RSS

Tag Archives: Justice M.M.Ismail

கம்பன் அவன் காதலன் (ஏழாம் பாகம்)


கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

[திருவாரூர் கலெக்டருடன் நாகூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்]

ஆருர் மாவட்ட ஆட்சியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடராசன் அவர்கள் நாகூர் தமிழ்ச்சங்க அலுவகத்திற்கு கடந்த 20.8.12 தேதியன்று வருகை புரிந்தபோது, பல்வேறு கலந்துரையாடல்களுக்கிடையே எதிர்பாராத விதமாக ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயீல் அவர்களைப் பற்றிய சுவையான பேச்சு வந்தது. நாகூரில் வாழ்ந்த இலக்கியச் செல்வர்களுள் நினைவில் நிற்கக்கூடிய மாமனிதராய் முன்னாள் நீதிபதி அவர்களை ஆர்வமுடன் அவர் நினைவு கூர்ந்தார். அவர் பள்ளியில் படித்த காலத்தில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த, ஜஸ்டிஸ் இஸ்மாயீல் எழுதிய “கொடி காட்டும் குறிப்புகள்” என்ற கட்டுரையை வெகுவாக சிலாகித்துப் பேசினார்.

கண்ணகியின் காற்சிலம்பை விற்க கோவலன் மதுரை மாநகருக்குள் அடியெடுத்து வைத்தபோது, பாண்டிய மன்னன் அரணமனையில் பட்டொளி வீசிப் பறந்த மீன்கொடியானது கோவலனை “வராதே, வராதே” என்று குறிப்புகள் காட்டிய வருணனைகள் மட்டுமின்றி, ஏனைய இலக்கியத்திலும் இதுபோன்று கவிஞர்கள் கையாண்ட நயமிகு இலக்கிய ரசனையை கோர்வையாக வடித்துத்தந்த, மாண்புமிகு இஸ்மாயீல் அவர்களின் எழுத்துத்திறனை வெகுவாகப் பாராட்டி நெகிழ்ந்தார்.

மாவட்ட ஆட்சியரோடு ஏற்பட்ட இந்த இலக்கிய கலந்துரையாடலின் உந்துதலினாலும் “கம்பன் அவன் காதலன்” என்ற தலைப்பில் ஆறாவது பாகம் வரை எழுதி, சோம்பலின் காரணமாக இவ்வலைப்பதிவில் எழுதுவதை தள்ளிப்போட்டிருந்த என்னை, மீண்டும் தொடர்ந்து எழுதத் தூண்டியுள்ளது.

ஒருவர் உயர் பதவியில் இருப்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால் தன் வாழ்நாள்முழுதும் கறைபடாத கரங்களோடு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நீதியோடும் நேர்மையோடும், அப்பழுக்கற்ற தூயவாழ்க்கை வாழ்வதென்பது ஒரு மிகப் பெரிய சாதனை. “சான்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்பார்கள். நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களைப் பொறுத்தவரை அறிஞர் பெருமக்கள் மத்தியில் அவருக்கு இருந்த உயர்இடமே தனி. ஆன்றோர்கள் அவருக்களித்த மட்டற்ற மரியாதை எழுத்தில் வடிக்க இயலாது. அவருடைய புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து அவருக்கு பெருமைச் சேர்த்த மயிலாப்பூர் பிறாமணச் சகோதரர்களைப் பற்றி முன்பே கண்டோம்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்

என்று திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிய முத்தான வரிகள் முழுக்க முழுக்க மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்குத்தான் பொருந்தும்.

மக்கள் திலகமும் மாண்புமிகு நீதிபதியும்

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு சமூகத்தில் எப்பேர்ப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதற்கு இக் கீழ்க்கண்ட சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற போது அவரோடு 17 மந்திரிகளும் பதவியேற்றனர். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது. மேடையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், “காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய படங்கள் பெரிதாக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தன.

உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் 17 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக வந்து பதவி ஏற்றனர்.

ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள்.

இதற்குப் பிறகுதான் அந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. தமிழக மக்களுக்கு விடிவெள்ளியாக, அத்தனை அமைச்சர்களுக்கும் ஈடில்லா தலைவனாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கிடுகிடுவென்று மேடையிலிருந்து இறங்கி ஓடோடி வந்தார். கூடியிருந்தவர்கள் அத்தனைப்பேரும் எம்.ஜி.ஆரின் நடவடிக்கையையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை காமிராக் கண்களும் நிகழ்வை ஒன்றுவிடாமல் படம்பிடித்துக் கொண்டிருந்தன.

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார் . அந்த பெருமைக்குரிய மாசில்லா மாணிக்கம் வேறு யாருமல்ல. நம் நீதிமான் மு.மு.இஸ்மாயீல்தான் அந்தப் பெரியார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன் உயிருக்கும் மேலாக அவர் கருதிய அருமை அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் காலைத் தொட்டு கும்பிடுவதற்கு முன் எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆசி பெற்றது நம் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களிடம்தான்.

பொன்மனச் செம்மலின் வாழ்க்கை வரலாற்றில் பதியப்பட்ட இந்நிகழ்ச்சி நம் கட்டுரை நாயகனின் அருமை பெருமைகளை ஊரறிய பறைசாற்ற போதுமானது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தொடர்ந்து 28 ஆண்டுகள் தலைவராக சேவையாற்றிய சென்னை கம்பன் கழகத்தை தற்போது நடத்தி வருபவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

“கம்பன் கழகம் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் முன்னாள் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்” என்று கடந்த ஆண்டு நடந்த கழகத்தின் 37-வது ஆண்டுவிழாவின்போது மறைந்த அந்த மாமேதைக்கு ஆர்.எம்.வீ. புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்கள் திலகம் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசு கட்டிலில் அமர்ந்து ஆட்சி செலுத்தும் இந்நேரத்தில், மாநில முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் வைக்கிறேன்.

எம்.ஜி.ஆர்.அவர்கள் பெரிதும் போற்றிய நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதிய நூல்களை அரசு பொதுவுடமை ஆக்குமா?

நீதியரசர்களுகெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்த இந்த முன்னாள் நீதிபதியின் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயம் பயன்படும் வகையில் பாடதிட்டங்களில் சேர்க்குமா?

அவருடைய நினைவைப் போற்றும்வகையில் நினைவுச்சின்னத்தை அரசு ஏற்படுத்துமா?

மதச்சகிப்புத்தன்மை

நீதிபதி இஸ்மாயீலுக்கிருந்த மதச்சகிப்புத்தன்மை எல்லோரையும் வியக்க வைத்தது. மதச்சகிப்புத்தன்மை, மனித நேயம் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதப்பண்புகளிலிருந்து குறைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இலங்கை தமிழறிஞர் டாக்டர் எம்.ஏ.எம்,ஷுக்ரி அவர்கள் பதிந்த கருத்தினை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

“மதச்சகிப்புத்தன்மை என்பது எல்லா மதங்களையும் ஒரே பரிமாணத்துக்குள் உள்ளடக்கும் முயற்சியாகவோ அல்லது மத நம்பிக்கைகள், செயற்பாடுகளை வெறும் வரலாற்று வளர்ச்சியாக விளக்கி நியாயப்படுத்தும் முயற்சியாகவோ கொள்ளப்படல் கூடாது. மதங்களைப் பொறுத்தளவில் சகிப்புத்தன்மை என்பது வித்தியாசங்கள், வேற்றுமைகளை யதார்த்தமாக, அடிப்படையானதாக அனுசரித்து ஏற்றுக்கொண்டு, இந்த வித்தியாசங்கள் வேற்றுமைகளைத் தாண்டிய நிலையில் அவற்றிற்கிடையில் காணப்படும் பொதுப் பண்புகளையும் பெறுமானங்களையும் இனம் காண்பதாகும்”

என்று டாக்டர் ஷுக்ரி அவர்கள் கூறிய கருத்துக்கள் நினைவில் கொள்ளத்தகவை.

இந்த மதச்சகிப்புதன்மை (Religious Tolerence) எல்லோருக்கும் இருப்பதில்லை. இந்த உயர்பண்புக்கு எடுத்துக்காட்டாக ஒருவரைச் சொல்ல வேண்டுமெனில் நீதிபதி இஸ்மாயீல் அவர்களை தாராளமாகச் சொல்லலாம். இவ்விஷயத்தில் அவர் ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எந்த வேறுபாட்டையும் காட்டியதில்லை. தொழில் தர்மம் பேணுவதில் அவருக்கு நிகர் அவரே.

தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழகமெங்கிலும் சிலை நிறுவப்பட்டு அதற்கடியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டன. அந்த வாசகங்கள் மதஉணர்வு கொண்ட அத்தனை மதத்தவரின் மனதையும் ஈட்டியால் தைத்தது போலிருந்தது.

கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட்டபோது, இதனை தடுத்த நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாசகங்கள் இந்துக்கள் மட்டுமின்றி கிறித்துவர்கள், முஸ்லீம்கள் என எல்லா மதத்தினரின் மதநம்பிக்கையும் புண்படுத்துவதாக இருந்தது என்று முறையிட்டார்கள்.

ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் நீதிபதி இஸ்மாயிலிடம் இவ்வழக்கு வந்தது. நியாயத் தராசை சரியாகப் பிடித்து, வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டு சட்டத்திட்டன்படி, அவர் தீர்ப்பு சொல்ல வேண்டும். இருதலைக் கொள்ளியான நிலை அது. தன்னுடைய மதநம்பிக்கைக்கு ஏற்றவாறு, தன்னுடைய கொள்கைக்கு தக்கவாறு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கலாம். ஆனால் அதற்கு அவரது மனசாட்சி இடங்கொடுக்கவில்லை.

தொழில் தர்மத்தைப் போற்றுபவர் அவர். அரசாங்கத்திடமிருந்து கைநீட்டி சம்பளம் பெறுவது தான் ஏற்றிருக்கும் நீதியரசர் பணிக்குத்தான் என்பதும், இந்திய சட்டதிட்டத்தின்படி தீர்ப்பு அளிப்பதுதான் தன் கடமை என்பதையும் நன்கறிந்தவர் அவர். இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை பேணும் ஒரு நாட்டில் அவர் நீதிபதியாக இருக்கவில்லை. தான் சொல்லும் ஒரு தீர்ப்பு தான் சார்ந்திருக்கும் நாட்டுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றதாக, இருக்க வேண்டும்.

இறுதித் தீர்ப்பின்போது அவர் சொன்ன விளக்கம் யாரும் எதிர்பார்காதது.

“ஒரு தலைவருக்கு சிலை வைக்கும்பொழுது அவருடைய கொள்கை என்னவோ அதைத்தான் அவருடைய சிலை பீடத்தின் கீழே போடவேண்டும் என்று எதிர் பார்க்கவேண்டுமே தவிர, பெரியாருக்கு சிலை வைக்கும்பொழுது சங்கராச்சாரியாருடைய மேற்கோளையா போடுவார்கள்?

என்று அவர் கேட்ட கேள்வி எல்லோரையும் திகைக்க வைத்தது.

நீதியரசருடைய தீர்ப்பு பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாக இருந்தாலும் “அவரவர்களின் மத நம்பிக்கை அவரவர்களுக்கு” என்ற அவரது அற்புதமான விளக்கம் அறிந்து அவரது பண்பை எல்லோரும் போற்றினர்.

இலக்கியச் செல்வரின் இஸ்லாமியப் பணி

[தமிழக கவர்னராக தாய் மண்ணை மிதித்தபோது]

நாகூரை பிறப்பிடமாகக் கொண்ட ஜஸ்டீஸ் அவர்கள் ஆற்றிய இஸ்லாமியப் பணியை விலாவாரியாக ஆராய்வதற்கும் முன், அவருடைய குடும்பப் பின்னணியைச் சற்று அறிந்துக் கொள்வோம்.

நீதிபதி அவர்களுக்கு பூர்வீகம் நாகூர் தெற்குத்தெரு என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தகப்பனார் பெயர் பி.முஹம்மது காசிம் மரைக்காயர். தாயார் பெயர் ருகையா பீவி.

அவருடைய துணைவியார் பெயர் பல்கீஸ். அவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். மூன்று ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை. 1) காதர் ஹுசைனுத்தீன், 2) ஜஹபர் சுல்தான், 3) காசிம் மரைக்கார், மற்றும் 4) பாத்திமா பல்கீஸ்.

உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்கள். முதலாவது ஜக்கரியா மரைக்கார். இரண்டாவது உம்மு ஹனிமா. சகோதரர் ஜக்கரியா மரைக்கார், நாகூர் பிரபல எழுத்தாளர் ஆபிதீனுடைய மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்பிறந்த சகோதரி உம்மு ஹனிமா என்பவர் லுக்மான் ஆலிம் சாயபு அவர்களுடைய துணைவியார்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் இந்துக்களின் புராணமான கம்பராமாயண காப்பியத்தின் தலைச்சிறந்த ஆய்வாளராக புகழ்பெற்று தமிழகமெங்கும் முழங்கி வந்த அதே வேளையில், இஸ்லாமிய அறிஞராகவும் திகழ்ந்து வந்தார். “இன்பத்தமிழ் எங்கள் மொழி, இஸ்லாம் எங்கள் வழி” என்று அவர் முழங்கி வந்தார்.

தமிழிலக்கிய ஆர்வத்தினால் கம்ப ராமாயண காப்பியத்தில் காணப்படும் கம்பனின் சொல்லாட்சியை வியந்து புகழ்ந்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் ஆற்றி வந்த இஸ்லாமியப் பணிகளிலிருந்து நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டி (Baithul Hajjaj) தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். உடல் நலிவுற்றதன் காரணமாக 1986-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் அதற்கு பதிலாக எ. முகம்மது ஹாஷிம் சாஹிப் ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தினமணி, கல்கி போன்ற பல பத்திரிகைகளிலும், தீபாவளி மலர் உள்ளிட்ட பல்வேறு ஆண்டு மலர் சிறப்பிதழ்களிலும் அவ்வப்போது இஸ்லாமியக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிய வண்ணம் இருந்தார்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம் இயற்கையாகவே இஸ்லாமிய இலக்கிய படைப்புக்கள் மீது மிகுந்த அளவுகடந்த ஈடுபாடு காணப்பட்டது. கம்ப ராமாயணம், சீறாப்புராணம் இவை இரண்டையும் ஒப்பாய்வு (Comparitive Study) செய்து கருத்துக்கள் வெளியிட்டவர் அவர். ஆய்வுகளின் போது அவர் மதவேறுபாடு காட்டியதில்லை. பிறமத புராணங்களானாலும் அதிலுள்ள இலக்கியச்சுவையையும், காவியப் பண்பையும் ரசிக்கக்கூடிய மனப்பக்குவம் அவரிடம் இருந்தது. ரசிப்பதோடு நின்றுவிடாமல் பிறரறிய வகை செய்தார். தமிழ் மொழியில் அவருக்கிருந்த ஆளுமையை இன்றளவும் தமிழறிஞர்கள் வியந்து பேசுகிறார்கள்.

21.06.1999 ஆம் ஆண்டு சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் சார்பாக இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. 1999-ஆம் ஆண்டுக்குரிய ‘செய்கு சதக்கத்துல்லலாஹ் இலக்கியப் பரிசு’ மதிப்பிற்குரிய என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் (பி:1924 – இ:2002) அவர்களுக்கு வழங்கப்பட்டபோது விழாத்தலைவர் மாண்புமிகு நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பரிசு வழங்கி ஆற்றிய உரை இஸ்லாமிய இலக்கியத்தின்பால் அவருக்கிருந்த அளவிலா வேட்கையை ஆழமாய் உணர்த்தியது.

“பல அருமையான நூல்களை எழுதியுள்ள இறையருட் கவிமணி அவர்களின் சேவை பாராட்டிற்குரியது. இத்தனை நூல்களை ஒருவர் எழுதியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. மனம் சுத்தமாக இருந்தால்தான் நம்மை அறியாமலே சொற்கள் வந்து விழும். அந்த மாதிரிச் சொற்கள் அமைந்த கவிதைகள் இங்கு நிறைய இருக்கின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு கவிஞருக்கு – புலவருக்கு – மார்க்க மேதைக்கு இப்பரிசை வழங்குவதில் யாருக்கும் சற்றேனும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. அவர்களுக்குத் தகுந்த, அவர்களது செயலுக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்கின்ற முறையில், இந்தப் பரிசினை நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”

என்று அவர் உள்ளத்திலிருந்து வார்த்தைகள் அருவியாகக் கொட்டின.

நீதிபதி அவர்கள் 27-3-1976 தேதியிட்டு கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களுடைய “யூசுப்-ஜுலைகா” காப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியபோது அவர் கையாண்ட கனகச்சிதமான நறுக்கென்ற நயமான சொற்றொடர்கள் அவருடைய எழுத்துத் திறமைக்கு சிறந்த சான்றாகும்.

“இது மொழியால் தமிழ்க் காப்பியம்,
உணர்ச்சியினால் காதற் காப்பியம்,
பண்பினால் மனிதக் காப்பியம்,
போதிக்கும் அறத்தினால் அமர காவியம்.

இத்தகையக் காப்பியத்தை ஆக்கித்தந்த கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்புமிகு இத்தகையக் காப்பியங்கள் இன்னும் பல செய்வதற்கான எல்லா நலன்களையும் அவருக்குத் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்”

என்று வாழ்த்துரை வழங்கினார்.

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் ஆற்றிய இஸ்லாமியப் பணி ஒன்றல்ல இரண்டல்ல.

இந்திய தேசியத் தலைவர்களும் தலைச்சிறந்த தகைசால் இஸ்லாமியப் பெரியாராக திகழ்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாறை தமிழில் வடித்த சிறப்பான பாங்கினைச் சொல்வதா?

இஸ்லாமியக் காப்பியங்களில் ஒன்றான இராஜ நாயகம் என்ற நூலை ஆய்ந்து ‘இனிக்கும் இராஜ நாயகம்” என்று விரிவுரை செய்த இலக்கியப் பணியை எடுத்துச் சொல்வதா?

ஏக இறைவனாம் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களுக்கு அருமையான விளக்கங்கள் தந்து நூல் வரைந்த மாண்பினை போற்றுவதா?

அடுத்துவரும் பதிவுகளில் இதனை நாம் விரிவாக அலசி ஆராய்வோம்.

அப்துல் கையூம்

 

 

Tags: ,

கம்பன் அவன் காதலன் – (ஆறாம் பாகம்)


இலக்கியமான நீதிபதி

ஒருவர் இறந்து விட்டால் அவர் “மரணித்து விட்டார்” அல்லது “மறைந்து விட்டார்” என்று கூறுவதுண்டு. சிலவேளை “காலமானார்” என்றும் கூறுவதுண்டு. அதன் பொருள் காலத்தால் எளிதில் அழிக்க முடியாத இடத்தை அவர் அடைந்து விட்டார் என்பதாகும். சாதனை படைத்த சிலரை “அவர் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்” என்று கூறுவதுண்டு.

2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி நீதிபதி இஸ்மாயில் அவர்கள் காலமானபோது அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் 19.1.2005 அன்று ‘தினமணி’ நாளிதழில் ஒரு கட்டுரை வரைந்தார். அதன் தலைப்பு “இலக்கியமான நீதிபதி” என்பதாகும்.

ஒருவரின் இறப்பு “வரலாறு” ஆக முடியும். அது எப்படி “இலக்கியம்” ஆக முடியும்? நம்மை சிந்திக்க வைக்கின்ற கேள்வி இது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பொறுத்தவரை “அவர் இலக்கியமானார்” என்ற கூற்று சாலப்பொருத்தம். தமிழிலக்கியம் பேசும் சான்றோர்களின் தண்டமிழ் பேச்சிலெல்லாம், எக்காலமும், எங்காகிலும் இவர் பெயர் என்றென்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

சென்னையில் 1974-ஆம் ஆண்டு இவரது பெருமுயற்சியால் கம்பன் கழகம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டபோது “The Right Person in the right Place” என்று ஆங்கிலப் பத்திரிக்கையொன்று இவரைப் புகழ்ந்து தள்ளியது. தொடர்ந்து 28 ஆண்டுகள் கம்பன் கழகத்தின் தலைவராக பணிபுரிந்து சாதனை நிகழ்த்தியவர் இவர்.

கம்பன் கழகம்

1923-ஆம் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் மூத்ததா அல்லது அதற்கு முன்னரே பிற ஊர்களில் கம்பன் கழகங்கள் நிறுவப்பட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை.

காரைக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பற்பல ஊர்களில் தற்போது கம்பன் கழகம் விழாக்களை கோலாகலமாக நடத்தி வருகின்றன.

இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.

கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்திலிருந்து தாய்ச் சீர்வரிசை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். ஆஹா! என்னே ஓர் அற்புதமான தமிழர் பண்பாடு!

கம்பன் கழகமானது, தமிழறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பகிரும் அற்புதக் களமாகத் திகழ்கிறது. தாய்மொழியாம் தனித்தமிழின் சிறப்பை தரணியெங்கும் பரவும் வண்ணம் தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு புரிந்து வருகிறது.

கம்பனை காதலித்த கன்னித்தமிழ் வேந்தர்கள்

கம்பனின் காதலானாக ஒரு சுகி சிவமோ அல்லது சிவக்குமாரோ இலக்கிய உலகில் பவனி வருவதில் ஆச்சரியம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? மதப்பற்றுமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முஸ்லிம் ஒருவர் இந்து மதத்தின் காப்பியம் ஒன்றினை கசடறக் கற்று, புலமை பெற்று, அக்காப்பியத்தின் மேன்மையை பட்டி தொட்டிகள் எங்கும் பறை சாற்றியதில்தான் வியப்பு மேலிடுகின்றது.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் பாரதி – பைந்தமிழ்ச் சாரதி – கம்பனின் பெயரை ஏன் முதல் ஸ்தானத்தில் குறிப்பிட்டான் என்று எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வள்ளுவர் பெருந்தகையை விட உயர்ந்த புலவனாக கம்பனைக் கருதினானா அல்லது வெறும் எதுகை மோனைக்காக கம்பனை முதலிடத்தில் வைத்தானா என்பது கவிராஜனுக்கே வெளிச்சம்.

கம்பனைக் காதலித்தவர்கள் அந்த பாட்டுடைத்தலைவன் பதமறிந்தே கவிச்சக்கரவர்த்தியை முதல் வரிசையில் வைத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்று வாதிடுகிறார்கள்.

கம்பனின் காவியத்தில் உண்மை இருந்ததா என்பது வேண்டுமானால் விவாதத்திற்குரிய கருப்பொருளாக இருக்கலாம். ஆனால் அதில் பைந்தமிழ்ச் சுவை இருந்தது என்பதை “கம்பரசம்” எழுதிய அறிஞர் அண்ணாவால் கூட மறுக்க முடியாது.

கம்பன் கழகம் பரவலாகத் தோன்றுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் கம்பராமாயண எதிர்ப்பாளர்கள்தான் என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு விஷயத்தின் மீது எப்பொழுது எதிர்ப்பு அதிகமாகிறதோ அப்போது அதன் மவுசும் கூடுவது கண்கூடு. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் கொளுத்திவிட்டால் அப்புறம் படிக்க முடியாதே என்று அவசர அவரமாக கற்று அதன் கவிநடையில் காதல் கொண்டவர்கள் பலர்.

“கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!”

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய இப்பேச்சு நம் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.

‘கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப்போற்றுவதாகும்’ என்று நீதியரசர் இஸ்மாயீல் அடிக்கடிச் சொல்வதுண்டு. பண்டிதர்கள் மத்தியில் இருந்த கம்பனின் காவியத்தை பாமரர்கள் மத்தியில் கொண்டுச் சென்ற பெருமை பெருமளவு நீதிபதி இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

“கம்பராமாயணம் பற்றியே பேசுகிறீர்களே என்று என்னை குறைபட்டுக் கொள்பவர்கள் நிறைய பேருண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை நான் கேட்டுக் கொள்வது இதுதான். நீங்கள் அதனை படித்திருக்கிறீர்களா? அதில் தமிழ் இருக்கிறது.. இலக்கியம் இருக்கிறது. அதை படித்து பாருங்கள்..” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் நற்றமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு நயம்பட வேண்டுகோள் விடுக்கிறார்.

கம்ப ராமாயணத்தின்பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் மூழ்கிக் கிடந்தவர் அவர் என்றால் மிகையாகாது.

இலக்கிய உலகில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் சிலர் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வர். மேடைகளிலும் ஊடகங்களிலும் புகழ்பெற்ற இலக்கியக்கர்த்தாக்களாக பவனி வருபவர்களை நாம் பார்க்கிறோம். உதாரணமாக பட்டிமன்ற நாயகர்களாக பவனிவரும் திண்டுக்கல் ஐ. லியோனியையோ, சாலமன் பாப்பையாவையோ, பேராசிரியர் திருஞானசம்பந்தத்தையோ, அல்லது நெல்லை கண்ணனையோ எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பும் எத்தனையோ சான்றோர்கள் பிரபலமாக வலம் வந்தார்கள். ஒரு பத்து வருடங்களோ அல்லது அதிகபட்சமாக இருபது வருடங்களோ புகழின் உச்சாணிக் கொம்பில் இருப்பார்கள். பிறகு இவர்களையும் மிஞ்சும் அளவுக்கு வேறு நபர்கள் வெளிச்சத்துக்கு வர இவர்களின் மவுசு குறையத் தொடங்கும். இது நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்பது.

கிட்டத்தட்ட 50 வருட காலங்களுக்கு மேலாக கம்பராமாயணத்திற்கு உரிமம் வழங்கும் அதிகாரியாக, கம்பனுக்காக வாதாடும் வழக்கறிஞராக, அவனது காவியத்திற்கு நிபுணராக, அக்காப்பியத்தின் கலைக்களஞ்சியமாக, நடமாடும் அகராதியாக, அருஞ்சொற்பொருள் வல்லுனராக, அந்நூலுக்கு சந்தேகம் தீர்க்கும் விற்பன்னராகத் திகழ்ந்தவர் நம்மவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள்.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்ட “இலக்கியமான நீதிபதி” என்ற அடைமொழியில் வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

“இலக்கணமான நீதிபதி” என்று பழ.பழநியப்பன் குறிப்பிடவில்லை. ஏன் என்று கவனித்தீர்களா? இலக்கணம் மாறலாம். இலக்கியம் மாறுவதில்லை. நீதியரசர் ஓர் அமர இலக்கியம். ஓர் இலக்கியத்திற்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர்.

காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள். அரையுக காலம் ஒருத்தர் ஒரு குறிப்பிட்டத் துறையில், அவரை ஓரங்கட்ட முடியாத அளவுக்கு, முதன்மை நிலையில் இருந்து முத்திரை பதித்தார் என்றால், அவருக்கு இலக்கியத்தில் எந்த அளவுக்கு ஆளுமை சக்தி இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கம்பனின் கவித்திறமையை தமிழ்க்கூறும் நல்லுலகில் தம்பட்டம் அடித்தவர்களின் பெயர்களை எழுத்தில் வடிக்க முனைந்தால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

கம்பன் அடிப்பொடி சா.கணேசன், நீதிபதி இஸ்மாயீல் முதற்கொண்டு அ.ச.ஞானசம்பந்தன், நீதிபதி எஸ்.மகராசன், தொ.மு.சி.ரகுநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வெ.சாமிநாத சர்மா, திருச்சி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, அறிவொளி, தெ.ஞானசுந்தரம், கா. நயினார் முகமது, புலவர் அருணகிரி, தனிநாயக அடிகள், சே.ச., ராமலிங்கம், வையாபுரிப் பிள்ளை, எஸ்.ஆர்.கே, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, ரா.இராகவையங்கார், விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பெ.நா.அப்புஸ்வாமி, பி.ஸ்ரீ.ஆச்சார்யா, தோழர் ஜீவா, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், க.கு.கோதண்டராமக் கவுண்டர், ஏ.சி.பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், கி.வா.ஜகன்னாதன், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வரதராசனார், அ.சீனிவாசராகவன், மு.இராகவ அய்யங்கார், கவிஞர் கண்ணதாசன், ஏ.என்.சிவராமன், கிருபானந்த வாரியார், கம்பராசன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெகவீரபாண்டியன், வே.மி.சம்மனசு, வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, இரா.சொ., அ.சீ.இரா., கவிஞர் வாலி, சுதா சேஷய்யன், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வுச் செய்து முனைவர் பட்டம் பெற்ற என் நண்பன் நாகூர் ரூமியையும் இப்பட்டியலில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.                                  (இன்னும் வரும்)

 

Tags: , , , , , ,

கம்பன் அவன் காதலன் (மூன்றாம் பாகம்)


கவியரசரும் நீதியரசரும்

– அப்துல் கையூம்

கவியரசர் கண்ணதாசன் யார் ஒருவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறாரோ அவரை என்றாவதொருநாள் “டமால்” என்று கீழே போட்டுக் கவிழ்த்தப் போகிறார் என்று அர்த்தம்.

இந்த மனிதரிடம் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர்களில் நான்கு பேர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள், காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர்.

கண்ணதாசன் யாரையாவது தூற்றி வசைபாடினால், அவரை பிறிதொரு சமயம் வானாளவ உயர்த்தி வாழ்த்திப் பாடப் போகிறார் என்றும் பொருள் கொள்ளாலாம்.

கவியரசரின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எத்தனையோ எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநந் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினிலே வீழ்ந்த திங்கே!

என்று பண்டிதர் நேருவை வாயார வாழ்த்திப் பாடிய அதே வாய்தான் முன்னொருமுறை

– சுட்டதொரு
கத்திரிக்காய் என்பேனா? கருங்குதிரை முகம் என்று
சித்தரித்துச் சொல்வேனா? திறம்போன பனம்பழத்தைச்
சப்பியபின் போட்ட தரமென் றுரைப்பேனா?
பழம்போன வாழைத்தோல் பக்குவமே நேருவமை

என்று நேருவின் தோற்றத்தை கேவலப்படுத்தி தூற்றிப் பாடியது.

உணர்ச்சிக்கு அடிமையானவர்களின் உள்ளத்தில் உருவெடுக்கும் வார்த்தைகள் காலத்திற்கேற்ப உருமாறும் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இராஜாஜி என்று அழைக்கப்பட்ட இராஜகோபாலச்சாரியை அறியாதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது.

வாழ்வாங்கு வாழ்வாரைத்
தெய்வத்துள் வைக்குமொரு
வையத்துள் வாழு மனிதா!

வையத்தில் இராசாசி
வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா?

என்று இராஜகோபாலச்சாரியை வாய்மலர வாழ்த்திப் பாடிய கவியரசரின் அதே திருவாய்தான் முன்னொருமுறை

குள்ள நரிச் செயல் செய்யும் நச்சு உள்ளக்
கொலைகாரன் இராசகோ பாலாச்சாரி
கள்ளமறு தாய்நாட்டின் பொறுப்பை ஏற்றுக்
கயமையிலே ஆட்சிபுரிகின்றார்! அன்று
பிள்ளை மனங் கெடுப்பதற்கே இந்தியென்னும்
பிய்ந்த செருப்பினை எடுத்துத் தமிழ்ச் சேயின்
உள்ளமதிற் கட்டாயம் புகுத்த வென்று
உரைத்ததனைக் கேட்டவர்கள் துடித்தார் மாதோ!
இளங்குழந்தை நெஞ்சினிலே விஷமா! சீச்சீ!
இழிகுணத்தான் செய்கையினைத் தடுத்தே நிற்போம்!

“வளங்கொல்ல வந்துற்றான் ஆரியப் பேய்
வன்நெஞ்சன்”

என்றெல்லாம் மடை திறந்த வெள்ளமென வாய்க்கு வந்தபடி வசைபாடி ஆத்திரம் தீர்த்துக் கொண்டது.

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!

என்று கலைஞர் கருணாநிதியை போற்றிய அதே கண்ணதாசன்தான் “இவனெல்லாம் ஒரு கவிஞனா?” என்று கேட்ட அவரைப் பார்த்து..

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்

  • நானோ கவிஞ‌னில்லை
  • என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

  • பேதையனே கவிஞ‌னெனில்
  • நானோ கவிஞ‌னில்லை.

என்று கலைஞரை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மானபங்கப் படுத்தினார் கவியரசர்.

கவியரசர் கண்ணதாசன் வாழ்த்திப்பாடி, அவரை வசைபாடாது இறுதிவரை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரே மனிதர் யாரென்றால் அவர் இலக்கியச் செல்வர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களாகத்தான் இருக்க முடியும். அந்த மனிதர்குல மாணிக்கத்தை கவியரசர் கண்ணதாசன் மனம் நெகிழ்ந்து எழுதிய கவிதை இது :

புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!

பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!

(பார்க்க: “கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)

கவியரசர் கண்ணதாசன் மட்டுமின்றி, வேறு எவருடைய இழிச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு தன் தூய்மையான வாழ்வில் கறை படாத வண்ணம் சீரிய, நேரிய வாழ்க்கை வாழ்ந்துச் சென்றவர் மு.மு.இஸ்மாயீல்.

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் மீது கண்ணதாசனுக்கு அப்படியென்ன ஒரு அக்கறை? அப்படியென்ன ஒரு தனி மரியாதை? அவர் மீது இணைபிரியாத ஒரு பந்தம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம்.

ஆம்! அதற்கான ஒரே விடை – கம்பராமாயணம்.

கண்ணதாசனுக்கு பிடித்த இலக்கியம் கம்பரமாயணம். “நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதிலிருந்துதான்” என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்வார் அவர்.

“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்”

என்று உணர்ந்து சொல்லுமளவுக்கு கண்ணதாசனை பித்தனாக ஆக்கிய சத்தான காவியம் எதுவென்றால் அது முத்தமிழின் முத்திரைக் காவியமான கம்பனின் படைப்புதான்

“கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை” என்று அடிக்கடி உரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப் போற்றுவதாகும்” என்று அடிக்கடி உரைப்பார் நீதியரசர் இஸ்மாயீல்.

ஒருவர் கோர்ட்டுக்கு அரசர். மற்றொருவர் பாட்டுக்கு அரசர்.

இவ்விருவரையும் முடுக்கிய விசையும், பற்றிப் பிடித்திருந்த பசையும்தான் கம்பராமாயணம்.

“பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி வைத்த கம்பனுக்கு ஈடு –
இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு’

என்று வேறொரிடத்தில் உணர்ச்சி பொங்க பாடி, தனக்கும் கம்பனுக்குமிடையே உள்ள மானசீக உறவை தம்பட்டம் அடிக்கிறார் கண்ணதாசன்.

இத்தமிழார்வலர்கள் இருவரும் “கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடுகள் கிடையாது”. மாறாக கம்பக்கடலில் மூழ்கி முத்தெடுத்து முத்தி பெற்ற முத்தமிழ்க் காவலர்கள்.

ஒருவர் முத்தையா. இன்னொருவர் முத்தான ஐயா.

நீதியரசருக்கும் கவியரசருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் இறுக்கத்திற்கு கிரியாவூக்கியாகச் செயல்பட்டவன் கவிக்கம்பன். “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பனைக் காதலித்த இருவர்க்கிடையிலும் இணைபிரியா உறவு இறுதிவரை நிலைத்திருந்தது.

நீதிபதி மு.மு.இஸ்மாயீலைப் போலவே முன்னூறுக்கும் மேலான கம்பனின் பாடல்களை கண்ணதாசன் மனனம் செய்து வைத்திருந்தார்.

கம்பனுக்கும் கவியரசருக்கும் அப்படியென்ன ஒரு இறுக்கம்? கம்பன் மேல் அப்படியென்ன ஒரு கிறக்கம்? கவியரசரே தருகிறார் அதன் விளக்கம்.

எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன் அப்படித்தான்

என்று பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாக அழகாக கற்பனை செய்து ஆனந்தப் படுகிறார் கவிஞர்

அதுமட்டுமல்ல தனது எத்தனையோ சினிமா பாடல்களில் கம்பனை நினைவுக்கு கொண்டு வந்து களிப்படைகிறார் கண்ணதாசன்.

‘கன்னியரை ஒரு மலரென்று’ பாடிய கம்பனை வம்புக்கிழுத்து “கம்பன் ஏமாந்தான்” என்ற பாடலில் “புலவா நீ சொன்னது பொய்” என்று – சூசகமாக – அன்பாகச் சாடுகிறார் நம் கவிஞர்.

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என்று தொடங்கும் திரைப்படப்பாடலை எழுதும்போதும் கவிஞருக்கு கம்பனின் நினைவு வந்து மீண்டும் பாடாய்ப் படுத்துகிறது. “இதழை வருடும் பனியின் காற்று, கம்பன் செய்த வருணனை” என்று பாடி ஆனந்தம் கொள்கிறார்.

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” என்ற காலத்தில் அழியாத கானத்தில் ‘கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா’ என்று வரும் கண்ணதாசனின் பாடல்வரிகளை முணுமுணுத்திராத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.

“அவள் ஒரு மேனகை” என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இழைந்து குழைந்து பாடும் கவிஞரின் பாடலிலும் ‘என்ன சொல்லி என்ன பாட, கம்பன் இல்லை கவிதை பாட’ என்று கம்பனை நினைவுக் கூறுகிறார்.

“அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என்ற பாடல் மறக்க முடியாத நிலாப் பாடல். பேசாமல் “வண்ண நிலா” “வெள்ளி நிலா” என்று பாடி விட்டு போவதுதானே? ஊஹும்.. “கம்பன் பாடிய வெள்ளி நிலா” என்று மறைந்துபோன கம்பனுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கிறார் கண்ணதாசன்.

“இதயத்தில் நீ” என்ற படத்தில் “சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ?” என்ற படத்தில் மனதை வருடும் அருமையான காதற்பாடலொன்று.

“கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ? – இந்த
பட்டு உடலினை
தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ?”

என்ற கம்பனை பிடித்திழுத்து வந்து நுழைக்கையில் நம் மனதும் கம்பனை நாடிச் செல்கிறது.

அது மட்டுமா? பண்டிதர்கள் மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடிய தண்டமிழ் வரிகளை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக்கியவன் இந்த கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.

“நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
……………………………
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்”

என்ற கம்பராமாயணத்தில் வரும் இலக்கணச் செய்யுளை எல்லோரும் புரியும் விதத்தில் எப்படி இனிமையாய் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் என்று பாருங்கள்.

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா?”

ஆஹா…! இதை விட எளிமையா வேறு யாரால் கூற இயலும்?

“தோள் கண்டார் தோளே கண்டார்”! என்று கம்பன் ராமனை வருணிக்கும் வரிகளை “இதயக்கமலம்” என்ற படத்தில்

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

என்ற பாடல் வரிகளை பட்டிக்காட்டானுக்கும் எட்டும் வகையில் புட்டு புட்டு வைக்கிறார்.

பாலகாண்டத்தில் மிதிலைக் காட்சியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் “வண்ணம்” என்ற வார்த்தையைக் கையாண்ட விதம் சுவையானது.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!

இப்பாடல் கவியரசுக்கு ஒரு ஊக்கபோதையை அளித்தததோ என்னவோ. கண்ணதாசனின் கற்பனையில் மலர்ந்த இப்பாடலை படித்தால் இவ்வுண்மை விளங்கும்.

பால்வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்……..

கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன்……

“பாசம்” படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் இந்த இனிமையான பாடல் கண்ணதாசனும் கம்பனின் காதலன் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. வேறு எந்த புலவனைக்காட்டிலும் கம்பனின் எழுத்துக்கள் இவனை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்ற உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.

கவியரசரும் நீதியரசரும் கம்பன் கழக விழாக்களில் ஒன்றாக பலமுறை பங்கெடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வானதி பதிப்பகத்தின் உரிமையாளார் திருநாவுக்கரசு இவ்விருவரின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டார்.

தமிழுக்குக் ‘கதி’ இருவர்தானாம். காலங்காலமாக அறிஞர்கள் உரைக்கும் கூற்று இது. “கதி” என்ற வார்த்தையில் ‘க’ என்ற எழுத்து கம்பனையும், ‘தி’ என்ற எழுத்து திருவள்ளுவரையும் குறிக்குமாம்.

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த இஸ்மாயீல் அவர்கள் இந்து மதத்தின் காப்பியமாக போற்றப்படும் கம்பராமாயணத்தில் அதன் இலக்கியச் சுவைக்காக அந்த காப்பியத்தை முழுவதுமாய் படித்துத் தேர்ந்தவர்.

சிலகாலம் நாத்திகச் சிந்தனையில் ஊறித் திளைத்த கண்ணதாசன், கம்பராமாயணத்தைக் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, கம்பனின் பாடல்களைக் கசடறக் கற்று, அதன் கவிநடையில் மயங்கி தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் கண்ணதாசன்.

“நான் கேலி செய்ய நினைத்த கம்பன், என்னையே கேலி செய்து விட்டான்” என்று இந்நிகழ்வை கண்ணதாசன் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணதாசன் “ஏசு காவியத்தை” எழுதினார் என்ற காரணத்தினால் அவர் கிறித்துவ மத ஆதரவாளர் என்றோ அல்லது நீதிபதி இஸ்மாயீல் “கம்பராமாயணத்தை” ஆராய்ந்தார் என்ற காரணத்தினால் அவர் இந்து மத ஆதரவாளராக இருந்தார் என்றோ பொருள் கொள்ளல் ஆகாது.

இலக்கியச் சுவை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதில் ஜாதி, மத பேதம் கிடையாது.

அறிஞர் அண்ணாவின் பார்வையில் கம்பராமாயணத்தில் காமரசம் தென்பட்டது.
நீதிபதி இஸ்மாயீலின் பார்வையில் கம்பராமாயாணத்தில் இலக்கியநயம் தென்பட்டது.

நீதிபதியை “வழி தவறிய வெள்ளாடு” என்று வருணிப்பவர்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

வால்மீகி ராமாயணத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமஸ்கிருதத்தைக் கற்றவர் இஸ்மாயீல்.

கண்ணதாசன் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் தனது அடிப்படைக் கொள்கைகளை, நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே இருந்தவர்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தனது கொள்கைகளிலிருந்தும், தனது மார்க்கப் பற்றிலிருந்தும் சற்றும் மாறாதிருந்தவர்.

அவரது சாதனைகளை பின்வரும் பதிவுகளில் விளாவாரியாக விவாதிப்போம்.

(இன்னும் வரும்…. )

 

Tags: , , , , , , , , , , ,

கம்பன் அவன் காதலன் (இரண்டாம் பாகம்)


கதர்ச் சட்டைக்காரன்

கதர்ச் சட்டைக்காரனாக நம் கன்னித் தமிழ் கலா ரசிகன் உலா வந்த நிலாக்காலம் அது.

இந்திய நாடு சுதந்திரக் காற்றை இஞ்சித்தும் சுவாசித்திராத நேரம்.

1940-ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் நாகூரில் வாழ்ந்த முஸ்லீம்களில் பெரும்பாலோர் முஸ்லீம் லீகில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைத்த காலம்.

பஞ்சம் தீர்க்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பச்சை கொடி ஏந்திய கட்சியில் பட்டாளமாய் சேர்ந்திருந்தார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் பூண்டிருந்த “ஒருங்கிணைந்த இந்தியா” என்ற கனவு நனவாகாது என்பது ஓரளவு புரிந்துப் போனது.

பெரும்பாலான நாகூர்வாசிகள் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் ஆதரவாளர்களாக மாறி இருந்தனர். முஸ்லீம்களுக்கு நலம் விளைவிக்கும் எனக் கருதி, பாகிஸ்தான் பிரிவினைக்கு முழுமூச்சாய் ஆதரவு தெரிவித்தனர். வெகுசிலரே மகாத்மா காந்தி மற்றும் மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களுக்கு ஆதரவு நல்க தங்களை தயார் படுத்தியிருந்தார்கள்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் வான்முட்டும் மினாராக்களில் முட்டி மோதி எதிரொலித்தன.

இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு கதர்ச்சட்டைக்காரராக மும்முரமாக வலம் வந்த இஸ்மாயீலை, ஏதோ வேற்றுக் கிரக அந்நியனாய் ஏற இறங்க பார்த்தனர்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு எத்தகையது என்பதற்கு நேதாஜியின் தேசிய ராணுவத்தில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கையே மாபெரும் சான்றாகும். 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தனர் என்ற தகவல் நம்மை தலைநிமிர வைக்கிறது.

திருச்சியில், ‘படே ஹஜ்ரத்’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட மெளலவி செய்யது முர்தஜா அவர்கள் ‘கிலாபத்’ போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர். இவர் ராஜாஜி, காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாலக்கரையில் இவர் நிறுவிய பள்ளிக்கூடத்தை இவரது மறைவுக்குப் பின் அரசாங்கமே ஏற்று “அரசாங்க இஸ்லாமிய பள்ளிக்கூடம்” என்று பெயர் மாற்றியது.

‘படே ஹஜ்ரத்’தின் நெருங்கிய நண்பரான ராஜாஜி அவர்கள் இதனை மீண்டும் “செய்யது முர்தஜா அரசு உயர் நிலைப்பள்ளி” என்று பெயர் மாற்றம் செய்து இப்பெரியாரை கெளரவித்தார். தமிழகத்தில் பாகிஸ்தான் என்ற தனிநாடு பிரிவினைக்கு ஆட்சேபனை தெரிவித்த முஸ்லீம் தலைவர்களுள் ‘படே ஹஜ்ரத்’ குறிப்பிடத் தக்கவர்.

செய்யத் முர்தஜா மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் மு.மு.இஸ்மாயீல். 1949-ஆம் ஆண்டு இப்பெரியார் மறைந்தபோது சொல்லவொணா துக்கத்திற்கு ஆளானார் அவர்.

1945-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயீல். குறும்பு தவழும் அரும்பு மீசை பருவத்தில் இவர் விரும்பி ஏற்ற பாடமோ கணிதம்.

இருபத்து நான்கு வயதே நிரம்பியிருந்த இளைஞரான அவர், மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதினார். அபுல் கலாம் ஆஜாத்தை பற்றி அதிகம் தெரியாதவர்கள் எல்லாம் அவரைப் பற்றி நன்கு அறியக்கூடிய வாய்ப்பை அந்நூல் ஏற்படுத்தி தந்தது. (இந்நூலைப் பற்றிய மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம்)

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைப் பார்ப்பதற்கு திருச்சி ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரம் அது.

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்தியின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்த ஒரு மிக முக்கிய நபரை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பேராசிரியர் கே.சுவாமிநாதன்.என்ற புகழ் பெற்ற காந்தியவாதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தின் தன்னிகரில்லா மாந்தனாய்த் திகழ்ந்து, தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவான வாழ்வு வாழ்ந்தவர் இவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயிலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற் திறனும் சுவாமிநாதன் அவர்களை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீலுக்கு கே.சுவாமிநாதன் அவர்களுடைய அன்பும் பரிவும் அளவற்ற ஆறுதல் தந்தது. அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றினார். தன் இறுதிநாள் வரை தனது ஒவ்வொரு பேச்சிலும் தன்னை ஆளாக்கிய அந்த அற்புத மாந்தரை அவ்வப்போது அவர் நினைவுகூறத் தவறவேயில்லை.

ஒரு பேட்டியின் போது “தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்று கூறினார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப எந்நாளும் செய்ந்நன்றி மறவாத செயல் வீரராய்த் திகழ்ந்தார் இஸ்மாயீல்.

அவரது நினைவாக “பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு” என்ற ஒன்றை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் சென்னை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் அப்பரிசு (ரூ 20,000 ரொக்கம்) சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

[அப்பரிசு, ஜெயகாந்தன் (2008), சிவசங்கரி (2009), டிஜிபி திலகவதி (2010) பொற்கோ (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அவரது குடும்பத்தார்களும் “மு.மு.இஸ்மாயீல் நினைவுப்பரிசு” என்ற ஒன்றை அவரது மறைவுக்குப்பின் ஏற்படுத்தி (ரொக்கம் ரூ 10,000) ஆண்டுதோறும் சென்னை கம்பன் கழகம் வாயிலாக சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

[அப்பரிசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2008) மு,மேத்தா (2009),கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (2010), அப்துல் காதர் (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலுக்கு தமிழ் மொழியின் மீது தணியாத தாகமும், திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் போன்ற தமிழார்வலர்கள் மீது மோகமும் ஏற்பட்டதற்கும் பேராசிரியர் அளித்த தூண்டுகோல்தான் உந்துசக்தியாக அமைந்தது.

குறிப்பாக, காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லோரும் அசைவம். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது.

இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்.

1936 முதல் தீவிர தேசிய போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள். 1941-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும், இவர் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்ததும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்.

காந்தியடிகளைப் போன்று, நான்கு முழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்து வந்தவர் கணேசன்.

இதுபோன்ற தலைசிறந்த மனிதர்களின் சகவாசத்தைப் பெற்றிருந்த இஸ்மாயீல், ஒரு பக்குவப்பட்ட மனிதராக, பழகுவதற்கு இனிமையானவராக, பண்பிலே குணசீலராக, பார்போற்றும் உத்தமராக உருவெடுத்தார்.

(இன்னும் வரும்)

முன் வரிசையில் சா.கணேசன், ராஜாஜி, காமராஜ்

கம்பனடிப்பொடி சா. கணேசன்

 

Tags: , , , ,

ஜெ.மோ.வின் பார்வையில் மு.மு.


தமிழின் பெரும் இலக்கியச் செல்வங்களான சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்றவை திராவிட இயக்கத்தின் எளிய இலக்கிய அணுகுமுறையால் மூடநம்பிக்கையை வளர்ப்பவை என புறக்கணிக்கப்பட்டன. தமிழின் பிரம்மாண்டமான பக்தி இலக்கிய மரபு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. சிற்றிலக்கிய காலகட்டம் ஒதுக்கப்பட்டது. காரைக்குடி சா. கணேசன் அமைத்த கம்பன்கழகம் போன்ற அமைப்புகளாலும் டி. கெ. சிதம்பரநாத முதலியார், நீதிபதி மு. மு. இஸ்மாயீல் போன்றவர்களாலும் கம்பராமாயணம் திராவிட இயக்கத்தின் எதிர்பிரச்சார அலையில் இருந்து மீட்கப்பட்டு தமிழர்களின் ரசனையில் அழுத்தமாக நிலைநாட்டப்பட்டது. அவ்வியக்கம் இல்லாமலிருந்திருந்தால் ஒருவேளை கம்பனை ஒரு தலைமுறை தொலைப்பதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்திருக்கும்.

– எழுத்தாளர் ஜெயமோகன்

 

Tags:

பிறர் பார்வையில்….. நீதிபதி மு.மு.இஸ்மாயீல்


‘இஸ்மாயில் போன்ற நீதிபதிகள் இந்த நாட்டில்தான் உருவாக முடியும். அவரைப் போன்றவர்கள் தோன்றுகிற இந்த பூமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் என்ன சந்தேகம்?’

– முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய்

“எல்லா நீதிபதிகளும் இஸ்மாயில் அளவு சட்ட அறிவு படைத்தவர்களாக இருந்தால் வழக்குகளை நடத்துவது எளிதாகி விடும்’
– பிரபல வக்கீல் செதல்வாட்

‘தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது’

– 2.2.2005 துக்ளக் இதழில் ‘சோ’

M.M.Ismail – A Man of Integrity – The Hindu

‘பெண்கள் நம் சமூகத்தில முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. நீ இந்தச் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியா இருப்பேன்னு நான் நம்பறேன். என்னுடைய ஆசியும், என்னுடைய வழிகாட்டுதலும் உனக்கு எப்போதும் உண்டு’ என்று என் தலையில கை வைத்துச் சொன்னார். அப்போது அவர் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் என்னைக் குறித்து அவர் மேடையில் பேசினார். கம்பனைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. அவருடைய வாரிசு என்று சொல்லப்படும் அந்தத் தகுதியை நான் முழுமையாகப் பெற வேண்டும். அதற்கான வல்லமையையும், வலுவையும், தேடலையும் இறைவன் எனக்குள் ஆத்ம பலமாய்த் தர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

– பேராசிரியை பர்வீன் சுல்தானா

“M.M.Ismail; A multi-faceted Personality” – Indian Express

 

Tags: ,

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :


1921 – 8, பிப்ரவரி நாகூரில் பிறந்தார்
1945 – சென்னை சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்
1945 – அவருடைய முதற் நூல் :மெளலான ஆஜாத் வெளிவந்தது
1946 – 1951 – சென்னையில் வழக்கறிஞராகவும் விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் தொழில் புரிந்தார்
1951 – 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர் அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞரராக நியமனம்
1967 – பிப்ரவரி – தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம்
1967 – நவம்பர் – சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல்
1970 – நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களை வரவழைத்து தமிழ் பண்பாடுக் கழகம்- ஹாங்காங் கெளரவித்தது
1974 – சென்னையில் கம்பன் கழகம் நிறுவ காராணமாக இருந்தார்.

1978-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி கம்பன் கழகம் இவரை அழைத்து தமிழறிஞர் பி.ஸ்ரீ. முன்னிலையில் “கம்ப ராமாயண கலங்கரை விளக்கம்” என்ற பட்டத்தை அளித்து கெளரவித்தது.
1979 – அண்ணாமலை பல்கலைக் கழகம் அவருக்கு “டாக்டர்” பட்டம் வழங்கி கெளரவித்தது
1979 – நவம்பர் 6, சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்
1979 – 1981 வரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நீடித்தார்
1980 – அக்டோபர் 27, பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிக தமிழக ஆளுநராக நியமனம் பெற்றார்
1981 – ஜூலை 8, தன்னை கலந்தாலோசிக்காமல் வேறு மாநிலத்திற்கு மாற்றல் செய்ததை கண்டித்து தலைமை நீதிபதியை பதவியைத் துறந்தார்
1989 – மதுரை ரோட்டரி சங்கம் ‘பால் ஹாரிஸ் பெல்லோஷிப்’ விருது
1991 – சென்னை நாரத கான சபா “ராம ரத்னம்” விருது
1997 – ஆழ்வார் ஆய்வு மையம் “ராமனுஜர்” விருது
2005 – ஜனவரி 17 திங்கட்கிழமையன்று அவரது மறைவு

           பெற்ற பட்டங்கள் :

  • “இயல் செல்வம்”
  • “சேவா ரத்தினம்”
  • “இராம ரத்தினம்”
  • “கலைமாமணி”  (1991 – 1992)
 

Tags: , , , , , , , ,