RSS

Tag Archives: Nagore celebrities

நெருப்பில்லாமல் புகையாது


நாகூர் ஆபிதீன் என்றால் புலவர் ஆபிதீனைத்தான் எல்லோரும் அடையாளம் காட்டுவார்கள். இன்னொரு ஆபிதீனும் இருக்கிறார் “குடத்திலிட்ட விளக்காக”.

“வேறு உலகத்தில் ஜீவராசிகள் இருக்கிறார்களா?” என்று விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். “செவ்வாய்க் கிரகத்தில் அப்படி ஏதாவது உண்டா?” என்ற ஆராய்ச்சியில் விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்.

இது அல்லாமல் வேறொரு தனியுலகம் உண்டு. அங்கு ஜீவராசிகள் இருக்கிறார்கள். 24-மணி நேரமும் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்பது 100% உண்மை. அப்படியொரு உலகம் தனியாக இயங்குவது தெரியாமலே பலபேர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை

அந்த உலகத்திற்குப் பெயர் “இணைய உலகம்” என்பதாகும்.

இணைய உலகத்தில் பிரவேசிப்பவர்கள் அனைவருக்கும் நாகூர் ஆபிதீன் என்ற பெயர் பரிச்சயம். இந்த உலகத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு ஆபிதீனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் ஒரு “Three-in-one” Product. ஆமாம். ஓவியர், பாடகர், எழுத்தாளர். (நமக்கெல்லாம் ஒரு வேலையே ஒழுங்காக வரமாட்டேன் என்கிறது)

“நெருப்பின்றி புகையாது” என்பார்கள். படிப்பவர்கள் எல்லோரும் இவரை “ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!: என்று ரவுண்டு கட்டி புகழும்போது, “ஒண்ணுமில்லாமலா இப்படிப் புகழ்வார்கள்?” என்ற கேள்வி எழுந்து “அப்படி என்னதான் இந்த மனுஷனிடம் இருக்கிறது?” என்ற ஒரு தேடலை நமக்கு ஏற்படுத்துகிறது

இந்த ஆபிதீன் என்றால் “Break the Rules” என்ற அர்த்தம் ஆகிவிட்டது.

வேறு என்ன? “சிறுகதை” என்ற ஒன்று இருக்கிறது. “குறுநாவல்” என்ற ஒன்று இருக்கிறது, “நாவல்” என்ற ஒன்று இருக்கின்றது.

சிறுகதையையே நாவல் சைஸுக்கு எழுதுபவரை எந்தக் கூண்டில் கொண்டுபோய் நிறுத்துவது?

ஏற்கனவே நாகூர்க்காரர்கள் மீது “நையாண்டி மிக்கவர்கள்”; “குசும்பு, இவர்களுக்கு கூடவே பிறந்தது” என்றெல்லாம் பழிச்சொல் தாராளமாகவே விழுகிறது. இந்த மனுஷனால் அந்த பழிச்சொல் மேலும் ஊர்ஜிதமாக்கப்பட்டதுதான் மிச்சம்.

ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததைப் போன்று, சுஜாதா,  “வஸந்த்” என்ற பாத்திரத்தை உருவாக்கியதைப் போன்று, தமிழ்வாணன், “சங்கர்லால்” என்ற பாத்திரத்தை உலவ விட்டதைப்போன்று இவர் “அஸ்மா” என்ற பாத்திரத்தை வாசகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளார்.

ஆர்.கே.நாராயண் அவர்களால் “மால்குடி” என்ற கிராமம் பிரபலமானதைப் போன்று, “நாகூர்” என்ற சிற்றூர் இவரது கதைகள் மூலம் பிரபலம் அடைந்துள்ளது.

இவர் தனது வலைத்தளத்தில் என்ன எழுதினாலும் அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே ஒரு வாசக பட்டாளத்தை தன்வசம் வசியப்படுத்தி வைத்திருக்கும் மோடிமஸ்தான் இவர். இந்த மோடி மஸ்தானிடம் மூடி மறைக்கும் பழக்கமில்லை.

ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டு எழுதாமல் மனம்போன வாக்கில் இவர் எழுதுவதால் வாசகர்களுக்கு இரண்டு விதமான போனஸ் கிடைக்கிறது.

1. போகிற போக்கில் பல சுவையான பொதுஅறிவு தகவல்களை நமக்கு அள்ளித் தெளித்த வண்ணம் செல்வது.

2. தன் சொந்தக்கதை சோகக்கதையை அவ்வப்போது வாக்குமூலமாய்த் தருவது. (ரசிகனுக்கும் இது ஒரு சுவராஸ்யத்தை அளிக்கிறது. ஏனெனில் பிறர் டயரியை திருட்டுத்தனமாக படிக்கும் இன்பத்தை இது தருவதினால்)

2. நையாண்டி நவீனத்துவம் என்ற பெயரில் நமக்கு வயிறு குலுங்கும் நகைச்சுவை டானிக் கிடைப்பது

இவருடைய கதைகளை படிக்கையில் சில வட்டார மொழியை புரிந்துக்கொள்ள கூடவே ஒரு ‘கோனார் நோட்ஸும்’ வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இவருடைய கதையைப் படித்தே வண்டி நிறைய நாகூர் பாஷை கற்றுத் தேர்ந்த வாசகர்களும் உண்டு. அந்த விஷயத்தில் இவர் செய்வது ஒரு மெளனப் புரட்சிதான் என்று சொல்ல வேண்டும்.

இவரது படைப்புகளை வாசிக்கையில் “சந்தானம்” அல்லது “விவேக்கின்” காமெடியை காணொளியில் கண்டு ரசித்ததைப் போன்ற ஒரு திருப்தி ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.  (மேலும் எஸ்.எஸ்.சந்திரனின் டபுள் மீனிங் ஜோக்குகளையும் நமக்கு நினைவுறுத்தும்)

இவரை வாசகர்கள் விரும்புவது இவரது வெளிப்படத்தன்மையினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இவர் திரைச்சீலை போடுவது கிடையாது.

இவரது ‘வெடப்பு’க்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நெருங்கி பழகும் தோழராகட்டும், குடும்பம் நடத்தும் மனைவியாகட்டும், ஊர்க்காரர்கள் ஆகட்டும், தர்கா நிர்வாகம் ஆகட்டும்… ஊஹூ..ம். பாரபட்சமே பார்க்க மாட்டார்.  பேனாவால் விளாசித் தள்ளி விடுவார்.

சிலசமயம் மனுஷர் நம்மை தூக்கிப் பேசுகிறாரா அல்லது போட்டுக் கவிழ்க்கிறாரா என்றே புரியாமல் கன்பூஷியஸ் (இந்த வார்த்தை நான் கண்டுபிடித்தது) ஆகி விடுவோம்.

இவரது வலைத்தள பதிவுகள் சிலவற்றை படிக்கையில் ‘ஷிப்லி பாவா’ பேசுவதைப் போலிருக்கும். எனக்கு சில விஷயங்கள் மண்டையில் ஏறாது.  அதற்கான அறிவு நமக்கு கிடையாது போலும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேன்.

ஒரு சின்ன வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கும் இவர் வெளியில் வரவேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருக்கும் இவர் , நாகை கலங்கரை விளக்கமாக  பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற சகதோழனின் விருப்பம்.

நான் சொல்வது ஒருபுறம் கிடக்கட்டும். இவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் படித்தால் “நெருப்பில்லாமல் புகையாது” என்ற உண்மை விளங்கும்.

watch?v=VM5wawlV_cY&feature=player_embedded

Our sweetest songs are those that tell us of saddest thought என்று கவிஞன் ஷெல்லி சொன்னான். எவ்வளவு உண்மை! ஆபிதீனின் நகைச்சுவை சொல்ல வரும் விஷயமும் மிகமிகத் துயரமானது. ஆபிதீனின் எழுத்தின் உயிரோட்டம் என்று இதைச் சொல்ல வேண்டும். இந்த நகைச்சுவை மிகமிக ஆழமான துன்ப அனுபவங்களை மிகத்துல்லியமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கும் தன்மை கொண்டவை. – நாகூர் ரூமி

(பார்க்க பதிவுகள்)

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன். – அஸ்ரஃப் ஷிஹாப்தீன் 

(பார்க்க அஸ்ரஃப் ஷிஹாப்தீன் வலைத்தளம்)

 ஒருநாள் சாரு ஆபிதின் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியர், சிறுகதை நாவல் எழுதக் கூடியவர் என்பதாக கூறுவார். ஒருமுறை ஆபிதீனை சாரு வீடடில் சந்தித்தேன். அதில் பழக்கம் கொள்ளும் அளவிற்கு நானோ ஆபிதீனோ பேசிக்கொண்டதுகூட இல்லை. உண்மையில் ஆபிதீனிற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்வதும்கூட சாத்தியமற்ற ஒரு சந்திப்பு நிற்க…

நீண்ட நாட்களாக ஆபிதீன் கதைகளை படிக்கும் எண்ணம் இருந்து வந்தது. அவரது கதைகள் படிக்க எனது சூழலில் கிடைக்கவில்லை. அல்லது தீவிரமாக அதனை தேடும் நிலையும் வாய்க்கவில்லை. அவரது எழுத்துக்களை படிக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறியதைப்போல பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது கதைகள் இரண்டினை சுவராஸ்யமான தலைப்புகளை கொண்டிருந்ததால் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து படித்தேன்.

1 பதிவு இணைய இதழில் ஜனவரி 2004-ல் வெளிவந்த கதை “இஸ்லாமிய கதை எழுத இனிய குறிப்புகள்”.
2. திண்ணை.காம் செப்டம்பர் 2003-ல் வெளிவந்த “ஹே! ஸைத்தான்” கதை.

நீண்ட நாட்களாக தமிழ் சிற்றிதழ்கள் இணையம் போன்றவற்றடன் தொடர்பில்லாததால்.. இவற்றை உரிய காலங்களில் படிக்க இயலவில்லை. அது வருந்தக்கூடிய செய்திதான்। பின்நவீனத்துவ கதையாடலில் ஒரு உத்தி நையாண்டி என்பது. நையாண்டியின் மூலம் உன்னதம் புணிதம் என்கிற விஷயங்களை கவிழ்த்து தலைகீழாக்கிவிடுவது. நையாண்டி என்பது ஒரு கதையாடல் உத்திதான் என்றாலும் கதையின் நையாண்டி ஒரு நகைச்சுவை உணர்வுடன் முடியாமல் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வண்ணம் ஒரு ஆழ்ந்த அமைப்பை உள்ளார்ந்து கொண்டிருக்கும். கதை வாசித்தபின் ஒரு செயலூக்கமிக்க மெளனத்தை ஏற்படுத்தும். எடுத்துரைக்கப்படும் கதையாடலில் மேலமைப்பிற்குள் உள்ளார்ந்து ஓடும் கூர்மையான விமர்சனம் கதை ஏற்ற முனைந்த உணர்வு தளத்திற்கு வாசகனை இட்டுச் சென்றுவிடும். அத்தகைய உணர்வை புதுமைபித்தனின் கதைத்தொகுதிகளில் கீழ்கண்ட கதைகள் ஏற்படுத்தக்கூடியவை. “திருக்குறள் செய்த திருக்கூத்து” “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்””புதிய கந்தபுராணம்” “இலக்கிய மம்மநாயனார் புராணம்” “கட்டில் பேசுகிறது” வேதாளம் சொன்னகதை “கட்டிலை விட்டிறங்கா கதை” போன்ற கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நகைச்சுவையை உருவாக்குவதுடன் சமூகம், சடங்குகள், ஆச்சாரங்கள் அல்லது பழகிய மனோபாவங்கள் என கெட்டித்தட்டிப்போயுள்ள புனிதங்களை கவிழ்த்துப் போட்டுவிடும்.

அப்படியொரு உணர்வை இவ்விருக்கதைகளும் உருவாக்கின. சிரிக்காமல் ஒரு வரிக்கூட படிக்க முடியவில்லை. – ஜமாலன்

(பார்க்க ஜமாலன் வலைத்தளம்)

ஆபிதீனைப் பற்றி எனது பதிவில்

ஆபிதீனும்  ஆர்.கே.நாராயணனும்

 

Tags: , , , , , , , , ,

புலவர் ஆபிதீன் ஆத்திகரா? இல்லை நாத்திகரா?


1916-ஆம் ஆண்டு நாகூரில் பிறந்த புலவர் ஆபிதீனின் சிந்தனை எப்போதும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அவருடைய சிந்தனைக் கோணத்தை மேலோட்டமாக பார்க்கையில் நேரான பாதையை விட்டு விலகியோடி அவர் பாடுவதாக தோற்றமளிக்கும். ஆனால் பொருளுணர்ந்து விளங்குபவர்களுக்கு அதன் உள்ளர்த்தம் புரியும். வினா கேட்பது எளிது. அதற்கு விளக்கம் சொல்வது அரிது.

கவிஞர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காண்பிப்பதற்காகவே குதர்க்கமாக சிந்திப்பார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. குதர்க்கமாக கேள்வி கேட்டபின் புத்திசாலித்தனமாக பதில் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை கேள்விக்குறியாகவே விட்டுச் சென்றால்……? நமக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் போனாலும், அந்த கவிதையை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்று நழுவிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. குதர்க்கமான சிந்தனைகளுக்கு நாம் விளக்கம் கேட்கப்போய், பதிலானது அதைவிட குதர்க்கமாக வந்தால் நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது.

நண்பர் நாகூர் ஆபிதீனின் வலைப்பதிவில் படித்த கவிஞர் ஜபருல்லாவின் கவிதை இது. (ஒரே பெயரை இரண்டு ஆபிதீன்களும் வைத்துக் கொண்டிருப்பதால் வாசகர்களும் பயங்கரமாக குழம்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்)

நல்லவர் கெட்டவர் என இல்லை.
எல்லோரும் ஒண்ணேதான்.
இறைவனும்…!

இந்த கவிதைக்கு அவர் விளக்கம் கேட்கப்போக “ஹா.. ஹா…ஹா.. ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான்” என்ற பதில் வர, ஆபிதீன் அதிர்ச்சிக்குள்ளாக, மேலும் அவர் விளக்கம் கேட்டிருந்தால் கவிஞர் இப்படிக்கூட பேசி அவரை சரிக்கட்டியிருப்பாரோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது.

நல்ல Hour, கெட்ட Hour என இல்லை, எல்லாமே நல்ல நேரம்தான்

என்று சமாளிபிகேஷன் செய்திருப்பார் கவிஞர். இதற்காகத்தான் இதுபோன்ற கவிஞர்களிடம் நாம் அதிகமான கேள்வி கேட்கக் கூடாது என்றுச் சொல்வது. எனது அறிவுரை இதுதான். குதர்க்கமாக சிந்திப்பவர்களிடம் குதர்க்கமான கேள்விகள் கேட்கலாம். ஆனால் குதர்க்கமாக சிந்திப்பவர்களிடம் ஒருபோதும் நேரான கேள்விகள் கேட்கவே கூடாது.

இருட்டில் இருந்தான் இறைவன் – நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் – அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!

என்று நாகூர் சலீம் அவர்கள் எழுதிய வரிகளை விமர்சித்து “அது தவறு” என்று சுட்டிக்காட்டியிருந்தேன். (பார்க்க: இறைவனும் இருட்டும்)

இறைவன் எண்ணற்ற நபிமார்களை பூமிக்கு அனுப்பி வைத்தானே அவர்களும் இறைசெய்தியை மானிடர்களுக்கு எட்டத்தானே செய்தார்கள்? இருட்டில் இருந்த இறைவனை நபிகள் நாயகம்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறதே என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.

நாகூர் சலீம் எழுதியது சரிதான் என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இவ்வரிகளை அகமியக் கண்களோடு பார்க்க வேண்டுமென்று என் வாயை அடைத்து விட்டார்கள். அதாவது, “உதயம், உச்சம், அந்தி, மறைவு போன்ற செயல்பாட்டு குறியீடுகள் சூரியனை முன்னிட்டு சொல்லப்படும் பொழுதுகளாம். அவைகள் நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வார்த்தைகள் தானே தவிர உதயம், உச்சம், அந்தி, மறைவு என்பது சூரியனுக்கில்லை என்று விளக்கம் தந்தார்கள். “மறைந்த பொக்கிஷமாக இருந்தேன்” என்ற இறைக் கூற்றான நபி மொழி, சிருஷ்டிகளை படைக்கும் முன் ‘அமா’விலிருந்தான் எனும் நபிமொழியின் அடிப்படையில் இருளில் இருந்தான் என்று சிலரால் சுட்டிக் காட்டப்படுவதும், இவ்வாறு வரும் தொடர்பு நிலையை குறிக்கும் வார்த்தைகளை வைத்துதானாம்.

“அகமியம், மெஞ்ஞானம் இவைகளை பற்றி அறிந்திராத அதிகப்பிரசங்கியான உனக்கு இந்த கேள்விகளெல்லாம் தேவைதானா?” என்று என் மனசாட்சி என்னை மிரட்ட, அன்றிலிருந்து கேள்வி கேட்கவே எனக்கு ‘கிலி’ பிடித்துக் கொண்டது.

அண்மையில் நான் படித்த புலவர் ஆபிதீன் (இது 1916-ல் பிறந்த ஆபிதீன்) அவர்களுடைய “கருணையுள இறையவனே!” என்ற கவிதையை படித்து நான் மிகவும் குழம்பிப் போய்விட்டேன், அவர் “ஆத்திகரா? இல்லை நாத்திகரா?” என்று என் மனதுக்குள் சிறிய பட்டிமன்றம் கூட வைத்துப் பார்த்தேன். தொடக்கத்தில் குழம்பிப் போனாலும் கூட கடைசி வரிகளை படித்தபின்தான் எனக்குள்ளிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

எல்லாமுன் செயலென்று
ஏற்கவிலை; ஏனென்றால்,
எல்லாமே நீ செய்தால்,
ஏன்பின்னர் தண்டனையே?

என்கிறார் புலவர். எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள். “எல்லாம் அவன் செயல்” என்று இந்துமதம்கூட அறிவுறுத்துகிறது. ஆனால் புலவர் ஆபிதீன் மட்டும் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார். அதற்கு அவர் கேட்கும் கேள்வியும் நியாயம்போல் தெரிகிறது. “எல்லாமே அவன் செயல் என்றால் பிறகு எதற்காக இறைவன் நமக்கு தண்டனை வழங்க வேண்டும்?” “எதற்காக இந்த கேள்வி, கணக்கு? எதற்காக இம்மை மறுமை? எதற்காக சுவர்க்கம் நரகம்? எதற்காக இறுதி நாள் தீர்ப்பு?

புலவர் ஆபிதீனின் ஒரு சின்ன கேள்விக்குள் இத்தனை துணைக்கேள்விகளும் அடங்கி விடுகின்றன. புலவருக்கு பைத்தியம் கீத்தியம் பிடித்து விட்டதா? இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஏன் இந்த குதர்க்கமான கேள்வி? நம் ஈமானையே ஆட்டம் காண வைக்கும் கேள்வியல்லவா இது? என்று நாம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். அடுத்துவரும் வரிகளை பாருங்கள்:

என்னுள்ளே இருப்பதுவாய்
எண்ணவிலை; ஏய்க்கவிலை
என்னுள்ளே சிக்கியபின்
எத்தவமும் அவசியமோ?

என்று பாடுகிறார் புலவர். “பிடறி நரம்பைவிட சமீபமாக இறைவன் இருக்கின்றான்” என்கிறது இஸ்லாம், “இறைவன் உனக்குள் இருக்கிறான்” என்கின்றது இந்துமதம்.

புலவர் ஆபிதீனுக்கு மாத்திரம் வரக்கூடாத சந்தேகம் ஒன்று வந்து அவரை ஆட்டிப் படைக்கின்றது, அவருக்குள் இறைவன் இருப்பதாக அவர் நினைக்கவில்லையாம். அவர் கூறும் காரணமும் நம்முடைய சிந்தனையைத் தூண்டுகின்றது. “நமக்குள் இறைவன்” என்று ஆகிவிட்டபோது மனிதன் ஏன் இறைவனை வழிபட கோயிலுக்கும், பள்ளிவாயிலுக்கும் சென்று வரவேண்டும்? “புலவரே! உங்களுக்கு சிந்தனை வருவதென்னவோ நியாயம்தான். அதற்காக எங்களை ஏன் வீணாக போட்டு குழப்புகின்றீர்” என்று அவரைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது

எங்கெங்கும் நிறைந்தவனாய்
எப்பொழுதும் நம்பவில்லை.
எங்கெங்கும் நீயிருந்தால்
எவ்வுருவும் உனதலவோ?

என்று பாடுகின்றார். அப்படியென்றால் “எங்கும் நிறைந்தவனே அல்லாஹ்! அல்லாஹ்!. எல்லாம் அறிந்தவனே சுபுஹானல்லாஹ்” என்ற பாடல் பொய்யா? “இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்கிறதே இந்துமதம். எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்று சொன்னால் காற்று, நீர் மழை, சந்திரன், சூரியன் எல்லாமே இறைவன்தான் என்றுதானே அர்த்தம்? அப்படியென்றால் அவைகளை வணங்குவது எப்படி தப்பாகும்? என்ற விஷமத்தன்மான ஒரு கேள்வியை சூசகமாக எழுப்பிவிட்டு நம்மை பாடாய்ப் படுத்துகிறார் புலவர் ஆபிதீன்.

கண்ணுக்குள் மணியாயும்
கருதியதுங் கிடையாது
கண்ணுக்குள் மணியானால்
காரிருளில் செயலெங்கே?

இறைவன் கல்புக்குள் இருக்கிறான் என்பார்கள் சிலர். கண்ணின் மணியாய் இருக்கின்றான் என்பார்கள் வேறுசிலர். “கண்ணுக்குள் மணியானால் பயங்கரமான இருட்டிலும் நம் கண்கள் காண வேண்டுமே? இப்படியெல்லாம் நம்மை போட்டுக் குழப்பும் புலவரின் மீது நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது, இவருடைய கவிதையை படிப்பதற்கு பதிலாக படிக்காமலேயே இருந்திருக்கலாம். படித்ததினால்தானே இத்தனை குழப்பமும், வீண் சந்தேகங்களும்?

இறுதியாக அவர் வடிக்கும் வரிகளில்தான் கிளைமாக்ஸ் அடங்கி இருக்கின்றது.

கண்ணாலும் காண்பவெலாம்
கட்டாயம் அழியுமாதல்,
கண்ணாலும் காணொண்ணாக்
கருணையுள இறையவனே!

இதைப் படித்து முடித்த பிறகுதான் அவர் ஈமான் மீது நமக்கு நம்பிக்கையே துளிர்விடுகின்றது. நமக்கு தெளிவும் பிறக்கின்றது.

ஏன் இறைவன் அரூபமாக இருக்கின்றான் என்பது மில்லியன் டாலர் கேள்வி. மனிதன் இறைவனை நம்ப வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அவனுக்கு அது ஒரு சாதாரண விஷயம். ஒரே ஒரு முறை அவன் எல்லோருக்கு முன்பும் வானத்தில் தோன்றி “நான்தான் இறைவன்” என்று நமக்கு வெளிக்காட்டியிருந்தால் பிரச்சினையே இல்லையே. உலகத்தில் எந்த நாத்திகனும் இருக்க மாட்டான். எவனும் பாவம் செய்ய மாட்டான். மோசம் செய்ய மாட்டான், ஊரார் பொருளை கொள்ளையடிக்க மாட்டான். சூது, வாது, கொலை, கொள்ளை எதுவும் உலகில் நிகழாது. எல்லா காவல் நிலையங்களையும் அடைத்துவிட்டு இந்த போலீஸ்காரர்களையெல்லாம் பேசாமல் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.

புலவர் ஆபிதீனின் இறுதி வாக்கியம் எந்த ஒரு நாத்திகனையும் ஆத்திகனாக்கி விடும், அவனை இறைவன்பால் சிந்திக்க வைத்துவிடும்.

நம் கண்கள் காணும் காட்சிகள் யாவும் உண்மையல்ல. அண்ணாந்து வானத்தைப் பார்க்கையில் ஒரு பெரிய கொட்டாங்கச்சியை பூமிமீது கவிழ்த்து வைத்ததுபோல் தெரிகின்றது. நிலவைப் பார்த்தால் அதற்குள் ஏதோ பிரகாசமான பல்பு எரிவது போலிருக்கின்றது. வெட்டவெளியில் நடந்துக்கொண்டே நிலவைப் பார்க்கையில் அதுவுகம் நம்மை பின்தொடர்ந்து வருவதுபோல் இருக்கின்றது. பாதையில் தூரத்தே தெரியும் நீரின் அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒண்ணுமே இல்லை. அது கானல் நீராம். நீல நிரத்தில் தெரியும் கடல்நீரை கையில் மொண்டு பார்த்தால் அதில் நீலநிறமே இருப்பதில்லை.

நாம் கண்ணால் காணும் காட்சிகள் யாவும் ஒரு நாள் அழியக் கூடியது. இந்த மரம், மலை, நதி, வாய்க்கால், மேகம், பூமி, மனிதன், பறவை, மிருகம் எல்லாமே அழியக்கூடிய வஸ்துக்கள். ஒரு சுனாமி, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு அல்லது பூகம்பம் போதாதா?

ஆனால் நம் கண்ணுக்கே புலப்படாத இறைவன் இருக்கின்றானே, அவனுக்கு அழிவென்பதே கிடையாது. அதனால்தான் அவனை Omniscient, Omnipotent, Omnipresent என்று போற்றுகிறோம். ஆதியும் அவன்தான், அந்தமும் அவன்தான். முதலும் அவனே முடிவும் அவனே.

அதனால்தான் அவன் யார் கண்ணிலும் அகப்படுவதில்லை. “Heard Melodies Are Sweet But Those Unheard Are Sweeter Still” என்று கூறுவான் ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ்.

நம்முடைய ஞானக்கண்களை திறந்து வைத்த திருப்தியில் நமக்கு புலவர் ஆபிதீன் மீது ஏற்பட்ட அத்தனை கோபமும் நொடியில் காற்றோடு காற்றாக காணமல் கரைந்து போய்விடுகின்றது.

– அப்துல் கையூம்

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் ஹனீபா பாடிய சுதந்திர போராட்ட பாடல்

 

Tags: , , , , , , , , ,

நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?



பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரிவரை – ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடிக்கும்வரை -ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து இன்று நான்யாரோ, அவன் யாரோ என்று, தகவல் பரிமாற்றம் கூட இன்றி பிரிந்து வாழும் என் நண்பன் E.M.நெளசாத் அலி பற்றி தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்த பேட்டியை என் வலைப்பதிவில் வெளியிடாமல் போனால் உண்மையில் நான் ஒரு நட்புக்கு துரோகம் செய்தவானாகி விடுவேன்.

இதற்கு ஒரு பிளாஷ்பேக் தேவைப்படுகிறது.

எல்லா பெற்றோர்களைப்போல் தன் பிள்ளையும் “டாஸ்… பூஸ்” என்று இங்கிலீசில் பேச வேண்டும் என்ற ஆங்கில மோகத்தில் என்னையும் நாகை பீச் ரோட்டில் இருந்த “Little Flower Kinder Garten” ஸ்கூலில் LKG வகுப்பில் சேர்த்தார்கள். படகு போன்ற ஸ்டுடி பெக்கர் வண்டி என்னையும் என் தம்பி தங்கைகளையும் சுமந்துச் செல்லும். “Born with Silver spoon in mouth” என்பார்களே – அது ஒரு நிலாக்காலம்.

LKGயும் படிச்சு, UKGயும் படிச்சு ரைம்ஸ் எல்லாம் தலை கீழாக மனப்பாடம் பண்ணியாச்சு. அப்புறம்….. மகன் மேலும் இங்கிலீசில் பிச்சு உதற வேண்டுமே..!

நாகூருக்கு அக்கம் பக்கத்து ஊரில் அப்போது கான்வென்ட் எதுவும் இல்லை. தஞ்சாவூரில் இருக்கும் Sacred Heart Convent-ல் கொண்டு போய் தள்ளி விட்டார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹாஸ்டல் வாழ்க்கை. உப்புமாவில் புழு நெளியும். பூரிக்கு தொட்டுக்கொள்ள ரசம். (அது என்ன காம்பினேஷனோ தெரியாது). கோ-எஜுகேஷன் வேறு. கிறுஸ்துமஸ் தினத்தன்று பாலே டான்ஸுக்கு ஆங்கிலோ இந்திய ‘பம்பளிமாஸ்’ Joanna-தான் எனக்கு ஜோடி. அவளுடைய இடுப்பை பிடித்துக்கொண்டு நான்தான் ஆட வேண்டுமாம் மேரி சிஸ்டர் சொன்னார்கள்.

காலப்போக்கில் ஹாஸ்டல் வார்டன் புஷ்பா சிஸ்டர் முதல் ஹெட்மிஸ்ட்ரஸ் அல்போன்ஸா சிஸ்டர் வரை எல்லோருக்கும் நான்தான் Favourite Boy. சர்ச்சில் நடக்கும் Carol இசைக்கு நான்தான் Lead பாடகன். நாக்கின் கீழே அப்பத்தை பயபக்தியோடு வைத்து கரைய வைத்திருக்கிறேன். எனக்கு ஞானஸ்னானம் கூட செய்து வைத்தார்கள்.

“Our Father who art in heaven,
hallowed be Thy name.
Thy kingdom come.
Thy will be done on earth, as it is in heaven”

என்ற பிரார்த்தனை சொல்லிவிட்டுத்தான் காலைப்பொழுதையே தொடங்குவேன். அந்த அறியாப் பருவத்தில் இப்படித்தான் என் ஆரம்ப வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. ஐந்தாம் வகுப்பின் இறுதியில் என் பள்ளியிலிருந்து நாகூர், வேளாங்கண்ணி சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். வேளாங்கண்ணி மாதாகோயிலில் என்னென்ன வேண்டுதல் செய்ய வேண்டும் என்று கூட மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன்.

வேளாங்கண்ணி பிரார்த்தனையை முடித்து விட்டு நாகூருக்கும் அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரம் என் வீட்டிற்கும் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் என் வாழ்க்கையில் நேரான பாதைக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டது.

அப்பொழுது என் பர்ஸில் நான் மறைத்து வைத்திருந்த இரண்டு சமாச்சாரம் என் பாட்டிமா “அம்மாஜி” கண்ணில் பட்டுவிட்டது. ஒன்று வேளாங்கண்ணி மாதா படம். மற்றொன்று சிலுவை சுமந்த ஜபமாலை.

அவ்வளவுதான் ஹாஜிமாவாகிய என் பாட்டிமா கொதித்தெழுந்து கூப்பாடு போட்டு விட்டார்கள். என் தகப்பனாரை அழைத்து “கான்வென்ட் படிப்பு, கான்வென்ட் படிப்பு” என்று சொல்லி என் புள்ளையை கிறிஸ்துவனாக ஆக்கி விட்டாயே! போதும் இந்த படிப்பு” என்றுக் கூறி திட்டித் தீர்த்து விட்டார்கள். என் தகப்பனார் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.

“எதற்காக இவர்கள் இப்படி குதிக்கிறார்கள்?” என்று எனக்கு மட்டும் புரியவேயில்லை. நான் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கான்வென்ட்டுக்கும் திரும்ப வந்து விட்டேன்.

இந்த நிகழ்வை என் தகப்பனார், அவருக்கு மிகவும் நெருக்கமான இசைமுரசு நாகூர் ஹனிபாவிடம் சொல்ல, “இந்த வருடம் எனது நண்பர் பி.எஸ்.ஏ.ரஹ்மான் சென்னை சேத்துப்பட்டில் “கிரெஸெண்ட் பள்ளி” என்ற ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார். அங்கு இஸ்லாமிய மார்க்கப் படிப்பும் சொல்லிக் கொடுக்கிறார்கள். என் மகனோடு உங்கள் மகனையும் அங்கு சேர்த்து விடுகிறேன்” என்று கூறி  என்னையும் நெளசாத் அலியையும் அங்கு போய் சேர்த்து விட்டார்.

நாங்கள்தான் First Batch. என்னையும். நெளசாத் அலியையும் சேர்த்து வெறும் 16 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்த பள்ளி. இன்று ஆலமரமாக கிளைவிட்டு பற்பல ஊர்களிலும் படர்ந்து இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. (பார்க்க: என் அன்பிற்கினிய ஆசான்)

என் வாழ்க்கையில் ஒரு நேரான திருப்பத்தை அமைத்துத் தந்த – ‘அத்தா’ என்று நான் அன்புடன் அழைக்கும் இசைமுரசு அவர்களை நான் வாழ்க்கையில் மறக்க இயலாது. அதன் பிறகு முறையான மார்க்க அறிவை பெற்று, அறியா வயதில் செய்த பிழைகளை பொறுத்தருள வேண்டி, சிறுவயதிலேயே பல்வேறு ஊர்களில் மீலாது விழாக்களில் Child Prodigy-யாக சொற்பொழிவாற்ற நேர்ந்ததற்கு உறுதுணையாக இருந்தது இசைமுரசு அவர்களின் வழிகாட்டலினால்தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

அவர் MLC-யாக இருந்த காலத்தில், விடுமுறை கழிந்து பள்ளிக்கூடம் செல்வதற்கு நானும் நெளசாத் அலியும் அத்தாவுடன்தான் காரில் பயணமாவோம். கார் மாமண்டூர் அல்லது மதுராங்கத்தில் நின்று உணவகத்தினுள் சாப்பிடச் செல்கையில் நாகூர் ஹனிபாவென்னும் Celebrity-யை கண்டதும் வியப்பு மேலிட எல்லோரும் புருவம் உயர்த்துவார்கள். அவரவர்கள் ஆச்சரியத்துடன் சைகையாலேயே பேசிக் கொள்வார்கள். கூட சென்றிருக்கும் எனக்கும் ஒரு இஞ்ச் உயர்ந்து விட்டதைப்போல பெருமை மேலிடும்.

எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் முதல் மாடியில் ஓரத்தில்தான் இசைமுரசு அவர்களின் அறை. பக்கத்து அறையிலிருந்து வடகரை எம்.எம்.பக்கர் போன்றவர்கள் இசைமுரசு அவர்களைச் சூழ்ந்துக் கொள்ள அரசியல் அரட்டை துவங்கிவிடும்.

பள்ளியில் பாட்டுப்போட்டி ஒன்று நடைபெற்றது. “ராமைய்யா வஸ்தாவய்யா” என்ற இந்திப்பாடல் மெட்டில் அமைந்த “இதுதான் உலகமய்யா! இதுதான் உலகமய்யா! பலவித கோலமய்யா! பலவித கோலமய்யா!” என்ற பாடலை நெளசாத் அலி பாட, “இருலோகம் போற்றும் இறைத்தூதராம்” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலை நான் பாட, நெளசாத்திற்கு முதல் பரிசு, எனக்கு இரண்டாம் பரிசு.

“ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” “ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்” “ஆளும் இறையின் தூதர் நபி” போன்ற இசைமுரசுவின் பாடல்களுக்கு கோரஸ் கொடுத்த கோஷ்டியில் நானும். நெளசாத் அலியும் அடக்கம்.

இருந்தாலும் அத்தாவின் குரலை ஒப்பிட்டுப் பார்க்கையில் நெளசாத் அலிக்கு அந்த சாரீரம், உச்சஸ்தாயி, Base Voice – ஊஹூம் … (மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுவது என்னுடைய கெட்ட வழக்கங்களில் ஒன்றாகி விட்டது)

அத்தாவுக்கு ஏனோ தன் மகன் இந்த துறைக்கு வரக்கூடாது என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. தன்னளவுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற அறிந்திருந்த காரணத்தால்கூட இருக்கலாம். இதற்கு அவர் காட்டிய எதிர்ப்பு ஒன்றல்ல இரண்டல்ல.

இந்தி இசையமைப்பாளர் நெளசாத் அவர்களின் மீது கொண்டிருந்த பேரன்பினால் அவனுக்கு இந்த பெயரைச் சூட்டினார் இசைமுரசு அவர்கள். தன் மகன் இசைத்துறைக்கு வரக்கூடாது என்ற நினைப்பு அப்போது வந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். பிற்பாடு நெளசாத் பாடி அவர் காதால் கேட்டு விட்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது.

இசைத்துறையில், தான் பெற்ற கஷ்டங்களை தன் மகன் பெறக்கூடாது என்ற காரணம் இருப்பதாக நான் கருதவில்லை. இசைத்துறை மூலமாகத்தான் நாகூர் ஹனிபா பேரும், புகழும் செல்வமும், பதவியும் அடைந்தார். அதை அவரே நன்கறிவார்.

இன்று அந்த தடைகளை யெல்லாம் மீறி என் நண்பன் பாடகனாக வலம் வருகின்றான் என்றால் அது இறைவனின் நாட்டமாகத்தான் கொள்ள முடியும். “Man Proposes; God Disposes” என்று சொல்வார்களே. அது இதுதான் போலிருக்கிறது.

பள்ளிக்கூட வாழ்க்கையோடு எங்கள் நட்புறவு முடியவில்லை. அதன்பின் புதுக்கல்லூரியில் PUC-யின்போதும் ஒரே வகுப்பு, ஒரே ஹாஸ்டல் அறை. அதற்குப்பின் ஜமால் முகம்மது கல்லூரியிலும் பட்டப்படிப்பில் ஒன்றாக படிக்கக்கூடிய வாய்ப்பு. நெளசாத் அலி கிடார் வாசிக்க, நான் மேண்டலின் வாசிக்க, (சீனன்) செய்யிது அலி வாய்ப்பாட்டு பாட நாங்கள் கூடினால் இசைமயம்தான்.

“நாகூர் ஹனிபாவின் வாரிசு நான்தான்” என்று பெருமிதத்தோடு தினகரன் வாரமஞ்சரியில் என் நண்பனின் பேட்டி வெளியானதைப் பார்த்து நான் மட்டுமின்றி “வேண்டாம் உனக்கு இந்த வேண்டாத வேலை” என்று அறிவுரைத்த இசைமுரசு உட்பட மார்தட்டி பெருமை கொண்டிருப்பார் என்பதில் சற்றும் ஐயமில்லை. “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது உண்மைதான் போலும். நாகூர் ஹனிபாவை போல் ‘வெல்வெட்’ தொப்பியை சாய்வாக அணிந்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மூக்கின்மேல் உயர்த்திக்கொண்டு, பாடலுக்கிடையே வாயருகில் கையை வைத்து வாத்தியக்காரர்களிடம் கிசுகிசுத்துக் கொண்டு, அவ்வப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, பாடலின் முடிவில் கனைத்துக்கொண்டு, அடிக்கடி ‘விக்ஸ்’ மாத்திரைய சுவைத்துக் கொண்டு, அவரைப்போலவே பாவனைகள் செய்து மேடையேறி பாடும் பாடகர்களை வேண்டுமானால் “நாகூர் ஹனிபாவின் எதிரொலி”  என்றழைக்கலாம். ஆனால் “நாகூர் ஹனிபாவின் வாரிசு” என்று மார்தட்டிக் கொள்ளும் தகுதி நிச்சயம் நெளசாத் அலிக்குத்தான். அதில் என்ன சந்தேகம்?

– அப்துல் கையூம்

இதோ தினகரன் வாரமஞ்சரியில் (ஜூன் 17 2012) வெளிவந்திருக்கும் அந்த பேட்டி :

நாம் தலையாக இருக்க வேண்டுமே
தவிர வாலாகக் கூடாது

நாகூர் ஹனீபாவின் வாரிசு நான்தான் – நாகூர் ஹனீபா நெளசாத் அலி

இந்தப் பாடலை இஸ்லாமிய கீதம் என்று நாகூர் ஈ.எம்.ஹனீபா பாடும்போது பரவசப்படாத இதயங்களே கிடையா. எந்த மதத்தினரும் நெஞ்சுருகிப் பாடக்கூடியதும் எவரையும் தெய்வீக சக்தியுடன் கவர்ந்திழுக்கக் கூடியதுமான இந்தப் பாடலை ஹனீபாவைப் போலவே பாடுகிறார் அவருடைய வாரிசு நாகூர் ஈ.எம்.ஹனீபா நெளசாத் அலி. ஹனீபாவைப் போல் உரத்து உச்சஸ்தாயியில் பாடுவதற்கு எத்தனையோபேர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், நெளசாத் அலிக்குத்தான் அது வாய்த்திருக்கிறது.

“பட்டு மணல் தொட்டினிலே
பூமணக்கும் தென்றலிலே
கொட்டும் பனிக்குளிரினிலே
கடல் வழிக் கரையினிலே
உறங்குகின்றார் மன்னா
நாங்கள் கலங்குகிறோம் அண்ணா”

“என்று திராவிடக் கழக மேடைகளில் என் தந்தையார் பாடினால் கூடியிருப்பவர்களில் கண்ணீர் விடாதவர்களே கிடையாது” என்று மெய்சிலிர்க்கும் குரலில் பாடிக்காட்டி விளக்கம் தருகிறார் நெளசாத் அலி. ஈ.எம்.ஹனீபாவின் குரலை நேரில் கேட்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்திருக்கிறார் ஹனீபாவின் புதல்வர். ஆங்கில இலக்கியத்தில் முதுமாணி பட்டம் பெற்ற நெளசாத் அலி, பாடுவதை சென்னையில் முழு நேரத்தொழிலாகக் கொண்டிருக்கிறார். எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடியும் இலங்கை மண்ணில் பாடிவிட வேண்டும் என்பது அவரின் வேட்கை.

“என் தந்தையாரும் இதே கொள்கையைக் கைக்கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்து பாடிவிட்டுத்தான் வேறு சக்சேரிகளில் கலந்து கொண்டார். நானும் அவரின் கொள்கையின்படியே வாழ்கிறேன். என் தந்தை நான் இந்தக் துறைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். காரணம் அந்த அளவுக்கு அவர் இந்தத் துறையில் அனுபவப் பட்டு மனம் வாடியிருக்கிறார். ஆகவே அவருக்குத் தெரியாமலேயே நான் என்னை வளர்த்துக்கொண்டேன்.” என்றவரிடம், “நீங்களும் சரி உங்கள் தந்தையாரும் சரி இந்தளவுக்கு உரத்து உச்சஸ்தாயில் பாடுகிறீர்களே! இஃது எப்படி சாத்தியம்? என்றால்,

“அந்தக் காலத்தில் நாகூரில் பைத்துஸ் ஸபா நடத்துவார்கள். ஒலிபெருக்கி கிடையாது. உரத்துப் பாட வேண்டும். என் தந்தையார் அதிகமாக இவ்வாறான சபாக்களில் பாடியிருக்கிறார். அப்படியே தொடர்ந்தும் உரத்துப் பாடும் பழக்கம் வந்துவிட்டது.

என் தந்தையார் கொள்கைவாதி என்று சொன்னேனே… அவருக்குச் சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்கள். அதாவது என் தந்தையாரை குமார் என்ற தமிழ்ப் பெயரில் பாடினால் வாய்ப்பு தருவதாகச் சொன்னார்கள். என் தந்தை மறுத்துவிட்டார்” என்று சொல்லும் நெளசாத்துக்கு இரண்டு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் அவர் பெயர் மாற்றிக் கொள்ளவில்லை. கவியான இவர் இதுவரை சுமார் 40 பாடல்கள் வரை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

“உங்கள் இலங்கை விஜய கனவு நிறைவேறியது எப்படி?”

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீரும் என்னை இலங்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டவர் நண்பர் மணவை அசோகன். திருகோணமலையில் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் பாடுகிறேன். இறை வணக்கப் பாடலுடன் இலங்கை மண்ணில் குரல் பதிக்கிறேன். எண்ணம் ஈடேறிவிட்டது. அடுத்த முறை என் இசைக்குழுவுடன் வந்து மேடைக் கச்சேரி நடத்துவேன். அதேநேரம் இனி வரும் வெளிநாட்டு அழைப்புக்களையும் ஏற்பேன்” என்று திருப்தியுடன் மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் நெளசாத் அலி.

“ஹனீபாவின் வாரிசு என்று சென்னையில் இன்னொருவர் பாடுகிறாராமே, உண்மையா?”

“ஆமாம் அப்படி பல பேர் சொல்லிக்கொள்வார்கள். இதுபற்றி நான் ஒரு முறை என் தந்தையாரிடம் சொன்னேன். ஏன்டா நான் கச்சேரி முடிந்து நேராக வீட்டுக்குத்தானே வருகிறேன், வேறெங்கும் போவதில்லையே! என்று சுரீர் என்று பதில் தந்தார். ஒரு முறை சென்னையில் ஒரு மேடையிலேயே அவர்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.

தந்தையின் குரலை எடுப்பதற்கு எத்தனையோபேர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் எடுபடவில்லை. எவர் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால், வாரிசு என்ற நிலைக்கு வரக்கூடாது. ஹனீபாவின் வாரிசு நான்தான்.” என்று அடித்துச் சொல்லும் நெளசாத் அடுத்தடுத்த பயணங்களில் இதனை நிரூபிப்பேன் என்கிறார்.

தற்போதைக்குக் கொள்கைப் பாடல்களை பாடுவதுடன் இஸ்லாமிய கச்சேரிகளையும் நடத்தி வரும் நெளசாத் சுயமாக இயற்றிய தத்துவப் பாடல்களையும் பாடி வருகிறார். அங்கீகாரத்திற்கு அவசரப்படாதவன். வெற்றிகள் தேடி வரும். அதற்குப் பொறுமை வேண்டும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் நெளசாத். அவருடன் 00919994023768 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

விசு கருணாநிதி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் ஒன்று கூடலின் போது இசை விருந்தளித்த நாகூர் ஈ.எம். ஹனீபாவின் புதல்வர் நவ்ஷாத் அலியுடன் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாடுகிறார்.

நன்றி : தினகரன் வாரமஞ்சரி                                                                        தொடர்புடைய சுட்டி: நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம் 

 

Tags: , , , , ,

நீதிபதி இஸ்மாயீலைப்பற்றி சிலம்பொலி செல்லப்பன்


சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நீதியரசர் மாண்புமிகு மு.மு. இஸ்மாயீல் என்னிடம், “”இஸ்லாமியர்களிடையே அச் சமயம் பற்றி அவர்கள் மனங்கோணாமல் 25 கூட்டங்கள் எப்படி உன்னால் பேச முடிந்தது?” என்று வியந்து கேட்டார். அந்நிறைவு விழாவில் அவர்கள் வாயிலாக, “சீறாச் செல்வர்” எனும் சிறப்புப் பெயர் எனக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் இஸ்லாமியக் காப்பியங்கள் இரண்டினைத் தொடர் சொற்பொழிவாக ஆற்றிய வாய்ப்பு இதுவரை என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பேருவகை கொள்கிறேன்.

நன்றி : தினமணி ஈகைப் பெருநாள் மலர்

 

Tags: , , ,

கம்பன் அவன் காதலன் (இரண்டாம் பாகம்)


கதர்ச் சட்டைக்காரன்

கதர்ச் சட்டைக்காரனாக நம் கன்னித் தமிழ் கலா ரசிகன் உலா வந்த நிலாக்காலம் அது.

இந்திய நாடு சுதந்திரக் காற்றை இஞ்சித்தும் சுவாசித்திராத நேரம்.

1940-ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் நாகூரில் வாழ்ந்த முஸ்லீம்களில் பெரும்பாலோர் முஸ்லீம் லீகில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைத்த காலம்.

பஞ்சம் தீர்க்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பச்சை கொடி ஏந்திய கட்சியில் பட்டாளமாய் சேர்ந்திருந்தார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் பூண்டிருந்த “ஒருங்கிணைந்த இந்தியா” என்ற கனவு நனவாகாது என்பது ஓரளவு புரிந்துப் போனது.

பெரும்பாலான நாகூர்வாசிகள் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் ஆதரவாளர்களாக மாறி இருந்தனர். முஸ்லீம்களுக்கு நலம் விளைவிக்கும் எனக் கருதி, பாகிஸ்தான் பிரிவினைக்கு முழுமூச்சாய் ஆதரவு தெரிவித்தனர். வெகுசிலரே மகாத்மா காந்தி மற்றும் மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களுக்கு ஆதரவு நல்க தங்களை தயார் படுத்தியிருந்தார்கள்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் வான்முட்டும் மினாராக்களில் முட்டி மோதி எதிரொலித்தன.

இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு கதர்ச்சட்டைக்காரராக மும்முரமாக வலம் வந்த இஸ்மாயீலை, ஏதோ வேற்றுக் கிரக அந்நியனாய் ஏற இறங்க பார்த்தனர்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு எத்தகையது என்பதற்கு நேதாஜியின் தேசிய ராணுவத்தில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கையே மாபெரும் சான்றாகும். 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தனர் என்ற தகவல் நம்மை தலைநிமிர வைக்கிறது.

திருச்சியில், ‘படே ஹஜ்ரத்’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட மெளலவி செய்யது முர்தஜா அவர்கள் ‘கிலாபத்’ போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர். இவர் ராஜாஜி, காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாலக்கரையில் இவர் நிறுவிய பள்ளிக்கூடத்தை இவரது மறைவுக்குப் பின் அரசாங்கமே ஏற்று “அரசாங்க இஸ்லாமிய பள்ளிக்கூடம்” என்று பெயர் மாற்றியது.

‘படே ஹஜ்ரத்’தின் நெருங்கிய நண்பரான ராஜாஜி அவர்கள் இதனை மீண்டும் “செய்யது முர்தஜா அரசு உயர் நிலைப்பள்ளி” என்று பெயர் மாற்றம் செய்து இப்பெரியாரை கெளரவித்தார். தமிழகத்தில் பாகிஸ்தான் என்ற தனிநாடு பிரிவினைக்கு ஆட்சேபனை தெரிவித்த முஸ்லீம் தலைவர்களுள் ‘படே ஹஜ்ரத்’ குறிப்பிடத் தக்கவர்.

செய்யத் முர்தஜா மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் மு.மு.இஸ்மாயீல். 1949-ஆம் ஆண்டு இப்பெரியார் மறைந்தபோது சொல்லவொணா துக்கத்திற்கு ஆளானார் அவர்.

1945-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயீல். குறும்பு தவழும் அரும்பு மீசை பருவத்தில் இவர் விரும்பி ஏற்ற பாடமோ கணிதம்.

இருபத்து நான்கு வயதே நிரம்பியிருந்த இளைஞரான அவர், மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதினார். அபுல் கலாம் ஆஜாத்தை பற்றி அதிகம் தெரியாதவர்கள் எல்லாம் அவரைப் பற்றி நன்கு அறியக்கூடிய வாய்ப்பை அந்நூல் ஏற்படுத்தி தந்தது. (இந்நூலைப் பற்றிய மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம்)

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைப் பார்ப்பதற்கு திருச்சி ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரம் அது.

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்தியின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்த ஒரு மிக முக்கிய நபரை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பேராசிரியர் கே.சுவாமிநாதன்.என்ற புகழ் பெற்ற காந்தியவாதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தின் தன்னிகரில்லா மாந்தனாய்த் திகழ்ந்து, தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவான வாழ்வு வாழ்ந்தவர் இவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயிலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற் திறனும் சுவாமிநாதன் அவர்களை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீலுக்கு கே.சுவாமிநாதன் அவர்களுடைய அன்பும் பரிவும் அளவற்ற ஆறுதல் தந்தது. அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றினார். தன் இறுதிநாள் வரை தனது ஒவ்வொரு பேச்சிலும் தன்னை ஆளாக்கிய அந்த அற்புத மாந்தரை அவ்வப்போது அவர் நினைவுகூறத் தவறவேயில்லை.

ஒரு பேட்டியின் போது “தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்று கூறினார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப எந்நாளும் செய்ந்நன்றி மறவாத செயல் வீரராய்த் திகழ்ந்தார் இஸ்மாயீல்.

அவரது நினைவாக “பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு” என்ற ஒன்றை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் சென்னை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் அப்பரிசு (ரூ 20,000 ரொக்கம்) சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

[அப்பரிசு, ஜெயகாந்தன் (2008), சிவசங்கரி (2009), டிஜிபி திலகவதி (2010) பொற்கோ (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அவரது குடும்பத்தார்களும் “மு.மு.இஸ்மாயீல் நினைவுப்பரிசு” என்ற ஒன்றை அவரது மறைவுக்குப்பின் ஏற்படுத்தி (ரொக்கம் ரூ 10,000) ஆண்டுதோறும் சென்னை கம்பன் கழகம் வாயிலாக சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

[அப்பரிசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2008) மு,மேத்தா (2009),கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (2010), அப்துல் காதர் (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலுக்கு தமிழ் மொழியின் மீது தணியாத தாகமும், திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் போன்ற தமிழார்வலர்கள் மீது மோகமும் ஏற்பட்டதற்கும் பேராசிரியர் அளித்த தூண்டுகோல்தான் உந்துசக்தியாக அமைந்தது.

குறிப்பாக, காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லோரும் அசைவம். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது.

இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்.

1936 முதல் தீவிர தேசிய போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள். 1941-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும், இவர் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்ததும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்.

காந்தியடிகளைப் போன்று, நான்கு முழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்து வந்தவர் கணேசன்.

இதுபோன்ற தலைசிறந்த மனிதர்களின் சகவாசத்தைப் பெற்றிருந்த இஸ்மாயீல், ஒரு பக்குவப்பட்ட மனிதராக, பழகுவதற்கு இனிமையானவராக, பண்பிலே குணசீலராக, பார்போற்றும் உத்தமராக உருவெடுத்தார்.

(இன்னும் வரும்)

முன் வரிசையில் சா.கணேசன், ராஜாஜி, காமராஜ்

கம்பனடிப்பொடி சா. கணேசன்

 

Tags: , , , ,

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :


1921 – 8, பிப்ரவரி நாகூரில் பிறந்தார்
1945 – சென்னை சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்
1945 – அவருடைய முதற் நூல் :மெளலான ஆஜாத் வெளிவந்தது
1946 – 1951 – சென்னையில் வழக்கறிஞராகவும் விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் தொழில் புரிந்தார்
1951 – 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர் அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞரராக நியமனம்
1967 – பிப்ரவரி – தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம்
1967 – நவம்பர் – சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல்
1970 – நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களை வரவழைத்து தமிழ் பண்பாடுக் கழகம்- ஹாங்காங் கெளரவித்தது
1974 – சென்னையில் கம்பன் கழகம் நிறுவ காராணமாக இருந்தார்.

1978-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி கம்பன் கழகம் இவரை அழைத்து தமிழறிஞர் பி.ஸ்ரீ. முன்னிலையில் “கம்ப ராமாயண கலங்கரை விளக்கம்” என்ற பட்டத்தை அளித்து கெளரவித்தது.
1979 – அண்ணாமலை பல்கலைக் கழகம் அவருக்கு “டாக்டர்” பட்டம் வழங்கி கெளரவித்தது
1979 – நவம்பர் 6, சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்
1979 – 1981 வரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நீடித்தார்
1980 – அக்டோபர் 27, பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிக தமிழக ஆளுநராக நியமனம் பெற்றார்
1981 – ஜூலை 8, தன்னை கலந்தாலோசிக்காமல் வேறு மாநிலத்திற்கு மாற்றல் செய்ததை கண்டித்து தலைமை நீதிபதியை பதவியைத் துறந்தார்
1989 – மதுரை ரோட்டரி சங்கம் ‘பால் ஹாரிஸ் பெல்லோஷிப்’ விருது
1991 – சென்னை நாரத கான சபா “ராம ரத்னம்” விருது
1997 – ஆழ்வார் ஆய்வு மையம் “ராமனுஜர்” விருது
2005 – ஜனவரி 17 திங்கட்கிழமையன்று அவரது மறைவு

           பெற்ற பட்டங்கள் :

  • “இயல் செல்வம்”
  • “சேவா ரத்தினம்”
  • “இராம ரத்தினம்”
  • “கலைமாமணி”  (1991 – 1992)
 

Tags: , , , , , , , ,