RSS

நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்


(மீள்பதிவு என்றாலும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு)

நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்

இசையுலகிற்கு நாகூர் வழங்கிய இசைவாணர்களில் இரண்டு ஆளுமைகள் அதிகமாகப் பேசப்படுபவர்கள். ஒருவர் ‘இசை முரசு’ நாகூர் இ.எம்.ஹனிபா. மற்றொருவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர். வித்வானுக்கு உள்ளூரில் இன்னொரு பெயர் “பவுன் வீட்டு தம்பி”.
ஆம். பவுனு பவுனுதான்.

இவர் பிறந்தது 1923 டிசம்பர் மாதம். இசைமுரசு பிறந்ததும் அதே டிசம்பர் மாதம்தான். டிசம்பர் மாதத்திற்கும் இசைக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. சென்னையில் டிசம்பர் மாதத்தில்தான் இசைக்கச்சேரி களைகட்டுகிறது.

25.8.1952 -ல் இவருக்கு ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளித்து கெளரவித்தார்கள். இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவும் இவருடைய திறமையை மதித்து மிகுந்த மரியாதை இவருக்கு செலுத்தி வந்தார். .

எஸ்.எம்.ஏ காதரைக் குறித்து சொல்லும்போது “இசையார்வம் அவரை பணக்காரர் ஆக்கியது” என்பார்கள். ஆம். அதற்கு முன்பு அவர் அதைவிட பணக்காரராக இருந்தார். இசையால் அவர் சம்பாதித்ததை விட இழந்தது அதிகம் என்பதற்காக இப்படி வேடிக்கையாகச் சொல்வார்கள். நாகூர்க்காரர்களின் குசும்புக்கு குறைச்சலா என்ன?

எஸ்.எம்.ஏ. காதர் அவர்களின் குரு யாரென்றால் வாய்ப்பாட்டு வித்தகரும் ஹார்மோனியம் கலைஞருமான நாகூர் தர்கா வித்வான் தாவூத் மியான் கான். .(இறப்பு: 1940). இவர் ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் கரை கண்டவர்.

எஸ்.எம்.ஏ.காதரைப் பற்றி நாம் அறிய முற்படுகையில் அவரது குருநாதர் தாவூத் மியான் கான் பற்றியும் அவரது இசைக் குடும்பத்தின் பின்னணி பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம். இவரிடத்தில்தான் வித்வான் குருகுல கல்வி முறையில் இசை பயின்றார்.

“யாரிந்த தாவூத் மியான் கான்?” என்று கேட்டால் புகழ்ப் பெற்ற இசைக்கலைஞர் நன்னு மியானுடைய பேரர்.

அது சரிங்க. “யாரு இந்த நன்னு மியான்?” என்று கேட்டால் நன்னு மியானும் அவரது சகோதரர் சோட்டு மியானும் புதுக்கோட்டை சமஸ்தானத்து ஆஸ்தான கலைஞர்களாக விளங்கியவர்கள். இருவரும் நாகூர்க்காரர்கள். அந்தக் காலத்தில் ஹிந்துஸ்தானி இசையில் புகழ்ப் பெற்றிருந்த இசைவாணர்களை ‘உஸ்தாத்’ என்று அடை மொழியிட்டு அழைப்பது வழக்கம்.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உஸ்தாத் நன்னு மியான் & உஸ்தாத் சோட்டு மியான் இவ்விருவரும் உஸ்தாத் தாவுத் மியானின் பெரிய தாத்தா, சின்ன தாத்தா. என்ன தலை சுத்துதா? இன்னும் இருக்கு.

நன்னு மியான் & சோட்டுமியான் – இவ்விருவரும் புகழின் உச்சியில் இருந்த காலத்தில்தான் தமிழகத்தில் ஆர்மோனியம் என்ற மேனாட்டு இசைக் கருவியைக் கர்நாடக இசை அரங்குகளில் பக்க வாத்தியமாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.
சோட்டு மியான் “தர்பார் கானடா” என்ற ராகத்தை லாவகமாக பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவருக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘தர்பார் கானடா சோட்டுமியான்’ என்பதாகும்.

நன்னுமியான் என்பவர் சோட்டு மியானின் சின்ன தம்பி. “டோலக்” வாத்தியத்தில் வித்தை காட்டுபவர். அக்காலத்தில் இவரைப் போல் “டோலக்” வாசிப்பவர் எவருமில்லை என்பார்களாம். இதனாலேயே இவரை “டோலக்கு நன்னு மியான்” என்று அடைமொழியிட்டு மக்கள் அழைத்தனர்.
அதுமட்டுமல்ல, மத்தளத்திலும் இவர் வித்தகர். மத்தளம் வாசிப்பதில் நிகரற்ற கலைத்தெய்வம் நந்தீசுவரர் என்ற ஐதீகம் உண்டு. இவரும் தாளக்கட்டையில் நிகரற்று விளங்கியதால் இவரை “நந்தீசுவர நன்னுமியான்” என்று பாராட்டி மகிழ்ந்தனர். இவரது இசை குருநாதர் வேறு யாருமல்ல, இவருடைய அண்ணன் சகல கலா வல்லவர் சோட்டு மியானேதான்.

இவர் அனைத்து தோல்கருவிகளை வாசிப்பதிலும் திறன் பெற்றிருந்தார். பன்னிரண்டு சுரத்தாளங்களுக்கும் பன்னிரண்டு கற்களை வரிசையாக வைத்து ஜலதரங்கம்போல் ஒருமுறை இவர் வாசித்துக் கண்பித்தபோது புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசர் அப்படியே பிரமித்துப் போய் நின்றாராம்.
சோட்டு மியானுக்கு இன்னொரு மகனாரும் உண்டு. அவரும் மிகப் பெரிய இசைக் கலைஞர். அவர் பெயர் கவுசு மியான். (தயவு செய்து இவர்கள் எல்லோருக்கும் உஸ்தாத் என்ற அடைமொழி சேர்த்துக் கொள்ளுங்கள். கை வலிப்பதால் ஒவ்வொரு முறையும் ‘உஸ்தாத்’ தட்டச்சு செய்ய என்னால் முடியவில்லை) இவரும் “நாகூர் தர்கா வித்வான்” என்ற கெளரவப் பதவி ஏற்று வாழ்ந்தவர்.

கர்நாடக இசையரங்கில் ஆர்மோனியத்தை பக்க வாத்தியமாக அறிமுகம் செய்தவர் கவுசு மியான்தான் என்கிறார்கள். ஒருமுறை மேடையில் சோட்டு மியான் வாய்ப்பாட்டு பாட, கவுசுமியான் ஆர்மோனியம் வாசிக்க, திருப்தி அடையாத சோட்டு மியான் செம கடுப்பாகி ‘கமகம் இல்லாத வாத்தியம்; நிறுத்திவிடு’ என்று தன் மகனிடம் கூற அதன் பிறகு அதைக் கமகத்துடன் வாசிக்கப் பழகிக் கொண்டாராம். அதன் பிறகு இசைக்கச்சேரிகள் ‘கமகம’ என்று மணக்கத் தொடங்கியது.
தாவூத் மியான் கானுடைய மாணவர் எஸ்.எம்.ஏ.காதர் என்று சொன்னோம் அல்லவா?. அவருடைய இன்னொரு மாணவர் யாரென்றால் கிட்டப்பா. (இதனால் தெரிவித்துக் கொள்வது யாதெனில், இந்த கிட்டப்பாவுக்கும் ‘பாகுபலி’யில் வரும் கட்டப்பாவுக்கும் யாதொரு சம்பந்தமும் கிஞ்சித்தும் கிடையாது)
“யாரிந்த கிட்டப்பா?” என்றுதானே கேட்கின்றீர்கள். பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்று தொடங்கும் பாட்டை நாமெல்லொரும் கேட்டு ரசித்திருப்போம்.

//கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரிலெ பார்த்தேன்,
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா//

என்ற பாடல் வரிகள் நமக்கு நினைவிருக்கும் .

“ஆண்பாவம்” என்ற படத்திலும் “காதல் கசக்குதய்யா” என்று தொடங்கும் பாடலில் “கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே” என்ற வரிகள் வரும். சாட்சாத் அந்த கிட்டப்பாதான் இந்த கிட்டப்பா. நாம் சொல்லும் இந்த கிட்டப்பாதான் அந்த கிட்டப்பா. அடேங்கப்பா !

செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அதாவது காசி ஐயர் & கிட்டப்பா, இந்த இரண்டு பேர்களையும் யாருக்கிட்ட இசை பயில அனுப்புறாரு என்று சொன்னால் நம்ம நாகூர் தர்கா வித்வான் உஸ்தாத் தாவுத் மியான் கானிடம்.

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா (1906–1933) என்பது ஊரறிந்த விஷயம்.

இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இளம் வயதிலேயே மரணமுற்ற இந்த கிட்டப்பாவின் மனைவிதான் கே.பி.சுந்தரம்பாள். இந்த கே.பி.சுந்தரம்பாள் யாரென்று சொன்னால்…. என்று நான் ஆரம்பித்தால் நீங்கள் என்னை அடிக்க வருவீர்கள். ஏனென்றால் கே.பி.எஸ். அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இங்கே இருக்க முடியாது. அந்த காலத்துலேயே “பக்த நந்தனார்” படத்திலே நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கியவர் என்றால் சும்மாவா?. இப்ப இது ரஜினிகாந்த் வாங்குற படச்சம்பளத்தைக் காட்டிலும் அதிகம்.

கிட்டப்பாவின் பாடல்களில் சில சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக அந்த காலத்து ‘சுப்புடுகள்’ விமர்சனம் செய்ததுண்டு. அதற்கு காரணம் எஸ்.எம்.ஏ.காதரின் உஸ்தாத் தாவுத் மியான் கானிடம் கிட்டப்பா பெற்ற இசைப்பயிற்சியின் தாக்கம்தான் என்பார்கள். மதுரை சோமு பாடும்போதுகூட சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்குமாம். பலே.. பலே.

ஆக கிட்டப்பாவுக்கும், எஸ்.எம்.ஏ.காதருக்கும் குரு ஒருவரேதான். அவர் தாவூத் மியான் கான். ஒரு கொடியில் இரு மலர்கள்.

தாவுத் மியான் கான் ‘மால்கோஸ்’ ராகம் பாடி நாகூர் ஆண்டகையிடம் பிரார்த்தனை செய்ததால் இவருடைய தீராத கால் வியாதி குணமானது என்பார்கள்.

இப்ப இன்னொரு கொசுறு செய்தி. நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதருக்கு இன்னொரு பிரபல சிஷ்யரும் உண்டு. அவர் பெயர் ‘இசைமணி’ எம்.எம்.யூசுப். இவரும் நாகூர்க்காரர்தான். இசைமணி எம்.எம்.யூசுப்பிற்கு சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து கெளரவித்தார்கள். அச்சமயம் இவருடன் அதே மேடையில் ‘இசைமணி’ பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர். நேசமணி யாரென்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த இசைமணியைத் தெரிய வாய்ப்பில்லை.

‘இசைமணி’ யூசுப் அநாயாசமாகத் மேல் தட்டு ஸ்வரங்களைத் தொட்டு உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர். தார ஸ்தாயி, அதி தாரஸ்தாயி என்று பல இடங்களிலும் சர்வ லகுவாக சஞ்சாரம் பண்ணுவதில் பயங்கர கில்லாடி. கவிஞர் சாரண பாஸ்கரனார் எழுதி, இசைமணி எம்.எம்.யூசுப் பாடிய

//மண்ணகத்தின் இழிவு மாற்றி,
விண்ணகத்தின் உயர்வு சாற்றி
பொன்னகத்தில் அண்ணல் நபி வந்தார்; – அவர்
தன்னகத்தில் சாந்தியின்பம் தந்தார்//

என்ற பாடலை கேட்கையில் மனம் குளிர்ந்து போகும்.

“நாகூர் ஹனிபாவுக்கு ‘இசைமுரசு’ என்றும், எம்.எம்.யூசுப்பிற்கு ‘இசைமணி’ என்றும் பொருத்தமாகத்தான் பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் ஒருமுறை கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் சொன்னார்.

“ஏன் நானா இப்படி சொல்றீங்க?” என்று நான் கேட்டதற்கு “ஓய்! மணியில் நாதம் இருக்கும் அதனால்தான் ‘இசைமணி’ பட்டம். முரசு சப்தம் அதிர வைக்கும். ஆனால் நாதம் இருக்காது. அதனால்தான் ‘இசைமுரசு’ பட்டம் ” என்று கோனார் நோட்ஸ் போட்டு விளக்கினார். “நமக்கு வேண்டாம்பா இந்த வம்பு” என்று அங்கிருந்து நான் ஜூட் விட்டேன்.

எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் குருநாதர் தாவூத் மியான் வாய்ப்பாட்டில் மட்டுமல்ல, ஆர்மோனியத்திலும் வல்லவர் அதுபோல திருச்சி உறையூர் டி.எம்.காதர் பாட்சாவும் ஆர்மோனியத்தில் வல்லவர். இருவருக்குமிடையே மேடையில் ஆர்மோனிய வாத்தியத்தில் ‘ஜுகல்பந்தி’ போட்டிகள் நடைபெற்றதுண்டாம்.

ஒருசில மேடைகளில் தாவூத் மியான் வாய்ப்பாட்டு பாட, ஆர்மோனியச் சக்கரவர்த்தி உறையூர் டி.எம்.காதர்பாட்சா ஆர்மோனியம் வாசித்ததும் உண்டு.

“ சுரவோட்டத்திற்கு தாவூத் மியான், கரவொட்டத்திற்கு காதர் பாட்சா” என்று அக்காலத்தில் பழமொழி சொல்வார்கள். கரவோட்டம் என்றால் KEYBOARD FINGERING. அத்னான் சாமி எப்படி பியானோ கீ போர்ட் துரிதமாக வாசிப்பதில் உலகச் சாதனை படைத்தாரோ அதுபோல ஆர்மோனியக் கட்டைகளில் காதர்பாட்சாவின் விரல் வித்தை ஜாலம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும்.

ஜோகூர் சுல்தான் அரசவையிலும், இரங்கூன் நகரம் மற்றும் இலங்கை நாட்டிலும் இவரது நிகழ்ச்சிகள் நடந்துள்ளன, ஜோகூர் சுல்தான் மலேசிய நகரின் ராஜவீதிகளில் கோச்சு வண்டியில் இவரை அமரவைத்து பவனி வரச் செய்து தங்கப்பதக்கங்கள் அளித்து கெளரவித்தாராம். தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் வரை இவர் மீது மிகுந்த பக்தியும் , மரியாதையும் வைத்திருந்தனர்.

காரைக்காலில் நடந்த ஓர் இசையரங்கில் தாவூது மியானிடம் காதர்பாட்சா தோற்றுப் போனதாகக் கூறுவர். ‘அல்லாஹு’ என்ற பாடலைத் தாவூது மியான் சிறப்பாகப் பாடுவாராம். அதனால் அவருக்கு ‘அல்லாஹு தாவூதுமியான்’என்ற பட்டப் பெயரும் உண்டு.

நாகூர் பிரபலங்களில் ஒருவரான நீதியரசர் எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள் இலக்கியப் பிரியர் மட்டுமல்ல கர்நாடக சங்கீதப் பிரியரும்கூட. 1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணியபோது அதற்கான முழு ஆலோசனையும் பெற்றது இவரிடத்தில்தான்.

இப்ப மறுபடியும் ஊரெங்கும் சுற்றி மறுபடியும் நம்ம தலைப்பிற்கு வருவோம் அதாவது எஸ்.எம்.ஏ.காதர் அவர்களைப் பற்றி பேசுவோம்
எஸ்.எம்.ஏ.காதருக்கு குன்னக்குடி வைத்தியநாதன் பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ‘காரண நபியே’ என்ற ‘அம்சத்வனி’ ராகத்தில் அமைந்த பாடலுக்கு வயலின் வாசித்தது சாட்சாத் நம்ம பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் அவர்களேதான். “வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்” என்று இவரது சிறப்பைக் கூறுவார்கள்.

எஸ்.எம்.ஏ.காதர் பாடிய ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற கும்மி பாடல் கொலம்பியா இசைத்தட்டில் பெரும் சாதனை படைத்தது.
பைரவி ராகத்தில் ஆதி தாளத்தில் இவர் பாடிய “சேது சாரா” என்ற பாடல் ஓர் இஸ்லாமிய இசைக்கலைஞர் பாடிப் பதிவு செய்த தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையைத் தட்டிச் சென்றது.

பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி இந்த ஐந்து ராகங்களையும் ஒரே பாடலில் கலந்து பாடி பாராட்டைப் பெற்ற இசை ஞானி இவர்..
குணங்குடி மஸ்தான் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக் களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், காசிம் புலவர், உமறுப் புலவர் போன்ற எண்ணற்ற புலவர்களின் பாடல்களை பாடிய சிறப்பு இவருக்குண்டு.

கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச் சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு மிகவும் பிரபலம். இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் ஏராளமாக உள்ளன. கும்மிப்பாட்டு, குறவைப் பாட்டு, ஞானப் பாட்டு, சாஸ்திரிய கானங்கள், இஸ்லாமிய கானங்கள் என இவர் இசைத்தட்டுகளில் பாடிய பாடல்கள் ஏராளம் ஏராளம்.
முனைவர் இரா. திருமுருகன், பேராசிரியர் முரளி அரூபன், முனைவர் நாகூர் ரூமி, எழுத்தாளர் சாரு நிவேதிதா இன்னும் பலர் நாகூர் இசைக் கலைஞர்களைப் பற்றி ஆராய்ந்து நிறைய எழுதியுள்ளனர்.

பொதுவாகவே இஸ்லாமியர்களுக்கும் கர்நாடக இசைக்கும் யாதொரு சம்பந்தமில்லை என்ற பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.

இசை வேந்தர் கும்பகோணம் எஸ்.டி.சுல்தான், இசையருவி குமரி அபுபக்கர் நாகர் கோவிலைச் சேர்ந்த ஹுசைன் பாகவதர், மதுரை ஹுசைனுத்தீன், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது, ‘மயில் ஏறும் ராவுத்தர்’ ஷேக் சாகுல் ஹமீது எனும் ராஜா முகம்மது இவர்களின் பெயர்கள் கர்நாடக இசையுலகில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர்கள்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதிர் அவர்களது சங்கீத மேன்மையைக் கேள்விப்பட்டு அவரைக் காண அவரது இல்லம் தேடி வந்திருக்கிறார். உலகமே போற்றி வியக்கும் ஆஸ்கார் நாயகனை நடுக்கட்டில் அமர வைத்துவிட்டு தந்தையை அழைப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார் அவரது புதல்வன், என்னுடைய நண்பர் நூர் சாதிக் :

“ஏ.ஆர்.ரஹ்மான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்காஹா வாப்பா” என்று மகன் சொல்ல, கசங்கிப்போன கைலியும், கிழிந்துப்போன முண்டா பனியனும் அணிந்திருந்த சங்கீத மேதை, அவரை சந்திப்பதற்காக அப்படியே கிளம்பியிருக்கிறார்.

“வாப்பா! பனியன் கிழிஞ்சிருக்கு வேற உடுப்பு போட்டுக்கிட்டு போங்க” என்று மகன் அன்புக்கட்டளை இட வித்வானுக்கு வந்ததே கோவம்.

“ஓய் அவரு என்னை பார்க்க வந்திருக்காரா? இல்லே என் சட்டையை பார்க்க வந்திருக்காரா?” என்று எரிந்து விழ, மீறி வற்புறுத்தினால் எங்கே முரண்டு பிடித்து ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க மறுத்து விடுவாரோ என்று மகன் அமைதியாகி விட்டார்.

இவரிடம் என் நண்பர் நாகூர் ரூமியும் கொஞ்ச காலம் இசை பயின்றார். நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ ஆறு மாதத்திற்குள்ளேயே அவர் பாதியில் விட்டு விட்டார். இல்லையென்றால் அவரையும் பாகவதராக்கி, தம்பூரா வாசித்துக்கொண்டே அவர் பாடும் கர்நாடகப் பாடலை இந்த இசையுலகம் கஷ்டத்துடன் கேட்டு இம்சை அனுபவித்திருக்கும்.

HMV மற்றும் கொலம்பிய இசைத்தட்டு நிறுவனங்களில் இவருக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபா அவர்களை HMV இசைத்தட்டு நிறுவனத்தில் இவர்தான் அறிமுகம் செய்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

சங்கீத மேதை எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் இறப்புக்கு சிறிது காலம் முன்பு 19.08.2009 அன்று நாகூர் தர்கா வளாகத்தில் நாகூர் தமிழ் சங்கம் அவருக்கு “வாழ்நாள் விருது” அளித்து கெளரவித்தது. கலைமாமணி இ.குல்முகம்மது இறைவணக்கப் பாடல் பாட கூட்டம் இனிதே தொடங்கியது. ஆன்றோர் சூழ்ந்திருந்த அச்சபையில் கவிஞர் இஜட் ஜபருல்லாஹ், கவிஞர் நாகூர் சலீம், கவிஞர் காதர் ஒலி. கவிஞர் இதய தாசன் போன்றோர் வித்வானைப் புகழ்ந்து கவிமழை பொழிந்தனர். அடியேனும் ஒரு கவிதை பாடினேன்.

நம்ம சங்கீத வித்வானைப் புகழ்ந்து கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் இப்படிப் பாடினார்:
இவர்

இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு
கிராமபோஃன் பெட்டியை
பக்கத்தில் வைத்துக்கொண்டவர்.

இவர் வீட்டில்
வெள்ளித் தட்டுகள்
உணவு மேசையில்
சாதாரணமாய் கிடக்கும்..!
இசைத்தட்டுகள் மட்டும்
பூட்டிய அலமாரிக்குள்
பத்திரமாக இருக்கும்..!

நான் கவிதை பாடுகையில் இப்படியாகப் பாடினேன் :

சரீரம் தளர்ந்தாலும்
சாரீரம் தளராத
வீரியமிக்க
ஆரிய வாசம் வீசும்
ஸ்வரம் இவர் வசம் – இது
இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON
இந்த மேதகு மரைக்கான்

இவருக்கிருந்த செல்வத்தில்
மாளிகைகள் கட்டி இருக்கலாம்
ஆனால் ..
மாளிகைகள் ஒருநாளில்
மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.
இவரிழைத்த
– ராகமாலிகை
– தாளமாலிகை
என்றென்றும்
எங்கள் காதுகளில்
தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும்
தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர்.
பாட்டென்றாலே
பலபேர் கத்துவான் – இந்த
பாட்டுடைத் தலைவன்
எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள்
many many – அதில்
தலையாய சீடர்தான்
இந்த “இசைமணி”

இவர் மட்டும்
ஐயர்வாளாய் இருந்திருந்தால்
இந்நேரம்
ஐநா வரை இவர் குரல்
எட்டியிருக்கும்

நாகூரில் பிறந்ததினால்
நாற்சுவரில் இவர் புகழ்
அடங்கிப் போனது.

இவர் கலப்படக்காரர் ..

செய்ததோ முறையான கலப்படம்
கலப்படத்தில் அதுவென்ன
முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும்
கர்னாடகத்தையும்
கலப்படம் செய்தது
நிரூபணம்

தலைக்கனமில்லா இவருக்கு
ஆரோகணம் முதல்
அவரோகணம் வரை
அத்தனையும் அத்துப்படி

தாளம் அறிந்த இவரை
ஞாலம் கண்டு கொள்ளாதது
காலத்தின் கோலம்

ஆம். சங்கீத உலகில் சாதனை படைத்த இவருக்கு ஒரு “கலைமாமணி” பட்டம் கூட தமிழக அரசு கொடுத்து கெளரவிக்காதது வேதனையிலும் வேதனை. அனுஷ்கா, தமன்னா, யோகி பாபு இவர்களுக்கு கூட “கலைமாமணி” பட்டம் கொடுத்து கெளரவித்து இருக்காங்களாம். என்னமோ போங்க.

அப்துல்கையூம்

(படம் 1 சங்கீத மேதை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்.
படம் 2 : வாழ்நாள் சாதனை விருது வழங்கும் விழாவில் (இடமிருந்து வலம்) விதவான் எஸ்.எம்.ஏ.காதர், இசைமணி எம்.எம்.யூசுப், அடியேன் அப்துல் கையூம், கவிஞர் இதயதாசன்)

 

நீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய நூல்களில் சில :


மெளலானா ஆஜாத் (1945) (வாழ்க்கை வரலாறு)
அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்
இனிக்கும் இராஜ நாயகம் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) (ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளைச் சொற்பொழிவு)
மும்மடங்கு பொலிந்தன. (1978) வானதி பதிப்பகம், சென்னை. பக். 259
கம்பன் கண்ட சமரசம் (1985) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
உந்தும் உவகை (1987) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
இலக்கிய மலர்கள் (சென்னை வானதி பதிப்பகம் 1990)
ஒரு மறக்க முடியாத அனுபவம் (1992) – வானதி பதிப்பகம் (கல்கியில் டிசம்பர் 8, 1985 வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு)
கம்பன் கண்ட ராமன்
செவிநுகர் கனிகள்
வள்ளலின் வள்ளல்
பழைய மன்றாடி – வானதி பதிப்பகம் 1980
மூன்று வினாக்கள் வானதி பதிப்பகம். பக். 410
நினைவுச்சுடர்,
தாயினும்…,
உலகப் போக்கு
நயத்தக்க நாகரிகம்
அடைக்கலம்
கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்

 

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு


தா.காசீம் அவர்களின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு பதிலாக அவருடைய ஒரே ஒரு பாடலில் காணப்படும் ஒரு சில வரிகளுக்கு மாத்திரம் விளக்கம் தந்தாலே இப்பதிவு நிறைவு பெற்றுவிடும்.

தா காசிம் எழுதி, நாகூர் சேத்தான் மெட்டமைத்து, இளையராஜா இசையமைத்து நாகூர் ஹனிபா பாடிய பாடல் இது ;

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

கொஞ்சம் நில்லு – எங்கள்

திருநபி யிடம் போய்ச் சொல்லு

சலாம் சொல்லு

என்று மதினாவில் அடங்கியிருக்கும் நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தென்றலைத் தூது விடும் பாடல்.

சன்மார்க்கம் தந்த நபி

துன்மார்க்கம் வென்ற நபி

என்ற வரிகள் இதில் இடம் பெறும். சன்மார்க்கம், துன்மார்க்கம் என்ற அழகிய சொற்பதங்களை கவிஞர் கையாண்டிருக்கிறார்.

அதென்ன சன்மார்க்கம் vs  துன்மார்க்கம்?

சத் என்றால் அழியாமலிருப்பது.  சத் + மார்க்கம் = சன்மார்க்கம்.

துன் மார்க்கம் என்றால் துஷ்ட மார்க்கம் அதாவது தீய நெறி.

இஸ்லாம் ஒரு மதம் அல்ல. அது ஒரு மார்க்கம். அது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்ற கருத்தை கவிஞர் முதலில் நம் மனதில் படிய வைத்து விடுகிறார்.

//வாய் வாதமிட்டுலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை//

என்ற சொல்லாடலை வள்ளலார் அருட்பாவில் கையாள்கிறார். வள்ளலாருக்கு முன்பு தாயுமானவரும், திருமூலரும் கூட இப்பதத்தைக்  கையாண்டுள்ளார்கள்.

//செத்தார் எழுக சிவமே பொருள்என்றே

இத்தா ரணியில் இருந்தொளிர்க – சுத்தசிவ

சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்

துன்மார்க்கம் போக தொலைந்து.//

என்று வள்ளலார் பாடுகிறார். தா.காசிம் பாடிய சன்மார்க்கம் + துன்மார்க்கம் இவையிரண்டிற்கும் இதில் விளக்கம் உள்ளது.

வள்ளலாரின் விளக்கப்படி சன்மாக்கி என்றால் என்றும் நிலைத்திருப்பவன். அரபியில் சொல்ல வேண்டுமென்றால் “யா கையூம்”. 

இப்போது பாடலின் அடுத்த வரியைப் பார்ப்போம்

//கடல்போன்ற பகைமுன்னே உடைவாளைக் கரமேந்தி

படைகொண்டு பகைவென்ற எம்மான் – பத்ரு

படையரசர் முகம் காண்ப தெந்நாள்?//

இந்த மூன்றே மூன்று வரிகள் நபிகளார் புரிந்த பத்ருப் போர் காட்சியினை நம் கண்முன் விரிக்கிறது.  .

‘கடல் போன்ற பகை முன்னே” என்று அவர் கூறுவது மக்க மாநகரத்து குறைஷிகளின் படை வெள்ளம்.

ஒரு பக்கம் நபிகளாரின் சிறிய படை. சுமார் 313 பேர்கள். முறையான கவச உடைகள் கிடையாது. இரண்டு குதிரைகள். 70 ஒட்டகங்கள். அவ்வளவுதான்.

எதிர் அணியில் ஏறக்குறைய 1300 படை வீரர்கள், 100 குதிரைகள். எண்ணிக்கையில் அடங்கா ஒட்டகங்கள். கவசமணிந்த படைவீரர்கள் மட்டுமே சுமார் 600 பேர்கள்

இப்படையையும்,அப்படையையும் ஒப்பிட்டால் நபிகளாரின் படை ஒன்றுமே இல்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் இறை நம்பிக்கையும், மனோதைரியமும் மட்டும்தான்.

நபிகளாரின் எதிரணியை “கடல் போன்ற பகை முன்னே” என்று கவிஞர் வருணிப்பது நல்லதொரு உவமை.

//உடைவாளைக் கரமேந்தி படைகொண்டு பகைவென்ற எம்மான்//

என்ற வரியில் நபிகள் பெருமானாரே போர்க்களத்தில் இறங்கி போர் புரிந்தார்கள் என்று கவிஞர் சொல்கிறார். ஆம், உண்மை.

நபிகளார் நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் சுமார் பத்தொன்பது. பத்ருப்போர் அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.  வியூகம் அமைத்தது முதற்கொண்டு களமிறங்கி சண்டை போட்டது வரை யாவுமே வரலாற்றில் பதிவாகி இருக்கிறது,

இப்போரில் அபூஜஹல் என்ற பெரும் எதிரியை வீழ்த்தியவர்கள் யார் தெரியுமா?  முஆத், முஅவ்வித் என்ற இரண்டு சிறுவர்கள். 

கடைசியில் போரில் வெற்றி வாகை சூடியது நபிகளாரின் அணிதான்,

இவ்வளவு விரிவான ஒரு வரலாற்றை “கடல் போன்ற’ என்ற ஒரே ஒரு  உவமையில் அடக்கிச் சொன்னது கவிஞரின் சொல்லாற்றலுக்கு தக்க சான்று,

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறளைப் போல “கடல்போன்ற” என்ற ஒரே வார்த்தையை வைத்து போர்ப்படலம் முழுவதையும் ஜாடியில் பூதம் போல அடக்கி விட்டார்.

சொற்சிலம்பம் ஆடத் தெரிந்தவனால் மட்டுமே இத்தகைய வித்தையை செய்து காட்ட முடியும்.

அதே பாடலில் வரும் மற்றொரு வரியைப் பார்ப்போம்

//எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது

இறை இல்லப் பாங்கோசைப் பெருமான்//

பள்ளிவாசல் அல்லது பள்ளிவாயில் என்று சொல்வதற்கு பதிலாக இறையில்லம் என்ற அவரது சொல்லாடல் நம்மை வெகுவாக  கவர்கிறது.

பாங்கோசையைக் குறிப்பிட்டு //எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது?// என்று சொல்வதன் மூலம் ஒரு மாபெரிய பூகோள விஞ்ஞான உண்மையை சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து போய் விடுகின்றார்.

இதற்கு நான் விளக்கம் சொல்வதென்றால் ஒரு நூலே எழுத வேண்டிவரும். சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

உலகமெங்கும் ஒரே போன்று ஒலிக்கும் பாங்கோசையில் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற நபிநாமம் ROUND THE CLOCK 24/7 நேரமும் ஒலிக்கிறது.

அறிவியல் அறிஞர்களின் கணக்குப்படி பாங்கொலி ஒலிக்காத நிமிடமே  கிடையாது, உலகெங்கிலும் எல்லா நேரத்திலும் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

எல்லோரும் ஒரே பாங்காகவே பாங்கு சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ‘அல்லாஹ் பெரியவன்’ என்றும், வட இந்தியாவில் ‘அல்லாஹ் படா ஹே’ என்றும் இங்கிலாந்தில் ‘GOD IS GREAT’ என்றும் சொல்வதில்லை. உலகம் முழுவதும் ‘அல்லாஹூ அக்பர்’ என்றுதான் பாங்கினை தொடங்குகிறார்கள்.

உதாரணமாக இந்தோனேசியாவில் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கோசை ஒலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் ஆப்ரிக்காவில் இரவு நேரத் தொழுகைக்கான பாங்கோசை ஒலிக்கிறது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உலக வரைபடத்தில் கிழக்குபுறம் இருக்கும் இந்தோனேசியாவில் அதிகாலை ஒலிக்கும் பாங்கொலி, இந்தோனேசியாவைக் சுற்றியிருக்கும் ஏராளமான தீவுகள் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, சைபில், என்று தொடர்கிறது.

சைபில் தீவின் கிழக்கு பக்கத்தில் 5.30 மணிக்கு அதிகாலைத் தொழுகை நேரம் என்றால் 180 மில்லியன்களுக்கும் கூடுதலாக  முஸ்லீம்கள் வசிக்கும் அந்நாட்டு சுற்றுவட்டார தீவுகளில் ஆயிரக்கணக்கான  பள்ளிவாயில்களில் ஒன்றன் பின் ஒன்றாக பாங்கோசை தொடர்ந்து ஒலிக்கின்றது. 

இத்தொடர்ச்சி ஒலிம்பிக் ஜோதி ‘ரிலே’ போன்று தொடர்கிறது. பின்னர் இந்தோனேசியாவின் மேற்கு பகுதிகளில் தொடர்கிறது. இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் மேற்கு தீவுகளுக்கிடையே உள்ள நேர வித்தியாசம் ஒன்றரை மணி நேரம், ஆக நாம் முன்னர் குறிப்பிட்ட சைபில் தீவில் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு புறப்பட்ட பாங்கோசை ஜகார்ட்டா, ஜாவா, சுமத்ரா தீவுகளில் ஒலிக்கிறது.

இந்தோனேசியா தீவுக்கூட்டங்களில்  இந்த பாங்கு தொடர் முடிவதற்கு முன்னரே இப்போது மலேசியா பின்னர் பர்மா என்று ஒலிக்கத் தொடங்கி விடுகிறது, பிறகு பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு பகுதிகள் கல்கத்தா பின்னர் ஶ்ரீநகர், பாம்பே மற்றும் இந்தியா முழுதும் ஒலிக்கின்றது.

ஶ்ரீநகரிலும் பாகிஸ்தானிலுள்ள சியால்கோட்டிலும் ஏறக்குறைய ஒரே நேரம்தான். சியால்கோட், கோட்டா, கறாச்சி, கோவதார் (பலூசிஸ்தானிலுள்ள நகரம்) இவைகளுக்கிடையிலுள்ள நேர வித்தியாசம் 40 நிமிடங்கள். இந்நேரத்தில் பாகிஸ்தானிலுள்ள அனைத்து பள்ளிவாயில்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக பஜ்ரு தொழுகைக்கான பாங்கோசை இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது

பாகிஸ்தானில் இது ஓய்வதற்குள் இப்போது இது தொடர்ந்து ஆப்கானிஸ்தான், மஸ்கட் என  பாங்கொலி கேட்கத் தொடங்கி விடுகிறது. மஸ்கட்டுக்கும் பக்தாதுக்கும் இப்போது நேர இடைவெளி ஒரு மணி நேரம்,

ஈராக்கைத் தொடர்ந்து அமீரகம், குவைத், சவுதி அரேபியா ஏமன் என்று பரவுகிறது. இப்போது எகிப்திலுள்ள அலேக்ஸான்டிரியாவுக்கும் பக்தாதுக்கும் ஒரு மணி நேரம் வித்தியாசம். இப்போது சிரியா, எகிப்து, சோமாலியா, சூடான் நாடுகளின் ஒவ்வொரு பள்ளிவாயிலிலும் தொடர்ந்தாற்போல் சிறு சிறு இடைவெளிகளில் பாங்கு சப்தம் கேட்ட வண்ணம் இருக்கின்றன,

அலேக்ஸான்டிரியாவும் இஸ்தான்புல்லும் ஒரே புவியியல் தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன. துருக்கியின் மேற்கு பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்குமே ஒன்றரை மணிநேரம் வித்தியாசம் இருக்கிறது.

இறைவனின் இந்த கணித விளையாட்டும் நமக்கு ஆச்சரியமாகவும் புரிந்தும் புரியாத புதிராகவும் இருக்கிறது.

அலேக்ஸாண்டிரியாவுக்கும் திரிபோலி நகருக்கும் (லிபியா) நேர கால இடைவெளி ஒன்றரை மணிநேரம். இக்கால இடைவெளியில் ஒவ்வொரு பகுதியிலும் பாங்கோசை ஓயாது ஒலித்துக் கொண்டே இருப்பது கவனிக்கத்தக்கது, அடுத்து ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஒலிக்கின்றது, ஆப்பிரிக்க கண்டம் எவ்வளவு பெரிய கண்டம் என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்தோனேசியாவின் கிழக்குத் தீவுகளில் ஒலிக்கத் தொடங்கிய பாங்கோசை ஒன்பதரை மணி நேரங்களுக்குப் பிறகு இப்போது அட்லாண்டிக் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியை எட்டி விடுகிறது, 

அட்லாண்டிக் கரையை இந்த தொடர் பாங்கோசை எட்டும் முன்னரே இப்போது இந்தோனேசியாவின் கிழக்கு பகுதிகளில் மதிய நேர லுஹர் தொழுகை தொடங்கி விடுகிறது. அது பங்களதேஷ் டாக்கா நகரத்துக்கு எட்டும் முன்னரே அஸர் நேரத்து பாங்கோசை ஒலிக்கத் தொடங்குகிறது. இந்தோனேசியாவில் அஸர் கால பாங்கு ஒலிக்கத் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே, அங்கு அந்தி சாயும்  மக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை கேட்கிறது. சுமத்ரா தீவில் மக்ரிப் பாங்கொலி கேட்கும் நேரத்திலேயே இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி சைபிலில் இப்போது இரவு நேர இஷாத் தொழுகை.

அடேங்கப்பா..! ஆண்டவனின் இந்த கால நேர கணித விளையாட்டு,  நம்மை மலைக்க வைக்கிறது. மனிதனோ இதற்கு என்னென்னமோ பெயர் வைத்திருக்கிறான். கிரீன்விச் நேரம், பூமத்திய ரேகை, புவியியல் தீர்க்க ரேகை, ஈக்வடார், தென்துருவம், வடதுருவம் என்று எப்படி எப்படியோ அழைத்து திருப்தி பட்டுக் கொள்கிறான்.

இந்தோனேசியாவில் மோதினார் அதிகாலை விடியற் தொழுகைக்கு  ஒலிபெருக்கியில் அழைக்கும் அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள இறையில்லத்தில் மோதினார் இரவு நேர இஷாத் தொழுகைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பார்.

இந்த தொடரோசை இறுதி நாள்வரை உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும், இந்த மாபெரும் தத்துவத்தை சமுதாயக் கவிஞர் தா.காசிம்

//எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது

இறை இல்லப் பாங்கோசைப் பெருமான்//

என்று இருவரிகளில் அனாயசமாக கூறி முடித்து விட்டார். எனக்கோ இதை விளக்குவதற்குள் தாவு கழன்று விட்டது

அடுத்த வரியில் அவர் சொல்வது இன்னும் ‘ஹைலைட்’.

கைநகம் கண்தொட்டுக் கனிகின்ற ஸலவாத்தில்

கஸ்தூரி மணம் கமழும் எம்மான் – அவரின்

கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்

பாங்கோசை ஒலிக்கையில் அதில் நபிகள் பெருமானார் பெயரைக் கேட்கையில் நாம் பெருவிரலையும்< ஆட்காட்டி விரலையும் இணைத்து கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இது நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொடங்கி வைக்க, இந்நாள் வரை நபி பெருமானார் அவர்கள் மீது கொண்ட காதலால் நாம் பின்பற்றி வருகிறோம். மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி பெருவிரல் ரேகை, கண்ணின் கருவிழி உயிரியளவு (Biometric) இவையிரண்டும் தனித்துவமானது. இவைதான் நம்முடைய பூளோகத்து ஆதார் கார்டு.  இவையிரண்டையும் ஒன்றோடொன்று ஒற்றிக் கொள்ளும்போது இவைகள் நாம் கொண்ட நபிகாதலுக்கு மறுமையில் சாட்சி பகர்கின்றன.

“திருப்புகழை பாடப் பாட வாய்மணக்கும்” என்ற பாடலை நான் கேட்டதுண்டு. கவிஞர் தா.காசிம்  ஒருபடி மேலே சென்று பாங்கோசையின்போது நபி பெருமானார் அவர்களின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கைநகத்தை கண்ணில் ஒற்றிக்கொண்ட மாத்திரத்திலேயே அது கஸ்தூரி மணமாக கமழ்ந்தது என்று தன் நபிகாதலை வெளிப்படுத்துகிறார்.

நான் இப்பாடலின் ஓரிரு வரிகளை மட்டும்தான் விளக்கி இருக்கிறேன். முழுவதும் விவரித்தால் பொழுது சாய்ந்துவிடும்

இதோ முழுப்பாடல் :

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

கொஞ்சம் நில்லு – எங்கள்

திருநபி யிடம் போய்ச் சொல்லு

சலாம் சொல்லு

சன்மார்க்கம் தந்த நபி

துன்மார்க்கம் வென்ற நபி

சாத்வீக மெய்ஞானப் பெருமான்

கண்ணோடு கண்ணாகி கல்புக்குள் நிறைவாகி

கருணைக்குப் பொருள் தந்த எம்மான் – அவரைக்

காணத் துடிக்கின்றேன் இந்நாள்    (தென்றல் காற்றே)

மடமையாம் இருள்போக்கி

மதுவையும் விஷமாக்கி

மாந்தரின் நலம்காத்த பெருமான்

மண்ணோடு பெண்மகவை மகிழ்வோடு புதைத்திட்ட

மாபாவச் செயல் தடுத்த எம்மான் – அந்த

மஹ்மூதைக் காண்பேனோ இந்நாள்   (தென்றல் காற்றே)

கடல்காடு மலைபாலை கடக்கின்ற இறைவேதம்

கனிவாயில் இதழ்விண்ட பெருமான்

கடல்போன்ற பகைமுன்னே உடைவாளைக் கரமேந்தி

படைகொண்டு பகைவென்ற எம்மான் – பத்ருப்

படையரசர் முகம் காண்பதெந்நாள்    (தென்றல் காற்றே)

எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது

இறை இல்லப் பாங்கோசைப் பெருமான்

கைநகம் கண்தொட்டுக் கனிகின்ற ஸலவாத்தில்

கஸ்தூரி மணம் கமழும் எம்மான் – அவரின்

கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்  (தென்றல் காற்றே)

#நாகூர்_அப்துல்_கையூம்

 

நாகூர் சலீமும் அந்தாதியும்


ஒரு சொல்லின் முடிவெழுத்து ஒரு சொல்லின் தொடக்கமாக வருவது ‘அந்தாதி. அந்தம் + ஆதி என்பதன் கூட்டெழுத்தே இந்த அந்தாதி. அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்

அந்தாதி என்ற வகையானது ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசை, சொல், அடி இவற்றுள் ஒன்றோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாவதாக வரும்படி அமைத்துப் பாடுவது. இது எளிமையான வடிவம் அல்ல. கவியாற்றலும் மிகுந்த சொல்லாற்றலும் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய கவித்துவமான பாடல்களை புனைய முடியும்.

சிற்றிலக்கியங்களுள் அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி முதலிய அந்தாதிகள் உள்ளன. இவையன்றி கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி இப்படி ஏராளம்.

தான் பயின்ற இலக்கியக் கருத்துக்களை தன்னுள் மாத்திரம் அசைபோட்டு சுவைக்காமல், அதனை பிறரும் அனுபவிக்க வேண்டுமென திரைப்படங்களிலும் எளிமையாக்கித் தந்த கவியரசர் கண்ணதாசனை எல்லோரும் அறிவார்கள். ஜனரஞ்சக சினிமாவில் இத்தகைய இலக்கண யுக்தியை கையாண்ட அவரைப் புகழாத மாந்தர்களே கிடையாது.

பழந்தமிழ் இலக்கியத்தில் காணும் இலக்கண வடிவங்களை இஸ்லாமியப் பாடல்களிலும் புகுத்தி புதுமை கண்ட ‘கலைமாமணி’ நாகூர் கவிஞர் சலீமை இதுபோன்ற திறமைக்காக யாரும் இதுவரை அவரை கண்டுக் கொள்ளாதது வருத்தம் தருகிறது.

இஸ்லாமியப் பாடல்களில் இலக்கியச் சுவையா? இது என்ன புது உருட்டாக இருக்கிறது என்று யாரும் எண்ணக்கூடும், என்னை சாடக் கூடும்.

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி.

‘செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே’ என்று தண்டியலங்காரமும்,
‘அந்தம் முதலாத் தொகுப்பது அந்தாதி’ என்று யாப்பருங்காலக்காரிகையும் இலக்கண சாத்திரம் வரையறுக்கின்றது..

‘முப்பது உடனெடுத்து மூங்கில் இலைமேலே
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரை
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’

என்ற நாட்டுப்புறப்பாடல் அத்தகைய அந்தாதிப் பாடலுக்கு உட்பட்டது.

சைவம், வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய எல்லா சமயத்து புலவர்களும் அந்தாதிப் பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களை இலக்கிய கர்த்தாக்களாக போற்றுகின்றனர்.

1976-ஆம் ஆண்டு கமல் ஹாஸன் & ரஜினிகாந்த் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்திற்கு கண்ணதாசனிடம் கே.பாலச்சந்தர் பாட்டெழுத கேட்டபோது மனுஷர் செம இலக்கிய மூடில் இருந்தார் போலிருக்கு. அதில் இடம் பெற்ற இரண்டு பாடல்களையும் அந்தாதியிலேயே எழுதி கொடுத்துவிட்டார்.

வரியின் முடிவில் எந்த வார்த்தையோடு முடித்தாரோ, அதே வார்த்தை அடுத்த வரியின் தொடக்கமாக அமைவதுபோல் எழுதி கொடுத்து விட்டார்.

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்

மனுஷனுக்கு மண்டையெல்லாம் மூளையிருக்கும் போலிருக்கு. இந்த ஒரு பாட்டு மட்டுமல்ல. எழுதிக் கொடுத்த இன்னொரு பாடலும் அந்தாதிதான்.

ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
என்ன ஒரு அபாரமான திறமை இந்த கண்ணதாசனுக்கு. திரையிசைப் பாடல்களில் இலக்கியத்தை கொண்டு வந்ததற்கு கண்ணதாசன் வெகுவாக பாராட்டப் பட்டார். அவருடைய இலக்கிய ஆர்வத்தை எல்லொரும் போற்றிப் புகழ்ந்தனர்.

இப்போது நாகூர் சலீமுக்கு வருவோம்.

‘நாகூர் ஹனிபா பாடும் ஜனரஞ்சக ஆன்மீக பாடலில் இலக்கியச் சுவை என்ன வேண்டிக் கிடக்கு?’ என்று யாராவது கேள்வி கேட்கக் கூடும், ஜனரஞ்சகத்திலும் ஆன்மீகத்திலும் இலக்கியத்தைப் புகுத்துவதுதான் திறன் வாய்ந்த கவிஞனுக்கு அழகு,

1976-ஆம் ஆண்டு ‘மூன்று முடிச்சு’ படம் வருவதற்கு முன்னரே நாகூர் சலீம் நாகூர் ஹனிபாவுக்கு எழுதிக் கொடுத்த பாடலில் இந்த இலக்கியச் சுவை அனுபவிக்க வேண்டி அந்தாதி இலக்கணத்தை கடைப்பிடித்து பாடல் எழுதி இருக்கிறார். இதுவும் ஒரு இலக்கியப் புரட்சிதானே? இதோ அந்த அந்தாதி பாடல் :

திருமறையின் அருள்மொழியில் விளைந்திருப்பது என்ன? – அறிவு.
இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? – அன்பு.

அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? -ஞானம்
அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன?
மௌனம் அது மௌனம்.

உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? – உள்ளம்.
அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? – உண்மை
உண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? – பொறுமை
அந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன?
கடமை ஐந்து கடமை

ஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? – கலிமா
அந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? – தொழுகை
தொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? – நோன்பு
நோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? – ஜக்காத்து
அந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன?
ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஒரு நெய்ச்சோறு போதுமென நினைக்கிறேன்

நாகூர்அப்துல்கையூம்

 

சத்தமின்றி ஒரு சாதனையாளன்


ரத்தமின்றி, கத்தியின்றி நடந்த புரட்சிகளை நாம் கேள்வியுற்றிருக்கிறோம். சத்தமின்றி, சந்தடியின்றி சாதனைகள் புரிந்துவரும் ஒரு சாதனையாளனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஓரிரண்டு மேடைகளில் தோன்றி விட்டாலே தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொள்ளும் பாடகர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில், 52 ஆண்டுகளாக இசைத்துறையில் ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி, அசத்தலாக அமைதி புரட்சி புரிந்து வரும் ஓர் அபூர்வக் கலைஞனைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.

“Empty Vessel makes the Most Noise” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. குறை குடம்தான் கூத்தாடும். நிறை குடம் தளும்பாது என்பதென்னவோ முற்றிலும் உண்மையான கூற்று.

இந்த பாராட்டுகள் அனைத்துக்கும் சொந்தக்காரர் நாகூரில் பிறந்த ஓர் இசைக் கலைஞர். அவர் பெயர் கலைமாமணி அல்ஹாஜ் இ. குல் முஹம்மது.

இப்ராஹிம்ஷா – சபியா பீவி இணையரின் புதல்வரான இவர், பிறந்த தேதி பிப்ரவரி 14, 1946. பாடகராக முதன் முதலாக மேடையில் அறிமுகமான ஆண்டு 1968. அப்போது அவருக்கு வயது வெறும் 22.

1500 இசை நிகழ்ச்சிகள், 4000 பாடல்கள் – இவர் நிகழ்த்தியிருப்பது அசாதாரணமான ஒரு சாதனை. இன்றும் இந்த 74 வயது இளைஞர் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பாடிக்கொண்டு வலம் வருகிறார். போட்டியும் பொறாமையும் நிறைந்த இசையுலகில், இந்நிலையை எட்டிப் பிடிக்க வாழ்க்கையில் அவர் எந்தளவுக்கு எதிர் நீச்சல் போட்டிருப்பார் என்பதை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

இவருடைய விடயத்தில் எனக்கு வருத்தமும் உண்டு. மகிழ்ச்சியும் உண்டு.

வருத்தம் என்னவெனில், தமிழகத்து நாகூர்க்காரரான இவரை புதுவை மாநிலம் தத்தெடுத்துக் கொண்டு தனதாக்கிக் கொண்டதே என்ற சோகம்.

மகிழ்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா? தமிழ்நாடு இவருக்கு கொடுக்கத் தவறிய அங்கீகாரத்தை புதுவை மாநிலமாவது இவருக்கு வழங்கி கெளரவித்ததே என்ற மனநிறைவு.

திறம் படைத்த கலைஞனை புடம் போட்ட தங்கமாக உருவாக்குவதும், அவனை உற்சாகப்படுத்தி உயர்த்துவதும் இதுபோன்ற அங்கீகாரங்கள்தான் என்பதை நாம் மறுக்க முடியாது. குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டிய இவரைப் போன்ற எத்தனையோ கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காக ஒளி குன்றிப்போனது அவர்களை முறையாக ஊக்கப்படுத்த தவறியதால்தான் என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இவருக்கு பெருமளவு ஆதரவு தந்து இவருக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்த பெருமை புதுச்சேரி முன்னாள் அமைச்சர் திரு A.M.H.நாஜிம் அவர்களைச் சாரும். “ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்” என்ற கவிஞர் வாலியின் வரிகள்தான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

இஸ்லாமியப் பாடல்கள்

நாகூர் ஈந்த இஸ்லாமியப் பாடகர்களின் பட்டியலில் இசைமுரசு நாகூர் ஹனிபாவின் வரிசையில் இவரும் போற்றுதலுக்குரிய ஓர் இசைவாணர்.

தமிழகத்தில் எத்தனையோ இஸ்லாமியப் பாடகர்கள் இன்னிசை கீதம் பாடி பவனி வந்திருக்கிறார்கள். வந்த வேகத்தில் பலர் காணாமலும் போய்விட்டார்கள். காரணம் அவர்கள் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொள்ளாமல், பிறரின் பாணியை அப்பட்டமாக பின்பற்றியதால்தான் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.

எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே இசைமுரசு இ.எம். ஹனிபாவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற எழுதப்படாத விதியை பாடகர்கள் தங்களுக்குத்தானே வகுத்துக் கொண்டார்கள்.

பாடலைத் தொடங்குவதற்கு நாகூர் ஹனிபாவை போலவே தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றுவது, ஃபர் ஜின்னா தொப்பியை சாய்வாக அணிந்துக் கொள்வது, அவரைப்போலவே பாடலுக்கிடையில் மூக்கை உறிஞ்சிக் கொள்வது, வலது கைவிரல்களை மடக்கிக் கொண்டு அடிகொருதரம் கையை மேலே உயர்த்துவது, உச்ச ஸ்தாயியில் பாடும்போது வலது காதோரம் வலதுகையால் மூடிக்கொள்வது, பாதியில் விட்ட அதே வரியை (வேண்டுமென்றே) மீண்டும் தொடர்வது, பாடலின் BGM வாசிக்கையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னாலிருக்கும் இசைக்கலைஞரிடம் ஏதாவது கிசுகிசுப்பது, (சில சமயம் வசை பாடுவது) இவையாவும் தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் பாடும் பாடகர் பெருமக்கள் அவசியம் செய்தே ஆக வேண்டும் என்பது ‘ஷரத்தாகி’ விட்டது.

ஒருவரை அப்படியே காப்பி அடிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. இது “ஈயடிச்சான் காப்பி” வகையில் சேர்ந்தது. ‘கானமயிலாட கண்டிருந்த வான்கோழி’ என்ற மூதுரைதான் என் மூளையில் ரீங்காரமிட்டது.

இதாவது பரவாயில்லை சிலர் நாகூர் ஹனிபாவைப்போலவே பனங்கற்கண்டையும், விக்ஸ் மிட்டாயையும் வாயில் போட்டு மென்றுக்கொண்டு பாடுபவர்களும் உண்டு. என்னத்த சொல்ல? ‘ஏனிந்த மேனரிசம்?’ என்று கேட்டால் அவர்கள் இஸ்லாமியப் பாடல் பாடுகிறார்களாம்.

நிலையான ஓர் இடம்

மேடை அனுபவத்தில் இவர் அரை சதம் அடித்த பிறகும் அசையாமல் இசையுலகில் பசை பிடித்தாற்போல் திசைமாறாது நிலைக்கின்றார் என்றால், இந்த பாணர், யார் பாணியையும் பார்த்து காப்பி அடிக்காததினால்தான் என்று குட்டிக்கரணம் அடித்து கூறுவேன்.

தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி உருது கவ்வாலி மற்றும் இந்தி, தமிழ் திரையிசை பாடல்களை அனாயசமாக பாடுவது இவரது தனிச்சிறப்பு. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை? “ஆன்மீக பாடல்கள் பாடும் கச்சேரியில் சினிமா பாடல்கள் பாடினால் உங்களுடைய இமேஜ் பாதிக்காதா?” என்ற கேள்விக்கு மிகவும் எதார்த்தமான முறையில் “இசைக்கு ஏது மொழி?’ என்கிறார் இந்த பன்முகக் கலைஞர்.

“இஸ்லாமியப் பாடல்களில் புகழ்ப்பெற்ற நாகூர் இ.எம்.ஹனிபா போலவே இவரின் குரலில் பாடல்கள் தனிச் சிறப்பும் பெற்றிருக்கின்றன. இவருக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து, தொய்வில்லாமல் துணிவும் செறிவும் இழையோட, இசை நடத்தும் இசை நிகழ்ச்சிகள் எந்த மதத்தவரும் மயங்கிப் போய் பாராட்டுகின்றனர்” என்று இவரைப் புகழ்ந்து, மனதில் பட்டதை அப்பட்டமாக எழுதுகிறார் தமிழ் மாமணி மலர் மன்னன் அவர்கள். மனுஷர் மிகவும் சரியாகத்தான் கணித்திருக்கிறார்.

“இசைப்பயணத்தில் உங்களுடைய குருநாதர் யார்?” என்று இவரிடம் வைக்கப்படும் கேள்விக்கு இவருடைய பதில் என்ன தெரியுமா?

“என்னுடைய மானசீக குரு கர்னாடக இசைமேதை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்”என்று அடக்கத்துடன் பதில் கூறுகிறார். வித்வானுக்கு நாகூர் தர்காவில் “வாழ்நாள் விருது” அளித்து பெருமைப் படுத்திய விழாவில், ஒரு மூலையில் அமர்ந்து, தன் மானசீக குருவுக்கு கிடைக்கப் பெறும் பாராட்டுதல்களை இவர் பவ்யமாக இரசித்துக் கொண்டிருந்ததை நான் நேரிலேயே பார்த்தேன்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப் போல இவரிடத்தில் பந்தாவோ, வீண் ஜம்பமோ, சவடாலோ, அலட்டலோ எதுவுமே கிடையாது என்பதை இவரிடம் பழகியவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள்.

நாடகப் பாசறை

நாகூரில் ஏராளமான திறமைசாலிகள் உருவானதற்கு காரணம் ஒரு காலத்தில் நாகூரில் நாகூர்வாசிகளால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் என்பது பலருக்கும் புதியதொரு செய்தியாக இருக்கும். கலைமாமணி இ. குல் முஹம்மது போன்றவர்களைப் பற்றி எழுதுகையில் இந்த நாடக வளர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.

“முத்தமிழும் கலந்த கலாச்சாரம் நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாச்சாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள். பாட்டைப் போலவே நாடகத்திற்கும் மிகப் பிரபலம் நாகூர். தூயவன், அக்பர், கவிஞர் சலீம் என பற்பல படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்”

என்று தன் இளம் பிராயத்து பசுமையான நினைவுகளை அசை போடுகிறார் நாகூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நாகூரில் நாடகப் பாசறை

நாகூரில் ஒரு காலத்தில் ஏராளமான நாடகங்கள் அரங்கேறின. எண்ணற்ற கலைஞர்கள் உருவானது இந்த நாடகப் பாசறையில் இருந்துதான்.

சினிமாத்துறையில் நாகூரைச் சேர்ந்த ரவீந்தர், தூயவன் போன்ற பிரபலங்கள் அடியெடுத்து வைக்க அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது இந்த நாடகங்கள்தான்.

புலவர் ஆபிதீன், நாகூர் ஹனிபா போன்ற திறமைசாலிகள் உருவாவதற்கு அடிக்கோலிட்டதும் இந்த நாடகங்கள்தான்.

பாடலாசிரியர் கவிஞர் சலீம், வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து பின்னர் “டான்” என்ற பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட ஹமீது சுல்தான், விறகுவாடி ஜப்பார், அஜ்ஜி, சேத்தான், குல் முஹம்மது, நாகூர் சாதிக், கத்தீப் சாஹிப், சிங்கை ஆரிஃப், பாப்ஜான், நவாப்ஜான், கவிஞர் இஜட் ஜபருல்லா போன்ற கலைஞர்கள் உருவானது இந்த நாடகப் பாசறையில் இருந்துதான்.

நாகை பேபி தியேட்டரில் சினிமா ஸ்டண்ட் நாகூர் பரீது அவர்கள் அரங்கேற்றம் செய்த “விதவைக் கண்ணீர், “சோக்காளி”, “மிஸ்டர் 1960”, “படித்தவன்” போன்ற நாடகங்கள் ஏராளமான கலைஞர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தது.

“சிவப்புக்கோடு”, “சந்தர்ப்பம்”, “சன்னிதானம்”, “சூரியக்கோடு”, “சீனியர் அண்டு ஜூனியர்”மற்றும் நாகூர் சேத்தான் எழுதிய “எல்லோருக்கும் பே.. பே..”, “தண்டனை” போன்ற அனைத்து நாடகங்களும் வெற்றி வாகை சூடின. இவை எல்லாவற்றிலும் குல் முகம்மது அவர்களுடைய பங்களிப்பு கணிசமாக இருந்தது.

கவிஞர் நாகூர் சலீம் பாடல் புனைய, சேத்தான் மெட்டமைக்க, பாடகர் குல் முஹம்மது பாட்டிசைக்க – இக்கூட்டணி மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றது.

“சிவப்புக்கோடு” நாடகத்தில் கவிஞர் சலீம் எழுதி, சேத்தான் மெட்டமைத்த ‘வானம் கருத்ததடி’ ‘பட்டுவிட்ட மரக்கொடியில் பச்சைக்கிளி படருவதோ’ என்று தொடங்கும் பாடல்கள், மேலும் ‘சொல்லட்டுமா சொல்லட்டுமா’ ‘பூஜை மலர் மேலே புழுதி வந்து மலர்ந்ததம்மா’ போன்ற பாடல்கள் யாவும் குல் முஹம்மது பாடிய பாடல்களே.

இசையில் நாட்டம் ஏற்பட இவருக்கு நாடக மேடை வழிவகுத்து தந்தது. இவரது இசையார்வத்திற்கும், திறமைக்கும் தீனி போட்டது நாடக மேடைதான் என்பது கலப்படமில்லாத உண்மை.

பாடகரின் பெருந்தன்மை

பாடகர் இ. குல் முஹம்மது அவர்களின் பரந்த மனதுக்கு ஏராளமான நிகழ்வுகளை உதாரணம் காட்டலாம். விட்டுக் கொடுக்கும் சுபாவம், பிடிவாதம் இல்லாத குணம், வளைந்து கொடுக்கும் மனப்பான்மை – இவை யாவும் புடம் போட்ட தங்கமாக இவரை படம் பிடித்துக் காட்டுகின்றது.

எத்தனையோ புகழ்ப் பெற்ற பாடல்கள் இவர் முதன்முதலாக அரங்கேற்றி, பிறகு மற்ற மற்ற பாடகர்கள் பாடி அது வெளிச்சத்துக்கு வந்த பாடல்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? “இப்பாடல்களை முதன்முதலில் பாடி பிரபலப்படுத்தியது நான்தான்” என்று ஒருபோதும் இவர் உரிமை கொண்டாடியதில்லை, பீற்றிக் கொண்டதும் இல்லை. மற்ற மற்ற பாடகர்களாக இருந்தால் சிவாஜி கணேசன் திருவிளையாடல் திரைப்படத்தில் ஆடியதுபோல் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார்கள். தன்னுடைய நல்ல நல்ல பாடல்களெல்லாம் தன் கைவிட்டு போய்விட்டதே என்று கைசேதப்பட்டு பொற்றாமரைக் குளத்திளல்ல, கவலையில் மூழ்கி இருப்பார்கள்.

நிகழ்வு – 1

//ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபி போதம்
இருக்கையில் நமக்கென்ன கவலை
இரு கண்களில் ஏன் நீர்த் திவலை//

இவ்வரிகள் நாகூர் சேத்தான் எழுதி, அவரே மெட்டமைத்து, மேடைக் கச்சேரிகளில் குல் முஹம்மது அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிமையான கானம்.

இப்பாடல் இசைமுரசு இ.எம்.ஹனிபா அவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே அவர் இப்பாடலைப் பாட நாகூர் சேத்தானிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இவரும் மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருக்கிறார். இசைமுரசு அவர்கள் சேத்தானிடம் “என்னப்பா இது ‘திவலை’ என்று வருகிறது. கேட்பவர்கள் காதுக்கு ‘தவளை’ என்று விழப்போகிறது” என்று அபிப்ராயம் சொல்லவே இப்பாடலின் வரிகள் கீழ்க்கண்டவாறு உருமாறி இருக்கிறது.

//ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்?
கண்களில் ஏனிந்த கலக்கம்?//

இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. சீனியர் பாடுவதற்கு ஜூனியர் பாடகர் மனமுவந்து விட்டுக் கொடுத்த பாடலிது. தன்னுடைய நல்ல பாடலொன்று பறிபோய் விட்டதே என்று அவர் ஒருக்காலும் வருத்தப்பட்டது கிடையாது.

நிகழ்வு – 2

“ஜீனே கி ராஹ்” என்ற படத்தில் முஹம்மது ரஃபி பாடிய “ஆனே ஸே உஸ்கே ஆயே பஹார்“ என்ற இந்திப்பாட்டு மெட்டில் நாகூர் சாதிக் அவர்கள் எழுதிக் கொடுத்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

//இருலோகம் போற்றும் இறைத்தூதராம்
இஸ்லாத்தை தந்த நபி நாதராம்//

என்ற இப்பாடலை குல் முஹம்மது அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேடையில் பாடி வந்ததை உள்ளூர்வாசிகள் அனைவரும் அறிவார்கள். இது அப்படியே இருக்கட்டும்.

இச்சமயத்தில் இந்தவொரு குட்டி நிகழ்வையும் இங்கு சொல்லிக் காட்டுவது அவசியம். “பாவ மன்னிப்பு” படத்தில் கண்ணதாசன் “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடலை எழுதியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும். அப்படத்தின் கதாநாயகன் பிறப்பால் இந்துவாகவும். வாலிப வயதை எட்டிப் பிடித்த அவன் முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான “ஓம்” என்ற நாத மந்திரம் அவன் வாயிலிருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்” என்று கண்ணதாசன் சொன்னது பத்திரிக்கையிலும் வெளிவந்தது.

கவிஞர் நாகூர் சாதிக் கைவண்ணத்தில் மிளிர்ந்த “இருலோகம் போற்றும் இறைத் தூதராம், இஸ்லாத்தை தந்த நபி நாதராம்” என்ற பாடல் வரிகளை கச்சேரிகளில் பாடியபோது, குல் முகம்மது அவர்களுக்கு கண்ணதாசன் சொன்னதுதான் மண்டையில் ஓடியது.

கவிஞர் நாகூர் சாதிக்கிடம் நேரடியாகச் சென்று “இது இஸ்லாமியப் பாடல் ஆயிற்றே? இப்பாடலின் வரிகளில் ‘ராம்.. ராம்’ என்று முடிகிறதே. இதை சற்று மாற்றித் தர முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். அப்போது குல் முகம்மது மலேசியா இசைப் பயணத்திற்கு புறப்பட வேண்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்.

இதற்கிடையில் இப்பாடலால் கவரப்பட்ட இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள், உச்சஸ்தாயியில் அமைந்திருக்கும் இப்பாடலை, தான் பாட ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனை கவிஞர் நாகூர் சாதிக் இவரிடம் தெரிவிக்க “அண்ணன் விருப்பப்படுவதால் நான் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. தாராளமாக அவரே பாடட்டும்” என்று மனமுவந்து ஒப்புதல் தந்திருக்கிறார்.

“ஒரு கையில் இறைவேதம்”, “இருளோகம் போற்றும் இறைத்தூதராம்” – இந்த இரு பாடல்களையும் நாகூர் ஹனிபா பாடத்தொடங்கிய பிறகு மேடைக் கச்சேரிகளில் பாடுவதையே இவர் விட்டு விட்டார்.

அதற்கு காரணம், தனக்கென தனி பாணியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை வளர்த்துக் கொண்ட இவர், அப்பாடல்களை பாடினால் ‘நாகூர் ஹனிபாவுடைய பாடல்களையே இவரும் பாடுகிறார்’ என்று மக்கள் நினைப்பார்களே என்ற எண்ணம் இவரை பாட விடாமல் தடுத்து விட்டது. இதற்கு இன்னொரு காரணம், இசைமுரசு அவர்கள் மீது இவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்றுதான் கூற வேண்டும்

நிகழ்வு – 3

//நபி மணி தந்த
அலி வழி வந்த
இரண்டு தீபமே !//

இந்த வரிகள் ஒரு காலத்தில் பாடகராக வலம் வந்துக் கொண்டிருந்த நாகூர் ஹஸன் குத்தூஸ் எழுதிய பல்லவி. ஹஸன் குத்தூஸ், குல் முஹம்மது இருவரும் ஒன்றாக இணைந்து நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். இப்பாடலுக்கு அனுபல்லவி எழுதி முழுமையாக்கியது கவிஞர் நாகூர் சலீம் அவர்கள். இதே மெட்டில் “நபி நபி போலே, அலி அலி போலே” என்ற உருது பாடல் வடிவத்தையும் குல் முஹம்மது சிங்கப்பூர், மலேசியா சுற்றுப் பிரயாணத்தின்போது மேடை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார்.

இதே மெட்டில் கவிஞர் இ.எம்.நெய்னா அவர்கள் எழுதிக் கொடுத்து, “நபிமணி சொன்ன நெறி முறை என்ன” என்று தொடங்கும் பாடல் நாகூர் ஹனிபா அவர்களுக்கு எழுதிக் கொடுத்து, அது மிகவும் பிரபலமாகிய பின்னர் இந்தப் பாடலை பாடுவதையும் இவர் நிறுத்திக் கொண்டார்.

“மதினா நகருக்கு போக வேண்டும்” என்ற மெட்டைச் சார்ந்து கவிஞர் இ.எம்.நெய்னா அவர்கள் எழுதிக் கொடுக்க, மேடையில் குல் முஹம்மது பாடிக்கொண்டிருந்த பாடல் இது:

//எண்திசை வித்வான்கள் சேரும் தலம்
ஏழிசை கீதங்கள் கேட்கும் தலம்
எப்போதும் பக்தர்கள் கூடும் தலம் – காஜா
ஏழை பங்காளர் வாழும் தலம்//

இதே மெட்டில் “மதீனா நகருக்கு போக வேண்டும்” என்ற பாடலை சமுதாயக் கவிஞர் தா.காசீம் எழுத, சேத்தான் மெட்டமைக்க, நாகூர் ஹனிபா அவர்கள் பாடி பிரபலமானபோது கவிஞர் இ.எம்.நெய்னா ஏற்கனவே எழுதிக் கொடுத்த இப்பாடலை நாகூர் சேத்தான் வேறு ராகத்தில் அதாவது ‘பீம்ப்ளாஸ்’ ராகத்தில் முழுவதுமாகவே மாற்றிக் கொடுத்து விட்டார்.

ஒரே ஊரில் ஏராளமான கவிஞர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் இருந்தால் இதுபோன்ற இடியப்ப சிக்கல் நேருவது சகஜம்தான் போலிருக்கிறது.

நிகழ்வு – 4

‘சிவப்புக் கோடுகள்’ நாடகத்தில் கவிஞர் நாகூர் சலீம் எழுதி, சேத்தான் ட்யூன் அமைத்து, குல் முஹம்மது மற்றும் சுல்தான் சாபு இணைந்துப் பாடிய பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடக்க வரிகள் இதுதான்:

//பட்டுவிட்ட மரக்கிளையில்
பச்சைக்கொடி படருவதோ//

அதன் பிறகு “பெருமானார் அவர்களின் பேரர் இமாம் ஹுசைனாரின் தியாகத்தை போற்றும் வகையில் இப்பாடலை மாற்றித் தாருங்களேன்” என்று இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்த நாகூர் சேத்தானிடம் இவர் முறையிட, அவரும்

//உண்மை நபி பேரர்களை
உம் மடியில் தவழ விட்டோம்
கண் இரண்டை பறித்துக் கொண்டு
கைகளிலே கொடுத்து விட்டாய்//

என்று எழுதிக்கொடுத்து பல காலம் இவர் மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருக்கையில், இந்த மெட்டு இசைமுரசு அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, மெட்டமைத்த நாகூர் சேத்தானிடம் அனுமதி பெற்று பொரவாச்சேரி கவிஞர் மதிதாசனை வைத்து

//கண்கள் குளமாகுதம்மா
கர்பலாவை நினைக்கையிலே
புண்ணாகி நெஞ்சமெலாம்
புலம்பியே துடிக்குதம்மா//

என்று எழுத வைத்திருக்கிறார். இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய இப்பாடல் பட்டி தொட்டிகள் எங்கும் ஒலித்தது.

“அதிகாலை வேளையிலும், காரில் பயணிக்கையிலும் இப்பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பேன். என் மனம் இளகும்” என்று நாகூர் ஹனிபாவின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டிய பாடலிது.

நிகழ்வு – 5

//ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
இறைவன் தந்தான் அந்த நாளையில்//

இது காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அவர்களின் பிரபலமான பாடல் என்று எல்லோருக்கும் தெரியும். கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் ஆரம்பத்தில் பி.கே கலீபுல்லா அவர்களுக்கு எழுதிக் கொடுத்த பாடலிது. ‘கலாவதி’ ராகத்தில் நாகூர் சேத்தான் மெட்டமைத்துக் கொடுத்தார். இப்பாடலை மேடைகளில் குல் முஹம்மதுதான் தொடர்ந்து பாடி வந்தார்.

1974-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுப் பிரயாணத்தின்போது இப்பாடலை குல் முஹம்மது அவர்கள் பாடி, மஜீது பிரதர்ஸ் ஒலிப்பதிவு செய்து ஒலிநாடா கூட வெளியிட்டது.

சில காலத்திற்குப் பிறகு இதே பாடலை காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது அவர்கள் கவிஞர் நாகூர் சலீமிடமிருந்து கேட்டுப் பெற்று, இசைத்தட்டில் பாடி வெளியான பிறகு, இவர் இந்தப் பாடலை மேடைகளில் பாடுவதையும் தவிர்த்து விட்டார்

நிகழ்வு – 6

‘ஷிகார்’ என்ற இந்திப் படத்தில் ‘பர்தேமே ரெஹ்னே தோ, பர்தா நா ஹட்டாவோ’ என்ற மெட்டில் கவிஞர் நாகூர் சலீம் எழுதிக் கொடுத்து குல் முஹம்மது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த பாடல். இந்தப் பாடல் வரிகள் இதோ:

//உலகாளும் பெரியோனே
உயிர் காக்கும் இறையோனே – என்றும்
அலையும் தீமை அகன்றே வந்தோம்
அருள் பாவிப்பாய்//

பின்னர் இப்பாடல் பாடகர் எஸ்.எஸ்.ஏ.வாஹித் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அவரும் பாடத் தொடங்கிவிட்ட பிறகு அதையும் இவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

நான் இங்கு குறிப்பிட்டது ஒரு சில பாடல்கள்தான். இதுபோன்று இவர் பெரிய மனது பண்ணி, விட்டுக் கொடுத்த பாடல்கள் கணக்கில் அடங்காது. இதற்காக ஒரு தனி நூலொன்று எழுத வேண்டி வரும்.

முகம்மது ரஃபி பாடல்கள்

குல் முஹம்மதுக்கு இந்திப் பாடல்கள் மீது நாட்டம் ஏற்படுவதற்கு இவரது இளம் பிராயத்தில் நடந்த நிகழ்வொன்று பெரிதும் உந்துதலாக இருந்திருக்கின்றது. தனக்கு நன்றாக பாட வரும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டு, மேடையில் இவர் பாடத் தொடங்கிய காலத்தில், முகம்மது ரஃபி பாடல்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவருக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்ற எண்ணம் இவரது சிந்தனையில் ஊஞ்சலாடி இருக்கிறது.

அவரது முகவரியைத் தேடிப் பிடித்து, தான் அவருடைய மந்திரக் குரலால் ஈர்க்கப்பட்டவன் என்றும், அவருடைய பாடல்களை கேட்காத நாளே இல்லை என்றும், எதிர்காலத்தில் அவரைப் போலவே பாடகனாக வர விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

சில நாட்கள் கழித்து இவர் எழுதிய கடிதத்திற்கு அவரிடமிருந்து பதிலும் வந்திருக்கிறது. கடிதத்தை திறந்து பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார். தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. தன்னையே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்.

முகம்மது ரஃபி இவருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதம் அது. இவரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அக்கடிதத்தை இன்றும் அரியதொரு பொக்கிஷமாக பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.

இந்த ஒரு சாதாரண நிகழ்வு அவரது வாழ்க்கைத் தடத்தையே மாற்றிவிட்டது. அன்றிலிருந்து முகம்மது ரஃபியுடைய பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு, பாடிப் பழகி, தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி, தான் பாடும் இஸ்லாமிய மேடைக் கச்சேரிகளில் முகம்மது ரஃபியின் பாடல்களை பாட இவர் தவறியதே இல்லை.

1973-74 காலகட்டங்களில் சிங்கப்பூர், மலேசியாவில் ஏராளமான இடங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த இசைப் பயணத்தின்போது முகம்மது ரஃபி பாடிய பழைய இந்திப் பாடல்கள் நிறைய பாடியதால், தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்களும் இவரது பாடல்களை விரும்பிக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

பெற்ற விருதுகள்

07.9.1974 தேதின்று சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியில் “இசையமுது” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

21.07.1974 தேதியன்று பினாங்கு மாநகரில் மலேசியப் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது இவருக்கு “இன்னிசைச் சுடர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2001-ஆம் வருடம் புதுக்கோட்டை மாவட்ட அனைத்துப் பள்ளிகள் சார்பாக இவருக்கு “ஆன்மீகத் தென்றல்” பட்டம் வழங்கப்பட்டது.

16.02.2014 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துல இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடந்த எட்டாம் மாநாட்டில் விழாவில் இவருக்கு “இசைச்சுடர்” என்ற பட்டம் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வழங்கப்பட்டது.

1993-ஆம் ஆண்டு லட்சத்தீவில் நடந்த விழாவொன்றில் முன்னால் மத்திய அமைச்சர் பி.எம். சயீது அவர்களால் Indian Youth Federation (IYF) விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டார்.

1994ஆம் வருடம் மலப்புரம் நகரில் நடந்த இவ்விழாவில் குன்னக்குடி வைத்தியனாதன் அவர்களால் ‘பாரத் உத்சவ்’ விருது வழங்கப்பட்டது

2005-ஆம் ஆண்டில் “கலைரத்னா” பட்டம் புதுவை அனைத்துக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக காரைக்கால் அம்மையார் அரங்கில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது.

2008-ஆம் வருடம் மேலாக புதுவை அரசாங்கம் இவருக்கு “கலைமாமணி” என்ற உயரிய விருதை அளித்து கெளரவித்தது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது.

2009-ஆம் வருடம் “வாழ்நாள் சாதனையாளர் விருது” இந்து சமய இலக்கியப் பேரவை சார்பாக வழங்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு “தமிழ் மாமணி விருது” இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பாக அதிராம்பட்டினம் அரசு கல்லூரியில் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களால் வழங்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புது டில்லி பாரதிய சாகித்ய அகாதெமி இவருக்கு “டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது” (Dr. Ambedkar Fellowship National Award 2011) வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கன்ட், சட்டிஸ்கர், அஸ்ஸாம் உத்திரகான்ட், மணிப்பூர் மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

18.03.2012 அன்று காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பாக இவருக்கு “கலைப்பேரரசு” என்ற பட்டம் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கையால் வழங்கப்பட்டது.

17.12.2014 தேதியன்று “செம்பணிச் சிகரம்” விருது புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் குரு பன்னீர் செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு அவர்களால் வழங்கப்பட்டது.

இவைகளன்றி “இசைத்தென்றல்”, “இசைஅரசு”, “இன்னிசைத் தென்றல்” போன்ற பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

முன்னாள் குடியரசு அப்துல் கலாம் நல்ல இசை ஞானம் கொண்டவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரிடம் பெற்ற பாராட்டை இவர் மிகவும் பாக்கியமாகக் கருதுகிறார்.

இசைப்பயணம்

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்னாடகா, லட்சத்தீவு உட்பட பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தூரக்கிழக்கு நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் இவர் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம், திருப்பூர், பெரிந்தல்மன்னா போன்ற ஊர்களில் கலாச்சார விழாவில் தமிழக முன்னாள் இயல் இசை நாடக மன்றத் தலைவர் குன்னக்குடி வைத்யநாதன் அவர்களுடன் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

தமிழ், உருது, இந்தி, தேசப்பற்று பாடல்கள், மத நல்லிணக்கப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள், திரையிசை பாடல்கள் ஆன்மீக பாடல்கள் என 25க்கும் மேற்பட்ட இவரது ஒலி நாடாக்கள் வெளிவந்திருக்கின்றன

1974-ஆம் ஆண்டு சிங்கை வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் தொடர்ந்து பாடினார். மிகவும் பிரபலமான பாடகர்களுக்கு மாத்திரமே இதுபோன்ற வாய்ப்புகள் அன்று தரப்பட்டன.

1977-ஆம் இவர் தூரக்கிழக்கு நாடுகளுக்கு இசைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இவருடன் தாயகத்திலிருந்து சென்றவர் ‘தபேலா மன்னன்’ யாகூப் அவர்கள். 8.5.1977 அன்று அப்பர் தமிழ்ப்பள்ளியில் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு மற்றும் தமிழ்க்காவலர் கா.முகம்மது பாட்சா முன்னிலையில், இசைச் செல்வர் எஸ்.சுந்தர்ராஜ் குழுவினருடன் நடந்த இவரது இசை நிகழ்ச்சியை ‘தமிழ் முரசு’ பத்திரிக்கை வெகுவாக பாராட்டி எழுதியது. “திரு குல் முஹம்மதுவின் கணீரென்ற குரல் செவிப்புலன்களில் தேனெனப் பாய்ந்தது என்றால் அது மிகையாகாது” என்று புகழாரம் சூட்டியிருந்தது.

சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 14.9.1974 தேதியன்று இவர் இந்தியா திரும்பியபோது, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிக்கைகள் அனைத்தும் சிங்கையில் இவர் தொடர்ந்தாற்போல் நடத்திய இசை நிகழ்ச்சிகள் குறித்து புகழாரம் சூட்டி எழுதியிருந்தன.

நாகூர் இ.எம்.ஹனிபா, எச்.எம்.ஹனீபா போன்ற இஸ்லாமியப் பாடகர்களின் பாடல்களை மட்டுமே வெளியிட்டு வந்த சிங்கை எஸ்.ஏ.மஜீது பிரதர்ஸ் என்ற பாடல் ஒலிப்பதிவு நிறுவனம், குல் முகம்மது அவர்களை வரவழைத்து நேரடி ஒலிப்பதிவு செய்து ஒலிநாடாக்கள் வெளியிட்டது.

சிங்கப்பூரில் இவர் பாடிய கவிஞர் நாகூர் சலீமின் தத்துவப் பாடல்கள், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ‘பாபி’, ‘ஆராதனா’ இந்திப் பாடல்கள், முகம்மது ரபி பாடிய பழைய இந்தி பாடல்கள், ‘அடி என்னடி ராக்கம்மா’ போன்ற ஜனரஞ்சக சினிமாப் பாடல்கள் அனைத்தும் வெகுவாக இசை ரசிகர்களை பரவசப்படுத்தின.

1983-ஆம் ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நாகூர் சேத்தான், கவிஞர் காதர் ஒலி இவர்கள் எழுதிய “கண்ணுக்கு விருந்து கல்புக்கு மருந்து”, “இறைத்தூதரே”, “நாகூரார் வாசலுக்கு நாடி வாருங்கள்”, “வங்கக் கடலோரம் வாழுகின்ற நாதா” போன்ற பாடல்களை, ஜே.கே.பாப்ஜான் இசையமைக்க சிங்கப்பூர் லதா மியூசிக் சென்டர் ஒலிநாடாவாக வெளியிட்டது.

இவரது இசைத்தட்டு மற்றும் ஒலிநாடாக்களை சங்கீதா இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இவரது இசைத்தட்டு பாடல்களை சென்னை, திருச்சி, காரைக்கால், புதுவை தூர்தர்ஷன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வானொலியில் கேட்டு இரசித்தவர்கள் ஏராளம்.

இவர் பாடிய “சுவனத்தென்றல்”, “அருள் சோலை”, “பேரிரையோனே” “இறைநேசம்” ஏனைய ஒலிப்பேழைகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.

விஜய் டிவி, ராஜ் டிவி நிகழ்ச்சிகளில் இவர் பாடும் பாடல்களை காண முடிந்தது
பன்முகக் கலைஞர்

பொதுவாக ‘கலைஞர்கள்’ என்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நாம் அனுபவத்தில் கண்கூடாகக் கண்டது. இவர் பாடகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் நாகூர் மக்கள் இவரைச் சிறந்த கால் பந்தாட்டக்காரராகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

நாகூரில் கஞ்சஸவாய் ஸ்போர்ட்டிங் கிளப் A, B. C, என பல குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டுத் துறையில் கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்த நேரம். ஹாஜி மெளலானா, குல் முஹம்மது, மெய் சாஹிப், ஷேக் ஹசன் சாஹிப், A.T.அலி ஹசன், A.T.சாபுனி, சாதிக் போன்ற சிறந்த கால்பந்தாட்டக்கார வீரர்கள் களமிறங்கி பேரும் புகழும் பெற்றிருந்த காலமது. மாநில அளவு போட்டிகளில், பல ஊர்களுக்கும் சென்று, நாகூர் கால்பந்தாட்டக் குழுவின் சார்பாக குல் முஹம்மது பங்கு பெற்று விளையாடி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, நாணயம், தபால் தலைகள் சேகரிப்பு போன்றவற்றில் கரை கண்டு பற்பல கண்காட்சிகள்கூட நடத்தியிருக்கிறார்.

“வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணிக்க வேண்டும் என்ற செழுமையான நோக்கம் என் நோக்கம்” என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர் இசையுலக ஜாம்பவான்களில் ஒருவராக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

தமிழக மக்கள் சார்பாக நாகூரில் இவருக்கு வாழ்நாள் விருது வழங்கி இவரை கெளரவிக்க வேண்டியது நம் தலையாய கடமை.

நாகூர் அப்துல் கையூம்

http://www.saaral.in/2020/10/23/gul-mohamed/

 

அஜீஸ் நஸான் ===========


கவ்வாலி உலகை கலக்கிய பாடகர்களின் பட்டியலில் அஜீஸ் நஸான் உடைய பெயர் கட்டாயம் முதன்மையாக பெற்றிருக்கும்.

ஒலிவாங்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை உச்ச ஸ்தாயி குரல் இவர் குரல் . ஆலாபனையில் இவர் காட்டும் ஏற்ற இறக்கம் எல்லோரையும் கிறங்க வைக்கும். ஒரு காலத்தில் இசைப் பிரியர்களை தன் கட்டுப்பாட்டில் பைத்தியமாக்கி வைத்திருந்த இந்த கவ்வாலி சக்கரவர்த்தி ஒரு மலையாளி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆம். இவருடைய தாய்மொழி மலையாளம்.1938ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பம்பாயில் பிறந்த அப்துல் அஜீஸ் குஞ்சு மரைக்கார்தான் பிற்காலத்தில் அஜீஸ் நஸான் என்றாகிப் போனார்.இவரது உருது மொழி உச்சரிப்பின் லாவகத்தையும் சூட்சமத்தையும் கேட்பவர்கள் இவரை மலையாளி என்று கருதவே மாட்டார்கள். உதாரணத்திற்கு ஜேசுதாஸ் எத்தனையோ பாடல்கள் இந்தி திரைப்படங்களில் பாடியிருந்தாலும், அவருடைய உச்சரிப்பை வைத்தே ‘இவர் மலையாளி’ என்று யாரும் எளிதில் சொல்லி விடுவார்கள்.

உதித் நாராயண் என்னதான் குழைந்து குழைந்து பாடினாலும் அவர் தமிழர் இல்லை என்று வரது உச்சரிப்பு காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அஜீஸ் நஸான் அப்படியல்ல. குஜராத்தி மீடியம் பள்ளியில் படித்த இவருக்கு உருது மொழியின் மேல் அதீத காதல் ஏற்பட்டு, ஷாயிர் சாதிக் நிஸாமி என்பவரிடம் முறையாக மொழி கற்றுக்கொண்டு நாளடைவில் உருது கவிதை எழுதும் அளவுக்கு அவர் தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.இஸ்லாமிய பண்பாட்டில் ஊறித்திளைத்த கட்டுக்கோப்பான மலபார் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இவரை, இசையே கூடாது, அதன் பக்கம் அண்டவே கூடாது என்று வலியுறுத்தியவர்

இவரது தந்தை. பம்பாய் மாநகரத்தில் பலசரக்கு கடை வைத்திருந்தார். சிறுவனாக இருந்தபோது, ஒவ்வொருமுறை இவர் திருட்டுத்தனமாக இசைக் கச்சேரி பார்ப்பதற்கு செல்லும்போதும், சிலசமயம் வசமாக மாட்டிக் கொண்டு அதற்கான தண்டனையும் அவர் தந்தையிடமிருந்து அனுபவிப்பார். பிண்டி பஜாரில்தான் இவர்களது வீடு இருந்தது. ஹிந்துஸ்தானி சங்கீத சாம்ராஜ்யத்து சக்கரவர்த்திகள் அத்தனைப்பேரும் அந்தப் பகுதியில்தான் குடியிருந்தார்கள். படே அலி குலாம் கான், அமீர் கான் சாகிப், அல்லா ரகா, இஸ்மாயில் ஆஜாத் கவ்வால் போன்ற அத்தனை பிரபலங்களும் அங்குதான் வசித்தார்கள்.

//ஹமே தோ லூட் லியா மில்கே ஹுஸ்ன் வாலோன் னேகாலே காலே பாலோன் னே, கோரெ கோரெ காலோன் னே//1958-ல் வெளிவந்த ‘அல்-ஹிலால்’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடி வானளாவிய புகழை அடைந்தவர் இந்த இஸ்மாயில் ஆஜாத் கவ்வால். இளைஞராக இருந்த அஜீஸ் நஸான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவரோடு சென்று அமர்ந்து விடுவார். இவர் கச்சேரிக்கு போகும்போது இவரும் கூடவே சென்று, சீருடை அணிந்து கவ்வாலி பாடல்களுக்கு தாளத்திற்கேற்ப கைத்தட்டல் புரிவது, கோரஸ் கொடுப்பது இவரது ஆர்வப்பணியாக இருந்தது. ஊஹூம்.. எத்தனையோ முறை இவருடைய வீட்டார் கண்டித்தும் இவர் கேட்பதாக இல்லை. இசைப்பித்து தலைக்கேறி இருந்தது.

ஒன்பது வயதில் இவர் தன் தந்தையாரை இழந்தார். அதன் பிறகு ஒரு இசைக்குழுவில் சேர்ந்துவிட்டார். 1958-ல் அஜீஸ் நஸான் கிராமபோன் கம்பேனியுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். 1962-ஆம் ஆண்டு ‘ஜியா நஹீன் மானா’ என்ற இவரது இசைத்தட்டு ஓரளவு பிரபலமானது. பின்னர் 1968-ல் ‘நிகா ஹே கரம்’ வெளியாகி கவ்வாலி பாடலுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திப்பட உலகில் கிஷோர் குமார் எப்போழுதோ கால் பதித்திருந்தார். ஆனால் ‘ஆராதனா’ படம் வந்தபின்தான் அவர் உலகப் பிரசித்தி பெற்றார்.

எஸ்.ஜானகி “சிங்கார வேலனே” பாடிய போது அவ்வளவாக பிரபலமாகாதவர், ‘அன்னக்கிளி’ படத்திற்குப் பிறகு உச்சத்தை தொட்டார். ‘பொம்மை’ படத்தில் “நீயும் பொம்மை, நானும் பொம்மை” பாடிய ஜேசுதாஸ் எத்தனையோ காலத்திற்குப் பிறகுதான் தமிழில் பேரும் புகழும் அடைந்தார்.

அதுபோல 1958-ல் கொலம்பியா மியுசிக் கம்பேனியுடன் ஒப்பந்தம் போட்ட அஜீஸ் நஸான் 1970-ல் “ஜூம் பராபர் ஜூம் ஷராபி” என்ற பாடலை அந்த நிறுவனம் வெளியிட்ட போது ஒரே நாளில் உலகறிந்த பாடகர் ஆனார். 1973-ல் “மேரே கரீப் மேரே நவாஸ்” படம் வெளிவந்தபோது இந்த ஒரு பாடலுக்காகவே படம் சிறப்பாக ஓடியது. படத்தின் இடையில் 20 நிமிடம் அஜீஸ் நஸான் பாடுவதுபோல் ஒரு காட்சி இடம் பெற்றிருந்ததுதான் அதற்கு காரணம்.

1974-ல் மீண்டும் ஐ.எஸ்.ஜோஹர் தன்னுடைய ‘5 ரைஃபிள்’ படத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்தார். இதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அச்சமயத்தில் இலங்கை வானொலியிலும், பினாகா கீத் மாலாவிலும், நேயர் விருப்ப பாடல்களில் தொடர்ந்து பல வாரங்கள் இதுவே முதல் வரிசையில் இருந்தது. இந்தப் பாடலுக்குப் பிறகு ரஃபூ சக்கர், ஃபகீரா, லைலா மஜ்னு, நெஹ்லெ பெ டெஹ்லா, ட்ரிஷ்னா போன்ற படங்களில் அவருக்கு பின்னணி பாட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது.

மகாராஷ்டிர மாநில சிறைச்சாலை ஒன்றில் சிறைவாசிகளின் பொழுதுபோக்குக்காக சிறைவாசிகளே ஒரு வானொலி ஒலிபரப்பை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டை கவ்ஸ்துப் குர்லேக்கர் என்ற ஜெயில் சூப்பரிண்டெண்ட் முன்னெடுத்தார். அது நல்ல பிரதிபலனையும் தந்தது. அவர்கள் செய்த அந்த அன்றாட ஒலிபரப்பில் திரும்ப திரும்ப விரும்பிக் கேட்கப்பட்ட பாடல் அஜீஸ் நஸானின் “சடுத்தா சூரஜ் தீரெ தீரெ டல்த்தா ஹே டல் ஜாயேகா” என்ற கவ்வாலி பாடல்தான்.

உருது நூல்கள் ஏராளமானவற்றை அவர் சேகரித்து தன் வீட்டில் ஒரு பெரிய நூலகத்தையே பாதுகாத்து வைத்திருந்தார். ஹார்மோனியம், தபேலா, காங்கோ இன்னும் மற்ற மற்ற தாள வாத்தியங்கள் அனைத்திலும் அவர் கைதேர்ந்திருந்தார்.

கைஸர் ரத்னாகிர்வி, ஹஸ்ரத் ரூமானி, நஸன் ஷோலாபுரி போன்ற உருது கவிஞர்களின் பாடல்களை இவர் பாடியிருந்தபோதிலும் இவரே ஒரு திறமையான ரசனைமிகு கவிஞராகத்தான் திகழ்ந்தார். பஷீர் பத்ர், மக்மூர் சயீதி, மீரஜ் ஃபைஸாபாதி, கிருஷ்ண் பீகாரி நூர் லக்னவி, வலி ஆசி, வஸீம் பஹ்ரெல்வி, முனவ்வர் ரானா, முஸஃபர் வர்ஸி போன்ற புகழ்ப்பெற்ற உருது கவிவாணர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கவ்வாலி பாடல்களில் சில புரட்சிகளை செய்ததால் இவரை ‘புரட்சி கவ்வாலி பாடகர்’ என்றே அழைத்தனர், மேலைநாட்டு தாள வாத்தியங்களை கவ்வாலி பாடல்களில் பகுத்தி புதுமை கண்டவர்.

இந்தி படவுலகில் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் வாத்திய இசைக்கருவிகளை அறிமுகப் படுத்துவதற்கு முன்னரே கவ்வாலி பாடல்களில் நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்திய பெருமை அஜீஸ் நஸானுக்கு உண்டு. அத்தனை கவ்வாலி பாடகர்களையும் ஒருங்கிணைத்து “பம்பாய் கவ்வால் சங்கம்” என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார். நலிவுற்ற பாடகர்களுக்கு ஏராளமான பொருளாதார உதவிகள் தந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

1978ஆம் வருடம் அவரது மனைவி இறந்த பிறகு, ஒரு இந்து பெண்மணியை மறுமணம் புரிந்துக் கொண்டார். மும்தாஜ் நஸான் என்று அவர் அழைக்கப்பட்டார். அஜீஸ் நஸானுக்கு போதைப்பொருளோ, குடிப்பழக்கமோ அறவே கிடையாது. ஆனால் செம சாப்பாட்டுப் பிரியர். “சாப்பாட்டு விஷயத்தில் அவருக்கு பயங்கரமான ஈடுபாடு இருந்தது. பம்பாயில் எந்தெந்த ஓட்டலில் என்னென்ன உணவுப் பொருட்கள் சுவையாக இருக்கும் எல்லாமே அவருக்கு அத்துப்படி. பிறரை வயிறார சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அவரது வழக்கம், எந்த நேரத்திலும் எங்க வீட்டு சாப்பாட்டு மேஜையில் யாராவது விருந்தினர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்” என்று கணவரின் நினைவுகளைப் பகிர்கிறார் அவர் மனைவி மும்தாஜ் நஸான்.

32 டிராக் ரிகார்டிங், டபுள் டிராக், இவர் பாடும் பாடலில் இவரே கோரஸ் படுவது போன்ற டெக்னிக் – இதுபோன்ற அதிரடி நுணுக்கங்களை ஒலிப்பதிவில் இணைத்தவர் இவர். எந்தவொரு உச்சத்தில் பாடினாலும் இவரது குரல் உடையாது; பிசிறு தட்டாது. இவரது குரல்வளத்தை ‘ஸ்டீரியோ வாய்ஸ்’ என்று சிலாகித்து பேசுவார்கள்.

1975 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் 520 ரூபாய் விற்ற காலத்தில் கொல்கத்தா கலா மந்திர் அரங்கத்தில் நடந்த இசைக் கச்சேரிக்கு இவர் பெற்ற தொகை அந்த காலத்தில் 1.80 லட்சம் ரூபாய். ரான்ச்சிக்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்கு தொடர்வண்டியில் போய்க் கொண்டிருக்கிறார். போகும் வழியில் பொதுமக்கள் டிரெய்னை நிறுத்துகிறார்கள், ஏனென்றால் இவரிடம் கைகுலுக்க வேண்டி. வண்டி நின்று இவருடன் கை குலுக்கிய பின்புதான் தொடர்வண்டியை நகர விட்டார்கள் அந்த ஊர்க்காரர்கள்.

அந்த அளவுக்கு மக்கள் இவரை நேசித்தார்கள்.1992ஆம் ஆண்டு அக்டோபர் 8 நாளன்று அப்துல் அஜீஸ் குஞ்சு மரைக்கார் உயிர் நீத்தபோது ‘இசையுலகத்திற்கு பேரிழப்பு’ என அனைத்து ஊடகங்களும் கண்ணீர் வடித்தன

.#அப்துல்கையூம்

 

மொஹிதீன் பேக்


இவரை இஸ்லாமியப் பாடகராக நினைவு கூறுபவர்களை விட சிங்கள பெளத்த பக்தி பாடகராக நினைவு கூறுபவர்களே அதிகம். உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஹைதரபாத்தைச் சேர்ந்த கரீம் பேக் வேலை நிமித்தம் காவல் துறை அதிகாரியாக சேலத்தில் பணிபுரிந்தபோது மொஹிதீன் பேக் பிறந்தார். மொஹிதீன் பேக் உடைய தாயார் பெயர் பீஜான் பீவி.

சேலத்தில் தொடக்க பள்ளியில் இவர் படிக்கும்போதே இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசை பயின்றார். உருது கஜல் மற்றும் கவ்வாலி பாடல்களில் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது.

இவர் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளி தலைமையாசிரியர் ஒருநாள் இவரது தந்தைக்கு தகவல் அனுப்பினார்.

“உங்க மகனுக்கும் படிப்பில் கொஞ்சம் கூட நாட்டமில்லை. ஆகவே இவனைக் கொஞ்சம் கண்டித்து வைக்கவும்”

வீட்டுக்குச் சென்றால் ஒரு பெரிய பூகம்பமே காத்திருக்கிறது என்பதை அறிந்த சிறுவன் மொய்தீன் பேக், அப்படியே திருச்சிக்கு ஓடிப் போய் விடுகிறான். அங்கு பாய்ஸ் இசை/ நடனப் பள்ளி ஒன்றுக்குச் சென்று தன்னை அங்கு சேர்த்துக் கொள்ளும்படி அங்குள்ளவர்களிடம் கெஞ்சுகிறான். தனக்கு நன்றாக பாடவரும் என்று சொல்லி, அப்போது பிரபலமாக இருந்த கண்பார்வையற்ற கே.சி.தே (Krishna chadra Dey) அவர்களுடைய பாடலை அங்கு அட்டகாசமாக பாடிக் காண்பிக்கிறான்.

(கல்கத்தாவைச் சேர்ந்த கே.சி தே என்ற இசைக்கலைஞர் இந்தி இசையமைப்பாளர். எஸ்.டி.பர்மனின் குரு என்பது கூடுதல் தகவல்)

சிறுவனுடைய குரலைக் கேட்டு பரவசமடைந்த பள்ளி நிர்வாகிகள் அவனை அங்கு சேர்த்துக் கொள்கிறார்கள். அவனுக்கு அந்த இசைப்பள்ளியில் பாடல்கள் பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது

ஓடிப்போன சிறுவனை காவல்துறையில் பணிபுரிந்த தந்தை கரீம் பேக் தனது தொடர்புகளை வைத்து நாலாபுறமும் வலைவீசி தேடுகிறார். திருச்சியில் இருப்பதாக செய்தி கிடைக்கிறது. கரீம் பேக்கின் நண்பரொருவர் அப்போது மெட்ராஸ் போலீஸ் பேண்டு குழுவில் ஊதுகுழல் வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார்.

இவருடைய ஏற்பாட்டின்படி ஓடிப்போன சிறுவனை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அந்த இசைப்பள்ளிக்குச் சென்றபோது, ஒரு மேடை நிகழ்ச்சியில் மொஹிதீன் பேக் பாடிக்கொண்டிருக்கிறான்.. பாட்டு முடியும் வரை காவல்துறையினர் காத்திருந்து குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுச் சென்று சேலத்தில் இவனது பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர்.

இசையார்வம் சிறுவனை விடுவதாக இல்லை. உஸ்தாத் அஹ்மது பக்ஸ் என்பவரிடம் கவ்வாலி, கஜல், பஜன் அனைத்தும் கற்றுத் தேறுகிறான்.

மொஹிதீன் பேக்குடன் கூடப் பிறந்தவர்கள் 13 பேர்கள். இவருடைய தகப்பனார் மட்டுமின்றி பாட்டனார், சகோதரர் உட்பட பலரும் காவல்துறையிலேயே பணியாற்றினர். இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு படகு விபத்தில் கொழும்பு நகரத்தில் மரணித்தபோது தன் பெற்றொருடன் இவர் கொழும்பு செல்ல நேருகிறது.

இலங்கை வந்தவர் அங்கேயே தங்கி விடுகிறார்.. 18வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து விடுகிறார்.

13வது வயதிலிருந்தே இவர் பாடத் தொடங்கி விட்டார். இவருடைய குடும்பத்தில் பலரும் உருது கஜல் பாடகர்களாக இருந்தனர். தனது உறவினர் சேக் அமீர், சேக் பரீது போன்றவர்கள் இவருக்கு அளித்த இசைப்பயிற்சி இவருடைய திறனை மேலும் மெருகெற்றியது.

இலங்கையில் கவுஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் இவரது திறமையைக் கண்டெடுத்து இவரை உற்சாகப்படுத்தி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பணக்கார வீடுகளுக்கு சென்று பாடத் தொடங்கியவர் பிறகு இலங்கை வானொலியில் ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவருடைய மனைவியின் பெயர் சகீனா பேக். உறவுக்காரப் பெண்ணான இவரை 1947ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். இவரது மகன்கள் இஷாக் பேக், இல்யாஸ் பேக், மகள் முனீரா பேக் அனைவரும் பிரபலமான பாடகர்கள்.

கொலம்பியா இசைத்தட்டில் இவர் பாடிய முதற்பாடல் (1936) பாடல் “கருணா முகுதே நமு கிலீலா” என்ற சிங்களப்பாடல். சிங்கள மொழியில் வெளிவந்த இரண்டாம் திரைப்படமான “அசோகமாலா” என்ற படத்தில் பின்னணி பாடினார் (1947). இப்படத்தில் இவர் 4 பாடல்கள் பாடினார். ஒரு பாடல் காட்சியில் இவரே நடித்தும் இருந்தார்.

இஸ்லாமியப் பாடல்கள் அவ்வப்போது இவர் பாடினாலும் இவர் அதிகமாக பாடியது பெளத்தமத பக்தி பாடல்களே. இவர் பாடிய “புத்தம் சரணம் கச்சாமி” மிகவும் பிரபலம்.

1950களில் சிங்களத் திரைப்படங்களில் பிரபலமான பின்னணிப்பாடகராக வலம் வந்தார். “கெலே நந்த” மற்றும் “தைவோ கய” ஆகிய சிங்களத் திரைப்படங்கள் இவர் பாடிய பாடல்கள், 1953 ஆம் ஆண்டில் “சுஜாதா” திரைப்படத்தில் இவர் பாடிய நான்கு பாடல்களில் ஒரு பாடல் ஜமுனாராணியுடன் இணைந்து பாடியது, 1955ல் “சடசுலங்க” என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து சிங்களப் பாடலைப் பாடியது, – இவை யாவும் இவரை தலைச்சிறந்த ஒரு சிங்களப் பாடகராக உயர்த்தியது. இலங்கை வானொலியில் ஒருக்காலத்தில் நான்கு மொழிகளில் பாடும் திறம் பெற்ற பாடகராய் வலம் வந்தவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இலங்கை அரசாங்கம் இவருக்கு “கலா சூரி” என்ற உயர்ந்த விருதையும் தந்து கெளரவித்தது. (1983, 1987). 450 சிங்கள மொழி படங்களிலும் 9,500 பாடல்களுக்கும் மேலாகவும் பாடியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’ போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

இலங்கையின் முதலாவது சுதந்திர நாள் வைபவம், மற்றும் 1974 பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார். 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா இவருக்கு இலங்கை குடியுரிமை வழங்கிக் கௌரவித்தார்

55 ஆண்டுகள் இசைத்துறை அனுபவத்தில் ஏராளமான இஸ்லாமியப் பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். புகழ்ப்பெற்ற கவிஞர்/இசையமைப்பாளர் நெ.மு.நூர்தீன் பாடல்கள் உட்பட பல சிறந்த கவிஞர்களுடைய இஸ்லாமியப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கவிஞர் மறைதாசன் எழுதி டி.எ.கல்யாணம் இசையமைத்த

“தீனெனும் இஸ்லாம் நெறிதனைத் தாங்கி

திகழ்ந்திடும் சோதரனே”

என்ற பாடல் கேட்போர் உள்ளத்தைக் கவர்ந்தது

“இறையோனின் சுடரான நபிநாதரே!

இணையேதும் இல்லாத மஹ்மூதரே !”

“உலகெங்கும் வழிகாட்டும் தீபமே – நலம்

தினம் கூறும் மாபுர்கான் வேதமே”

“தாரணி யாவுமே போற்றிடும் மேதையே

தன்மை மேவும் நாதரே !”

1991ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தனது 72வது வயதில் மரணமுற்றார்.

“நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன். ஆகையால் நான் புத்த பாடல்கள் பாடுவதை விரும்புகிறேன். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாமெல்லோரும் சகோதரர்கள். நான் இறக்குவரை பெளத்தமத பக்தி பாடல்கள் பாடுவேன். நான் இந்த இலங்கை நாடு மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்,” என்று பேட்டியளித்தார்.

ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட பிறகு அல்ஹாஜ் மொய்தீன் பேக் என்று அழைப்பதையே அவர் விரும்பினார்.

இவ்வருடம் பிப்ரவரி மாதம் இவர் நினைவாக இலங்கை அரசாங்கம் தபால்தலை வெளியிட்டிருந்தாலும் இவருக்கான போதிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பது சிலரது அபிப்பிராயமாக இருக்கிறது.

#அப்துல்கையூம்