசிப்பவர்கள்தான் ஊரையும் அதிகம் நேசிக்கிறார்கள் என்பது என் நியூட்டன் மூளைக்கு எட்டிய சிறுகண்டுபிடிப்பு.

தங்கள் பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரை இணைக்காமலேயே, தனது ஊரின் பெருமையை அவ்வப்போது சிலாகித்துப் பேசி, எழுதி, நமக்குணர்த்ய நாயகர்கள் நிரம்ப உண்டு.

காஞ்சிபுரம், பண்ணைபுரம்,  சூரக்கோட்டை,  வடுகப்பட்டி, பரமக்குடி, திருக்குவளை என்ற பெயரை நாம் கேட்ட மாத்திரத்திலேயே  அறிஞர் அண்ணா, இளையராஜா, சிவாஜிகணேசன், வைரமுத்து, கமலஹாசன், கலைஞர் கருணாநிதி – முறையே இவர்களின் முகம்  நம் விழித்திரையில் வந்து விழுந்து விடுகிறது.

நம்மூரைச் சார்ந்த சாரு நிவேதிதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு ஊர்ப்பாசமே கிடையாது என்பார். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்  அதன் புராணம் பாடுவார். ஊர்ஏக்கம் அறவே இல்லை என்பார் ஆனால் அவ்வப்போது அதன் நினைவுகளில் வாடுவார்.

ஒரு மனிதனுக்கு எப்போது ஊர்ஞாபகம் வரும்? தனிமையில் வாடும்போதா? அல்லது சோகத்தில் மூழ்கும்போதா? அல்லது மகிழ்ச்சியில் திளைக்கும்போதா? அல்லது போதையில் மிதக்கும்போதா? இவ்வுணர்வு ரஜினி மாதிரி. எப்ப வரும்? எப்படி வரும்? யாருக்குமே தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துலே கரெக்ட்டா வந்துடும்.

கண்ணிமை கவிழும் போதும்
கனவுகள் தவழும் போதும்
என்னையே தொலைத்து விட்டு
எங்கெங்கோ தேடும் போதும்
பொன்மணியோடு கொஞ்சம்
பூர்வீகம் பேசும் போதும்
என்னையே பிழியுமம்மா…
எங்களூர் ஞாப கங்கள்.
 

என்று “தொட்டில் கனவுகள்” என்ற கவிதையில் அனுபவித்து எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து.

அவரது ஊருக்கென்று வானாளவிய வரலாற்றுப் பெருமைகள் வரிசைப்படுத்தி பேசுமளவுக்கு ஒன்றுமே கிடையாதாம். இருந்தபோதிலும் அவருக்கு தன் ஊர்மீது இணைபிரியா பந்தம், அளப்பரிய பாசம். அப்படியொரு பிணைப்பு. ஏன்? எதனால்? தன்னை தாலாட்டி சீராட்டி வளர்த்த ஒரே காரணத்தால் என்கிறார்.

 குளங்களும் இல்லை மன்னர்
கோவில்கள் இல்லை ஊர்க்கு
விளம்பரம் இல்லை ராஜ
வீதிகள் இல்லை சுற்றி
வளங்களும் இல்லை சோலை
வனங்களும் இல்லை என்னை
வளர்த்த ஊர் என்பதன்றி
வரலாறும் அதற்கும் இல்லை…
 

என்று அவரே வாக்குமூலம் தருகிறார். அதுமட்டுமல்ல, தமிழகத்து தலைநகரில் வாகைசூடி வாழ்ந்தாலும் தனது கடைசி காலத்தில் தனது சொந்த மண்ணிலேயே அடைக்கலமாகி அடங்கி போகவேண்டுமென ஆவல் கொள்கிறார்.

அரண்மனையில் வாழ்ந்தாலும், அரசாட்சி செய்தாலும், ஆறடி மண்தான் நமக்குச் சொந்தம் என்ற உண்மையை அறிந்தவர் கவிஞர். அந்த ஆறடி மண்ணும் தன் ஊர் மண்ணாகவே இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

சொல்லாத கவிதை யெல்லாம்
சொல்லி நான் முடித்த பின்பு
உள்ளூறும் எண்ண மெல்லாம்
உணர்வாக வடிந்த பின்பு
தள்ளாத வயதில் என்றன்
தாய் மண்ணில் இருப்பேன் என்பேன்.
கல்லறை பிறந்த மண்ணில்
கட்டடா மகனே என்பேன்…
 

கவிஞரின் நோஸ்டால்ஜியாவில் நாமும் கரைந்துருகி காணமல் போகிறோம். கற்பனைவளமும், நோஸ்டால்ஜியாவும் எழுதுகோல் கொண்டு படைக்கும் படைப்பாளிக்கு ஒரு உந்துகோல் என்பதில் சந்தேகமில்லை.

ஊர்ப்பாசம் மிகுதியால் “அந்த நாள் ஞாபகம்” என்ற தலைப்பில் கவிதை நூலொன்றை நான் வெளியிட்டபோது என் நண்பர் நாகூர் ரூமி  “இவர் வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல. அமைதியாக நினைத்துப் பார்த்து – Recollections  in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்” என்று என்மீது பொழிந்த பாராட்டுமழை  பசுமரத்தாணியாய் இன்னும் என் மனதில் பதிந்துள்ளது.

Nostalgic  நினைவோடு கடந்தகால நினைவுகளை அசைபோடுவது இருக்கிறதே..  ஆஹா.. அது ஒரு தனிசுகம். அதனை விவரிக்க வார்த்தைகள் போதாது. குளித்துவிட்டு Cotton Buds கொண்டு காது குடைவதைக் காட்டிலும் ஆனந்தம்; பரமானந்தம். இயல்பாகவே கண்ணை மூடிக்கொண்டு அனுபவிக்கத் தோன்றும்.

Genes வழித்தோன்றல் மனிதனின் செல்களில் மாத்திரமல்ல மண்ணுக்கும் உண்டு போலும். இதைத்தான் மண்ணின் பெருமை என்கிறார்களோ?. “வெதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்? “ என்கிறார்களே நம்மூரில். விதைக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்புதான் மனிதனுக்கும், பிறந்த மண்ணுக்கும் உள்ள பந்தம்.

Vikatan 4

சாருவின் ஊர்ப்பாசத்தை நாம் அலுசும் முன் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகிறது.

‘திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாங்கள்’ ‘பகுத்தறிவாதிகள் நாங்கள்’ என்று சிலர் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள். தெய்வ நம்பிக்கையா? அதெல்லாம் எங்களுக்கு இம்மியளவும் கிடையாது என்பார்கள். கோயிலுக்கு சென்று பரிவட்டம் கட்டிக் கொள்வார்கள், வீட்டில் சாமி படத்தை வைத்து பூஜை செய்வார்கள், பாபாக்களின் காலில் விழுவார்கள் ஆனால் பெரியாரின் கொள்கைதான் எங்கள் கொள்கை என்று பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.

சாருவைப் பொறுத்தவரை எனக்கு ஊர்ப்பாசம் கீர்ப்பாசம் எதுவுமில்லை என்பார். ஆனால் தன்னையறியாமல் அவ்வப்போது அந்த உணர்வு பீறிட்டுக்கொண்டு வரும். அவ்வுணர்வை அவரால் கட்டுப்படுத்த இயலாது. பக்கம் பக்கமாய் எழுதி எழுதித் தள்ளுவார்.

வைரமுத்து தன் ஊரைப்பற்றிச் சொல்கையில் “என்னை வளர்த்த ஊர் என்பார்” சாருவோ அவர் பிறந்த மண்ணை “தான் பொறுக்கிய இடமென்பார்.”. அவ்வளவுதான் வித்தியாசம்.

“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது”

என்று பகிரங்க வாக்குமூலம் அளித்தவர் சாரு.

தனது வாழ்நாளின் பெரும்பான்மையான நாட்களை டெல்லியிலும், சென்னையிலும் செலவழித்த சாரு இளம்பிராயத்தில் தான் பிறந்து வளர்ந்து பொறுக்கித் திரிந்த இடங்களை, அப்பசுமையான பொழுதுகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசைபோட அவர் தவறுவதில்லை. அந்தரங்க உண்மைகளை எல்லாம் போட்டுடைக்கும் நம் Celebrity எழுத்தாளருக்கு ஊர்ப்பாசத்தைச் சொல்ல ஏன் தயக்கம் என நாமும் புரியாமல் விழிபிதுங்குகிறோம்.

apayam1

என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து என்னை வளர்த்து உருவாக்கியது நான் பிறந்து வளர்ந்த நாகூர்தான். பல ஊர்களில் இன்று காலம் சுழன்று ஓடி, பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நாகூர் சிறிது அளவேதான் மாற்றங்களைக் கண்டிருக்கிறது”

என்று அவர் கூறுகையில் அவருடைய நோஸ்டால்ஜியா நமக்கு ஊர்ஜிதமாகிறது. ஒருவனது வாழ்க்கைக்கே அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஊரை அவன் கொண்டாட வேண்டியது அவன் கடமையல்லவா?

சாருவைப் பொறுத்தவரை அவர் ஒளிவு மறைவு இல்லாதவர். அவருக்கு  எதையும் மறைக்கத் தெரியாது. தான் யார்? தன் பின்புலம் என்ன? என்று வெளிக்காட்டுவதில் அவருக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இருந்தது கிடையாது. தான் புரிந்த தவறுகளை தன் வாசகர்களுக்கு பகிர்வதில் அவர் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

 நான் நாகூரில் வாழ்ந்த இடம் பறைச்சேரியையும் தாண்டி சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த தொம்பச் சேரி. மலம் அள்ளும் தொழில் செய்த தெலுங்கர் இனம். அப்போது தீண்டாமை என்பதை நேரடியாக ஒவ்வொரு தினமும் அனுபவித்திருக்கிறேன் “

என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். தாங்கள் ஏதோ ராஜபரம்பரையிலிருந்து வந்தவர்களாக காட்டிக் கொள்ளும்  ‘நேற்று பூத்த மழையில் இன்று பூத்த காளான்’களுக்கு மத்தியில் சாருவின் வெளிப்படத்தன்மை நம்மை ஈர்க்கிறது. இடைவெளி குறைகிறது. பரஸ்பரம் ஏற்படுகிறது. வாசகர்களாகிய நமக்கு அவரிடம் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுகிறது.

எழுதுபவன் யோக்கியனா? ஒழுக்கமுள்ளவனா? என்றெல்லாம் வாசகன் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. எழுத்தாளனின் ஆளுமையில் கவரப்பட்டு அவனும் ‘அஸ்கா’வாய் கரைந்து போகிறான். வாசகன் எழுத்தைத்தான் நேசிக்கிறானே தவிர அவனது அந்தரங்கம் பற்றி அவனுக்கு கவலையில்லை.

சாருவின் வெளிப்படத்தன்மையினாலேயே அவர் சகல சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு சகட்டுமேனிக்கு விமர்சனங்களை சந்திப்பவராக இருக்கிறார்.  Rating  ஏறுவதற்கு Image  குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அவர்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது பொதுஇடங்களில் அவரது  நடத்தையையோ அலசிப்பார்ப்பது இப்பதிவின் நோக்கமல்ல.

சமுதாயத்தை வழிநடத்துவதில் ஒரு பிரபல எழுத்தாளனுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘பிரபலம்’ என்பது வாசகர்கள் அவனுக்கு அளித்திருக்கும் வெகுமதி. அவன் சமுதாயத்திற்கு Role Model ஆக இருக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான அபிப்ராயம். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா? எழுத்திற்கும் உண்டு. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்று தங்கள் வாழ்நாள் முழுதும் சூளுரைத்தவர்கள் கூட எழுத்தில் கண்ணியம் காக்கவில்லை என்பது வருந்தத்தக்க விடயம். “கம்பரசம்” அதற்கோர் அழகான உதாரணம்.

பீ, மூத்திரம், குசு – இன்னும் சொல்லவொண்ணாத சொற்பதங்களை சாருவின் எழுத்தில் படிக்கும்போது புத்தகத்தை மூடிவைத்த பிறகும் ஒரு அருவருப்பை என்னால் உணர முடிகிறது. ஏன் கம்பர் “அல்குல்” என்று எழுதவில்லையா? சாரு எதார்த்தமாக எழுதுவதில் என்ன தவறு? என்று அவர் நண்பர்கள் கேட்கிறார்கள். இதுதான் இலக்கியம் என்றால் அந்த இலக்கியமே எனக்கு வேண்டாம் என்றுதான் சொல்லுவேன்.

Call Spade a spade என்பார்கள். சாருவின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் வெறுப்பவனாக இருந்தாலும் அவரே அறியாமல் அவர் மனதிலிருந்து    ஊற்றெடுக்கும் அவரது ஊர்ப்பாசத்தை நான் மெச்சாமல் இருந்தால் அது என் மனசாட்சிக்கே செய்யும் துரோகமாகும்.

ஒரு மனிதனின் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என்றால் அது அவனது பள்ளி நாட்களாகத்தான் இருக்கும். அது ஒரு நிலாக்காலம், அது ஒரு கனாக்காலம். சாருவிற்கு அந்த நாட்கள் ‘தம்ரூட்’டாய் இனிக்கிறது

நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் குரு என்று ஒரு மாணவன் புதிதாக வந்து சேர்ந்தான். எங்களைவிட நாலைந்து வயது பெரியவன். சில புதிய ஆசிரியர்கள் அவனையும் ஓர் ஆசிரியர் என்றே நினைத்துவிடுவார்கள். அவ்வளவு பெரியவன். அது ஓர் ஆணின் வாழ்க்கையில் முதன்முதலாகக் காமம் எட்டிப் பார்க்கும் வயது. அதற்கேற்ப சரீரத்திலும், எண்ணங்களிலும் ஏற்படும் மாற்றங்கள். குருதான் எங்களுக்கெல்லாம் ஹீரோ. கொக்கோகப்  புத்தகங்களைப் படித்து விட்டு வந்து கதை கதையாகச் சொல்லுவான். அவனுடைய கதைகளுக்கு மாற்றாக நானும் அவ்வப்போது கதைகள் சொல்லுவேன்

சாருவின் படைப்புகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதன் காரணம் இப்போது நமக்கு விளங்குகிறது.. ‘முதல் கோணல் முற்றும் கோணல்’, ‘விளையும் பயிர் முளையில் தெரியும்’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ இப்பழமொழிகள் யாவும் ஏன் திடீரென்று இப்பொழுது ஞாபகம் வருகிறது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

சாரு தனக்கு ஆன்மீகத்தில் தீவிரப்பற்று உண்டு என்கிறார். அதற்கு நாகூர் தர்காவை சாட்சிக்கு அழைக்கிறார். அதனால்தான் அவர் தனது எழுத்தில் அடிக்கடி ‘ஹதீஸ்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். (அதுவும் சம்பந்தமில்லா இடங்களில்) , திடீரென்று மெளலானா ரூமியின் மஸ்னவி கதைகளைக் கூறுகிறார்.

இப்படியே ஆன்மிகத்தில் தீவிர பற்று ஏற்பட்டுப் போனது. வீட்டில் இருந்த நேரத்தை விட தர்ஹாவில் இருந்த நேரம்தான் அதிகம். உறங்குவதும் அங்கேதான். காலை ஐந்து மணிக்கு நேப்பாளி கூர்க்கா தனது லத்தியைத் தரையில் அடித்து எழுப்பும்போதுதான் வீட்டு ஞாபகமே வரும்” என்கிறார்.

இவரது ஆன்மிகப் பற்று எப்படிப்பட்டது என்று நமக்கு சொல்லத் தெரியவில்லை. நித்யானந்தாவை கடவுளின் அவதாரம் என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்துவிட்டு தீவிரபக்தராக இருந்த இவர் “நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல திரிந்தார்கள்” என்று அந்தர்பல்டி அடித்தார்.

charu-mind

“நான் உங்கள் வலையில் நித்யானந்தாவைப் பற்றி கடவுள் அவதாரம் என்கிற அளவிற்கு நீங்கள் புகழ்ந்து எழுதி இருந்ததை நம்பி நானும் அதில் அதிக அளவு பணத்தையும் நேரத்தையும் செலவழித்தேன். என் மடலுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது” என்று வாசகர் ஒருவர் எழுதிக் கேட்டதற்கு நம்ம சாருசார் அளித்த பதில் நமக்குள் ஆயிரம் வால்ட் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.

 “who is paying for me ? Everything here in my site is a free fuck.  pl don’t read this site.”

இவருடைய பொறுப்பற்ற பதிலைப்படித்து Ice Bucket குளியல் அடைந்ததுபோன்று நாமும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில்  உறைந்துபோகிறோம்.

கர்னாடக இசை, லத்தீன் இசை, மொரோக்கோ இசை, கர்னாடக இசை, ராப் இசை, இவை எதுவாக இருந்தாலும் சாருவின் விமர்சனம் பிளந்து கட்டும்.. “இசை நுணுக்கம்” என்ற நூலைப் படைத்து நான்காம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றிய மகாவித்துவான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலரை விட சாருதான் இசைநுணுக்கம் அதிகம் தெரிந்தவரோ என்று நம்மை எண்ணத் வைக்கிறது. அதற்கான காரணத்தையும் அவரே விளக்குகிறார்.

இப்படியாக இரவுகளில் தெருத்தெருவாய் சுற்றித் திரியும் சுதந்திரம் இருந்ததால் ஒரு நல்ல பலன் உண்டானது. நிறைய கவ்வாலிக் கச்சேரிகளையும் ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. (பின்னாளில் எனது இசை ரசனைக்கு இந்தக் கச்சேரிகளே அடித்தளமாக அமைந்தன எனலாம்.) அதேபோல், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் நூற்றுக்கணக்கான ஹதீஸ்களையும், சூஃபி கதைகளையும் கேட்டேன்

சாருவை அழைத்து வந்து ஆன்மீக உரை ஆற்றச் சொன்னால் அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

பாஸியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்கு என்னுடைய இளம்பிராயத்து ஊர் ஞாபகம் வந்தது.  நாகூரில் கால்பந்தாட்டம் பிரசித்தம்.  நாகூர் மட்டும் அல்ல; கூத்தாநல்லூர், மன்னார்குடி என்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிலுமே கால்பந்தாட்டம் பிரசித்தம்.  காரணம், தஞ்சாவூர் மாவட்டம் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதி. லத்தீன் அமெரிக்காவைப் போல் உலகம் முழுவதுமே இஸ்லாமியர் வசிக்கும் நாடுகளில் கால்பந்தாட்டம் பிரசித்தமாக இருப்பதை கவனிக்கலாம்.  இந்தியாவில் கிரிக்கெட் என்ற அசுரனால் மற்ற விளையாட்டுகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன

விரைவில் பீலி, மரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் -இவர்களைப்பற்றி சாரு நூல்கள் எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம். புரியாத விஷயங்களை, புரியாத வார்த்தையில், புரியாத முறையில் சொன்னால் நவீன எழுத்தாளராக ஆகிவிடலாம் என்று சாருவின் வாயிலாக நாம் அறிகிறோம்.

முத்தமிழும் கலந்த கலாசாரம்  நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாசாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள்.

“வைதேகி காத்திருந்தாள்” என்ற திரைப்படத்தில் ராத்திரி வேளையில் விஜயகாந்த் “ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” என்று ராகமிசைக்க திண்ணையில் அமர்ந்திருப்பவர்கள் முதற்கொண்டு தொட்டிலில் தாலாட்டும் தாய்மார்களை வரை  அவர் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் தூங்கப் போவார்கள். சாருவின் எழுத்தை படித்துவிட்டு நாகூரிலும் புரொட்டா மாஸ்டர் முதற்கொண்டு பெண்கள் உட்பட இப்படித்தான் நடுஜாமத்தில் பாடுவார்களோ என்று வாசகர்கள் முடிவுக்கு வருவார்கள்.

நாகூருக்கும் இசைக்கும் இணைபிரியா பந்தமிருப்பது என்னவோ உண்மைதான். இத்தொடர்பினைப் பற்றி எத்தனையோ அறிஞர் பெருமக்கள் ஏராளமாக எழுதிவிட்டனர்.

  • டெல்அவிவ் வரை சென்று தமிழ் சூஃபி இசையை பரப்பி வந்த அப்துல் கனி, ஹாஜா மொய்தீன், சபூர் மொய்தீன் பாபா சபீர்
  • கர்னாடக இசைப் புலமை பெற்ற தர்கா வித்துவான் எஸ்.எம்,ஏ..காதர், இசைமணி எம்.எம்.யூசுப்
  • நாகூரில் வாழ்ந்த இந்துஸ்தானி இசை விற்பன்னர்கள் தாவூத் மியான், கவுசு மியான், சோட்டு மியான்,
  • மொழி புரிகிறதோ இல்லையோ கவ்வாலி பாடல்களுக்கு தலையாட்டும் ரசிக பெருமக்கள்
  • நாதஸ்வர மேதை நாகூர் சுப்பையா பிள்ளை, மிருதங்கக் கலைஞர் நாகூர் அம்பி ஐயர்,
  • இஸ்லாமியப் பாடகர்கள் இசைமுரசு இ.எம்.ஹனிபா, கலைமாமணி இ.குல்முகம்மது

என அனைத்து இசை வடிவங்களுக்கும் வடிகாலாக நாகூர் திகழ்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. திருவையாறுக்கு கிடைத்த அங்கீகாரம் நாகூருக்கு கிடைக்கவில்லை என்பதென்னவோ உண்மை.  இதோ சாரு சொல்வதைக் கேட்போம்.

எங்கள் ஊர் அனுதினமும் இசை சங்கமத்தில்தான் தத்தளிக்கும். காலையில் எழுந்தவுடன் தர்காவில் இசை ஒலிக்கும். அதைபோல அழகான ஷெனாய் வாத்திய இசையும் கேட்கும். இந்த இசையைக்  கேட்டுக்கொண்டே காலையில் எழுந்திருப்பதற்கு கொடுப்பினை வேண்டும்.  உலகில் நான் கண்ட பல இசைகளில் ஹனிபாவின் இசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு 

கொடுப்பினை வேண்டும்” என்று கூறும் சாரு இம்மண்ணில் பிறப்பதற்கே மாதவங்கள் செய்திடல் வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்கிறார். மேலும், இசையோடு இப்பொழுது ருசியையும் இணக்கிறார் சாரு. Recollection in Tranquility என்று நாகூர் ரூமி எனக்குச் சொன்னது சாருவிற்குத்தான் முற்றிலும் பொருந்தும்.

x240-7xU

கடல் காற்றின் சத்தம், இரவில் கொத்துப் புரோட்டா போடும்போது எழும் ஓசை என எப்போதும் எங்கள் ஊரைச் சுற்றி பல இசை சூழ்ந்தே இருக்கும். நான் பல ஊர்களுக்குச் சென்று இருக்கிறேன். நாகூரைத் தவிர வேறு எங்கும் கொத்துப் புரோட்டாவில் அப்படி ஒரு சுவையை ருசித்தது இல்லை.

“தொட்டபட்டா ரோடுமேலே முட்டைபறாட்டா” என்று சந்தம் போட்டு எழுதிய திரைப்படக் கவிஞர்கள் ஏன் கொத்துபறாட்டாவுக்கும் நாகூருக்கும் முடிச்சு போடவில்லை என்பது நம் கேள்வி. “நயாகரா”வுக்கு “வயாகரா” சந்தம் அமைந்தது போல் இதற்கு சந்தம் உட்காரவில்லை என்ற காரணத்தால் இருக்கலாம். இதோ கொத்துபரோட்டா புராணத்தை மேலும் தொடர்கிறார் சாரு.

கொத்துப் பரோட்டாவைக் கொத்தும் போது ஒரு லயத்தோடு வரும் சத்தத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  அதை சத்தம் என்று எழுதுவதற்கே கூச்சமாக இருக்கிறது.  அது ஒருவித சங்கீதம்.  நாகூரில் மாலை ஆறு மணி ஆனால் போதும், நூற்றுக் கணக்கான புறாக்கள் தர்காவின் மினாராக்களில் உள்ள பொந்துகளில் வந்து அடையும். அதே நேரத்தில் கடைக்குக் கடை கொத்துப் பரோட்டா கொத்தும் சங்கீதமும் கேட்கும்.  ஆனால் நான் நாகூரில் இருந்த என்னுடைய 20 வயது வரை அந்தக் கொத்துப் பரோட்டாவைச் சாப்பிட்டுப் பார்க்க ஒருநாள் கூட கையில் காசு இருந்ததில்லை.  இப்போது காசு இருக்கிறது.  நாகூர் போய் வர நேரமில்லை.

தனது 20-வயதுவரை அந்த கொத்துப்புரோட்டாவை சாப்பிடும் பாக்கியம்கூட இல்லாமல் இருந்தாரே என்று நம் அபிமான இலக்கியகர்த்தா மீது நம்மையறியாமலேயே ஒரு பச்சாதாபம் ஏற்படுகிறது. சாப்பாட்டுப் பிரியரான சாருவுக்கு நாகூர் என்றதும் கொத்துப்புரோட்டா மாத்திரமல்ல தேத்தண்ணி (தேயிலைத்தண்ணீர்) எனப்படும் டீ, மற்றும் தம்ரூட், எல்லாமே அவர் நினைவில் வந்து நிழலாடி வாசகர் நாக்கிலும் எச்சில் ஊற வைத்து விடுகிறார்.

எங்கள் ஊர் டீயைப் போல் நான் வட இந்தியாவில் அதுவும் ஒருசில உயர்தர முஸ்லீம் ரெஸ்தொராந்துகளில் மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட பிரத்யேகமான நாகூர் டீயின் ருசி சாம்கோ டீயில் இருக்கும்.  (உணவகம் என்று எளிதாக சொல்லி இருக்கலாமே. ஏன் ரெஸ்தொராந்து என்று பல்லைக்கடித்துக் கொண்டு கஷ்டப்பட்டு சொல்கிறார்?)

இதோ தம்ரூட் படலம்.

மதுரைக்கு எப்படி ஒரு சிறப்பான கலாசாரம், உணவு என்று இருக்கிறதோ.. அதேபோல் நாகூருக்கும் தனிக் கலாசாரம் உண்டு. ‘தம்ரூட்’ என்னும் இனிப்புப் பண்டம், பாக்க அல்வாவைப் போலவே இருக்கும். ஆனால், அல்வா கிடையாது. அதனுடைய சுவையே தனி. நாகூரை விட்டால் வேறு எங்கும் தம்ரூட் கிடைக்காது.

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உலகப் பிரசித்தம். ஆனால் அதைவிட சிறப்பான, ருசியான… நாகூரைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத தம்ரூட் பற்றி யாருக்குமே தெரியாது. அதுதான் நாகூரின் துரதிர்ஷ்டம். யாராலும் பேசப்படாத தனித்த ஊர்.

 

இதோ இட்லி படலம்

வேலூர் இட்லி மிகவும் விசேஷமானது. வேலூரில் இட்லியுடன் வடகறியும் தருவார்கள். அதே போன்ற இட்லியை நாகூரில் காணலாம். அதிலும் சேதுராமைய்யர் ஹோட்டல் டிபனுக்கு ஈடு இணை கிடையாது.

மால்குடி என்ற கற்பனைக் கிராமத்தை பாத்திரப் படைப்பாக்கிய ஆர்.கே.நாராயண் போன்று நாகூர் என்ற நிஜ ஊரை பாத்திரப் படைப்பாக்கிய சாருவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவருக்கு ஊர்ப்பாசம் இல்லை என்பதெல்லாம் கடைந்தெடுத்த 100% அக்மார்க் பொய். அவர் வெளிக்காட்டும் ஊர்ப்பாசம் அவர் அடிக்கடி உதிர்க்கும் ஆபாச அர்ச்சனைகளை எல்லாம் மறக்கடிக்க வைத்து விடுகிறது. ஒருவரின் குறைகளை சுட்டிக்காட்டும்போது நிறைகளையும் கோடிட்டு காட்டுவதுதான் இலக்கியப்பண்பு, அதைத்தான் நான் இங்கு செய்கிறேன்.

நாங்க வசித்து வந்த ஏரியா ஒரு குடிசைப் பகுதி. எப்போதும் கலகலப்புடன் இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நாட்டு தொடக்கப் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்ப படிப்பு இருந்தது. நாங்க வசித்த தெருவின் பெயர் கொசத் தெரு. அதை அறிவிக்கும் போர்டு தகரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய ‘எக்ஸைல்’ நாவலில் நாகூரைப்பற்றி எழுத அந்தத் தெருவுக்குச் சென்றபோது, இன்னமும் அதே இடத்தில் அந்த போர்டு இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

“எதிர்நீச்சல்” படத்தில் கடைசி வரை படத்தில் முகத்தை காட்டாமலலேயே, ஆனால் படத்தில் முக்கிய பாத்திரமாக இருமல் தாத்தா கேரக்டரரைக் காட்டிய  இயக்குனர் பாலச்சந்தரின் சாமர்த்தியத்தை, அவரது நாவலில் நாகூரை பாத்திரப்படைப்பாக்கிய லாவகத்தை சாருவிடம் காண்கிறேன்.

பஹ்ரைன் உட்பட அனைத்து அரபு நாடுகளில் காணப்படும் பழங்கால வீடுகளின் முற்றத்தில் “Wind Tower” எனப்படும் காற்றுவெளி மாடம் காணப்படும். நாகூரில் பெரும்பாலான பாரம்பரிய வீடுங்களின் முற்றத்தில் காற்றுப்பந்தல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். காற்றை வசப்படுத்த தெரிந்தவர்கள் நாகூர்க்காரர்கள் என்று வேண்டுமானால் புகழாரம் சூட்டலாம். நாகூர் தர்கா உள்ளே குளிர்ந்தமண்டபம் அப்படிப்பட்ட தன்மை கொண்டது. அதைப்பற்றி சாரு இப்படி கூறுகிறார்.

நாகூர் தர்கா மிகவும் பிரசித்தம் பெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது மனக் குழப்பம், கஷ்டம் வந்தால் தர்காவுக்குச் சென்று  அமர்ந்து விடுவேன். உடனே மனம் ஆறுதல் அடைந்து விடும். அதேபோல் அங்கு குளிர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. ஏ.சி போட்டால்கூட அப்படி ஒரு இதமான காற்று வராது. குளிர் காற்று, கூட்டமான புறாக்கள் என அந்த இடமே பார்க்க அமைதியாக இருக்கும்.

மதுரை ஆதீனத்தைப் போன்று சாருவும் நாகூர் ஹனிபாவை பாராட்டிய விதமும் எனக்குப் பிடித்திருந்தது.

நாகூர் அனீஃபா எந்த வித அங்கீகாரமும் இல்லாமல் ஏதோ ஒரு தெருப் பாடகன் என்ற அளவில்தானே இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது. நாகூர் அனீஃபாவுக்கு இணையாக வேறு யாரையுமே சொல்ல முடியாது. அவர் ஒரு unique ஆன பாடகர். அவருக்கு முன்னும் பின்னும் அவரைப் போன்று பாடக் கூடிய ஒரு கலைஞன் இல்லை. 

என்று பாராட்டும் சாரு நம் மனதில் இடம் பிடிக்கிறார். என்னதான் ஃபாரின் சரக்கை அருந்தினாலும் நாட்டுச்சரக்கை அவரால் மறக்க முடியவில்லை.

வேலி முட்டி பற்றி என்னுடைய ‘ எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்‘ நாவலில் எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போதுதான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கிறேன். வேலி முட்டி என்பது எங்கள் ஊர்ப்பக்கத்தில் கிடைக்கும் ஒருவித சாராயம். அது ஒரு காரணப் பெயரும் கூட. அதைக் குடிப்பவர்கள் வேலிப் பக்கத்தில் போய் முட்டிக் கொண்டு கிடப்பார்கள். இப்போதும் வேலி முட்டி கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

நாகூரின் Geographical Features-யை சாருவைவிட யாரும் இவ்வளவு துல்லியமாக எழுதியதில்லை.

யார் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நாகூரில் கிட்டத்தட்ட ஐம்பது குளங்களுக்கு மேல் இருக்கும். நான் வசித்த தெருவைச் சுற்றியே ஒரு டஜன் குளங்களுக்கு மேல் இருந்தன. நான் படித்த நேஷனல் ஹை ஸ்கூலின் விளையாட்டு மைதானத்தின் பெயர் ஈச்சந்தோட்டம். மைதானத்தைச் சுற்றிலும் ஈச்ச மரங்கள். அதனால், ஏற்பட்ட காரணப் பெயர். ஸ்கூலில் இருந்து கிளம்பி பெருமாள் கோயில் கீழ வீதியையும் மாப்பிள்ளைத் தெருவையும் தாண்டி வந்தால் ஈச்சந்தோட்டம். ஈச்சந்தோட்டத்தை ஒட்டி ஈச்சங்குளம். என் சிறுவயதில் அந்த ஈச்சங்குளத்தில்தான் குளித்து வளர்ந்தேன். நாகூரில் அப்போது வீட்டுக்கு வீடு குழாய்த் தண்ணீர் வசதிக் கிடையாது. ஒவ்வொரு தெருவின் முனையிலும் இருக்கும் பொதுக் குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதற்காக, முதல்நாள் இரவே குழாயின் அருகில் பானைகளை வைத்துவிடுவார்கள். அப்போது பிளாஸ்டிக் குடங்கள் புழக்கத்தில் வரவில்லை. காலையில் அந்தக் குழாயடியில் பெண்கள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு உருண்டு புரள்வார்கள், ஒரு குடம் தண்ணீர் பிடிக்க..

நாகூரின் தட்பவெட்ப நிலை சாருவின் எழுத்துக்களிலிருந்து நமக்கு நன்கு புரிந்துவிடும்.

நாகூர், கடலின் கரையிலேயே அமைந்து இருப்பதாலோ என்னவோ வானத்துக்கும் பூமிக்கும் நீர் விழுது அமைத்ததுபோல் பொழியும் மழை. நாள் கணக்கில் ஒரு நிமிடம்கூட இடைவெளியே இல்லாமல் பொழிந்து கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கூட வானம் தெளியாது. கார்த்திகை முழுவதும் தொடரும் இந்த மழைக்குக் கார்த்திகை அடை மழை என்றே அடைமொழி உண்டு. நாங்கள் வசித்த கொசத்தெருவைச் சுற்றிலும் உள்ள எலுத்தியாரங்குளம் மற்றும் இன்ன பிற குளங்களெல்லாம் வெட்டாறோடு கூட்டணி அமைத்து ஊரையே வெள்ளக் காடாய் மாற்றும். வயதான கிழங்கள் சாகும் காலமும் அந்த மாதமாகத்தான் இருக்கும் என்பதால், எங்கள் வீட்டைத் தொட்டுக்கொண்டு இருந்த சுடுகாட்டில் பிணம் வேகும் நாற்றம் மூக்கைவாட்டும்.  

அவருடைய நோஸ்டால்ஜியா முடிவின்றி தொடர்கிறது.

நாகூரில் நான் சிறுவனாக இருந்தபோது மழை என்றாலே அது புயலாகத்தான் இருக்கும். ஐப்பசி மாத அடைமழை தவிர ஒவ்வொரு மழைக் காலத்திலும் புயல் இல்லாமல் இருக்கவே இருக்காது. 1952-ம் ஆண்டு அடித்த புயலை ‘பெரிய பொசல்’ என்பார்கள். கி.மு., கி.பி. என்று சொல்வதுபோல் குடும்பத்து உறுப்பினர்களின் ஜனன மரணங்களையும், மற்ற சம்பவங்களையும் ‘பெரிய பொசலை’ வைத்தே கணக்கிடுவார்கள். நான் ‘பெரிய பொசல்’ அடித்து ஒரு வருஷம் கழித்துப் பிறந்தவன். பெரிய புயல் நாகூர் மக்களின் நினைவில் தங்கிவிட்டதன் இன்னொரு காரணம், தர்காவின் பெரிய மினர்வாவின் கலசம் புயல் காற்றில் கீழே விழுந்து விட்டது.

சுனாமி வந்த சமயத்தில் சாருவும் நாகூரில் இருக்க நேர்ந்திருந்தால் நமக்கு ஒரு நல்ல பதிவு கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம் நமக்கு ஏற்படுகிறது. சாருவின் இதுபோன்ற அனுபவங்களை நாம் படிக்கையில் சேரன் இயக்கிய “ஆட்டோகிராப்” படத்தில் வரும் “ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!” பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

charu-3

ஈச்சந்தோட்டத்தில்தான் நாகூரின் பிரபலமான கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கும். முக்கியமான போட்டி என்பது, நாகூர் நேஷனல் ஹை ஸ்கூலுக்கும் மன்னார்குடி நேஷனல் ஹை ஸ்கூலுக்கும்தான். நாகூரின் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதாலோ என்னவோ அங்கே கால்பந்தாட்டம்தான் பிரதான விளையாட்டாக இருந்தது. ஆனால், எங்களுக்கு ட்ரில் மாஸ்டராக இருந்த கண்ணையன் சார் வாலிபாலையும் முன்னணிக்குக்கொண்டுவந்தார். அப்போது அந்த மாவட்டத்தில் வாலிபாலில் ஹீரோவாக இருந்தவர் வடுவூர் ராமமூர்த்தி. அவரைத் தெரியாதவர்களே தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடையாது. எனக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரைவிட வடுவூர் ராமமூர்த்தியைத்தான் நன்றாகத் தெரியும். கண்ணையன் சாரும் வடுவூர் ராமமூர்த்தியும் வாலிபால் ஆடினால் மைதானத்தில் பொறி பறக்கும். வாலிபால் கோர்ட் மட்டும் ஸ்கூலை ஒட்டி உள்ள சிறிய மைதானத்தில் இருந்தது. ஆனால், நான் ஒல்லிப்பிச்சானாக இருந்ததால் எந்த விளையாட்டிலும் சேர மாட்டேன்.

ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்து எழுதுகிறார்..

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் என் நண்பரைப் பார்க்கச் செல்லும்போது எல்லாம் மௌனியின் கொள்ளுப் பேத்தியைப் பார்க்கிறேன். ரைஸ் மில் ஐயர் என்றும், மணி ஐயர் என்றும் சிதம்பரத்தில் அழைக்கப்பட்ட மௌனியின் பேரனும் மௌனியின் மருமகளும் அங்கே வசிக்கிறார்கள். ஒருநாள் என்னைப் பார்த்து ஹாய் சொன்ன அந்தக் குட்டிப் பெண்ணிடம் ”உன் கொள்ளுத் தாத்தாதான் என் குருநாதர்” என்று சொன்னேன். திருதிருவென்று விழித்தாள். அவளுக்குத் தன் கொள்ளுத் தாத்தா ஒரு மாபெரும் எழுத்தாளர் என்று தெரியாது.

சாரு குறிப்பிடும் Interesting Characters நாகூரின் இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் புரியாத புதிராகத் தோன்றலாம். ஆனால் 50+ ஆசாமிகளுக்கு இது தேன்பாகாய் இனிக்கும்.

நாகூரில் கண்ணையன் சாரைத் தவிர மற்றும் பல ஹீரோக்கள் இருந்தார்கள். தமிழாசிரியர் சீனி.சண்முகம் சாரை மறக்கவே முடியாது. அவர் வகுப்பு எடுத்தால் வகுப்பறை அமளிதுமளிப்படும். பட்டிமன்றப் பேச்சாளராகவும் விளங்கினார். ஆரம்பத்தில் அவர் தமிழாசிரியாக இல்லை. மாறாக, நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். பின்னர், மூன்றாம் வகுப்பு மாறியபோது மூன்றாம் வகுப்பின் ஆசிரியர். பிறகு, நான்காம் வகுப்பிலும்… பிறகுதான் புலவர் படிப்பு முடித்து நான் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது தமிழாசிரியராக ஆனார்.

இதுபோன்ற மலரும் நினவுகளை பல்வேறு இடங்களில் Rewind செய்து ஓட விடுகிறார்.வானொலியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியைக் கேட்டது போன்ற ஒரு மனதிருப்தி நமக்கு ஏற்படுகிரது.

விளையாட்டுக்கு அடுத்தபடியாக அப்போதைய சிறுவர்களின் ஒரே கேளிக்கை, சினிமா. ஆனால், நாகூரில் ஆறு மாதங்களுக்குத்தான் தியேட்டர் இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்பார்கள். டூவின் உச்சரிப்பு du. ரொம்ப காலத்துக்குப் பிறகுதான் எனக்கு அது touring என்று புரிந்தது. சினிமா தியேட்டர் கீற்றுக் கொட்டகையாக இருந்தால் ஆறு மாதம்தான் லைசென்ஸ் தருவார்கள். அந்த டாக்கீஸின் அதிபர் பெயர் யாருக்கும் தெரியாது என்றாலும் அவரை எல்லோரும் சிவகவி அய்யர் என்றே அழைத்தார்கள். சிவகவி படம் 1943-ல் வெளிவந்தபோது அது அந்த டாக்கீஸில் ஆறு மாதம் ஓடி இருக்கிறது. பொதுவாக எம்.ஜி.ஆர். படம் என்றால்கூட ஒரு வாரத்துக்கு மேல் ஓடாது. ஊரில் ஜனத்தொகை கம்மி. அப்படிப்பட்ட ஊரில் ஒரு படம் ஆறு மாத காலம் ஓடியிருக்கிறது என்றால், அது எப்பேர்ப்பட்ட விஷயம். அதனால், அந்த டாக்கீஸின் உரிமையாளரின் பெயரே சிவகவி அய்யர் என்று ஆகிவிட்டது. இப்போது சிவகவி அய்யரின் சந்ததியினர் எங்கே இருக்கிறார்களோ தெரியாது. அவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் அது எனக்கு சந்தோஷத்தைத் தரும்.

தொடர்ச்சியாக இவ்வளவு புராணம் பாடிய பிறகும் எனக்கு நோஸ்டால்ஜியா கிடையவே கிடையாது என்று சாதிக்கிறார். அதை நம்மையும் நம்பச் சொல்கிறார். இஸ்லாமிய சமூகத்தினரோடு சாருவுக்கிருந்த பிணைப்பை இப்போது நமக்கு புரிய வைக்கிறார்.

இன்னொரு ஹீரோ, பி.ஏ. காக்கா. “காக்கா” என்றால் எங்கள் ஊரில் அண்ணன் என்று அர்த்தம். ஊரில் முதல்முதலாக பி.ஏ. டிகிரி முடித்ததால் அவரை எல்லோரும் பி.ஏ. காக்கா என்று அழைத்தார்கள். ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர்.  நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி ஊரில் பல பிரபலங்கள் உண்டு. எல்லோரையும் விடப்  பிரபலமாக விளங்கியவர் தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த பாடகர் நாகூர் ஈ.எம்.அனீபா. நாஸ்டால்ஜியாவினால் சொல்லவில்லை;  ஹனிபாவின் குரலைப் போன்ற unique ஆன குரல் மிகவும் அரிது என்று சொல்லலாம்.

சாரு மீண்டும் மீண்டும் தனக்கு நோஸ்டால்ஜியா கிடையாது, கிடையாது என வம்படிக்கிறார்.  நமக்கு சிரிப்புத்தான் வருகிறது. நோஸ்டால்ஜியாவுக்கு அர்த்தம் தேடினேன்.  The term nostalgia describes a sentimentality for the past, typically for a period or place with happy personal associations. சுருங்கச் சொன்னால் அது ஒரு Homesick. இதை ஒப்புக்கொள்வதற்கு சாருவிற்கு உடன்பாடில்லை. நமக்கும் அதன் காரணம் புரியவில்லை.

charu with

“வியப்புக்குரிய மனிதராக அவர் ஒரு காலத்தில் இருந்தார். விரசத்துக்குரிய மனிதராக அவர் பின்னர் மாறிப்போனது வேறு விஷயம்” என்று நாகூர் ரூமி சாருவைப்பற்றி சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். பலர் முகஞ்சுளிக்கும் சாருவை நான் பாராட்டுவதில் எனக்கு எந்த கூச்சமும் கிடையாது.

சாருவுக்கு பெண்களோடு பழகுவதென்றால் ஏகப்பட்ட குஷி.

தாயம், பல்லாங்குழி, பாண்டி என்று எங்கள் தெருப் பெண்களோடு விளையாடுவேன். இப்போதுகூட தாயம் விளையாட்டில் நான் ஒரு எக்ஸ்பர்ட் என்றே சொல்லிக்கொள்ளலாம். விளையாடித்தான் பல ஆண்டுகள் ஆகின்றன.

நோஸ்டால்ஜியா இல்லையென்று கூறும் சாருவுக்கு நாகூரின் அவலத்தைக் கண்டு மனம் பொறுக்கவில்லை. ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே’ அதன் பொருள் விளங்குகிறது.

சமீபத்தில் நாகூருக்குப் போயிருந்தபோது நான் பார்த்த சில்லடி (கடற்கரை) காணாமல் போயிருந்தது. வெறும் குப்பை கூளங்களும் முள்செடிகளுமே நிரம்பி இருந்தன.

என்று வேதனை கொள்கிறார் சாரு,

 

 

hqdefault

சர்ச்சைகளில் மாட்ட வேண்டும் என்பதற்காகவே தாறுமாறான விமர்சனங்கள் சரமாரியாக தங்கள்மீது வந்து விழட்டும் என்று வழிமீது விழிவைத்து காத்திருப்போர் உண்டு. அவர்களில் சாருவும் ஒருவர். சர்ச்சைகளில் சிக்காமலிருந்தால் ஊடகங்கள் நம்மை மறந்தேபோகும் என்று நினைப்பவர் போலும். ஊடகங்களில் பெயர் அடிபட்டால்தானே ஜனங்களின் மனதிலும் இடம்பிடிக்க முடியும்?  “It’s all in the Game” என்பார்களே அந்த வகைதான்இது.

ஒரு இளைஞன் ஒழுங்காக படிப்பதில்லை, அவனுக்கு  தெளிவான நோக்கமில்லை, முடிவெடுக்கும் திறானியில்லை, மனச்சிதறல், ஒழுக்கமின்மை, நேர்வழியில் செல்வதில்லை –  இப்படிப்பட்ட ஒருவனை சமூகம் மதிக்குமா என்றால் நிச்சயம் மதிக்காது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு படைப்பை எழுத்துவடிவில் உருவாக்கினால் அது மிகுந்த பாராட்டை பெறுகிறது. இலக்கியத்தில் அதற்குப் பெயர் “பின்நவீனத்துவம்”. ஆம் பின்நவீனத்துவ நாவலுக்கு விளக்கம் தேட முற்பட்டால் இப்படி ஒரு விடை நமக்கு கிடைக்கின்றது “தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு, ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை , பன்முகத்தன்மை ஆகியவை கொண்டதுதான் பின் நவீனத்துவ புனைவிலக்கியம்”. சுருங்கச் சொன்னால்  எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் அதற்குப்பெயர் பின்நவீனத்துவ நாவல்.

சாரு நிவேதிதாவின் “ஸீரோ டிகிரி” நாவலுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் பின்நவீனத்துவ புனைவிலக்கியம் என்பதாகும். “இது என்ன எழவோ?” என்று சிலர் முணுமுணுப்பதை என்னால் உணர முடிகின்றது, மொழியைச் சிதைத்து, கதையைச் சிதைத்து  வாசகர்களுக்கு ஒரு திடீர் மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாரு போன்ற எழுத்தாளர்களுக்கு சமுதாயம் அளித்திருக்கும் கெளரவம் “அழகியல்வாதிகள்” என்பதாகும்.

இதுபோன்ற புனைவுகள் நமக்கு பிடிக்கவில்லை என்று மனம்திறந்தால் நம்மை பிற்போக்குவாதி என்கிறார்கள் சிலர். Do in Rome as Romans Do என்ற பழமொழிக்கேற்ப “நான் சாரு நிவேதிதாவின் நாவலை விரும்பிப் படிப்பேன்” என்று சொன்னால் நம்மையும் ஒரு Intellectual இலக்கியவாதியாக சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது.

  • “My novel was like a guerrilla attack on the society,”
  • “Being a writer in Tamil Nadu is like being a musician in the Taliban,”
  • “I wanted to free the chains imposed by the intelligentsia and the so-called culturewallahs from the Tamil language,”
  • “I consider my novel as auto-fiction. It is autobiography and fiction. I understand there is an auto-fiction movement in France”

இப்படியெல்லாம் வாய்மலர்ந்தருளும் சாருவின் கூற்றை கேட்கும் வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள் அவரை நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு இணையாக கருதுவார்கள் என்பது உறுதி.

சாரு எழுதுவதற்கு பெயர்  புனைவாம்.  அது கட்டுரை அல்லவாம். இன்னும் சொல்லப்போனால் அதன் பெயர் எரோட்டிக்கா புனைவாம். (போர்னோ இலக்கியம் என்றால் சாருவின் வாசக வட்ட அன்பர்கள் நம்மை அடிக்க வருகிறார்கள்)  எது எப்படியோ, சாருவின் எழுத்து வாசகர்களிடம்  ஒருவித கிளர்ச்சியையும், அதிர்ச்சியையும்,  வாசிப்பனுபவத்தையும்  ஏற்படுத்தவல்லது என்பதையும் அவர்  ஆளுமையுடைய எழுத்தாளர் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

charu with drinks

முன்பொரு சமயம் அ. மார்க்ஸ் சாருவைப் பற்றி எழுதும்போது “கடைசி பியர் வாங்கிக் கொடுப்பவன்தான் சாருவுக்கு  மிகச் சிறந்த எழுத்தாளன்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி சாருவைப் பற்றிய negative Commentsதான் அதிகம்.

குடிப்பழக்கம் போதைப்பழக்கம் யாரிடத்தில்தான் இல்லை? ஒளவையார், பாரதியார், கண்ணதாசன் இவர்கள் யாரும் செய்யாததையா இவர் செய்துவிட்டார் என்கிறார்கள். அறிவுஜீவிகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் போலிருக்கிறது என்று நாமும் நம்மை சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.

சாருவைக் குறைகூறும் நான்  அவருடைய நல்ல குணங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஜெயமோகனை மரியாதைக் குறைவாக பேசிய நண்பர் ஒருவரைப் பார்த்து சாரு சொன்னது இது. “இலக்கியம் என்ற தளத்தில் நான் விமர்சிப்பது வேறு. ஆனால் நீங்கள் அவரை உரிய மரியாதையுடன் பேச வேண்டும். அவர் உழைப்புக்கு அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய பண்பு.

சாரு தன்னை ஒரு Auto Fiction Writer என்று சொல்லிக் கொள்வதில் புளகாங்கிதம் அடைகிறார். அவர் மென்மேலும் எழுதுவதற்கு சொந்தக்கதை சோகக்கதை எதுவும் கைவசம் பாக்கி இருக்கிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது.

  • “Dravidian politics and Brahminical indifference to Tamil culture have raped the Tamil language, which has shrunk and become superfluous,”
  •  “The member of Brahmin families talk Tamil only to vegetable vendors and their maids,”

என்றெல்லாம் பிறாமணர்களை சரமாரியாகச் சாடும் சாரு, துக்ளக்கில் எழுதவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சோ புராணம் பாடுவதை நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

“The Dravidians consider Tamil Nadu chief minister M Karunanidhi as an ‘artist’. What is his claim to be an artist?” என்று கேள்வி கேட்கும் சாரு பிறிதொரு சமயம் கனிமொழியின் ‘கருவறை வாசனை’ தொகுப்பு வெளிவந்தபோது தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடினார்.

260477_242766582415927_100000477613498_1029367_3391478_n

நித்யானந்தாவிற்கு தூபம் போட்டது பிறகு ‘பல்டி’ அடித்தது, தமிழச்சியுடனான இணைய உரையாடல், ஜெயமோகனுடன் லடாய், இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவரை பரபரப்பாக பேச வைத்தன.

சாரு தன்னை ‘நாகூர்க்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் ஒருபோதும் பெருமை பட்டுக்கொண்டதாய் எனக்கு தோன்றவில்லை. ‘ஹனிபாவினால் நாகூருக்கு பெருமை’ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ‘சாரு நிவேதிதாவால் நாகூருக்கு பெருமை’ என்று நம்மால் மார்தட்டி பீற்றிக்கொள்ள முடியவில்லை.

– நாகூர் அப்துல் கையூம்

 

Tags: , ,

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?


Nagore Association - Singapore wraper singapore assn

[ஆய்வுக்கட்டுரை : நாகூர் அப்துல் கையூம்]

நாகூருக்கு ஏன் “நாகூர்” என்று பெயர் வந்தது? Miliion Dollar Question என்பார்களே அது இங்கு முற்றிலும் பொருந்தும். பெயர்க்காரணம் குறித்து வரலாற்றாசிரியர்கள் அவரவர்கள் தங்கள் ஆய்வுக்கேற்ப ஏராளமான கருத்துக்களை பதிந்துள்ளனர்.

நாவல்மரம் நிறைந்திருந்த நாவல் காடு
நாகர்களும் வசித்ததாக குறிப்பிடும் ஏடு
நாவலர்கள் வாழ்ந்ததினால் நா-கூர் என்று
நற்றமிழில் பெயர்வைத்தார் நல்லோர் அன்று

என்று நாகூரின் பெயர்க்காரணத்தை நானெழுதிய “அந்த நாள் ஞாபகம்” என்ற நூலில் கவிதை வரிகளில் வடித்திருந்தேன். “நாகூர்” என்ற பெயர் எதனால் வந்திருக்கக் கூடும் என்று ஆழ்ந்து ஆராயுகையில் பல்வேறு சுவாராசியமான தகவல்கள் நமக்கு அரிய பொக்கிஷமாக கிடைக்கின்றன.

தமிழக சுற்றுலா வரைபடத்தில் நாகூர் ஒரு புனித யாத்திரை ஸ்தலம் என்ற வகையில்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றதே அன்றி அதன் தொன்மையான வரலாறு, சங்ககால பெருமை இவற்றினை எடுத்துரைப்பார் எவருமில்லை.

சமயத்தால், வணிகத்தால், தமிழால், வளத்தால் புகழ்பெற்ற ஊர் இது. புகழ்பெற்ற ஆதிமந்தி, ஆட்டனத்தி கதை நிகழ்ந்த ஊர் இது. காவிரிப் பூம்பட்டினம் பேரலையால் சூழப்பட்டு கடலுக்கு இரையானபின், நாகூர் கடல் வாணிகத்தின் நுழைவாயிலாகத் திகழ்ந்ததற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. உரோமானியர், சீனநாட்டார், பர்மியர், சுமத்திரர், அரபியர் என பலநாட்டாரும் கடல் வாணிபம் மேற்கொண்ட தொன்மையான ஊர் இது.

இவ்வூரை நாகரிகத்தின் தொட்டில் என்றாலும் மிகையாகாது. நாகூரின் எல்லையில் ‘பார்ப்பனச் சேரி’ உள்ளது. இது சங்க காலத்திலேயே அங்கு பெருகியோடிய ஆற்றின் அக்கரையில் வந்திறங்கியோர் சேரி அமைத்து தங்கிய இடமாகும். அக்கரையகரங்கள்தான் பின்னர் அக்ரகாரம் என்று மருவின.

“பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான
சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்”

என்று மாராத்திய மன்னன் பிரதாபசிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.

சோழர், களப்பிரர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், விசயநகர அரையர், நாயக்கர், மராத்தியர், போர்த்துகீசியர், ஆலந்தர், ஆங்கிலேயர் என அனைத்து மக்களின் ஆட்சியையும் அனுபவித்த ஊர் இது.

நாகூர் என்ற பெயர் எதனால் வந்தது? நாவல் மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் இவ்வூர் ஒருகாலத்தில் ‘நாவல் காடு’ என்று அழைக்கப்பட்டது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் அவ்வளவாக தென்படவில்லை.

முன்னொரு காலத்தில் நாகப்பாம்பு நிறைந்திருந்த காடு இது. அதனால்தான் நாகூர் (நாக+ஊர்) என்று அழைக்கப்பட்டது என்று வாதிடுகிறார்கள் வேறு சிலர். நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை போர்த்துகீசியர் இடித்ததாக சரித்திரம் கூறுகிறது. “மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது’ என்கிறது ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வெளியிட்ட ஸ்தல வரலாறு. நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் இங்கு வசித்து வந்தாதால் நாகூர் என்ற பெயர் வந்தது என்ற வாதமும் நமக்கு அவ்வளவாக திருப்தியைத் தரவில்லை.

கூர்மையான நா படைத்தவர்கள் வாழும் ஊர் நா+கூர் என்பது சிலரின் வாதம். அதாவது அறம் பாடத்தக்க புலவர் பெருமக்கள் இங்கு வாழ்ந்ததினால் இப்பெயர் வந்ததாம். பழங்காலந்தொட்டே இசைவாணர்களும் எண்ணற்ற தமிழ்ப் புலவர்களும் இங்கு வாழ்ந்ததினால் நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. “நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழ வேண்டும்” என்ற சொல்வழக்கு வெறும் வேடிக்கைக்காக சொல்லப்படுவதன்று.

பதினெட்டாம் நூற்றாண்டில் மட்டும் புகழ்ப்பெற்ற முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் நாகூரில் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சென்ற நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்

“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”

என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே முழுவதுமாக அழிந்து சின்னா பின்னமாகி விட்டதாக முன்னோர்கள் கூற நான் கேட்டதுண்டு.

நாகூருக்கு மிகமிக அருகாமையில் இருக்கும் ஊர் திருமலைராயன் பட்டினம். விஜயநகர வேந்தர்களின் ஆட்சி காலத்தில் சிற்றரசன் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். காளமேகப் புலவன் சினமுற்று பாடிய அறத்தால் அவனது ஆட்சியே சரிந்து அவலத்திற்கு உள்ளானது என்பர்.

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்றுவெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்” என்று பாடிவிட்டுச் சென்றான் காளமேகம்.

அதாவது, கொலைகாரர்கள் வாழும் ஊர். கோள், மூட்டல், வஞ்சகம் செய்தல் முதலியன கற்றிருக்கும் ஊர். காளைமாடுகளைப்போல் கதறித் திரிவோர் நிறைந்த ஊர். நாளைமுதல் மழைபொய்த்து வறண்டு போய் மண்மாரி பெய்யட்டும் என்று அறம் பாடியதால் அந்த ஊரே செழிப்பற்று போனது என்பார்கள்.

புலவர்கள் பாடும் அறப்பாட்டுக்கு பலிக்கக் கூடிய வலிமை உண்மையிலேயே உண்டா இல்லையா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. அது நமக்கு இப்போது தேவையில்லாதது.

அந்நாளில் நாகூரை வடநாகை என்றே பலரும் அழைத்து வந்தனர்.

“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தறம் நன்கு புலப்படும்.

பாக்கு கொட்டைகள் வைத்து ‘கோலி’ விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த பாலகர்களிடம் பசியினால் வாடிய காளமேகப்புலவர் `சோறு எங்கு விக்கும்` என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் ‘தொண்டையில் விக்கும்’ என்று பதில் கூறினார்கள். [விற்கும் என்பதை பேச்சுவழக்கில் இன்றளவும் “விக்கும்” என்று கூறக் கேட்கலாம்] உடனே புலவர் வெகுண்டு அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு“ என்பது வரை சுவற்றில் எழுதி விட்டு, பசியாறிய பிறகு எஞ்சிய பகுதியைப் எழுதி முடிப்பதற்கு அங்கு வந்தபோது அவர் வியப்புற்று போனார். காரணம்

“பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை“ – என்று பாலகர்கள் தங்கள் தமிழாற்றலை வெளிக்காட்டியிருந்தார்கள்.

நாகூர் பகுதி மக்களின் நாவன்மையும், நவரசப் பேச்சும், நையாண்டிச் சாடலும், நகைச்சுவை உணர்வும் நானிலமும் அறிந்த ஒன்று.

நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்று போற்றப்படும் மகாவித்துவான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரின் பெயர்க்காரணத்திற்கு கூறும் கருத்து இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

இந்த நிலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதாம். புன்னை மரங்களுக்கு மற்றொரு பெயர் நாகமரம். மலையாள மொழியில் இதன் பெயர் ‘புன்னாகம்’ என்பதாகும். நாகவூர் என்ற பெயரே பின்னாளில் நாகூர் என்று மருவியது என்கிறார் இவர்.

“போக மாமரம் பலவகை உளவெனிற் புன்னை
யேக வெஒண்மர முதன்மைமிக் கிருத்தலி னிவ்வூர்
நாக வூரெனுந் தலைமைபற் றியபெயர் நண்ணி
யாக மற்றுநா கூரென மரீஇயதை யன்றே
– (செய்கு யூசுபு நாயகர் உபாத்துப்படலம்: 6)

நாகூருக்கு கல்லெறி தொலைவில் இருக்கும் மேலநாகூரில்தான் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்தன. இப்பொழுது குடியிருப்பு இருக்கும் பகுதிகளில் வெறும் புன்னை மரங்கள்தான் பெருகி அடர்ந்திருந்ததாம்.

மற்ற எந்த மரங்களுக்கும் இல்லாத அளவுக்கு புன்னை மரங்களுக்கு தமிழ் இலக்கியங்களில் ஒரு தனி இடம் உண்டு.

“உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை” என்ற நற்றிணை (231) பாடலில் புன்னைமரத்தைப் பற்றிய வருணனையை நாம் காணலாம்.

“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” என்ற திருஞான சம்பந்தரின் பாடலில் புன்னை மரத்தின் பூவானது சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாக வருணனை செய்கிறார்.

நாக மரம் என்பது புன்னை மர இனங்களில் ஒன்றாகும். நாக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த நெடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த சிறிய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரையே படர்வதற்காக நிறுத்திவிட்டுச் சென்ற பாரிவள்ளலைப் பற்றி நாம் இலக்கியத்தில் படித்திருப்போம்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி” என்ற சிறுபாணாற்றுப்படை (88-91) பாடல் வரிகள் இச்சம்பவத்தை எடுத்துரைக்கிறது.

புன்னை மரங்கள் காட்சிக்கு மிக எழிலான தோற்றத்துடன் காணப்படும். இம்மரங்கள் ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியன. புன்னை மரத்தின் இலை, மொட்டு, பூ இம்மூன்றுமே காட்சிக்கு மிக அழகாக இருக்கும்.

தென்பகுதியான இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா இவை அனைத்தும் தரைமார்க்கமாக இணைந்து லெமூரியா கண்டம்/ குமரிக் கண்டம் என்று அழைக்கப்பட்டதாய் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஆதாராமாக இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் மண்புழுக்களும், புன்னை மரங்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவை என்பது அவர்கள் எடுத்து வைக்கக்கூடிய ஆதாரங்களில் ஒன்று. நாகூர் போன்ற தென்னிந்தியக் கடற்கரையோரம் காணப்பட்ட புன்னை மரங்கள்தான் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அடர்ந்திருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் நாகர் இன மக்களின் இங்கு வாழ்ந்ததினாலேயே நாகர்+ஊர் = நாகூர் என்றானது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பதற்கு அவர்கள் எண்ணற்ற ஆதாரங்களை அடுக்கி வைக்கிறார்கள்.

நாகர்கள் என்றால் யார்? இதனை முதலில் தெரிந்துக் கொள்வது அவசியம். நாகர்கள் யார் என்பதிலேயே எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் வரலாற்றாசிரியர்களுக்கு இடையே நிலவுகின்றன.

நாகர் என்னும் சொல் வடமொழியிலும் உண்டு. தமிழிலும் உண்டு. சூழ்நிலைக்கேற்ப சொற்களின் பொருள் மாறுபடும். வடமொழியில் பாம்பு, ஒலி, கருங்குரங்கு, யானை, வானம். வீடு பேற்று உலகம், மேகம் என பொருள்களைத் தரும். தமிழ் மொழியில் மலை, சுரபுன்னை (புன்னாசம்) சங்கு, குறிஞ்சிப் பண்வகை, காரீயம் என்னும் பொருள்களைத் தரும்.

நாகர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அ|ஸ்ஸாம், நாகாலாந்து போன்ற இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர் என்று சிலரும் நாகர்கள் தமிழகத்து பழங்குடியினர் என்று சிலரும் பகர்கின்றனர். நாகநாட்டவர் தமிழ்நாட்டுக் கடற்கரையூர்களான நாகூர், நாகப்பட்டினம் (நாகர்+பட்டினம்), நாகர்கோவில் வழியே தமிழகத்தில் வந்து குடியமர்ந்தனர் என்கின்றனர் வேறு சிலர்.

ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றும், நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்றும் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள் என்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.

முரஞ்சியூர் முடிநாகராயர், முப்பேர் நாகனார், மருதன் இளநாகனார்,தீன்மிதி நாகனார், வெண்நாகனார், அம்மெய்யன் நாகனார், வெண்நாகனார், நாகன் மகன் போத்தனார், எழூஉப்பன்றி நாகன் குமரனார், நாலக் கிழவன் நாகன் என்றெல்லாம் புலவர், புரவலர் பெயர்களை தமிழிலக்கியத்தில் நாம் காண முடிகின்றது.

சங்க காலத் தமிழகத்தில் நாகர், இயக்கர், திரையர், கந்தருவர் என்னும் இனத்தவர் பெருமளவில் வாழ்ந்தனர் என்றும், இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே என்றும் அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போயினர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.

நாகர் புத்த மதத் தொடர்புடன் நுழைந்தனர். ‘புத்தரும், மகாவீரரும் நாக இனப் பெரியோர்களே’ என்று சாதிக்கிறார் கா.அப்பாத்துரை. தமிழகக் கடற்கரை ஊர்களில் வாழ்ந்த ‘நாகர்கள்’ தம்மை ‘ஆரியர்’ என்று அழைத்துக்கொண்ட காரணத்தால்தான் தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் வாழும் மீனவர் தெருக்கள் ‘ஆரிய நாட்டுத் தெரு’ என்று அழைக்கப்பட்டன போலும் என்கிறார் இவர். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு, நாகமரபைச் சார்ந்தது என்றும், புத்தநெறி வங்கத்திலும், தென்னாடு, இலங்கை, பர்மா, சீனா முதலிய இடங்களில் பரவியதற்கு நாகூர் போன்ற இடங்களில் வசித்த நாகமரபினரே காரணம் என்றும் இவர் வாதிடுகிறார்.

புத்த துறவிகளின் நடமாட்டமும், புத்த விகாரமும் இப்பகுதியில் காணப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. சீனப் பயணி யுவான் சுவாங் (கி.பி.629-645) தன் பயணக் குறிப்பேட்டில் அசோகச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட புத்தவிகாரத்தை நாகையில் கண்டதாக எழுதி வைத்துள்ளார். கி.மு. 302-ஆண்டுக்கு முன் வந்த சிரியா நாட்டு மெகசுதனிசு முதல் எகிப்து தாலமி, சீன நாட்டுப் பாகியான், இத்-சிங் முதலியோர் இப்பகுதியை பற்றிய மிகச் சுவையான தகவல்களைத் தந்து உதவியுள்ளனர்.

“சுந்தர பாண்டியன் என்னும் தமிழ் மன்னன் நாகர் குலப் பெண்ணை மணந்தான். அதனால் இவன் சுந்தரநாகன் – சுந்தர பாண்டியநாகன் எனப்பெற்றான்” என்று மார்க்கோ போலோ தம் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.

நாகரிகத்திலும், பண்பிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கியவர்கள் நாகர்கள் என்றால் அது மிகையல்ல. “நாகரிகம்” என்ற சொல்லே “நாகர்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது என்பர். நாகர்கள் வகுத்த எழுத்து முறையே தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒருபுறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவியை கண்டுபிடித்தவர்களும் நாகர்கள்தான். [நாகூர் ‘நகரா மேடை’யில் முழங்கப்படும் அதே நகராவைத்தான் இது குறிக்கிறது]

நாகசுரம் (நாதஸ்வரம்) என்ற வாத்தியக்கருவி நாகூர் நாகை போன்ற இடங்களில் வாழ்ந்த நாகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நாகசுரம், தவில் போன்ற இசைக்கருவிகள் ஆரியப் பிராமணர்களுக்கே உரித்தான கலைகள் அல்லவா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நீங்கள் முணுமுணுப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகின்றது.

ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று விதிவிலக்கு பண்டுதொட்டு இருந்து வருகிறதென்ற உண்மை பெரும்பான்மையான பிராமணர்களே அறிந்திராத உண்மை. மனுதர்ம சாத்திரம் 4-ஆம் அத்தியாயம், 15-ஆம் விதியில் பிராமணர் ‘பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது…. இதுபோன்ற சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது..

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தில் இருந்து தவறிய காரணத்தால் பார்ப்பனர் சிலர் ஊராரால் விலக்கப்பட்டு ஊர் எல்லைக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தியினை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

சங்க காலத்தில் இசைப்பயிற்சியில் கைத்தேர்ந்தவர்களாக இருந்த பாணர், நாகர் குலத்தினரே என்கிறார் மற்றொரு ஆய்வாளர். எடுத்துக்காட்டாக ‘நாகபாணர்’ என்று இலக்கியத்தில் நாம் காணும் பெயர் பாணர்கள் நாக குலத்தினரே என்பதை அறிய உதவுகிறது. சீவக சிந்தாமணியில் இடம்பெறும் “பாணியாழ்”, “பாண்வலை”, “பாணுவண்டு” என்ற சொற்களை ஆராய்ந்தால் பாண் என்னும் சொல், பாட்டு என்னும் பொருளிலேயே கையாளாப்பட்டு வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலும் “பாண்-பாட்டு” என்ற சொல்லைக் காண முடிகின்றது.

நாகூருக்கும் முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழுக்கும் சங்க காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்புண்டு. நுண்கலை வளர்ச்சியில் பேரார்வம் காட்டிய மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் “இசை நுணுக்கம்” என்ற நூலைப்படைத்து நான்காம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. (இவர் கே.பி.சுந்தரம்பாளின் கணவர்) இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர், ஆம். செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம்தான் இசை பயில அனுப்பி வைத்தார். அதனால்தான் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் எழுகிறது.

இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் வாழ்ந்த ஊர் நாகூர். உஸ்தாத் சோட்டு மியான், உஸ்தாத் நன்னு மியான்,உஸ்தாத் கவுசு மியான், உஸ்தாத் தாவூத் மியான் என்று எண்ணிலா இசைவாணர்களின் பெயர்களை எழுதிக் கொண்டே போகலாம்.

உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் . கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவரான நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். இசைமணி எம்.எம்.யூசுப், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா போன்ற எத்தனையோ இசை வல்லுனர்களை பெற்றெடுத்த ஊர் நாகூர்.

நாகூரின் பெயர்க்காரணம் எதுவாக இருப்பினும் முத்தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், பண்பாட்டிற்கும், கடல் வாணிபத்திற்கும் தொன்மையான இவ்வூரின் பங்களிப்பு அளவிட முடியாதது. கடல் கடந்து இவ்வூரின் பெயரில் சங்கம் வைத்து செயல்படும் அன்பர்கள் மார்தட்டி கொண்டாடும் அளவுக்கு அளவிடற்கரிய பெருமைகள் உள்ளன.

இங்குள்ள மக்களுக்கு வஞ்சக குணங்கள் இருப்பதில்லை. வறுமையில் வாடுவதில்லை. தூய்மையான நெறியில் செல்லும் அவர்கள் அச்சமற்ற தன்மை கொண்டவர்கள். நம் பெருமான் உறையும் நாகூரில் வாழும் இவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். பாவங்கள் புரிவதில்லை.

இதை நான் சொல்லவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூர் புராணம் என்ற தன் நூலில் (நகரப்படலம்:4) குறிப்பிடுகிறார்.

“பஞ்ச மற்றது படர்பிணி யற்றது பவஞ்செய்
வஞ்ச மற்றது வறுமைமற் றற்றது, வாழ்க்கை
யஞ்ச மற்றது தீவினை யற்றதன் றாகா
நஞ்ச மற்றது நம்பெரு மானுறை நாகூர்”

 

Tags: , ,

கம்பன் அவன் காதலன் – 8-ஆம் பாகம்


Judge M.M.Ismail addressing the audience

Judge M.M.Ismail addressing the audience

Asmaul Husna

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் கம்ப ராமாயணத்தை ஆராய்ந்து எழுதிய “மூன்று வினாக்கள்”, “கம்பன் கண்ட ராமன்”, “கம்பன் கண்ட சமரசம்”, “வள்ளலின் வள்ளல்”, போன்ற நூல்களைத்தான் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்களேத் தவிர அவர் வரைந்த இஸ்லாமிய நூல்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் மிக மிகக் குறைவு.

அவர் இஸ்லாமியப் பணி எதுவுமே ஆற்றவில்லை என்ற தவறான ஓர் எண்ணம் பொதுவாகவே நம் மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது.

தமிழிலக்கியத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஒர் அளவிலா ஈர்ப்பும், ஈடுபாடும் இருந்ததோ அதே அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் அசைக்கமுடியாத ஒரு பற்றும் பிடிப்பும் இருந்தது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

கம்பராமாயணத்தை ஆய்ந்து அதில் முழுமையான தேர்ச்சி பெற்றதினால் அவருக்கு இஸ்லாமிய இலக்கியத்தின் மீது ஈர்ப்பு கிடையாது என்று அர்த்தம் கொள்ளல் ஆகாது.

இலக்கிய ஆர்வத்திற்கு மதம் ஒரு பொருட்டே அல்ல. இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவரைவிட இஸ்லாமியர் ஒருவர் இந்து சமய இலக்கியத்தில் வல்லுனராக விளங்கினார் என்றால் அது நிச்சயம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்.

அவர் எழுதிய இஸ்லாமிய நூல்களில் “அல்லாவுக்கு ஆயிரம் திருநாமங்கள்” என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பாகும். எத்தனை ஆண்டுகளானாலும் இது வாசகர்கள் மனதில் நிலைத்திருக்கும். காரணம் அதில் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார் அவர்.

அரபு மொழியிலும்,  தமிழ் மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர இயலும். நீதிபதி அவர்களின் மொழியாற்றலை இந்நூலை முழுவதுமாக வாசிக்கையில் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

“அஸ்மாவுல் ஹுஸ்னா” என்றால் அழகிய திருநாமங்கள் என்று அர்த்தம்.

நாட்டை ஆளும் ராஜாவையே “ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, வீராதி வீர, வீர மார்த்தாண்ட” என்றெல்லாம் மனிதன் புகழாரம் சூட்டும்போது, உலகாளும் இறைவனை எப்படியெல்லாம் நாம் போற்றிப் புகழ வேண்டும்? அவனது சிறப்புக்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு அந்த வல்லவனை நாம் தியானிக்கையில்தான் எப்பேர்ப்பட்ட பேரின்பம்? உதாரணமாக, ரஹ்மான் (அருளாளன்), ரஹீம் (அன்பாளன்), என்று பொருளுணர்த்தும் ஒவ்வொரு பெயரும் இறைவனின் தன்மையையும், சிறப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

வணக்கத்திற்குரிய ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு பல வேதங்களிலும், பல மொழிகளிலும் சுமார் மூவாயிரம் திருப்பெயர்கள் உண்டு. இதற்கு வேதவாரியாகப் பட்டியலும் பிற விவரங்களும் உண்டு. இறுதி வேதமான திருக்குர்ஆனிலும் நபிமொழியிலும் சேர்த்து 99 -அழகுத் திருப்பெயர்கள் உள்ளன.

“வணக்கதிற்குரிய ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்” (அல்-அஃராப் 7:180) என்றுரைக்கிறது திருக்குர்ஆன்

திருமறையில் 81 பெயர்களும், நபிமொழியில் 18 பெயர்களும் ஆக மொத்தம் 99 அழகுத் திருப்பெயர்களால் இறைவனை முஸ்லீம்கள் துதிக்கிறார்கள்.

நம் இடது உள்ளங்கையில் அரபி எண் 81-ம், வலது உள்ளங்கையில் அரபி எண் 18-ம் காணப்படுவது இதனால்தானோ?.

HandAllah's name in our palm

“அல்லாஹ்விற்கு 99 – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி:6410 அபூஹூரைரா (ரலி).

“நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – அதனை மனனம் செய்தவர் – என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா – ரலி, நூற்கள்: புகாரீ 2531, முஸ்லிம்)

ஒவ்வொரு திருப்பெயர்களில் அடங்கியிருக்கும் அர்த்தங்களும் அதில் வெளிப்படும் விளக்கங்கள், அற்புத கருத்துக்கள் மற்றும் ஆழ்ந்த பொருட்செறிவும் இறைவனின் தன்மையை உணர்த்தும் அற்புதப் பிழிவாகும்.

“யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்'” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் – 199)

இறைவனின் திருநாமங்களின் சிறப்புகளை எடுத்தியம்பும் வகையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

டாக்டர் இப்ராஹிம் கரீம் என்ற மருத்துவ ஆய்வாளர் இறைவனின் சில குறிப்பிட்ட பெயர்களை ஒவ்வொன்றாக உச்சரிக்கையில் மனித உடலில் சில குறிப்பிட்ட உறுப்புக்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். தனது மூன்றாண்டு ஆராய்ச்சியின் முடிவில் மருத்துவ ரீதியாக நோய்களை குணமாக்கக்கூடிய அபூர்வ சக்தி (Healing Power) அப்பெயர்களுக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்.

எல்லா வல்ல இறைவனின் தன்மையை உணர்த்தும் பெயர்களை உச்சரிக்கையில் இத்தனை சிறப்புக்களா? என்று நாம் வியந்து போகிறோம்.

அஸ் ஸமி (As-Sami) என்று தியானிக்கையில் காதுகள், அல் நஃபி (Al Nafi) என்று தியானிக்கையில் எலும்புகள், அல் கவி (Al-Qawi) என்று தியானிக்கையில் தசைகள், அல் முக்னி (Al Mughni) என்று தியானிக்கையில் நரம்புகள் – இப்படியாக இறைவனின் ஒவ்வொரு பெயரின் துதிபாடலுக்கும் ஒவ்வொரு உடலுறுப்புகள் வலிமை பெறுவதற்கான அறிகுறிகளை டாக்டர் இப்ராஹீம் கரீம் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இறைவனின் 99 நாமங்களில் சில நாமங்கள், தீராத வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்தாக விளங்குகிறது என்று அவரது ஆராய்ச்சி பறைசாற்றுகின்றது. எடுத்துக்காட்டாக அல் ஜலீல் (Al-Jalil) என்ற நாமம் கேன்ஸர் வியாதிக்கும், அல் ஜப்பார் (Al-Jabbar) என்ற நாமம் Thyroid சிகிச்சைக்கும், அல் கனி (Al-Ghani) என்ற துதி Migraine (ஒற்றைத் தலைவலி) சிகிச்சைக்கும், அல் காஃபித் (Al-Khafed) என்ற இறைநாமம் இரத்தக்கொதிப்புக்கு நிவாரணியாக அமைவதாகவும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

இப்படியாக அனைத்து 99 திருநாமங்களுக்கும் குணப்படுத்தும் அற்புதத் தன்மை உள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. சில இல்லங்களில் திருஷ்டி பொம்மையை கட்டி தொங்க விடுவதைப்போன்று இந்த இறைவனின் நாமங்களை கண்ணாடி பிரேம் இட்டு மாட்டி வைப்பதினால் மட்டும் பயன் ஏதும் கிட்டி விடப்போவதில்லை. இறை நம்பிக்கையோடு ஆத்மார்த்த ரீதியில் உள்ளச்சத்தோடு இந்த அழகிய திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமே பயனடைய முடியும்.

மருத்துவ உலகில் இல்லாத மருந்துகளா? அவைகள் தராத நிவாரணத்தையா இந்த இறைநாமத்தின் துதிப்பு நிவாரணம் தந்து விடப்போகின்றது என்று சிலர் எண்ணக்கூடும். “Be faithful in small things because it is in them that your strength lies.” என்ற அன்னை தெரசாவின் பொன்மொழிதான் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது.

“More things are wrought by prayer than this world dreams of.” என்ற லார்ட் டென்னிஸனின் வார்த்தைகள் பொய்யல்ல. மனிதன் நினைத்துக்கூட பார்க்க முடியாத சில அதிசயங்களை அவரவர் வாழ்வில் இறைநம்பிக்கை நிகழ்த்திக் காண்பித்திருக்கிறது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு மருத்துவர் கூறும் இறுதி வார்த்தைகள் “இனி எங்கள் கைகளில் எதுவும் இல்லை. இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” என்பதாகத்தான் இருக்கும்.

அந்த இறை வேண்டுதலின் ஒரு பகுதிதான் இந்த இறைநாமங்களின் உச்சரிப்பு. இசைக்கு வியாதிகளை குணப்படுத்தும் அபூர்வசக்தி உண்டென்று நம்புபவர்கள, அகில உலகத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆண்டவனின் தன்மையை எடுத்துரைக்கும் அவனது பெயர்களுக்குள்ள அபூர்வசக்தியை ஏன் உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.

இறைவனின் திருப்பெயர்களின் தன்மைகளை தெள்ளத் தெளிவாக விளங்கியதோடன்றி அதனை பலரும் அறிந்துக்கொள்ளும் வண்ணம் “அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்” என்ற பெயரில் நூல் எழுதிய பெருமை நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

ஏம்பல் New

ஏம்பல் தஜம்மல் முகம்மது

“அஸ்மாவுல் ஹுஸ்னா – இவற்றின் அருமையை உணர்ந்து விரித்துரைத்த பேரறிஞர் – எனக்குத் தெரிந்தவரையில் – ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள்தாம். அஸ்மாவுல் ஹுஸ்னாவில் உள்ள ஒவ்வொரு திருப்பெயரைப் பற்றியும் ஒரு மாத இதழில் தொடராக வருடக் கணக்கில் எழுதி நிறைவு செய்தார்- எண்பதுகளின் இறுதியில்; அந்தத் தொடர் பின்னர் ஒரு நூலாகவும் வெளியானது. அது இப்போது கிடைத்தாலும் ஆழ்ந்து, பொறுமையாகப் படிக்கக்கூடியவர்கள் அரிதாகிப் போன காலம் இது. எனினும் எனக்கு மட்டும் “அஸ்மாவுல் ஹுஸ்னா”வை இளைய தலை முறையினருக்கு எளிய முறையில் எத்தி வைத்துவிடவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது” என்று நீதிபதி ஐயா அவர்களுக்கு புகழ்மாலை சூட்டுகிறார் இஸ்லாமிய அறிஞரான ஏம்பல் தஜம்மல் முகம்மது.

நமது அடுத்த பதிவில் நீதிபதி அவர்கள் எழுதிய இனிக்கும் இராஜநாயகம் என்ற இஸ்லாமிய இலக்கிய நூலைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.

– இன்னும் வரும்

IMG_0004

 கம்பன் அவன் காதலன் – 7-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

 

Tags: , , , , ,

Image

வாடா


ஓட்டை இருப்பது ஓசோனில் மட்டுமா? இல்லை எங்க ஊர் வாடாவிலும்தான்.

நாகூருக்கு ‘டபுள்டெக்கர்’ லாரியில் வருகை புரியும் ஆந்திராக்காரர்கள் நாகூர் வாடாவை சாப்பிட்டுவிட்டுத்தான் அவர்கள் ஊருக்கும் விஜயவாடா என்று பெயர் வைத்திருப்பார்களோ  என்னவோ.

வடைக்கும், வாடாவுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. வடை பெண்பால் என்றால். வாடா ஆண்பால்.

வடை மெதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். அதனால்தான் அதற்குப் பெயர் மெதுவடை.

வாடாவில் ஒரு முறுக்கேறிய முரட்டுத்தன்மை. பொருத்தமாகத்தான் ஆண்பாலொத்த அழகானப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

எழுத்தாளர் சுஜாதா நாகூர் வாடாவை சுவைத்திருப்பாரேயானால் குஸ்காவைப்போல் இதையும் வாசகர்கள் மத்தியில் பிரபலப் படுத்தி இருப்பார்.

பெயர்தான் கேட்பதற்கு மரியாதைக் குறைவாக இருக்கிறதேயன்றி, மாலைவேளையில் நாகூர் வரும் விருந்தினர்களுக்கு கிடைக்கும் ‘முதல்மரியாதை’  இந்த பண்டம் மூலமாகத்தான்.

நாகூர் வருகை தந்த வெளியூர் நண்பர் ஒருவரிடம் “வாங்க, வாடா சாப்பிடலாம்” என்று நான் அன்புடன் விருந்துபசாரம் செய்யப்போக அவர் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா…

“வாங்க” என்று  நான் மரியாதையாக கூப்பிடுகின்றேனா அல்லது “வாடா” என்று மரியாதைக் குறைவாக நான் அவரை அழைக்கின்றேனா என்று மனுஷர் ரொம்பவும்தான் குழம்பிப் போய் விட்டார்.

“வாடா” என்ற தின்பண்டம் நாகூரில் மிகவும் பிரசித்தம் என்று அந்த  நண்பரிடம் சொன்னதுதான் தாமதம். “அப்படியா?” என்று  ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார். “பாரதியாரே இந்த தின்பண்டத்தை விமர்சித்து பாடியிருக்கிறானே. உங்களுக்குத் தெரியாதா?” என்று மேலும் நான் தொடர்ந்ததும் “ஓ! அப்படியா!” என்று அவர் ‘ஆ’வென்று வாயைப்பிளக்க நான் ஒரு E.N.T.  ஸ்பெசலிஸ்ட் ஆகிப்போனேன்.  ஆம். அவர் பிளந்த வாயில் அவருக்கிருந்த டான்ஸில்கூட தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

“காலா என் முன்னே வாடா
கண் உனக்குண்டோ அன்றோ”

என்று வாடாவைப்பற்றி பாரதியார் பாடியிருக்கிறார் என்று நான் சொன்னபிறகுதான் நான் அவரை கலாய்க்கிறேன் என்பதை கற்பூரமாய் புரிந்துக் கொண்டார்.

நாகூர் ஸ்டைல் வாடாவுக்கும், காயல் ஸ்டைல் வாடாவுக்கும் குமுதத்தில் வரும் ஆறு வித்தியாசம் போல நிறைய வித்தியாசங்கள் உண்டு. ‘மஞ்சள் வாடா’, ‘தொப்பி வாடா’, ‘சூலி வாடா’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காயல்வாடாவுக்கும், நாகூர் வாடாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அதன் உருவ அமைப்பிலும், சுவையிலும்தான்.

“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். வாடிப்போகும் சோற்றினை வாடாத வண்ணம் வகை செய்து, ஒரு தின்பண்டத்தையும் தயாரித்து அதற்கு “வாடா” அன்ற அழகான தமிழ்ப்பெயரையும் கொடுத்து விட்டார்கள்.

சில ஹோட்டல்களில் தேங்காய் சட்னியில் நறநறவென்ற பதத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே புளியங்கொட்டையை அரைத்து கலப்படம் செய்வார்கள். காரணம் மண் கலந்தாற்போன்ற அந்த நறநறத்தன்மையும் சுவையைக் கூட்டும் என்பதால்.

மொறுமொறுவென்றிருக்கும் அந்த வாடாவின் சுவையே அந்த நறநறத்தன்மைதான், வாயில் போட்டு மெல்லுகையில் ஒருவித புத்துணர்ச்சி எங்கிருந்துதான் வருகிறதோ தெரியாது.

ஊறவைத்து அரைத்த அரிசி, அரைத்த சோறு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து, வடைபோல் தட்டி, நடுவில் விரலால் ஒரு ஓட்டையும் விட்டு பொறிப்பதுதான் வாடா.

நம் சட்டத்தில் ஆயிரம் ஓட்டை இருக்கும் பட்சத்தில் நம்மூர் வாடாவில் ஒரே ஒரு ஓட்டை இருக்கக்கூடாதா என்ன?

சங்கீதாஸ் போன்ற உணவகத்தில் இட்லி ஆர்டர் செய்கையில் இட்லியின்  நடுவில் மெலிதாக காரட் ஒன்றை நறுக்கி, பொட்டு வைத்தார்போல் அழகு படுத்தி பரிமாறுவார்கள்.

வானத்தில் தென்படும் நோன்பு பிறைபோன்று அழகாக பதித்து பொன்னிற பதத்தில் வாடாவை பொறித்து எடுக்கும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும்.

மீந்துப்போன இட்லியை பொறித்து அதற்கு “Fried Idly” என்று பெயர் வைத்து பெரிய உணவகங்களில் விற்பனை செய்வதுபோல், பொறித்த வாடாவையே மீண்டும் மாவில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து அதற்கு “பொறிச்ச வாடா” என்று பெயர் வைத்தவர்களை பாராட்டத்தான் வேண்டும். “பொறிச்ச இட்லிக்கு” நம்மூர்க்காரர்கள்தான் முன்னோடியோ என்னவோ எனக்குத்தெரியாது.

இனிப்பாக இருக்கும் இன்னொரு தின்பண்டத்திற்குப் பெயர் சீனிவாடா.

இட்லிக்கு சாம்பார், இடியாப்பத்திற்கு பாயா, பூரிக்கு உருளைக்கிழங்கு என்ற காம்பினேஷன் உருவாகியதைப்போல் வாடாவுக்கு காம்பினேஷன் “உள்ளடம்”. (என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்?

வெங்காயமும், தேங்காய்ப்பூவும், உப்பும், மஞ்சளும் கலந்து எண்ணையில் பக்குவமாய் வதக்கிய கலவையை வாடாவுக்கு காம்பினேஷனாக சாப்பிடுகையில் ஏற்படும் அலாதியான சுவையை என்னவென்று வர்ணிப்பது?

வாடாவை வாயில் சற்று நேரம் நறநறவென்று மென்று கொண்டே மெதுவாய் ரசித்தபடி அசைபோட்டுச் சுவைப்பதில் ஒரு கலைநயம் இருக்கத்தான் செய்கிறது.

பெரும்பாலானோர் வீட்டில் பிரியாணி மீந்துப் போனால் அடுத்தநாள் ‘பிரியாணிவாடா’ நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

மீசையையும் தாடியையும் மழித்துவிட்டு ‘கட்டை’ தெரிய நான் காட்சி தந்தபோது “என்ன பொறிச்ச வாடா மாதிரி ஆயிட்டீங்க?” என்று நண்பன் சாஹுல் ஹமீது புரிந்த கமெண்ட்டை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

எப்படித்தான் இவர்கள் பொருத்தமான உவமையை தேடிப்பிடித்து ஒவ்வொருவரும் கம்பன்களாக ஆகிவிடுகிறார்களோ என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு.

கீழைநாடுகளெங்கும் பரந்து வணிகம் புரியும் நம்மூர் மக்களுக்கு மாத்திரம் மார்கெட்டிங் செய்யும் ‘நேக்கு போக்கு’ சற்றே தெரிந்திருந்தால்,  இன்று அகில உலகச் சந்தையில் ‘Donut’க்கு போட்டியாக வாடாவையும், ‘French Fries’க்கு போட்டியாக காண்டாவையும், ‘Teriyaki’க்கு போட்டியாக கொத்துப்புரோட்டாவையும் இறக்கி விட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் எனக்குள் ஆட்டிப் படைக்கிறது.

“வாடா எப்படி செய்வது?” என்று அறிய விரும்பும் வாசகர்களுக்கு  சகோதரி நிலோஃபர் ரியாஸ் வழங்கும் செய்முறை விளக்கம் இங்கே:

NAGORE VAADA

If you have leftover pulao in your house then vaadaa is the perfect snack to make. I learnt this recipe from my mother-in-law who makes very tasty vaadaas. This dish is very famous in roadside shops in Nagore, a coastal town in Tamilnadu. Its crispy outer and soft inner makes it irresistible. Though it is very tasteful with prawn, you can also make without prawns.

You need

Raw rice 3/4 cup
Leftover pulao 1/2cup
Onion(thinly sliced) 1/4 cup
Coconut(grated) 1/4 cup
Soda bi carb a pinch
Salt to taste
Prawns(small) 10- 12(optional)
Oil to fry

Preparation

Allow the Pulao to ferment for 15 to 20hrs. The time differs with the seasons. For hotter climate the time to ferment will be less, for very cold climate it will little more time. Wash and soak the raw rice for 1 1/2 to 2 hours. Drain the rice and leave it aside for an hour. In a kadai heat 1 1/2 tbsp of oil and saute the onions till it turns pink, then add the grated coconut and saute for 1 1/2 minutes.

In a mixing bowl add the fermented pulao rice, raw rice, the onions and coconut mixture,salt to taste, and a pinch of soda bi carbonate. Mix well and again allow the mixture to ferment for 12 hours.

If you are using Prawns, shell the prawns leaving the tail intact, de-vine and clean.
Half cook the prawns in salt water.
Heat enough oil to fry in a kadai.
Shape the mixture into round patties and make a hole in the center.
If you are using prawns place them on one side of the patties.

Deep fry the patties to golden brown colour.

Hot and tasty vaadas are ready to eat. you can have them on their own or with onions sauted with turmeric and salt.
Bon Appetite!

தொடர்புடைய சுட்டி :

ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி

 
 

Tags: , , , ,

இஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி


(“கவிதையா? ஊ..ஹூம். மூச்.. கூடாது” என்று சில முல்லாக்களும், “வேண்டாம்பா.. அது தரித்திரம்” என்று என் பெற்றோர்களும், “கவிதை இஸ்லாத்திற்கு எதிரானது” என்று சில தவ்ஹீத் நண்பர்களும் எனக்கு அறிவுறுத்த, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நான் முழி பிதுங்க, என் நண்பன் நாகூர் ரூமியின் கட்டுரை எனக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது. எனக்கு ஆபத்து வந்த தக்க சமயத்தில் என்னை இழிச்சொல்லிலிருந்து காப்பாற்றிய நண்பனைப் பார்த்து “A friend in need is a friend indeed” என்று பாராட்டத் தோன்றுகிறது – அப்துல் கையூம்)

மனிதனையும் படைத்து
அவனுக்கு திருக்குர்னையும் அருளி
அதில் “கவிஞர்கள்” ( சூரத்துஸ் ஷ¤அரா) என்று
ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து
கவிஞர்களை கண்ணியப் படுத்திய
பிரபஞ்ச மகா கவியாகிய
இறைவனுக்கே புகழனைத்தும்.

இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஒரு கம்பன், காளிதாசன், மெளலானா ரூமி, உமர் கய்யாம், ஹகீம் சனாய், அல்லாமா இக்பால், காலிப், தாகூர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நம்மில் பலர் இன்று புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் பலர் நாடறியப் பட்டவர்களாக, ஏன் உலக அளவில் அறியப்பட்டவர்களாகக்கூட இருக்கின்றனர். அறியப்பட வேண்டிய பலர் அறியப்படாமல் கிடப்பதும் வேறு சிலர் தேவைக்கு அதிகமான புகழையும் விமர்சனத்தையும்கூட சம்பாதித்துக் கொண்டவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் கவிதை என்றாலே இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்று என்று ஒரு கருத்து இருப்பதை பலருடன் பேசியதிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.

கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளை அவ்வப்போது எழுதுகின்ற பழக்கம் கொண்டவனாக நானும் இருப்பதால் எனக்கு அது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. உண்மையிலே இஸ்லாம் கவிதைகளை தரிக்கவில்லையா? தரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்காமலாவது இருக்கிறதா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன.

திருக்குர்-ஆனும் ஹதீதும் கவிதைகளை எதிர்ப்பதாக சொல்லப்பட்ட தகவல்கள் என்னை பயமுறுத்தின. எனவே நான் அது பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளப் புறப்பட்டேன். என் பயணத்தில் நான் கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

திருக்குர்ஆனும் ஹதீதுகளும் கவிதைகளை எதிர்க்கின்றனவா? முதலில் இந்தக் கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திருக்குர்னிலே கவிஞர்கள் என்ற 26வது அத்தியாயத்தின் வசனங்கள் 224 முதல் 226 வரை கவிஞர்களுக்கு எதிராகப் பேசுகின்றன :

224 : கவிஞர்கள் – அவர்களை வழி கெட்டவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.

225 : நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் ( மனம்போன போக்கில்) திரிகிறார்கள் என்பதை நீர் பார்க்கவில்லையா?

226 : இன்னும் நிச்சயமாக அவர்கள் (சொல்வன்மையினால்) தாங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) கூறுகின்றனர்.

மேற்காணும் மூன்று வசனங்களும் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் எதிரானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்பதை எழுதாத விதியாகக் கொண்ட கவிதைகளுக்குத்தான் இது பொருந்தும்.

ஏனென்றால் இந்த வசனங்கள் மக்காவில் அருளப்பட்டபோது என்னைப்போலவே பயந்தும் குழம்பியும் போன மக்காவின் தலைச் சிறந்த முஸ்லிம் கவிஞர்களாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, க’அப் இப்னு ஜுஹைர், ஹஸ்ஸான் இப்னு தாபித் கியோர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டனர்.

பெருமானர், அவர்களைத் தேற்றி இவ்வசனங்கள் அவர்களைப் போன்ற உன்னதமான கவிஞர்களுக்குப் பொருந்தாது என்றும் பொய்யை அழகாகப் புனைந்து கூறுபவர்களையும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தவர்களையும்தான் இவ்வசனங்கள் சாடுகின்றன என்றும் நல்ல கவிஞர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்றும் சொல்லி அடுத்த வசனத்தையும் ஆதாரம் காட்டி ஆறுதல் சொல்கின்றனர் :

227 : ஆனால் ஈமான் கொண்டு நற்காரியங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழிவாங்கினார்களே அத்தகையோர்களைத் தவிர ( மற்றவர்கள் குற்றவாளிகள் ).

எனவே இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கவிதைக்கு எதிரான ஹதீதுகளையும் அணுகவேண்டும். அதோடு, பெருமானர் ஒரு தீர்க்க தரிசியே அன்றி ஒரு கவிஞரல்ல என்ற வசனத்தையும் (சூரா ஹக் 69:41) ஒரு கவிஞன் என்பவன் தீர்க்கதரிசியைப் போல இறையருள் பாலிக்கப்பட்டவன் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிற்க, கவிதைக்கு தரவாக இஸ்லாமிய வரலாற்றில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கப் புகுந்தால் அங்கே வியப்பூட்டும் தாரங்களும் நிகழ்வுகளும் கொட்டிக்கிடக்கின்றன !

யார் மகா கவி?

ஒரு முறை நான் என் பள்ளிக்கூட தமிழாசிரியரிடம் மகாகவி என்றால் யார்? ஏன் கம்பன், பாரதியார் இவர்களை மட்டும் மகாகவி என்று சொல்கிறோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.

மகாகவி என்று சொல்லப்பட்டவர்கள் யோசித்து கவிதை எழுதிக்- கொண்டிருக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களிடமிருந்து கவிதை கொட்டியது. அருவிபோல பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் நாமாக இருந்தால் ஓடிப்போய் தூக்குவோம். ஆனால் பாரதி அதுமட்டும் செய்ய மாட்டான். ” ஓடி விளையாடு பாப்பா” என்று உடனே பாட்டும் பாடிவிடுவான்.

வீட்டுக்கு சமைக்க கஷ்டப்பட்டு வாங்கி வரும் அரிசியை காக்கைக்கும் குருவிகளுக்கும் போட்டுவிட்டு உடனே “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடுவான்.

அதனால்தான் அவன் மகாகவி என்றார். அந்த விளக்கம் எனக்கு சரியானதாகவே பட்டது.

உண்மைதான். ஒரு கவிதை எழுத நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?!

இஸ்லாமிய வரலாற்றின் மகாகவிகள் இஸ்லாத்தில் கவிதையின் இடத்தைப் பார்க்கப் புகுவோமானால் அதன் வரலாற்றில் நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்துக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று அங்கே மகா கவிகள் மலிந்து கிடந்தார்கள் என்பது !

ஆம், என் ஆசிரியர் மாகாகவிக்கு சொன்ன வரையறையை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் சொல்ல முடிகிறது !

ஒரு சின்ன உதாரணம் குஸா குலத்தைச் சேர்ந்த இப்னு சலீம் என்பவர் பெருமானாரிடம் வருகிறார். தமது குலத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் சொல்லிக்காட்டி பெருமானாரின் பாதுகாப்பைத் தேடுவதே அவரது நோக்கம்.

பெருமானாரை அவர்களது பள்ளிவாசலில் சந்திக்கும் அவர், மனதை உருக்கும் விதமாக தங்களது நிலையை விளக்கி ஒரு கவிதை பாடுகிறார் !

எனக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. துயர உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு மனிதன் இருக்கும்போது அவனால் அழவோ புலம்பவோ மெளனமாக இருக்கவோதான் முடியும் என்று நான் அறிவேன்.

ஆனால் வரலாற்றில் இங்கே, கல்வியறிவு இல்லாத ஒரு மனிதன் அந்த மாதிரியான கட்டத்தில் கவிதை பாடியுள்ளான் ! கவிதை புனையக்கூட இல்லை ! அப்படியென்றால் என் தமிழாசிரியரின் வரையறைப்படி அரேபியர் அனைவருமே மகாகவிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை !

அரேபிய நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த அன்றாட அற்புதங்களில் இதுவும் ஒன்று ! ஒரு வகையில் அரேபிய நாட்டின் வரலாறு கவிதையின் வரலாறாகவே உள்ளது.

வீரர்களை விட கவிஞர்களுக்கே மக்கள் அதிக மதிப்பு கொடுத்தனர். அரேபியர்களின் கலாச்சாரத்தில் இருந்து கவிதை பிரிக்க முடியாத ஒரு அடிப்படையான கூறாக உள்ளது. கவிதை அந்த காட்டரபிகளின் கூடப் பிறந்தது. அதன் காரணம் அரபி மொழியின் கவிதைத் தன்மையா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பது இப்போது நமது ஆராய்ச்சிக்கு உரிய விஷயமல்ல.

பொய்யான கவிதைகளைச் சாடும்போதுகூட இறைவன், “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்..” என்று ஓர் அழகான கவிதையை அல்லவா சொல்கிறான் !

கவிதையை அரேபியர்கள் “அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்” (ஸிஹ்ர் ஹலால்) என்றே வர்ணித்தனர். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தலைச்சிறந்த ஊடகமாக கவிதையை அரபிகள் கண்டனர்.

கவிஞன் என்பவன் ஜின் அல்லது ஷைத்தானால் தூண்டப்பட்டே எழுதுகிறான் என்று அவர்கள் நம்பினர். ஒரு முழுமையான மனிதனுக்குரிய அடையாளமாக மூன்று விஷயங்கள் இஸ்லாத்தின் வரலாற்று ரீதியான வருகைக்கு முந்திய அறியாமைக் காலத்தில் அறியப்பட்டன.

அவை: கவிதை, அம்பெய்தல், குதிரை ஏற்றம் ஆகியவையே என்று அரேபியர்களின் வரலாறு என்ற நூலில் (The History of the Arabs) அதன் ஆசிரியர் ·பிலிப் கே ஹிட்டி கூறுகிறார்.

அரேபிய இலக்கியமே கஸீதா என்று பொதுவாக அறியப்பட்ட, அழைக்கப்பட்ட கவிதையிலிருந்து ஊற்றெடுத்துப் பிறந்ததுதான். அரபிகளின் கலாச்சார சொத்தாக இருந்தது கவிதை. கவிஞர்கள் தங்கள் புகழையும் கீர்த்தியையும் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஆண்டு தோறும் துல்காயிதா மாதத்தில் கூடும் உக்காஸ் என்று சொல்லப்பட்ட சந்தையைப் பயன் படுத்திக்கொண்டனர்.

அப்போது நடைபெறும் கவிப்- போட்டிகளில் ஒவ்வொரு குலத்தின் கவிஞரும் தமது வீரம், ஈகை, மற்றும் மூதாதையர்கள் பற்றி பெருமையாகவும் விபரமாகவும் கூறுவர்.

போர்க்களத்தில்கூட வீரர்களின் வாட்களின் கூர்மைக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக கவிஞர்களின் நாக்கு இருக்கவில்லை. அந்தக்கால அரபிகள் மனிதர்களின் அறிவை அவர்களின் கவிதையை வைத்தே அளந்தனர். தனது சமுதாயத்தின் வரலாற்று சிரியனாகவும் விஞ்ஞானியாகவும் அவர்கள் கவிஞனையே கண்டனர். அரேபியா “கவிஞர்களின் தேச” மாகவே இருந்தது.

ஆறு வகையான கவிஞர்கள்

வரலாற்று அறிஞர்கள் அரேபிய கவிஞர்களை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.

1. அல் ஜாஹிலிய்யூன்.

இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்து கவிஞர்கள். ஜுபைர், தரா·பா, இம்ரவுல் கய்ஸ், அம்ரிப்னு குல்சும், அல் ஹாரிது, அந்தாரா போன்ற மூத்த கவிஞர்கள்.

2. அல்முஹ்ஜரமூன்.

அறியாமைக் காலத்தில் பிறந்து பின்பு இஸ்லாத்தைத் தழுவிய கவிஞர்கள். லபீத், போன்றவர்கள். இவர்களைப் பற்றி பல ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ளது.

3. அல்முதகத்திமூன்.

இஸ்லாத்துக்கு வந்தபெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். ஜரீர், ·ப்ரஸ்தக் போன்றவர்கள்.

4. அல்முவல்லதூன்.

முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள். பஷார் போன்றவர்கள்.

5. அல் முஹ்திசூன்.

மூன்றாவது தலைமுறையின் முஸ்லிம் கவிஞர்கள். அபூ தம்மாம், புஹ்தரி போன்றவர்கள்.

6. அல் முத’ஆஹிரூன்.

ஐந்துக்குப் பிறகு வரும் எல்லாக் கவிஞர்களும்.

மூன்று நான்கு ஐந்தாவது பிரிவில் உள்ளவர்களை முறையே சஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப’அத் தாபியீன்கள் காலத்தோடு பொருத்திப் பார்க்க இயலும்.

முஅல்லகாத் என்பது என்ன?

அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை க’அபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்கவிடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயர். அதுவும் சாதாரணமாக அல்ல. தங்கத்தில் எழுதி ! இப்படி எழுதி தொங்கவிடப்பட்ட தங்கக் கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

ஏழு பேருடைய கவிதைகள் இந்த அந்தஸ்தைப் பெற்றன.

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பிரிவில் முதல் இரண்டு பிரிவில் உள்ள கவிஞர்கள்தான் அவர்கள். அதில் லபீத் மட்டும் இஸ்லாத்தில் இணைகின்ற பாக்கியம் பெற்றார்.

அவருடைய இறைவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடிய அசத்தியமே என்ற பொருள்படும் அலா குல்ல ஷையின் மா ஹலல்லாஹ¤ பாதில என்ற கஸீதா க’அபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டது மட்டுமல்ல அது பின்னால் பெருமானாரிடம் “உண்மையைச் சொன்ன கவிஞர்களிலேயே லபீத் மிகச்சிறந்தவர்” என்ற புகழுரையையும் சம்பாதித்துக் கொண்டது.

கவிதையின் வலிமை இஸ்லாம் மெல்ல பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் எதிரிகள் வன்முறையிலும் வாள், அம்புகளைக் கொண்டு மட்டும் எதிர்க்கவில்லை. கவிதைகளைக் கொண்டும் கடுமையாக எதிர்த்தார்கள்.

மதினாவில் அவ்ஸ் கோத்திரத்தாரில் பெருமானாரை எதிர்ப்பவர்களில் ஒருவரான மர்வான் என்பவருக்கு அஸ்மா என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் கவிதைகள் புனைவதில் கெட்டிக்காரி. அன்சாரிகள் அறிவு கெட்டு அந்நியர் ஒருவரின் பேச்சில் மயங்கி தங்கள் மக்களை பத்ரு போரில் காவு கொடுத்து விட்டார்கள் என்ற பொருள்படும் கவிதை பாடினாள்.

அந்த கவிதையை மக்கள் பலரும் பாடக்கேட்ட ஒரு முஸ்லிம் ஆத்திரமடைந்து அஸ்மாவைக் கொலையே செய்துவிட்டார் !

ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட கவிதைகளையும் கவிஞர்களையும் பெருமானார் வெறுத்ததற்கு இதுவே முக்கியமான காரணம்.

” கவிதையால் நிரம்பிய வயிறைவிட கெட்டுப்போன உணவால் நிரம்பிய வயிறே பரவாயில்லை.” என்று பெருமானார் சொன்னதையெல்லாம் எதிர்ப்பான காலகட்டத்தின் ஒளியில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

க’அப் இப்னு ஜுஹைர் என்ற கவிஞரைக் கண்டவுடன் கொல்லும்படி பெருமானார் உத்தரவிட்டிருந்தார்கள் என்றால் கவிதை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது போதுமானது.

பின்னாளில் இதே ஜுஹைர்தான் பானத் சுத் என்ற புகழ் பெற்ற புகழ்ப்பாடலான முதல் புர்தாஷரீ·பை பெருமானார்மீது பாடி அவர்களின் போர்வையையும் பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதினாவின் க’அப் இப்னு அஷ்ர·ப் என்ற புகழ் பெற்ற கவிஞன் மக்கா சென்று பாடிய முஸ்லிம் விரோத கவிதைகளுக்கு எதிராக எதிர்ப்பாட்டு புனையுமாறு பெருமானார் ஹஸ்ஸானுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு முறை மதினாவில் பெருமானாருக்கும் பனூ தமீம் கூட்டத்தாருக்கும் நாவன்மை, கவித்திறமை இவைகளில் போட்டி நடந்தது. பனூ தமீம் சார்பாக அல் ஜிப்ரிகான் இப்ன் பத்ரு என்பவர் தம் பாட்டுத்திறமையைக் காட்டினார். பெருமானார் சொன்னதன் பேரில், ஹஸ்ஸான் முஸ்லிம்கள் சார்பாக எதிர்ப்பாட்டுக்கள் பாடி பதிலளித்து வென்றார்.

ஹஸ்ஸான் கவிதை பாடுவதற்கென பெருமானரின் பள்ளிவாசலில் தனி மேடையே அமைக்கப்பட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் !

அவருடைய கவிதைகளுக்கு ரூஹ¤ல் அமீன் ஜிப்ரீல் (அலை)அவர்களைக் கொண்டு உதவி புரியுமாறு பெருமானார் இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் !

இந்த மாதிரியான காலகட்டங்களில்தான் ” கவிதை நல்லதெனில் நல்லது கெட்டதெனில் கெட்டது” என்றும் ” சில கவிதைகளில் ஞானம் உள்ளது” என்றெல்லாம் பெருமானார் சொல்லியுள்ளார்கள்.

போர்க்களங்களில் கவிதை

கவிதை போர்க்குணம் கொண்டதாக இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய வரலாற்றில் பல போர்க்களங்களோடு அது தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக போர்க்களங்களில் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக வட்டப்பறையடித்து பாடல்கள் பாடும் பெண்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாயிருந்தது.

பத்ரு யுத்தத்திற்காக அபூஜஹ்ல் திரட்டிக் கொண்டு வந்த படையினருக்கு உற்சாகமூட்ட இத்தகைய பெண்கள் சிலரும் உடன் கிளம்பினர். உஹதுப் போரில் அபூசு·ப்யானின் மனைவி ஹிந்தாவின் தலைமையில் வந்திருந்த பெண்கள் தம்பூர் என்ற இசைக்கருவி இசைத்து, வட்டப்பறை முழக்கி டிப்பாடி வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.

அகழ்ப்போரில் அகழ் தோண்டும்போது களைப்பு மறக்க முஸ்லிம்கள் இறைவனின் புகழ்பாடி அருள்வேண்டும் பண்களை இசைத்தவர்களாய் அனைவரும் பணியைத் தொடங்கினர். கைபர் சண்டையின் போது படையினருக்கு உற்சாகமூட்டும் போர்ப்பரணி ஒன்றை புனையுமாறு மிர் இப்னு அல்கமா என்பவரை பெருமானார் பணித்தார்கள்.

ஹ¤னைன் போரில் கிடைத்த பங்குப் பொருள்களில் திருப்தியுறாத அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்ற கவிஞர் பெருமானார் மீது குறைப்பட்டு ஒரு கஸீதா பாடினார். அவர் நாக்கைத் துண்டிக்குமாறு பெருமானார் உத்தரவிட, அதன் உட்பொருளை உணர்ந்த அலியார் அவர்கள் அவருக்கு மேலும் 60 ஒட்டகங்களை கொடுத்து அவரை சமாதானப் படுத்தினார்கள். நூறு ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பத்ருப் போருக்குப் பிந்தைய மக்காவின் இரவுகள் யாவும் மர்ஸிய்யா (எனப் பட்ட இரங்கற்பா) க்களால் நிரம்பியிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

பெருமானாரின் கவிதை ஒரு யுத்தத்தில் காயம் பட்ட தன் கால் விரலைப் பார்த்து பெருமானார்

ஹல் அன் தி இல்லா இஸ்ப’உன் தமீத்தி
வ ·பீ சபீலில்லாஹி மா லகீத்தி

ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான் ஆனால்
இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

(தோராயமான தமிழாக்கம் எனது ) என்று பாடினார்கள்.

இந்த வரிகள் சல்மா இப்னு அம்ரல் அன்சாரியின் கவிதை என்பதாக புகாரி ஷரீ·பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Dictionary of Islam தொகுத்த தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் யாருடைய கவிதை என்று சொல்லாமலே விட்டுவிட்டார்.

படிப்பவர்களுக்கு அது பெருமானாரே புனைந்த கவிதை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. எனினும் கவிதை புனைவது பெருமானாரின் ஆளுமைக்கு ஏற்புடையதல்ல என்பதை திருக்குர்’ஆனிலிருந்தும் ஹதீதுகளிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களில் எழுதியவர்களின் அறியாமை அல்லது உள்நோக்கம் இவற்றை நாம் உணர்ந்து கொள்ளாமல் படித்துவிடக்கூடாது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஏன், பெருமானார் ஒரு கவிஞராக இருந்தால் என்ன கேவலமா என்று கேட்கக்கூடாது. காரணம் ஒரு தீர்க்க தரிசியின் அந்தஸ்தும் இலக்கும் மிக உயர்ந்தது. அந்த இலக்கை அடைய கவிஞர்களின் திறமையையும் உண்மையையும் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர அவர்களே கவிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

இறை விருப்பப்படி. பெருமானார் குடும்பத்தாரின் கவிதைகள் பெருமானாருக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்களிடம் குறைஷிகள் வந்து பெருமானாரைப் பற்றி முறையீடு செய்து எச்சரித்துவிட்டுச் சென்றபோது, அபூதாலிப் அவர்கள் ஹரம் ஷரீ·பின் சிறப்பு, வம்ச மேன்மை, பெருமானாரின் சத்தியம், சற்குணம் இவை பற்றி கவிதை பாடுகிறார்கள் !

கவிதையின் முடிவில் ” நாம் ஈமான் கொள்ளவில்லை எனினும் உயிர் மூச்சுள்ளவரை அவரை தரிப்போம்” என்று கவிதையை முடிக்கின்றார்கள்! ”

எங்கள் மனைவி மக்களை மறந்து, முஹம்மதுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம் “ என்பது அவர்களின் இன்னொரு கஸீதா !

அபூபக்கர் சித்தீக் அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது, கவிதை இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய அன்னை ஆயிஷா அவர்கள் ஒரு ஈரடிப்பாடலை தம் தந்தையாரைப் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைக் கேட்டு கண் திறந்த அபூபக்கர் அவர்கள் ” இவ்வளவு புகழ்ச்சி பெருமானாருக்கு மட்டுமே உரியது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

இருள் சூழ்ந்த இரவிலும் ஒளி விளக்கைப் போல மின்னுகிறது அண்ணலாரின் நெற்றி என்ற பொருள்படும் கஸீதாவை பெருமானாரின் மறைவுக்குப் பிறகு பாடியுள்ளார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

இந்த ரீதியில் அன்னை ச·பிய்யாவும் கவிதைகள் புனைந்துள்ளனர். ச·பிய்யா என்ற பெயருடைய பெருமானாரின் அத்தை ஒருவரும் மர்ஸிய்யா பாடல்களை எழுதியுள்ளார்கள். “இந்த உலகமே இருளடைந்து விட்டது” என்று தொடங்கும் இரங்கற்பாவை உமர்(ரலி) அவர்களும் உதுமான்(ரலி) அவர்களும் பாடியுள்ளனர். ”

அழு என் கண்களே” என்று தொடங்கும் கவிதையை ஹம்ஸா, அபூபக்கர், அப்பாஸ் போன்றோர் பாடியுள்ளனர். ”

துன்பத்தின் அளவுக்கு கண்ணீர் வருமானால் மேகத்தின் மழையை அது மிஞ்சிவிடும்” என்பதாக அலி அவர்கள் கவிதை பாடினர்.

” மிம்பக்தி மெளதில் முஸ்த·பா” என்று தொடங்கும் ஈரடிப்பாடலையும் அலியார் இயற்றியுள்ளனர்.

அஹ்மதுவின் கல்லறையின் நறுமணம் நுகர்வோருக்கு வேறு மணம் தேவையில்லை இவ்வாழ்வில் என்றும் பகலெல்லாம் இரவாகிவிடும் ( முஹம்மதுவைப் பிரிந்த என் ) வேதனைகளை பகல்மீது பொழிந்தால் என்றும் அன்னை ·பாத்திமா அவர்கள் பெருமானார் மீது கவிதை பாடியுள்ளார்கள்.

இவையெல்லாம் பெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் சொல்லப்பட்ட இரங்கற் பாக்கள்.

துன்பத்தின் உச்சியிலும் வேதனைகளின் விளிம்பில் கூட அவர்களுக்குக் கவிதை வந்திருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக இன்னுயிரை விட்ட தியாகியாவார்கள். அவர்கள் உயிர் பிரிந்து கொண்டிருந்த சமயம் கடைசிவரை கவிதைகள் பாடிக்கொண்டே இருந்தார்கள்!

குபைப் இப்னு அதீ (ரலி) என்று ஒரு நபித்தோழர். இஸ்லாத்திற்காக எதிரிகளால் தூக்கில் போடப்பட்ட முதல் முஸ்லிம். தன் இறுதிசையாக தொழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அனுமதித்தவுடன் ஒளுச்செய்துவிட்டு சுருக்கமாக தொழுகையை முடித்துக்கொண்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு, ” நான் வெகு நேரம் தொழ விரும்பினாலும், மரணத்திற்கு பயந்து இறுதி நபியின் தோழர் வெகு நேரம் தொழுதார் என்று குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா” என்றார்களாம்.

இவர்களும் உயிர் பிரியும் தருவாயில் கவிதை பாடிக்கொண்டிருந்தார்கள் !

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் யஸீதுக்குப் பிறகு கலீ·பாவாக இருந்தவர்கள். அபூபக்கர் சித்தீக் அவர்களின் பேரர் ஜுபைரின் மகன். ஹஜ்ஜாஜோடு ஹரம் ஷரீ·பில் நடந்த சண்டையின் போது அவர்கள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தபோது கவிதை பாடினார்கள் !

மு’வியா(ரலி) அவர்கள் கலீ·பாவாக இருந்த காலத்தில் உடம்புக்கு முடியாமல் இருந்தபோது கண்ணுக்கு சுர்மாவும் எண்ணெயும் இட்டுக் கொண்டு ரோக்கியமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தில்தான் மக்களைச் சந்திப்பார்களாம்.

அப்போது அந்த சூழ்நிலை பற்றி கவிதை பாடுவார்களாம்! அதோடு அவர்களின் உடலைக் கழுவிக்கொள்ள உதவி செய்யும் தன் மகள்களைப் பற்றியும் கவிதை பாடுவார்களாம் !

ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் தாம் கொலை செய்யப்படுவோம் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தார்கள். பள்ளி வாசலுக்குச் செல்வதற்காக கஷ்டப்பட்டு எழுந்தபோது மரணம் பற்றியும் அதை துணிச்சலாக சந்திப்பதைப் பற்றியும் கஸீதா பாடினார்கள் !

இமாம் ஷா·பி’ஈ அவர்களை சித்ரவதை செய்தபோது, லுன் நபிய்யி தரிய்யத்தி, வ ஹ¤ம் இலய்ய வஸீலத்தீ எனது சேமிப்பெல்லாம் அருமை நபியின் வழித்தோன்றல்கள்தான் என்னும் பொருள்படும் கவிதையினைப் பாடினார்கள் !

இமாம் நஸீமி (ரஹ்) அவர்களை தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு அவர்கள் தோலை உரித்துக் கொன்றனர் பாவிகள். அப்போது ஏகத்துவ ஞானம் பற்றிய 500 பாடல்களைப் பாடி அவர்கள் உயிர் துறந்தார்கள் !

சூ·பி அபூபக்கர் ஷிப்லி அவர்கள் ” நீ வாழும் வீட்டில் ஒளியேற்ற மெழுகுவர்த்தி தேவையில்லை” என்று கவிதை பாடிக்கொண்டே உயிரை விட்டார்கள் !

இமாம் ஜா·பர் சாதிக் (ரலி), முஹ்யித்தீன் அப்துல் காதிரி ஜெய்லானி (ரலி), ராபியதுல் பஸரியா போன்ற அனேக இறை நேசர்கள் கஸீதாக்களில் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது கவிஞர்கள் அல்லாதவர்கள் !

முடிவுரை

இஸ்லாமிய வரலாறு கவிதைகளால் நிரம்பியுள்ளது. கவிஞர்கள் புகழும் செல்வாக்கும் செல்வமும் கொண்டவர்களாக அரசர்களைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த உமர் இப்னு அபீ ராபியா என்ற காதல் கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்ற கவிஞருக்கு 70 அடிமைகள் இருந்தனராம் ! சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்ற கூற்று இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை பொய்யாகிப் போனது !

அரேபிய இஸ்லாமிய வரலாற்றில் அநேகம் பேர் கவிதைகள் பாட முடிந்தவர்களாகவோ, அதாவது மகாகவிகளாகவோ, அல்லது குறைந்த பட்சம் கவிதைகளை கேட்பதில், உற்சாகப் படுத்துவதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருந்துள்ளனர்.

கொடுங்கோலன் என்ற பெயரை வாங்கிக்கொண்டுவிட்ட யஸீது கூட கவிதைகள் இயற்றுவதில் சிறந்து விளங்கினார் ! பல லட்சம் பேரை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பதுபோல ! ஆனாலும் உண்மை !

பெருமானரின் காலத்தை கவிதைகளுக்கும் பொற்காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிலே எஞ்சிய பொற்துகள்கள் உலகமுடிவு நாள் வரை பல திசைகளில் இருந்தும் பல மொழிகளிலும் நம்பிக்கையின் மற்றும் மனிதாபிமானத்தின் கடைசி பருக்கை இருக்கும் வரை மின்னிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கும் பிரபஞ்ச மகா கவியாகிய எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக !
இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 24

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 15

கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை – 20

 

Tags: , , , , ,

என் ஊர் – நாகூர் ரூமி


 

Tags: , ,

உண்டிமே நியாஸ் டாலோ


நாகூர் தர்காவிற்கு வருகைதரும் பக்தகோடிகளின் காதுகளில் “காணிக்கை உண்டியல்லே போடுங்க” என்ற ‘கணீர்’ நாதம் விழாமல் இருக்க வாய்ப்பில்லை.

வெளி மாநிலக்காரர்களைக் கண்டுவிட்டால் “உண்டிமே நியாஸ் டாலோ” என்ற மொழிபெயர்ப்பு வாசகம் இன்னும் சற்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும்.

ஹூ….ம். அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. லட்சக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு எதிர்பார்த்த வசூல் கிடைக்காவிட்டால் உண்டியல் காண்ட்ராக்ட் எடுத்தவரின் நிலைமை என்னாவது?

ரிகார்ட்டிங் முடிந்த கையோடு, ஏ.ஆர்.ரகுமான் , கேசட் வடிவிலான தங்க பிஸ்கட்டினை தர்கா உண்டியலில், நெரிசல் குறைந்த நேரத்தில்,  நைஸாக வந்து போட்டுவிட்டு, நல்ல பிள்ளையாக போய்விடுவாராம். உண்டியல் காண்ட்ராக்ட் எடுத்தவர் அன்று நரிமுகத்தில் (தபேலாக்காரர் அல்ல) முழித்திருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். [ஆஸ்கார் அவார்ட் வாங்குவதற்கு முன் ஆஸ்கார் சிலை வடிவிலான தங்கச்சிலையை உண்டியலில் போட்டுவிட்டுப் போயிருப்பாரோ?]

கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை திருப்பதி சென்றிருந்தபோது திருமலையான் உண்டியலில் இக்கவிதையை எழுதி சேர்ப்பித்தாராம்

“எங்கடனைத் தீர்ப்பாய் இறைவா திருமலைவாழ்
வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே – மங்காத
செல்வம் எனக்கள்ளித் தினமும் தருவாயேல்
நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்!”

திருப்பதி உண்டியல் காண்ட்ராக்ட்காரர் உண்டியலை திறந்து பார்த்தபோது நொந்து நூடுல்ஸாகி இருப்பார்.

காணிக்கையாக காசோ, நகையோ போட்டிருந்தாலாவது தேவலாம். அட்லீஸ்ட் தெலுங்கில் ஒரு கவிதை எழுதியிருந்தாலாவது அவருக்கு புரிந்திருக்கும். வெறும் துண்டு காகிதத்தை வைத்துக்கோண்டு என்ன செய்வார். பாவம் காண்ட்ராக்ட்காரர்!

ஒருவேளை கண்ணதாசன் நாகூருக்கு விசிட் அடித்திருந்தால் “உண்டிமே நியாஸ் டாலோ” என்ற பொன்மொழிக்கான உண்மையான அர்த்தம் அவருக்கு புரிந்திருக்குமோ..?

“தர்ஹா உள்ளே
காணிக்கை எல்லாம்
உண்டியல் போட
கட்டளைக் குரல்கள்..! “
–  என்ற கவிஞர் ஜபருல்லா அவர்களின் வசனகவிதை என் நினைவுக்கு வந்தது.

 

Tags: , ,