RSS

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

21 Jun

Image

வரலாறு

படைப்பிலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். சமகாலத்தின் வாழ்க்கையைப் படைப்பிலக்கியம் வழி கலையாக்கும் போது, எழுத்தாளன் அவனை அறியாமலேயே காலமாறுதல்களுக்கு ஏற்ப மாறும் சமூகமாற்றத்தைத் தன் படைப்புக்களில் காட்டுகிறான். சிங்கப்பூரில் மலர்ந்த சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள், சிங்கப்பூர்ப் பின்னணியைச் சித்திரிக்கும் வகையில் தீட்டப்பட்டன.

தொடக்கக்காலம் (1887 – 1900)

1872 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட “முன்னாஜாத்து திரட்டு” என்ற கவிதை நூலே பழமையான நூலாகும். இக்கவிதை நூல் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரால் எழுதப்பட்டது. 
இந்நூலே சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி நூலாகத் திகழ்கிறது. அடுத்து 1887ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சதாசிவப் பண்டிதர் என்பவரால் சிங்கப்பூரில், தீனோதய இயந்திர சாலையில் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட “சிங்கைநகர் அந்தாதி’”, “சித்திர கவிகள்” என்ற இரு நூல்கள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டன.
இதற்கு அடுத்து, 1893ஆம் ஆண்டில் இரங்கசாமி தாசன் எழுதிய “அதிவினோத குதிரைப் பந்தய லாவணி” என்ற நூலும், “சல்லாப லாவணி” என்ற நூலும் இங்கு அச்சேறின. “குதிரைப் பந்தய லாவணி” என்ற நூலில் மட்டுமே சிங்கப்பூர் வரலாற்றுச் செய்திகளும், சமூகவியல் குறிப்புகளும் நிறையக் காணக் கிடக்கின்றன.

சீர்திருத்தக் காலம் (1930 – 1942)

1920களின் இறுதியில் தமிழ்நாட்டில் திரு ஈ. வெ. இராமசாமி பெரியார் அவர்கள் ஏற்படுத்திய சீர்திருத்த உணர்வின் எதிரொலிகள் இங்கும் எதிரொலித்தன.
அதில் வயப்பட்டு திரு கோ. சாரங்கபாணி “முன்னேற்றம்” இதழை 1929இல் தோற்றுவித்தார். 1932இல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் தோற்றமும், 1935இல் சங்கத்தின் கொள்கை ஏடாக முகிழ்ந்த தமிழ் முரசு இதழும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் தமிழர்களிடையே ஏற்பட்ட கலை, இலக்கிய, பண்பாட்டுத்துறை மாற்றங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்றின.

1936க்கும் 1942க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தமிழ் முரசு இதழில் அதிகம் எழுதியவர் திரு ந. பழநிவேலு அவர்களே.
1936இல் “காதற்கிளியும் தியாகக்குயிலும்” என்ற தொடர் கதையையும் முரசில் எழுதினார். திரு முகிலன் 1939இல் வெளியிட்ட “தமிழ் ஒலி கீதம்” என்ற கவிதைத் தொகுப்பும், 1940இல் வெளியிட்ட “திராவிடமணி கீதம்” என்ற கவிதைத் தொகுப்பும் சமூகச் சீர்திருத்தத்தையே கருப்பொருளாகக் கொண்டிருந்தன.

1939இல், தமிழ் முரசில் வெளியான திருமதி ராஜம்பாளின் “விஜயாள் ஓர் அனாதை” என்ற சிறுகதை, இனகலப்பு மணங்களை ஊக்குவிக்கப்படாத ஒரு காலக்கட்டத்தைக் காட்டுகிறது.

இதே காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய காந்திய சிந்தனை தர்க்கங்களும் இங்கே எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்பட்டன.

ஜப்பானியர் காலம் (1942 – 1945)

சிங்கப்பூரின் நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஜப்பானியரின் படையெடுப்பால் பெரிதும் பாதிப்புற்றது.
பிரிட்டிஷ் அரசை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணப்போக்கை வெளிக்காட்டக்கூடிய கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் இங்கு அதிகம் எழுத்தப்பட்டன.
தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தால் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்பட்ட `சுதந்திர இந்தியா’, `யுவபாரதம்’, `சுதந்திரோதயம்’ ஆகிய இதழ்களிலேயே அவை வெளியிடப்பட்டன.

திருவாளர்கள் பக்ருதீன் சாஹீப், ந. பழநிவேலு, சொ. ஐ. துரை, ரெ. ஸ்ரீநிவாசன், கோ. சாரங்கபாணி, முகிலன் போன்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களோடு மலாயாவிலிருந்தும் பலரும் எழுதினர்.

இன எழுச்சி காலம் (1946 – 1960)

1945ஆம் ஆண்டு ஜப்பானியரின் சரணுக்குப்பின் சமூக வாழ்வு சரியான ஒரு
நிலையை அடைய 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் உயிர்ப்புடனேயே விளங்கியது.

1951 இல் திரு வை. திருநாவுக்கரசு முரசில் சேர்ந்தவுடனேயே முனைப்பான ஒரு வேகத்தோடு சிங்கப்பூர்-மலாயா எழுத்துலகம் சென்றது. பல புதிய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் திரு புதுமைதாசன் (P கிருஷ்ணன்), திரு R. வெற்றிவேலு, திரு ரா. நாகையன், திரு எம். கே. துரைசிங்கம், திரு பா. சண்முகம், திரு ஜகதீசன் போன்றோர்.

1952இல் திரு அ. முருகையனும், திரு தி. செல்வகணபதியும் திரு முருகு சுப்பிரமணியமும், 1953இல் திருவாளர்கள் க. கனகசுந்தரம், சே. வெ. சண்முகம், எஸ். எஸ். சர்மா, ஏ. பி. ராமன், எம். துரைராஜூ போன்றோர்களும் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளனர். கலைமலர், இந்தியன் மூவி நியூஸ், மனோகரன் போன்ற சினிமா இதழ்களுடன், ச. வரதன், பெ. கோவிந்தராசு ஆகியோர் பல மேடை நாடகங்களை நூல்களாக வெளியிட்டு இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்குக் கணிசமான பங்காற்றியுள்ளனர்.

1953இல் `மாணவர் மணி மன்றம்’ மாணவர்களான எம். கே. நாராயணன், எம். எஸ். வேலு, எம். எஸ். சண்முகம், ஐ. உலகநாதன் போன்றோரை எழுத்தாளர்களாக உருவாக்கியது. அதே காலகட்டத்தில், கவிஞர் கா. பெருமாள், திரு முருகு சீனிவாசன், திரு முகிலன் போன்றோர் வீறுகொண்டு கவிதைகள் எழுதித் தமிழர்களைத் தட்டி எழுப்பினர்.

ஐம்பதுகளின் இறுதியில் திருவாளர்கள் முருகதாசன், மு. தங்கராசன், இராம. கண்ணபிரான் போன்றோர் எழுத்துலகில் அறிமுகம் கண்டனர்.

குழப்பமான அறுபதுகளும் நிலைபெற்ற எழுபதுகளும் (1961 -–1980)

தமிழ் முரசில் தொடங்கப்பட்ட வெண்பா போட்டி, திருவாளர்கள் முத்தமிழன், கா. து. மு. இக்பால், அ. பெரியராமு, முல்லைவாணன், அமலதாசன், கா. கு. இளந்தமிழன், பொய்கை வெங்கடாசலம், டி. கே. சீனிவாசன், குமாரி அ. பார்வதி, ஜமீலா போன்றோரை எழுத வைத்தது.
சிங்கப்பூரில் பிறந்த திரு மா. இளங்கண்ணன், இக்கட்டுரையாளர் திரு நா. கோவிந்தசாமி இருவரும் 1965ஆம் ஆண்டிலிருந்தே எழுத ஆரம்பித்தாலும், சிங்கப்பூரர்களின் சில தனி உணர்வுகளையும், அவர்களுக்கே உரிய சமுதாய சிக்கல்களையும் காட்டுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன.
வானொலி நாடகம் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான திரு பொன். சுந்தரராசுவும் சிங்கப்பூர் வாழ்க்கைச் சிக்கல்களைத் தொடுவதற்குச் சில ஆண்டுகள் ஆயின.
திரு மு. சு. குருசாமி சிறுகதைகளையும், திரு பரணன் சிங்கப்பூரர்களின் பண்புகளை விளக்கிடும் நல்ல கவிதைகளையும் நமக்களித்தனர்.

பயண இலக்கியக் கட்டுரைகள் படைத்தவர்களுள் திருவாளர்கள் எஸ். எஸ். சர்மா, சுதர்மன், பி. பி. காந்தம் முதலியோர் ஆவர்.
திரு இலியாஸ், தமிழவேள் கோ சாரங்கபாணி பற்றி ஒரு வரலாற்று நூல் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரின் ஆய்வியல் வளர்ச்சிக்கு அடிநாதமாக விளங்கியவர் டாக்டர் அ. வீரமணி. 70களின் இறுதியில் புதிய எழுத்தாளர்களான திருவாளர்கள் க. இளங்கோவன், உதுமான் கனி ஆகியோர் சிறந்த படைப்புகளை நமக்குத் தந்தார்கள்..

ஆதாரம்: திரு நா. கோவிந்தசாமி எழுதிய கட்டுரை, “சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி”.

Information Derived from: Singapore Government National Library Board

 

சிங்கப்பூரில்  தமிழும் தமிழ்க் கல்வியும்

பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்,  சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.

சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில்  உள்ள ஒரு சிறு தீவு. அதன் பரப்பளவு  715.8 சதுரக் கிலோ மீட்டர்.  அதன் மக்கள் தொகை  5.3 மில்லியன்.  இவர்களில் சீனர்கள் 74%,  மலாய்க்காரர்கள் 13.6%, இந்தியர்கள் 9.4%,  ஏனையோர் 3%. இந்தியர்களில்65% தமிழர்கள். ஏனையோரில் மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள், பஞ்சாபியர் முதலியோர் அடங்குவர்.  இங்கு வாழ்வோரில் பௌத்தம், தௌவிசம் ஆகிய சமயத்தினர் 51 %, இசுலாமியர்கள் 15 %, கிறித்துவர் 15% , இந்துக்கள் 4% சதவீதம்.  சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் மொழி. சீனம், மலாய், தமிழ் , ஆங்கிலம் ஆகிய நான்கும் அதிகாரத்துவ மொழிகள். இருப்பினும்,  ஆங்கிலமே அலுவலக மொழியாகவும், கல்வி நிலையங்களில் பயிற்றுமொழியாகவும், பல்வேறு இனத்தவரின் தொடர்பு மொழியாகவும் கோலோச்சுகிறது.  சிங்கப்பூர் ஒரு குடியரசு நாடு. இப்போது  அதிபராக (குடியரசுத் தலைவராக) இருப்பவர் டாக்டர் டோனி டான். இவருக்கு முன் 12 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் திரு எஸ். ஆர். நாதன் என்னும் தமிழர். இவர் பொதுமக்களால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்.

சிங்கப்பூரின் பழைய பெயர் சிங்கபுரம். இப்பெயர் சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி தொடர்பான ஓர் ஊர்ப் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே பெயரளவில்  சிங்கப்பூருக்கும் சிங்கபுரத்துக்கும் ஒரு தொடர்புள்ளது. நவீன சிங்கப்பூரைக் கிழக்கு இந்தியக் கம்பெனியைச் சார்ந்த ‘‘சர் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ்’’ என்னும் ஆங்கிலேயர் 1819- இல் உருவாக்கினார்.  இவரோடு பினாங்கிலிருந்து வந்த நாராயணபிள்ளையும்  ஏனைய தமிழர்களுமே, தமிழ் இந்நாட்டில் வழங்கக் காரணமாவர்.  பிறகு, தமிழகத்தின் சோழ மண்டலப் பகுதியிலிருந்து தமிழர் பலர் இந்நாட்டில் பல்வேறு பணிகளைச் செய்யக் கொண்டுவரப்பட்டனர்.  இவர்கள் இங்கே தங்கி வாழ்ந்தனர்.   இவர்கள் சோழியர் எனப்பட்டனர். சோழியர் தெரு என ஒரு தெரு இன்றும் இங்கு உள்ளது.   1824 இல், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இங்கு வந்து கொடுக்கல், வாங்கல் தொழில் நடத்தத் தொடங்கினர். இலங்கையிலிருந்தும் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்து பல்வேறு அலுவலகப் பணிகளில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது தமிழகத்திலுள்ள கடலூரைச் சார்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள இராமர் திருவடிக்கு 1828 இல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது. இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.                                                                                                                               

     மலேசியா, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும் போது சிங்கப்பூரில்தான் முதல் தமிழ் இலக்கியம் உருவாயிற்று. 1887-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சதாசிவ பண்டிதரால் இயற்றப்பட்டுச் சிங்கப்பூரிலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ‘‘சிங்கைநகர் அந்தாதி”, “சித்திரக் கவிகள்“ என்னும் இரண்டு நூல்களாகும்.  இது புலவர் இலக்கியம்.  இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் இலக்கியமாக 1893இல், ரங்கசாமிதாசன் என்பவர் ”குதிரைப் பந்தய லாவணி” என்னும் நூலை இயற்றியுள்ளார்.

சிங்கப்பூரில் முதல் சீனமொழி நாளிதழ் 1881-ஆம் ஆண்டில் தோன்றுவதற்கு முன்னரே, தமிழ் மொழியில் செய்திப் பத்திரிகை இருந்தது என ஆய்வாளர்கள்   கூறுவார்கள். (திருநாவுக்கரசு வை. 1979: 72) 1887 இல் சிங்கையிலிருந்து வெளிவந்த “சிங்கைநேசன்” என்ற வார இதழ்தான் இப்போது  காணக்கிடைக்கும் முதல் தமிழ்ப் பத்திரிக்கை. இதன் முதல் தலையங்கம்,ஏற்கெனவே நடந்து நின்று போன “சிங்கை வர்த்தமானி” , “தங்கை நேசன்”, “ஞான  சூரியன்” ஆகிய தமிழ்ப் பத்திரிக்கைகளைக் குறிப்பிடுகிறது. ஆயினும் இவை கிடைக்கவில்லை. இப்போது சிங்கையில் இருக்கும் ஒரே தமிழ் நாளிதழ் ‘‘தமிழ் முரசு” ஆகும். இது மலேசிய சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடற்கரியது. 1924இல் தமிழகம் திருவாரூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி சிங்கை மலேசியத் தமிழ் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் எனலாம். ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் குறிக்கோளுடன் நிதி திரட்டி அவர் 1956-இல், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாகக் கொண்ட இந்திய ஆய்வுத் துறை தொடங்க வழி செய்தார். பின்பு 1959-இல்,இத்துறை கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.

சிங்கப்பூரில் இப்போது வானொலி 96.8 ஒலி என்பது இருபத்து நான்கு மணிநேர தமிழ் ஒலிபரப்பினைச் செய்து வருகிறது.  தொலைக்காட்சியும் நாள்தோறும் கணிசமான அளவில் தமிழ் ஒளிபரப்பினைச் செய்து வருகிறது.  இவற்றின் தமிழ்ச் செய்தி அறிக்கைகளில் நல்ல தமிழ் நடமாடும். இவற்றின் வாயிலாகத் தமிழ் மொழியும் இலக்கியமும் சிங்கப்பூரில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.

    தமிழ் மொழியில் அண்மையில் ஏற்பட்ட 13 எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிந்தனையைப் பெரியாருக்கு முதன்முதலில் எழுதிக் கட்டுரையாகக் ‘‘குடியரசு”இதழில் 1933இல் வெளியிட்டவர் சிங்கப்பூரைச் சார்ந்த அ.சி. சுப்பையா என்பவரே ஆவார்.  தமிழக அரசு அறிவித்த எழுத்துச் சீர்திருத்தத்தை 1982இல் முதன் முதலில் ஏற்றுச் செயல்படுத்தியதும் சிங்கப்பூரே ஆகும்.

தென்கிழக்காசியாவிலேயே தொடக்க நிலை முதல் உயர்நிலை இறுதிவரை தமிழில் பல பாடங்களைக் கற்பித்த ஒரு பள்ளியாக – ஓர் உயர்நிலைப்பள்ளியாக ‘உமறுபுலவர் தமிழ்ப்பள்ளி” 1946 முதல் இருந்தது.  பிறகு 1982  இல் மூடப்பட்டது.  இதில் பயின்ற பலர் சிங்கப்ப்பூரில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றி வந்தனர்,  வருகின்றனர்.

 தென்கிழக்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்துள்ளது.   இது அரசியல் அமைப்புச் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும் .  இதனால் விளைந்த விளையும் நன்மைகள் பலப்பல.  சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் வாய்ப்புள்ளது.  தமிழில் ஒருவர்   பேசுவதை ஆங்கிலத்தில்  மொழி பெயர்ப்பதற்கும்,ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் அங்கு வசதிகள் உள்ளன.  அரசாங்க அலுவலகங்களில் பெயர்கள், அறிவிப்புகள், விளம்பரங்கள் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூர் விமானங்களிலும் பயணிகளுக்கான அறிவிப்புகளும்  பாடல்களும் தமிழில் உள்ளன. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா, சிங்கப்பூர், புருணை முதலிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான்  மட்டத்தில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தமிழுக்கு ஓர் இடம் தந்து அதனைக் கொண்டு நிறுத்தும் உரிமை சிங்கப்பூருக்கே உண்டு.  இதனால் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர்கள் ஆசியான் இலக்கிய விருதைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.  சிங்கப்பூர் அரசாங்கச் சார்பு நிறுவனங்கள் ஆண்டு தோறும் நடத்தும் விருதுகள் பத்தாயிரம் வெள்ளிப் பரிசுகள், போட்டிகள் அனைத்தும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைக்கின்றன.

 சிங்கப்பூரில் கவிதை, சிறுகதை ஆகியவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.  “சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்” இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது.  தமிழ் மொழி வளர்ச்சி, கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கெனப் பலவகைத் தமிழ் அமைப்புக்கள் உள்ளன.  ஆன்மிகத் தமிழ் வளர்ச்சிக்கெனச் சிங்கப்பூரில்  கோயில் அறங்காவலர்களும் திருமுறை மாநாட்டினரும் பாடுபடுகின்றனர்.

சிங்கப்பூர்த் தமிழர்களின் எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் ஆகியவற்றில் சில சிறப்பு இயல்புகள் தென்பட்டாலும் இலங்கைத் தமிழ்போலத் தனிக்கிளைமொழியாக இதைக் கருத வாய்ப்பில்லை.  பொதுவாக  இல்லங்களில் தமிழ் பேசும் போக்கு குறைந்து கொண்டே வருகிறது.  ஆங்கிலத்தின் செல்வாக்கு மேலோங்கி வருகிறது.  இந்த வகையில் பேச்சுத் தமிழின் புழக்கத்தை அதிகரிக்கும் பணியே இப்போது சிங்கப்பூரில் முதன்மைப் பணியாக உள்ளது. 

தமிழ்க்கல்வி

பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், உலக வாணிபம் ஆகியவற்றிற்காக ஆங்கிலமும்: பண்பாடு, கலச்சாரம்,பழக்கவழக்கங்களைப் பேணுதல் ஆகியவற்றிற்காக தாய்மொழிக் கல்வியும் எல்லாருக்கும் தேவை எனும் அடிப்படையில் சிங்கப்பூர்க் குடியரசு இருமொழிக் கொள்கையினை இன்றியமையாத ஒரு கொள்கையாகச் செயல்படுத்தி வருகிறது.இதனால் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்கும வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளது.  எனவே தமிழர் குழந்தைகள் மாணவர்கள் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக ஆங்கிலத்துடன் பயிலும் நிலை சிங்கப்பூரில் உள்ளது.  இப்போது தொடக்க நிலையில் சுமார் 15000 மாணவர்களும்,உயர்நிலையில் சுமார் 9000 மாணவர்களும், பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு நிலையில் சுமார் 700க்கு மேற்பட்ட மாணவர்களும் தமிழ் பயில்கின்றனர்.  ஏறத்தாழ 25000 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர் இவர்களுக்கு  147 தொடக்கப் பள்ளிகளும், 70 உயர்நிலைப்பள்ளிகளிலும் 9 உயர்நிலை மொழி நிலையங்களிலும் 16 தொடக்கக் கல்லூரிகளிலும் ஒரு மத்திய கல்வி நிலையத்திலும்  தமிழ் கற்பிக்கப்படுகிறது.  இக்கல்வி நிலையங்களில் 600 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் கற்பிக்கின்றனர். இவர்களில் 50 க்கு மேற்பட்டோர் தமிழகத்திலிருந்து வந்து தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றனர்.பல்கலைக்கழக அளவில் நன்யாங்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தேசியக் கல்விக் கழகத்திலும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும்  தமிழ் பயிற்றப்படுகிறது.

ஆங்கிலமே கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாகும். சிங்கப்பூரிலுள்ள பல பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்க வாய்ப்புள்ளது. தமிழ் கற்பிக்கப்படாத உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மொழி நிலையங்களில் பள்ளி நேரத்திற்கு அப்பால் தமிழ் பயில்கின்றனர்.  ஒன்பது தமிழ் மொழி நிலையங்களுள் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் கல்வியமைச்சின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் ஒன்றாகும். மேலும், இந்நிலையம் இன்று சிங்கப்பூரில் தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான வளமை நிலையமாகவும் விளங்குகிறது.

 சிங்கப்பூரின் தமிழ்க்கல்வி நிலையை இருவகையாக நோக்கலாம். ஒன்று தமிழ் வழிக்கல்வி: மற்றொன்று தமிழ்மொழிக் கல்வி: முன்னையது தமிழ் பயிற்று மொழியாக இருந்தநிலை: பின்னையது ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் தமிழ் தாய்மொழி நிலையில் பயிலப்பெறும் நிலை.

தமிழ்வழிக்கல்வி

 தமிழ்வழிக்கல்விப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகள் என அழைத்தனர்.  சிங்கப்பூரில் முதல் தமிழ்ப்பள்ளி 1934இல் செயற்படத் தொடங்கியது.  1951இல் ஏறத்தாழ 20 தமிழ்ப் பள்ளிகளில் ஆயிரம் மாணவர் இருந்தனர். இவை அனைத்தும் தொடக்கப்பள்ளி நிலையில் தமிழ்மொழி வாயிலாகப் பலவகைப் பாடங்களைக் கற்பித்து வந்தன. இந்நிலையில் 1960 இல் உயர்நிலையிலமைந்த தமிழ்ப்பள்ளியாக ‘உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி’ உருவாயிற்று. 1965 ஆம் ஆண்டு முதல் ஆங்கில. சீன ,மலாய்ப்பள்ளிகளின் இறுதிச் சான்றிதழுக்கு  இணையாக உமறுப்புலவர் பள்ளி விளங்கியது.

  இந்நிலையில் தமிழ் வாயிலாகக் கல்வி பயின்ற மாணவர் எண்ணிக்கை 1968இல் 1843 ஆக இருந்தது.  ஆங்கிலத்தின் செல்வாக்குச் சிங்கப்பூர் மக்களிடையே படிப்படியாக வளர்ந்து வலுவுற்றதால் தாய்மொழிவழிக்கல்வி கற்பவர் தொகை குறைந்தது. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன.  1982இல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியும் மூடப்பட்டது.  தமிழ்ப்பள்ளிகளே சிங்கப்பூரில் இல்லாத நிலை உருவாகிவிட்டது! பாரதிதாசன், அரவிந்தர், நாகம்மையார், நீலாம்பிகை, சாரதாதேவி, வள்ளுவர்,வாசுகி, விவேகானந்தர் முதலியோர் பெயரால் அக்காலத் தமிழ்ப்பள்ளிகல் இயங்கின.

தமிழ் மொழிக்கல்வி

சிங்கப்பூரில் தமிழ் இரண்டாம் மொழியாக ஆங்கிலப்பள்ளிகளில் 1951 முதல் கற்பிக்கப்பட்டது.  1952 இல் 32 பள்ளிகளில் இவ்வாய்ப்பு இருந்தது.  1968 இல் 13000 மாணவர்கள், ஆங்கிலப்பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாகப்பயின்றனர்.  1966இல் உயர்நிலையில் தமிழ் கற்றோர் தொகை 2712 ஆகும். 1968 முதல் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு நிலையிலும் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.

இன்று ஆங்கிலப்பள்ளிகளில் பாலர் தொடக்க நிலை முதல் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புவரை, தமிழ் ஒரு தாய் மொழிப்பாடமாக இருக்கும் நிலையைக் காணுகிறோம்.

பாலர் பள்ளி நிலை

தனியார் பாலர் பள்ளிகள், மக்கள் கழகப் பாலர் பள்ளிகள். மக்கள் செயல்கட்சி அறக்கட்டளைப் பாலர் பள்ளிகள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் உள்ள சரசுவதி பள்ளி, சாரதா பள்ளி, கல்சா பாலர் பள்ளிகள் என்று பல பள்ளிகளில், தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.  இவற்றில் பலர் படிக்கும் வாய்ப்புள்ளது.  பாலர் பள்ளி முதல் வகுப்பு மாணவர்களுக்குரிய புத்தகங்கள் நான்கும், பயிற்சிப் புத்தகங்கள் நான்கும் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறே பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் எட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  படிக்க எளிய முறையில் படங்களுடன் கவர்ச்சியான வடிவத்தில் இப்புத்தகங்கள் அமைந்துள்ளன.   மக்கள் கழக இந்திய நற்பணிக்குழுவின் சார்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.  அரசு தொடக்கப்பள்ளி சிலவற்றிலும் ஓராண்டு ஆயத்தவகுப்பு நிலையில் தமிழ் கற்பிக்கப்பட்டது. இதனை ஒட்டிச் சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் தொடக்க நிலைக்கு முந்திய நிலையான ஆயத்த நிலைக்குரிய பயிற்றுகருவிகள் பலவற்றைத் தமிழுக்கு உருவாக்கியுள்ளது.  ஒலி நாடாவிலும் , இன்னோசை வரிகளும் பாடல்களும் ஓசைநயமும் தரப்பெற்றுள்ளன.  பல்வேறு கருப்பொருள்களை ஒட்டிய வண்ணப்படங்களுடன் பயிற்சித்தாள்கள் ஒளிநாடா ஆகியவை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன.  அண்மையில் ‘சிங்கப்பூர் இந்தியர் நல மேம்பாட்டுக்கழகம்’ பாலர் பள்ளி நிலையினர் படிக்கத்தக்க நான்கு நூல்களைப் பெரும் பொருட் செலவில் வெளியிட்டுள்ளது.  இன்று தொடக்கநிலை முதலாம் வகுப்புக்கு  வரும் மாணவரும் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் பாலர் பள்ளியில் தமிழ் படித்துவந்தவர்களாவர்.இதனை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதலாம்.

தொடக்கநிலை

தொடக்கநிலைப் பள்ளிகளில் முதல் நாலாண்டு தமிழ் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றுடன் தாய்மொழிப்பாடமாகத் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நான்காம் ஆண்டின் இறுதியில் மாணவர்கள் மூன்று மொழி நிலையில் தரம் பிரிக்கப்படுகிறார்;கள்.  மிகவும் சிறந்த முறையில் கல்வி கற்கும் ஆற்றலுடையவர்கள் ஆங்கிலத்தையும் தமிழ்மொழியையும முதல் மொழி நிலையில் கற்கிறார்கள்.  இதனை உயர் தமிழ் என்பர் கற்றலில் சாராசரி ஆற்றலுடையவர்கள் ஆங்கிலத்தை முதல் மொழி நிலையிலும் கற்பார்கள்.  இது தமிழ்  என்ற பெயர் பெறும் . கல்விகற்பதில் மிகவும் குறைந்த ஆற்றலுடையவர்கள், ஆங்கிலத்தை முதல் மொழி நிலையிலும் தமிழை மூன்றாம் மொழி நிலையிலும் வாய்மொழித் திறனுக்கு முக்கியத்துவம் தரும் நிலையிலும் கற்பார்கள். இதனை அடிப்படைத் தமிழ்  என்பர். தொடக்கநிலை இறுதிவகுப்பான ஆறாம் வகுப்பின் இறுதியல் அரசுத் தேர்வு இம்மூன்று நிலைப்பிரிவினர்க்கும் உண்டு.

உயர்நிலை

தொடக்க நிலையில் உள்ளது போன்றே, உயர்நிலையிலும் மாணவர்கள் எந்தக் கல்விப் பிரிவில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர் எந்த நிலை அதாவது உயர்தமிழ், தமிழ், அடிப்படைத்தமிழ் ஆகியவற்றில் எந்நிலையில் தமிழ் கற்கவிருக்கிறார் என்பது முடிவு செய்யப்படும். உயர்நிலைக் கல்வி இறுதித் தேர்வில் சிறந்த முறையில் தேறியோர் நான்கு ஆண்டுகள் பயில்வர்.இவர்கள் விரைவு வகுப்பினர். இவர்கள் தமிழை முதன்மொழி நிலையிலும் (உயர் தமிழ் நிலையிலும்) பயில்வர். சராசரி ஆற்றல் நிலையில் தேறியோர் வழக்க நிலை வகுப்பினர். இவர்கள் தமிழை இரண்டாம் மொழிநிலையில் பயில்வர். மிகக்குறைந்த நிலையில் இவர்கள் அடிப்படைத் தமிழை வாய்மொழி நிலையில் பயில்வர். உயர்தமிழ் பயிலும் வாய்ப்பு ஒரு சில பள்ளிகளில்தான் உண்டு.உயர்நிலையில் இறுதி ஆண்டின் இறுதி வழக்க நிலை பயில்வார்க்கும் மூன்று வகைத் தமிழ் மொழி பயில்வார்க்கும் ஜி.சி. இ சாதாரண நிலையில் அரசுத் தேர்வு நடத்தப்படும்.  நான்காம் ஆண்டின் இறுதியில் வழக்கு நிலை பயில்வார்க்கும்  அரசுத் தேர்வுண்டு. ஜி. சி. இ  சாதாரண நிலைத் தேர்ச்சிக்குத் தமிழ் இலக்கியப் பாடமும் உண்டு. உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இப்பாடம் கற்பிக்கப் படுகிறது.  இத்தேர்வு எழுதுவோரில் பெரும்பாலோர் தனி நிலையில் படித்தே எழுதுகின்றனர்.  ஏனையபாடங்களில் நல்ல தேர்ச்சி பெற்றுத் தமிழ்  பயிலச் சிரமப்படும் மாணவர்களுக்கான தமிழ்மொழிB என்னும் பாடத் திட்டமும்  அண்மையில் புகுத்தப் பட்டுள்ளது.  மேலும் சுயேச்சைப் பள்ளிகள் தமக்கெனத் தமிழ்ப் பாடத் திட்டம் வகுக்கும் உரிமையும் அண்மையில் பெற்றுள்ளன. இதனால் சிங்கப்பூரில் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு நிலைகளில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

புதுமுக வகுப்பு நிலை

பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு நிலையில் தமிழ் மட்டுமே கற்பிக்கப் படுகிறது. உயர் தமிழ் தனியாராகத் தேர்வு எழுதுவோர் மட்டுமே படிக்கும் பாடமாகும்.  தமிழ்மொழிப் பாடத்தில் இருவகை நிலை உண்டு.  ஒன்று மேல்நிலைச் சாதாரண நிலைத் தேர்ச்சி,மற்றொன்று மேல்நிலைத் தேர்ச்சி.  இவற்றில் முன்னைய நிலை மட்டும் படித்தால் போதும்.  இருநிலையிலும் எழுதி மேல்நிலைத் தேர்ச்சியும் பெறலாம்.  மேல்நிலைத் தேர்ச்சி பயில்வோர் சாதாரண நிலைத் தேர்ச்சித்  தாள்களுடன் ஒரு நாடக நூல், ஒரு புதினம்,ஒரு சிறுகதை நூல், ஒரு கவிதை நூல் அடங்கிய மேல்நிலைத் தாளும் எழுத வேண்டும். ஈசூன் தொடக்கக் கல்லூரி ஆண்டு தோறும் கருத்தரங்கு வழி தமிழ்க் கல்வி சிறக்க உதவுகின்றது.  சில தொடக்கக் கல்லூரிகள் நாடகம், பேச்சுப் போட்டிகள் நடத்துகின்றன.

பாடத் திட்டம்

   கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத் திட்ட வரைவுப் பிரிவு , மேற்கண்ட  தொடக்க, உயர் நிலைகளுக்குரிய பாடத் திட்டங்களை உருவாக்குவதுடன் பாடத் திட்டச் செயலாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.  இப் பிரிவு 1980 களின்  தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட பாடத் திட்டத்தைக் கல்வித் திட்டத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இப்போது திருத்தி அமைத்துள்ளது.  இப் பாடத் திட்டம் 1995 முதல் கட்டங் கட்டமாக அறிமுகப் படுத்தப் படும்.  இது கருப்பொருள் சார்ந்த கருத்துப் பரிமாற்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.  இதில் முக்கிய மொழி நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். கற்றலும் கற்பித்தலும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இயங்கும்.  இது மாணவர் நிலைக்கேற்ப நெகிழ்வுத் தன்மை உடையது.  நோக்கங்களும் குறிக்கோளும்,அணுகுமுறை, கருப்பொருள்கள், தலைப்புகள், நடவடிக்கைகள், நுண்திறன்கள், கருத்துப் பரிமாற்ற நடவடிக்கைகள், மொழிக் கூறுகள், மதிப்பீட்டு விளக்க குறிப்புகள் ஆகியவை இப்பாடத்திட்டத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.  மொழிக் கூறுகள் பயன்பாட்டு;நோக்கில் தரப்பட்டுள்ளன.  நவீன மொழியியற் சிந்தனைகளும் மரபிலக்கணக் கூறுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.  புகுமுக வகுப்பிற்கான பாடத் திட்டமும் பாட நூல்களும் தனியே உள்ளன.

பயிற்று கருவிகள்

   கல்வியமைச்சு உருவாக்கிய பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்று கருவிகளை உருவாக்கக் கல்வி அமைச்சின் சிங்கப்பூர்ப் பாடத் திட்ட மேம்பாட்டுக் கழகம் தொடக்க நிலைக்கும் உயர்நிலைக்கும் தனித்தனியே இரு பாட நூலாக்கக் குழுக்களை1983 இல் உருவாக்கியது.  இக் குழுக்கள் தொடக்க நிலை முதல் உயர்நிலை நான்கு வரை பலவகைப் பயிற்று கருவிகளை உருவாக்குகின்றன.  பாடநூல் பயிற்சிநூல், ஆசிரியர் கையேடு, படவில்லைகள், மின்னட்டைகள், பட அட்டைகள், மொழி விளையாட்டு ஒலி நாடா, ஒளி நாடா, ஒளி ஊடுருவித்தாள், ஒலி, ஒளிப் படைப்பு, உரையாடல், கட்டுரைப் படங்கள், பெரிய புத்தகங்கள் எனப் பல்வேறு வகையான பயிற்று கருவிகளைத் தமிழ்க்கெனப் படைத்தளித்த பெருமை சிங்கப்பூருக்கு உண்டு. உலகின் வேறு எங்கும் இல்லாத முயற்சி என இதனைப் பாராட்டடலாம்.  1994 முதல் புதிய பாடத் திட்டத்திற்கேற்பப் பயிற்று கருவிகள் உருவாக்கப்படுகின்றன. ஒலித்தட்டு வழிக் கேட்டல், கருத்தறிதல் பாடங்கள் இப்போது தரப்படுகின்றன.  சிங்கப்பூர்ப் பாடத் திட்ட மேம்பாட்டுக் கழகம் கலைக்கப் பட்டபின் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத் திட்ட வரைவுப் பிரிவு பயிற்று கருவிகள் உருவாக்கும் பணியைச் சிறப்பாகச் செய்கிறது.  கல்வி அமைச்சின் தொழில் நுட்பப் பிரிவு தமிழ்க் கல்விக்கெனக் கணினி சார்ந்த கல்வி மென்பொருள் பலவற்றைத் தயாரித்துத் தருகிறது.  ‘நம் நாடி’ என்னும் கணினிசார் இதழ் ஒன்றையும் நடத்தி மாணவர் அறிவையும் எழுத்தாற்றலையும் பெருக்குகிறது.

தேர்வு

   தமிழ்ப் பாடத்தின் தேர்வு மதிப்பீடு நடவடிக்கைகளைக் கல்வியமைச்சின் தேர்வுப் பிரிவு நடத்தி வந்தது. மாணவரின் மொழித்திறன் தேர்ச்சியை மதிப்பிட்டறியும் முறையே முதன்மை பெறுகிறது. பாடப் பொருளறிவைச் சோதித்தறியும்; முயற்சியில்லை. படித்தல்,பேசுதல், கருத்தறிதல், கட்டுரை எழுதுதல், மொழிப் பயிற்சி ஆகியவற்றில் மாணவர் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டறிவதற்காகவே தேர்வு இருக்கிறது. இப்போது தேர்வு நடத்துவதற்குத் தனி வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்பாகவே இப்போது தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சித் திறன் கணிப்பும் அடிக்கடி செய்யப்படுகிறது. தேர்வுத்தாள் தயாரித்தல், திருத்துதல் ஆகியவற்றிற்கான பயிலரங்குகளும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது இந்த வாரிய அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன.

அறநெறிக்கல்வி

தொடக்கப்பள்ளி நிலையில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை அறநெறிக்கல்வி எனும் பாடம் மட்டும் தமிழ் மொழியில் தமிழாசிரியர்களால் நடப்படுகிறது. இதற்கெனப் பாட நூல்கள், பல்வகைப் பயிற்றுக் கருவிகளை உருவாக்கச் சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் நற்குடி மக்கள்;; எனும் பாடநூலாக்கக் குழுவை உருவாக்கியது. இப்பாடத்திற்குத் தேர்வு இல்லை. இதற்கும் பல்வகைப் பயிற்று கருவிகள் உள்ளன. கல்வியமைச்சே இப்பயிற்று கருவிகள் உருவாக்குவதில் இப்போது ஈடுபடுகிறது. சிங்கப்பூர் தொடர்பான கருத்துகள், பழக்கவழக்கங்கள் இக்கருவிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழில் இவற்றை அறிய இவை உதவுகின்றன.

கல்வியமைச்சு

   கல்வியமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவு மூத்த தமிழாசிரியர் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவருக்குப் பேச்சுப் போட்டி,விவாதப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றை ஆண்டுதோறும் நடத்துகிறது. ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகளும் நடத்துகிறது.பயிற்று கருவிகள் களஞ்சியம் ஒன்றும் உருவாக்கியுள்ளது. ஆண்டுதொறும் தமிழாசிரியர் ஒரு சிலரைத் தமிழகத்தில் இளங்கலை(தமிழ்) பட்டப் படிப்புப் பெற அமைச்சு அனுப்பி வருகிறது. தமிழ் முதுகலை (எம்.ஏ) படிக்கவும் தமிழகத்திற்கு அனுப்புகிறது. இந்தப் பிரிவு தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் தொடர்பான பயிலரங்குகள், பகிர்வு அரங்குகள், கருத்தரங்குகள் ஆண்டுதொறும் நடத்தி வருகிறது. இப்போது தமிழ் மாணவர்களுக்கு எழுத்தாற்றல் போட்டியும் நடத்துகிறது

பல்கலைக்கழக நிலை

   சிங்கப்பூரில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும்,  தமிழ்க் கல்வி பயிற்றும் பணியில் உள்ளன.முன்னையதைச் சார்ந்த, தேசியக் கல்விக் கழகத்தில் தமிழ்ப் பிரிவுள்ளது. இப்பிரிவின் முதன்மைப் பணி ஆண்டுதொறும் தமிழாசிரியர்களை உருவாக்குவதும், பணியில் இருக்கிற தமிழாசிரியர்களின் மொழித்திறத்தையும் கற்பித்தல் முறைகளையும் மேம்படுத்துவதும் ஆகும். இங்கு ஈராண்டுப் பட்டப்படிப்பில் மாணவர்கள் பயில்கிறார்கள். ஆசிரியர் மூவர் இருக்கிறார்கள். இப்பிரிவு மொழி, இலக்கியம் கற்பித்தல் முறை ஆகியவற்றில் ஆய்வு நடத்துகின்றது. உயர்நிலை மாணவர் கட்டுரை எழுதுவதில் எதிர்நோக்கும் மொழியியல் இடர்ப்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஒருவர், கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். வகுப்பறை வினா- விடை தொடர்பாகவும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் முனைவர் (டாக்டர்) பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பள்ளி சார்ந்த பலவகை ஆய்வுகள் மேற்கொள்ளவும் இப்பிரிவு வழிவகுத்துள்ளது. மாணவர்களின் உச்சரிப்புத்திறன் மேம்படுத்த உதவும் ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்னும் நூல் ஒன்றும் பயிற்று கருவித் தொகுப்பு ஒன்றும் தமிழ் வரிவடிவத்தைக் கற்பிக்கக் கையேடு ஒன்றும் வாசிப்புத் திறனைக் கற்பிக்கப் பல ஒளி நாடாக்களும் இப்பிரிவு உருவாக்கி வெளியிட்டுள்ளது. கற்பித்தல் தொடர்பாகப் பல கருத்தரங்குகளும் நடத்துகிறது. தமிழ்க் கணினிப் பயிற்சியும் இங்கு ஆசிரியர்களுக்குத் தரப்பெறுகிறது. இதுவரை பல தமிழாசிரியர்கள் இப்பயிற்சி பெற்றுள்ளனர். தமிழ்க் கணினியில் பயன்படுத்தப் புதிய விசைப்பலகை ஒன்று உருவாக்கியதுடன் அதனை எளிதில் கற்கவுதவும் தற்பயிற்சிச் சாதனம் ஒன்றையும் தயாரித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூரில் இவ்விசைப்பலகை பயன்பாட்டில் உள்ளது. பாடத்திட்டம், பயிற்றுகருவிகள் தேர்வு தொடர்பான பணியில் கல்வி அமைச்சிற்கு உறுதுணையாக இப்பிரிவு இருந்து வருகிறது. தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், தொடர்பான நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. இப்பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் அனைத்துலகக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கட்டுரைகள் படைத்து வருகின்றனர். தமிழ்க்கல்வி பற்றிய ஆய்வுத்திட்டங்கள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளனர்.

    சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 1999 முதல் தெற்கு ஆசிய இயல் பிரிவு, மொழிகள் படிப்ப நிலையம் ஆகியவற்றின் சார்பில் தமிழ் இயல், தமிழ்மொழிப்பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. தெற்கு ஆசிய இயல் பிரிவு தமிழியல்-1, தமிழியல்-2, என இரண்டு பாடங்களைப் பல்கலைக் கழகத்தில் அந்தந்தத் துறையில் படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் நடத்துகிறது.  A நிலையில் அதாவது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் தமிழ்த் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுக்கலாம். தமிழியல் 1 பாடத்தில் மொழியியல், இலக்கிய, பண்பாட்டுக் கூறுகள் நோக்கில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத் திறனாய்வும் கவிதை நலம் பாராட்டலும் இப்பாடத்தில் உள்ளன. தமிழியல் 2 பாடத்தில் தமிழ் இலக்கியம்;, மொழிபெயர்ப்பு, தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு ஆகிய கூறுகள் உள்ளன. மொழிகள் படிப்பு நிலையத்தில் தமிழரல்லாத சீன,மலாய், இந்திய வெளிநாட்டு மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு சூழல்களில் பேசவும், ஓரளவு எழுதவும் பழகவும் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. இந்த இரு பாடங்களையும் பல்கலைக்கழகத்தில் பல்துறையில் படிக்கும் மாணவர்கள் விருப்பப்பாடமாக எடுத்துப் பயிலலாம். இதுவரை ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட தமிழரல்லாத மாணவர்கள் தமிழ் மொழி பயின்றுள்ளனர். தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்குச் சுற்றுப் பயணமும் மேற்கொள்ளுகின்றனர்.  

    மேலும்,  தமிழ் சார்ந்த  துறைகளில் தெற்கு ஆசியப் பாடப்பிரிவின் கீழ் முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூர் இலக்கியம் பற்றி ஒரு கருத்தரங்கும், அனைத்துலக அரங்கில் தமிழ் என்னும் தலைப்பில் இரு மாநாடுகளும் சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கு ஒன்றும் நடைபெற்றுள்ளன. யுனிசிம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ,இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்ட (BA ) வகுப்புப் பயில்வதற்கான வாய்ப்பு 2006 சனவரி முதல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்காகச் சிங்கப்பூர்த் தமிழ்ச்சமுதாயமும், சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கமும் பெருமுயற்சி செய்துள்ளன. இதனால்  தமிழாசிரியர்களும், ஏனையோரும் தமிழ் மொழி இலக்கியத் தேர்ச்சி பெற்றுப் பட்டதாரிகளாக வாய்ப்புள்ளது. இது சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வியில் ஒரு சிறந்த சாதனை என்று கூறலாம்.

மக்கள் தொடர்புச் சாதனங்கள்

   சிங்கப்பூரில் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பெற்ற ‘தமிழ் முரசு’ நாளிதழ் வாரந்தொறும் மாணவர் முரசு, இளையர் முரசு என ஒரு பகுதியைத் தொடங்கிப் பல ஆண்டுகளாகத் தமிழ் மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்த்து வருகிறது. மேலும் தமிழ் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது என ஒன்றை வழங்கும் நிகழ்ச்சியை அண்மையில் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருகின்றது.  தேர்வுகளில் முதன்மைத் .தகுதி பெறும் மாவர்களைப் பேட்டி கண்டு ஊக்கம் ஊட்டுகின்றது.  சிங்கப்பூரில் 24 மணிநேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் 96.8 எனும் வானொலியும் தமிழ்மாணவர்களுக்குகேற்பப் பல நிகழ்ச்சிகைள ஒலிபரப்புகிறது. நாள்தொறும் 4-5 மணிநேரம் ஒளிபரப்பும் வசந்தம் செண்ட்ரல் தமிழ்த் தொலைக்காட்சிப் பகுதியும தமிழ்க்கல்வி வளரத் தேவையான பல நிகழ்சசிகளை மாணவர்களைக் கொண்டும் ஆசிரியர்களைக் கொண்டும் ஒளிபரப்பி வருகிறது. சமுக அமைப்புகள் துணையால் நடைபெறும் பேச்சுப் போட்டிகளை ஒலி , ஒளி பரப்பியும் மக்கள் சாதனப்பிரிவகள் உதவுகின்றன.

கணினி வழித் தமிழ்க்கல்வி

   தொடக்கப்பள்ளி நிலையிலேயே தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க்கணினியில் தட்டச்சுச் செய்யப் பயிற்சி தரப்படுகின்றது. மேலும் தமிழ்க்கல்வி எனும் தொடக்க நிலையில் தமிழ் பயிற்றும் பல் ஊடக மென்பொருள் வாயிலாகத் தொடக்கப்பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் பலவிதத்தமிழ் மென்பொருள்கள் தமிழ் பயிற்றத் துணையாகப் பயன்படுத்தப்பெறுகின்றன. தமிழாசிரியர்கள் பலர் குழுக்களாக இணைந்து தொடக்கநிலை உயர்நிலை புகுமுக வகுப்பு நிலை ஆகியவற்றிற்குக்  தனித் தனிப்பாடங்கள் தயாரித்துக் கணினி இணைப்புக் கல்வி வாயிலாகத் தமிழ் பயிற்றி வருகின்றனர். மாணவர்களுக்குத் தமிழில் அகப்பக்கம் தயாரித்தல்,  மின்னஞ்சல் அனுப்புதல், குறுஞ்செய்தி அனுப்புதல் ஆகியவற்றிற்கும் பயிற்சி தரப்படுகிறது.  இணையத்தின் வழி தமிழ்ப்படைப்புகள் தயாரிக்கும் முயற்சியிலும் தமிழ் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பவர்பாயின்ட்()  மூலம் தமிழ்க் கருத்தரஙகுகளில் கட்டுரைகள் படைக்கும் திறனும் தமிழ் மாணவர்கள் பெறுகிறார்கள். இணைய இதழ்களைப் படிப்பதிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.  உலகிலேயே சிங்கப்பூரில் தான் தமிழ்க்கல்வியில் கணினியும் இணையமும் அடங்கிய தகவல் தொழில் நுட்பம் அதிகமாகப் பயன்படுத்துப்பெறுகின்றது என்பது அறிஞர்கள் கணிப்பு . பல்கலைக்கழக நிலயிலும் தமிழ் கணினி, இணையத்தில் தமிழ் உலாவரச் சிங்கப்பூர்தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர். கணினிவழித் தமிழ் வளர்க்கச் சிங்கப்பூரில் பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்

   சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் தமிழ்க் கல்வி வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ‘ஆசிரியர் குரல்’ என்னும் இதழும் வெளியிடப்படுகிறது. அதில் தமிழ்க்கல்வி தொடர்பான கட்டுரைகள் பல இடம்பெறும்.  இது, 1992 இல் முதல் உலகத்தமிழாசிரியர் மாநாட்டினைத் தொடங்கி நடத்தியது.  மற்ற நாடுகளில்- மலேசியா , இந்தியா , மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இம் மாநாடு நடத்தவும் ஏற்பாடு செய்தது.  சிங்கப்பூரில் ஐந்தாம் மாநாடும் ஒன்பதாம் நடத்தியது, இவற்றில் கருத்துப்பரிமாற்றம் நடைபெற வழிவகுத்தது . மேலும் சிங்கப்பூர் மலேசியா தமிழாசிரியர்கள் தம் தமிழறிவையும திறனையும் மேம்படுத்திக் கொள்ளத் தமிழகத்தில் பல பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களை அழைத்துச் செல்கிறது.  சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் நல மேம்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து தமிழ்ப்பாடத் தனி வகுப்புகள் நடத்துகிறது.  கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியன நடத்தித் தமிழ்க் கல்வி மேம்பட வழிவகுக்கிறது.

தமிழ்க்கல்வி மறு ஆய்வுக் குழு

   தொடக்க நிலை முதல் வகுப்பிற்கு வருகிற மாணவர்களின் இல்லங்களில் தமிழ்ப் புழக்கம் 1980இல் 52.2 விழுக்காடு இருந்தது. 2000த்தில் அது 42.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 1980 இல் ஆங்கிலப்புழக்கம் 24.3 விழுக்காடாக இருந்தது. 2000த்தில் அது 35.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ஆங்கிலப் புழக்கம் அதிகரித்துத் தமிழ்ப்புழக்கம் குறையும் நிலை வரவர மிகுதியாகிறது.இதனைக் கருத்தில் கொண்டும் ஏனையகல்வி வல்லுநர்களைக் கொண்டு தமிழ்க் கல்வி மறு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்துத் தமிழ்க் கல்வியின் எல்லாக் கூறுகளையும் மறு ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  அது விரைவில் பணிமுடிக்கும்.

முடிவுரை

    சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக விளங்கும் அதே வேளையில், அரசின் இருமொழிக் கொள்கையால் வலுப்பெற்றுப் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரையிலும் பயிற்றுவிக்கப்படுகிற ஒரு பாடமொழியாகவும் இருக்கிறது.

    இந்த நிலையினை இக்கட்டுரை ஓரளவு சுருக்கமாக எடுத்துக் காட்டியுள்ளது.  தமிழ் மொழிக் கல்விக்கெனப் பயிற்றுக் கருவிகள் பலவற்றை உருவாக்கும் பணியிலும், கணினி வழித் தமிழ் கற்பிக்கும் பணியிலும் தமிழ்க் கல்வி உலகில் சிங்கப்பூர் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.  மொழி கற்பித்தலில் பதிய புதிய முறைகளைக் கண்டறிவதிலும் சிங்கப்பூர் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

          

துணை நூல்கள்

திண்ணப்பன் .சுப. – சிங்கப்பூரில் தமிழ் மொழியும் இலக்கியமும், தேவகோட்டை, தேன் வள்ளியம்மை  பதிப்பகம் 1993

திண்ணப்பன். சுப. – சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி, வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் – நூலில், தமிழ் மாருதம் 1998. மதுரை.

முத்தையா.சி – சிங்கப்பூரில் தமிழ் . 2-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை .. 1994

முத்தையா.சி.- சிங்கப்பூர்ப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தலும், கற்பித்தலோடு தொடர்புடைய பிரச்சினைகளும் – சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரை. . 2004.

மலாயா-சிங்கப்பூர் ஆரம்ப காலக் கதைகளும் நாவல்களும்

பாலபாஸ்கரன் 

நம்மில் பலருக்கு இதுவரை தெரியாத கதை இலக்கிய வரலாறு இது. சரியாக 95 ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் ஒரு பத்திரிகை தோன்றியது. பெயர் பினாங்கு ஞானாச்சாரியன். முதலில் வாரம் இருமுறையாக வந்து நான்கு மாதம் கழித்து தினசரியாக மாறியது. அந்த நான்கு பக்கப் பத்திரிகையை வெளியிட்டவர் சம்சுகனி ராவுத்தர். பத்துக் கையொப்பம் வாங்கி அனுப்புகிறவர்களுக்கு ஒரு பத்திரிகை இனாமாய் தரப்படும் என்ற அறிவிப்பு முதல் பக்கத்திலேயே விடாமல் வந்தது. அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில், ஆங்கில ஏடு உட்பட எந்தப் பத்திரிகையும் வராது. அதனால் கதை கட்டுரை எல்லாமே வாரப் பத்திரிகையில்தான் இடம்பிடிக்கும். பேசும் சினிமா இன்னும் தலைகாட்டவில்லை.

1912 மார்ச் 15ல் உதயமான ஞானாச்சாரியன்தட்டுத்தடுமாறி ஒன்றரை ஆண்டு உயிர்பிழைத்தது. சென்னையிலிருந்து வித்வான் எஸ். எல். மாதவராவ் முதலியார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வந்தார்கள். அவர் நல்ல படிப்பாளி. ஆங்கிலம் தமிழ் அறிந்தவர். நாவல் புனைவதில் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர். அவர் எழுதிய சிவசாமி அல்லது நாட்டுப்புறத்தான் எனும் 64 பக்க நாவலின் நான்காம் பதிப்பு 1922ல் சென்னையில் வந்தது. முதற்பதிப்பின் விவரம் தெரியவில்லை.

மாதவராவ் முதலியார் பத்திரிகை ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் தாம் ஏற்கனவே எழுதி அச்சிடாமல் வைத்திருந்த ஒரு நாவலை ஞானாச்சாரியனில் தொடராய் வெளியிடுவதாக அறிவித்தார். முதல் இதழிலேயே முதல் பக்கத்தில் அந்த அறிவிப்பு இடம்பெற்றது.

இரத்தினமாலை அல்லது காணாமற்போன இராஜகுமாரத்தி

“இஃது எம்மால் புதிதாய் செய்யப்பெற்ற ஓர் அரிய நாவல்! தற்காலத்தில் நாவல்கள் என்று கூறப்படும் கதைகளில் இது வெகு சிறந்ததென்று இதை வாசித்த வித்வான்களால் நற்சாட்சி தரப்பெற்றது. பல கிளைக்கதைகள் ஒன்றாய்ச்சேர்ந்த ஓர் பெருங்கதை. இது வாசிக்க வாசிக்க இன்பம் தரும். இப்புத்தகம் முழுவதும் பல படிப்பினைகள் அடங்கியது. சிறுகச் சிறுகத் தொடர்ச்சியாய் சிறிது தூரம் வெளிப்படுத்துவோம். இதை வாசித்துத் திருப்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர் விலாசம் முதலியவைகளையும் எத்தனை புத்தகம் வேணுமென்பதையும் தெளிவாய் எழுதி எமக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

25, பீச் ஸ்திரீட், பினாங்கு எனும் முகவரி தரப்பட்டுள்ளது. இந்த நாவல் இரண்டு, மூன்று வாரம் வந்தது. பிறகு நின்றுவிட்டது. ஆசிரியரை மாற்றி விட்டார்கள். நம்முடைய முதல் தமிழ் நாவலின் கதை இப்படித்தான் முளையிலேயே கருகிப்போனது. இதை நம் முதல் தமிழ் நாவல் எனக் கொள்ள முடியுமா என்றும் சிலர் வினவலாம்!

நாவலை அறிமுகப்படுத்திய ஞானாச்சாரியன் புரிந்த வேறு சில முயற்சிகள் மிக முக்கியமானவை. 1913 ஜுன் 24ல்கனகாம்புஜத்திற்கும் கனகரத்தினத்திற்கும் நடந்த சம்பாஷணை எனும் உரையாடல் இடம்பெற்றது. எழுதியவர் பாஸ்கரன். இது ஒரு கற்பனைச் சம்பவம். ஆனாலும் கிட்டத்தட்ட ஒரு கதையைப் போன்றது. இத்தகைய உரையாடல்கள் அந்தக் காலத்து இதழ்களில் நிறைய வந்தன.

1913 செப்டம்பர் 2ல் ‘ஓர் கட்டுக் கதை’ என்று தலைப்பிட்டுமகோஷதன் மனைவியைத் தேர்ந்தெடுத்தல் என்ற கதை வெளியானது. பௌத்தர்களின் ஜாதகக் கதைகளை ஒட்டியது என்ற குறிப்பும், மானசி பங்காளிப் பத்திரிகையின் ஆனி மாச சஞ்சிகையிலிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலும் இருந்தன. இந்தக் கதையை எழுதியவர் பாபு வியோமகேச முஸ்தாபி. மகோஷத ராஜகுமாரனுக்கு வயது பதினாறுதான்…. எனக் கதை ஆரம்பிக்கிறது.

1913 செப்டம்பர் 10ல் தாராபாய் கதை பிரசுரமானது. தொடர் கதை என்று போடாமலேயே சில வாரங்களுக்கு இது நீடித்தது. எழுதியவர் MVS என்று ஆங்கிலத்தில் இருந்தது. எம். வி. சுந்தரேச ஐயர் என்பவரே இவர். இதே கதையைதாராபாய் (A Tale) என்ற தலைப்பில் இவர் 1917ஆம் ஆண்டில் ஈப்போவில் ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டார். 22 பக்கக் கதை அது.

தாராபாய் ஒரு புகழ்பெற்ற கதையாகத் தெரிகிறது. 1903ல் தமிழ்நாட்டின் சக்கரவர்த்தினி சஞ்சிகையில் மாணிக்ககசாமி முதலியார் என்பவர் தாராபாய் என்ற பெயரிலேயே ஒரு தொடர்கதையைப் படைத்தார். (சக்கரவர்த்தினி மகாகவி பாரதியார் நடத்திய பத்திரிக்கை அல்ல. பாரதியாரின் சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெளியானது.) எம். வி. சுந்தரேச ஐயர் பிரிட்டிஷ் மலாயா பூகோள புஸ்தகம் என்ற 173 பக்கப் பாட நூலையும் 1926ல் கோலாலம்பூரில் வெளியிட்டார்.

1913 அக்டோபர் 29ல் மாலதி ‘ஒரு அருமையான நாவல், முன் தொடர்ச்சி’ என்று வந்தது. முந்தைய இதழில் இது தொடங்கியிருக¢க வேண்டும். அந்த இதழ் காணக் கிடைக்கவில்லை. இந்த நாவல் முறையாக வந்ததாகத் தெரியவில்லை. சில இதழ்கள் கழித்து இது நின்றுவிட்டது. எழுதியவர் பெயரில்லை.

1915ஆம் ஆண்டில்தான் வ. வே. சு. ஐயர் இலக்கியத் தரம் வாய்ந்த முதல் தமிழ்ச் சிறுகதை என்று கருதப்படும்குளத்தங்கரை அரசமரம் கதையை விவேகபோதினிசஞ்சிகையில் இரண்டு பாகங்களாக எழுதினார். அவர் புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்ததால் மனைவி சு. பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அக்கதை பிரசுரமானது. அதன் பிறகு 1917ல் வ. வே. சு. ஐயர் மங்கையர்க்கரசியின்காதல் முதலிய கதைகள் தொகுப்பைப் புதுச்சேரியில் தாம் நிறுவிய கம்ப நிலையம் சார்பில் வெளியிட்டார். ஐந்து கதைகள் அதில் இடம்பெற்றன. 1925ல் ஐயர் காலமானார். மேலும் மூன்று கதைகளைச் சேர்த்துமங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற அதே தலைப்பில் மற்றொரு தொகுப்பு 1927ல் கொண்டுவரப்பட்டது.

கதைகளைவிட ஐயர் எழுதிய முன்னுரை வரலாற்றுச் சிறப்பபானது. ‘ரீதி புதிது’ என்று, அவர் தாம் எழுதிய புதிய ரகச் சிறுகதையை வருணித்த பாங்கு அழகானது, அர்த்தமானது.

1912ல் புனைகதைத் துறைக்கு வித்வான் மாதவராவ் முதலியார் பினாங்கில் போட்ட பிள்ளையார் சுழி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

இஸ்லாமிய சாயலுடன் தொடங்கிய பினாங்கு ஞானாச்சாரியன் பதினாறு மாதம் கழித்து ஆர்வமும் துடிப்பும் மிக்க என். ஆர். பார்த்தா என்பவரின் கைக்கு மாறியது. அவர் பத்திரிகையை சுதேசமித்திரன் அளவில் மாற்றி இந்திய தேசிய உணர்வுகளுக்கு இடங்கொடுத்து, உள்ளூர் விவகாரங்களை முடுக்கிவிட்டார். ஆங்கிலத்தில் தலையங்கம் எழுதினார். அரசாங்கத்துடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டார்.

இருப்பினும் கைமுதல் இன்றி எத்தனை காலம் பத்திரிகையை நடத்த முடியும்? ஐந்து மாதத்தில் பத்திரிகை நின்றது. அச்சகத்தை ஏலத்தில் எடுத்த மற்றொரு தரப்பினர் ஞானாச்சாரியன் பெயரைஜனோபகாரி என்று மாற்றி 1914 பிப்ரவரி மாதத்திலிருந்து பத்திரிகையை நடத்தினர். அதுவும் ஓராண்டில் நின்றது.

என். ஆர். பார்த்தாவின் முழுப்பெயர் நிர்மலானந்த ராஜா பார்த்தசாரதி நாயுடு. தஞ்சாவூர் பகுதியிலிருந்து புறப்பட்டுப் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் வழியில் 1905ம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர்களின் அவல நிலையைக் கண்டு அவர்களுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டு ஒரு கல்வி நிலையத்தை நிறுவினார். 1907ல் The Orient என்ற பெயரில் ஒரு காசு விலையில் நான்கு பக்க ஆங்கில தினசரியும்,விஜயன் என்ற பெயரில் தமிழ்ப் பத்திரிகையும் நடத்தினார். எதுவும் நிலையாக நீடிக்கவில்லை. அதன்பிறகே அவர் சிங்கப்பூரைவிட்டுப் பினாங்கு சென்றார்.

ஆரம்ப காலத்தில் நூல்கள் தனியாக, சொந்தமாக அச்சடிக்கப்பட்டாலும் சிறுகதை பத்திரிகைகளையே சார்ந்து வளர்ந்தது எனலாம்.

(மலாயா – சிங்கப்பூர் வட்டாரத்தின் முதல் நூல் சிங்கப்பூர் சித்திரகவி நாவலர் வெ. நாராயணசாமி நாயகர் புனைந்தநன்னெறித் தங்கம் பாட்டு என்பதாகும். இங்குத் தமிழ் அச்சகம் இல்லாத காரணத்தால் 1868ம் ஆண்டில் அந்த 27 பக்கக் கவிதை நூல் சென்னை வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடத்தில் அடிக்கப்பட்டது. நாராயணசாமி நாயகர் இசைப்புலவர். சித்திரகவிகள் பாடுவதில் வல்லவர். 1866 மே 28ல் தத்துவபோதினி இதழில் இருந்தும் பலனென்ன ஐயையோ இறந்தும் பலனென்ன என்று தொடங்கும் அவருடைய இருபது வரிப் பாடல் பிரசுரமானதை முரசு நெடுமாறன் (மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் 1997) குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி நாயகரின் தந்தை வெள்ளையப்பு நாயகரும் ஒரு புலவர்.)

பினாங்கிலிருந்து சத்தியவான் என்று ஒரு பத்திரிகை 1919 ஏப்ரல் 7ல் உதயமானது. வாரத்திற்கு இரண்டு இதழ்கள். நான்கு பக்க ஏடு. சமயச் சொற்பொழிவு செய்யத் தமிழ்நாட்டிலிருந்து வந்த பாலகந்தகசிவம் என்பவர் இங்கேயே தங்கிச் சொந்தமாக நடத்திய பத்திரிகை அது. 1918ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்தபாதுகாவலன் என்ற மற்றொரு பினாங்கு பத்திரிகையுடன் சிவம் மற்போர் நடத்தாத குறைதான். இரண்டுபத்திரிகைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டு விரைவிலேயே மடிந்து போயின.

இதில் நமக்கு வேண்டிய தகவல் என்னவெனில், சத்தியவான், 1919 மே 26லிருந்து வஸந்தசேனா எனும் ஓர் இனிய செந்தமிழ் நாவல் தொடரை வெளியிட்டது. இதை எழுதியவர் கே. லெட்சுமணப் பிள்ளை. நாவலைப் பிரசுரிப்பதில் ஒழுங்கு தென்படவில்லை. நாவல் முற்றுப்பெறாமலே நின்றுவிட்டது.

சர்வஜனமித்திரன் 1920 ஜுன் 2ல் பினாங்கில் தோன்றிய மற்றொரு பத்திரிகை. அதனை அச்சடித்து வெளியிட்டவர் ஈ. ஏ. மரைக்கான். இதில் புனைகதை எதுவும் தென்படவில்லை என்றாலும் ‘கடிதம்’ பகுதியில் மா. மலையப்பன் நாயகனை வஞ்சித்த நாரி எனும் தலைப்பில் ஒரு தொடர் எழுதினார். பத்மாபுரி எனும் நகரில் சம்பவம் நடக்கிறது. அறுபது வயது கிழவனை 19 வயது குமரி ஏமாற்றிய கதை அது. சிறுகதை போலத் தோன்றினாலும் சிறுகதைக்குரிய விறுவிறுப்பான கதைப்பின்னலோ அழுத்தமான கதைமாந்தர் விளக்கமோ கிடையாது.

இதன்பிறகுதான் சிங்கப்பூரின் பொதுஜனமித்திரன் ஏட்டில் சில கதைகளைப் பார்க்க முடிகிறது. 1923 செப்டம்பர் 15 முதல் 1925 ஏப்ரல் 4 வரை சுமார் இருபது மாதம் நடைபெற்ற ஒரு முக்கியப் பத்திரிகை அது. தமிழ் நேசனைஒரு கட்டத்தில் சீனர்கள் வாங்கிக் கொஞ்ச காலம் நடத்தியது வரலாறு. ஆனால் பொதுஜனமித்திரனை ஆரம்பத்தில் சீனர்களின் Jitts & Co நடத்திக் கடைசிக் கட்டத்தில் தமிழர்களிடம் ஒப்படைத்தது.

அச்சுத்துறையில் கொஞ்சம் வசதியான ஒரு கங்காணியாக (foreman) இருந்த எம். பி. கிருஷ்ணசாமி நாயுடு என்பவர் சிங்கப்பூரில் அப்போது தமிழ்ப் பத்திரிகை இல்லாத குறையைப் போக்க, நட்பின் காரணமாக சீனர்களை அணுகி உருவாக்கிய பத்திரிகைதான்பொதுஜனமித்திரன். வார இருமுறை ஏடு. எட்டுப் பக்கம். ஐந்து காசு விலை. நிறைய விளம்பரங்கள் இடம்பெற்றன. ஆசிரியர், துணையாசிரியர், அச்சுக்கோப்பாளர் பற்றாக்குறை. இருபது மாதத்தில் நான்கு ஆசிரியர்கள் மாறி மாறி வந்தனர். முதலில் வந்த ஜே. பெர்னாண்டஸ் கடைசியில் பொறுப்பேற்க வந்தபோது பத்திரிகையை மூடவேண்டியதாயிற்று.

முதல் இதழிலேயே (1923 செப்டம்பர் 15) காணாமற்போன ஞானவல்லி எனும் துப்பறியும் தொடர்கதைஆரம்பமாகியது. கே. எக்ஸ் எழுதிய அக்கதை நான்கு இதழ்களில் முடிவுற்றது.

பின்னர் 1923 செப்டம்பர் 29ல் ஊதாரி ‘ஓர் துப்பறியும் இனிய தமிழ் நாவல்’ தொடராக ஆரம்பித்தது. இதை எழுதியவரும் கே. எக்ஸ். சில வாரங்களே இது நீடித்தது.

1924 மே 28ல் ‘நமது கதைப்பக்கம்’ என்ற பொதுத்தலைப்பில்பாவத்தின் சம்பளம் மரணம் எனும் கதை வெளியானது. சிறுகதை என்று இதற்குக் குறிப்பு இல்லையென்றாலும் கட்டுக்கோப்பான ஒரு சிறுகதையாக இதனை நிச்சயம் கருத முடியும். நீளம் அதிகமில்லை. சுமார் 400 சொற்கள். பத்மாவதி ஒரு சீர்திருத்தப் பெண். பெற்றோர் அதிக சுதந்தரம் கொடுக்கின்றனர். கல்லூரிப் படிப்பின்போது ஒருவனைக் காதலிக்கிறாள். முற்போக்குச் சிந்தனையில் கற்பைப் பறிகொடுக்கிறாள். காதல் கைகூடவில்லை. பெற்றோர் ஏற்பாடு செய்து அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி வைக்கின்றனர். கார்த்திகேய முதலியார் கணவராக வருகிறார். கற்பை இழந்துவிட்டுக் கலியாணம் புரிந்துகொண்டது தவறில்லையா, இது கணவருக்குச் செய்த துரோகம் இல்லையா என்ற சிந்தனையில் குழம்பி நிற்கிறாள். மனப்போராட்டம் முற்றுகிறது. கடைசியாகத் தற்கொலையில் பத்மாவதியின் வாழ்க்கை முடிகிறது. வளவளவென்று ஓட்டாமல் கதைநாயகியின் உள்ளப் போராட்டத்தை மட்டுமே மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது.

‘பத்மாவதி படுத்திருந்தவள் திடீரென்று விழித்துப் பார்த்தாள். அவள் மனம் ஒருவகைக் கலக்கமடைந்தது.’ என நட்ட நடுவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.

கதையின் முடிவு: “படுக்கையிலிருந்து ஒரு துண்டுக் கடிதத்தை எடுத்து வாசித்தார். அதில் ‘ நான் செய்த பாவத்திற்கு என்னை ஈடுகொடுத்துவிட்டேன். நீங்கள் வருந்தாமல் வேறு கலியாணஞ் செய்துகொண்டு இன்புற்றிருங்கள்’ ” என்று எழுதப்பட்டிருந்தது.

திடுதிப்பென்று கதை முடிவதைக் காணலாம். அநாவசியமான வார்த்தையோ புலம்பலோ இல்லை.

அந்தக் காலக்கட்டத்தில் அரும்பிய சீர்திருத்தப் போக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பதை எழுத்தாளர் தெளிவாகச் சொல்கிறார். எழுதியவர் பெயர் இல்லை. எனினும் பத்திரிகையின் மூன்றாவது ஆசிரியராக அப்போது பணியாற்றிய டி. என். நடேச முதலியார் இதனை எழுதியிருக்கலாம். இவர் 1919ல் விவேகபுர வேதியர்எனும் நாவலை சென்னையில் வெளியிட்டவர். ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய The Vicar of Wakefield கதையின் தழுவல் அது. கோலாலம்பூரில் கி. நரசிம்ம ஐயங்கார் நடத்திய தமிழகம் சஞ்சிகையில் துணையாசிரியராகவும் இருந்திருக்கிறார் நடேச முதலியார்.

தமிழகம் சஞ்சிகையை நிறுவுவதில் ஐயங்காருக்கு அரும்பாடுபட்டு உதவியதாகக் கூறிக்கொள்ளும் உடுவில் வேதாரணியன் வீரகுமார் சிங்கன் என்பவர் நடேச முதலியாருக்கு முன்னதாக பொதுஜனமித்திரனின் இரண்டாவது ஆசிரியராகப் பணியாற்றி விலகிக் கொண்டவர்.

1924 மே 31ல் ‘நமது கதைப்பக்கம்’ பகுதியில் இடம்பெற்ற ஒரு தொடர்கதை பரோபகார அர்த்தம் இதம் சரீரம்என்பதாகும். இதற்கும் எழுதியவர் பேரில்லை. நடேச முதலியாராக இருக்கலாம். பிரெஞ்ச் எழுத்தாளர் Victor Hugo 1862ல் எழுதிய உலகப் புகழ்பெற்ற Les Miserablesநாவலின் தழுவல்தான் அது. ஏழை படும் பாடு என்ற பெயரில் சுத்தானந்த பாரதியார் இதனைத் தமிழில் மொழிபெயர்த்து பர்மா சஞ்சிகை ஒன்றில் தொடராகப் படைத்தார். அது பிறகு நாவலாகவும் நூலுருப்பெற்றது.ஏழை படும் பாடு 1950ல் தமிழில் திரைப்படமாகவும் வந்தது.

1924 ஜுலை 19ல் ‘நமது கதைப்பக்கம்’ பகுதியில்அம்பலவாணன் எனும் தலைப்பில் ஒரு சமூகத் தொடர்கதை ஆரம்பமாகியது. உரிமை ஆசிரியருக்கேஎன்று போடப்பட்டிருந்தது. எழுதியவர் பெயர் இல்லையாயினும் அவர் நடேச முதலியார் என்பதில் ஐயமில்லை. அவருக்குக் கைவந்த ஒரு கலைதானே இது. நடேச முதலியார் 1924ஆம் ஆண்டில் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

அக்காலத்தில் தோன்றிய கிறித்துவ இதழ்களும் கதையைப் பயன்படுத்தியுள்ளன என்பது ஒரு சுவையான தகவல். உதய தாரகை சிங்கப்பூரில் 1923 டிசம்பர் 8ல் உதித்த ரோமன் கத்தோலிக்க மாத சஞ்சிகை. முதல் இதழில் பாலசாமியின் பணப்பை எனும் சிறுகதை கத்தோலிக்கச் சிறுவனின் நேர்மையைச் சித்திரிக்கிறது.

1924 ஜனவரி இதழில் சுமத்ரா தீவின் சூரன் அல்லது ராஜசேகரன் எனும் அருமையான தமிழ் நாவலை ‘எதிர்பாருங்கள்’ என்று அறிவித்தனர். ‘இதில் மிக்க ஆச்சரியமும் நெஞ்சு திடுக்கிடக்கூடியனவும், ஆதி முதல் அந்தம் வரையில் மனதைக் கவரக் கூடியவைகளுமான சம்பவங்கள் நிறைந்துள்ளன. பலவித நடவடிக்கைகளையுடைய பாத்திரங்களுமிருப்பதால், அநேக நீதிகளும் புத்திமதிகளும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.’ என்ற பீடிகையுடன் அது ஒரு தொடராக வந்தது.

1928 ஏப்ரல் மாதம் சிங்கப்பூரிலிருந்து வந்த மலேயா கிறீஸ்த்துவ மித்திரன் மாத சஞ்சிகையும் முதல் இதழிலிருந்தே ஒரு தொடர்கதையை ஆரம்பித்தது.ஞானபூஷணம் அல்லது தாய்சொற் தவிரா தையாநிதிஅதன் தலைப்பு. ‘இச்சரித்திரம் ஞானபூஷணத்தின் பக்தியையும் நற்புத்தியையும் காட்டுகின்றன. பெரியோர் தங்கள் பிள்ளைகளை அதன் பால்யத்தில் பெரியோர் நிந்தனை, சோரம், அசத்தியம், தற்புகழ்ச்சி, கடவுள் துரோகம் என்ற பாவக் காரியங்கலில் பிரவேசிக்கா வண்ணம் நற்புத்திப் புகட்ட வேண்டும்’ என முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

முன்னேற்றம் வார இதழ் 1929 ஜனவரி 10ல் வி. எஸ். நாராயணசாமியை ஆசிரியராகவும் கோ. சாரங்கபாணியைத் துணையாசிரியராகவும் கொண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. இருபது பக்க இதழ். விலை ஐந்து காசு. வார இதழுக்கு வேண்டிய எல்லா அம்சங்களையும் தாங்கி முழுக்க முழுக்க சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து செல்வாக்குடன் விளங்கிய சஞ்சிகை அது. பலர் அதில் எழுதினர். அ. சி. சுப்பையா தமிழ் வரிவடிவ ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடரை 1933ல் முன்னேற்றத்தில்தான் முதலில் எழுதினார். பின்னர் அத்தொடர் ஈரோட்டில் 1935ல் பெரியார் ஆதரவுடன் நூலாக அச்சிடப்பட்டது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு அ. சி. சுப்பையாவின் நூலும் ஒரு தூண்டுகோல் என்பது உண்மை.

1929 டிசம்பர் 21, 22ல் ஈப்போவில் நடைபெற்ற அகில பிரிட்டிஷ் மலாயா தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று சிங்கப்பூர் வந்த பெரியார் ஈ. வே. ரா, ‘நான் இந்நாட்டிற்கு வந்து போனதற்கு ஓர் ஞாபகம் இருக்க வேண்டுமேயானால் முன்னேற்றம் சிரஞ்சீவியாய் வாழவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். 1955 வரை முன்னேற்றம் நடைபெற்றதாக ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

1929 நவம்பரிலிருந்து அ.லெட்சுமணன் ‎புனைந்த சாந்திபுரக்கொலை எனும் தொடர்கதையை முன்னேற்றம் பிரசுரித்தது. பின்னர்1931ல் அது நூலாகவும் வெளிவந்தது.

இவ்வேளையில், தமிழ் நேசன், தமிழ் முரசுஆகியவற்றின் ஆரம்பக் கதைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

1924 செப்டம¢பர் 10ல் தமிழ் நேசன் வார ஏடாகத் தொடங்கிய காலத்தில் சிறுகதைகளும் நாவல்களும் தமிழ்நாட்டில் ஏராளமாகக் குவிந்தன. ஆனால் நேசனை ஆரம்பித்து நடத்திய கி. நரசிம்ம ஐயங்கார் அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்¢லை. எட்டு ஆண்டுகள் கழித்து 1932 மே மாதம் ‘தமிழ்நேசன் கதைப்பகுதி’ என்று ஒரு பகுதி ஆரம்பமானது. அதில்தான் முதல் தடவையாக கோ. பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய தோட்டக் கொலை மர்மம் அல்லது பத்துமலைக் கள்வன் என்ற தொடர்கதை வந்தது. 1932 கடைசியிலேயே அந்தத் தொடர்கதை 87 பக்க நூலாகவும் வந்துவிட்டது.

தமிழ்நேசனின் முதல் சிறுகதை 1933 ஆகஸ்ட் 2ல் வெளியானது. ‘ஒரு வேடிக்கைக் கதை ’ என்று சொல்லி, ஆசிரியர் நரசிம்ம ஐயங்காரே கிராமபோன் சந்தியாவந்தனம் அல்லது சுருக்கு வழி ஜெபம் எனும் கதையை வெளியிட்டார். ‘Prayer Made Easy – A Humorous Story by K. N.’ என்று ஆங்கிலத்திலும் துணைத் தலைப்பு கொடுக்கப்பட்டது. MAHA எனப்படும் மலாயாத் தோட்ட விவசாயக் கண்காட்சியை ஒட்டி தமிழ்நேசன் வெளியிட்ட சிறப்பு இதழில் அக்கதை இடம்பெற்றது. வேலையின்போது ஜெபம் செய்ய முடியமல் தவிக்கும் தாசில்தார் வேம்பு ஐயருக்கு அவருடைய நண்பர் கிராமபோன் ஒலிப்பதிவுப் பெட்டியைக் கல்கத்தாவிலிருந்து தருவித்துக் கொடுப்பதே கதையின் சாரம்.

அதே மாஹா இதழில் மூக்கந்துரையைப் பாம்பு கடித்தது – Mr Morgan Bitten by Snake எனும் கதையும் உள்ளது. ரப்பர் விலை வீழ்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருந்த காலத்தில் மூக்கந்துரை பாம்புகள் மலிந்த ஜோகூர் தோட்டத்திற்குப் போகிறார். போய் ஐந்து பாம்புகளை அடித்துவிட்டார். இரவுத் தூக்கத்தில் புரண்டு படுத்தபோது கட்டிலில் கிடந்த இடைவாரின் கொக்கி உறுத்தவே ‘பாம்பு பாம்பு’ என்று பயத்தில் அலறி ஓடுகிறார். நிலைமையறிந்து, மூக்கந்துரையை ஊருக்கு அனுப்பிவைக்கிகிறார் நண்பர்.

1935 ஜுலை 6ல் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் அதிகாரபூர்வ பிரச்சார ஏடாக மலர்ந்த தமிழ் முரசு ஓராண்டு கழித்துச் சிறுகதைகளை ஏராளமாக வெளியிடத் தொடங்கியது. முரசின் முதல் கதையை எழுதியவர் ந. பழனிவேலு. 1936 ஜுலை 16ல் இடம்பெற்ற கதை செல்லம் அல்லது சிட்டு. முரசில் எல்லாமே சீர்திருத்த வாடைதான். தஞ்சாவூர்க் கதை அது. சிட்டு அரிஜனப் பெண். பக்தவத்சல நாயுடு வீட்டில் வேலை செய்கிறாள். நாயுடுவின் மகன் தீனதயாளுவும் சிட்டுவும் காதலிக்கின்றனர். தந்தைக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மகன் காதலியுடன் ஓட்டம் பிடிக்கிறான். நாயுடு மனம் மாறுகிறார். சீர்திருத்தத் தொண்டில் இறங்கிவிடுகிறார்.

ந.பழனிவேலுவை நன்கு அறிமுகப்படுத்தும் கதையானகாதற்கிளியும் தியாகக் குயிலும் 1936 அக்டோபர் 31 தொடங்கி, நவம்பர் 17 வரை நான்கு வாரம் நீடித்தது. கதை பத்து அத்தியாயங்கள் ஓடியது. ஐந்து நீண்ட பாடல்களையும் கதையில் செருகிவிட்டார் ஆசிரியர். இவையும் போதாவென்று 24 வரிக் கவிதையுடன் கதை முடிகிறது. கதைக்கு ஆசிரியர் வரைந்துள்ள முகவுரை: ‘வலிமை பொருந்திய இரண்டு காதல்கள் ஒன்றோடொன்று மோதி, ஒளிவிடுவதை இக்கதையில் காணுங்கள். சமூக நலனுக்காகவும், தன் காதலனின் சுயநலத்துக்காகவும் தன் காதலையும் உயிரையும் அர்ப்பணம் செய்த உத்தமி விசாலாட்சியின் அற்புதத்தை இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.’

ந. பழனிவேலு, எம். ஆறுமுகம், மிஸ் த. இராஜம்மா, பி. எம். கண்ணன் முதலானோர் ஆரம்ப காலத்தில் முரசில் நிறைய கதை எழுதியவர்கள்.

இத்தருணத்தில், நூலுருப் பெற்ற முதல் நாவல், முதல் கதைத் தொகுதி எது என்பதை அறிந்துகொள்ள ஆவல் எழுவது இயல்பே.

 

சிறுகதையைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் வல்வை வே. சின்னையா பிள்ளை சிங்கப்பூரில் 1930ல் வெளியிட்டநவரசகக் கதா மஞ்சரி : இவை இனிய கற்பிதக் கதைகள்என்ற தொகுதியே முதன்முதலில் வந்தது என்பதை என்னுடைய கட்டுரைகளிலும் மலேசியத் தமிழ்ச் சிறுகதை (1995) எனும் நூலிலும் ஏற்கனவே தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். ஐந்து கதைகள் அடங்கிய அந்தத் தொகுதிக்கு மதிப்புரை வழங்கியவர் முன்னேற்றம்பத்திராதிபர் கோ. சாரங்கபாணி. ‘….அன்பின் பெருமையையும், வீரத்தின் மாண்பையும், மெய்மையின் உயர்வையும், ஒழுக்கத்தின் சிறப்பையும், பொய்மையின் இழிவையும் மக்கட்குத் தெள்ளென உணர்த்தும் ஐந்து கதைகளை’ ஆசிரியர் இயற்றியிருப்பதாக மதிப்புரை தெரிவிக்கிறது. பலவகையான நீதிநெறிச் செய்யுள்கள் கதைகளின் இடையே தாராளமாகப் புகுத்தப்பட்டுள்ளன. அந்தத் தொகுப்பைப் பின்தள்ளக் கூடிய எதனையும் இதுவரை நான் காணவில்லை.

வே. சின்னையா 1936ல் தமிழணங்கு அல்லது இளநகைச் சிறுமி எனும் 40 பக்க நாவலையும் சிங்கப்பூரில் வெளியிட்டார். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னே கலிங்க தேசத்தை அரசாண்டு வந்த பிள்ளைப் பேறு இல்லாத மன்னன் வில்லவராயன் பற்றிய கதை அது என்கிறார். முழுதும் கற்பனைதான். நாவல்களில் நிறைய செய்யுள்கள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே நவரச கதா மஞ்சரியில் இடம்பெற்ற இரண்டு சிறுகதைகளையும் இந்த நாவல் நூலில் சேர்த்திருக்கிறார் சின்னையா.

நாவலைப் பொறுத்தவரை அநேக புதிய தகவல்களை அண்மையில் கண்டெடுத்தேன். ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1904ல் நாகூர் தளவாய் சின்னவாப்பு மரைக்காயர் ஹுர்முஸ் கதை எனும் பெயரில் ஒரு வரலாற்று நெடுங்கதையை சிங்கப்பூரில் வெளியிட்டார். அலெக்சாண்டர் பேரரசரின் புதல்வர் ‎ஹுர்முஸ்இளவரசர்கூஜான்தேசத்துஅரசரின் ‎தவப்புத்திரிகு ல்இளவரசியைக் காதலித்து மணம்‎புரிந்து கொள்வதற்குள் படும்து ன்பங்களையும் சமாளிக்கும் சூழ்ச்சிகளையும் வீரதீரசாகசங்களையும் விவரிக்கும் கதை இது. 279 பக்கம் நீள்கிறது. இந்துஸ்தானியிலிருந்து மொழி பெயர்த்ததாக சின்னவாப்பு மரைக்காயர் தெரிவிக்கிறார். மொழிபெயர்ப்பு என்றாலும் தமிழ் இலக்கிய மணம் அற்புதமாகக் கமழ்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு என்பதால் இதனை இவ்வட்டாரத்தின் முதல் நாவல் எனக் கொள்ளமுடியாது.

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம்1879ல் வந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜி. ஸி. பெடால் எழுதிய Basket of Flowers என்ற ஜெர்மன் கதை புஷ்பக்கூடை எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. வேறு சில ஆங்கில நாவல்களும் இப்படி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றையெல்லாம் தமிழின் முதல் நாவலாகக் கருத இயலாது என்று சிட்டியும் சிவபாதசுந்தரமும் (தமிழ் நாவல் 1977) கூறுகின்றனர்.

நாகூர் சின்னவாப்பு மரைக்காயர் 1908 பிப்ரவரி மாதம்அற்புதவல்லி கதை நூலையும், மார்ச் மாதம் கஸ்ஸான் கன்னிகைச் சரித்திரம் எனும் நூலையும் வெளியிட்டார். தழுவல், மொழிபெயர்ப்பு வகையாதலால் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாமற் போகிறது.

 

சின்னவாப்பு மரைக்காயர் ஒரு சுறுசுறுப்பான எழுத்தாளர். மூன்று கதை நூல்களைப் படைத்ததுடன் இரண்டு பத்திரிகைகளையும் அவர் சிங்கப்பூரில் நடத்தியிருக்கிறார். 1904 அக்டோபர் 7ல் உதயமானதுநூருல் இஸ்லாம் எனும் தினசரி. 1905 ஆகஸ்ட் 14ல் தோன்றியது றபீக்குல் இஸ்லாம் எனும் வார இதழ். இவை தவிர வெள்ளைக்காரக் கணவன் மனைவி இருவர் இஸ்லாமிய சமயத்துக்கு மாறியதை வருணிக்கும் பிஷாரத் பாத்திமா நூலை 1912 ஆகஸ்ட்டில் பினாங்கில் வெளியிட்டார். 64 பக்கப் புத்தகம் அது.

இவற்றைத் தாண்டி வந்தால் அசல் உள்ளூர்த் தமிழ் நாவலாக வருகிறது மீனாட்சி அல்லது மலாய்நாட்டு மங்கை. 1916ல் கிளாங்கில் பிரசுரமானது. இதனை எழுதியவர் பிரபல புத்தக வணிகரும் பத்திரிக்கை ஆசிரியரும் இலக்கியவாதியுமான கா. கந்தையா பிள்ளை. 312 பக்க நாவல் அது. அக்காலத்தில் அனைவரையும் கிறங்க வைத்துக் கொண்டிருந்த கிராமபோன் இசைத்தட்டுகளை 38, ரெம்பாவ் ஸ்திரீட், கிளாங் கடையில் விற்றவர் அவர். சொந்தப் பெயரையே கடைக்கும் வைத்துக்கொண்டார்.

1915 முதல் 1921 வரை வந்த இசைத்தட்டுப் பாடல்களைத் தொகுத்து நான்கு பகுதிகளாக சங்கீதத் திரட்டு எனும் தலைப்பில் வெளியிட்டார். மூன்று பாகங்கள் கிளங்கிலும் ஒரு பாகம் கோலாலம்பூரிலும் பிரசுரம் கண்டன. 245 பக்கமலாயாச் சரித்திரம் எனும் பாட நூலையும் 1937ல் வெளியிட்டார் கந்தையா பிள்ளை.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கிளாங்கிலிருந்து வெளியானசிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் எனும் பத்திரிகைக்குக் கடைசிக் கட்டத்தில் ஆசிரியராகவும் திகழ்ந்தார் எனத் தெரிகிறது. அப்பத்திரிகை 1907 வாக்கில் தொடங்கி, குறைந்த பட்சம் 1914 வரை நடந்திருக்கிறது.

ஆகவே, தற்போதைக்கு நமது நாவல் வரலாற்றைத் தொடங்கி வைப்பவள் மீனாட்சி அல்லது மலாய் நாட்டு மங்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 1916லிருந்து 1938 வரை, மலாயா சிங்கப்பூர் தொடர்பாக, குறைந்தது 25 நாவல்களாவது நூலுருவில் நம் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒழுங்காக ஆராய்வது மிகமிக அவசியம். ஏனெனில் நம்முடைய வாழ்வும் வரலாறும் பரம்பரையும் பாரம்பரியமும் அவற்றுள் ஒளிந்து கிடக்கின்றன.

  (தமிழ் நேசன் சுதந்திரப் பொன் விழா மலர் 31 ஆகஸ்ட்2007)

 

 

 

Tags: ,

Leave a comment