RSS

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

09 Oct

டால்மியாபுரம் போராட்டம் (1953)

டால்மியாபுரம் போராட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி

டால்மியாபுரம் போராட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி

டால்மியாபுரம் போராட்டம் என்றாலே அத்தனை பேருக்கும் நினைவில் வருவது கலைஞர் மு.கருணாநிதி மட்டும்தான். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ என்று போற்றப்படுபவர் அல்லவா அவர்? “ஓடாத ரயில் முன்னே தண்டவாளத்தில் தலைவைத்து விளம்பரம் தேடிக் கொண்டார் கருணாநிதி” என்று கண்ணதாசன் அவரை தன் சுயசரிதையில் கிண்டலடித்திருப்பார்.

அந்த போராட்ட நிதிக்காக எத்தனையோ செயல்வீரர்கள் திரை மறைவில் இருந்துக்கொண்டு பாடுபட்டார்கள். அவர்கள் யாரும் வெளிச்சத்திற்கு வரவேயில்லை. அப்படிப்பட்டவர்களில் நம் கட்டுரை நாயகன் ரவீந்தரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?’ ரவீந்தருக்கும் டால்மியாபுரம் போராட்ட நிதிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்று படிப்போர் நினைக்கக்கூடும். இன்னும் சொல்லப் போனால் அவர் தி.மு.க. கட்சிக்காரர்கூட கிடையாது. உண்மை இப்படியிருக்க அவருடைய பங்களிப்பு இந்த போராட்டத்தில் என்னவாக இருக்க முடியும்?

அந்நாளைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், “டால்மியாபுரம்” என்ற பெயரை “கல்லக்குடி” என்று பெயர் மாற்றக்கோரியும், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 1953-ஆம் ஆண்டு ஜூலை 14, 15 தேதிகளில் மும்முனை கருப்புக்கொடி போராட்டங்களை தி.மு.க. நடத்த முடிவு செய்தது.

“தமிழர்களை மிகக் கேவலமான முறையிலே, இழிமொழி புகன்று மனதைப் புண்படச் செய்கிறார் நேரு . மக்களின் கிளர்ச்சிகளை எல்லாம் மட்டரகமான மொழியால் ஏசுகிறார் . “நான்சென்ஸ்“ என்றும், “முட்டாள்“ என்றும் வைகிறார். ஒரு பெரிய துணைக் கண்டத்தின் தலைவர் இப்படி ஒரு இனமக்களைத் துச்சமாகக் கருதி இழிமொழி கூறுவதைக் கண்டிக்கவும், நாட்டின் மனப் போக்கை அவர் அறியச் செய்யவும், தமிழகமெங்கும், ஜூலை 15-ல் பகலில் எல்லா ரயில் வண்டிகளையும் நிறுத்திக் கண்டனக் குறியைக் காட்ட நாங்கள் தீர்மானித்துள்ளோம்”

என்று அறிஞர் அண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார்.

(உண்மையில், இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்ததைத்தான் பிரதமராக இருந்த நேரு “childish nonsense behavior” என்று கூறினாரே தவிர தமிழக மக்களை கேவலமான முறையில் திட்டினார் என்பதெல்லாம் கொஞ்சம் ‘ஓவர்’. மக்களை உசுப்பேத்துவதற்கு அறிக்கை சற்று காரசாரமாக இருக்க வேண்டும் அல்லவா?)

“டால்மியாபுரம்” என்ற பெயரை “கல்லக்குடி” என்று மாற்றுவதற்காக ‘தண்டவாளத்தில் தலை வைத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்’ என்று பத்திரிக்கைகள் யாவும் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. ஆனால், பதினாறு ஆண்டுகளுக்கு பிறகுதான் அதற்கான பலன் கிடைத்தது என்பது வேறு விஷயம்.

இந்த வெற்றியை போற்றும் வகையில் கூத்தாநல்லூரைச் சேர்ந்த சாரணபாஸ்கரன் (டி.எம்.எம்.அஹ்மத்) பாடல் எழுத. நாகூர் ஹனிபா பாடிய “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற அந்தப் பாடல் சரித்திரம் படைத்தது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

சினிமா கலைஞர்களின் நலன்கருதி இந்த போராட்டத்தில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்ள தேவையில்லை என்று அறிஞர் அண்ணா விதிவிலக்கு அளித்திருந்தார். கே.ஆர். ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, எம்.ஜி.ஆர் போன்ற நட்சத்திரங்களை போராட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்பாணை விடுத்திருந்தார்.

அதற்கு நியாயமான காரணம் இருந்தது. சிறை செல்ல நேர்ந்தால் அது அவர்களின் தொழிலையும் வருமானத்தையும் பாதிக்கும் என்ற நல்ல எண்ணத்தினால்தான் அறிஞர் அண்ணா அப்படிச் சொன்னார்.

தி.மு.க. மீது பற்று கொண்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், படங்களில் நடித்தபடியே, கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, நிதி திரட்டிக் கொடுத்தார். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அதே போன்று, எம்.ஜி.ஆர். நேரடியாக போராட்டக்களத்தில் குதிக்கவில்லை என்றாலும் கூட ரவீந்தரைப் பயன்படுத்தி , போராட்ட நிதிக்காக தன்னுடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்ற நோக்கில் நாடகம் ஒன்றை தயார் செய்வது என்று முடிவெடுத்தார்.

“போராட்ட நிதிக்காக நாடகமொன்றை அரங்கேற்றியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக செயல்படுத்த வேண்டும். நாடகத்தில் இடம்பெறும் வசனங்களில் அரசியல் நெடி வேண்டும். அவை நெத்தியடியாக இருக்க வேண்டும்” என்று ரவீந்தரை அழைத்து அன்புக்கட்டளை இட்டார்

எம்.ஜி.ஆர். கதையின் கருவை விஸ்வம் கோடிட்டுக் காட்ட, ‘எள் என்றால் எண்ணையாக’ நிற்கக்கூடிய ரவீந்தர் விறுவிறுவென்று செயலில் இறங்கினார். ஒரு மாத அவகாசத்திற்குள் நாடகத்தை எழுதி முடித்துவிட்டு ரிகர்சலும் தொடங்கி விட்டது. எல்லா வேலைகளும் அசுர வேகத்தில் நடைபெற்று முடிந்தன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடகமாக இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு தக்கபடி காட்சிகளை ரவீந்தர் அமைத்துக் கொடுத்தார்.

நாடகத்துறையில் அனுபவித்த கஷ்டங்கள்

நாகூர் ரவீந்தர் கலைத்துறையில் சாதனை புரிய எம்.ஜி.ஆருடன் கைக்கோர்த்த அதே 1952-ஆம் ஆண்டில்தான், எம்.ஜி.ஆர். தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். படிப்படியாக பொதுமக்களிடையே மிகுந்த செல்வாக்கு அடைந்துவரும் இந்தக் கட்சியின் மூலம் சினிமாத்துறையில் ஆழமாக காலூன்றி விடலாம் என்ற அவரது துல்லியமான எதிர்ப்பார்ப்பு சற்றும் வீண் போகவில்லை.

அவர் நினைத்தபடியே அவருக்கு ‘சீனியராக’ கட்சியில் சேர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த எஸ்.எஸ்.ஆர். போன்ற மற்ற கலைஞர்களை எளிதாக ‘ஓவர்டேக்’ பண்ணி விட்டு, மளமளவென்று உயர்ந்து கட்சியில் நல்ல பெயர் சம்பாதித்தார். அவரது அபார வளர்ச்சி எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

நாடகத்துறையானது அவரது வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. மக்களுடனான நேரடி தொடர்பை வலுப்படுத்த “மேடை நாடகம் என்ற கருவி அவருக்கு ஓர் இணப்புப் பாலமாக அமைந்தது. மேலும் நாடகங்களின் வாயிலாக அவருடைய நடிப்பில் மெருகேறியது. “சதிலீலாவதி”யில் காணப்பட்ட அவரது நடிப்பிற்கும், “நாடோடி மன்ன”னில் காணப்பட்ட அவரது நடிப்பிற்கும் ‘மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்’ புலப்படும்.

பொதுவாக சினிமாத்துறையில் புகுந்து நல்ல முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்தக் கலைஞனும் நாடகத்துறையை  தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்க மாட்டான். ஆனால் எம்.ஜி.ஆரின் குணாதிசயம் அதற்கு நேர்மாறாக இருந்தது. அவர் நாடகத்தில் நடிப்பதை மிகவும் விரும்பினார். சிரத்தையுடனும் தொழில் பக்தியுடனும் அதில் ஈடுபாடு காண்பித்தார்.

ஏராளமான பொருட்செலவில் தனது சொத்துக்களை யாவும் அடமானம் வைத்து “நாடோடி மன்னன்” என்ற படத்தை சொந்தமாக எடுத்தபோதும்கூட, அவர் நாடகக் குழுவை கலைக்கவில்லை; நாடகத்தில் நடிப்பதையும் நிறுத்தவில்லை.

Mirror Image

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய நாடகங்கள் “இன்பக்கனவு”, “அட்வகேட் அமரன்”, “பகைவனின் காதலி”, “சுமைதாங்கி”  ஆகியவை. ரவீந்தர் எழுதிய நாடகங்களிலேயே எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான நாடகம் “இன்பக்கனவு” தான். தமிழகத்து பட்டி தொட்டிகளெங்கும் பரவலாக பேசப்பட்ட பிரசித்தி பெற்ற கலைப்படைப்பு அது.

புஷ்பலதா, ஜி.சகுந்தலா, ஆகியோர் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க எம்.ஜி.ஆர். நாடக மன்றம்தான் நுழைவாயிலாக இருந்தது. கே.ஏ.தங்கவேலு நிறைய நாடகங்களிலும்,”திருப்பிப்பார்” போன்ற  படங்களில் நடித்திருந்த போதிலும்கூட மிகவும் பிரபலமானது எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்தின் வாயிலாகத்தான்,

சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாத காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். தனது நாடக மன்றத்தை துவக்கினார். மாதத்தில் முதல் ஓரிரு நாட்களில் சென்னையிலிருந்து இவர்கள் புறப்பட்டால் ஒவ்வொரு ஊராக நாடகத்தை முடித்துக் கொண்டு திரும்ப இருப்பிடம் வந்து சேர குறைந்த பட்சம் 20 நாட்களாவது பிடிக்கும்.

நாடகத்தில் நடிப்பதற்காக இவர்கள்  பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சகல வேலைகளையும் வலிய வந்து பொறுப்புகளை தலையில் சுமந்துக்கொண்டு எந்நேரமும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தவர் ரவீந்தர்.

“மனிதாபிமானத்தை எனக்கு கற்றுத் தந்ததே நான் வாழ்க்கையில் அனுபவித்த இதுபோன்ற கஷ்டங்கள்தான்” என்று பழைய நினைவுகளை ஒருமுறை ரவீந்தர் பகிர்ந்தார். அதே கருத்தை எம்.ஜி.ஆர், ‘டாக்டர்’ பட்டம் பெற்றபோது, திரையுலகம் அவரது கலையுலகப் பணியை பாராட்டும்  வகையில் விழா ஒன்றை தடபுடலாக ஏற்பாடு செய்தபோது கூறினார். . அவ்விழாவில் அவர் மேடையில் பேசியதை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

“சினிமாவுக்கு முன் நாடகத்தில் நான் பட்ட கஷ்டம், சினிமாவுக்கு வந்த பின் அனுபவித்த கஷ்டம், வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம், காசில்லாததால், ‘கெல்லீஸ்’ முதல் ‘யானை கவுனி’ வரை நடந்து சென்ற அனுபவம் – அந்த துன்பங்கள்தான் இன்று மனிதாபிமானம் என்றால் என்ன என்று உடன்பிறப்புகள் பாராட்டும் நிலையைப் பெற்றுத் தந்தது.”

என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள்  அனுபவப்பூர்வமானது.

ஒரு நாடகம் நடத்த எம்.ஜி.ஆரின் நாடக மன்றம் கிட்டத்தட்ட 8,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தது.  நாடகக் குழுவினரின் உணவு, உடை, இருப்பிடம், கலைஞர்களின் ஊதியம், பயணச் செலவு இவைபோக மிகச்சொற்பமான தொகைதான் மிச்சமாகியது. இருந்தபோதிலும் திரைப்படங்களின் மூலம் கிடைக்க முடியாத ரசிகர்களுடனான நேர்காணல் சந்திப்பு, பரஸ்பர நெருக்கம் போன்றவை எம்.ஜி.ஆருக்கு பொதுஜனத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒப்பனையெல்லாம் அதிகம் இருக்காது. பவுடர் மட்டும் பூசிக் கொள்வார். வெறும் சட்டை பேண்ட்தான். திரைப்படத்தில் வருவதுபோல, நாடகத்தில் கனவுக்காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் என ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே இடம்பெறும்.

கதாநாயகன் எம்.ஜி.ஆர். கனவுக்காட்சிகளில் கலர் கலரான உடைகள் அணிந்துக் கொண்டு வந்து  ரசிகர்களை மகிழ்விப்பார்.  மின்னல் வேகத்தில் திரைக்குப் பின்னால் அவர் போவதும் தெரியாது; வருவதும் தெரியாது. அப்படியொரு துடிப்பான, சுறுசுறுப்பான ஆளுமை பொருந்திய மனிதர் அவர். கண்ணிமைக்கும் நேரத்தில் எப்படி இவர் உடை மாற்றிக் கொண்டு வந்தார் என்று ரசிகர்கள் அப்படியே பிரமித்துப் போவார்கள்.

எல்லா நாடகத்திலும் “Prompter” ஒருவர் இருப்பார். நாடக கதாபத்திரங்கள் வசனம் பேச தாமதிக்கையில் அல்லது தடுமாறுகையில் திறவுச்சொல்லை (Keyword) மேடையின் ஒதுக்குப்புரத்தில் இருந்துக்கொண்டு எடுத்துக் கொடுக்க வேண்டும். நாடகத்தில் ரவீந்தரின் பணியாக இது இருந்தது. மேடையில் கே.ஏ.தங்கவேலு வசனம் மறந்துபோகும் பட்சத்தில் அதிரடியாக, சமயோசிதமாக, நெத்தியடி வசனங்கள் சொந்தமாக பேசிச் சமாளித்து ரசிகர்களை மகிழ்விப்பார். .”டைமிங் ஜோக்ஸ்” அவரைப் போன்று யாரும் உதிர்க்க முடியாது.அப்படியொரு கெட்டிக்காரத்தனம் அவரிடம்  இருந்தது.

நாடகம் இரவு 10.00 மணிக்குத்தான் தொடங்கும். சிலநேரம் நாடகம் தொடங்குவதற்கு 11.00 மணி கூட ஆகிவிடும் நள்ளிரவு 2.00 மணிக்கு முடிவடையும். ஒருசில நேரம் 4.00 மணிவரைகூட நீடிக்கும். அடுத்தநாள் விடியற்காலை எம்,ஜி.ஆர். ஒவ்வொரு இடங்களாகச் சென்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்வார்.

அந்த அளவுக்கு  தன் நடிப்புத் தொழிலையும், கட்சியையும் ஒருசேர அவர் நேசித்தார்.  நாடகம் முடிந்த ம றுநாள் நாடகக்குழுவினர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அடுத்த ஊருக்கு பயணமாவார்கள். வேன்கள் படை சூழ நாடகக் குழுவினர் கூடாரத்தை காலி செய்வார்கள்.  உறங்குவதற்கு மிக மிகக் குறைவான நேரமே கிடைக்கும். நாடகம் வெற்றி பெறுவதற்கு எல்லோருடைய கூட்டுமுயற்சியும், ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது.

யாருமே கையாளாத இன்னொரு மிக அருமையான நுட்பத்தை எம்.ஜி.ஆர். கையாண்டார்.  நாடகம் முடிந்த கையோடு ரசிகர்கள் வீட்டுக்கு கிளம்ப தயாராகுகையில் “இதோ கதையின் நாயகன் எம்.ஜி.ராமச்சந்திரன் உங்கள்முன் மேடையில் தோன்றுவார்” என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியாகும். அதனைத் தொடர்ந்து பலத்த கரகோஷத்திற்கிடையே மேடையில் எம்,ஜி,ஆர். தோன்றுவார்

அவர் சொற்பொழிவு ஒன்றை அமர்க்களமாக நடத்துவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பம்சத்தையும் அதன் கொள்கைகளையும் ரசிகர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்து விளக்குவார். இந்த சொற்பொழிவை ஊருக்கு ஊர் சிறிது மாற்றங்களோடு எழுதித் தருவது ரவீந்தரின் பணிகளில் ஒன்றாக இருந்தது. அறிஞர் அண்ணாவின் புரட்சிகரமான சிந்தனைகளையும் கட்சியின் கொள்கைகளையும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் ரவீந்தர். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

நாடக அரங்கத்தின் மூலம் கட்சிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது ஜனங்களிடையே நன்றாகவே எடுபட்டது. பொதுமக்களின் மனதில் கருத்துக்கள் பசுமரத்தாணியாய் பதிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கலையை சூசகமாக அறிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

திருச்சியில் இடிந்த கோயில்

photo (25) தேர்தல் பிரச்சாரம், போராட்டம் என்று எந்தக் காரியமானாலும் திருச்சியிலிருந்து தொடங்குவதையே ‘ராசி’ அல்லது ‘அதிர்ஷ்டமென’ நினைத்தார்கள் (பகுத்தறிவுவாதிகளான) தி.மு.க.வினர்.

1953-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் மூன்றாம் தேதியிலும், நான்காம் தேதியிலும் முதன்முதலாக எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்தின் நாடகம் திருச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. நாடகத்தின் மூலம் கிடைக்கும் வசூல் அனைத்தையும் அப்படியே “டால்மியாபுரம் போராட்ட  நிதி”க்காக அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அந்த நாடகத்தை வெற்றிபெறச் செய்ய  முழுவீச்சாய் களத்தில் இறங்கி செயல்பட்டனர்.

மந்திரிகுமாரி (1950), சர்வாதிகாரி (1951), மர்மயோகி (1951),  நாம் (1953), ஜெனோவா (1953) , ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற புரட்சி நடிகர் எம்.ஜி,.ராமச்சந்திரன் முதன் முதலாக மேடை ஏறுவதைக் காண்பதற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.   ‘புரட்சி நடிகர் தரும் முதல் காணிக்கை’ என்ற தலைப்போடு சுவரொட்டிகள் திருச்சி மாநகர் வீதிகளை அலங்கரித்தன.

ரவீந்தர் வசனங்கள் எழுத, எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த சரித்திரம் படைத்த அந்த நாடகம் “இடிந்த கோவில்” என்ற பெயரில் அரங்கேற்றமானது. திருச்சி இப்ராஹிம் பார்க் அருகிலிருந்த தேவர் மன்றத்தில் (இப்போது அது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக மாறிவிட்டது) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேவர் மன்றம்

தேவர் மன்றம் என்றதும் எனக்கு அதன் பழைய மகத்துவம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மன்றத்தின் முக்கியத்தைப் பற்றி சொல்லாமல் போனால் இந்த கட்டுரையே முழுமை பெறாது.

இடதுகோடியில் மாநகராட்சி தலைவர் ரத்தினவேலு தேவர்

இடதுகோடியில் மாநகராட்சி தலைவர் ரத்தினவேலு தேவர்

நகரின் மையப் பகுதியில் வீற்றிருந்த தேவர் மன்றம் மிகப்பெரிய சரித்திர பின்னணி கொண்டது, திருச்சி மாநகராட்சியின் சேர்மனாக இருந்த பி,ரத்தினவேலு தேவர் அவர்களின் முயற்சியால் 1926-ஆம் ஆண்டு அது கட்டப்பட்டது. பிறகு அவருடைய பெயரையே அதற்கு வைத்து அவரை சிறப்பித்தது நகராட்சி.

2500 பேர்கள் உட்காரக்கூடிய இருக்கைகள் வசதியோடு, பால்கனியோடு கூடிய பெரிய அரங்கமாக அது திகழ்ந்தது. நாடகத்தில் வீடு, அரண்மணை, நந்தவனம்  போன்ற அரங்கம் வடிவமைக்க ஏற்ற வகையிலான விசாலமான மேடை கொண்டது.

“தீவார்” என்ற புகழ்ப்பெற்ற நாடகத்தை நடத்துவதற்காக இந்தி திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பிருத்திவிராஜ் கபூர் தன் மகன் ராஜ்கபூருடன் பம்பாயிலிருந்து வந்து இதே அரங்கத்தில்தான் நாடகம் நடத்தினார்.

பிரமாண்டமான நாடகம் போடுவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளும் கொண்ட அரங்கமாக அது திகழ்ந்தது.. நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பிரமாண்டமான ரதம் மேடையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்திற்கு நகரும் தத்ரூபமான காட்சிகள் ரசிகர்களை வியப்பிலாழ்த்தும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த அனைத்து நாடகத்திலிருந்து, சிலோன் லைலாவின் ‘ரிகார்டு டான்ஸ்’ முதற்கொண்டு இங்குதான் நடக்கும்.

அறிஞர் அண்ணாவின் “சந்திரோதயம்”, சிவாஜி கணேசனின் “என் விதி”, எம்.ஜி.ஆர் அவர்களின் “இடிந்தகோயில்”, “அட்வகேட் அமரன்”, மு.கருணாநிதியின் “காகிதப்பூ” போன்ற புகழ்ப்பெற்ற எத்தனையோ நாடங்கள் அரங்கேறிய மன்றம் அது.

1950-ல் நாகூரைச் சேர்ந்த புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் இங்குதான் நடந்தது.  நாகூர் ஹனிபா கவிஞராக பாத்திரமேற்று, நடிக்க அறிஞர் அண்ணாவின் தலைமையில் அரங்கேறிய நாடகம் அது. ஆபிதீன் நாடகக்குழுவை திருச்சிக்கு அழைத்துச் சென்று அதற்கான  ஏற்பாடுகளைச் செய்தவர் நாகூரைச் சேர்ந்த எம்.ஜி.கே. மாலுமியார். (இவர் நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்,ஜி,கே,நிஜாமுத்தீனின் தந்தை) . 

“இடிந்த கோயில்” நாடகம் தேவர் மன்றத்தில் நடத்த திட்டமிட்டபோது திருச்சிவாசிகளிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் ஒரு சில படங்களில்  நடித்து பிரபலமாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். முதன் முதலாக மேடையில் தோன்றுகிறார் என்பதால்.

1947-ஆம் ஆண்டு “எம்.ஜி.ராம்சந்தர்” என்ற பெயரில் மக்களுக்கு அறிமுகமான பொன்மனச்செம்மல் தன் பெயரை மாற்றிக்கொண்டு “எம்.ஜி.ராமச்சந்திரன்” என்ற பெயரில் வலம் வந்தார். “ராம்சந்தர்” என்ற பெயர் தமிழ்ப்பெயராக தோன்றவில்லை என்பதால் இருக்கலாம்.

இந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும், ரவீந்தரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்துவைத்த’ டணால்’ தங்கவேலுவும் நடித்திருந்தனர். மேலும் எம்.கே.முஸ்தபா, குண்டுமணி, என்.எஸ்.நாராண பிள்ளை, எஸ்.எம்.திருப்பதிசாமி, சேதுபதி, முத்துக்கூத்தன், ஏ.எஸ்.மணி, என்.எஸ்.நடராஜன்,  ரத்னமாலா, ராஜேஸ்வரி, டி.எஸ்.மரகதம், சுலோசனா, என்று ஒரு பெரிய நடிக-நடிகையர் பட்டாளமே நடித்திருந்தது

இதில் சண்டை கலைஞர்களாக எம்.ஜி.ஆரிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மெய்க்காப்பாளராக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து, போன்ற ஏராளமானோர் நடித்திருந்தார்கள்.

விஸ்வம் சொன்ன கதைக்கருவை மையமாக வைத்து திரைக்கதை வசனத்தை ரவீந்தரே வடிவமைத்திருந்தார். எம்.ஜி.ஆரின். வேண்டுகோளுக்கு இணங்க இந்த நாடகத்தில் அரசியல் நெடி வீசும் வசனங்கள் அதில் இடம்பெறச் செய்தார். எம்.ஜி.ஆர் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாகவே அமைத்துக் கொடுத்தார் ரவீந்தர்.

எம்.ஜி.ஆர். மேடையில் புரியும் அறிமுகத் தோற்றமே பந்தாவாக இருக்கும். விசில் சப்தமும், கைத்தட்டலும் வாழ்த்தொலிகளும், ஆரவாரமும் அரங்கத்தையே அதிர வைக்கும். சிறு வயதில் பிரிந்து சென்ற மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும், பின்னர் மீண்டும் ஒன்று சேருவது தான் கதை.அந்தக் காலத்து “யாதோன் கீ பாராத்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நாடகத்தில் எம்.ஜி.ஆர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் ராஜன்.

என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைக்க, பாடல்களை முத்துக்கூத்தன் மற்றும் லட்சுமணதாஸ் எழுதி இருந்தார்கள். நடனத்தை ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்திருந்தார்.

திருச்சியில் அரங்கேறிய இந்த நாடகம் நல்ல வசூலை ஈட்டித்தந்தது.  பெரிய அளவில் விளம்பரத்தை தேடித்தந்தது. நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 1953-ஆம் ஆண்டு திருச்சியில் ஆரம்பித்த இந்த நாடகம் அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழகத்திலுள்ள அத்தனை நகரங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றது.

நடனம், பாடல்கள், அதிரடி என அனைத்தும் நிறைந்த  ஒரு கலவையாக ஒரு திரைப்படத்தையே பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பொழுதுபோக்கு குறைவாக இருந்த அந்தக் காலத்தில் ஜனரஞ்சகமான இதுபோன்ற நாடகங்களையே எல்லோரும் விரும்பினர்.

இடிந்த கோயில் இன்பக்கனவானது

திருச்சியில் நாடகம் நடந்தேறிய அதே ஆண்டு சுமார் இரண்டு மாதங்கள் கழித்து சேலம் விக்டோரியா அரங்கில் அதே நாடகம் அரங்கேறியது. சேலம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் “இடிந்தக் கோயில்” என்ற பெயரில் அல்ல. “இன்பக்கனவு” என்ற பெயரில். ஏன் இந்த பெயர் மாற்றம்?

drama_notice (1)

“இன்பக்கனவு” சுவரொட்டி

திராவிட பாரம்பரியத்தில் வந்த அதிமுக கட்சியின் தலைவி ஜெயலலிதா நியுமராலஜி, ராசிபலன், நல்ல நேரம், அபசகுனம் யாவும் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டை இப்போது எல்லோரும் வைக்கிறார்கள். திராவிட பாரம்பரியத்தில் தன்னை இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆரும் அபசகுனம், பெயர்ராசி போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“இடிந்த கோயில்” என்ற பெயரே துக்கிரித்தனமாக இருக்கிறது என்று எம்.ஜி.ஆரிடம் யாரோ சொல்ல, நாடகத்தின் பெயரை உடனே மாற்றும்படி ரவீந்தருக்கு உத்தரவிட்டார்.

“பெயரை மாற்றச் சொல்லி எம்.ஜி.ஆருக்கு ஐடியா கொடுத்தது எந்த பிரகஸ்பதி?” என்று எனக்கு நெருக்கமான திரையுலக மூத்த ‘பெருசு’களிடம் தொடர்புகொண்டு வினவியபோது, பெயர் மற்றத்தை அபசகுனமாகக் கருதி ஆலோசனை தந்தது ஆர்.எம்.வீரப்பன்தான் என்று ஒருவரும், “இல்லவேயில்லை அப்பொழுதெல்லாம் ஆர்.எம்,வீரப்பன் எம்.ஜி.ஆரோடு வந்து சேரவேயில்லை” என்று மற்றொருவரும் கூறினார்கள். உண்மை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பெயர்மாற்றத்தில் ரவீந்தருக்கு உடன்பாடு இல்லாத போதிலும் அவருடைய வாதம் அங்கு எடுபடவில்லை. “இன்பக்கனவு” என்ற மாற்றுப்பெயரை ரவீந்தர் சிபாரிசு செய்தபிறகுதான் எம்.ஜி.ஆருக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டது

[அபசகுனமாக கருதப்பட்ட “இடிந்த கோயில்” என்ற பெயர், மங்கலகரமான “இன்பக்கனவு” என்று பெயர்மாற்றம் செய்த பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டு காலொடிந்து போனது என்பது வேறொரு தனிக்கதை]

நாடகத்தில் தனக்கு ஜோடியாக, கதாநாயகியாக,  நடித்துக் கொண்டிருந்த ரத்னமாலாவுக்கு பதிலாக ஜி.சகுந்தலாவை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.  “ரத்னமாலாவை ஏன் மாற்றினார்?” என்பது மற்றொரு சுவையான உபரி கதை. அதை பிறகு பார்க்கலாம். இப்பொழுது கூறினால் கட்டுரையின் தொடர்ச்சி விட்டுப்போகும்.

தில்லையாடி சிவராமன்

“இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தவர் தில்லையாடி சிவராமன் என்பவர். திருவாரூரில் நாடகம் நடத்துவதற்கு அவர் சந்தித்த இடையூறுகளை நாம் படிப்பதற்கு முன்னர் தில்லையாடி சிவராமனைப் பற்றி சிறிது தெரிந்துக் கொள்வது அவசியம்.  யார் இந்த சிவராமன்?

ஒரு சின்ன “பிளாஷ்பபேக்”. ஒருசமயம் லாயிட்ஸ் ரோட்டில் உள்ள முத்து முதலி தெருவில் உள்ள  இல்லத்தில் எம்.ஜி.ஆர். தங்கி இருந்தபோது, எம்.ஜி.ஆர் நாடக மன்றம் நடத்தும் மேடை நாடகங்களில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமனை வரவழைத்து வரச்சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்.ஜி.ஆர்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்ந்த ஆடிப்போகிறார் அவர்.

அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்.ஜி.ஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது  அவர் அங்கு இல்லை. நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.

‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.

தஞ்சையில் இன்பக்கனவு நாடகம்

இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார், “இன்பக்கனவு”  நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.

எம்.ஜி.ஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்.ஜி.ஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் நாடகத்தை இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.

தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.

நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்.ஜி.ஆர் எப்படி இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார். தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும் என்று நினைத்திருந்த எம்.ஜி.ஆர். இதனை ஒரு தகுந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

திருவாரூரில் இன்பக்கனவு நாடகம்

திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, “தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம்” என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன்.

பொறையார் பார்த்தசாரதி உரிமையாளராக இருந்த சக்தி விலாஸ் பஸ் கம்பெனிக்கு சொந்தமாக கிட்டத்தட்ட 150 பேருந்துவண்டிகள் தஞ்சை மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்தன. பொறையார், காரைக்கால், நன்னிலம் மாயவரம், சீர்காழி, சிதம்பரம். நாகூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து திருவாரூருக்கு வந்துச் செல்லும் அத்தனை சக்தி விலாஸ் பேருந்துகளிலும் “இன்பக் கனவு” நாடகத்தின் சுவரொட்டிகளை அமர்க்களமாக விளம்பரப்படுத்தியிருந்தார் தில்லையாடி சிவராமன்.

தில்லையாடி சிவராமன் ஒருநாள் கருணாநிதியை கருணை ஜமாலின் அச்சகத்தில் வைத்து சந்திக்கிறார். இளமைக் காலமுதலே கருணாநிதியுடன் நெருக்கமாகப் பழகியவர் கருணை ஜமால்.  அவர் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்துவைக்க காரணமாக இருந்தவர் இந்த கருணை ஜமால்தான். இருவர்களுக்குமிடையே இருந்த நெருக்கத்தை ஏற்கனவே எனது வேறொரு கட்டுரையில் வரைந்திருக்கிறேன். இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளாமல் திரும்பி போனார் என்ற செய்தி அவர்களுக்குள் இருந்த பரஸ்பர நெருக்கத்தைச் சான்று பகரும்.

கருணை ஜமாலின் அச்சகமே கதியென்று கிடந்த கருணாநிதியை தில்லையாடி சிவராமன் சந்தித்தபோது அவருக்கு ஒரு புத்திமதி கூறுகிறார். “இந்த ஊரைப்பற்றி உனக்குத் தெரியாது. நீயோ தஞ்சாவூர்க்காரன், நாடகம் போடுற உன்னை இந்த ஊர்க்காரங்க லாபத்தோடு அனுப்புவார்கள் என்று கனவு காணாதே!” என்று அறிவுரை கூறுகிறார்.

கருணாநிதியின் வார்த்தைகள் அவருடைய வயிற்றில் புளியைக் கரைக்கிறது. உற்சாகத்தை குறைக்கிறது. என்றாலும் தில்லையாடி சிவராமன் மனம் தளரவில்லை. கருணாநிதி நல்ல எண்ணத்தினால்தான் கூறினாரா அல்லது கட்சியில் மளமளவென்று வளர்ந்துவரும் எம்.ஜி.ஆரின் மேலிருந்த காழ்ப்புணர்ச்சியால் கூறினாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இங்குமங்கும் ஓடி அலைந்து கடன் வாங்கியும், கையில் இருந்த காசுகளை முதலாக போட்டும் விளம்பரத்திற்கான செலவையும், அரங்கம் மற்றும் இதர ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்து முடித்திருந்தார் தில்லையாடி சிவராமன். அவர் சர்மா பங்களாவில் எம்.ஜி.ஆரைத் தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தார். புளிச்சகுடி கருணாநிதி என்ற அடாவடிப்பேர்வழி தன் அடியாட்களுடன் அங்கு வந்து கலாட்டா செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற செய்தி தில்லையாடி சிவராமனின் காதுகளுக்கு எட்டுகிறது.

உடனே பழக்கடை ராஜன் வீட்டில் எம்.ஜி.ஆரை தங்க வைப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறார். நிலைமையை தஞ்சை டி.எஸ்.பி.குழந்தைவேலுவுக்கு புரிய வைத்து, அவரும் இவருக்கு முழுஒத்துழைப்பு தந்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் எம்.ஜி.ஆருக்கு போதிய பாதுகாப்பு வழங்குகிறார். அதிகாலை பிளைமவுத் சொகுசுக் காரில் வந்திறங்கிய எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு நடந்த விஷயம் எதுவுமே எட்டாதபடி பார்த்துக் கொண்டனர் நாடகத்தை  ஏற்பாடு செய்தவர்கள். நாடகம் முடிந்து எம்.ஜி.ஆரை. பத்திரமாக ஏற்றி விட்டபிறகுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார் தில்லையாடி.

சீர்காழியில் இன்பக்கனவு நாடகம்

1953 – ஆம் ஆண்டு அரங்கேறிய “இடிந்த கோயில்” நாடகம் “இன்பக்கனவாக” பெயர் மாறி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சக்கை போடு போட்டு அனைத்து ஊர்களிலும் அரங்கம் நிரம்பி வழிகிறது. நாடகத்திற்கான வரவேற்பு சற்றும் குறைந்தபாடில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

1958 – ஆம் ஆண்டு  சீர்காழியில் “இன்பக்கனவு” நாடகம் அரங்கேற தடபுடலாக ஏற்பாடுகள்  நடக்கிறது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மனங்கவர்ந்த நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்தார்.

முன்னணி அந்தஸ்த்தை எட்டியிருந்தபோதிலும் படபிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவுடன் புறப்பட்டு அவ்வப்போது மேடைகளில் தன் நடிப்பு முத்திரையை பதித்து வந்தார். மாபெரும் வெற்றிப்படமான ‘நாடோடி மன்னன்‘ வெளிவந்து வசூலைக் குவித்துக் கொண்டிருந்த நேரமது.

சீர்காழியில் பிடாரி வடக்கு வீதி பின்புறம் அமைந்திருந்த “சாமி மேடை”யில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியிருந்தது. இந்த மேடையில்தான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட அந்த நிகழ்வினை நினைவு கூறுகிறார் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி சிவ சிதம்பரம் :

“அந்தக் காலத்தில் சீர்காழியில் ஐந்து திரையரங்குகள் இருந்தன. இப்போதுபோல சேர், பெஞ்ச் எல்லாம் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட ஈஸி சேர்கள் கொண்ட திரையரங்குகள் அவை. திரையரங்குகள் இருந்தபோதும் நாடகங்களும் கச்சேரிகளும் வளர்ந்துதான் வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்பக் கனவு” நாடகம் இங்குதான் அரங்கேறியது.”

என்று பழைய நினைவுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “இன்பக்கனவு” நாடகம்  அமர்க்களமாகத் தொடங்குகிறது. இந்த நாடகத்தில் ரத்னமாலாவுக்கு பதிலாக கதாநாயகியாக அபிநயித்தவர்  ஜி.சகுந்தலா.

பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் வரும் ஜி.சகுந்தலாவை குண்டுமணியும், புத்தூர் நடராஜனும் – சினிமா பாணியில் – பலாத்காரம் செய்வதுபோல்  ஒரு காட்சி, அழுக்கான ஆடை அணிந்து மண்டபத்தின் ஒதுக்குப்புரத்தில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு ஜி.சகுந்தலாவின் அபயக்குரல் கேட்கிறது. அட்டகாசமாக பாய்ந்து வரும் எம்.ஜி.ஆர், குண்டர்களை அடித்து வீழ்த்தி சண்டையிட வேண்டும். இது தான் காட்சியமைப்பு.

கதைப்படி எம்.ஜி.ஆரின் முதல் “என்ட்ரி”யும் இப்போதுதான். எம்.ஜி.ஆர். அதிரடியாக காட்சியினுள் நுழைந்ததுமே வழக்கம்போல் கரகோஷம் விண்ணை முட்டுகிறது. ரசிகர்களின் ஆரவாரமும், கைத்தட்டல்களும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதலாவதாக புத்தூர் நடராஜனை குனிந்து தனது இரு தோள்களிலும் அப்படியே தூக்கி கீழே விழச் செய்கிறார்.

G1

 

அடுத்து குண்டுமணி எம்.ஜி.ஆரை அடிப்பதற்கு பாய்ந்து வருவார். தனது வலதுபுற தோளில் அவரை அலக்காகத் தூக்கி விழச் செய்யுமாறு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையின்போது சரியாக விழுந்தார் குண்டுமணி. ஆனால் சம்பவத்தன்று அவர் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தார்.

பெயருக்கு ஏற்றார்போல் மிகப் பருமனான நபர் இந்த குண்டுமணி. 250 பவுண்டு எடையுடன் கூடிய ஆஜானுபாகுவான தோற்றம். எம்.ஜி.ஆரின் எடையோ வெறும் 70 கிலோதான்.  உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு அது ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. எத்தனையோ முறை சர்வசாதரணமாக தூக்கி அரங்கில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

அன்று அவருடைய போதாத நேரம். எம்.ஜி.ஆரின் கால் இடறி,  நிலைதடுமாறி அவரது கைகளிலிருந்து வழுக்கி விழுந்த குண்டுமணி நேராக அவருடைய கால் மீதே விழுந்து விடுகிறார். எம்.ஜி.ஆரால் எழக்கூட முடியவில்லை. “களுக்” என்ற சப்தத்துடன் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் துடிதுடித்துப் போகிறார்.

அடுத்து சண்டைக்காட்சியில் வரவிருந்த எம். ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து  உட்பட அத்தனை பேரும்  அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். பதறிப்போன  குண்டுமணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.  குண்டுமணி இன்னும் சுதாரிப்புக்கு வரவில்லை.

நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர்.  சீன் முத்துவிடம் சைகை காண்பித்து திரைச்சீலையை கீழே இறக்கும்படி உத்தரவிடுகிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “என்னாச்சு? ஏதாச்சு?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது என்ற செய்தி தீப்பொறியாய் பரவியவுடன் ரசிகர்களுடைய ஓலமும் ஒப்பாரிச் சத்தமும் நாலாபுரமும் ஒலிக்கிறது. அரங்கமே களேபரம் ஆகி பீதி நிலவுகிறது.

திரைக்குப்பின்னால்,  உணர்ச்சிவசப்பட்டு குண்டுமணியும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழத் தொடங்கி விடுகிறார். “என்னால்தானே உங்களுக்கு இப்படி ஏற்பட்டது” என்று புலம்புகிறார். எம்.ஜி.ஆரோ அலட்சியமாக  குண்டுமணியின் தோளில் தட்டிக் கொடுத்து “என்ன இது, சின்ன குழந்தைபோல் அழுகிறாய்?. எனக்கு ஒன்றுமேஆகவில்லை” என்று சமாதானம் கூறுகிறார்.

அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் குண்டுமணியை வசைபாடி தீர்க்கின்றனர். நாடகம் பார்க்க வந்த கூட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி கிடைக்க  எம்.ஜி.ஆருக்கு முதலுதவி சிகிச்சை புரிய அவசர அவசரமாக அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார். தற்காலிகமாக அவரது காலில் கட்டு போடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக உடனே சென்னைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. .

“எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆரின் காலில் சிறிய காயம் ஏற்பட்டு விட்டது. யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தயவு செய்து கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும் ரசிகர்களின் கூக்குரல்கள் அடங்கியபாடில்லை,. அவர்கள் கலைந்துச் செல்வதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

இப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்கிறார் எம்.ஜி.ஆர். திரைச்சீலையை உயர்த்துமாறு சீன்முத்துவுக்கு கட்டளை இடுகிறார். நாலைந்து பேர்கள் அவரை சாய்வாகப் பிடித்துக் கொள்கிறார்கள். கால் எலும்பு முறிந்து வலியால் துடித்க்கின்ற  போதும் உட்கார்ந்தவாறே மைக்கைப் பிடித்துக் கொண்டு உரையாற்ற ஆரம்பித்து விடுகிறார்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, காலில் சிறிய காயம் அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம், மீண்டும் இதே சீர்காழி மண்ணில் திரும்ப வந்து நாடகம் நடத்துவேன்” என்று உறுதி கூறிவிட்டு மக்களைத் தேற்றுகிறார்.  கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பேசிய பிறகுதான் ரசிகர்கள் ஓரளவு சமாதானம் அடைகின்றனர்.

photo (22) இதுபோன்ற இக்கட்டான நேரத்திலும் எம்.ஜி.ஆர் காட்டிய  பெருந்தன்மையைக் கண்டு  கூடியிருந்த ரசிகர்கள் மெய்ச்சிலிர்ந்து போகின்றனர்.  வேன் அரங்கத்திலிருந்து வெளியாகிறது.  இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று தங்கள் மனங்கவர் நாயகனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர்.

எம்.ஜி.ஆரை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னரே  அவரது குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சென்னை வந்துச் சேர்ந்ததும் எலும்புமுறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற  பிரபல டாக்டர் நடராஜனும் அங்கு  தயாராகக் காத்திருக்கிறார்.

கால்முறிந்த நிலையில் எம்.ஜி.ஆரின் கோலத்தைக் கண்ட  அவரது மனைவியர் சதானந்தவதியும், ஜானகி அம்மையாரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து  அழத் தொடங்கி விடுகின்றனர். அவர்களை தேற்றுவது எம்.ஜி.ஆருக்கு பெரும்பாடாகி விடுகிறது.

தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்திலும் கூட எம்.ஜி.ஆர். சென்னைக்கு தன் வீடு சென்று சேருவதற்கு முன்பாகவே விபத்துச் செய்தி தீப்பொறியாகப் பரவ, அவரது இல்லத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது.

சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்துப் போகிறார்.   “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் செல்கிறார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள “ராமாராவ் நர்சிங் ஹோமில்” எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உடனடியாக ஊடுகதிர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.  கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை  விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி எல்லோருக்கு சற்று மனஆறுதல் தருகிறது. தகுந்த சிகிச்சை மற்றும் “பிஸியோதெரபி” சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.

சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்ற மருத்தவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி காலில் கட்டு போடப்பட்டிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து கதறிக்கதறி அழுகிறார். அவரை எம்.ஜி.ஆரே சமாதானப்படுத்துகிறார். “எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுகிறீர்களே!” என்று அவரை தேற்றுகிறார்.

இந்த அளவிற்கு பலமான எலும்பு முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால்  இந்நேரம் கதறித் துடித்து இருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தனது வேதனை மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாதென்று மிகச் சாதாரணமாக நடந்து கொண்டார்.

சுமார் 1 மாத காலம் எம்.ஜி.ஆர் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பிறகு லாயிட்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில்  சுமார் 5 மாதம் ஓய்வெடுக்கிறார்.

சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் அதுதான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. “வெறும் வாய்க்கு மெள்ள அவல் கிடத்ததைப்போல” எம்.ஜி.ராமச்சந்திரனின் கலைவாழ்வு சகாப்தம் இத்தோடு முடிந்து விட்டது என்ற ரீதியில் பத்திரிக்கைகள் முகாரி ராகம் பாடுகின்றன.

“நாடோடிமன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கண் திருஷ்டியை[ப்போல இந்த சம்பவம் அமைந்து விட்டது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்   கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவுகிறது.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்:

 “எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னைவிடவும் அதிக வலிமையோடு காட்சி தந்தார்.  நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!

அது மட்டுமின்றி கால்கள் மேலும் வலுபெற தனது ராமாவரம் தோட்டத்தில் நீச்சல் குளம் ஒன்றை அமைத்து கால்களுக்கு பலம் சேர்த்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட இந்த பலத்த கால் முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இவ்வளவு விரைவில் குணமடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு தனது உடல் நலத்தில் அக்கறை காட்டினார்

தன்னைக் காண வரும் ஒரு சிலர் அவரது காயத்திற்கு அனுதாபம் ஏற்படும் வகையில் பேசினாலும், “இப்படியெல்லாம் பேசி என்னை நோயாளியாக்கி விடாதீர்கள் எனக்கு ஒன்றுமே இல்லை” என்று அன்பு வேண்டுகோள் விடுப்பார்.

இதற்கு காரணம் எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மிகுந்த மனோதைரியத்துடன் எம்.ஜி.ஆர் இருந்ததே ஆகும். நோய்களின் விரைவான நலத்திற்கு மருத்துவ சிகிச்சை ஒருபுறம் இருப்பினும், அதைவிட முக்கியம் நமது மன உறுதியே என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மீது தில்லையாடி சிவராமன் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை முன்பே பார்த்தோம். சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ் மூலம் ‘அட்ஜஸ்டபல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து ஒரு ஆள் மூலம் அனுப்பி வைக்கிறார். பிற்பாடுதான்தான் யார் இதனை அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது.

– நாகூர் அப்துல் கையூம்

பின்குறிப்பு:

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டவுடன் முதலுதவி செய்வதற்காக ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் மேடைக்கு அழைக்கப்பட்டதாக மேலே குறிப்பிட்டிருந்தேன். அவர் பெயர் டாக்டர் சம்பந்தம் பிள்ளை. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தேர் மேலவீதியில் இருந்த கொஞ்சம் பெரிய சைஸ் ஓட்டு வீடுதான் அவருடைய கிளினிக். .அவரது கிளினிக்கில் வைத்து எம்.ஜி.ஆருக்கு தீவிர முதலுதவி சிகிச்சை மேற்கொண்டபின்தான் சென்னைக்கு எம்.ஜி.ஆர். காரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு முதலுதவி தந்த காரணத்தினாலேயே அந்த டாக்டர் ஊரில் பிரபலமடைந்து இருக்கிறார். ‘குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்’ என்று இதற்காகத்தான் சொல்கிறார்கள் போலும். தங்களின் மனங்கவர்ந்த நாயகன் சிகிச்சை பெற்ற அந்த புண்ணியஸ்தலத்தைக் (?)  காண தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் அவரது பக்தகோடிகள் வந்து தரிசித்துவிட்டுப் போவது வாடிக்கையான நிகழ்வாக  இருக்கிறதாம். தனக்கு உதவி செய்பவர்களுக்கு பரிகாரமாக ஏதாவதொன்றைச திரும்பச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த உயர்ந்த உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். பிற்பாடு டாக்டர் சம்பந்த பிள்ளையின் புதல்வருக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு இடம் வாங்கித் தந்தார் என்ற செய்தி மனதுக்கு நிறைவாக இருக்கிறது. –தகவல் உதவி: சீர்காழி கவிஞர் தாஜ் .

 

 – தொடரும் 

 

Tags: , ,

10 responses to “எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

  1. தாஜ்...

    October 17, 2014 at 7:55 pm

    அன்புடன் கையூம் ஸாருக்கு…

    கட்டுரையின் இந்தப் பகுதியும் மிக தெளிவாக, நெகிழ்ச்சியாக இருந்தது. கட்டுரைக்கு நீங்கள் சிரமம் கொண்டு தேடிப்பிடித்து பிரசுரித்திருக்கும் புகைப் படங்கள் மிக நன்றாக இருந்தது.

    ‘சீர்காழியில் இன்பக்கனவு’ பகுதி மிக சிறப்பு. இந்தப் பகுதியில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கால் முறிவு கண்டவுடன் முதலுதவி செய்ததாக மில்டிரி ரிட்டன் டாக்டர் ஒருவர் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இவர் குறித்து உங்களுக்கு முன்னறே எழுதாது விட்டுவிட்டேன். இந்த விடலுக்கு என் ஞாபக் குறைவுதான் காரணம்.

    அவர் பெயர் டாக்டர் சம்பந்தம் பிள்ளை. மில்ரி ரிட்டன்தான். தேர் மேலவீதியில் இருந்த அவரது கிளினிக்கில் எம்.ஜி.ஆர்-க்கு தீர முதலுதவி செய்யப்பட்டப் பிறகுதான் சென்னைக்கு எம்.ஜி.ஆர். காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

    எம்.ஜி.ஆருக்கு முதலுதவி தந்ததாலேயே அந்த டாக்டர் ஊரில் பிரபலமானார். அவரது கிளினிக்கை காண தமிழத்தில் இருந்து பல திக்கிலிருந்தும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் வருவது அப்போது வாடிக்கையாக இருந்தது. அந்த கிளினிக் என்பது கொஞ்சம் பெரிய சைஸ் ஓட்டுவீடுதான்!

    பிற்காலத்தில், அந்த டாக்டரின் பையனுக்கு மெடிக்கல் காலேஜில் எம்.ஜி.ஆர். சீட் ஒன்றை வாங்கி கொடுத்தார் என்பதும் தெரியும்.

    கட்டுரையில் மற்றொரு தகவலாக வரும், சீர்காழியில் ஐந்து தியோட்டர் சங்கதி முற்றிலும் தவறானது. ஒரே ஒரு தியோட்டர்தான் அப்போது. அதன் பெயர்: ஃபோர் ஸ்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னொரு தியோட்டர் வந்ததாக நினைவு. பெயர்: ஜூபிடர்.

    ரவீந்தர் குறித்த உங்கள் வழியிலான செய்திகளும், அவர் குறித்த மறைக்கப்பட்ட உண்மைகளுக்குமாக நீங்கள் கொண்டிருக்கும் சத்திய தாகம் பெரிது! உங்களது அடுக்கடுக்கான சான்றுகளுக்கு சாட்சிக் கூற இன்னொரு ஆதார முகாந்திரங்கள் இல்லாமல் போனதே என்பதில் எனக்கு வருத்தமும், நெருடல் உண்டு.

    கையூம் ஸாருக்கு என் வாழ்த்தும் நன்றியும்.

     
  2. Mohamed Iqbal

    October 18, 2014 at 11:01 am

    சகோதரர் அப்துல் கையூம்.,

    நாம் அறிந்த பிரபலங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.! அதனால் தினத்தந்தியில் வெளியாகி வரும் ஆரூர் தாஸின் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.! ஆனால் உங்களது கட்டுரை இன்னும் விளக்கமாக அமைந்துள்ளது.! பாராட்டுக்களோடு எனது நன்றி.!

     
  3. தாஜ்...

    October 18, 2014 at 1:48 pm

    உங்களது பார்வையில் – வடிவத்தில் நீங்கள் மிக அழகாக அந்தக் குறிப்பை பதிந்திருக்கின்றீர்கள்!

    மேலும் ஒரு செய்தி:

    டாக்டர் சம்பந்தத்தின் பையன், மெடிக்கல் காலேஜில் தன்னோடு படித்த பெண்ணை காதலித்து அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க, டாக்டர் அதனை ஏற்று கொள்ளவில்லை.

    அது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காலமாகையால், தனக்கு ஒரே ஒரு மகன்தான் என்றிருந்தும், மகனின் காதலுக்கு அவர் ஓகே சொல்லவில்லை. சுபாவத்திலேயே அந்த டாக்டர் கோபக்கார். அந்தக் கோபத்தை பையனிடமும் காட்ட பையன் அந்தக் காலக்கட்டத்து வழக்கப்படி விஷம் அருந்தி மாண்டான். அந்தப் பெண்ணும் அதையே செய்து தன்னை முடித்துக் கொண்டாள்.

    ஊரே டாக்டரை விமர்சிக்க தொடங்கியது. ‘இத்தனைப் படித்திருந்தும் இவருக்கு அறிவில்லையே!’ என்று. சீர்காழி மக்களின் / அவரது சொந்தக் கிராமமான பக்கத்திலுள்ள செம்மங்குடி உறவுகளின்… தூசனைகளை அவரால் சகிக்க முடியவில்லை.

    மனமுடைந்த டாக்டர், வைத்தியம் பார்ப்பதை விட்டார். சில நாட்களில் நொந்து நூலாகி போய் ஒரு நல்ல நாள் பார்த்து அவரும் விஷம் அருந்தி போயே சேர்ந்துவிட்டார்.

    காதல் நிகழ்வு பொருட்டும், பையன் விஷம் அருந்தி மாண்ட செய்தி பொருட்டும் எம்.ஜி.ஆர். டாக்டரை அழைத்து கடினமாய் பேசியதாக கேள்வி. அழுந்தச் சொல்ல தக்க சான்றில்லை. டாக்டரை எம்.ஜி.ஆர். அவர்கள் கடித்துக் கொண்ட செய்தி கட்சிகாரர்கள் பேசிக் கொண்ட தகவலில் கிடைக்கப் பெற்றதுதான்.

    ஆனால், அந்தப் பையன் மெடிக்கலில் படித்தக் காலத்தில் அவ்வப்போது அவனை அழைத்து அன்பு பாராட்டி வந்ததென்பது உண்மை. அத்தனைக்கு அவன் மீது பாசமாக இருந்தார். அது உறுதியாகத் தெரியும்.

    கையூம் ஸாருக்கு வாழ்த்துக்கள். கட்டுரை சிறக்க வேண்டும். உங்களது சீரிய உழைப்பு வெல்ல வேண்டும்.மீண்டும் வாழ்த்துக்கள்.

     
  4. தாஜ்...

    October 21, 2014 at 5:55 pm

    கையூம் ஸார்…
    உங்களது முந்திய கட்டுரையில்
    கருணாநிதி நடத்திய
    கல்லக்குடி பெயர் மாற்ற போராட்டத்தை
    சரியான கோணத்தில்
    கிண்டலும் கேலியுமான
    விமர்சன வரிகளில்
    நீங்கள் எழுதி இருந்தமையில்
    யாரெல்லாம் ரசித்து
    உள்வாங்கி சிரித்தார்களென்று தெரியாது.
    நான் மிகவும் ரசித்து சிரித்தேன்.
    அன்றைக்கு இதனை பதிய
    விட்டுவிட்டதினால்…
    இன்றைக்கு எழுதிவிட்டேன்.

    அக்கட்டுரையில் குறிப்பிட தகுந்த
    இன்னுமான இரண்டு சங்கதிகள் உண்டு.
    ஒன்று. இப்பவும்
    அந்த ஸ்டேஷன்
    டால்மியாபுரமாகவே இருக்கிறது.
    (இது சரி என்று நம்புகிறேன்)

    இரண்டு.
    அந்த போராட்ட களத்தில்தான்,
    தமிழ்ப் படித்த ராஜாத்தியை(அம்மாளை)
    அதாவது….
    கருணாநிதியின் சட்டமன்ற
    வாக்கு மூலப்படிக்கு…
    என் மகள் கனிமொழியின் தாயார் என்கிற
    அந்த ராஜாத்தி அம்மாவை கைப்பிடித்தார்!

    தமிழுக்காக போராடப் போன
    போராட்டக் களத்தில்
    நாலாவது மனைவிக்கான
    இந்தக் காதல்தான்…
    எத்தனை உணர்வு பூர்வமான சங்கதி!!

    நீங்கள் இதனை சரிபார்த்து
    சரியென்கும் பட்சம்
    கட்டாயம்
    இந்தக் காதல் சுவையை
    அந்தக் கட்டுரையின்
    ஒரு ஓரத்தில் சேருங்கள்.
    நன்றி.

     
  5. shaajahans

    October 23, 2014 at 1:52 pm

    மிக அருமை

     
  6. shaajahans

    October 23, 2014 at 1:59 pm

    pls send your email ID to post some pics.

     
  7. rathnavelnatarajan

    November 23, 2014 at 11:18 am

    எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

    09
    OCT
    டால்மியாபுரம் போராட்டம் (1953) = அன்புள்ள தூயவன் → அப்துல் கையூம் = அருமையான, சற்று விரிவான பதிவு. நிறைய அரசியல் செய்திகள் பொதிந்தது. எல்லோரையும் பற்றி செய்திகள் இருக்கின்றன. = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு அப்துல் கையூம்

     
  8. rathnavelnatarajan

    November 23, 2014 at 11:18 am

    எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3

    09
    OCT
    டால்மியாபுரம் போராட்டம் (1953) = அன்புள்ள தூயவன் → அப்துல் கையூம் =
    அருமையான, சற்று விரிவான பதிவு. நிறைய அரசியல் செய்திகள் பொதிந்தது.
    எல்லோரையும் பற்றி செய்திகள் இருக்கின்றன. = எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு அப்துல் கையூம்

     
  9. Rajeswari Chelliah

    November 23, 2014 at 3:03 pm

    கோடானு கோடி நன்றி என்பதை தவிர வேறோன்றும் சொல்லத் தோ ன்றவில்லை. நல்லவரைப் பற்றி நிறைய எழுதுங்கள்

     
  10. krish

    July 16, 2015 at 4:59 pm

    அன்பு நண்பரே
    இன்று தான் உங்கள் கட்டுரை பற்றி அறிந்தேன். திரு ரவீந்தர் அவர்களை பற்றி திரு வலம்புரி ஜான் அவர்கள் மூலமாக சிறிது அறிந்து கொண்டு உள்ளேன். இப்போது உங்கள் ப்ளாக் மூலமாக நிறைய தகவல்களை அறிந்து கொண்டு உள்ளேன். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

    என்றும் நட்புடன்
    கிருஷ்ணன்

     

Leave a comment