புத்தன் அழுகின்றான்!
பித்தர்கள் இவர்களின்
பித்தலாட்டங்கள் காணச்சகியாமல்
புத்தன் அழுகின்றான்!
அகிம்சை மார்க்கத்து
அராஜகத் தூதுவர்களின்
இம்சைகள் தாங்காமல்
புத்தன் அழுகின்றான்!
சத்தியமாய்ச் சொல்வேன்.
சித்தார்த்தனின்
சித்தாந்தங்களை
சின்னாபின்னமாக்கியவர்கள்
இவர்கள்.
சித்திரவதைகள் புரிகின்ற
எத்தர்கள் இவர்களை
எத்தரை காலம்
இத்தரை தாங்கும்?
துறவிகளா இவர்கள்?
சேச்சே.. துஷ்டர்கள்.
கண்ணிருந்தும் கபோதிகள்!
இவர்கள்
போதி மகான்கள் அல்ல.
போலி மகான்கள்.
மதவெறி கண்களை மறைக்க
இனவெறி மனசாட்சியை புதைக்க – மனிதச்
சதைகளை ருசிபார்க்கும்
மரத்துபோன ஜன்மங்கள்!
ஈழத்தில் இவர்கள் புரிந்த
ஈனத்தனத்தை தொடர்ந்து
மியான்மாரிலும் இந்த மீள்பதிவு
பெளத்த ஆடை தரித்த….
ரத்த வாடை பிடித்த….
தரித்திர பீடைகள்.
பிச்சுவா ஏந்திய
பிட்சுக்களோ!
இல்லை
பெளத்த மத நச்சுக்களோ!
புத்தன் மட்டும்
இன்று உயிரோடிருந்தால் -அந்த
போதி மரத்திலேயே
தூக்கிலிட்டு தொங்கியிருப்பான்.
– கவிஞர் அப்துல் கையூம்
ரோஹியாங் முஸ்லிம்களின் ரத்தம் தொட்டு எழுதப்படும் மியன்மாரின் பௌத்த சரித்திரம் !!
நாகூர் ரூமி
July 12, 2012 at 8:57 am
அன்பு கையூம், நிழல்படங்கள் உலுக்குகின்றன மனசாட்சியை. பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. உலகம் பூராவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சதி இப்படி நிறைவேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது இந்த நேரத்தில் அது பற்றிய விழிப்புணர்வை உலகத்துக்கு ஏற்படுத்துவதுதான். உங்கள் கவிதை அதை நன்றாகவே செய்கிறது. உங்கள் உணர்வில் நானும் பங்கு கொள்கிறேன். கவிதையின் கடைசி வரி ரொம்பச் சரி. புத்தனை மனதளவில் கொன்றுவிட்டுத்தானே இவர்கள் இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள்!
Abdul Qaiyum
July 18, 2012 at 10:15 pm
தங்களின் மனிதாபிமானக் கருத்துக்கள் மனதைத் தொடுகின்றன. பலரும் இதை இணையத்தின் மூலம் பாரறியச் செய்து அவரவர் பங்குக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைய வேண்டும்.