RSS

Tag Archives: Nagore Writers

நெருப்பில்லாமல் புகையாது


நாகூர் ஆபிதீன் என்றால் புலவர் ஆபிதீனைத்தான் எல்லோரும் அடையாளம் காட்டுவார்கள். இன்னொரு ஆபிதீனும் இருக்கிறார் “குடத்திலிட்ட விளக்காக”.

“வேறு உலகத்தில் ஜீவராசிகள் இருக்கிறார்களா?” என்று விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். “செவ்வாய்க் கிரகத்தில் அப்படி ஏதாவது உண்டா?” என்ற ஆராய்ச்சியில் விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்.

இது அல்லாமல் வேறொரு தனியுலகம் உண்டு. அங்கு ஜீவராசிகள் இருக்கிறார்கள். 24-மணி நேரமும் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்பது 100% உண்மை. அப்படியொரு உலகம் தனியாக இயங்குவது தெரியாமலே பலபேர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை

அந்த உலகத்திற்குப் பெயர் “இணைய உலகம்” என்பதாகும்.

இணைய உலகத்தில் பிரவேசிப்பவர்கள் அனைவருக்கும் நாகூர் ஆபிதீன் என்ற பெயர் பரிச்சயம். இந்த உலகத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு ஆபிதீனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் ஒரு “Three-in-one” Product. ஆமாம். ஓவியர், பாடகர், எழுத்தாளர். (நமக்கெல்லாம் ஒரு வேலையே ஒழுங்காக வரமாட்டேன் என்கிறது)

“நெருப்பின்றி புகையாது” என்பார்கள். படிப்பவர்கள் எல்லோரும் இவரை “ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!: என்று ரவுண்டு கட்டி புகழும்போது, “ஒண்ணுமில்லாமலா இப்படிப் புகழ்வார்கள்?” என்ற கேள்வி எழுந்து “அப்படி என்னதான் இந்த மனுஷனிடம் இருக்கிறது?” என்ற ஒரு தேடலை நமக்கு ஏற்படுத்துகிறது

இந்த ஆபிதீன் என்றால் “Break the Rules” என்ற அர்த்தம் ஆகிவிட்டது.

வேறு என்ன? “சிறுகதை” என்ற ஒன்று இருக்கிறது. “குறுநாவல்” என்ற ஒன்று இருக்கிறது, “நாவல்” என்ற ஒன்று இருக்கின்றது.

சிறுகதையையே நாவல் சைஸுக்கு எழுதுபவரை எந்தக் கூண்டில் கொண்டுபோய் நிறுத்துவது?

ஏற்கனவே நாகூர்க்காரர்கள் மீது “நையாண்டி மிக்கவர்கள்”; “குசும்பு, இவர்களுக்கு கூடவே பிறந்தது” என்றெல்லாம் பழிச்சொல் தாராளமாகவே விழுகிறது. இந்த மனுஷனால் அந்த பழிச்சொல் மேலும் ஊர்ஜிதமாக்கப்பட்டதுதான் மிச்சம்.

ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததைப் போன்று, சுஜாதா,  “வஸந்த்” என்ற பாத்திரத்தை உருவாக்கியதைப் போன்று, தமிழ்வாணன், “சங்கர்லால்” என்ற பாத்திரத்தை உலவ விட்டதைப்போன்று இவர் “அஸ்மா” என்ற பாத்திரத்தை வாசகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளார்.

ஆர்.கே.நாராயண் அவர்களால் “மால்குடி” என்ற கிராமம் பிரபலமானதைப் போன்று, “நாகூர்” என்ற சிற்றூர் இவரது கதைகள் மூலம் பிரபலம் அடைந்துள்ளது.

இவர் தனது வலைத்தளத்தில் என்ன எழுதினாலும் அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே ஒரு வாசக பட்டாளத்தை தன்வசம் வசியப்படுத்தி வைத்திருக்கும் மோடிமஸ்தான் இவர். இந்த மோடி மஸ்தானிடம் மூடி மறைக்கும் பழக்கமில்லை.

ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டு எழுதாமல் மனம்போன வாக்கில் இவர் எழுதுவதால் வாசகர்களுக்கு இரண்டு விதமான போனஸ் கிடைக்கிறது.

1. போகிற போக்கில் பல சுவையான பொதுஅறிவு தகவல்களை நமக்கு அள்ளித் தெளித்த வண்ணம் செல்வது.

2. தன் சொந்தக்கதை சோகக்கதையை அவ்வப்போது வாக்குமூலமாய்த் தருவது. (ரசிகனுக்கும் இது ஒரு சுவராஸ்யத்தை அளிக்கிறது. ஏனெனில் பிறர் டயரியை திருட்டுத்தனமாக படிக்கும் இன்பத்தை இது தருவதினால்)

2. நையாண்டி நவீனத்துவம் என்ற பெயரில் நமக்கு வயிறு குலுங்கும் நகைச்சுவை டானிக் கிடைப்பது

இவருடைய கதைகளை படிக்கையில் சில வட்டார மொழியை புரிந்துக்கொள்ள கூடவே ஒரு ‘கோனார் நோட்ஸும்’ வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இவருடைய கதையைப் படித்தே வண்டி நிறைய நாகூர் பாஷை கற்றுத் தேர்ந்த வாசகர்களும் உண்டு. அந்த விஷயத்தில் இவர் செய்வது ஒரு மெளனப் புரட்சிதான் என்று சொல்ல வேண்டும்.

இவரது படைப்புகளை வாசிக்கையில் “சந்தானம்” அல்லது “விவேக்கின்” காமெடியை காணொளியில் கண்டு ரசித்ததைப் போன்ற ஒரு திருப்தி ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.  (மேலும் எஸ்.எஸ்.சந்திரனின் டபுள் மீனிங் ஜோக்குகளையும் நமக்கு நினைவுறுத்தும்)

இவரை வாசகர்கள் விரும்புவது இவரது வெளிப்படத்தன்மையினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இவர் திரைச்சீலை போடுவது கிடையாது.

இவரது ‘வெடப்பு’க்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நெருங்கி பழகும் தோழராகட்டும், குடும்பம் நடத்தும் மனைவியாகட்டும், ஊர்க்காரர்கள் ஆகட்டும், தர்கா நிர்வாகம் ஆகட்டும்… ஊஹூ..ம். பாரபட்சமே பார்க்க மாட்டார்.  பேனாவால் விளாசித் தள்ளி விடுவார்.

சிலசமயம் மனுஷர் நம்மை தூக்கிப் பேசுகிறாரா அல்லது போட்டுக் கவிழ்க்கிறாரா என்றே புரியாமல் கன்பூஷியஸ் (இந்த வார்த்தை நான் கண்டுபிடித்தது) ஆகி விடுவோம்.

இவரது வலைத்தள பதிவுகள் சிலவற்றை படிக்கையில் ‘ஷிப்லி பாவா’ பேசுவதைப் போலிருக்கும். எனக்கு சில விஷயங்கள் மண்டையில் ஏறாது.  அதற்கான அறிவு நமக்கு கிடையாது போலும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேன்.

ஒரு சின்ன வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கும் இவர் வெளியில் வரவேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருக்கும் இவர் , நாகை கலங்கரை விளக்கமாக  பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற சகதோழனின் விருப்பம்.

நான் சொல்வது ஒருபுறம் கிடக்கட்டும். இவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் படித்தால் “நெருப்பில்லாமல் புகையாது” என்ற உண்மை விளங்கும்.

watch?v=VM5wawlV_cY&feature=player_embedded

Our sweetest songs are those that tell us of saddest thought என்று கவிஞன் ஷெல்லி சொன்னான். எவ்வளவு உண்மை! ஆபிதீனின் நகைச்சுவை சொல்ல வரும் விஷயமும் மிகமிகத் துயரமானது. ஆபிதீனின் எழுத்தின் உயிரோட்டம் என்று இதைச் சொல்ல வேண்டும். இந்த நகைச்சுவை மிகமிக ஆழமான துன்ப அனுபவங்களை மிகத்துல்லியமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கும் தன்மை கொண்டவை. – நாகூர் ரூமி

(பார்க்க பதிவுகள்)

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன். – அஸ்ரஃப் ஷிஹாப்தீன் 

(பார்க்க அஸ்ரஃப் ஷிஹாப்தீன் வலைத்தளம்)

 ஒருநாள் சாரு ஆபிதின் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியர், சிறுகதை நாவல் எழுதக் கூடியவர் என்பதாக கூறுவார். ஒருமுறை ஆபிதீனை சாரு வீடடில் சந்தித்தேன். அதில் பழக்கம் கொள்ளும் அளவிற்கு நானோ ஆபிதீனோ பேசிக்கொண்டதுகூட இல்லை. உண்மையில் ஆபிதீனிற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்வதும்கூட சாத்தியமற்ற ஒரு சந்திப்பு நிற்க…

நீண்ட நாட்களாக ஆபிதீன் கதைகளை படிக்கும் எண்ணம் இருந்து வந்தது. அவரது கதைகள் படிக்க எனது சூழலில் கிடைக்கவில்லை. அல்லது தீவிரமாக அதனை தேடும் நிலையும் வாய்க்கவில்லை. அவரது எழுத்துக்களை படிக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறியதைப்போல பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது கதைகள் இரண்டினை சுவராஸ்யமான தலைப்புகளை கொண்டிருந்ததால் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து படித்தேன்.

1 பதிவு இணைய இதழில் ஜனவரி 2004-ல் வெளிவந்த கதை “இஸ்லாமிய கதை எழுத இனிய குறிப்புகள்”.
2. திண்ணை.காம் செப்டம்பர் 2003-ல் வெளிவந்த “ஹே! ஸைத்தான்” கதை.

நீண்ட நாட்களாக தமிழ் சிற்றிதழ்கள் இணையம் போன்றவற்றடன் தொடர்பில்லாததால்.. இவற்றை உரிய காலங்களில் படிக்க இயலவில்லை. அது வருந்தக்கூடிய செய்திதான்। பின்நவீனத்துவ கதையாடலில் ஒரு உத்தி நையாண்டி என்பது. நையாண்டியின் மூலம் உன்னதம் புணிதம் என்கிற விஷயங்களை கவிழ்த்து தலைகீழாக்கிவிடுவது. நையாண்டி என்பது ஒரு கதையாடல் உத்திதான் என்றாலும் கதையின் நையாண்டி ஒரு நகைச்சுவை உணர்வுடன் முடியாமல் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வண்ணம் ஒரு ஆழ்ந்த அமைப்பை உள்ளார்ந்து கொண்டிருக்கும். கதை வாசித்தபின் ஒரு செயலூக்கமிக்க மெளனத்தை ஏற்படுத்தும். எடுத்துரைக்கப்படும் கதையாடலில் மேலமைப்பிற்குள் உள்ளார்ந்து ஓடும் கூர்மையான விமர்சனம் கதை ஏற்ற முனைந்த உணர்வு தளத்திற்கு வாசகனை இட்டுச் சென்றுவிடும். அத்தகைய உணர்வை புதுமைபித்தனின் கதைத்தொகுதிகளில் கீழ்கண்ட கதைகள் ஏற்படுத்தக்கூடியவை. “திருக்குறள் செய்த திருக்கூத்து” “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்””புதிய கந்தபுராணம்” “இலக்கிய மம்மநாயனார் புராணம்” “கட்டில் பேசுகிறது” வேதாளம் சொன்னகதை “கட்டிலை விட்டிறங்கா கதை” போன்ற கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நகைச்சுவையை உருவாக்குவதுடன் சமூகம், சடங்குகள், ஆச்சாரங்கள் அல்லது பழகிய மனோபாவங்கள் என கெட்டித்தட்டிப்போயுள்ள புனிதங்களை கவிழ்த்துப் போட்டுவிடும்.

அப்படியொரு உணர்வை இவ்விருக்கதைகளும் உருவாக்கின. சிரிக்காமல் ஒரு வரிக்கூட படிக்க முடியவில்லை. – ஜமாலன்

(பார்க்க ஜமாலன் வலைத்தளம்)

ஆபிதீனைப் பற்றி எனது பதிவில்

ஆபிதீனும்  ஆர்.கே.நாராயணனும்

 

Tags: , , , , , , , , ,

புலவர் ஆபிதீன் ஆத்திகரா? இல்லை நாத்திகரா?


1916-ஆம் ஆண்டு நாகூரில் பிறந்த புலவர் ஆபிதீனின் சிந்தனை எப்போதும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அவருடைய சிந்தனைக் கோணத்தை மேலோட்டமாக பார்க்கையில் நேரான பாதையை விட்டு விலகியோடி அவர் பாடுவதாக தோற்றமளிக்கும். ஆனால் பொருளுணர்ந்து விளங்குபவர்களுக்கு அதன் உள்ளர்த்தம் புரியும். வினா கேட்பது எளிது. அதற்கு விளக்கம் சொல்வது அரிது.

கவிஞர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காண்பிப்பதற்காகவே குதர்க்கமாக சிந்திப்பார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. குதர்க்கமாக கேள்வி கேட்டபின் புத்திசாலித்தனமாக பதில் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை கேள்விக்குறியாகவே விட்டுச் சென்றால்……? நமக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் போனாலும், அந்த கவிதையை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்று நழுவிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. குதர்க்கமான சிந்தனைகளுக்கு நாம் விளக்கம் கேட்கப்போய், பதிலானது அதைவிட குதர்க்கமாக வந்தால் நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது.

நண்பர் நாகூர் ஆபிதீனின் வலைப்பதிவில் படித்த கவிஞர் ஜபருல்லாவின் கவிதை இது. (ஒரே பெயரை இரண்டு ஆபிதீன்களும் வைத்துக் கொண்டிருப்பதால் வாசகர்களும் பயங்கரமாக குழம்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்)

நல்லவர் கெட்டவர் என இல்லை.
எல்லோரும் ஒண்ணேதான்.
இறைவனும்…!

இந்த கவிதைக்கு அவர் விளக்கம் கேட்கப்போக “ஹா.. ஹா…ஹா.. ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான்” என்ற பதில் வர, ஆபிதீன் அதிர்ச்சிக்குள்ளாக, மேலும் அவர் விளக்கம் கேட்டிருந்தால் கவிஞர் இப்படிக்கூட பேசி அவரை சரிக்கட்டியிருப்பாரோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது.

நல்ல Hour, கெட்ட Hour என இல்லை, எல்லாமே நல்ல நேரம்தான்

என்று சமாளிபிகேஷன் செய்திருப்பார் கவிஞர். இதற்காகத்தான் இதுபோன்ற கவிஞர்களிடம் நாம் அதிகமான கேள்வி கேட்கக் கூடாது என்றுச் சொல்வது. எனது அறிவுரை இதுதான். குதர்க்கமாக சிந்திப்பவர்களிடம் குதர்க்கமான கேள்விகள் கேட்கலாம். ஆனால் குதர்க்கமாக சிந்திப்பவர்களிடம் ஒருபோதும் நேரான கேள்விகள் கேட்கவே கூடாது.

இருட்டில் இருந்தான் இறைவன் – நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் – அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!

என்று நாகூர் சலீம் அவர்கள் எழுதிய வரிகளை விமர்சித்து “அது தவறு” என்று சுட்டிக்காட்டியிருந்தேன். (பார்க்க: இறைவனும் இருட்டும்)

இறைவன் எண்ணற்ற நபிமார்களை பூமிக்கு அனுப்பி வைத்தானே அவர்களும் இறைசெய்தியை மானிடர்களுக்கு எட்டத்தானே செய்தார்கள்? இருட்டில் இருந்த இறைவனை நபிகள் நாயகம்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறதே என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.

நாகூர் சலீம் எழுதியது சரிதான் என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இவ்வரிகளை அகமியக் கண்களோடு பார்க்க வேண்டுமென்று என் வாயை அடைத்து விட்டார்கள். அதாவது, “உதயம், உச்சம், அந்தி, மறைவு போன்ற செயல்பாட்டு குறியீடுகள் சூரியனை முன்னிட்டு சொல்லப்படும் பொழுதுகளாம். அவைகள் நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வார்த்தைகள் தானே தவிர உதயம், உச்சம், அந்தி, மறைவு என்பது சூரியனுக்கில்லை என்று விளக்கம் தந்தார்கள். “மறைந்த பொக்கிஷமாக இருந்தேன்” என்ற இறைக் கூற்றான நபி மொழி, சிருஷ்டிகளை படைக்கும் முன் ‘அமா’விலிருந்தான் எனும் நபிமொழியின் அடிப்படையில் இருளில் இருந்தான் என்று சிலரால் சுட்டிக் காட்டப்படுவதும், இவ்வாறு வரும் தொடர்பு நிலையை குறிக்கும் வார்த்தைகளை வைத்துதானாம்.

“அகமியம், மெஞ்ஞானம் இவைகளை பற்றி அறிந்திராத அதிகப்பிரசங்கியான உனக்கு இந்த கேள்விகளெல்லாம் தேவைதானா?” என்று என் மனசாட்சி என்னை மிரட்ட, அன்றிலிருந்து கேள்வி கேட்கவே எனக்கு ‘கிலி’ பிடித்துக் கொண்டது.

அண்மையில் நான் படித்த புலவர் ஆபிதீன் (இது 1916-ல் பிறந்த ஆபிதீன்) அவர்களுடைய “கருணையுள இறையவனே!” என்ற கவிதையை படித்து நான் மிகவும் குழம்பிப் போய்விட்டேன், அவர் “ஆத்திகரா? இல்லை நாத்திகரா?” என்று என் மனதுக்குள் சிறிய பட்டிமன்றம் கூட வைத்துப் பார்த்தேன். தொடக்கத்தில் குழம்பிப் போனாலும் கூட கடைசி வரிகளை படித்தபின்தான் எனக்குள்ளிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

எல்லாமுன் செயலென்று
ஏற்கவிலை; ஏனென்றால்,
எல்லாமே நீ செய்தால்,
ஏன்பின்னர் தண்டனையே?

என்கிறார் புலவர். எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள். “எல்லாம் அவன் செயல்” என்று இந்துமதம்கூட அறிவுறுத்துகிறது. ஆனால் புலவர் ஆபிதீன் மட்டும் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார். அதற்கு அவர் கேட்கும் கேள்வியும் நியாயம்போல் தெரிகிறது. “எல்லாமே அவன் செயல் என்றால் பிறகு எதற்காக இறைவன் நமக்கு தண்டனை வழங்க வேண்டும்?” “எதற்காக இந்த கேள்வி, கணக்கு? எதற்காக இம்மை மறுமை? எதற்காக சுவர்க்கம் நரகம்? எதற்காக இறுதி நாள் தீர்ப்பு?

புலவர் ஆபிதீனின் ஒரு சின்ன கேள்விக்குள் இத்தனை துணைக்கேள்விகளும் அடங்கி விடுகின்றன. புலவருக்கு பைத்தியம் கீத்தியம் பிடித்து விட்டதா? இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஏன் இந்த குதர்க்கமான கேள்வி? நம் ஈமானையே ஆட்டம் காண வைக்கும் கேள்வியல்லவா இது? என்று நாம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். அடுத்துவரும் வரிகளை பாருங்கள்:

என்னுள்ளே இருப்பதுவாய்
எண்ணவிலை; ஏய்க்கவிலை
என்னுள்ளே சிக்கியபின்
எத்தவமும் அவசியமோ?

என்று பாடுகிறார் புலவர். “பிடறி நரம்பைவிட சமீபமாக இறைவன் இருக்கின்றான்” என்கிறது இஸ்லாம், “இறைவன் உனக்குள் இருக்கிறான்” என்கின்றது இந்துமதம்.

புலவர் ஆபிதீனுக்கு மாத்திரம் வரக்கூடாத சந்தேகம் ஒன்று வந்து அவரை ஆட்டிப் படைக்கின்றது, அவருக்குள் இறைவன் இருப்பதாக அவர் நினைக்கவில்லையாம். அவர் கூறும் காரணமும் நம்முடைய சிந்தனையைத் தூண்டுகின்றது. “நமக்குள் இறைவன்” என்று ஆகிவிட்டபோது மனிதன் ஏன் இறைவனை வழிபட கோயிலுக்கும், பள்ளிவாயிலுக்கும் சென்று வரவேண்டும்? “புலவரே! உங்களுக்கு சிந்தனை வருவதென்னவோ நியாயம்தான். அதற்காக எங்களை ஏன் வீணாக போட்டு குழப்புகின்றீர்” என்று அவரைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது

எங்கெங்கும் நிறைந்தவனாய்
எப்பொழுதும் நம்பவில்லை.
எங்கெங்கும் நீயிருந்தால்
எவ்வுருவும் உனதலவோ?

என்று பாடுகின்றார். அப்படியென்றால் “எங்கும் நிறைந்தவனே அல்லாஹ்! அல்லாஹ்!. எல்லாம் அறிந்தவனே சுபுஹானல்லாஹ்” என்ற பாடல் பொய்யா? “இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்கிறதே இந்துமதம். எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்று சொன்னால் காற்று, நீர் மழை, சந்திரன், சூரியன் எல்லாமே இறைவன்தான் என்றுதானே அர்த்தம்? அப்படியென்றால் அவைகளை வணங்குவது எப்படி தப்பாகும்? என்ற விஷமத்தன்மான ஒரு கேள்வியை சூசகமாக எழுப்பிவிட்டு நம்மை பாடாய்ப் படுத்துகிறார் புலவர் ஆபிதீன்.

கண்ணுக்குள் மணியாயும்
கருதியதுங் கிடையாது
கண்ணுக்குள் மணியானால்
காரிருளில் செயலெங்கே?

இறைவன் கல்புக்குள் இருக்கிறான் என்பார்கள் சிலர். கண்ணின் மணியாய் இருக்கின்றான் என்பார்கள் வேறுசிலர். “கண்ணுக்குள் மணியானால் பயங்கரமான இருட்டிலும் நம் கண்கள் காண வேண்டுமே? இப்படியெல்லாம் நம்மை போட்டுக் குழப்பும் புலவரின் மீது நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது, இவருடைய கவிதையை படிப்பதற்கு பதிலாக படிக்காமலேயே இருந்திருக்கலாம். படித்ததினால்தானே இத்தனை குழப்பமும், வீண் சந்தேகங்களும்?

இறுதியாக அவர் வடிக்கும் வரிகளில்தான் கிளைமாக்ஸ் அடங்கி இருக்கின்றது.

கண்ணாலும் காண்பவெலாம்
கட்டாயம் அழியுமாதல்,
கண்ணாலும் காணொண்ணாக்
கருணையுள இறையவனே!

இதைப் படித்து முடித்த பிறகுதான் அவர் ஈமான் மீது நமக்கு நம்பிக்கையே துளிர்விடுகின்றது. நமக்கு தெளிவும் பிறக்கின்றது.

ஏன் இறைவன் அரூபமாக இருக்கின்றான் என்பது மில்லியன் டாலர் கேள்வி. மனிதன் இறைவனை நம்ப வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அவனுக்கு அது ஒரு சாதாரண விஷயம். ஒரே ஒரு முறை அவன் எல்லோருக்கு முன்பும் வானத்தில் தோன்றி “நான்தான் இறைவன்” என்று நமக்கு வெளிக்காட்டியிருந்தால் பிரச்சினையே இல்லையே. உலகத்தில் எந்த நாத்திகனும் இருக்க மாட்டான். எவனும் பாவம் செய்ய மாட்டான். மோசம் செய்ய மாட்டான், ஊரார் பொருளை கொள்ளையடிக்க மாட்டான். சூது, வாது, கொலை, கொள்ளை எதுவும் உலகில் நிகழாது. எல்லா காவல் நிலையங்களையும் அடைத்துவிட்டு இந்த போலீஸ்காரர்களையெல்லாம் பேசாமல் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.

புலவர் ஆபிதீனின் இறுதி வாக்கியம் எந்த ஒரு நாத்திகனையும் ஆத்திகனாக்கி விடும், அவனை இறைவன்பால் சிந்திக்க வைத்துவிடும்.

நம் கண்கள் காணும் காட்சிகள் யாவும் உண்மையல்ல. அண்ணாந்து வானத்தைப் பார்க்கையில் ஒரு பெரிய கொட்டாங்கச்சியை பூமிமீது கவிழ்த்து வைத்ததுபோல் தெரிகின்றது. நிலவைப் பார்த்தால் அதற்குள் ஏதோ பிரகாசமான பல்பு எரிவது போலிருக்கின்றது. வெட்டவெளியில் நடந்துக்கொண்டே நிலவைப் பார்க்கையில் அதுவுகம் நம்மை பின்தொடர்ந்து வருவதுபோல் இருக்கின்றது. பாதையில் தூரத்தே தெரியும் நீரின் அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒண்ணுமே இல்லை. அது கானல் நீராம். நீல நிரத்தில் தெரியும் கடல்நீரை கையில் மொண்டு பார்த்தால் அதில் நீலநிறமே இருப்பதில்லை.

நாம் கண்ணால் காணும் காட்சிகள் யாவும் ஒரு நாள் அழியக் கூடியது. இந்த மரம், மலை, நதி, வாய்க்கால், மேகம், பூமி, மனிதன், பறவை, மிருகம் எல்லாமே அழியக்கூடிய வஸ்துக்கள். ஒரு சுனாமி, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு அல்லது பூகம்பம் போதாதா?

ஆனால் நம் கண்ணுக்கே புலப்படாத இறைவன் இருக்கின்றானே, அவனுக்கு அழிவென்பதே கிடையாது. அதனால்தான் அவனை Omniscient, Omnipotent, Omnipresent என்று போற்றுகிறோம். ஆதியும் அவன்தான், அந்தமும் அவன்தான். முதலும் அவனே முடிவும் அவனே.

அதனால்தான் அவன் யார் கண்ணிலும் அகப்படுவதில்லை. “Heard Melodies Are Sweet But Those Unheard Are Sweeter Still” என்று கூறுவான் ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ்.

நம்முடைய ஞானக்கண்களை திறந்து வைத்த திருப்தியில் நமக்கு புலவர் ஆபிதீன் மீது ஏற்பட்ட அத்தனை கோபமும் நொடியில் காற்றோடு காற்றாக காணமல் கரைந்து போய்விடுகின்றது.

– அப்துல் கையூம்

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் ஹனீபா பாடிய சுதந்திர போராட்ட பாடல்

 

Tags: , , , , , , , , ,

கம்பன் அவன் காதலன் – (ஆறாம் பாகம்)


இலக்கியமான நீதிபதி

ஒருவர் இறந்து விட்டால் அவர் “மரணித்து விட்டார்” அல்லது “மறைந்து விட்டார்” என்று கூறுவதுண்டு. சிலவேளை “காலமானார்” என்றும் கூறுவதுண்டு. அதன் பொருள் காலத்தால் எளிதில் அழிக்க முடியாத இடத்தை அவர் அடைந்து விட்டார் என்பதாகும். சாதனை படைத்த சிலரை “அவர் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்” என்று கூறுவதுண்டு.

2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி நீதிபதி இஸ்மாயில் அவர்கள் காலமானபோது அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் 19.1.2005 அன்று ‘தினமணி’ நாளிதழில் ஒரு கட்டுரை வரைந்தார். அதன் தலைப்பு “இலக்கியமான நீதிபதி” என்பதாகும்.

ஒருவரின் இறப்பு “வரலாறு” ஆக முடியும். அது எப்படி “இலக்கியம்” ஆக முடியும்? நம்மை சிந்திக்க வைக்கின்ற கேள்வி இது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பொறுத்தவரை “அவர் இலக்கியமானார்” என்ற கூற்று சாலப்பொருத்தம். தமிழிலக்கியம் பேசும் சான்றோர்களின் தண்டமிழ் பேச்சிலெல்லாம், எக்காலமும், எங்காகிலும் இவர் பெயர் என்றென்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

சென்னையில் 1974-ஆம் ஆண்டு இவரது பெருமுயற்சியால் கம்பன் கழகம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டபோது “The Right Person in the right Place” என்று ஆங்கிலப் பத்திரிக்கையொன்று இவரைப் புகழ்ந்து தள்ளியது. தொடர்ந்து 28 ஆண்டுகள் கம்பன் கழகத்தின் தலைவராக பணிபுரிந்து சாதனை நிகழ்த்தியவர் இவர்.

கம்பன் கழகம்

1923-ஆம் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் மூத்ததா அல்லது அதற்கு முன்னரே பிற ஊர்களில் கம்பன் கழகங்கள் நிறுவப்பட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை.

காரைக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பற்பல ஊர்களில் தற்போது கம்பன் கழகம் விழாக்களை கோலாகலமாக நடத்தி வருகின்றன.

இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.

கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்திலிருந்து தாய்ச் சீர்வரிசை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். ஆஹா! என்னே ஓர் அற்புதமான தமிழர் பண்பாடு!

கம்பன் கழகமானது, தமிழறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பகிரும் அற்புதக் களமாகத் திகழ்கிறது. தாய்மொழியாம் தனித்தமிழின் சிறப்பை தரணியெங்கும் பரவும் வண்ணம் தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு புரிந்து வருகிறது.

கம்பனை காதலித்த கன்னித்தமிழ் வேந்தர்கள்

கம்பனின் காதலானாக ஒரு சுகி சிவமோ அல்லது சிவக்குமாரோ இலக்கிய உலகில் பவனி வருவதில் ஆச்சரியம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? மதப்பற்றுமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முஸ்லிம் ஒருவர் இந்து மதத்தின் காப்பியம் ஒன்றினை கசடறக் கற்று, புலமை பெற்று, அக்காப்பியத்தின் மேன்மையை பட்டி தொட்டிகள் எங்கும் பறை சாற்றியதில்தான் வியப்பு மேலிடுகின்றது.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் பாரதி – பைந்தமிழ்ச் சாரதி – கம்பனின் பெயரை ஏன் முதல் ஸ்தானத்தில் குறிப்பிட்டான் என்று எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வள்ளுவர் பெருந்தகையை விட உயர்ந்த புலவனாக கம்பனைக் கருதினானா அல்லது வெறும் எதுகை மோனைக்காக கம்பனை முதலிடத்தில் வைத்தானா என்பது கவிராஜனுக்கே வெளிச்சம்.

கம்பனைக் காதலித்தவர்கள் அந்த பாட்டுடைத்தலைவன் பதமறிந்தே கவிச்சக்கரவர்த்தியை முதல் வரிசையில் வைத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்று வாதிடுகிறார்கள்.

கம்பனின் காவியத்தில் உண்மை இருந்ததா என்பது வேண்டுமானால் விவாதத்திற்குரிய கருப்பொருளாக இருக்கலாம். ஆனால் அதில் பைந்தமிழ்ச் சுவை இருந்தது என்பதை “கம்பரசம்” எழுதிய அறிஞர் அண்ணாவால் கூட மறுக்க முடியாது.

கம்பன் கழகம் பரவலாகத் தோன்றுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் கம்பராமாயண எதிர்ப்பாளர்கள்தான் என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு விஷயத்தின் மீது எப்பொழுது எதிர்ப்பு அதிகமாகிறதோ அப்போது அதன் மவுசும் கூடுவது கண்கூடு. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் கொளுத்திவிட்டால் அப்புறம் படிக்க முடியாதே என்று அவசர அவரமாக கற்று அதன் கவிநடையில் காதல் கொண்டவர்கள் பலர்.

“கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!”

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய இப்பேச்சு நம் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.

‘கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப்போற்றுவதாகும்’ என்று நீதியரசர் இஸ்மாயீல் அடிக்கடிச் சொல்வதுண்டு. பண்டிதர்கள் மத்தியில் இருந்த கம்பனின் காவியத்தை பாமரர்கள் மத்தியில் கொண்டுச் சென்ற பெருமை பெருமளவு நீதிபதி இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

“கம்பராமாயணம் பற்றியே பேசுகிறீர்களே என்று என்னை குறைபட்டுக் கொள்பவர்கள் நிறைய பேருண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை நான் கேட்டுக் கொள்வது இதுதான். நீங்கள் அதனை படித்திருக்கிறீர்களா? அதில் தமிழ் இருக்கிறது.. இலக்கியம் இருக்கிறது. அதை படித்து பாருங்கள்..” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் நற்றமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு நயம்பட வேண்டுகோள் விடுக்கிறார்.

கம்ப ராமாயணத்தின்பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் மூழ்கிக் கிடந்தவர் அவர் என்றால் மிகையாகாது.

இலக்கிய உலகில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் சிலர் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வர். மேடைகளிலும் ஊடகங்களிலும் புகழ்பெற்ற இலக்கியக்கர்த்தாக்களாக பவனி வருபவர்களை நாம் பார்க்கிறோம். உதாரணமாக பட்டிமன்ற நாயகர்களாக பவனிவரும் திண்டுக்கல் ஐ. லியோனியையோ, சாலமன் பாப்பையாவையோ, பேராசிரியர் திருஞானசம்பந்தத்தையோ, அல்லது நெல்லை கண்ணனையோ எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பும் எத்தனையோ சான்றோர்கள் பிரபலமாக வலம் வந்தார்கள். ஒரு பத்து வருடங்களோ அல்லது அதிகபட்சமாக இருபது வருடங்களோ புகழின் உச்சாணிக் கொம்பில் இருப்பார்கள். பிறகு இவர்களையும் மிஞ்சும் அளவுக்கு வேறு நபர்கள் வெளிச்சத்துக்கு வர இவர்களின் மவுசு குறையத் தொடங்கும். இது நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்பது.

கிட்டத்தட்ட 50 வருட காலங்களுக்கு மேலாக கம்பராமாயணத்திற்கு உரிமம் வழங்கும் அதிகாரியாக, கம்பனுக்காக வாதாடும் வழக்கறிஞராக, அவனது காவியத்திற்கு நிபுணராக, அக்காப்பியத்தின் கலைக்களஞ்சியமாக, நடமாடும் அகராதியாக, அருஞ்சொற்பொருள் வல்லுனராக, அந்நூலுக்கு சந்தேகம் தீர்க்கும் விற்பன்னராகத் திகழ்ந்தவர் நம்மவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள்.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்ட “இலக்கியமான நீதிபதி” என்ற அடைமொழியில் வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

“இலக்கணமான நீதிபதி” என்று பழ.பழநியப்பன் குறிப்பிடவில்லை. ஏன் என்று கவனித்தீர்களா? இலக்கணம் மாறலாம். இலக்கியம் மாறுவதில்லை. நீதியரசர் ஓர் அமர இலக்கியம். ஓர் இலக்கியத்திற்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர்.

காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள். அரையுக காலம் ஒருத்தர் ஒரு குறிப்பிட்டத் துறையில், அவரை ஓரங்கட்ட முடியாத அளவுக்கு, முதன்மை நிலையில் இருந்து முத்திரை பதித்தார் என்றால், அவருக்கு இலக்கியத்தில் எந்த அளவுக்கு ஆளுமை சக்தி இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கம்பனின் கவித்திறமையை தமிழ்க்கூறும் நல்லுலகில் தம்பட்டம் அடித்தவர்களின் பெயர்களை எழுத்தில் வடிக்க முனைந்தால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

கம்பன் அடிப்பொடி சா.கணேசன், நீதிபதி இஸ்மாயீல் முதற்கொண்டு அ.ச.ஞானசம்பந்தன், நீதிபதி எஸ்.மகராசன், தொ.மு.சி.ரகுநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வெ.சாமிநாத சர்மா, திருச்சி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, அறிவொளி, தெ.ஞானசுந்தரம், கா. நயினார் முகமது, புலவர் அருணகிரி, தனிநாயக அடிகள், சே.ச., ராமலிங்கம், வையாபுரிப் பிள்ளை, எஸ்.ஆர்.கே, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, ரா.இராகவையங்கார், விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பெ.நா.அப்புஸ்வாமி, பி.ஸ்ரீ.ஆச்சார்யா, தோழர் ஜீவா, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், க.கு.கோதண்டராமக் கவுண்டர், ஏ.சி.பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், கி.வா.ஜகன்னாதன், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வரதராசனார், அ.சீனிவாசராகவன், மு.இராகவ அய்யங்கார், கவிஞர் கண்ணதாசன், ஏ.என்.சிவராமன், கிருபானந்த வாரியார், கம்பராசன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெகவீரபாண்டியன், வே.மி.சம்மனசு, வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, இரா.சொ., அ.சீ.இரா., கவிஞர் வாலி, சுதா சேஷய்யன், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வுச் செய்து முனைவர் பட்டம் பெற்ற என் நண்பன் நாகூர் ரூமியையும் இப்பட்டியலில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.                                  (இன்னும் வரும்)

 

Tags: , , , , , ,

என் ஊர் – நாகூர் ரூமி


 

Tags: , ,

கம்பன் அவன் காதலன் (மூன்றாம் பாகம்)


கவியரசரும் நீதியரசரும்

– அப்துல் கையூம்

கவியரசர் கண்ணதாசன் யார் ஒருவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறாரோ அவரை என்றாவதொருநாள் “டமால்” என்று கீழே போட்டுக் கவிழ்த்தப் போகிறார் என்று அர்த்தம்.

இந்த மனிதரிடம் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர்களில் நான்கு பேர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள், காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர்.

கண்ணதாசன் யாரையாவது தூற்றி வசைபாடினால், அவரை பிறிதொரு சமயம் வானாளவ உயர்த்தி வாழ்த்திப் பாடப் போகிறார் என்றும் பொருள் கொள்ளாலாம்.

கவியரசரின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எத்தனையோ எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநந் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினிலே வீழ்ந்த திங்கே!

என்று பண்டிதர் நேருவை வாயார வாழ்த்திப் பாடிய அதே வாய்தான் முன்னொருமுறை

– சுட்டதொரு
கத்திரிக்காய் என்பேனா? கருங்குதிரை முகம் என்று
சித்தரித்துச் சொல்வேனா? திறம்போன பனம்பழத்தைச்
சப்பியபின் போட்ட தரமென் றுரைப்பேனா?
பழம்போன வாழைத்தோல் பக்குவமே நேருவமை

என்று நேருவின் தோற்றத்தை கேவலப்படுத்தி தூற்றிப் பாடியது.

உணர்ச்சிக்கு அடிமையானவர்களின் உள்ளத்தில் உருவெடுக்கும் வார்த்தைகள் காலத்திற்கேற்ப உருமாறும் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இராஜாஜி என்று அழைக்கப்பட்ட இராஜகோபாலச்சாரியை அறியாதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது.

வாழ்வாங்கு வாழ்வாரைத்
தெய்வத்துள் வைக்குமொரு
வையத்துள் வாழு மனிதா!

வையத்தில் இராசாசி
வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா?

என்று இராஜகோபாலச்சாரியை வாய்மலர வாழ்த்திப் பாடிய கவியரசரின் அதே திருவாய்தான் முன்னொருமுறை

குள்ள நரிச் செயல் செய்யும் நச்சு உள்ளக்
கொலைகாரன் இராசகோ பாலாச்சாரி
கள்ளமறு தாய்நாட்டின் பொறுப்பை ஏற்றுக்
கயமையிலே ஆட்சிபுரிகின்றார்! அன்று
பிள்ளை மனங் கெடுப்பதற்கே இந்தியென்னும்
பிய்ந்த செருப்பினை எடுத்துத் தமிழ்ச் சேயின்
உள்ளமதிற் கட்டாயம் புகுத்த வென்று
உரைத்ததனைக் கேட்டவர்கள் துடித்தார் மாதோ!
இளங்குழந்தை நெஞ்சினிலே விஷமா! சீச்சீ!
இழிகுணத்தான் செய்கையினைத் தடுத்தே நிற்போம்!

“வளங்கொல்ல வந்துற்றான் ஆரியப் பேய்
வன்நெஞ்சன்”

என்றெல்லாம் மடை திறந்த வெள்ளமென வாய்க்கு வந்தபடி வசைபாடி ஆத்திரம் தீர்த்துக் கொண்டது.

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!

என்று கலைஞர் கருணாநிதியை போற்றிய அதே கண்ணதாசன்தான் “இவனெல்லாம் ஒரு கவிஞனா?” என்று கேட்ட அவரைப் பார்த்து..

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்

  • நானோ கவிஞ‌னில்லை
  • என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

  • பேதையனே கவிஞ‌னெனில்
  • நானோ கவிஞ‌னில்லை.

என்று கலைஞரை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மானபங்கப் படுத்தினார் கவியரசர்.

கவியரசர் கண்ணதாசன் வாழ்த்திப்பாடி, அவரை வசைபாடாது இறுதிவரை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரே மனிதர் யாரென்றால் அவர் இலக்கியச் செல்வர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களாகத்தான் இருக்க முடியும். அந்த மனிதர்குல மாணிக்கத்தை கவியரசர் கண்ணதாசன் மனம் நெகிழ்ந்து எழுதிய கவிதை இது :

புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!

பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!

(பார்க்க: “கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)

கவியரசர் கண்ணதாசன் மட்டுமின்றி, வேறு எவருடைய இழிச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு தன் தூய்மையான வாழ்வில் கறை படாத வண்ணம் சீரிய, நேரிய வாழ்க்கை வாழ்ந்துச் சென்றவர் மு.மு.இஸ்மாயீல்.

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் மீது கண்ணதாசனுக்கு அப்படியென்ன ஒரு அக்கறை? அப்படியென்ன ஒரு தனி மரியாதை? அவர் மீது இணைபிரியாத ஒரு பந்தம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம்.

ஆம்! அதற்கான ஒரே விடை – கம்பராமாயணம்.

கண்ணதாசனுக்கு பிடித்த இலக்கியம் கம்பரமாயணம். “நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதிலிருந்துதான்” என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்வார் அவர்.

“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்”

என்று உணர்ந்து சொல்லுமளவுக்கு கண்ணதாசனை பித்தனாக ஆக்கிய சத்தான காவியம் எதுவென்றால் அது முத்தமிழின் முத்திரைக் காவியமான கம்பனின் படைப்புதான்

“கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை” என்று அடிக்கடி உரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப் போற்றுவதாகும்” என்று அடிக்கடி உரைப்பார் நீதியரசர் இஸ்மாயீல்.

ஒருவர் கோர்ட்டுக்கு அரசர். மற்றொருவர் பாட்டுக்கு அரசர்.

இவ்விருவரையும் முடுக்கிய விசையும், பற்றிப் பிடித்திருந்த பசையும்தான் கம்பராமாயணம்.

“பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி வைத்த கம்பனுக்கு ஈடு –
இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு’

என்று வேறொரிடத்தில் உணர்ச்சி பொங்க பாடி, தனக்கும் கம்பனுக்குமிடையே உள்ள மானசீக உறவை தம்பட்டம் அடிக்கிறார் கண்ணதாசன்.

இத்தமிழார்வலர்கள் இருவரும் “கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடுகள் கிடையாது”. மாறாக கம்பக்கடலில் மூழ்கி முத்தெடுத்து முத்தி பெற்ற முத்தமிழ்க் காவலர்கள்.

ஒருவர் முத்தையா. இன்னொருவர் முத்தான ஐயா.

நீதியரசருக்கும் கவியரசருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் இறுக்கத்திற்கு கிரியாவூக்கியாகச் செயல்பட்டவன் கவிக்கம்பன். “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பனைக் காதலித்த இருவர்க்கிடையிலும் இணைபிரியா உறவு இறுதிவரை நிலைத்திருந்தது.

நீதிபதி மு.மு.இஸ்மாயீலைப் போலவே முன்னூறுக்கும் மேலான கம்பனின் பாடல்களை கண்ணதாசன் மனனம் செய்து வைத்திருந்தார்.

கம்பனுக்கும் கவியரசருக்கும் அப்படியென்ன ஒரு இறுக்கம்? கம்பன் மேல் அப்படியென்ன ஒரு கிறக்கம்? கவியரசரே தருகிறார் அதன் விளக்கம்.

எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன் அப்படித்தான்

என்று பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாக அழகாக கற்பனை செய்து ஆனந்தப் படுகிறார் கவிஞர்

அதுமட்டுமல்ல தனது எத்தனையோ சினிமா பாடல்களில் கம்பனை நினைவுக்கு கொண்டு வந்து களிப்படைகிறார் கண்ணதாசன்.

‘கன்னியரை ஒரு மலரென்று’ பாடிய கம்பனை வம்புக்கிழுத்து “கம்பன் ஏமாந்தான்” என்ற பாடலில் “புலவா நீ சொன்னது பொய்” என்று – சூசகமாக – அன்பாகச் சாடுகிறார் நம் கவிஞர்.

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என்று தொடங்கும் திரைப்படப்பாடலை எழுதும்போதும் கவிஞருக்கு கம்பனின் நினைவு வந்து மீண்டும் பாடாய்ப் படுத்துகிறது. “இதழை வருடும் பனியின் காற்று, கம்பன் செய்த வருணனை” என்று பாடி ஆனந்தம் கொள்கிறார்.

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” என்ற காலத்தில் அழியாத கானத்தில் ‘கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா’ என்று வரும் கண்ணதாசனின் பாடல்வரிகளை முணுமுணுத்திராத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.

“அவள் ஒரு மேனகை” என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இழைந்து குழைந்து பாடும் கவிஞரின் பாடலிலும் ‘என்ன சொல்லி என்ன பாட, கம்பன் இல்லை கவிதை பாட’ என்று கம்பனை நினைவுக் கூறுகிறார்.

“அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என்ற பாடல் மறக்க முடியாத நிலாப் பாடல். பேசாமல் “வண்ண நிலா” “வெள்ளி நிலா” என்று பாடி விட்டு போவதுதானே? ஊஹும்.. “கம்பன் பாடிய வெள்ளி நிலா” என்று மறைந்துபோன கம்பனுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கிறார் கண்ணதாசன்.

“இதயத்தில் நீ” என்ற படத்தில் “சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ?” என்ற படத்தில் மனதை வருடும் அருமையான காதற்பாடலொன்று.

“கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ? – இந்த
பட்டு உடலினை
தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ?”

என்ற கம்பனை பிடித்திழுத்து வந்து நுழைக்கையில் நம் மனதும் கம்பனை நாடிச் செல்கிறது.

அது மட்டுமா? பண்டிதர்கள் மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடிய தண்டமிழ் வரிகளை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக்கியவன் இந்த கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.

“நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
……………………………
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்”

என்ற கம்பராமாயணத்தில் வரும் இலக்கணச் செய்யுளை எல்லோரும் புரியும் விதத்தில் எப்படி இனிமையாய் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் என்று பாருங்கள்.

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா?”

ஆஹா…! இதை விட எளிமையா வேறு யாரால் கூற இயலும்?

“தோள் கண்டார் தோளே கண்டார்”! என்று கம்பன் ராமனை வருணிக்கும் வரிகளை “இதயக்கமலம்” என்ற படத்தில்

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

என்ற பாடல் வரிகளை பட்டிக்காட்டானுக்கும் எட்டும் வகையில் புட்டு புட்டு வைக்கிறார்.

பாலகாண்டத்தில் மிதிலைக் காட்சியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் “வண்ணம்” என்ற வார்த்தையைக் கையாண்ட விதம் சுவையானது.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!

இப்பாடல் கவியரசுக்கு ஒரு ஊக்கபோதையை அளித்தததோ என்னவோ. கண்ணதாசனின் கற்பனையில் மலர்ந்த இப்பாடலை படித்தால் இவ்வுண்மை விளங்கும்.

பால்வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்……..

கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன்……

“பாசம்” படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் இந்த இனிமையான பாடல் கண்ணதாசனும் கம்பனின் காதலன் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. வேறு எந்த புலவனைக்காட்டிலும் கம்பனின் எழுத்துக்கள் இவனை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்ற உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.

கவியரசரும் நீதியரசரும் கம்பன் கழக விழாக்களில் ஒன்றாக பலமுறை பங்கெடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வானதி பதிப்பகத்தின் உரிமையாளார் திருநாவுக்கரசு இவ்விருவரின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டார்.

தமிழுக்குக் ‘கதி’ இருவர்தானாம். காலங்காலமாக அறிஞர்கள் உரைக்கும் கூற்று இது. “கதி” என்ற வார்த்தையில் ‘க’ என்ற எழுத்து கம்பனையும், ‘தி’ என்ற எழுத்து திருவள்ளுவரையும் குறிக்குமாம்.

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த இஸ்மாயீல் அவர்கள் இந்து மதத்தின் காப்பியமாக போற்றப்படும் கம்பராமாயணத்தில் அதன் இலக்கியச் சுவைக்காக அந்த காப்பியத்தை முழுவதுமாய் படித்துத் தேர்ந்தவர்.

சிலகாலம் நாத்திகச் சிந்தனையில் ஊறித் திளைத்த கண்ணதாசன், கம்பராமாயணத்தைக் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, கம்பனின் பாடல்களைக் கசடறக் கற்று, அதன் கவிநடையில் மயங்கி தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் கண்ணதாசன்.

“நான் கேலி செய்ய நினைத்த கம்பன், என்னையே கேலி செய்து விட்டான்” என்று இந்நிகழ்வை கண்ணதாசன் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணதாசன் “ஏசு காவியத்தை” எழுதினார் என்ற காரணத்தினால் அவர் கிறித்துவ மத ஆதரவாளர் என்றோ அல்லது நீதிபதி இஸ்மாயீல் “கம்பராமாயணத்தை” ஆராய்ந்தார் என்ற காரணத்தினால் அவர் இந்து மத ஆதரவாளராக இருந்தார் என்றோ பொருள் கொள்ளல் ஆகாது.

இலக்கியச் சுவை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதில் ஜாதி, மத பேதம் கிடையாது.

அறிஞர் அண்ணாவின் பார்வையில் கம்பராமாயணத்தில் காமரசம் தென்பட்டது.
நீதிபதி இஸ்மாயீலின் பார்வையில் கம்பராமாயாணத்தில் இலக்கியநயம் தென்பட்டது.

நீதிபதியை “வழி தவறிய வெள்ளாடு” என்று வருணிப்பவர்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

வால்மீகி ராமாயணத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமஸ்கிருதத்தைக் கற்றவர் இஸ்மாயீல்.

கண்ணதாசன் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் தனது அடிப்படைக் கொள்கைகளை, நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே இருந்தவர்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தனது கொள்கைகளிலிருந்தும், தனது மார்க்கப் பற்றிலிருந்தும் சற்றும் மாறாதிருந்தவர்.

அவரது சாதனைகளை பின்வரும் பதிவுகளில் விளாவாரியாக விவாதிப்போம்.

(இன்னும் வரும்…. )

 

Tags: , , , , , , , , , , ,

தந்தை பெரியாரும் தமிழார்வலர் இஸ்மாயீலும்


வாழ்நாள் முழுவதும், கம்பராமாயணத்தின் இலக்கிய நயத்தை ஊரரிய உலகறிய பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல்.

அதற்கு மாறாக, தன் இறுதி மூச்சுவரை கம்பராமாயணத்தை முழுமூச்சாக எதிர்த்து அதில் காணப்படும் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து வந்தவர் தந்தை பெரியார்.

தென்துருவமாகவும், வடதுருவமாகவும் செயல்பட்ட இவர்கள் இருவருக்குமிடையே அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

தந்தை பெரியார் மீது நீதிபதி இஸ்மாயீல் கொண்டிருந்த அபிப்பிராயம் எத்தகையது என்பதனை கீழ்க்கண்ட அவரது சொற்பொழிவை படித்தாலே நன்கு விளங்கும்.                                                                                                    (30-5-79 அன்று சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை” திறப்பு விழாவில் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் ஆற்றிய உரை இது)

நண்பர் திரு. வீரமணி அவர்களது பேச்சுக்குப்பின்னர் நான் என்னுடைய பேச்சினை ஒரு வழியிலே மாற்றிக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். அவர்கள் சில வார்த்தைகள் கூறி இருக்காவிட்டால் நான் வேறுவிதமாக என்னுடைய பேச்சினை அமைத்துக் கொண்டு இருந்திருப்பேன்

ஆனால், அவர்கள் சொன்ன சிலவற்றின் காரணமாகத் தான் ஒரு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒருவிதத்தில் பார்க்கப்போனால் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு என்னைப்போல் லாயக்கு இல்லாதவன் வேறு யாருமே இருக்க முடியாது! அதே சமயத்தில் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள என்னைப் போலத் தகுதி உள்ளவரும் வேறு யாரும் இருக்கமுடியாது! ஏதோ ஒரு புதிர் போடுவதுபோல் இருக்கின்றதே! – இந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பது? என்பன போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்படுமேயானால் நானே அதனை அவிழ்த்துக் காட்டுகிறேன்.

எனது மாணவர் வீரமணி!

வீரமணி அவர்கள் ஓர் அளவுக்கு என்னைப் புகழ்ந்து பேசியதற்குக் காரணம், வீரமணி அவர்கள் சட்டக் கல்லூரியிலே ஓர் ஆண்டு என்னுடைய மாணவராக இருந்தது தான். இதுவும் ஓர் புதிராக – ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர்களை இன்று காண்பது அபூர்வமாக இருக்கின்றது. ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர் அழைத்து இருக்கின்றார்; இதை ஆசிரியரும் ஒப்புக்கொள்கின்றார் என்பதுவம் ஒரு புதிரே. ஆனால் உண்மை என்ன? அந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பேன என்று சொன்னால், உண்மை பேசுவது மூலமாகவே அவிழ்ப்பேன். பெரியார் அவர்களுடைய எந்தப் பேச்சையும் நான் கேட்டவனும் அல்ல; பெரியார் அவர்களுடைய எழுத்தையும் நான் படித்தவன் அல்ல. ஆகவே, இந்த இரண்டையும் வைத்துக் கொண்டால் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள என்னைப் போலத் தகுதி இல்லாதவன் லாயக்கு அற்றவன் யாருமே இருக்க முடியாது என்று முடிவுக்கு வர முடியும். அதே சமயத்தில், பெரியார் அவர்களுடைய எந்தப் பேச்சையும் கேட்காததன் காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எந்த எழுத்தையும் படிக்காததன் காரணமாகவும், விருப்பு வெறுப்பு இல்லாத நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே என்னைப் போலக் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்று முடிவுக்கும் வரலாம்.

ஒரு மனிதரோடு பழகிவிட்டால், ஒரு மனிதர் எழுதியதையோ, பேசியதையோ படித்துவிட்டால், கேட்டுவிட்டால் நம்மை அறியாமலே நம்முடைய மனத்திலே அதைப்பற்றிய, அவரைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகிவிடும். இதன் காரணமாக விருப்பும் உண்டாகலாம்; வெறுப்பும் உண்டாகலாம். அதற்கு மாறாக, ஒருவருடைய பேச்சைக் கேட்காமலும் எழுத்துக்களைப் படிக்காமலும் இருந்துவிட்டால் அவரைப்பற்றி எதுவும் தெரியாத நிலையிலே – விருப்போ, வெறுப்போ உண்டாகும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். என்னுடைய பழக்கம், எது பற்றியும் முழுமையாக நான் தெரிந்து கொள்ளாதவரையில் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வது இல்லை. ஆகவே, பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்காததன் காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எழுத்துக்களைப் படிக்காததன் காரணமாகவும், என்றும் எந்த மேடையிலும் வாய்ப் பேச்சாகவோ எழுத்துக்கள் மூலமாகவோ பெரியாருடைய கருத்துக்கள் பற்றி நான் அப்பிராயம் கூறியதே கிடையாது. அப்படி இருக்கும்போது, எதற்காக நான் இந்த மேடையிலே கலந்துகொள்வது பற்றிச் சிலர் ஆச்சரியப்பட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

பெரியாரை அறிந்தவன் நான்!

ஆனால், நம்முடைய நாட்டில் ஒரு சமுதாயப் பழக்கம் உண்டு. யாராவது ஒருவர் பின்னால் வால்பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். அவர்களைப்பற்றி எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களை எப்போதும் முகஸ்துதி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் அவர்களைப்பற்றி பேசுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பது அபிப்ராயம். அதற்கு மாறாக, அவர்களை விட்டு ஒதுங்கியும் தூரத்தில் இருந்துகொண்டும் அவர்கள் கருத்துக்களைப் பாராட்டிக் கொண்டு இருந்தால்கூட அவர்களுடைய கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அபிப்ராயம் கூறுவதற்கோ தகுதி அற்றவர்கள் என்பது நமது நாட்டுப் பழக்கம்.

அடிக்கடி ஒருவரைப் பார்க்காவிட்டால், அடிக்கடி ஒருவரை சந்திக்காவிட்டால் அவர்களை விரோதியாகக் கருதும் பழக்கம் நமது நாட்டிலே வந்துவிட்டது. அதற்கு நேர் மாறாக, வேலை இருக்கின்றதோ, வேலை இல்லையோ, காரியம் இருக்கின்றதோ, காரியம் இல்லையோ, உங்களுடைய மனதிற்கு அவை ஒத்து இருக்கின்றதோ, இல்லையோ அவரைப் போய் அடிக்கடி பார்த்துவிட்டு, அவர் செய்தததையும், செய்யாததையும் புகழ்ந்துவிட்டு, அவரைப்போல் இந்திரன், சந்திரன் வேறு யாருமே இல்லை என்று புகழக்கூடியவர்கள் உண்டு.

அவர்களைவிட உற்ற நண்பர்கள் வேறு யாரும் இல்லை என்கின்ற ஒரு பொய்யான நிலை நாட்டிலே ஏற்பட்டு விட்டதன் காரணமாக, பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, கருத்தையோ, படிக்காமலோ, கேட்காமலோ இருந்து, அதன் காரணமாகவே அபிப்பிராயம் சொல்லாது இருந்த நான் இந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வது ஒருபுதிராகவே தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்தப் புதிரை இப்போது நான் அவிழ்த்துவிட்டேன் என்று கருதுகிறேன்.

என்றாலும், வீரமணி அவர்கள் பேச்சில் இருந்து ஒன்று நன்றாகத் தெரிகின்றது. பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, பேச்சையோ நான் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது, ஒரு குறை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் என்னவென்றால், பழைய “குடி அரசு” பத்திரிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்கள் முன் திரு. வீரமணி படித்துக் காண்பித்தார். அவர் படித்துக் காண்பித்ததையே நான் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டுகின்றேன். அதனை இப்போது படித்துக் காண்பிப்பேனேயானால், அவர் அதில் கூறியிருக்கும் கருத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்கள் மனிதகுலத்தில் யாருமே இருக்க முடியாது என்று ஆகிவிடும். அந்த நிலை ஏற்படுமானால் பெரியாருடைய எழுத்துக்களை முன்னதாகவே படிக்கத் தவறியது, பேச்சைக் கேட்கத் தவறியது, என்னுடைய குறை என்று நான் சொல்லவேண்டும்

“குடி அரசு” வின் கொள்கை!

படிக்கின்றேன்: “குடி அரசு” வின் கொள்கையின் முதல் மலரில் முதல் தலையங்கத்தில் தெரிவித்தபடி அதாவது, மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும். உயர்வு- தாழ்வு என்று இருக்கக் கூடிய உணர்ச்சியினை ஒழித்து, அனைத்துயிரும் ஒன்று என்ற உண்மை அறிவு மக்களிடம் பரவ வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறிபற்றி இவர் எமக்கு இனியவர்; இவர் எனக்கு மாற்றார் என விருப்பு – வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகுக, அவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாமல் கண்டித்து ஒதுக்கப்படும்” இதில் இருந்து மாறுபட்டு இருக்கமுடியாது. எங்களுடைய சமயத்தின் அடிப்படையிலே நான் சார்ந்து உள்ள மதத்தின் அடிப்படையிலே, பிறப்பின் அடிப்படையிலே உயர்வு-தாழ்வு இல்லாதது மாத்திரம் அல்லாமல், நாங்கள் வளர்க்கின்ற பண்புகள் எங்களுடைய காரியம் பழக்கத்திலே இருக்கின்றன.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் என்பன எந்த அளவுக்கு முஸ்லீம்களிடையே வேரூன்றி இருக்கின்றது என்றால், யாராவது ஒருவன் முஸ்லீமாக ஆகிவிட்டால், அவன் அந்தக் காரணத்தாலேயே அதற்கு முன்னதாக அவன் எந்தச் சாதிக்காரனாக இருந்தானோ-எந்த வகுப்பினைச் சேர்ந்தவனாக இருந்தானோ அது அடியோடு மறைந்து விடுகிறது. முஸ்லீம் சமுதாயம் என்கின்ற பெருங்கடலில் அவன் சேர்ந்து விடுகின்றான்.

அந்தக்காரணத்தாலேயே அவனுக்கு சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகள் தாமாகவே வந்து விடுகின்றன. இன்றும் கூட கிருஸ்தவத்தைப் பார்க்கும்போது, முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள் கிருத்தவர்களாக ஆகிவிட்ட பிறகும்கூட இன்றும் வழக்கத்தில் ஒன்றைக் காணுகின்றோம். நாடார் கிருத்தவர்கள், பிள்ளைக் கிருத்தவர்கள் என்று அவர்கள் கூறிக் கொள்வதைக் காண்கின்றோம். அவர்களும் நாடார் மரபு வழியினையும் வேளாளர் மரபு வழியினையும் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட வரையிலே அவர் முன்னதாக நாடாராக இருந்தாலும் சரி, அவர் அந்தணராக இருந்தாலும் சரி, அவர் என்று இஸ்லாத்திற்கு வந்துவிட்டாரோ அந்தக் கணமே நாடார், பிள்ளை, அந்தணர் என்கின்ற அனைத்தும் மறைந்து போய்விடும் – அழிந்து போய்விடும்.

இஸ்லாத்தில் சேர்ந்தவுடன் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் முதலியன தாமாகவே வந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட மார்க்கத்தைச் சேர்ந்த நான், எப்படி இந்தக் கொள்கைகளுக்கு மாறுபட்டவனாக இருக்கமுடியும் என்று சிந்தித்துப்பார்க்கும்போது, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கண்டு சிலர் ஆச்சரியத்தைத் தெரிவித்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

அனைத்துயிரையும் ஒன்றாய் எண்ணும் கொள்கை!

இன்னொருமுறையும் படிக்கின்றேன்: “இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி, இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு மாற்றார் என்ற விருப்பு – வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகு, அவரவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும்.”

இதில் வற்புறுத்தப்படுவது இரண்டு. ஒன்று உண்மை நெறி பற்றி வாழ்வது; இரண்டாவது, நடுநிலைமை; அவர் இன்னாதாராக இருக்கட்டும்; அல்லது இனியவராக இருக்கட்டும்; நண்பராக இருக்கட்டும்; அல்லாதாராக இருக்கட்டும் அவர்களிடத்தில் இருந்து நாம் எதிர்பார்ப்பது – அவரைத் தராசில் வைத்து நிறுப்பது, அவரை எடைபோடுவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவரை நிதானப்படுத்துவதற்கு உரைகல்லாக இருப்பது-அவர் செய்கைகள் அல்லவா என்பது தான். இதனை யார் ஆட்சேபிக்க முடியும்? உண்மையாகச் சொல்கிறேன் – எதையாவது தங்களுடைய வாழ்க்கை நெறிக்கு எல்லா வகைக்கும் பொருத்தமாக இல்லை என்று மனத்துக்குள்ளே எண்ணினாலும் வெளியே தைரியமாக்க் கூறமாட்டார்கள். இன்னும் ஒன்றைச் சொல்லுகின்றேன்; இந்த “குடி அரசு” பத்திரிகையின் தலையங்கத்திற்கு மேலாக சில வரிகள் செய்யுள் வடிவில் அமைந்து இருக்கின்றன. இந்தச் செய்யுள் வடிவிலே அமைந்துள்ள இந்த வரிகளின் கருத்துக்கள்தாம் இந்த “குடி அரசு” ஏட்டின் த்த்துவமாக அமைந்திருக்கின்றன.

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்தினுள் பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும் தானே?

இதைப்படித்துப் பார்த்தால், யாரோ பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாடினார்கள் என்று தோன்றாது. எங்கோ வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள், பிரசங்கம் செய்கின்றவர்கள் கதாகாலட்சேபம் செய்கின்றவர்கள் பாடி வைத்திருப்பதாகத் தான் எண்ணத் தோன்றும்.

காரணம் என்னவென்றால், நாம் ஏமாந்து விடுகின்றோம். எந்த இயக்கத்திற்கும், எந்தச் சமயத்திற்கும் இரண்டு அம்சங்கள் உண்டு. அதாவது, உதாரணத்திற்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மரத்துக்கு இருக்கக்கூடிய இரண்டு அம்சம் – ஒன்று அடியிலே இருக்கின்ற ஆணிவேர் – மற்றொன்று வெளியிலே இருக்கின்ற படர்ந்த கிளைகள், இலைகள். இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.

இந்த ஆணிவேர் அழியாத நிலையில், இவைகளை எவ்வளவு வெட்டினாலும் கூட, கிளைகளும் இலைகளும் குறைந்தாலும் கூட, மரம் உயிரோடே இருக்கும். இவை மறுபடியும் வளர்ந்துவிடும். ஆக, சமுதாய ஏற்றத்திற்குச் சமுதாயச் சீர்திருத்தத்தில் ஈடுபடுகிறவர்கள், கிளையிலே சாதி வேறுபாடு தோன்றுமாயின் களைகளை வெட்டிவிட வேண்டும். ஆணிவேர் நோயுற்றால், ஆணிவேர் பழுதுற்றால் மரம் அழிந்துவிடும். ஆணிவேர் அழுத்தமாக இருக்குமாயின் மேலே இருக்கின்ற மரத்தையும், கிளைகளையும் வெட்டி விட்டு மறுபடியும் துளிர்க்கச் செய்து கொள்ளலாம்.

புரட்சியும் புரட்டும்!

இந்தப் பணியை மேற்கொள்ளும்போது சிற்சில சமயங்களில் தவறுதலாக ஆணிவேரை வெட்டி விடுவதும் உண்டு. வேரோடு மரத்தை வெட்டிவிடுவதுதான் உலகில் எல்லாப் புரட்சிக்கும் அடிப்படையாக இருப்பது. ஆனால், அதில் முக்கியம் மனப் புரட்சி; உள்ளப் புரட்சிதான், எப்போது மனமும், உள்ளமும் தூய்மைப்படுகின்றதோ, எங்கே உண்மை நெறிப்பற்றி, இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு இன்னார் என்கின்ற வேறுபாடு இன்றி யார் இருக்கின்றார்களோ அங்கேதான் சமத்துவ நெறி துளிர்விட்டு வளரும். புரட்சி என்பது, புரட்டுதல் என்ற சொல்லிருந்து வந்தது, மேலிருக்கும் அழுக்குகளைப் போக்கி, விடுவதற்காக மண்ணையோ, மனத்தையோ புரட்டுவதுதான் புரட்சி!

நமக்குப் பழகிப்போய்விட்டது. சாக்கடையிலே முங்கி முங்கி சாக்கடை நாற்றம் தெரியாமல் போய் விட்டோம். சாக்கடையிலிருந்து வெளியே வந்து, தாராளமாகக் குளித்துவிட்டு வெளியிலே உள்ள தூய காற்றினை சுவாசிக்கும் பொழுது, “அப்பாடா, இந்தக்காற்று எங்கிருந்து வந்ததோ” என்று எண்ணம் தோன்றும்.

பாரதி சொல்லியிருக்கிறார்: “தவறாக வேதம் ஓதும் அந்தணனை விட நன்றாகச் சவரம் செய்கின்ற அம்பட்டவன் மேலானவன்” என்று.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்” என்பது தொழிலினுடைய சிறப்பை பற்றியதேயாகும். ஒரு கக்கூஸ் கழுவக்கூடிய பெண்ணானவள் அவளுடைய வேலையினைச் சிரத்தையுடன் செவ்வனே செய்வாளேயானால், நீதிபதியாக இருக்கின்ற நான் என்னுடைய வேலையினைச் சரியாகச் செய்யாமல் இருந்து விடுவேனேயானால், என்னைவிட மேலானவள் அவள்.

ஆக, இங்கு உயர்வு-தாழ்வு என்பது நான் எந்த வேலையினை பபார்க்கிறேன் என்பது பற்றி அல்ல; எனக்கு இடப்பட்ட- நான் ஏற்றுக்கொண்ட பணியை நான் எப்படிச்செய்கின்றேன் என்பது பற்றியேயாகும். ஆகவே, கக்கூஸ் கழுவுபவள் தன்னுடைய வேலையினை மனப்பூர்வமாக ஈடுபாட்டுடன் செவ்வனே செய்வாளேயானால், அவள் கொண்ட பிரமாணத்துக்கு விரோதமாக என்னுடைய உள்ள உணர்ச்சிக்கும் உண்மைக்கும் மாறாகத் தவறு செய்வேனேயானால், நான் தாழ்ந்தவன்; கேவலமானவன்.

இது சாதாரண உண்மை. நாம் இன்று என்ன பார்க்கின்றோம்? மிகமிக உயர்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் செய்கின்ற தவறுகள் வெளிவருவது இல்லை. ஆனால் தாழ்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் செய்கின்ற சிறிய தவறுகள் கூட வெளிவந்து விடுகின்றன. எனவே, தாழ்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் என்றும் தவறு செய்து கொண்டிருப்பது போலவும், மேலான பதவியில் உள்ளவர்கள் தவறு செய்யாதது போலவும் தவறான தோற்றம் நாட்டில் உலவுகின்றது.

தவறு யார் செய்தாலும் ஒன்றுதான். உண்மை நெறியில் இருந்து யார் தவறினாலும் அது தவறுதான். யார் சுயமரியாதையினையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், தம்முடைய வாழ்க்கை நெறிகளாகக் கொண்டு யார் தங்களுடைய வாழ்க்கையில் அவற்றை அனுஷ்டிக்கின்றார்களோ அவர்கள் சிறந்தவர்கள். இந்த அடிப்படையில் பார்ப்பீர்களேயானால்,

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்தினுள் பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?

என்பதனுடைய உயர்வு விளங்கும். இதில் “தவம்” என்ற வார்த்தையும் இருக்கின்றது – பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, தவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால், தவம் என்ற சொல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

“செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும் தானே?”

என்று பாட்டோடு இதனைச் சேர்த்துப்பார்க்கும்போது, இதனுடைய உண்மையினை சரியாக கையாண்டால் இதில் இருக்கின்ற இலைகளையும் கிளைகளையும் வெட்டிவிட்டு, ஆணிவேரைப் பற்றிக் கொண்டால் இதில் யாருக்கும் எந்த விதமான வேற்றுமையும் இருக்கமுடியாது; மனக்குறையும் இருக்க முடியாது என்று நான் சொன்னால் இப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நான் இங்கு வந்துள்ளதின் பொருத்தத்தை!

எனது பேச்சு சிலருக்கு முரண்பாடு!

ஒருபுறம் என்னுடைய இலக்கியப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு, அதே மாதிரி பெரியார் அவர்களுடைய எழுத்துக்களையும் பார்த்துவிட்டு, இரண்டையும் படித்தவர்கள் அவைகளுக்குமுரண்பாடு இருப்பதாக கற்பனை செய்துகொண்டு அதன் காரணமாக நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவது என்பது ஆச்சரியமாகச் சிலருக்குத் தோன்றக் கூடும். பாதை வேறு, முறை வேறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை வேறு அல்ல, எல்லோரும் உண்மைநெறி வாழ வேண்டும்; உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருத வேண்டும்; எந்த உயிர் பசியில் வாடினாலும் தான்வாடுவதாகத்தான் கொள்ள வேண்டும். இதில் மாறுபாடு இருக்கமுடியாது.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும். அதனிடையே வருகின்ற சிறப்பும், சிறப்பு இல்லாமையும் அவர்கள் தத்தம் காரியங்களைச் செய்கின்ற மனப்போக்கில் தான்-சிரத்தையில் தான்- ஈடுபாட்டில் தான் என்பதை உணர்ந்து கொண்டால் எந்த விதமான ஆச்சரியத்திற்கும், எந்த விதமான கசப்பிற்கும், எந்த விதமான சண்டைக்கும் இடமில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கும் என்பதைச்சொல்லிக்கொண்டு, அந்தப்பொருத்தத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை இங்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர் வீரமணி அவர்கள்தான். நான் இன்ன காரணத்திற்காக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான்; அதாவது, பணியின் தன்மை, அதில் பொறுப்பேற்று இருக்கிறவர்களுடைய பாடு ஆகியவற்றுக்காகத் தான் நான் இங்கே வந்திருக்கிறேன். எப்படி இன்னர் -இனியவர் என்று பார்க்காமல், நண்பர்-அல்லாதார் என்று பார்க்காமல் அவர்கள் செய்கின்ற காரியத்தின் பலனைப் பார்க்கவேண்டுமோ அதனைக் கருதியே நான் இங்கு வந்தேன். எனவே, வந்தவருடைய ஈடுபாட்டைப் பார்த்து, அவர் செய்கின்ற காரியத்தின் பலனைப் பார்த்து ஒத்துக் கொண்டேன்.

நண்பர் வீரமணியின் ஈடுபாட்டைப்பற்றி, அவர் செய்கின்ற காரியத்தின் பலனைப்பற்றி யாரும் சந்தேகப்பட மாட்டீர்கள். ஆகவே, நான் வீரமணி அவர்களின் ஈடுபாட்டை, தொடங்க இருக்கிற காரியத்தின் பலனை நன்கு உணர்ந்துகொண்டு இங்கு நான் வந்திருக்கின்றேன். ஒரு இலவச மருத்துவமனையினைத் துவங்குகின்றார்கள் என்றால் அது யார் பெயரில் துவங்கினாலும் மனிதத் தன்மையின் அடிப்படையிலே துவங்கப்படுகின்ற சமுதாய காரியம் என்ற காரணத்தினாலே இந்த விழாவில் என்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதிலும் ஆச்சரியம் இல்லை. இந்த இரண்டு அடிப்படையிலும் வந்திருக்கின்ற நான் இதனுடைய பொருத்ததினை மேலும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உடல்நலமே மனநலம்!

ஆயுட்காலம் முழுவதும் மனதிலே இருக்கின்று மாசினை ஒழிக்கப் பாடுபட்ட ஒருவரது அறக்கட்டளையின் பெயராலே இந்த மருத்துவமனை துவங்கப்படுகின்றது. மக்களது அறிவு நன்றாக வளர வேண்டுமானால், அதற்கு அடிப்படையான உடலநலம் நன்கு சிறந்து விளங்கவேண்டும். நன்றாக உடல்நலம் வளர்ச்சியுற்றால்தான் அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.

ஒருவன் என்றும் வியாதியாளனாக இருப்பானேயானால்-அவன் என்றும் நோயினாலே வருந்திக் கொண்டே இருப்பானேயானால், அந்த நோயைப்பற்றி சிந்திக்கத்தான் அவன் மனம் இடம் கொடுக்குமே தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க இடம் கொடுக்காது.

ஆக, அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது சுகாதாரம். அந்தச் சுகாதாரத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஓர் இலவச மருத்துவமனை பெரியார் அறக்கட்டளையின் சார்பில் துவங்கப்படுகிறது. இது விரிவாக வளரும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சிறிதாக துவங்கப்பட்டதுதான் விரிவடையும்.

இதற்கு நம் நாட்டு நதிகளையே உதாரணமாகக் கூறலாம். நம் நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கின்ற காவிரியாக இருக்கட்டும்; பிரம்மபுத்திரா, கோதாவரியாக இருக்கட்டும்; அல்லது கங்கையாக இருக்கட்டும்; அவைகள் ஆரம்ப இடத்தில் சிறிய வாய்க்கால்கள் போல் ஊற்றாக, சுனையாகத் தோன்றிப் பிறகு சிற்றாறுகளாக உருவெடுத்துப் பின்னர் பற்பல கிளைகள் அதில் ஒன்று சேர்ந்து பெரிய ஆறுகளாக காட்சி அளிக்கின்றன. அதுபோல,  சிறியதாக துவங்குகின்ற இந்த மருத்துவமனை போகப்போக அதனோடு சம்பந்தப் பட்டிருக்கிறவர்களுடைய மனத் தூய்மையின் காரணமாக, ‘இந்த மருத்துவ மனைக்குச் சென்றால் நம்மை மனிதன் என்று மதித்து அவர்கள் நிச்சயமாக நமக்கு உதவுவார்கள்’ என்றுபொதுமக்கள் கொள்கின்ற நம்பிக்கையின் காரணமாக இந்த மருத்துவமனை ஆல்போல் தழைத்து வளர்ந்து, இந்தச் சென்னை நகரத்திலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாக அமையும் என்று வாழ்த்தி, அப்படி அமைவதற்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்பு அளித்தமைக்கு நன்றியினை மீண்டும் தெரிவித்துக அமைகின்றேன்….
நன்றி : தந்தை பெரியார் ஈ.வே.ரா.

 

Tags: , ,

கம்பன் அவன் காதலன் (இரண்டாம் பாகம்)


கதர்ச் சட்டைக்காரன்

கதர்ச் சட்டைக்காரனாக நம் கன்னித் தமிழ் கலா ரசிகன் உலா வந்த நிலாக்காலம் அது.

இந்திய நாடு சுதந்திரக் காற்றை இஞ்சித்தும் சுவாசித்திராத நேரம்.

1940-ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் நாகூரில் வாழ்ந்த முஸ்லீம்களில் பெரும்பாலோர் முஸ்லீம் லீகில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைத்த காலம்.

பஞ்சம் தீர்க்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பச்சை கொடி ஏந்திய கட்சியில் பட்டாளமாய் சேர்ந்திருந்தார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் பூண்டிருந்த “ஒருங்கிணைந்த இந்தியா” என்ற கனவு நனவாகாது என்பது ஓரளவு புரிந்துப் போனது.

பெரும்பாலான நாகூர்வாசிகள் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் ஆதரவாளர்களாக மாறி இருந்தனர். முஸ்லீம்களுக்கு நலம் விளைவிக்கும் எனக் கருதி, பாகிஸ்தான் பிரிவினைக்கு முழுமூச்சாய் ஆதரவு தெரிவித்தனர். வெகுசிலரே மகாத்மா காந்தி மற்றும் மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களுக்கு ஆதரவு நல்க தங்களை தயார் படுத்தியிருந்தார்கள்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் வான்முட்டும் மினாராக்களில் முட்டி மோதி எதிரொலித்தன.

இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு கதர்ச்சட்டைக்காரராக மும்முரமாக வலம் வந்த இஸ்மாயீலை, ஏதோ வேற்றுக் கிரக அந்நியனாய் ஏற இறங்க பார்த்தனர்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு எத்தகையது என்பதற்கு நேதாஜியின் தேசிய ராணுவத்தில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கையே மாபெரும் சான்றாகும். 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தனர் என்ற தகவல் நம்மை தலைநிமிர வைக்கிறது.

திருச்சியில், ‘படே ஹஜ்ரத்’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட மெளலவி செய்யது முர்தஜா அவர்கள் ‘கிலாபத்’ போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர். இவர் ராஜாஜி, காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாலக்கரையில் இவர் நிறுவிய பள்ளிக்கூடத்தை இவரது மறைவுக்குப் பின் அரசாங்கமே ஏற்று “அரசாங்க இஸ்லாமிய பள்ளிக்கூடம்” என்று பெயர் மாற்றியது.

‘படே ஹஜ்ரத்’தின் நெருங்கிய நண்பரான ராஜாஜி அவர்கள் இதனை மீண்டும் “செய்யது முர்தஜா அரசு உயர் நிலைப்பள்ளி” என்று பெயர் மாற்றம் செய்து இப்பெரியாரை கெளரவித்தார். தமிழகத்தில் பாகிஸ்தான் என்ற தனிநாடு பிரிவினைக்கு ஆட்சேபனை தெரிவித்த முஸ்லீம் தலைவர்களுள் ‘படே ஹஜ்ரத்’ குறிப்பிடத் தக்கவர்.

செய்யத் முர்தஜா மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் மு.மு.இஸ்மாயீல். 1949-ஆம் ஆண்டு இப்பெரியார் மறைந்தபோது சொல்லவொணா துக்கத்திற்கு ஆளானார் அவர்.

1945-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயீல். குறும்பு தவழும் அரும்பு மீசை பருவத்தில் இவர் விரும்பி ஏற்ற பாடமோ கணிதம்.

இருபத்து நான்கு வயதே நிரம்பியிருந்த இளைஞரான அவர், மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதினார். அபுல் கலாம் ஆஜாத்தை பற்றி அதிகம் தெரியாதவர்கள் எல்லாம் அவரைப் பற்றி நன்கு அறியக்கூடிய வாய்ப்பை அந்நூல் ஏற்படுத்தி தந்தது. (இந்நூலைப் பற்றிய மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம்)

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைப் பார்ப்பதற்கு திருச்சி ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரம் அது.

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்தியின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்த ஒரு மிக முக்கிய நபரை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பேராசிரியர் கே.சுவாமிநாதன்.என்ற புகழ் பெற்ற காந்தியவாதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தின் தன்னிகரில்லா மாந்தனாய்த் திகழ்ந்து, தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவான வாழ்வு வாழ்ந்தவர் இவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயிலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற் திறனும் சுவாமிநாதன் அவர்களை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீலுக்கு கே.சுவாமிநாதன் அவர்களுடைய அன்பும் பரிவும் அளவற்ற ஆறுதல் தந்தது. அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றினார். தன் இறுதிநாள் வரை தனது ஒவ்வொரு பேச்சிலும் தன்னை ஆளாக்கிய அந்த அற்புத மாந்தரை அவ்வப்போது அவர் நினைவுகூறத் தவறவேயில்லை.

ஒரு பேட்டியின் போது “தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்று கூறினார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப எந்நாளும் செய்ந்நன்றி மறவாத செயல் வீரராய்த் திகழ்ந்தார் இஸ்மாயீல்.

அவரது நினைவாக “பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு” என்ற ஒன்றை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் சென்னை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் அப்பரிசு (ரூ 20,000 ரொக்கம்) சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

[அப்பரிசு, ஜெயகாந்தன் (2008), சிவசங்கரி (2009), டிஜிபி திலகவதி (2010) பொற்கோ (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அவரது குடும்பத்தார்களும் “மு.மு.இஸ்மாயீல் நினைவுப்பரிசு” என்ற ஒன்றை அவரது மறைவுக்குப்பின் ஏற்படுத்தி (ரொக்கம் ரூ 10,000) ஆண்டுதோறும் சென்னை கம்பன் கழகம் வாயிலாக சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

[அப்பரிசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2008) மு,மேத்தா (2009),கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (2010), அப்துல் காதர் (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலுக்கு தமிழ் மொழியின் மீது தணியாத தாகமும், திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் போன்ற தமிழார்வலர்கள் மீது மோகமும் ஏற்பட்டதற்கும் பேராசிரியர் அளித்த தூண்டுகோல்தான் உந்துசக்தியாக அமைந்தது.

குறிப்பாக, காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லோரும் அசைவம். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது.

இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்.

1936 முதல் தீவிர தேசிய போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள். 1941-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும், இவர் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்ததும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்.

காந்தியடிகளைப் போன்று, நான்கு முழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்து வந்தவர் கணேசன்.

இதுபோன்ற தலைசிறந்த மனிதர்களின் சகவாசத்தைப் பெற்றிருந்த இஸ்மாயீல், ஒரு பக்குவப்பட்ட மனிதராக, பழகுவதற்கு இனிமையானவராக, பண்பிலே குணசீலராக, பார்போற்றும் உத்தமராக உருவெடுத்தார்.

(இன்னும் வரும்)

முன் வரிசையில் சா.கணேசன், ராஜாஜி, காமராஜ்

கம்பனடிப்பொடி சா. கணேசன்

 

Tags: , , , ,