RSS

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)

07 Nov

கலைஞர் ஓர் ஆச்சரியம்

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவுக்கு மட்டுமே ‘அல்வா’ கொடுத்தாரா அல்லது ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்திற்கே ‘அல்வா’ கொடுத்தாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கலைஞர் அவர்களின் அபிமானத்திற்கு ஆளாகி இதுநாள் வரை கலைஞரையே துதிபாடிவரும் என் மானசீக குரு கவிக்கோ அப்துல் ரகுமானை இவ்வேளையில் இங்கு நான் குறிப்பிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் சோலை, கவிக்கோ, கலைஞர்

வெற்றி பல கண்டு – நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும்
எனக் கேட்டால் – அப்துல்
ரகுமானைத் தருகவென்பேன்

என்று கவிக்கோ அப்துல் ரகுமானை வெகுவாகப் பாராட்டியவர் கலைஞர். அப்படிப்பட்ட ஒரு நட்பிறுக்கம் அவர்கள் இருவருக்குமிடையில் இன்றும் நிலவுகிறது.

என் கவிதை உனக்கு பூச்சொரியும்
ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

என்று கவியரங்கம் ஒன்றில் கலைஞரை வானளாவப் புகழ்ந்து கவிதை பாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கவிக்கோ அவர்களே! கலைஞரைப் பார்த்தால் உங்களுக்கு மட்டும்தான் ஆச்சரியமாக இருக்கிறதா? எங்களுக்கும்தான் பெருத்த ஆச்சரியம்.

அவருடைய தமிழ்ப்பற்று எங்கே போயிற்று?
அவருடைய பகுத்தறிவுக் கொள்கை எங்கே பறந்தது?
அவருடைய திராவிட உணர்வு என்ன ஆனது?
எப்படி இருந்த இவர் எப்படி ஆகி விட்டார்?

என்று எங்களுக்கும்தான் ஆச்சரியம் தாங்கவே முடியவில்லை.

ஆரம்பத்தில் “கடவுள் இல்லை” என்ற நாத்திகக் கொள்கையில் ஊறித்திளைத்த கலைஞர் அவர்கள். “ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்ற கொள்கைக்கு மாறி, இன்று ரகசியமாக ஆன்மீகத்திற்கும் மாறி விட்டார். என்ன ஓர் ஆச்சரியம்?

திராவிட பாரம்பரியத்தில் வந்த நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி சாமி கும்பிட்டதை விமர்சித்த கலைஞர் அவர்கள், தான் தாலி கட்டிய மனைவி சாய்பாபாவுக்கும், சாமியார்களுக்கும் பக்தையாகிப் போனதைப் பற்றி எதையும் சொல்ல முடியாமல் மெளனம் சாதிக்கிறார்.

ஆமாம். கலைஞரின் போக்கைப் பார்த்த எங்களுக்கும் ஆச்சரியம்தான்.

மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்த திராவிட பாரம்பரியத்தில் வந்த கலைஞர் மஞ்சள் துண்டுதான் ராசி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

புத்தபிரான் சொன்னதற்காக அவர் அதை அணிகிறாரா, ஓஷோ சொன்னதற்காக அணிகிறாரா, நண்பர் இராமதாஸ் அணிவித்த காரணத்தினால் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டாரா அல்லது ஜோஸியர் ஆலோசனையின் பேரில் அணிந்துக் கொண்டாரா என்பது “பெர்முடா முக்கோண”த்தைக் காட்டிலும் மர்மமாய் இருக்கிறது.

“மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” – இது பூம்புகார் படத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய பிரபலமான ‘பஞ்ச்’ டயலாக். நடந்தவைகளை வைத்து பார்க்கும்போது நம் தலைவரின் ‘மனசாட்சி’ உறங்க ஆரம்பித்து, வீல்சேரில் மனக்குரங்கு வாக்கிங் கிளம்பி விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சிறுபான்மைச் சமுதாயத்திற்கு தான் ஒரு காப்பாளன் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்த கலைஞர் அவர்களின் மனநிலை மாறிப்போனது ஏன் என்று இதுவரை நமக்கு புரியாதப் புதிர்.

“சங்கு மார்க் கைலிகளைத்தான் நான் விரும்பி அணிவேன்” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, கோவலன் கதை எழுதிய அவரை முஸ்லீம்களின் காவலன் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன?

இப்படி எல்லா விதத்திலும் மாறிப்போன கலைஞர் அவர்களைக் காண்கையில் எங்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை கவிக்கோ அவர்களே!

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்கிற்கு அடுத்தபடியாக . “நான் லுங்கி அணியாத முஸ்லிம், தொப்பி போடாத இஸ்லாமியன்” என்னும் கலைஞரின் இந்த பஞ்ச் டயலாக்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” – இதுவும் டாக்டர் கலைஞரின் பஞ்ச் டயலாக்கில் ஒன்று.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்”என்றெல்லாம் பேசிப் பேசியே, வாய்ச்சொல்லில் வீரராக, முஸ்லீம்களின் காப்பாளனாக, காவியநாயகராக, Good Samaritan-ஆக, இஸ்லாமியர்களை தன்பால் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

இன்று இஸ்லாமியச் சமூகம் இத்தனைப் பிரிவாக போனதற்கு காரணம் கலைஞர் அவர்கள்தான். அன்று காயிதேமில்லத் உயிரோடு இருந்த காலத்தில் பச்சைக்கொடி ஏந்தி, கட்டுக்கோப்பாக ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்த சமூகம் இன்றும் அதுபோலவே இருந்திருந்தால் இந்நேரம் இஸ்லாமியச் சமூகத்தின் பிரதிநிதிகள் விஜயகாந்த் கட்சியை விட சட்டசபையில் அதிகம் இருந்திருப்பார்கள். நமக்குத் தேவையான அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் போராடிப் பெற்றிருப்பார்கள்.

அப்துல் லத்தீப், காதர் மொய்தீன் போன்ற அப்பாவி நபர்களை பகடைக்காயாக வைத்து அவர் ஆடிய சதுரங்க விளையாட்டை – இஸ்லாமியச் சமுதாயத்தில் கலைஞர் ஏற்படுத்திய பிரிவினையை – இந்தச் சமுதாயம் ஒருக்காலும் மன்னிக்கவே மன்னிக்காது.

இதோ பாருங்கள், கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட முதுகுவலி கவிக்கோ அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது

முதுகு வலிக்கிறது உனக்கு
வலிக்காதா…?
எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.

என்று வினா தொடுக்கிறார் கவிக்கோ.

கலைஞருக்கு மட்டுமா முதுகு வலிக்கிறது. எங்களுக்கும்தான் வலிக்கிறது. கலைஞர் எங்கள் புறமுதுகில் இப்படி குத்தி விட்டாரே என்று மனம் வெதும்பி துடிக்காத இஸ்லாமியச் சகோதரனே இருக்க முடியாது.

தன் வாழ்நாள் முழுதும் கலைஞரைப் புகழ்ந்து கவிதை வடித்துக் கொண்டிருந்த கவிக்கோ அவர்களுக்கும், தன் வாழ்நாள் முழுதும் வாழ்த்திப் பாடிக்கொண்டிருந்த இசைமுரசு இ.எம்.ஹனிபாவுக்கும் கலைஞர் செய்த கைம்மாறு ஒன்று உண்டு.

கெட்டதை எழுதும்போது நல்லதையும் சேர்த்து எழுதத்தானே வேண்டும்? இருவருக்கும் வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை வாரி வழங்கினார் கருணையின் வடிவமான கலைஞர் கருணாநிதி.

முஸ்லீம் சமுதாயத்தினரிடையே இருந்த ஒற்றுமையைக் குலைத்துவிட்டு, பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியச் சமூகத்திற்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்துவிட்டு கவிக்கோ அவர்களுக்கும் இசைமுரசு அவர்களுக்கும் இந்த பதவியை வாரி வழங்கியதால் மட்டும் கலைஞர் அவர்களின் கறை அழிந்து விடுமா என்ன?

நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !

என்று கலைஞரைப்பார்த்து கவிதை பாடினார் கவிஞர் வாலி. “நீ எங்கள் கிழக்கு” என்றால் “எங்களின் விடிவுகாலம் உன்னாலேதான்” என்று பொருள். “உனக்கு என்றும் இல்லை மேற்கு” என்றால் “உன் புகழுக்கு அஸ்தமனமே கிடையாது” என்று பொருள். “நீ வடக்கு வழிபடும் தெற்கு” என்றால் “சோனியா காந்தி அம்மையார் உன் கருணையால்தான் ஆட்சி செய்துக் கொண்டு இருக்கிறார்” என்று பொருள்.

இந்த வரிகளைப் படித்ததும் எனக்கு பழைய முழக்கங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற உணர்ச்சியூட்டும் முழக்கத்தை முன்வைத்தே அண்ணா வழி வந்த கலைஞர் அவர்கள் நம் திராவிட உணர்ச்சியை தட்டி எழுப்பி நம்மை பரவசப் படுத்தினார். அதற்குப்பிறகு நடுவண் அரசோடு உறவு கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்ற திமுகவின் தலைவர் கருணாநிதி, “வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது” என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தார்.

வலம்புரிஜானுக்கு கொடுத்த “வார்த்தைசித்தர்” பட்டத்தை வாபஸ் பெற்று “வாழும் வள்ளுவருக்கு” கொடுத்திருக்கலாம்.

நாத்திகம் போன்ற விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. “பிராமண எதிரிப்பு?” – அது அவ்வப்போது தேவைப்படும்போது வந்து வந்து போகும். தமிழினம், தமிழுணர்வு போன்ற விஷயங்கள் இலங்கைப் பிரச்சினைக்குப் பிறகு மிகவும் கவனமாகவும் ரகசியக்குரலிலுமே முழங்கப் படுகிறது.

“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக” திராவிட இயக்கங்களின் அடிப்படையான கொள்கைகளை “திராவிடக் கட்சிகள்” என்று பெயரளவில் செயல்படும் அனைவரும் காற்றில் பறக்கவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது பரிதாபமான உண்மை.

கவிக்கோ சொன்னதுபோல் கலைஞர் ஓர் ஆச்சரியம். அவரது மனமாற்றங்கள் சிதம்பர ரகசியம். அவரது ஒவ்வொரு செயலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களைப் பெற்று, வெற்றி கண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தன்னிகரில்லா தமிழ்ப்பற்றை புகழாத நாவுகளே இல்லை. பாராட்டாத பத்திரிக்கைகள் இல்லை. அதே கலைஞர் கருணாநிதி, தான் தொடர்பு கொண்ட தொலைகாட்சி ஊடகங்களுக்கும், அவர்களது வாரிசு நிறுவனங்களுக்கும், தன் குடும்பத்தார்கள் தயாரிக்கும், வினியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கும் பிறமொழி பெயர்கள் வைப்பதை கண்டும் காணாததுமாய் இருந்து புரட்சி செய்தார்.

என்ன ஒரு மாற்றம் பார்த்தீர்களா? தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா? கலைஞரின் கொள்கை நமக்கு புரியவே மாட்டேன்கிறது. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்றார். “சிவாஜி” என்ற பெயரெல்லாம் தமிழ் பெயராம். நம்புங்கள்.

உதயநிதி ஸ்டாலின் கதநாயகனாக நடித்த படத்திற்கு “ஒரு கல்… ஒரு கண்ணாடி” என்று பெயர் வைத்தார்கள். அதையும் சுருக்கி கச்சிதமாக “ஒ.க.. ஒ. க..” என்று வைத்தாலென்ன என்று மூளையை கசக்கினார்கள். ஏதோ தெலுங்கு பேச்சு போல அசிங்கமாக உள்ளது என்ற கருத்து தெரிவிக்கப்பட உடனே “O.K. O.K.” என்று பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார்கள். பெயர் மாடர்னாக இருக்கிறது, ஈர்ப்பாக இருக்கிறது என்று அச்செயலுக்கு புகழ்மாலை வேறு. இந்த கண்றாவியை எல்லாம் மவுனமாக அமர்ந்து இரசித்த நம் தலைவரின் தமிழ்ப்பற்றை எப்படி புகழ்வதென்று எனக்குத் தெரியவில்லை.

ஏன் இந்த மனமாற்றம் கலைஞருக்கு? நமக்கு சொல்லத் தெரியவில்லை.

கவிக்கோ சொன்னது போல கலைஞர் என்றாலே ஆச்சரியம். ஆமாம் எங்களுக்கும்தான்.

கடந்த 1967-க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் அவர்கள் பெரிய முதலாளிகளாக வலம் வருகிறார்கள். கலைஞர் அவர்களின் குடும்பமோ உலகப் பணக்காரர்களின் முன்னணி வரிசையில் ஒன்றாகத் திகழ்கிறது.

இதோ தன் வாழ்நாள் முழுதும் திமுகவின் உயிர்நாடியாகத் திகழ்ந்த அந்த வரலாற்று நாயகனான நாகூர் ஹனிபா, உச்ச ஸ்தாயியில் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்து, சிறுகச் சிறுக சிமெண்டும், செங்கல்லும், இரும்புக்கம்பியுமாய் வாங்கி கட்டிய வீட்டில், தன் வயோதிக காலத்தில், தனிமையாய் அமர்ந்து கலைஞர் அவர்களோடு தனக்கிருந்த பால்ய நட்பையும் அவரது தாராள மனதையும் சிலாகித்து அசைபோட்டு, தன்னைக் காண வருவோரிடத்திலெல்லாம் கலைஞரின் புகழைப் பரப்பி வருகிறார்.

இதனால்தான் நாகூர் ஹனிபாவின் பெயரை பிழைக்கத் தெரியாதவர்களின் வரிசையில் இணைக்க வேண்டும் என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.

– அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

(இன்னும் வரும்)

 

Tags: , , , ,

5 responses to “நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)

  1. Abu Thalha

    November 8, 2012 at 7:11 am

    I endorse what you have written. Muslims are cheated not only by Kalaignar but every politician to get or gain what they aim and wish to achieve! Disunity among the Muslim mass may be the contributing factor..
    Abu Thalha

     
  2. S.E.A.Mohamed Ali. "nidurali"

    November 8, 2012 at 9:18 am

    உங்கள் கட்டுரை அனைத்தையும் தொடர்ந்து படித்து வருகின்றேன் .
    ஹனிபா அண்ணன் படம் பார்த்து மனம் மிகவும் வேதனைப் படுகின்றது .அல்லாஹ் அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் உடல் நலத்தையும் தர பிரார்த்திக்கின்றேன்

     
  3. S.E.A.Mohamed Ali. "nidurali"

    November 8, 2012 at 9:20 am

    I endorse what you have written. Muslims are cheated not only by Kalaignar but every politician to get or gain what they aim and wish to achieve! Disunity among the Muslim mass may be the contributing factor..
    Abu Thalha – It is rightly said

     
  4. HAJA

    November 8, 2012 at 2:40 pm

    2002ஆம்
    ஆண்டு வாணியம்பாடி சட்டமன்ற
    இடைத்தேர்தலுக்க ான திமுக
    வேட்பாளர் யார்
    என்று அறிந்து கொள்ளும்
    ஆவலுடன் அறிவாலயத்தில்
    குழுமியிருந்தனர ்
    பத்திரிக்கையாளர ்கள்.
    வேட்பாளரை அறிவிக்க
    கலைஞரும் பேராசிரியரும்
    வந்தார்கள் கூடவே நாகூர்
    ஹனிபாவும் வந்தார். தான்
    கொண்டு வந்த
    வெள்ளை காகிதத்தை பிரித்து படித்தவாறு மைக்
    பிடித்தார் கலைஞர்.
    தனது கரகரத்த குரலில் ‘நாகூர்’
    ஹனீபாதான் வேட்பாளர்
    என்று அறிவித்தார்.
    அப்போது அங்கே ஒரு அதிசய
    காட்சி நிகழ்ந்தது. ஒரு பக்கம்
    கலைஞரையும், இன்னொரு பக்கம்
    பேராசியரையும்
    இழுத்து அணைத்துக்கொண்டு
    போஸ் கொடுத்தார் ஹனீபா.
    கேமராக்களின் பளிச் பளிச்
    சத்தத்தை தவிர
    அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்தது.
    அங்கிருந்த அனைவரும் வியப்பில்
    ஆழ்ந்தனர். தமிழக அரசியல்
    கட்சிகளில் எந்த
    ஒரு வேட்பாளரும் கற்பனை கூட
    செய்து பார்க்க முடியாத
    ஒரு காட்சி என்று அப்போது வியந்து எழுதியது ‘ஆனந்த
    விகடன்’.

     
  5. ashiq

    November 26, 2012 at 10:43 am

    Abuthalha mama says correctly our muslim community need unity if no unity among us there is no chance at all for us to move ahead. In vaniyampadi election Mr. E.m. Hanifa was lose his seat because of d.m.k itself

     

Leave a comment