ஒட்டுத்துணி அரசர்

யார் இவர்?

சுட்டெரிக்கும் சூரியன் – அவர்
பட்டு மேனியைச்
சுட்டுவிடுமோ என்று

நடைபயின்ற நாயகத்தை
குடைபிடித்த மேகத்தை
இடை மறித்து கேளுங்கள்
விடையைக் கூறும் !

     *     *     *

யார் இவர்?

வானில் உலாவரும்
வண்ண நிலாவை
வழிமறித்துக் கேளுங்கள்

தன்
தேகத்தையே இருகூறாய்
வகிர்ந்துக் காட்டும் ..

பிளந்துக் காட்டியதே – அந்த
பெருமான்தான் என
பெருமை கொள்ளும் !

     *     *     *

யார் இவர்?

எச்சிலை வலையாய்ப் பின்னி
எதிரிகளிடமிருந்து
ஏந்தலைக் காப்பாற்றிய
எட்டுக்கால் பூச்சியை
எதிர்க்கொண்டு கேளுங்கள்

அந்த
ஈருலக அரசர்
யாரென்ற உண்மையை
பாரறிய பறைசாற்றும் !

     *     *     *

எந்தத்
திருப்பெயரை செவிமடுக்கையில்
பெருவிரலின் நகக்கண்கள்
இருகண்களில் முத்தம் பதிக்குமோ
அந்தப் பெயருக்குச்
சொந்தக்காரர் இவர்

மதுரமான இப்பெயரை
அதரங்கள் உச்சரிக்க
சதுரமெலாம் பூரிக்கும்

இந்த
வீரிய விதை
பூமியில் விழுந்ததால்
இசுலாமெனும் ஆலமரம்
விசுவரூபமெடுத்து
விருட்சமாகியது  

இவர்
கால் பதித்த இடமெல்லாம் – இன்று
கனிம வளம்

பாதம் பட்டதினால்
பாலைவனமெல்லாம்
சோலைவனம்

      *     *     *

இரத்தினக் கற்களை
ஆபரணமாக்கி
ஆடம்பரமாய் வாழ்ந்த
அரசர்களுக்கு மத்தியில்

பாடாய்ப்படுத்திய
பசியைப் போக்க  – வயிற்றில்
பாரக்கற்களை கட்டிக்கொண்ட
பரந்த தேசத்து பேரரசர் இவர்

     *     *     *

இவர்
செங்கோல் செலுத்திய
ஆட்சியின் மாட்சியை
ஏட்டில் வரைத்திட
எழுதுகோல் காணாது

எடுத்துரைக்க
எஞ்சியுள்ள வாழ்நாளும்
எமக்குப் போதாது

சரித்திர நாயகர்களில்
இவருக்குத்தாம்
முதலிடம்

வரலாற்று பக்கங்கள் -
வரிந்து வந்து
திறந்த நெஞ்சில் – இவரது
வாழ்நாட் சாதனையை
பச்சை குத்திக் கொண்டதோ?

     *     *     *

ஒரு விடியலைத் தந்த
குளிர் நிலவு இது

இறைவனின் தூது
இவரால்தான் நிறைவு

இவரது
அரியாசனத்திற்கு
சரியாசனம் .. ..?
ஊஹும் ..
எதுவும் கிடையாது

அண்டவனின்
அருள் மழையில்
அருட் கொடையாய்
வந்த மழைத்துளி

அகிலமே இதில் நனைந்தது
ஆதாயம் தேடி

இவரது உபதேசம்
சென்றடைந்தது பலதேசம்

இவரது இறைபோதம்
பாவக்கறைகளை
போக்கிவிடும் சவுக்காரம்

     *    *     *

பாரசீக சல்மானையும்
ரோம நாட்டு சுஹைலையும்
அபிசீனிய பிலாலையும்
அன்பால் ஈர்த்த
ஐக்கியப் பேரவையின்
அதிபர் இவர்.

சர்வதேச பேரவையின் – இந்த
சர்தாரின் விரலசைப்பிற்கு
சகல உடமைகளையும்
சத்திய வழியில்
தியாகம் செய்தனர்
திண்ணைத் தோழர்கள்.

“இறைவனும்
இறைவனின் தூதரும்
இருப்பது போதும்” என்று
இருந்த செல்வம்
எல்லாவற்றையும்
ஈந்து மகிழ்ந்த அபூபக்கரின்
ஈடற்ற அன்புக்கு
உரித்தானவர் இவர்

எந்தப் பல் வீழ்ந்ததென்று
ஏதும் அறியாது – தன்
சொந்தப் பல் அத்தனையும்
ஒவ்வொன்றாய் தகர்த்துக்கொண்ட
உவைசுல் கர்னியின்
உண்மையான அன்புக்கு
உவப்பான மனிதரிவர்

     *     *     *

அழுது அழுது
பழுதான கண்கள்
தொழுது தொழுது
துவண்டுப்போன கால்கள்

படைத்தவனுக்கு முன்
பதைபதைத்த – இந்த
பரிசுத்துவானின்
பயபக்திக்குமுன்
பாவமூட்டைகளைச் சுமக்கும்
நம் இறையச்சம் எம்மாத்திரம்?

“பகலவனை ஒருகையில்
பால்நிலவை மறுகையில்
பகிர்ந்தெமக்குத் தந்தாலும்
பற்றியுள்ள கொள்கையினை
சற்றும் விடமாட்டோம்” என்று
சூளுரைத்த சீலர்

     *     *     *

எஃகைக் காட்டிலும்
இறுக்கம் கொண்ட
ஈமான் பலம் கொண்ட
கோமானின் நெஞ்சம்
இலவம் பஞ்சைக் காட்டிலும்
இலகிப்போன உள்ளம்.

ஆருயிர் சிறிய தந்தை
வீரமிகு ஹம்ஸாவின்
மாரைப் பிளந்து
ஈரற்குலையை எடுத்துருவி
ஆரமாக்கி அணிந்து
ஆனந்தக் கூத்தாடிய
அல்லிராணி ஹிந்தாவை
அன்போடு மன்னித்த
அண்ணலாரின் இதயம்
அகிலமே வியக்கும் அதிசயம் !

     *     *     *

ஹீரா குகை தவசி
சீறா புகழ் குறைஷி
வாராது வந்த மாமணி – இந்த
பாருலகம் போற்றும் மாமுனி

இறைமறைக்கு
விளக்கவுரை
எழுத நினைத்த இறைவன் – அதை
இரத்தமும் சதையாக்கி
இரசூலை அனுப்பினான் போலும்.

     *     *     *

ஆறடி அகலம்
ஏழடி நீளம்
அரபகம் ஆண்ட இந்த
அண்ணலாரின் உறைவிடம்

உடுத்த ஒரு அங்கி
உலர்த்த ஒரு அங்கி
ஒட்டுத்துணி உடுப்பு
ஒன்றோ இரண்டோதான்
இவரது வஸ்திரம்

காலடியில்
பொக்கிஷங்கள் கிடந்தபோதும்
காய்ந்த ரொட்டிதான்
இவரது வஜீபனம்

ஓலைப்பாயே இவரது
சிம்மாசனம்

பள்ளிவாயிலே
தலைமைச் செயலகம்

வீட்டுத் திண்ணையும்
ஈச்ச மரத்தடியும்தான்
நாட்டை ஆண்ட இம்மன்னரின்
கோட்டை கொத்தளம்

தானே துணிதுவைத்து
தானே தையலிட்டு
தானே பால் கறந்த
தானைத் தலைவரை
நானிலமே வியக்கிறது !

பாதுகையை செப்பனிட்ட
பாதுஷாவை
படித்ததுண்டோ வரலாற்றில்?

எளிமையே இனிமையென
இன்பம் கண்டவர்
இவர்போல் எவருளர்?

நாகூர் ‘புறா’ணம்

pigeon

நாகூர் தர்காவுக்குள் நான் கண்ட காட்சி இது. வெளியூர்க்காரர் ஒருவர் புறாவை விடுதலை(?) செய்வதற்கு நேர்த்திக்கடன் செய்துக் கொண்டார் போலும். காசு கொடுத்து புறாவை வாங்கி, கையை வானுக்குத் தூக்கி பறக்கவிட்டார். நாலடி கூட பறந்திருக்காது. தரையில் வந்து அமர்ந்துக் கொண்டது.

“சே! இதைக் கூட ஒழுங்காக பறக்கவிட நமக்குத் தெரியவில்லையே!” என்று தன்னைத்தானே அவர் நொந்துக் கொண்டிருக்க வேண்டும். இம்முறை சரியாக பறக்க விடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு, ‘தம்’ பிடித்துக் கொண்டு, கைகளை கூடிய மட்டும் பின்னுக்கு இழுத்து, பலம் கொண்ட மட்டும் கைகளை மேலாக தூக்கி மீண்டும் பறக்க விட்டார். இம்முறை ஒன்றிரண்டு அடி கூடுதலாக பறந்தது. ஆனால் மறுபடியும் கூண்டின் மேலேயே வந்து ஜாலியாக அமர்ந்துக் கொண்டது.

இவ்வளவு மோசமான ஆட்டக்காரராக இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். காசு கொடுத்தது தண்டமாகி விட்டதே என்று நினத்தாரோ என்னவோ தெரியாது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப்போல அவர் தன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் இருந்தார்.

இந்த முறை புறாவை பலமாக பிடித்துக் கொண்டார். ஒலிம்பிக் பந்தயத்தில் குண்டு எறியும் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரரைப் போல காட்சி தந்தார். கைகளை தாராளமாக அகல விரித்துக் கொண்டார். இன்னும் சற்று முயற்சி செய்தால் அவரேகூட பறந்திருக்கலாம்.

முக்கி, முனகி, மூச்சைப்பிடித்துக் கொண்டு மும்முரமாக இம்முறை பறக்க விட்டார். அது மறுபடியும் பறந்து வந்து பக்கத்தில் இருந்த மினாராவில் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துக் கொண்டது.

“இந்த மனிதன் உலகம் புரியாத மனுஷனாக இருக்கிறானே” என்று புறா தன் மனதுக்குள் நினைத்து பரிதாபப்பட்டிருக்கக் கூடும். வீட்டுக்கு நான் வந்ததும் என் மனதில் பட்டதை கிறுக்கி வைத்திருந்தேன், படித்து பார்த்தபோது கவிதை போன்று இருந்தது.

எல்லையிலா வானம்
இவைகளுக்கிருந்தும்
இரண்டடி ஆக்கியது
என்ன நியாயம்?

சிறைப்பட்டுப் போகவோ
சிறகுகள்?

இவைகள்
சிறகுகள் இருந்தும்
“கிவி” பறவையான
கிலி பிடித்த புறாக்கள்!

தந்திரமாய்
தானியங்களைத் தந்து – இதன்
சுதந்திரத்தைப் பறித்தது யார்?

உயரே பறப்பதற்கு
உருவெடுத்த இவைகள்
உயிர்வதை படுவதற்கோ?

இந்த சமாதானத் தூதுவன்
ஆயுள் தண்டனை அனுபவிப்பது
எந்த பாதகச் செயலுக்காக?

வாயில்லா ஜீவன்களை
வறுத்தெடுத்தால்தான்
நேர்த்திக் கடன்கள்
நிவர்த்தியாகுமோ?

எந்த
இறைநேசர்கள் சொன்னார்கள்
இவைகளின் சிறகுகளை
இரக்கமின்றி ஒடிப்பதற்கு?

விடுதலையை
எட்டாக் கனியாக்கி
அடிமைத்தளத்தை இவர்களுக்கு
பட்டா போட்டுக் கொடுத்தது யார்?

இவர்களுக்கு
விடுதலை கீதம் பாட
எந்த மீசைக்காரனை
எழுந்து வரச் சொல்வது?

இவர்கள்
ஜீவனை கூண்டிலடைத்து
ஜீவகாருண்யத்தை அல்லவா
பறக்க விடுகிறார்கள்?

ஐந்து மினாரா

2743311864

ஐவேளைத் தொழுகையை
நினைவுறுத்தும் மினாராக்கள்
பள்ளிக்குள் காலிவரிசைகள்

நாகூர் யானையும் மனோகரா சிவாஜியும்

Nagore Elephant chained

“மனோகரா” சிவாஜியாய்
நாகூர் யானை
காலில் கனத்த சங்கிலி

தகிடு தத்தம்

Offerings

“கை ஒன்று கொடு”
“கால் என்ன விலை?”
“தொடை இருக்கா?”
“என்ன! கிட்னி கிடையாதா?”

இங்கு
கூறு போட்டு
கூவி விற்பதோ
உடற் கூறு !

மனித உறுப்புகள்
மலிவான விலையில்
மகத்தான விற்பனை !

கண், காது, மூக்கு
கண்ட துண்டமாய்
காசுக்கு கிடைக்கும்
காட்சிகள் இங்கு !

பள்ளியில் வழிபாடு விடுத்து
வெள்ளியில் எதற்கு வழிபாடு?

நிவாரணம் ..
நேர்ச்சை செய்தவருக்கு
கிடைக்குதோ இல்லையோ
நிதி சேருவதோ
தகடு சுத்தம் என
தகிடு தத்தம் செய்பவருக்கு !

இதற்கு வெள்ளி என்று
பெயர் வைத்தால்
வெள்ளிக்கு என்ன பெயர் வைப்பது?
தங்கம் என்றா?

மனுவை மனதால்
போட்டால் போதாதா?

உறுப்புகளை
உண்டியலில் போட்டால்தான்
உடன் பரிசீலனை என்று
உரைத்தது யாரோ?

காற்றின் முகவரி

Writings of Wind

பாலைவன
அஞ்சல் அட்டையில்
காற்றின் முகவரி
எத்துணை அழகு?

இந்த அடுக்குத் தொடர் .. ..
அண்ணாவின்
அடுக்கு மொழியைக் காட்டிலும்
அழகோ அழகு !

அகன்ற மணற்பரப்பை
ஆட்டோகிராப்
ஆக்கியது யார்?

உலகிலேயே
அழகான கையெழுத்து
காற்றுக்குத்தான் போலும்.

தூரிகையே இல்லாமல்
ஓவியம் வரையும் சூத்திரம்
காற்றுக்கு மாத்திரம்
சாத்தியம்.

நெளிவு சுளிவு
தெரிந்த காற்று
பிழைத்துக் கொள்ளும் !
அரசியல்வாதியின்
பிள்ளையைப்போல !

வளைவுகள்
ஆபத்தானவை என்று
யார் சொன்னது?

இதோ
பாருங்கள்
கவர்ச்சியான
வளைவுகளை !

காற்றுக்கு சூட்சமம்
கற்றுக் கொடுத்தது
யாராக இருக்கும்?

ஓவியர் ஜெயராஜ்தானோ?

நாகூர் மொட்டை

Nagore Mottai 

இவர்களை
‘முடி திருத்துபவர்கள்’ என்றால்
முற்றிலும் பொருந்தாது.
‘சிகை கலைஞர்கள்’ என்றால்
சிந்தனைக்கு ஒவ்வாது.
‘சிகை களைஞர்கள்’ என்று
ஏன் சொல்லக்கூடாது?

களையான முடியை
களைவதில் வல்லவர்கள்.
காரியத்தை கச்சிதமாய்
‘முடி’க்கத் தெரிந்த
களைஞர்கள் இவர்கள்.

கத்தி பட்டால்
கருமுடிதான் இவர்களுக்கு
புரைய எதிர்ப்பி !
(antiseptic)

சுகாதாரம் .. .. .. ..
“வீசம் என்ன விலை?”
என்பார்கள்.
கிருமி நாசினி .. .. ..
“கிலோ என்ன விலை?”
என்பார்கள்.

‘அபூர்வ ராகங்கள்’ கமலை
‘ஆளவந்தான்’ கமல் ஆக்கும்
அபூர்வ வித்தை அறிந்தவர்கள் !

கத்தி பேசுவார்கள் சிலர்.
இவர்களுக்கு .. ..
கத்தி பேசும் !

இங்கு வரும்
எல்லார் குடுமியும்
இவர்கள் கையில்தான் !

தடி எடுத்தவனெல்லாம்
தண்டல்காரன் ஆனதைப்போல
கத்தி பிடித்தவனெல்லாம்
கைத்தொழில் கற்றவன் என்று
மார்தட்டும் மாடம் – இந்த
குளத்தங்கரை கூடம் !

இங்கு
மழித்தலுக்குப் பின்
கூட்டல் உண்டு !

இந்த
‘சவுரித் திடல்’,
டோப்பாக்காரர்களுக்கு
சாப்பாடு போடும்
சப்ளைக் கிடங்கு !

ஆண்டுதோறும் அல்ல ..
அனுதினமும் இங்கு
சந்தனம் பூசும் வைபவம் !

முடி துறப்பதற்காகவே
இங்கு வருவார்கள்
இந்நாட்டு மன்னர்கள் !

முடி சூடா மன்னர்களாக
இங்கிருந்து
திரும்புபவர்கள் பட்டியலில்
திருப்பதியும் உண்டு
பழனியும் உண்டு
நாகூர் மீரான்
நாகூர் கனியும் உண்டு !!

விளைச்சல் விசேஷமாய் இருந்து
அறுவடையும் அமோகமாக இருந்தால்
காண்டிராக்டர் காட்டிலே
மயிர்தான் போங்க !

அந்த 14 நாட்கள்

Durgah Varandah

(இந்தப் பதிவை, கதை, கட்டுரை, டயரிக் குறிப்பு, ஆட்டோகிராப் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான்)

நாகூர் கந்தூரி விசேஷத்தை கண்குளிர கண்டு எத்தனையோ மாமாங்கம் ஆகி விட்டது. ‘இந்த வருஷமாவது போய்ப் பார்க்க வேண்டும்’ என்று மனதில் உதித்த ஆசையை இங்கிருக்கும் என் பக்கத்து ஊர் நண்பரிடம் பகிர்ந்துக் கொண்டபோது “எத்தனை PJ வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது” என்று பொரிந்து தள்ளி விட்டார். காரணம் அவர் ‘உஜாலா’வுக்கு மாறிவிட்டிருந்தார்.

“நான் கந்தூரி சமயத்தில் ஊர் போக நினைக்கும் காரணமே வேற .. “ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் முன்பே “நீங்க இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா? உங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியல்லியே..?” என்று தீர்ப்பும் வழங்கி விட்டார்.

*      *     *

அந்த 14 நாட்கள் – நினைத்தாலே இனிக்கும். மனதுக்குள் மத்தாப்பு மலரும். சங்கு சக்கரமாய் என் இளமைக்கால அனுபவங்கள் எனக்குள்ளே சுழன்றது. நிகழ்வுகள் சரவெடியாய் ஒவ்வொன்றாய் கண்முன் வந்து நின்றது. அந்த ‘எட்டாம் இரவு’ வாணவேடிக்கையை என் மனதுக்குள் நானே நிகழ்த்திப் பார்த்தேன். 

பள்ளிப் பருவத்தில் கந்தூரி கொண்டாட்டத்தை ரசிக்க அளவுக்கு இப்போது ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது கவலை அறியாத வயசு. கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி சாப்பிடச் சொல்லும் மனசு. கால் போன போக்கில் சுற்றித் திரிந்த காலம்.

இப்போது, நண்பர்களோடு ஊர் சுற்றலாம் என்று நினைத்தால், நாம் விடுமுறையில் போகும் சமயத்தில் அவர்கள் ஊரில் இருக்க மாட்டார்கள். துபாயிலோ, சவுதியிலோ, சிங்கப்பூரிலோ அந்த ஊர் கரன்ஸியை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் கந்தூரி வந்தால் ‘இது அனாச்சாரம். மார்க்கத்திற்கு புறம்பானது’ என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம். போஸ்டர் ஒட்டுகிறார்களாம்; நோட்டீஸ் வினியோகிக்கிறார்களாம். ஆனால் கூட்டம் மட்டும் முன்பு வந்ததை விட கூடுதலாகவே வருகிறதாம். சொல்கிறார்கள். கந்தூரியில் கூடு வருகிறதோ இல்லையோ ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பாக வந்து விடுகிறாராம்.

“கடைத் தெருவில் நடந்தால் எரிச்சல்தான் வருகிறது. கூட்ட நெரிசலிலாவது சென்று விடலாம். இந்த இசையின் இரைச்சலில்.. .. அப்பாடா காது சவ்வு கிழிந்து விடுகிறது” என்று அலுத்துக் கொண்டார் சென்ற ஆண்டு கந்தூரிக்குப் போய்வந்த வேறொரு நண்பர்.

ஒரே சமயத்தில் நாகூர் ஹனிபா, உவைஸ் ரிஸா காதிரி, சாப்ரி பிரதர்ஸ் 8,7, 6 கட்டையில் மாறி மாறி பாடிக் கொண்டிருந்தால் கொடுமையைக் கேட்கவா வேண்டும்? வேறு எங்கே.. ? கேசட் கடையில்தான்.

கால்மாட்டுத்தெருவிலும். தெருப்பள்ளித் தெருவிலும் பிளாஸ்டிக் சாமான் கடைகளின் எண்ணிக்கை குறைந்துப் போய்விட்டதாம். பிறகு கந்தூரியில் என்ன சுவராஸ்யம் இருக்கப் போகிறது? பாவம் தாய்க்குலங்கள். வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்கள். அவர்களுக்கு அதுதானே ‘ஹந்திரி’!

அரும்பு மீசை துளிர் விட்ட வயதில் கந்தூரியின் போது நண்பர்களுடன் அடித்த லூட்டி; சேரனுக்கு ஆட்டோகிராப்பில் ஞாபகம் வந்ததுபோல; என் கண்முன் வந்து நிழலாடியது. அந்த குதூகலம், உல்லாசம், இப்போது போனால் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. அது மட்டும் 100% கியாரண்டி.

சாப்பீஸ் விற்கும் ஹேட்டுபாய், ஆட்டுக்கால் சூப்பு / பொறிச்ச மூளை விற்கும் மாமு, வாடா விற்கும் சுல்தான் இவர்களெல்லாம் உயிரோடு இருந்த காலத்தில், விதவிதமாக  நாக்குக்கு ருசியாக சாப்பிட்டதைப் போல; இப்போது சாப்பிட முடியாது. கொலஸ்ட்ரால் வந்து விடுமாம். 

ஆந்தைகள் வெளியே வரும் நேரத்தில்தான் நண்பர்கள் ஒன்று கூடி வந்து “வா கச்சேரிக்குப் போலாம்” என்பார்கள். திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்)

தர்கா முற்றத்தில் கச்சேரி களை கட்டியிருக்கும். “லாலு முரீத்.. லாலு முரீத்” என்று கவ்வாலி பாடகி பியாரி பாடிக்கொண்டிருப்பார். கூடவே அவரது மகள் சாதனா. இளவட்டங்கள் அங்கேதான்  குழுமியிருப்பார்கள். இளங்காளைகள் இசையை இந்த அளவுக்கு ரசிக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் தாங்காது. அடுத்த நாள் செளத்ரி சாபு வீட்டில் வி.ஐ.பி.களுக்காக தனியே கச்சேரி நடக்கும்.

கலிங்கத்துப்போரில் காயம்பட்டுக் கிடந்த போர் வீரர்களைப்போல பக்தகோடிகள் இடது கோடியில், தலை வேறு, கால் வேறாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். “தமா தம் மஸ்த் கலந்தர்” என்ற பாடல் வரி வரும் சமயத்தில் டோலக்குகாரர் பலமாக தட்டுவார். ‘கும்..கும்’ என்ற சப்தம் தர்கா குளம் வரை எதிரொலிக்கும். அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் ‘போர்வீரர்கள்’ அலறியடித்துக் கொண்டு பாதித்தூக்கத்திலிருந்து எழுந்து பயபக்தியாக உட்கார்ந்துக் கொள்வார்கள். (வேறு வழி?)

எதிர் மண்டபத்தில் பெங்களுர் பாஷா பாடிக் கொண்டிருப்பார். அல்லது கலிபுல்லா பாய் ஹார்மோனியத்தில் காற்றை நிரப்பி, தர்கா உள்ளேயே உட்கார்ந்துக் கொண்டு, “நீர் எங்கே? எங்கே? எங்கே? சாஹிப் மீரானே!” என்று வலைவீசி தேடிக் கொண்டிருப்பார். (“எழுந்து சற்று தூரம் போனால் சாஹிப் மீரானை தரிசித்து விடலாமே!” என்று நண்பர்கள் கமெண்ட் அடிப்பார்கள்)

வேறொரு முற்றத்தில் பாவாமார்கள் தாயிரா சப்தம் முழங்க நாக்கிலே கூர்மையான ஆயுதத்தை சொருகிக் கொண்டிருப்பார்கள். வளைகுடா நாடுகளில், ‘சிக்கன் டிக்கா’ கம்பியில் சொருகி வைத்திருப்பதைப் பார்க்கையில் இந்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வரும். 

பக்கத்திலிருக்கும் குளுந்த (குளிர்ந்த) மண்டபத்தில்தான் நாங்கள் உட்கார்ந்து சூடான விவாதம் செய்வோம். அருகாமையில் உப்புக்கிணறு இருக்கும். தைரியமாக கிணற்றுக்குள் குதிக்கலாம். வேண்டுமானால் ‘டைவ்’ கூட அடிக்கலாம். உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது.

உ..ம் (பெருமூச்சு). அது ஒரு நிலாக்காலம்.

*     *     *

“ஹலோ.. ஹலோ.. உங்களைத்தானே…என்ன யோசனையிலே மூழ்கிட்டீங்க?”

கூப்பிட்டது சக நண்பர்தான். “எப்ப போறதா உத்தேசம்?. சாந்து பூசுறதுக்கு போறீங்களா இல்லாட்டி பாம்பரம் ஏத்துறதுக்கு போறீங்களா?” (இப்பொழுது ஏது சாந்து? ஆயில் பெயிண்ட்தான் யாரோ அடித்துக் கொடுக்கிறார்களாம்)

நண்பரின் கிண்டல் புரிந்தது. இவருக்கு பதில் கொடுத்து அந்த பவித்ரமான கனவுகளை பாதியில் கலைக்க நான் தயாராக இல்லை. அவரைக் கண்டு கொள்ளாமல், மறுபடியும் அந்த வண்ணமயமான பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்.

*     *     *

கந்தூரியைக் களைகட்ட வைப்பதே இந்த கைலி கடைக்காரர்கள்தான். ரிக்சாக்காரன் படத்தில் கனவுக்காட்சியில் போடும் செட் போல கட்-அவுட் சகிதம் ‘தோட்டாதரணி’கள் வந்து இறங்கி விடுவார்கள்.
 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தாஜ்மகால் பீடி வேன், கூம்பு போன்ற நீண்ட ஒலிபெருக்கி பொருந்திய சொக்கலால் ராம்சேட் பீடி வேன் எல்லாமே வந்து சேர்ந்துவிடும். ஹாட்டின் பீடி வேனில் பயில்வான் பொம்மையொன்றை இருக்கும். அந்த பொம்மையின் கைவிரல்களில் பீடி. வாயருகே அது கொண்டுச் சென்றதும் புகை வரும். கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மாமா, மாமா, மாமா, ஏமா, ஏமா, ஏமா” என்று குறவன் குறத்தி வேடத்தில் ஜோடிகள் டான்ஸ் ஆடி மகிழ்விப்பார்கள்.

சீரியல் லைட் போட்டு “பீம புஷ்டி அல்வா” விற்பனை சூடு பிடிக்கும். எனக்கு அதைச் சாப்பிட பயம். அந்த விளம்பரப் பலகையில் உள்ள பீமாவைப்போல நாமும் தடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான், (அதைச் சாப்பிடாமலே இப்போது நான் தடித்து விட்டேன் என்பது வேறு விஷயம்)

சாலையோரத்தில் ‘தவில்’ வாத்தியத்தை செங்குத்தாக நிறுத்தி வைத்ததைப்போல பூமிக்கிழங்கை வைத்துக் கொண்டு மெல்லிய வட்டமாக அறுத்து விற்பார் ஒருவர். இனிப்பென்றால் இனிப்பு அப்படியொரு இனிப்பு.

உள்ளுர்க் கலைஞர் ஹாஜா பாஷா நகத்தாலேயே படம் வரைந்துக் கொண்டிருப்பார். விளம்பரப்பலகை ஒன்று வைத்திருப்பார். சினிமா பிரபலங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். 

எடை பார்க்கும் எந்திரத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஒருவர். கட்டணம் பத்து பைசாதான். எல்லு மிட்டாய் வில்லைகளை குவித்து வைத்து கொண்டு தராசில் எடை பார்த்து கிலோ கணக்கில் விற்றுக் கொண்டிருப்பார் இன்னொருவர். பம்பாய் மிட்டாய்காரன் சோன்பப்டி விற்றுக் கொண்டிருப்பான்.  பக்கத்திலேயே நம் திறமைக்கு சவால் விடும் வேறொரு நபரை நாம் பார்க்கலாம். இரண்டடி கம்பிக்குள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் வளையத்தை கை நடுங்காமல் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அக்கறையாய் போய்ச் சேர்த்துவிட வேண்டும். உரசி விட்டால் ‘கீக்.. கீக்’ என்ற சத்தம் வந்துவிடும்.

இடையிடையே முஸ்லிம் சங்கம் தொண்டர்படை காரியாலயத்திலிருந்து காணமல் போன குழந்தையைப் பற்றிய அறிவிப்பு ஏதாவது ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டே இருக்கும். ரயில்வே புக்கிங் செய்வதற்காக கிளை திறந்திருப்பதையும் அறிவிப்பார்கள். 

கையில் பில்புக் வைத்துக் கொண்டு நடைபாதை வணிகர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருப்பார் ஒருவர். அவர் வசூல் செய்வதற்கு அடிக்கடை கான்ட்ராக்ட் எடுத்திருப்பவராம்.

“எங்கேயோ கேட்ட குரல்” காற்றில் மிதந்து வருகிறதே என்று திரும்பிப் பார்த்தால், கண் தெரியாத இரண்டு பேர்கள் “காதர் ஒலி பாபா! அல்லாஹி தியேகா” என்று இரட்டைப் புலவர்களைப் போல கோரஸ் பாடிக் கொண்டு யாசகம் கேட்பார்கள். வீதியில் கப்பல் வலம் வருகிறதோ இல்லையோ இவர்கள் கட்டாயம் வலம் வந்து விடுவார்கள். 

“தீன் கொடி நாட்டிய தேவா! – எங்கள்; தூதரே யா முஸ்தபா!” என்ற பாடல் கேட்கும். நாகூர் ஹனிபாவின் பாடல்களை ராகத்தோடு பாடிக்கொண்டு ஆபிதீன் காக்காவுடைய பாட்டு புத்தகத்தை விற்றுக் கொண்டே செல்வார் அவரது ஆத்மார்த்த ரசிகர் ஒருவர்.

காலுக்கு அடியில் ஏதோ ஒரு உருவம் தென்படும். கைகளுமின்றி, கால்களுமின்றி வயிற்றில் ஒரு நசுங்கிய அலுமினிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு ஊர்ந்து சென்றுகொண்டிருப்பார் ஒரு பிச்சைக்காரர்.

விதவிதமான வால் பேப்பர் பின்னணியில் ‘திடீர்’ கலர்போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆக்ராவுக்குப் போகாமலே தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள் காதல் ஜோடிகள்.

ஆண்டிகுளத்து முனையில் கைராட்டினம் நிறுத்தப்பட்டிருக்கும். அதனருகில் ஒரு கூடாரம். பேசும் கடற்கன்னியை கொண்டு வந்திருப்பார்கள். ஆச்சரியத்துடன் அந்த அதிசயப் பிறவியைப் போய் பார்ப்பேன். தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடல். இடுப்புக்குக் கீழ் மீன் உருவம். கதையில் படித்த “Mermaid”-யை நேரில் பார்க்கும்போது பரவசம் ஏற்படும்.

மறுநாள் அந்த பெண் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தாளாம். நண்பன் சாய் மரைக்கான் சொன்னான். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற எம்.ஜி.ஆர்.பாடும் பாடல் என் காதுகளில் அசரீரியாய் ஒலிக்கும். (சாய் மரைக்கானே ஒரு நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட்தான். எம்.ஜி.ஆர். மாதிரியே அட்டகாசமாக பேசிக் காண்பிப்பான்)

தெற்குத்தெரு முனையில் சிறுவர்கள் கலர் கலராய் தண்ணீரை வைத்துக் கொண்டு சர்பத் என்ற பெயரில் விற்றுக் கொண்டிருப்பார்கள். ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ‘டபுள் டெக்கர்’ லாரி பக்கத்திலேயே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்.

ரயிலடி அருகேதான் எங்களுக்கு நன்றாக பொழுது போகும். மிருகக் கண்காட்சி என்ற பெயரில் வத்தலும் சொத்தலுமான மிருகங்களை கொண்டு வந்திருப்பார்கள். மரணக்கிணற்றில் இரண்டு பேர் ‘டுர்.. டுர்..’ என்று மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். வெளியே ஒரு சிறிய மேடை போட்டு ஒரு சிறிய வளையத்திற்குள் ஆணும் பெண்ணும் உடலை நுழைத்து சர்க்கஸ் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். வேறொரு பக்கம் “Puppet Show” எனப்படும் பொம்மலாட்டம் நடக்கும். இந்த பாரம்பரியக் கலைகள் எல்லாம் இப்போது எங்கே ஒழிந்துப் போனது என்றே தெரியவில்லை. 

கடற்கரை வழி நெடுக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலைப் போல பிச்சைக்காரர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் இந்த கூடாரங்கள்தான் சரணாலயம்.

*     *     *

“என்ன பேச்சு மூச்சையே காணோம்? ரொம்பத்தான் சிந்தனை போலிருக்கு?”

என்னை விடுவதாக இல்லை நண்பர். என்னதான் இருந்தாலும், உற்சாகம் பொங்கும் அந்த பழைய குதுகூலம் நிச்சயமாக நமக்கு கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் ஊர்ஜிதமாகத் தெரிந்தது.

“கந்தூரிக்கு இந்த தடவை நான் ஊர் போறதா இல்லேன்னு முடிவு பண்ணிட்டேன்.”

நான் சொன்னதைக் கேட்டு நண்பரின் முகத்தில் பிரகாசம்.

“நீங்க யோசிக்கும்போதே நெனச்சேன். நீங்க படிச்சவரு. நல்லது கெட்டது புரிஞ்சவரு. அல்லாதான் உங்களுக்கு நல்ல வழியை காண்பிச்சிருக்கான். கைர்”. என் கையை பிடித்து குலுக்கு குலுக்கோ என்று குலுக்கினார்.

“இந்த கூடு, கொடியேத்தம், ஹத்தம், ஹந்திரி இதெல்லாம் இருக்கிறதே.. ..”
நண்பர் பிரசங்கத்தை தொடங்க அங்கிருந்து நான் மெதுவாக நழுவி விட்டேன்.

*     *     *

நாகூர் கந்தூரி – இஜட்.ஜபருல்லா கவிதை

அயோத்திராமன் அழுகிறான்

Religious Harmony final

(6-12-92 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுதில் கவிஞர் வைரமுத்து இடிந்துபோய் எழுதியது)

கங்கை காவிரி
இணைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

காடுகள் மலைகள்
திருந்த வேண்டும்
கரசேவகரே வருவீரா?

வறுமைக்கோட்டை
அழிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்

நாம்
உடைக்கவே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை

வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை

     *     *     *

விளைந்த கேடு
வெட்கக் கேடு

சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்

அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டின்கீழ்
நாற்பதுகோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டின்கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்?

     *     *     *

மதம் ஒரு பிரமை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுதயுத்தம்?

மதம் என்பதொரு வாழ்க்கைமுறை சரி
வன்முறை என்பது எந்த முறை?

அந்த கட்டடத்தின் மீதெப்போது
கடப்பாரை வீழ்ந்ததோ
அப்போது முதல்
சரயூ நதி
உப்புகரித்துக் கொண்டே
ஓடுகிறது

சீதை சிறைப்பட்டபின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

     *     *     *

மாண்புமிகு மதவாதிகளே

சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா?

அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?

அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்

பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?

அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று

இனிமேல்
சிந்த வேண்டியது
வேர்வைதான்

நம் வானத்தைக்
காலம் காலமாய்க்
கழுகுகள் மறைத்தன

போகட்டும் இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும் !

 vairamuthu

இவரும் கலைஞர்தான்

Haja Basha

கலைஞர் என்ற முறையில் சிலருக்கு மு.கருணாநிதியைப் பிடிக்கும். எனக்கு எங்க ஊரு ஹாஜா பாஷாவைப் பிடிக்கும். ஏனெனில் இவரும் ஒரு நல்ல கலைஞர். அவர் குறளோவியம் வரைந்தவர். இவர் நகஓவியம் வரைந்தவர்.

நகம் நமக்கு வாய்த்திருப்பது கோபம் வரும்போது அதை பல்லால் கடித்துக் குதறி துப்புவதற்காகத்தான் என்று நாம் தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இவருக்கு நகம்தான் ஆயுதம். ஆம்.. நகம்தான் இவருக்கு சோறு போட்டது.

பழைய சினிமா படங்களில் பார்த்தோமானால் கதாநாயகிகளின் கண்கள் பேசும். குறிப்பாக சரோஜாதேவியின் கண்கள். “லவ் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், தக்கத் திமி தா” என்று பாடும்போது, அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் கண் இமைகள் துடிக்கும், விழிகள் இடது கோடிக்கும் வலது கோடிக்கும் அலைபாயும். அது கண்கள் பேசும் கலை.

ஹாஜா பாஷாவின் நகக் கண்கள் பேசும்; உரையாடும்; கவிதை வடிக்கும். நகம்தான் அவருக்கு தூரிகை.

உருவத்தை பார்த்த மாத்திரத்தில் நொடிப்பொழுதில் தத்ரூபமாக வரைந்து விடுவார். இவரை ‘அபூர்வக் கலைஞர்’ என்று ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் பத்திரிக்கைகள் புகழ்மாலை சூட்டியிருந்ததை அந்தக் காலத்தில் படித்து மனமகிழ்ந்திருக்கிறேன்.

மாநிலக் கண்காட்சி, சென்னை மெரீனா பீச், தஞ்சை பொருட்காட்சி, என்று எங்கு சென்றாலும் இந்தக் கலைஞனை பார்க்கலாம். “இவரு எங்க ஊர்க்காரரு” என்று நண்பர்களிடம் பெருமையடித்திருக்கிறேன்.

முன்பொரு நாள் நாகூரில், ஒரு வீட்டு கல்யாண வைபவத்தில் கச்சேரி நடந்தது. “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. “நானொரு விகடகவி. இன்று நான் ஒரு கதை சொல்வேன்” என்று தொடர்ந்து கிளிகளைப்போல கத்தி, தவளைகள் போல ஒலியெழுப்பி, யானைகள் போல பிளிறி, மான்களைப்போல மந்திரம் பாடிக்கொண்டிருந்தார் ஒரு மேடைப் பாடகர். அருகில் சென்று பார்த்தால்; “அட! நம்ம ஹாஜா பாஷா!!”

கெளரவமாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில் திரைப்படத்துறையில் அலைந்து திரிந்து கெளரவ நடிகர் ஆனவர் இவர். “நான்” (என்ற ஞாபகம்) படம் வெளிவந்தபோது அதை ஒன்றுக்கு பலமுறை பார்த்தேன். காரணம் மொட்டை பாஸ் ஆக வரும் அசோகனுக்குத் துணையாக ஹாஜா பாஷா ஒரு சில வினாடிகள் திரையில் தோன்றுவார். “ஹய்யா.. ஹாஜா பாஷா!” என்று திரையரங்கில் என்னையறியாமலேயே கூச்சல் போட்டிருக்கிறேன்.

அமிதாப் பச்சன் நடித்த “ஆக்ரி ராஸ்தா” இந்திப் படத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் பழைய லெட்ஜரிலிருந்து ஏதோ ஒரு ஆவணத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் ஆவண நடிகராக நடித்ததைக் கண்டு ஆணவப்பட்டேன். “அடடே! நம்ம ஊருக்காரரு அகில இந்திய லெவலுக்கு பிரகாசிக்கத் தொடங்கி விட்டாரே”  என்று பூரித்தேன்.

ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவுக்கு போயிருந்தபோது ஹாஜா பாஷாவை தற்செயலாக அங்கு சந்திக்க நேர்ந்தது. அடுத்த ப்ளோரில் இளையராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது. “வாங்க.. வாங்க..” என்று வாயார வரவேற்று, உங்களை ஒரு வி.ஐ.பி.யோடு அறிமுகப் படுத்துகிறேன் என்று கூறி “இவர்தான் டி.ஏ.மதுரத்துடைய சகோதரர்” என்று ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். நானும் கை குலுக்கினேன், (என்.எஸ்.கிருஷ்ணனையே திரையுலகம் மறந்திருந்த காலம் அது)

சிகப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் கலர் கலராக பேண்ட் போட்டு ராமராஜன் படங்களில் நடிப்பார். அந்த Dress sense இவரைப் பார்த்துதான் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். எந்த ஒரு கும்பளிலும் ஹாஜா பாஷாவை சுலபமாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம். ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிப்பார்.

சிவப்பு நிறத் தொப்பி, சிவப்பு நிற Scarf, சிவப்பு நிற சட்டை, சிவப்பு நிற பேண்ட், சிவப்பு நிற பெல்ட், சிவப்பு நிற சாக்ஸ், சிவப்பு நிற ஷூ என்று உடையணிந்து தூரப்பார்வை உள்ளவர்களுக்குகூட தொலைதூரத்தில் துல்லியமாகத் தெரிவார்.

உள்ளூர் David Copperfield இவர். Showman – ஆகவே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதிருந்ததால், தன் ஓவியத் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் மேஜிக் கலையையும் கற்று வைத்திருந்தார். ரோஜா பிரியருக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கவரும் பரமரகசியம் இந்த ஹாஜா பாஷாவுக்குத்தான் அத்துப்படி.

Polyglot – க்கு உதாரணம் கேட்டால் இவர் பெயரைச் சட்டென்று சொல்லி விடலாம். எத்தனை மொழி இவருக்குத் தெரியும் என்ற கணக்கு இவருக்கே தெரியாது. கலைத் தொழில் நிமித்தம் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை வட்டமடித்துக் கொண்டிருந்ததால் எல்லா பாஷையும் பேசுவார். அந்தந்த ஊர் accent – ல் பேசுவது இவரது தனித் திறமை.

மலேசியா பயணம் சென்றிருந்தபோது மலாய் மொழி கற்றுக் கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் மலாய் மொழியில் பேசி அசத்தினார். தாய்லாந்து நாட்டில் பத்தாயா பீச்சில் இவரது கலைத்திறன் நிகழ்ச்சி நடந்தது. “இப்பொழுது இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் இந்த மிமிக்ரி கலைஞர் நம் நாட்டு அரசியல் தலைவர் சொம்சாக் போல் பேசிக்காட்டுவார்” என்று ஒருவர் தாய்பாஷையில் அறிமுகம் செய்ய, ஹாஜா பாஷா மேடைக்கு வந்து சொம்சாக் போல, அதே குரலில்; அதே பாணியில்; அதே தொனியில் பேசி பலத்த கைத்தட்டலை பெற்றுக் கொண்டார்.

ஒரு சில நாட்களுக்குள், கேட்டறிந்து; பயிற்சி செய்து; உள்ளுர் பிரமுகர் போல் பேசியது இவரது திறமைக்கு ஒரு சான்று. கூர்ந்து கவனிக்கும் தன்மை, எதையும் உடனே கிரகித்துக் கொள்ளக் கூடிய திறமை இருப்பவரால்தான் இது சாத்தியம்

இந்த தடவை ஊர் சென்றிருந்தபோது செய்யது பள்ளியிலிருந்து இனிமையான குரலில் பாங்கு சப்தம் ஒலித்தது. “இந்தக் குரல் யாருடையது தெரியுமா?” என்று என் தாயார் புதிர் போட்டார். நான் உதட்டைப் பிதுக்கினேன். “உனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர்தான்” என்றார். விசாரித்துப் பார்த்ததில் அது ஹாஜா பாஷாவின் குரல் என்று தெரிய வந்தது.

கலா ரசிகராக இருந்தவர் இப்போது பிலால் ரசிகராகி விட்டார். வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையின் வழிமுறையும் மாறி விடும் என்பது எவ்வளவு உண்மை? “எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்” என்று விவேக் நெகட்டிவ் தொனியில் பேசும் பஞ்ச் டயலாக் இவருக்கு பாஸிடிவ் தொனியில் அமைந்து விட்டது. மார்க்கம் இவர் மார்க்கத்தை திருப்பி விட்டிருந்தது. “ஹிதாயத்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கிறது.

அவருடன் பேசிப் பார்த்ததில் அவரது மனதுக்குள் ஒரு மகத்தான ஆசை நெடுநாட்களாக புதைந்திருப்பது தெரிய வந்தது. புனித குர்ஆனை முழுவதுமாக உலோகத் தகட்டில் நகத்தாலேயே எழுதி முடிக்கவேண்டும் என்பதுதான் அது. இறைவன் அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.

அல்தாப்பும் அலங்கார வாசலும்

Alangara Vasal

பால்ய நினவுகளை அசைப்போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தான்.

நண்பன் அல்தாப்புடன் தர்காவுக்குப் போகையில் நன்றாக பொழுது போகும். அவனது பக்தி சேஷ்டைகள் எங்கள் நண்பர் குழாமை பரவசப்படுத்தும்.

அலங்கார வாசல் வழியாக தார்ரோட்டில் (?) கடைத்தெருவுக்கு செல்லும்போதுகூட சில கடுமையான வழிமுறைகளைக் கடைபிடிப்பான்.

தர்கா எல்லை வந்ததுமே காலில் உள்ள செருப்பைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, தர்கா ஆபிஸ் தாண்டியதும் மீண்டும் காலில் போட்டுக் கொள்வான். அவனுக்கு கால் அரிக்குமோ என்னவோ தெரியாது. ஆனால் எங்களுக்கு புல்லரித்துப் போகும்.

தர்கா முகப்பில் அலங்கார வளைவு ஒன்று இருக்கும். அதிர்ஷ்டம் செய்த அந்த இரும்புக் குழாய் இவனிடத்திலிருந்து இறுக்கமான ஒரு “உம்மா”வை வாங்கிக் கொள்ளும்.

தர்காவுக்கு தன் டிக்கியை (பின்புறத்தை) எக்காரணத்தைக் கொண்டும் காட்ட மாட்டான். அப்படியொரு கொள்கைப் பிடிப்பு. Back Race-ல் நடப்பதைப்போல பின்னாடியே நடந்துச் சென்று யாராவது ஒரு பிச்சைக்காரி மீது மோதிவிட்டு, மோதிய தண்டத்திற்கு பத்து பைசா தானம் வேறு செய்து விட்டுப் போவான். பிடறியில் அவனுக்கு கண் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது.

கால்மாட்டு தெரு வாசல் வழி உள்ளே நுழையும்போதே தரையைத் தொட்டு மூன்றுமுறை கண்களில் ஒத்திக் கொள்வான். பித்தளை கேட்டின் மீதி மூன்று முறை முட்டி மோதி முத்தமழை பொழிவான். (மும்மூன்று முறை என்ன கணக்கோ தெரியாது)

தாராளமான மனசு அவனுக்கு. வெள்ளி கேட், பித்தளை கேட், இரும்பு கேட் என்று பாரபட்சம் பார்க்க மாட்டான். ‘கோல்கேட்’ தவிர எல்லா கேட்டுக்கும் உம்மா கொடுப்பான்.

அடுத்து, கொமஞ்சான் (குமைஞ்சான்) சட்டியருகே வந்ததும் தொப்பியைக் கழற்றி புகையை முடிந்த அளவுக்கு கபளீகரம் செய்து, அது கசியும் முன்பாகவே தலையில் அவசர அவசரமாக அணிந்துக் கொள்வான். அணிந்த பிறகும் புகை கசிந்து வந்துக் கொண்டிருக்கும். தலைமுடி தீப்பற்றி எரிவதுபோல்  காட்சியளிக்கும்.

பெரிய நெய்விளக்கொன்று இருக்கும். ஆட்காட்டி விரலால் நெய்யை எடுத்து நாக்கிலே தடவிக்கொண்டு மீதி பிசுபிசுப்பை தன் குரல்வளையில் பூசிக் கொள்வான். இரவு அவன் தூங்குகையில் எறும்பு மொய்க்குமா என்ற விவரம் வெளியே வராது.

இரண்டாவது நுழைவாயிலில் பெரிய உண்டியல் இருக்கும். இம்ரான் ஹாஷிமி ஸ்டைலில் அதற்கும் ஒரு இறுக்கமான ‘இச்’. மூன்றுமுறை தொட்டுக் கொள்வான். ஆனால் உண்டியலில் காசு போட மாட்டான்.

Base Ball ஆட்டத்தில் நிற்பதைப்போல சதுரவடிவில் நாலுபேர் ‘அஸா கோல்’ வைத்துக் கொண்டு அட்டென்ஷனாக நிற்பார்கள். கலெக்டருக்கு பாதுகாப்பாக வருபவர்களைப்போல சீருடை அணிந்து தலைப்பாகை அணிந்திருப்பார்கள். மிஸ் இந்தியா போட்டியில் அழகிகள் அணிவதைபோல தோள்பட்டையில் ஒரு Cross Belt. ஒவ்வொரு கோலுக்கும் மூன்று முத்தங்கள் கொடுப்பான் அவன். (தர்காவில் காணப்படும் அத்தனை ஜடப்பொருள்களுக்கும் முத்தமழை பொழிந்து விடுவான்; புறாக்கூண்டைத் தவிர)

அங்கு நின்றுக் கொண்டு அண்ணாந்து பார்க்க எனக்கு ஒரே பயம். கூரையில் ராட்சஸ சைஸில் சரவிளக்கு (Chandelier) கொத்து கொத்தாக தொங்கும். ‘தலையில் விழுந்தால் என்னாவது?’ என்று நவக்கிரகம் படத்தில் நாகேஷ் வீண்கற்பனை செய்வதுபோல், நானே வீணாக கற்பனைச் செய்து. நானே பயந்துக் கொள்வேன்.

பக்கத்தில் தாயத்து வியாபாரம் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கும், ஊதுவத்தி வாசம் மூக்கைத் துளைக்கும். கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு முன் புரோகிதர் பெயர், நட்சத்திரம் இரண்டும் கேட்பார். இங்கு “அல் பாத்திஹா” என்று சத்தமாக ஓதத் தொடங்குவதற்கு முன் பெயர் மட்டும் கேட்பார்கள். நட்சத்திரம் கேட்க மாட்டார்கள். (சினிமா நட்சத்திரம் அல்ல)

‘வெள்ளிக்கதவை தள்ளிக் கொண்டு’ உள்ளே போவான் என்று எதிர்பார்ப்பேன். ஊஹும். அல்தாப் போகமாட்டான். காசு கொடுக்கணுமே. அதனால் இருக்கலாம். உள்ளே எட்டிப் பார்த்து ஏதோ பரிபாஷையில் பேசுவான். அனேகமாக பெரிய எஜமானுடன்தான் இருக்க வேண்டும்.

மிதியடி பாதத்தை தலையில் ஏந்தி, ‘ஜாடு’ (உருது மொழியில் ‘ஜாடு’ என்றால் விளக்குமாறு என்று பொருள்) முகத்தில் அடித்துக் கொண்டு, நடுவாசலில் பதித்திருக்கும் சீசா ஓட்டை (கண்ணாடித் துண்டு) முத்தமிட்டு பக்தி பொங்க வெளியே வருவான். கையில் ஒன்றிரண்டு மல்லிகைப்பூ, ரோஜாப்பூ இதழ், சிறிய வெத்திலை துண்டு இருக்கும். அதில் வெத்திலைத் துண்டை எடுத்து நான் வாயில் போட்டுக் கொள்வேன். ‘போலோ’ வாயில் போட்டுக் கொண்டதைப்போல் வாய் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

‘சின்ன எஜமான்’ வாசலில் தொங்கும் சங்கிலியை நான் சற்றுநேரம் வெறித்தபடி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருகாலத்தில் இந்த சங்கிலி தரையளவுக்கு குவிந்துக் கிடந்ததாம். ஒவ்வொரு வளையமாக குறைந்துக் கொண்டே வந்து இப்பொழுது ஒருசில வளையங்கள்தான் பாக்கியாம். அதுவும் குறைந்து விட்டால் ‘கியாமத்’ நாள் வந்துவிடுமாம். அல்தாப்தான் இந்த கதையை எனக்குச் சொன்னான். அவனுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

“அல்லாவே! இந்த வளையங்கள் இதற்கு மேல் குறையவே கூடாது” என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நீண்ட இரும்புக் கம்பியில் பொறுத்தப்பட்ட எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி “சலக் சலக்” என்று சங்கிலி கிணிகிணிக்க நனைத்துக் கொண்டிருப்பார் ஒருவர்.

ஏன் தான் இப்படிச் செய்கிறார்களோ? இப்படி செய்தால் சீக்கிரமே சங்கிலி கரைந்து விடாதா? கியாமத் நாள் சீக்கிரமே வந்து விடுமே ! என்று மனதுக்குள் புலம்பித் தவிப்பேன்.

அல்தாப் இப்போது எங்கிருக்கிறான் தெரியவில்லை. இப்போது, அலங்கார வாசலைப் பார்க்கும் போதெல்லாம் ஆண்டகையின் ஞாபகம் வருகிறதோ என்னவோ எனக்கு அல்தாப்பின் ஞாபகம் கட்டாயம் வந்து விடும்.
pigeon

தொடர்புடைய சுட்டி : நாகூர் ‘புறா’ணம்

நாகூர் ரூமி

22222222222222 888888888888888888 124 123 333333333333333333 Islam - book 66666666666666666666611111111111111 44444444444444444444

- அரவிந்த் -

thendral

நன்றி : “தென்றல்” – நவம்பர் 2009 

               
நெடுங்காலமாகவே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக, இஸ்லாமியரில் ‘சீறாப்புராணம்’ பாடிய உமறுப்புலவர், செய்யது அப்துல் காதர் லெப்பை, நயினா முகமது, சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஆகியோர் வரிசையில், வண்ணக் களஞ்சியப் புலவர் பரம்பரையில் வருபவர் ஏ.எஸ். முஹம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி. இவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியர். 1938ல் வெளியான ஜுனைதாவின் ‘காதலா கடமையா?’ நூலுக்கு டாக்டர் உவேசா முன்னுரை வழங்கியிருக்கிறார். ரூமியின் தாய் மாமா தூயவன் (அக்பர்) புகழ்பெற்ற எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் வசனகர்த்தா. மற்றொரு மாமா நாகூர் சலீம் பிரபலமான பாடலாசிரியர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். அந்த வகையில் ஓர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் நாகூர் ரூமி.

1980ல் கல்லூரிக் காலத்தில் ரூமியின் முதல் படைப்பு ‘கணையாழி’ இதழில் வெளியானது. ‘தமிழ் சில வட்டங்கள்’ என்ற அக்கட்டுரையைத்  தொடர்ந்து மீட்சி, மானுடம், சுபமங்களா, ஃ, கொல்லிப்பாவை எனச் சிறு பத்திரிக்கைகளிலும் குமுதம், குங்குமம், குமுதம் ஜங்ஷன்,  விகடன் போன்ற வெகு ஜன இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். குமுதம் டாட் காமில் வந்த ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்ற குறுநாவல் பரவலான கவனத்தைப் பெற்றது.

மொழிபெயர்ப்புகளில், மூலத்தை நகலெடுக்காமல் அதை உள்வாங்கிக்கொண்டு மறுபடைப்புச் செய்வது ரூமியின் தனிச் சிறப்பு. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளுக்குக் கிடைத்திருக்கின்றன.

தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற ‘குட்டியாப்பா’ இவரது மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்று. “குட்டியாப்பா ஒரு மகத்தான சாதனை என்றே கருதத் தோன்றுகிறது. பாத்திரத் தேர்வு, சம்பவத் தேர்வு எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகத் தோன்றுகிறதோ அதே அளவுக்கு தனித்துவமிக்கது” என்கிறார் அசோகமித்திரன். “அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த குறு நாவல்களில் ஒன்று ‘குட்டியாப்பா’” என்று நாவலாசிரியர் சுஜாதா இதனைப் பாராட்டியிருக்கிறார். இக்கதை நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்ஃபில் பட்டத்திற்காக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தின் முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறையிலும் இவரது சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. (அது ரூமி படித்த கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.)

‘அடுத்த விநாடி’ என்ற நூலின் மூலம் இலக்கிய உலகில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் தொடர்ந்து படைப்புலகின் பல தளங்களிலும் ரூமி தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். கவிதை, சிறுகதை, நாவல், மொழிமாற்றக் கவிதை, மொழிமாற்றச் சிறுகதை ஆகியவற்றுடன் இஸ்லாத்தைப் பற்றியும், சூஃபி தத்துவம், நாகூர் ஆண்டவர் வரலாறு எனப் பல ஆன்மீக, தத்துவ, வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளையும் தந்து தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். காமராஜரைப் பற்றி இவர் எழுதியுள்ள நூல் முக்கியமானது. தொடர்ந்து மாணவர்களுக்காக எழுதிய ‘ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

வண்ணநிலவனின் மழை என்ற சிறுகதையை The Rain என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பதுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் பல விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புகளில், மூலத்தை நகலெடுக்காமல் அதை உள்வாங்கிக்கொண்டு மறுபடைப்புச் செய்வது ரூமியின் தனிச் சிறப்பு. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளுக்கு கிடைத்திருக்கின்றன. எண்ணூறு பக்கங்களுக்கு மேலான ஹோமரின்
இலியட் இதிகாசத்தை ஆங்கிலம் வழியே தமிழில் மாற்றம் செய்ததற்காகச் சமீபத்தில் நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது இவருக்குக் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 27 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கும் ரூமி தன் எழுத்துலக அனுபவம் பற்றி “அனுபவம் என்பதே ஒரு விஷயத்தை உள்வாங்குவதுதான். அதற்கு உடல் தொடர்பிருக்க வேண்டியது ஒரு கட்டாயமில்லை” என்று கூறுகிறார்.

ஆம்பூரில் உள்ள மஸ்ஹரூல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் ரூமி, கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது மாணவர்களுக்கான சுய மேம்பாட்டுப் பயிற்சியரங்குகளிலும், ஆளுமைத் திறன் வளர்ச்சிப் பயிற்சிகளிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து வருகிறார். ஆல்ஃபா தியானம் போன்றவற்றில் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருவதுடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிக்களிலும் பங்கு பெற்று வருகிறார். Distance Healing என்று சொல்லப்படும் பிரார்த்தனை முறையின் மூலம் தம்மைத் தொடர்பு கொள்பவர்களுக்கு நலம் அளித்து வருகிறார்.

டாக்டர் அ.ச.ஞா., டாக்டர் மு.வ. போன்றோர் வரிசையில், பேராசிரியர்களாலும் வெகுஜனம் விரும்பும் நல்ல படைப்புகளைத் தர முடியும் என்பதை நாகூர் ரூமி அழுத்தமாக நிரூபித்து வருகிறார்.

மனைவி நஸீஹா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வரும் ரூமி, “மனைவி நஸீஹா மட்டும் இல்லையென்றால் என்னால் ஒரு வரிகூட எழுதியிருக்க முடியாது” என்கிறார் நெகிழ்ச்சியுடன். இவரது மூத்த பெண் மூன்றாமாண்டு பட்ட வகுப்பில் இருக்கிறாரென்று இவரைப் பார்ப்பவர்கள் சொல்ல முடியாது, ரூமிக்கு அப்படி ஒரு இளமையான தோற்றம்.

ரூமி, தற்போது ‘பராக் ஒபாமா’, ஹோமரின் ‘ஒடிஸி’, ‘ஹராம் ஹலால்’, ‘இந்த விநாடி’ போன்ற நூல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். ‘என் பெயர் மாதாபி’ (சுசித்ரா பட்டாச்சார்யாவின் சிறுகதைகள்), ‘சவ்ரவ் – வாழ்க்கை வரலாறு’, ‘Prabhakaran: Entry and Exit’ (பா. ராகவனின் பிரபாகரன் வாழ்வும் மரணமும் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு), ‘பெருமானாரின் வெளியுறவுக் கொள்கைகள்’, ‘சொல்லாத சொல்’ (கவிதைகள்) போன்ற நூல்கள் விரைவில்
வெளியாகவிருக்கின்றன.

டாக்டர் அ.ச.ஞா., டாக்டர் மு.வ. போன்றோர் வரிசையில், பேராசிரியர்களாலும் வெகுஜனம் விரும்பும் நல்ல படைப்புகளைத் தர முடியும் என்பதை நாகூர் ரூமி அழுத்தமாக நிரூபித்து வருகிறார்.

- அரவிந்த்

யானைகள் பலவிதம்

2712167345_a744af52a7temple-elephant

பாவம் வாயில்லாப் பிராணிகள். அதற்கு சைவயானை என்றும், வைணவ யானை என்றும், முஸ்லிம் யானை என்றும் மதச் சாயம் பூசி விடுகிறான் மனிதன். யானைக்கு ‘மதம்’ பிடிப்பது இதனால்தானோ? கவிஞர் வைரமுத்துவின் கவிதை நினைவில் வந்தது. இதோ அந்தக் கவிதை :

விலங்குகள் நம்மிலும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல்கள் இல்லை

காட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லை

அங்கே
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லை

மதம் பிடித்தலையும்
மனிதா

யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?

ஒரு
கிறிஸ்தவக்கிளி – இந்துப்புலி
சமணக்கொக்கு – பெளத்தப்பசு
சீக்கியச்சிங்கம் – மகமதியமான்

காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?

vairamuthu

- கவிப்பேரரசு வைரமுத்து

இசையும் இறைவனும்

AR Rahmaan & Rumi

கட்டுரை ஆசிரியர் : நாகூர் ரூமி

இசை இறைவனுக்கு எதிரியாக இருக்க முடியுமா! தன்னுடைய பிரதிநிதியாக, தன்னைப்போலவே மனிதனைப் படைத்ததாகச் சொல்லும் இறைவன் இசையுணர்வு அற்றவனாக இருப்பான் என்ற கற்பனை சரிதானா?! ஆனால் நடைமுறையில் கண்டுகொள்ளப்படாத, பிடிவாதமான விளக்கங்கள், ஆமாம் அப்படித்தான் என்று சொல்லுகின்றன!

இசையை ரசிப்பதன் மூலமோ உருவாக்குவதன் மூலமோ அதில் ஈடுபாடு காட்டுவது ஏற்புடையதல்ல என்றொரு கருத்து இஸ்லாமிய உலகில் இருக்கத்தான் செய்கிறது. இறைவனிடமிருந்து மனிதனை இசை தூரமாக்கிவிடுகிறது என்றும் இறைச்சிந்தனையை அது மறக்கடிக்கவைத்துவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இசையில் ஒருவன் தன்னையே மறக்க நேரிடுவதால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்படுகிறது. (இந்த காரணத்துக்காகத்தான் நல்ல இசையை ஒருவன் கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்)! அது ஹராமானது (அனுமதிக்கப்படாதது) என்று அழுத்தமாகச் சொல்பவர்களும் உண்டு. இதற்காக திருக்குர்ஆனிலிருந்தும் நபிமொழியாகிய ஹதீதுகளிலிருந்தும் ஆதாரங்கள் காட்டப்படுகின்றன.

குழந்தையாய், தந்தையாய், தாயாய், சகோதரனாய், சகோதரியாய், கணவனாய், மனைவியாய், மாணவனாய், ஆசிரியராய் — இப்படி ஆயிரமாயிரம் உறவு நிலைகளில் பரிணமிக்கின்ற மனிதன், தான் வாழும் கணந்தோறும் இறைவனை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து இப்படிப்பட்ட விளக்கத்தில் உட்குறிப்பாக உள்ளது. அதற்குத் தடையாக இருக்கும் இசையானது ‘சாத்தானின் குரல்’ என வர்ணிக்கப்படுகிறது. சாத்தானின் குரல்தான் எவ்வளவு வசீகரமான கந்தர்வக்குரலாக உள்ளது! இறைவனின் படைப்பின் அற்புதம்தான் என்னே!

எல்லா மதங்களும் — இஸ்லாம் உட்பட — இறைவனை வணங்குவதற்கும் நினைப்பதற்கும் நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி வைத்துள்ளன. மற்ற நேரங்களில் இறைவனை மறந்துவிடவேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல. பரீட்சையில் தேறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் நாற்பது என்று — நம்ம ஊர்ப்பக்கம் — இருப்பது மாதிரி இது. நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்கலாம். அது உங்கள் இஷ்டம். உங்கள் திறமை. உங்கள் உழைப்பு.

ஆனால் பொதுவாக சாதாரணமானவர்களுக்காகத்தான் குறைந்தபட்சம் என்று எல்லை நிர்ணயிக்கப்படுகிறது. என்னை வணங்குவதற்காகத்தான் உன்னைப் படைத்தேன் என்று இறைவன் திருக்குர்ஆனில் மனிதப்படைப்பின் நோக்கத்தைப் பற்றிக் கூறினாலும், ஐந்து வேளை தொழுகை என்பது உண்மையான இறைவணக்கத்திற்கான ஒரு குறைந்தபட்ச அடிப்படை பயிற்சிக் களம்தான். ஜஸ்ட் பாஸ¤க்காகத்தான். இந்த கருத்தை இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகள் அழகாக விளக்கிக்கூறியுள்ளார்கள்.

இசையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதற்குப் பிறகு வரலாம். ஆனால் இசையை ரசிக்காத, சினிமாப்பாடல்களைக் கேட்காத, ஒரு ‘காதல் பிசாசு’க்கோ ‘மன்மதராசா’வுக்கோ தாளம் போடாத முஸ்லிம் விரல்கள் உண்டா என்றால் இந்த உலகில் அப்படிப்பட்ட விரல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது!

இசைக்கருவிகள் இல்லாத இசையை அல்லது வாய்ப்பாட்டை மட்டும் — ரெண்டோன் ரெண்டு ரெண்டிரண்டு நாலை அல்ல — அனுமதிக்கும் ஒரு குழு உள்ளது. நாகூர் ஹனி·பா போன்றோரின் பாடல்களை ரசிக்கும் இன்னொரு குழு உள்ளது. நாகூர் ஹனி·பாவின் பாடல்கள் என்றால் ஹார்மோனியம், தபலா, சிந்தசைஸர் போன்ற கருவிகளோடு உள்ளதுதான் என்பது சொல்லத் தேவையில்லை.

இசையையும் இறைவனையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாத, இசையை இசையாக மட்டும் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய குழுவும் உள்ளது. இதுதான் பெரும்பான்மை. இது எல்லாப்பாடல்களையும் ரசிக்கும். வெறும் இசைக்கருவிகளின் நாதத்திலிருந்து, கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, கஜல், கவ்வாலி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பீதோவன், மைக்கேல் ஜாக்ஸன், நுஸ்ரத் ·பதே அலிகான், மிஸ்டிக் இன்டியா என எல்லாரையும் எல்லாவற்றையும். இது நடைமுறை. இது நிற்க.

இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விஷயம், முஸ்லிம்களால் ரசிக்கப்பட்டுக் கொண்டும் உருவாக்கப்பட்டுக்கொண்டும் வந்தாலும் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்கு அது சரியான காரணமாகிவிடாது என்ற வாதம் — அல்லது பிடிவாதம் — இசையையும் இஸ்லாத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் வருகிறது என்று நான் நினைக்கிறேன்.

இசையில் தன்னை மறக்கும் நிலையானது இறைச்சிந்தனைக்கு அன்னியமானது என்ற பிரதான குற்றச்சாட்டு ரொம்ப மேலோட்டமானதாக உள்ளது. ஒரு மனிதன் தன்னை மறந்து ஒரு காரியத்தில் ஈடுபடும்போதுதான் அதில் வெற்றி வருகிறது. குயவன் பானையைச் செய்யும்போதே அதை எவ்வளவுக்கு விற்கலாம் என்று நினைத்துக்கொண்டே செய்தால் பானை கோணிக்கொள்ளும். பரிட்சை எழுதும் மாணவன் எழுதும்போதே பாஸ் ஆவோமா மாட்டோமா என்று யோசித்துக்கொண்டே எழுதினால் என்னாகும்?!

எனவே தன்னை மறத்தல் என்பதை வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒரு காரியத்தில் முழுமையாக ஈடுபடுதல் என்று சொல்லலாம். மனைவியோடு கூடும்போது கணவர்கள் தங்களை மறக்கிறார்கள். மனைவிகளும்தான். மறப்பதற்காக நாம் அந்த நேரத்தில் எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது தானாகவே நிகழும். அது அப்படித்தான். தன்னை மறத்தல் என்பது வெற்றியின் ரகசியங்களில் ஒன்றாகும்.

பல முஸ்லிம் வீரர்கள் உடம்பில் தைத்த அம்புகளை, தாம் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும்போது உருவிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், தொழுகையில் தன்னை, தன் உடலை மறந்து ஈடுபட்டிருக்கும்போது அம்பை உருவும்போது படும் வேதனையை உணரவே மாட்டார்கள் என்பதால்தான். இது இஸ்லாமிய வரலாறு காட்டும் உண்மையாகும். ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ அவர்களுக்கு இவ்வாறு நடந்துள்ளது.

எனவே தன்னை மறப்பதனால் இறைச்சிந்தனை தடைபடுகிறது என்பது சரியான வாதமல்ல. இந்திய இசைச்சூழலைப் பொறுத்த அளவிலும் இந்த வாதம் பொருந்தாது போய்விடுகிறது. கர்னாடக சங்கீதத்தின் வரலாற்றைப் பார்த்தால் தியாகராஜரின் சாகித்யங்கள் அனைத்தும் இறைத்துதியாக, கடவுள்களைப் புகழ்ந்து பாடுவதாகவே உள்ளன. “ஸ்ரீ கண நாதா, சிந்து ராகவர்ணா”வில்தானே கர்னாடக சங்கீத அப்பியாசமே தொடங்குகிறது! இசையை பக்தி என்ற தளத்தில் மட்டுமே கர்னாடக சங்கீதம் இயக்கி வருவதால், தூய இசையை பக்தியிலிருந்து விடுதலை செய்து, காதல் — தூய காதல்தான் — போன்ற உணர்ச்சிகளையும் பிரதிபலிக்குமாறு கருவமைத்து பாடல்கள் இயற்றி, ‘புரட்சி’ செய்ய வேண்டும் என்று இன்றைய வித்வான்கள் சிலர் அங்கலாய்க்கின்ற அளவுக்கு இந்திய இசையிலிருந்து இறைச்சிந்தனை பிரிக்க முடியாததாக உள்ளது.

இந்த இடத்தில் சூ·பிகளுடைய இசையையும் சேர்த்துக்கொள்ளலாம், அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இல்லாவிட்டாலும். இறைத்தியானத்திற்கு ஒரு சிறந்த கருவியாக மௌலான ஜலாலுத்தீன் ரூமி இசையையும் நடனத்தையும்கூட பயன்படுத்தினார். “இறைவனை நேசிப்பவர்களின் உணவுதான் இசை” என்று அவர் சொன்னார். ரூமியின் பாதையைப் பின்பற்றிய சிஷ்யர்கள் ‘the whirling dervishes’ என்றே குறிப்பிடப்பட்டார்கள்.

பொதுவாகவே சூ·பிகள் என்று அறியப்பட்ட இஸ்லாமிய ஞானிகள் பெரும்பாலோர் ‘ஸமா’ என்னும் இசையை ‘திக்ர்’ என்னும் இறைத்துதி செய்யும் ஒரு ஊடகமாக வைத்திருந்தனர். ‘ஸமா’ என்ற சொல்லுக்கு ‘கேட்டல்’ என்றுதான் பொருள். இசை கேட்பதென்பது அதன் ஒலிகளை மட்டும் கேட்பதல்ல. அதன் ஆன்மீக அர்த்தங்களை உணர்ந்துகொள்வது. அதுதான் உண்மையான கேட்டலாகும் என்று சூ·பிகள் கருதினர். இமாம் கஸ்ஸாலி, இப்னு அரபி போன்ற மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களும் இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாகவே தமது நூல்களில் எழுதியுள்ளனர். 

இப்படி இசையைக் கேட்பதன் மூலம் இறைவனிடம் நெருக்கம் ஏற்படுகிறது என்று எகிப்தின் பிரபல சூ·பி துன்னூன் மிஸ்ரி கூறுகிறார். சங்கீதம்தான் என் இறைவன் என்பதாக ஹிந்துஸ்தானி பாடகி பர்வீன் சுல்தானா சொன்னதும் இங்கு நினைவுக்கு வருகிறது. இன்றும்கூட நாகூர் தர்கா உருஸின்போதும், அஜ்மீர் தர்கா உருஸின்போதும் கவ்வாலி பாடகர்கள்கூடி பக்தியையும் இறைப்புகழையும் இசையுடன்கூடிய பாடல்களில் வெளிப்படுத்துவது தர்காக்களின் பிரிக்கமுடியாத ஒரு அம்சமாகவே விளங்குகிறது.

ஒரு ஜேசுதாஸ் அல்லது லதாவின் குரல், ஒரு சந்தூர் அல்லது வீணையிலிருந்து வரும் நாதம் ஒருவனை இறைவனிடமிருந்து தூரப்படுத்த முடியுமானால், அவனை வேறு எதுதான் தூரப்படுத்தாது? திரைப்படம் தூரப்படுத்தும். தொலைக்காட்சி தூரப்படுத்தும். கம்ப்யூட்டர் தூரப்படுத்தும். கல்லூரி தூரப்படுத்தும். கஷ்டம் தூரப்படுத்தும். சந்தோஷம் தூரப்படுத்தும். உட்கார்ந்தால் தூரமாவான். படுத்தால், தூங்கினால், விழித்தால் என்று வாழ்வின் எல்லா நிலைகளையும் கணங்களையும் இறைவனிடமிருந்து தூரமாகும் வாய்ப்பாகவே அவன் பயன்படுத்திக் கொண்டிருப்பான்.

இறைவனை நெருங்கக் கூடிய வாய்ப்புகள் என்று கருதப்படும் தொழுகை, நோன்பு ஆகியவற்றைச் செய்யும்போதும் அவன் இறைவனிடமிருந்து ரொம்ப தூரம் விலகிப்போய்விடுவான். தொழுவதற்காக அவன் தலை தரையில் படும்போது வாசலில் கழட்டிப்போட்ட புது பாட்டா க்வாடிஸ் செருப்பு திருட்டு போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருப்பான். நோன்பு பிடித்திருக்கும்போது, நோன்பு திறக்க மெதுவடை, மக்ரூனி, கஞ்சி இவற்றோடு வேறு என்னென்ன அய்ட்டங்களை தயார் செய்யச் சொல்லலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பான். மனசாட்சி உள்ளவர்கள் நான் சொல்வதை ஒத்துக்கொள்வர்.

இதற்கு நேர்மாறாக, சரியான இறைச்சிந்தனை உள்ளவர், எந்த காரியம் செய்தாலும் அதில் இறைச்சிந்தனை இருக்கத்தான் செய்யும். ஒரு பல்வலிக்காரன், பேசும்போதும், சாப்பிடும்போதும், சும்மா இருக்கும்போதும் பல் வலியை உணர்ந்து கொண்டே இருப்பதுபோல. ஒரு கர்ப்பிணிப்பெண் நடக்கும்போதும், குனியும்போதும் உட்காரும் போதும் தன்னுள்ளே ஒரு உயிர் இருக்கிறது என்பதை மறக்க முடியாததைப் போல.

இறைவனிடமிருந்து மனிதனை எதாவது பிரிக்க முடியுமா? இறைவனைத் தவிர வேறு என்னதான் இருக்கிறது? இருப்பது யாவும் அவன்தானே? எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பதுதானே உண்மையான தவ்ஹீது (இருமையற்ற ஏகத்துவம்)? நீங்கள் ஒரு வாளியை தண்ணீர் அள்ளுவதற்காக கிணற்றினுள் விடுவீர்களேயானால் அது கீழே போய் இறைவன்மீதுதான் இடிக்கிறது என்று ஒரு ஹதீது உள்ளது! இதற்கு என்ன அர்த்தம்? சிந்திக்க வேண்டாமா?

இசை சம்மந்தப்பட்ட இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும்போதும் இந்த உண்மை நமக்கு விளங்குகிறது. உலக அளவில் இஸ்லாம் பரவத்தொடங்கிய காலத்திலிருந்தே இசைபற்றி பலவிதமான ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இசை தொடர்பான கட்டுரைகளும், கோட்பாடுகளும், தத்துவங்களும், புதிய புதிய இசைக்கருவிகளும், இசைக் கலைஞர்களும் உருவாகியுள்ளனர். ஆனால் எதனாலும் இஸ்லாம் கெட்டுவிடவில்லை. மாறாக இஸ்லாமிய உணர்வு அதிகமாவதற்கும் தீவிரமடைவதற்கும் அவர்கள் உதவியுள்ளனர்.

ஒன்பதில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டுவரை இசைபற்றிய கோட்பாடுகளும் கட்டுரைகளும் இயற்றப்பட்டன. மேற்கில் அறிஞர்கள் இசைபற்றிய கோட்பாடுகளை வரைவதற்கு முன்பே அராபிய இசை பற்றிய ஆராய்ச்சிகளும் கோட்பாடுகளும் மிகுந்த வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தன. அப்பாஸிய ஆட்சியாளர்கள் (கி.பி. 750-909) இசையில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இசை என்று சொல்லும்போது வாத்தியக் கருவிகளுடன் கூடிய இசையும்தான். ஆரம்பகாலத்தில் அடிமைப் பெண்களே பாடகிகளாக இருந்தார்கள். பின்னர் அரச குடும்பத்திலிருந்தே படித்த, பாண்டித்யம் பெற்ற அறிஞர்கள் இசை விற்பன்னர்களாக ஆனார்கள்.

இப்னுல் முனஜ்ஜிம் என்பவர் இசையை எட்டுவகையாகப் பிரித்தார். ஒவ்வொரு வகைக்கும் கையின் ஒவ்வொரு விரலின் பெயர் வைக்கப்பட்டது. ஒரு நல்ல பாடகன் என்னென்னெ குணங்கள் கொண்டவனாக இருக்கவேண்டும் என்று இப்னு சுரை என்பவர் வரையறுத்து வைத்தார்.

அல் கிந்தி (800-873) என்ற தத்துவவாதி, சப்தம், தாளம், சாகித்யம் ஆகியவை பற்றிய ஏழு புத்தகங்கள் எழுதினார். ஊத் (lute) என்ற (கிதார் மாதிரியான) இசைக்கருவியின் நான்கு கம்பிகளும் எப்படி நான்கு வகை குணங்களையும், நிலம், நீர், காற்று, நெருப்பு போன்ற பூதங்களையும், நான்கு பருவங்களையும் குறித்தது என்று விளக்கினார். அதில் ஐந்தாவது கம்பியையும் அறிமுகப்படுத்தினார். எல். ஷங்கர் வயலினில் செய்தமாதிரி.

அபூ அல் நஸ்ரல் ·பராபி என்ற பத்தாம் நூற்றாண்டு அறிஞரின் இசைபற்றிய நூல் ஒலியை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்தது. அதோடு இரண்டு வகையான தம்பூர் என்ற — தம்பூரா அல்ல — இசைக்கருவிகளைப் பற்றியும் விவரித்தது. ஊத் வாசிக்கும்போது கேட்டுக்கொண்டிருப்பவர்களை தனது இஷ்டப்படி சிரிக்கவோ, அழவோ, தூங்கவோ வைப்பாராம் அல்·பராபி.

மேற்கில் ஆவெர்ரோஸ் என்று அறியப்பட்ட 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு ருஷ்த் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி, திருக்குர்ஆன், ஹதீது, இஸ்லாமிய சட்டங்கள், தத்துவம், தர்க்கம், மருத்துவம், வானசாஸ்திரம், கணிதம், உயிரியல் ஆகியவற்றோடு இசையிலும் பெரும் வல்லுணராக இருந்தார். அவர் ஸ்பெயினின் கார்டோபா நகர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவிசென்னா என்று மேற்கில் அறியப்பட்ட பிரபல அறிஞர் இப்னு சீனாவின் எழுத்திலும் இசைபற்றிய விபரமான குறிப்புகள் உள்ளன. கணிதம் பற்றிய பகுதியில் இசைபற்றி விபரமாக அவர் குறிப்பிட்டார். இசைக்கும், கணிதம் வானசாஸ்திரம் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள உறவை தனது கலைக்களஞ்சியத்தில் அவர் விளக்கினார்.

ஸ்பெயினில் ஸர்யப் போன்ற புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் இருந்தனர். ·பரீத் அல் அத்ரஷ் மற்றும் அவருடைய சகோதரி அமல் ஆகியோர் பிரசித்தி பெற்ற அரபு இசைக்கலைஞர்களாக இருந்தனர்.

பந்தீர், புஸ¥க், தர்பூகா, கிம்பி, கமஞ்சா, நே (புல்லாங்குழல் மாதிரி), கனூன் (சந்தூர் மாதிரி), ரபப் (வயலின் மாதிரி) — இதெல்லாம் அராபிய இசைக்கருவிகள் சிலவற்றின் பெயர்கள்.

உம்மு குல்ஸ¤ம் என்று ஒரு எகிப்தியப் பாடகி. சிறுவயதிலேயே திருக்குர்ஆனையும் அரபி மொழியையும் நன்கு கற்றறிந்தவள். மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் கெய்ரோ நகரில் நடக்கும் அவளுடைய கச்சேரியைக் கேட்க மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து ரசிகர்கள் வந்து குவிவார்கள். அவளது பாடல்களும் குரலும் அராபிய ஆன்மாவைத் தொட்டது என்று விமர்சகர்கள் புகழ்ந்தனர். எகிப்தின் அதிபர் நாஸர் அவளோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொண்டார். அவளுடைய பாடல்கள் பெரும்பாலும் அரபுகளின் வாழ்வை எடுத்துச் சொல்வதாக இருந்தன.

திருமணங்களிலும் விழாக்காலங்களிலும் திருக்குர்ஆன் வசனங்களையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கேட்பவர் உருகும் குரலில் அவள் பாடினாள். எகிப்தில் இரண்டு விஷயங்கள் எப்போதுமே மாறுவதில்லை : ஒன்று பிரமிடு, இன்னொன்று உம்மு குல்ஸ¤மின் குரல் என்று சொல்லுமளவுக்கு அவள் புகழ் பெற்றிருந்தாள். ஒரு ஆண்டுக்கு மூன்று லட்சம் உம்மு குல்ஸ¤ம் கேஸட்டுகள் விற்பனையானதாம்! 1975ல் அவள் இறந்தபோது அவளுடைய அடக்க ஊர்வலத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எகிப்தின் வரலாற்றிலேயே மிக அதிகமானது என்கிறார்கள்.

முகலாயர்கள் காலத்தில் புகழ் பெற்றிருந்த மார்க்கக் கல்வி நிறுவனமான ‘தர்ஸெ நிஸாமி’யில் திருக்குர்ஆன், ஹதீஸ், தத்துவம், தர்க்கம், கணிதம் ஆகியவற்றோடு இசையும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அல்லாமா ஷிப்லி போன்றவர்கள் அங்கு பயின்றவர்களே. புகழ்பெற்ற இறைநேசரும் மார்க்க அறிஞருமான டெல்லியின் ஷாஹ் வலியுல்லாஹ்வின் பள்ளியிலும் தர்ஸெ நிஸாமியைப் பின்பற்றி இசை பாடமாக வைக்கப்பட்டிருந்ததாம். அமீர்குஸ்ரு போன்ற இந்தியாவின் காவிய கவிஞர்களின் வாழ்வு இசையாலும் பாடலாலும் சூழப்பட்டிருந்தது.

இசை ஒரு மனித மனத்தைக் கெடுத்துவிடுகிறதா என்ற கேள்விக்கு விடை காணுமுன் இசைபற்றிய சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். பெரும்பாலோருக்கு இசையின் அர்த்தம் சினிமாப் பாடல்கள்தான். சினிமாவில் வரும் பாடலோடு கூடிய இசை, இசையின் சுத்தமான வடிவமல்ல. சினிமா இசை காட்சிகளின் பின்னணியில் உருவாவது. விரகதாபம் தொனிக்கும் பாடலை விரும்பும் ஒருவனுக்கு மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்த, அப்பாடல் வரும் படத்தின் அந்தக்காட்சி கற்பனையில் விரிகிறது. கதாநாயகனாகத் தன்னை கற்பனை செய்துகொள்ள ஏதுவாகிறது. படம் பார்க்காதவர்களுக்கு அப்பாடலின் விரசமான வரிகள் துணைபோகின்றன. எனவே இசை சம்மந்தப்படாத காரணங்களுக்காக — காட்சிக்காக, சிம்ரனுக்காக, மும்தாஜுக்காக — இசையை ரசிக்கின்ற மனப்போக்கை உருவாக்குகின்ற தீமையையும் சினிமா தவிர்க்கமுடியாமல் செய்கிறது.

ஆனால் இசைக்கு மொழி எப்போதுமே ஒரு தடையல்ல.  இசைக்கு மொழி கிடையாது என்றே கூறிவிடலாம். அதன் செய்தி வார்த்தைகளை மீறியது. பாடல்வரிகள் புரியவேண்டும் என்பது நோக்கம் என்றால் அது இசை சாராத நோக்கம். அதற்கு, புரிகிற மொழியில் பாடலை எழுதி வைத்துக்கொள்ளலாம். கேட்கவேண்டியதில்லை. ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலை எவ்வளவு அனுபவித்து ரசிக்க முடியுமோ அதே அளவு, ஏன் இன்னும் அதிக அளவு, ‘மரிமரி நின்னே’யை நாம் ரசிக்க முடியும்.

உர்து தெரியாத நான் கஜல் எனப்படும் உருதுப்பாடல்களை மிகவும் விரும்பி கேட்பேன். முதல்முறையாக சித்ரா சிங்கின் “ராத் பீ நீந்த் பீ” என்ற பாடலைக் கேட்டபிறகு என் ‘நீந்த்’ (தூக்கம்) போய்விட்டது. அந்தப்பாடல் எங்கே கிடைக்கும் என்று தேடித்தேடி அலைந்து பிடித்தேன். அதில் ஆரம்பித்தது கஜலுடனான எனது உறவு.

ஜிந்தகீ மெ தொ சபீ ப்யார் கியா கர்தே ஹேன்
மேதோ மர் கர் பி மெரி ஜானு துஜே ச்சாஹ¥ங்கா
(வாழும்போதுதான் அனைவரும் காதல் செய்வர்
நான் இறந்துவிட்டாலும் என் உயிர் உன்னை நேசிக்கும் — தோராயமான தமிழாக்கம் எனது)

என்று மெஹ்தி ஹஸன் பாடுவது எனக்கும் இசைக்குமான உறவு. (இந்தப் பாடல்களின் அர்த்தங்களெல்லாம் பின்னாளில் நான் தெரிந்துகொண்டது. பாடலை ரசிப்பதற்கு இந்த அர்த்தங்கள் எனக்கு எப்போதுமே தேவையாயிருந்ததில்லை).

என் தாயாக இருந்த என் பாட்டியார் இறந்தபோது நான் அழுததைவிட அதிகமாக, குலாம்அலியின் “ஜின்கெ ஹோண்டோன்” என்ற பாடலைக் கேட்டு அழுதிருக்கிறேன். என் பாட்டியாரைவிட இசையை நான் அதிகம் நேசித்தேன் என்றோ, குலாம்அலியின் அந்த பாடல்தான் உலகின் உன்னதமான இசையென்றோ இதற்கு அர்த்தமல்ல. என் பாட்டியார் வாழ்ந்த காலத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக கற்பனை செய்து பல தடவை தேம்பித்தேம்பி அழுதிருக்கிறேன். (சுசீலாவின் கர்ப்பம் கலைந்துவிட்டதாக ஒரு கனவு. இந்த மனசை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று ஒரு கவிதையில் கேட்கிறார் நகுலன்! என் மனமும் அப்படியே! என்ன செய்வது?!)

அடிக்கடி ஒத்திகை பார்த்த நாடகம் அரங்கேறியபோது உணர்ச்சிகள் அடங்கிப்போனதில் ஆச்சரியமில்லை. ஆனால் குலாம்அலியின் கஜலில் ஒரு வார்த்தைகூட எனக்குப் புரியாவிட்டாலும், வார்த்தைகளைமீறி “அழுதுவிடு” என்ற செய்தியை அது என் மூளையில் அழுந்தப்பதித்து, மூளையின் கட்டளைக்கு உடனே என் விழிகளைப் பணிய வைத்தது. அதை இசையின் சக்தி என்று கொள்ளலாம்.

சப்தமென்பது ஒரு சக்தி. வெயிலைப்போல. வெயிலை ஒரு லென்ஸில் குவிக்கும்போது அதன் கீழே உள்ள இலையோ தாளோ பஞ்சோ பற்றிக்கொள்கிறது. பள்ளிக்கூட நாட்களின் பரிசோதனைதான் என்றாலும் எவ்வளவு உண்மை! இசையும் இதைப்போன்றதுதான். சப்தங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குட்பட்ட ‘பாவ’த்திலோ அல்லது ஒரு கருத்தை நோக்கியோ குவிக்கும்போது ஏற்படும் விளைவு சக்தி வாய்ந்தது. (ருத்ரவீணை சீரியல்கூட இதை அருமையாகச் சொல்கிறது).
 
ஹஸ்ரத் மியான் தான்சேன் தீபக் ராகம் பாடியபோது தீ பற்றிக்கொண்டதையும், பாலமுரளி கிருஷ்ணா நீலாம்பரி பாடி கச்சேரி நடக்கும்போது அழுதுகொண்டிருந்த குழந்தையை தூங்கவைத்ததையும் வரலாறு மறந்துவிடாது. சப்தம் சக்தி என்பதால்தான் இறைவனை நாதவடிவானவனாகக் கூறுகிறார்கள். பாட்டும் நானே, பாவமும் நானே என்று ‘ஆலவாயன்’ பாடுவதை “திருவிளையாடல்” படத்தில் நாம் கேட்க, பார்க்கவில்லையா என்ன?! புனித பைபிள்கூட God said என்றே தொடங்குகிறது. கடவுளை The Word என்று சொல்வதும் உண்டு.

சப்தமென்பது சக்தி என்பதை நமக்கு இவையெல்லாம் உணர்த்துகின்றன. மிகவும் தீவிரமாக முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒரு புள்ளியை நோக்கி குவிக்கப்பட்ட சப்த அடுக்குகளின் அல்லது ஸ்வர வரிசைகளின் வடிவமே இசையாகும். ஆக, இசையென்பது சக்தி. சக்தி என்பது இசை. ராவணன் கெட்டவன் என்பதற்காக அவன் சங்கராபரணம் பாடியபோது அவன்மீது வளர்ந்திருந்த மலை கரையாமலா போனது? இறந்தவர் உலகுக்குச் சென்ற ஆர்·பியூஸ் தனது ஹார்ப் எனும் யாழிசையால் மீண்டு வரும் அனுமதி பெற்றானே!

இசையின் அடிப்படைச் சப்த ஒழுங்கு சாதாரண சினிமா பாட்டிலும் உள்ளதால்தான் நம் தினசரி வாழ்வின் ஒலிகளைவிட — குக்கர் சப்தத்திலிருந்து குழாய்ச் சண்டை வரை — சினிமாப்பாடல்கள் நமக்கு அதிகம் பிடிக்கிறது.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காட்சிகளையும் வார்த்தைகளையும் கொண்ட சினிமா இசைபோல அர்த்தம் சுருங்கிப்போனதல்ல தூய இசை. அது கனவைப் போன்றது. ஒரே கனவு நாலு பேருக்கு நான்கு விதமான அர்த்தங்களைத் தருவதுபோல, ஒரே இசை பலருக்கு, அவரவர் வாழ்க்கை அனுபவங்களுக்குத் தக்க காட்சிகளை மனத்திரையில் அது விரிக்கிறது. எனவே இசையின் இயற்கையான தன்மையில் அதற்கு அகராதி போடமுடியாது. பொதுவாக, சோகமான இசையிலிருந்து சுகமானதை பிரித்துச் சொல்ல முடியும் என்றாலும் சோகம் சுகம் என்ற இரண்டு உணர்ச்சிகளுக்குள் இசையைச் சிறைப்படுத்துவது இசையை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதாகிவிடலாம்.
 
எல்லாக் கலைகளையும் போலவே, இசையும் ஒரு வலுவான சக்தி மிகுந்த சாதனம். பல திரைப்படங்களின் வெற்றிக்கு அவற்றின் இசைதானே காரணம்?! அதுமட்டுமல்ல. மற்ற கலைகளைவிடவும் வலுவானது இசையே என்றால் அது மிகையாகாது. வார்த்தைகளின் அர்த்தங்களை அகராதி சொல்லும். அது காட்டும் அர்த்தங்களுக்கு உட்பட்டோ அல்லது அவற்றை மீறியோ ஒரு கவிதை என்ன அர்த்தப்படுகிறது என்று அனுமானிக்கலாம். இப்படிப் புரிந்துகொண்டபிறகே அதன் தாக்கம் நம்மீது ஏற்படுகிறது. மோனாலிசா என்பது புன்னகைக்கும் ஒரு பெண்ணின் ஓவியம் என்று தெரிந்து கொண்டபிறகுதான் அதன் மந்திரப்புன்னகை நம்மை பாதிக்கிறது.

ஆனால் தூய இசையைப் பொறுத்தவரை, சிந்தனை செய்வதற்கு நேரமின்றி, சப்த அதிர்வுகள் செவிகளைத் தாக்கும் அந்தக் கணமே, அதற்கேற்ப காட்சிகள் அல்லது உணர்ச்சிகள் நமக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. உணர்ச்சிகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன, தூண்டப்படுகின்றன.

குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற வியாபாரக் கட்டுப்பாடுகள் இன்றி, சுதந்திரமாக, வார்த்தைகளற்ற அகாரத்திலேயே அரை மணி நேரம் பர்வீன் சுல்தானா அல்லது பீம்ஷென் ஜோஷி சஞ்சரிக்கையில் ஒரு ஆதரவற்ற பெண் அல்லது ஒரு மனிதன் இறைவனிடம் முறையிடுகின்ற காட்சியை அல்லது செய்தியை அல்லது மன நிலையை அது கொடுக்கும். பிஸ்மில்லாகானின் ஷெனாயில் சொற்களைமீறிய ஒரு சோகத்தை உணரலாம். ஷைகோவ்ஸ்கியின் — Tchaikovsky — இசையைக் கேட்கும்போது ஒரு உலகமகா யுத்தகளத்தில் கலந்து கொண்டது போல அல்லது பார்வையாளராக இருந்ததுபோல இருக்கும். யுத்த அனுபவத்தை அவர் இசை நமக்குத் தருகிறது. சிவகுமார் ஷர்மாவின் சந்தூரின் மணித்துள்ளலை கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லா துன்பங்களும் மறைந்து மனதில் ஒரு மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுகிறது. “திப்புசுல்தானின் வாள்” என்ற தொலைக்காட்சித் தொடரில் நௌஷாத்தின் டைட்டில் இசையில் திப்புவின் வீரம் ஒலிக்கவில்லையா?

ரவிஷங்கரின் சிதார், அலி அக்பர் கானின் சரோத், யஹ¥தி மெனுஹினின் வயலின், பாலசந்தரின் வீணை, சௌராசியாவின் புல்லாங்குழல் இதையெல்லாம் மணிக்கணக்கில் எப்படி ஒருவரால் கேட்கமுடிகிறது? என்ன புரிகிறது என்று சிலர் கேட்கலாம். என்ன புரியவில்லை என்பதே சரியான கேள்வியாக அல்லது பதிலாக இருக்க முடியும். நம்முடைய கலாச்சாரம் இசையோடு கூடிய கலாச்சாரம். இந்த பிரபஞ்சத்தின் ஒழுங்கு — Order of the Universe — இறைவனின் அத்தாட்சி எனும்போது, சப்தத்தின் ஒழுங்காகிய இசைக்கும் அதில் பங்குண்டு.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாத இறைவனை நெருங்கிய ஞானிகளின் மன நிலைக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்கீதத்தில் துரித காலத்தில் ஸ்வரம் சொன்னாலும் ஸட்ஜமம் ‘ஸ’வாகவே இருக்கும். நிஷாதம் ‘நி’யாகவே இருக்கும். ஒவ்வொரு ஸ்வரமும் அதனதன் இடத்தைவிட்டு அட்சரம்கூட நகராது. தாளமும் அப்படியே. ஒன்னாங்காலம், ரெண்டாங்காலம், மூனாங்காலம் என்று எந்த கதியில் ஸ்வரம் சொன்னாலும், பாடினாலும், வாசித்தாலும் தாளம் ஓடக்கூடாது. பெண்டுலம் மாதிரி ஒரே மாதிரியாக கூடாமல் குறையாமல் போய்வந்துகொண்டே இருக்க வேண்டும்.

எது நடந்தாலும் ஒரே மாதிரியாக மனதை வைத்துக்கொள்ளும் ஞானிகளுடைய நிலையை இந்த கட்டுப்பாடு, ஒழுங்கு குறிக்கிறது. அப்படி இருக்கின்ற ஒரு வாய்ப்பு அல்லது பயிற்சி இசையில் ஆழமாகச் செல்லும்போது கிடைக்கிறது. சொர்க்கத்தின் ஏழு வாசல்களும் திறந்து காட்டப்பட்டாலும், நரகத்தில் வாயில்கள் அனைத்தும் திறந்து காட்டப்பட்டாலும் எனது நம்பிக்கை கூடப்போவதுமில்லை குறையப்போவதுமில்லை என்று அலீ (ரலி) சொன்னதும் இந்த மன நிலையையே குறிக்கிறது. எதிர்ப்புகளற்ற, எதற்கும் இசைவான ஒரு மன நிலையை, அமைதியை இசை ஏற்படுத்துகிறது.  

உறங்குவதற்கு நீலாம்பரி என்றும் விழிப்பதற்கு பூபாளம் என்றும் பட்டியல் போட்டு சப்த ஒழுங்குகளை வகைப்படுத்தி வைத்திருக்கிறது நம் பாரம்பரியம். தாவரங்கள் இசையைக் கேட்டு ஆரோக்கியமாக வளர்வதை நாம் அறிவோம். எத்தனையோ நோய்களை ராகங்கள் தீர்த்துவைத்த வரலாறுகள் உண்டு. நாகூர் தர்கா வித்வான் உஸ்தாத் தாவூத் மியான்கான் கால் நோயால் அவதியுற்றபோது, ராகவல்லுணராகவும் இருந்த இறைநேசர் நாகூர் ஷாஹ¤ல் ஹமீது ஆண்டகை(ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் மால்கோஸ் ராகத்தை நாற்பது நாட்கள் பாடி, கால்வலி குணமானது வரலாறு. இப்படிப்பட்ட ஒரு உன்னதமான ஒரு விஷயம் எப்படி மனிதனை இறைவனிடமிருந்து தூரப்படுத்த முடியும்?!

இசை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் பற்றி இந்த இடத்தில் பேசிவிடுவது நல்லது. இசையென்றால் ஏதோ இஸ்லாத்துக்கு அலர்ஜி என்பதுபோல பலர் பேசி அல்லது நினைத்து வருகிறார்கள். திருக்குர் ஆனும் ஹதீதும் இசைக்கு எதிராக இருப்பதாக அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள். 

பொதுவாக திருக்குர்ஆனின் அத்தியாயங்களான 31 : 06, 17 : 64, 53 : 57-62 ஆகியவை இசைக்கு எதிரான ஆதாரங்களாகக் காட்டப்படுகின்றன. குறிப்பாக சூரா லுக்மானின் வசனமே (31:06) பலராலும் எடுத்துக்காட்டப்படுகிறது. அதில் வரும் ‘லஹ்வல் ஹதீஸ்’ என்ற பதம் idle talk என்று ஆங்கிலத்தில் சரியாகவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அதற்கு இசை, பாட்டு என்றும் பொருளிலிருப்பதாக சில ஹதீதுகளை ஆதாரம் காட்டி விளக்கப்படுகிறது.

லுக்மானின் அந்த குறிப்பிட்ட வசனம் என்னதான் சொல்லுகிறது? இறைவசனங்களின் தன்மையைப் பற்றிச் சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாக சிலர் அதை நம்பாமலிருப்பார்கள் என்றும் அப்படிப்பட்டவர்கள் எதை நம்புவார்கள் என்றும் சொல்லும்போது :

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் வீணான செய்திகளை (லஹ்வல் ஹதீஸ்) விலைக்கு வாங்கி, அல்லாஹ்வுடைய வழியிலிருந்து, (அவற்றை ஜனங்களுக்கு ஓதிக்காண்பித்து) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக்கொள்கின்றனர் (31 : 06)

என்று கூறுகிறது. இந்த வசனத்தில் இசைபற்றியோ வாத்தியக் கருவிகள் இசைப்பதைப்பற்றியோ இறைவன் பேசவே இல்லை. விதிக்கப்பட்ட கதியில் கூடாமலும் குறையாமலும் இந்த பூமியை சுற்றவைத்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சமஹா கலைஞனாகிய இறைவனே இசைக்கு எதிராக எப்படிப் பேசுவான்?! அவனன்றி அணுவும் அசையாது எனும்போது ஏழு ஸ்வரங்கள் மட்டும் அவனுடைய அனுமதியின்றி உலாவருமா என்ன? 

என்னைப் பின்பற்றுபவர்களில் ஒருசிலர் பிறன் மனைவிழைதல், பட்டாடை அணிதல், மது உட்கொள்ளல், இசைக்கருவிகளை இசைத்தல் போன்றவற்றை செய்யக்கூடியவர்களாக இருப்பர் என்று ஒரு ஹதீதில் வருவதை எடுத்துக்காட்டி, இதன்மூலம் இறைவனும் இறைத்தூதரும் இசையையும் இசைக்கருவிகளை இசைத்தலையும் தடுப்பதாக விளக்கம் சொல்கின்றனர். ஆனால் இது ஒரு சிந்தனைப்பள்ளியின் விளக்கம்தானே தவிர, ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்க அறிஞருலகம் ஒத்துக்கொண்ட ஒன்றல்ல என்பதை ஏற்கனவே கொடுத்த உதாரணங்களிலிருந்து புரிந்துகொண்டிருக்க முடியும்.

கொட்டு அல்லது முரசு போன்ற வட்டப்பறைகளை இசைத்து புஆத் என்ற யுத்தம் பற்றிப் பாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்களை அபூபக்கர்(ரலி), “இறைத்தூதரின் வீட்டுக்குள் சாத்தானின் இசைக்கருவிகளா?” என்று கோபத்துடன் தடுக்கப்போக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரைத் தடுத்து, பண்டிகை போன்ற நாட்களில் நாம் இதை தடுக்க வேண்டியதில்லை என்று சொல்லி அவர்களை தொடர்ந்து இசைத்து பாட அனுமதித்ததை புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரப்பூர்வமான ஹதீது தொகுப்புகளில் உள்ள பல ஹதீதுகள் பதிவு செய்கின்றன. அதுவும் இறைத்தூதரின் அருமை மனைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் (அபூபக்கரின் மகளார்) சொன்னதாக!

மேலும் அத்தியாயம் 39 வசனம் 75ல் வானவர்கள் இறைவனது இருக்கையைச் சூழ்ந்துகொண்டு இறைவனைப் புகழ்ந்து “பாடுவார்கள்” என்றும் திருமறை கூறுகிறது! உலக முடிவு நாளில் சூர் ஊதப்படும் என்று சொல்லப்படுகிறதே, சூர் என்பதும் ஒருவிதமான கருவிதானே?

மேற்கூறப்பட்ட இறைவசனமும் அதை பலப்படுத்துவதுபோல உள்ள ஹதீதொன்றும் இசைபற்றியும் இசைக்கருவிகள் இசைப்பது பற்றியும் பேசுவதாகவே ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும், பொதுவாக இசையை இஸ்லாம் அனுமதிக்காததாக எடுத்துக்கொள்ளப் போதுமானதாக அது இல்லை. காரணம், வேண்டுமென்றே இறைச்செய்தியை மனிதர்கள் மனதில் வாங்கிவிடக் கூடாதென்பதற்காக, அவர்களை வழிகெடுக்கும் பொருட்டு, பாடவோ இசைக்கவோ செய்கின்றவர்களைப் பற்றிப் பேசுவதாகத்தான் மேலே காட்டப்பட்ட லுக்மான் அத்தியாய வசனத்தை எடுத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட இசையை வேண்டுமானால் வேண்டாம் என்று ஒதுக்கிவிடலாம்.

மேலே சொன்ன இசைக்கருவிகளுக்கு எதிரான ஹதீது பிறன்மனை விழைதல் போன்ற ஒழுக்கம் கெட்ட காரியங்களைச் செய்கிறவர்களை சபிக்கின்ற ஒன்றாக இருப்பதைக் கவனிக்கவும். ஒரு ஒழுக்கம் கெட்டவன் இசைக்கருவியொன்றை வைத்து வாசித்துக்கொண்டிருந்தால், அந்த செயலை ஆதரித்தா பேசமுடியும்? ஆனால் அதைவைத்து இசைக்கருவிகள் இசைப்பவர்கள் அனைவரும் அந்த ஹதீதில் வருவதுபோல ஒழுக்கம் கெட்டவர்கள் என்றோ கெட்டுவிடுவார்கள் என்றோ எப்படி தர்க்கிக்க முடியும்?!

“உங்கள் எண்ணத்தை வைத்தே செயல்கள் மதிப்பிடப்படுகின்றன” (இன்னமல் அ’மாலு பின் நிய்யத்தி) என்ற ஹதீதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாசிப்பவனின் ஒழுக்கம்கெட்டத் தனத்துக்கு கருவி எப்படி பொறுப்பாக முடியும்? மனிதனுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற ஒன்றை, மன இறுக்கத்தைத் தளர்த்துகின்ற ஒரு உன்னதமான தெய்வீகக் கருவியாகிய இசையை, அதன் ஆற்றலை, ஒட்டுமொத்தமாக நாம் எப்படிப் புறக்கணிக்க முடியும்? அப்துல் பாஸித் திருமறையை ஓதும்போது நம்மை ஸ்தம்பித்து இறைச்சிந்தனையில் மூழ்க வைப்பது அவருடைய ‘கிராஅத்’ எனும் உன்னத இசையல்லவா? திருக்குர்ஆனின் இசையைத்தானே அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மர்மட்யூக் பிக்தால் “The inimitable symphony” என்று சரியாக வர்ணித்தார்!

கருவிகளின் இசை இறைவனிடமிருந்து மனிதனைப் பிரித்துவிடும் என்ற வாதம் உண்மையாக இருக்குமானால், அந்த அன்சாரிப் பெண்களை நபிகளார் ஏன் பாடவும் இசைக்கவும் அனுமதிக்க வேண்டும்? அப்போ, பண்டிகை நாட்களில் மட்டும் இறைவனை மறந்திருக்கலாம் என்று அர்த்தமா? தாய் சகோதரி போன்ற திருமணம் செய்து கொள்ளமுடியாத உறவு நிலைகளில் உள்ள பெண்களின் முன்னிலையிலும், கணவன் மனைவி தனியாக இருக்கும்போதும் பாடிக்கொள்ளலாம் என்று அனுமதி இருக்குமானால் அதற்கு என்ன அர்த்தம்? அப்படிப்பாடி ஆடுபவர்கள் மட்டும் இறைவனை அந்த நேரத்தில் மறக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அர்த்தங்கள் எப்போதுமே வார்த்தையில் இருப்பதில்லை. அதன் பின்னால் உள்ள நோக்கத்தையும் சொல்லப்பட்ட இடத்தையும் — context — வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். பாலபாடத்தையே வைத்து எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருப்பதில் பயனொன்றுமில்லை.

கருவிலுள்ள குழந்தைகூட இசைக்கு இசைவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கருவிலிருந்து கலாச்சாரம்வரை உயர்ந்துவிட்ட நாம் மட்டும், மனிதனை சந்தோஷப்படுத்தும், அவனுக்கு அமைதியைத் தரும் ஒரு தெய்வீக அனுபவத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்? நம்முடைய மனம் உறுதியாக இருக்கும் பட்சம், நம்மை இறைச்சிந்தனையிலிருந்து பிரிப்பதற்கு பதிலாக இசை நம்மை இறைவனை நோக்கி மேலும் ஆழமாகச் செலுத்த நிச்சயம் உதவும்.

(“படித்துறை”யில் இந்த கட்டுரை வந்துள்ளது)

கட்டுரை ஆசிரியரின் ‘பறவையின் தடங்கள்’ வலைத்தளத்திலிருந்து

NB : The contents of articles of other writers published in this blog not necessary to be the opinion of the blogger

கலைஞர் உரை

AnnaMuka

(21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:

“என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் – பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் – நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் – பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபாவின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”

முழு உரை