RSS

Category Archives: நாகூர் ரூமி

நாகூர் ரூமிக்கு ஊர்விலக்கமா?


இஸ்லாத்தைப் பற்றி பலமுறை தவறான மதிப்பீடுகள் செய்த “சோ” ராமசாமி அவர்கள் நாகூர் ரூமி எழுதிய இஸ்லாம் – ஓர் எளிய அறிமுகம் எனும் இந்நூலைப் படித்துவிட்டு துக்ளக் இதழில்

“இஸ்லாம் பற்றிய பல கருத்துக்களை – குறிப்பாகப் பலரின் தவறான புரிதல்களை மிக எளிமையாக இந்நூலில் ரூமி அலசியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாகப் புரிந்துக் கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளார்”

என்று நாகூர் ரூமியைப் புகழ்ந்து தள்ளினார்.

“இஸ்லாம் பற்றிய கருத்துக்களை நல்லமுறையில் நானிலத்தில் எடுத்துக்கூறும் நாகூர் ரூமியை ஏன் நாகூர் ஜமாஅத் மதவிலக்கம் செய்து வைக்க வேண்டும்?” என்று எல்லோரும் மூளையைக் கசக்கி, முடியைப் பிய்த்துக் கொள்ளும் நிலைமை உண்டாகி விட்டது.

நாகூரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத் ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது ஒரே ஒரு ஜமாஅத் பெயரளவுக்கு இருந்த போதிலும், ஜமாஅத் சொல்லிக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்கி நடக்கும் அளவுக்கா நாகூர்க்காரர்கள் நல்ல பிள்ளைகளாக ஆகி விட்டார்கள்? என்று என் மண்டைக்குள் ஒரே குஜராத் கலவரம்.

ஒரே பெருநாளை மூன்று நாட்கள் தனித்தனிக் குழுவாக கொண்டாடுபவர்கள் நாமாயிற்றே? நமக்குள் எப்படி இப்படியொரு ஒற்றுமை? என்றேல்லாம் சிந்திக்கத் தொடங்கி விட்டேன்.

அன்றொரு நாள் எச்.ஜி.ரசூலுடன் சேர்ந்து கேஷுவலாக நாகூர் ரூமி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது தன் பெயரையும் ரசூல் பெயரையும் பிற்காலத்தில் யாராவது ஒருவர் ‘ஆள்மாறாட்டம்’ செய்து குழப்பிக் கொள்வார் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சென்னையில் நடந்த அமெரிக்க தூதரக முற்றுகை தொடர்பான விவாதத்தில் ஞாநி அவர்கள் நாகூர் ரூமியின் பெயரைத் தவறாக உளறிக் கொட்டியதால்தான் இந்த குழப்பமோ குழப்பம்.

நல்லவேளை ஆஸ்கார் அவார்ட் வாங்கியது கவிக்கோ அப்துல் ரகுமான் என்றும் “ஆறாவது” விரல் எழுதியது ஏ.ஆர். ரகுமான் என்று அவர் சொல்லாமல் விட்ட வரைக்கும் நமக்கு பெருத்த சந்தோஷம்தான்.

நமக்கு எப்படி எல்லா சீன மூஞ்சியும் ஒரே மாதிரியாகத் தெரிகிறதோ அதேபோன்று பிறமதத்தவர்களுக்கு பெரும்பாலான முஸ்லீம்களின் பெயர்கள் ஒரேமாதிரியாகத் தெரிகின்றன. கவிஞர்களுல் இஜட்.ஜபருல்லா போன்ற பெயர்கள் வாயிலேயே நுழையாத பெயராக இருக்கிறது என்று அவரவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

(இன்னும் சற்றும் எளிமைப் படுத்தும் விதமாக  “ஜ.ஜபருல்லா என்று உங்கள் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாமே” என்று அவரிடம் போய் சொல்லலாம் என்று நினைத்தால் மனுஷர் நம்மை பிடி பிடி என்று பிடித்துக் கொள்வாரே என்ற பயம் வேறு நம்மை பெவிகால் போன்று அப்பிக் கொள்கிறது)

ஞாநி என்ற பெயரை அவர் வைத்திருப்பதால் அவருக்கு “ஞானக்கண்” இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஏன் நாகூர் ரூமியே ஒரு ஞானியின் பெயரைத்தானே புனைப்பெயராக வைத்துள்ளார்? அவருக்கு ஒரு பூனைக்கண் கூட கிடையாது. Even Homer sometimes nods என்பார்கள். ஆனைக்கும் அடிச்சறுக்கத்தானே செய்யும்? ஞானியை நாம் மன்னித்து விடலாம். நாகூர் ரூமியின் பெயரை பிரபலமாக்கியதற்கு அவருக்கு பாராட்டுக்கள்கூட தாராளமாக நாம்  தெரிவிக்கலாம்.

அதுமட்டுமல்ல மருத்துவர் ஹபீப் முகம்மது அவர்களை மருத்துவர் சயீத் என்று வேறு குறிப்பிடுகிறார். (ஞாநி உங்களுக்கு என்ன ஆகி விட்டது?)

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைக் கண்டு குழம்பிப்போன மக்களின் ஆள்மாறாட்டக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் நாகூர் ரூமி வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ:

“சென்ற 18.09.12 செவ்வாயன்று புதிய தலைமுறை டிவியில் “நேர்படப்பேசு” நிகழ்ச்சியில் பேசிய ஞாநி அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு, நான் இஸ்லாத்தை விமர்சனம் செய்ததற்காக ஜமாஅத்தார்களால் விலக்கி வைக்கப்பட்டிருந்தேன் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கே தெரியாமல் என்னை ஒரு ஜமாஅத் விலக்கி வைத்ததா?! பின் அவர் நண்பர் எச்.ஜி.ரசூலின் பெயருக்கு பதிலாக என் பெயரைச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. Slip of the tongue. பின்பு புதிய தலைமுறையைத் தொடர்பு கொண்டு ஞாநி சாரின் அலைபேசி எண் வாங்கி இன்று பேசினேன். நான் பெயரைச் சொன்னதுமே, அவர் தவறாக என் பெயரைச் சொல்லிவிட்டதாகவும், “புதிய தலைமுறை”க்கு அதைத் தெரிவித்து விட்டதாகவும் சொன்னார். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.

எனக்கு சங்கடமாகிவிட்டது. அவரது பெருந்தன்மையும் எளிமையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது இல்லாததால் ஆபிதீனின் கதைகளைத் தன் பெயரில் பிரசுரித்ததற்காக சில பல பொய்களை சாரு நிவேதிதா அண்ணன் சொல்லி பெயர் கெடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

தன் முகபுத்தகப் பக்கத்தில் இதுபற்றி சொல்லியிருப்பதாகவும், மன்னிப்புக் கேட்டிருப்பதாகவும் அவர் எனக்கு குறுஞ்செய்தியும் அனுப்பினார். அவர் தன் பக்கத்தில் இன்று எழுதியிருந்ததை உங்களுக்காக இங்கே இடுகிறேன். (என்னிடம் அலைபேசியில் பேசி முடித்த உடனேயே அவர் இந்த வேலையைச் செய்துவிட்டார். செய்துவிட்டு, உடனே அவர் பக்கத்துக்குப் போய்ப் பார்க்கும்படி எனக்கு மறு குறுஞ்செய்தியும் அனுப்பினார். பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்தான்.

இதோ  அவர் எழுதியது:

ஞாநி

ஒரு விளக்கம்: : செப்டம்பர் 18 செவ்வாயன்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்கரின் படத்துக்கான கண்டனங்கள் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டேன். படத்தைக் கடுமையாகக் கண்டித்தேன். அந்தப் படமும் அதை எடுத்தவர்களும் நாம் பொருட்படுத்துவதற்கான தகுதி கூட இல்லாதவர்கள். இதில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் முதல், வெளிநாட்டு அரசியல், எகிப்தில் உள்நாட்டு அரசியல், கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சி எல்லாம் பொதிந்திருப்பது பற்றி சொன்னேன். அதே நேரத்தில் ஒரு பகுத்தறிவாளன் நிலையிலிருந்து எப்படி எல்லா மதங்களிலும் அடிப்படை வாதத்தை உணர்ச்சியை வெறியை ஊக்குவிக்கிற குருமார்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் பேசினேன். இழிவுபடுத்தல்தான் தவறு; விமர்சனங்களை ஏற்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற இஸ்லாமியமார்க்க அறிஞரான மருத்துவர் சயீத் சொன்னார். ஜமாத் போன்ற அமைப்புகள் பெரும்பாலும் அடிப்படைவாத மத குருமார்களின் அதிகாரத்தில் இருப்பதால், விமர்சிப்பவர்களை மத விலக்கம் செய்வது நடப்பதை சுட்டிக் காட்டினேன். எழுத்தாளர் நாகூர் ரூமி அவ்வாறு விலக்கப்பட்டார் என்று தவறாக சொல்லிவிட்டேன். நான் சொல்ல நினைத்தது ரசூலின் பெயரை. தவறாக ரூமியின் பெயரை சொல்லிவிட்டேன். அதற்காக ரூமியிடமும் ரசூலிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத நாகூர் ரூமியின் பெருந்தன்மையும், மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஞாநியின் பெருந்தன்மையும் நம்மையும் பெருந்தன்மையாக அவர்களை “ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!” என்று புகழ வைக்கிறது.

அதெல்லாம் போகட்டும் ஜாகிர் நாயக் போல பிறமதத்தினரின் கேள்விகளுக்கெல்லாம் “மானுட வசந்தம்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிவுபூர்வமான விளக்கங்கள் அளிக்கும் நம் காயல் பட்டினம் காக்கா டாக்டர் K.V.S.ஹபீப் முகம்மது அவர்கள் இந்நிகழ்ச்சியில் தன் நிலைபாட்டை சரியாக எடுத்துரைக்கவில்லை என்ற ஆதங்கம் இஸ்லாமிய சகோதரர்களுக்கிடையே நிலவுகிறதே!

அதுதான் நாம் முன்னமே சொல்லி விட்டோமே, “Even Homer sometimes nods” என்று. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எச்.ஜி.ரசூலை அவரது ஊரின் ஜமாஅத்தார்கள் ஊர்விலக்கம் செய்து வைத்தது உண்மைதான். ஏன் ஊர்விலக்கம் செய்து வைத்தார்கள்? என்ற காரணத்தையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? “வந்துதிக்காத ஒர் இனத்தின் நபி” – என்ற அவரது அரை குறை அறிவுக் கவிதை பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது. அந்த கவிதைதான் இது:

பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது
ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்
நபிமார்களென்று.
திருகுரான் காட்டியது
கல்லடியும் சொல்லடியும் தாங்கி
வரலாறாய் மாறியது
இருபத்தைந்து நபிமார் என்று.
ஆதம் நபி…அய்யூப்நபி..
………… ………
ஈசாநபி…மூசாநபி…
இறுதியாய் வந்துதித்த
அண்ணல் முகமது நபி…
சொல்லிக் கொண்டிருந்த போதே
செல்லமகள் கேட்டாள்…
இத்தனை இத்தனை
ஆண் நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?

எச்.ஜி.ரசூல் ஒரு நல்ல அறிவாளி. நல்ல கவிஞர். நல்ல சிந்தனையாளர். இஸ்லாத்தை அரை குறையாக தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு எச்.ஜி.ரசூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 – அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி : அசிங்கமும் எதிர்வினையும்

 

Tags: , , , , ,

“நீயா நானா”வில் நாகூர் ரூமி


 

Tags: , , ,

இஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி


(“கவிதையா? ஊ..ஹூம். மூச்.. கூடாது” என்று சில முல்லாக்களும், “வேண்டாம்பா.. அது தரித்திரம்” என்று என் பெற்றோர்களும், “கவிதை இஸ்லாத்திற்கு எதிரானது” என்று சில தவ்ஹீத் நண்பர்களும் எனக்கு அறிவுறுத்த, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நான் முழி பிதுங்க, என் நண்பன் நாகூர் ரூமியின் கட்டுரை எனக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது. எனக்கு ஆபத்து வந்த தக்க சமயத்தில் என்னை இழிச்சொல்லிலிருந்து காப்பாற்றிய நண்பனைப் பார்த்து “A friend in need is a friend indeed” என்று பாராட்டத் தோன்றுகிறது – அப்துல் கையூம்)

மனிதனையும் படைத்து
அவனுக்கு திருக்குர்னையும் அருளி
அதில் “கவிஞர்கள்” ( சூரத்துஸ் ஷ¤அரா) என்று
ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து
கவிஞர்களை கண்ணியப் படுத்திய
பிரபஞ்ச மகா கவியாகிய
இறைவனுக்கே புகழனைத்தும்.

இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஒரு கம்பன், காளிதாசன், மெளலானா ரூமி, உமர் கய்யாம், ஹகீம் சனாய், அல்லாமா இக்பால், காலிப், தாகூர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நம்மில் பலர் இன்று புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் பலர் நாடறியப் பட்டவர்களாக, ஏன் உலக அளவில் அறியப்பட்டவர்களாகக்கூட இருக்கின்றனர். அறியப்பட வேண்டிய பலர் அறியப்படாமல் கிடப்பதும் வேறு சிலர் தேவைக்கு அதிகமான புகழையும் விமர்சனத்தையும்கூட சம்பாதித்துக் கொண்டவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் கவிதை என்றாலே இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்று என்று ஒரு கருத்து இருப்பதை பலருடன் பேசியதிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.

கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளை அவ்வப்போது எழுதுகின்ற பழக்கம் கொண்டவனாக நானும் இருப்பதால் எனக்கு அது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. உண்மையிலே இஸ்லாம் கவிதைகளை தரிக்கவில்லையா? தரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்காமலாவது இருக்கிறதா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன.

திருக்குர்-ஆனும் ஹதீதும் கவிதைகளை எதிர்ப்பதாக சொல்லப்பட்ட தகவல்கள் என்னை பயமுறுத்தின. எனவே நான் அது பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளப் புறப்பட்டேன். என் பயணத்தில் நான் கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

திருக்குர்ஆனும் ஹதீதுகளும் கவிதைகளை எதிர்க்கின்றனவா? முதலில் இந்தக் கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திருக்குர்னிலே கவிஞர்கள் என்ற 26வது அத்தியாயத்தின் வசனங்கள் 224 முதல் 226 வரை கவிஞர்களுக்கு எதிராகப் பேசுகின்றன :

224 : கவிஞர்கள் – அவர்களை வழி கெட்டவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.

225 : நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் ( மனம்போன போக்கில்) திரிகிறார்கள் என்பதை நீர் பார்க்கவில்லையா?

226 : இன்னும் நிச்சயமாக அவர்கள் (சொல்வன்மையினால்) தாங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) கூறுகின்றனர்.

மேற்காணும் மூன்று வசனங்களும் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் எதிரானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்பதை எழுதாத விதியாகக் கொண்ட கவிதைகளுக்குத்தான் இது பொருந்தும்.

ஏனென்றால் இந்த வசனங்கள் மக்காவில் அருளப்பட்டபோது என்னைப்போலவே பயந்தும் குழம்பியும் போன மக்காவின் தலைச் சிறந்த முஸ்லிம் கவிஞர்களாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, க’அப் இப்னு ஜுஹைர், ஹஸ்ஸான் இப்னு தாபித் கியோர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டனர்.

பெருமானர், அவர்களைத் தேற்றி இவ்வசனங்கள் அவர்களைப் போன்ற உன்னதமான கவிஞர்களுக்குப் பொருந்தாது என்றும் பொய்யை அழகாகப் புனைந்து கூறுபவர்களையும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தவர்களையும்தான் இவ்வசனங்கள் சாடுகின்றன என்றும் நல்ல கவிஞர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்றும் சொல்லி அடுத்த வசனத்தையும் ஆதாரம் காட்டி ஆறுதல் சொல்கின்றனர் :

227 : ஆனால் ஈமான் கொண்டு நற்காரியங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழிவாங்கினார்களே அத்தகையோர்களைத் தவிர ( மற்றவர்கள் குற்றவாளிகள் ).

எனவே இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கவிதைக்கு எதிரான ஹதீதுகளையும் அணுகவேண்டும். அதோடு, பெருமானர் ஒரு தீர்க்க தரிசியே அன்றி ஒரு கவிஞரல்ல என்ற வசனத்தையும் (சூரா ஹக் 69:41) ஒரு கவிஞன் என்பவன் தீர்க்கதரிசியைப் போல இறையருள் பாலிக்கப்பட்டவன் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிற்க, கவிதைக்கு தரவாக இஸ்லாமிய வரலாற்றில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கப் புகுந்தால் அங்கே வியப்பூட்டும் தாரங்களும் நிகழ்வுகளும் கொட்டிக்கிடக்கின்றன !

யார் மகா கவி?

ஒரு முறை நான் என் பள்ளிக்கூட தமிழாசிரியரிடம் மகாகவி என்றால் யார்? ஏன் கம்பன், பாரதியார் இவர்களை மட்டும் மகாகவி என்று சொல்கிறோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.

மகாகவி என்று சொல்லப்பட்டவர்கள் யோசித்து கவிதை எழுதிக்- கொண்டிருக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களிடமிருந்து கவிதை கொட்டியது. அருவிபோல பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் நாமாக இருந்தால் ஓடிப்போய் தூக்குவோம். ஆனால் பாரதி அதுமட்டும் செய்ய மாட்டான். ” ஓடி விளையாடு பாப்பா” என்று உடனே பாட்டும் பாடிவிடுவான்.

வீட்டுக்கு சமைக்க கஷ்டப்பட்டு வாங்கி வரும் அரிசியை காக்கைக்கும் குருவிகளுக்கும் போட்டுவிட்டு உடனே “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடுவான்.

அதனால்தான் அவன் மகாகவி என்றார். அந்த விளக்கம் எனக்கு சரியானதாகவே பட்டது.

உண்மைதான். ஒரு கவிதை எழுத நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?!

இஸ்லாமிய வரலாற்றின் மகாகவிகள் இஸ்லாத்தில் கவிதையின் இடத்தைப் பார்க்கப் புகுவோமானால் அதன் வரலாற்றில் நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்துக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று அங்கே மகா கவிகள் மலிந்து கிடந்தார்கள் என்பது !

ஆம், என் ஆசிரியர் மாகாகவிக்கு சொன்ன வரையறையை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் சொல்ல முடிகிறது !

ஒரு சின்ன உதாரணம் குஸா குலத்தைச் சேர்ந்த இப்னு சலீம் என்பவர் பெருமானாரிடம் வருகிறார். தமது குலத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் சொல்லிக்காட்டி பெருமானாரின் பாதுகாப்பைத் தேடுவதே அவரது நோக்கம்.

பெருமானாரை அவர்களது பள்ளிவாசலில் சந்திக்கும் அவர், மனதை உருக்கும் விதமாக தங்களது நிலையை விளக்கி ஒரு கவிதை பாடுகிறார் !

எனக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. துயர உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு மனிதன் இருக்கும்போது அவனால் அழவோ புலம்பவோ மெளனமாக இருக்கவோதான் முடியும் என்று நான் அறிவேன்.

ஆனால் வரலாற்றில் இங்கே, கல்வியறிவு இல்லாத ஒரு மனிதன் அந்த மாதிரியான கட்டத்தில் கவிதை பாடியுள்ளான் ! கவிதை புனையக்கூட இல்லை ! அப்படியென்றால் என் தமிழாசிரியரின் வரையறைப்படி அரேபியர் அனைவருமே மகாகவிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை !

அரேபிய நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த அன்றாட அற்புதங்களில் இதுவும் ஒன்று ! ஒரு வகையில் அரேபிய நாட்டின் வரலாறு கவிதையின் வரலாறாகவே உள்ளது.

வீரர்களை விட கவிஞர்களுக்கே மக்கள் அதிக மதிப்பு கொடுத்தனர். அரேபியர்களின் கலாச்சாரத்தில் இருந்து கவிதை பிரிக்க முடியாத ஒரு அடிப்படையான கூறாக உள்ளது. கவிதை அந்த காட்டரபிகளின் கூடப் பிறந்தது. அதன் காரணம் அரபி மொழியின் கவிதைத் தன்மையா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பது இப்போது நமது ஆராய்ச்சிக்கு உரிய விஷயமல்ல.

பொய்யான கவிதைகளைச் சாடும்போதுகூட இறைவன், “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்..” என்று ஓர் அழகான கவிதையை அல்லவா சொல்கிறான் !

கவிதையை அரேபியர்கள் “அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்” (ஸிஹ்ர் ஹலால்) என்றே வர்ணித்தனர். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தலைச்சிறந்த ஊடகமாக கவிதையை அரபிகள் கண்டனர்.

கவிஞன் என்பவன் ஜின் அல்லது ஷைத்தானால் தூண்டப்பட்டே எழுதுகிறான் என்று அவர்கள் நம்பினர். ஒரு முழுமையான மனிதனுக்குரிய அடையாளமாக மூன்று விஷயங்கள் இஸ்லாத்தின் வரலாற்று ரீதியான வருகைக்கு முந்திய அறியாமைக் காலத்தில் அறியப்பட்டன.

அவை: கவிதை, அம்பெய்தல், குதிரை ஏற்றம் ஆகியவையே என்று அரேபியர்களின் வரலாறு என்ற நூலில் (The History of the Arabs) அதன் ஆசிரியர் ·பிலிப் கே ஹிட்டி கூறுகிறார்.

அரேபிய இலக்கியமே கஸீதா என்று பொதுவாக அறியப்பட்ட, அழைக்கப்பட்ட கவிதையிலிருந்து ஊற்றெடுத்துப் பிறந்ததுதான். அரபிகளின் கலாச்சார சொத்தாக இருந்தது கவிதை. கவிஞர்கள் தங்கள் புகழையும் கீர்த்தியையும் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஆண்டு தோறும் துல்காயிதா மாதத்தில் கூடும் உக்காஸ் என்று சொல்லப்பட்ட சந்தையைப் பயன் படுத்திக்கொண்டனர்.

அப்போது நடைபெறும் கவிப்- போட்டிகளில் ஒவ்வொரு குலத்தின் கவிஞரும் தமது வீரம், ஈகை, மற்றும் மூதாதையர்கள் பற்றி பெருமையாகவும் விபரமாகவும் கூறுவர்.

போர்க்களத்தில்கூட வீரர்களின் வாட்களின் கூர்மைக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக கவிஞர்களின் நாக்கு இருக்கவில்லை. அந்தக்கால அரபிகள் மனிதர்களின் அறிவை அவர்களின் கவிதையை வைத்தே அளந்தனர். தனது சமுதாயத்தின் வரலாற்று சிரியனாகவும் விஞ்ஞானியாகவும் அவர்கள் கவிஞனையே கண்டனர். அரேபியா “கவிஞர்களின் தேச” மாகவே இருந்தது.

ஆறு வகையான கவிஞர்கள்

வரலாற்று அறிஞர்கள் அரேபிய கவிஞர்களை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.

1. அல் ஜாஹிலிய்யூன்.

இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்து கவிஞர்கள். ஜுபைர், தரா·பா, இம்ரவுல் கய்ஸ், அம்ரிப்னு குல்சும், அல் ஹாரிது, அந்தாரா போன்ற மூத்த கவிஞர்கள்.

2. அல்முஹ்ஜரமூன்.

அறியாமைக் காலத்தில் பிறந்து பின்பு இஸ்லாத்தைத் தழுவிய கவிஞர்கள். லபீத், போன்றவர்கள். இவர்களைப் பற்றி பல ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ளது.

3. அல்முதகத்திமூன்.

இஸ்லாத்துக்கு வந்தபெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். ஜரீர், ·ப்ரஸ்தக் போன்றவர்கள்.

4. அல்முவல்லதூன்.

முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள். பஷார் போன்றவர்கள்.

5. அல் முஹ்திசூன்.

மூன்றாவது தலைமுறையின் முஸ்லிம் கவிஞர்கள். அபூ தம்மாம், புஹ்தரி போன்றவர்கள்.

6. அல் முத’ஆஹிரூன்.

ஐந்துக்குப் பிறகு வரும் எல்லாக் கவிஞர்களும்.

மூன்று நான்கு ஐந்தாவது பிரிவில் உள்ளவர்களை முறையே சஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப’அத் தாபியீன்கள் காலத்தோடு பொருத்திப் பார்க்க இயலும்.

முஅல்லகாத் என்பது என்ன?

அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை க’அபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்கவிடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயர். அதுவும் சாதாரணமாக அல்ல. தங்கத்தில் எழுதி ! இப்படி எழுதி தொங்கவிடப்பட்ட தங்கக் கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

ஏழு பேருடைய கவிதைகள் இந்த அந்தஸ்தைப் பெற்றன.

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பிரிவில் முதல் இரண்டு பிரிவில் உள்ள கவிஞர்கள்தான் அவர்கள். அதில் லபீத் மட்டும் இஸ்லாத்தில் இணைகின்ற பாக்கியம் பெற்றார்.

அவருடைய இறைவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடிய அசத்தியமே என்ற பொருள்படும் அலா குல்ல ஷையின் மா ஹலல்லாஹ¤ பாதில என்ற கஸீதா க’அபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டது மட்டுமல்ல அது பின்னால் பெருமானாரிடம் “உண்மையைச் சொன்ன கவிஞர்களிலேயே லபீத் மிகச்சிறந்தவர்” என்ற புகழுரையையும் சம்பாதித்துக் கொண்டது.

கவிதையின் வலிமை இஸ்லாம் மெல்ல பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் எதிரிகள் வன்முறையிலும் வாள், அம்புகளைக் கொண்டு மட்டும் எதிர்க்கவில்லை. கவிதைகளைக் கொண்டும் கடுமையாக எதிர்த்தார்கள்.

மதினாவில் அவ்ஸ் கோத்திரத்தாரில் பெருமானாரை எதிர்ப்பவர்களில் ஒருவரான மர்வான் என்பவருக்கு அஸ்மா என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் கவிதைகள் புனைவதில் கெட்டிக்காரி. அன்சாரிகள் அறிவு கெட்டு அந்நியர் ஒருவரின் பேச்சில் மயங்கி தங்கள் மக்களை பத்ரு போரில் காவு கொடுத்து விட்டார்கள் என்ற பொருள்படும் கவிதை பாடினாள்.

அந்த கவிதையை மக்கள் பலரும் பாடக்கேட்ட ஒரு முஸ்லிம் ஆத்திரமடைந்து அஸ்மாவைக் கொலையே செய்துவிட்டார் !

ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட கவிதைகளையும் கவிஞர்களையும் பெருமானார் வெறுத்ததற்கு இதுவே முக்கியமான காரணம்.

” கவிதையால் நிரம்பிய வயிறைவிட கெட்டுப்போன உணவால் நிரம்பிய வயிறே பரவாயில்லை.” என்று பெருமானார் சொன்னதையெல்லாம் எதிர்ப்பான காலகட்டத்தின் ஒளியில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

க’அப் இப்னு ஜுஹைர் என்ற கவிஞரைக் கண்டவுடன் கொல்லும்படி பெருமானார் உத்தரவிட்டிருந்தார்கள் என்றால் கவிதை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது போதுமானது.

பின்னாளில் இதே ஜுஹைர்தான் பானத் சுத் என்ற புகழ் பெற்ற புகழ்ப்பாடலான முதல் புர்தாஷரீ·பை பெருமானார்மீது பாடி அவர்களின் போர்வையையும் பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதினாவின் க’அப் இப்னு அஷ்ர·ப் என்ற புகழ் பெற்ற கவிஞன் மக்கா சென்று பாடிய முஸ்லிம் விரோத கவிதைகளுக்கு எதிராக எதிர்ப்பாட்டு புனையுமாறு பெருமானார் ஹஸ்ஸானுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு முறை மதினாவில் பெருமானாருக்கும் பனூ தமீம் கூட்டத்தாருக்கும் நாவன்மை, கவித்திறமை இவைகளில் போட்டி நடந்தது. பனூ தமீம் சார்பாக அல் ஜிப்ரிகான் இப்ன் பத்ரு என்பவர் தம் பாட்டுத்திறமையைக் காட்டினார். பெருமானார் சொன்னதன் பேரில், ஹஸ்ஸான் முஸ்லிம்கள் சார்பாக எதிர்ப்பாட்டுக்கள் பாடி பதிலளித்து வென்றார்.

ஹஸ்ஸான் கவிதை பாடுவதற்கென பெருமானரின் பள்ளிவாசலில் தனி மேடையே அமைக்கப்பட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் !

அவருடைய கவிதைகளுக்கு ரூஹ¤ல் அமீன் ஜிப்ரீல் (அலை)அவர்களைக் கொண்டு உதவி புரியுமாறு பெருமானார் இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் !

இந்த மாதிரியான காலகட்டங்களில்தான் ” கவிதை நல்லதெனில் நல்லது கெட்டதெனில் கெட்டது” என்றும் ” சில கவிதைகளில் ஞானம் உள்ளது” என்றெல்லாம் பெருமானார் சொல்லியுள்ளார்கள்.

போர்க்களங்களில் கவிதை

கவிதை போர்க்குணம் கொண்டதாக இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய வரலாற்றில் பல போர்க்களங்களோடு அது தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக போர்க்களங்களில் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக வட்டப்பறையடித்து பாடல்கள் பாடும் பெண்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாயிருந்தது.

பத்ரு யுத்தத்திற்காக அபூஜஹ்ல் திரட்டிக் கொண்டு வந்த படையினருக்கு உற்சாகமூட்ட இத்தகைய பெண்கள் சிலரும் உடன் கிளம்பினர். உஹதுப் போரில் அபூசு·ப்யானின் மனைவி ஹிந்தாவின் தலைமையில் வந்திருந்த பெண்கள் தம்பூர் என்ற இசைக்கருவி இசைத்து, வட்டப்பறை முழக்கி டிப்பாடி வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.

அகழ்ப்போரில் அகழ் தோண்டும்போது களைப்பு மறக்க முஸ்லிம்கள் இறைவனின் புகழ்பாடி அருள்வேண்டும் பண்களை இசைத்தவர்களாய் அனைவரும் பணியைத் தொடங்கினர். கைபர் சண்டையின் போது படையினருக்கு உற்சாகமூட்டும் போர்ப்பரணி ஒன்றை புனையுமாறு மிர் இப்னு அல்கமா என்பவரை பெருமானார் பணித்தார்கள்.

ஹ¤னைன் போரில் கிடைத்த பங்குப் பொருள்களில் திருப்தியுறாத அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்ற கவிஞர் பெருமானார் மீது குறைப்பட்டு ஒரு கஸீதா பாடினார். அவர் நாக்கைத் துண்டிக்குமாறு பெருமானார் உத்தரவிட, அதன் உட்பொருளை உணர்ந்த அலியார் அவர்கள் அவருக்கு மேலும் 60 ஒட்டகங்களை கொடுத்து அவரை சமாதானப் படுத்தினார்கள். நூறு ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பத்ருப் போருக்குப் பிந்தைய மக்காவின் இரவுகள் யாவும் மர்ஸிய்யா (எனப் பட்ட இரங்கற்பா) க்களால் நிரம்பியிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

பெருமானாரின் கவிதை ஒரு யுத்தத்தில் காயம் பட்ட தன் கால் விரலைப் பார்த்து பெருமானார்

ஹல் அன் தி இல்லா இஸ்ப’உன் தமீத்தி
வ ·பீ சபீலில்லாஹி மா லகீத்தி

ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான் ஆனால்
இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

(தோராயமான தமிழாக்கம் எனது ) என்று பாடினார்கள்.

இந்த வரிகள் சல்மா இப்னு அம்ரல் அன்சாரியின் கவிதை என்பதாக புகாரி ஷரீ·பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Dictionary of Islam தொகுத்த தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் யாருடைய கவிதை என்று சொல்லாமலே விட்டுவிட்டார்.

படிப்பவர்களுக்கு அது பெருமானாரே புனைந்த கவிதை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. எனினும் கவிதை புனைவது பெருமானாரின் ஆளுமைக்கு ஏற்புடையதல்ல என்பதை திருக்குர்’ஆனிலிருந்தும் ஹதீதுகளிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களில் எழுதியவர்களின் அறியாமை அல்லது உள்நோக்கம் இவற்றை நாம் உணர்ந்து கொள்ளாமல் படித்துவிடக்கூடாது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஏன், பெருமானார் ஒரு கவிஞராக இருந்தால் என்ன கேவலமா என்று கேட்கக்கூடாது. காரணம் ஒரு தீர்க்க தரிசியின் அந்தஸ்தும் இலக்கும் மிக உயர்ந்தது. அந்த இலக்கை அடைய கவிஞர்களின் திறமையையும் உண்மையையும் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர அவர்களே கவிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

இறை விருப்பப்படி. பெருமானார் குடும்பத்தாரின் கவிதைகள் பெருமானாருக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்களிடம் குறைஷிகள் வந்து பெருமானாரைப் பற்றி முறையீடு செய்து எச்சரித்துவிட்டுச் சென்றபோது, அபூதாலிப் அவர்கள் ஹரம் ஷரீ·பின் சிறப்பு, வம்ச மேன்மை, பெருமானாரின் சத்தியம், சற்குணம் இவை பற்றி கவிதை பாடுகிறார்கள் !

கவிதையின் முடிவில் ” நாம் ஈமான் கொள்ளவில்லை எனினும் உயிர் மூச்சுள்ளவரை அவரை தரிப்போம்” என்று கவிதையை முடிக்கின்றார்கள்! ”

எங்கள் மனைவி மக்களை மறந்து, முஹம்மதுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம் “ என்பது அவர்களின் இன்னொரு கஸீதா !

அபூபக்கர் சித்தீக் அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது, கவிதை இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய அன்னை ஆயிஷா அவர்கள் ஒரு ஈரடிப்பாடலை தம் தந்தையாரைப் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைக் கேட்டு கண் திறந்த அபூபக்கர் அவர்கள் ” இவ்வளவு புகழ்ச்சி பெருமானாருக்கு மட்டுமே உரியது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

இருள் சூழ்ந்த இரவிலும் ஒளி விளக்கைப் போல மின்னுகிறது அண்ணலாரின் நெற்றி என்ற பொருள்படும் கஸீதாவை பெருமானாரின் மறைவுக்குப் பிறகு பாடியுள்ளார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

இந்த ரீதியில் அன்னை ச·பிய்யாவும் கவிதைகள் புனைந்துள்ளனர். ச·பிய்யா என்ற பெயருடைய பெருமானாரின் அத்தை ஒருவரும் மர்ஸிய்யா பாடல்களை எழுதியுள்ளார்கள். “இந்த உலகமே இருளடைந்து விட்டது” என்று தொடங்கும் இரங்கற்பாவை உமர்(ரலி) அவர்களும் உதுமான்(ரலி) அவர்களும் பாடியுள்ளனர். ”

அழு என் கண்களே” என்று தொடங்கும் கவிதையை ஹம்ஸா, அபூபக்கர், அப்பாஸ் போன்றோர் பாடியுள்ளனர். ”

துன்பத்தின் அளவுக்கு கண்ணீர் வருமானால் மேகத்தின் மழையை அது மிஞ்சிவிடும்” என்பதாக அலி அவர்கள் கவிதை பாடினர்.

” மிம்பக்தி மெளதில் முஸ்த·பா” என்று தொடங்கும் ஈரடிப்பாடலையும் அலியார் இயற்றியுள்ளனர்.

அஹ்மதுவின் கல்லறையின் நறுமணம் நுகர்வோருக்கு வேறு மணம் தேவையில்லை இவ்வாழ்வில் என்றும் பகலெல்லாம் இரவாகிவிடும் ( முஹம்மதுவைப் பிரிந்த என் ) வேதனைகளை பகல்மீது பொழிந்தால் என்றும் அன்னை ·பாத்திமா அவர்கள் பெருமானார் மீது கவிதை பாடியுள்ளார்கள்.

இவையெல்லாம் பெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் சொல்லப்பட்ட இரங்கற் பாக்கள்.

துன்பத்தின் உச்சியிலும் வேதனைகளின் விளிம்பில் கூட அவர்களுக்குக் கவிதை வந்திருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக இன்னுயிரை விட்ட தியாகியாவார்கள். அவர்கள் உயிர் பிரிந்து கொண்டிருந்த சமயம் கடைசிவரை கவிதைகள் பாடிக்கொண்டே இருந்தார்கள்!

குபைப் இப்னு அதீ (ரலி) என்று ஒரு நபித்தோழர். இஸ்லாத்திற்காக எதிரிகளால் தூக்கில் போடப்பட்ட முதல் முஸ்லிம். தன் இறுதிசையாக தொழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அனுமதித்தவுடன் ஒளுச்செய்துவிட்டு சுருக்கமாக தொழுகையை முடித்துக்கொண்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு, ” நான் வெகு நேரம் தொழ விரும்பினாலும், மரணத்திற்கு பயந்து இறுதி நபியின் தோழர் வெகு நேரம் தொழுதார் என்று குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா” என்றார்களாம்.

இவர்களும் உயிர் பிரியும் தருவாயில் கவிதை பாடிக்கொண்டிருந்தார்கள் !

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் யஸீதுக்குப் பிறகு கலீ·பாவாக இருந்தவர்கள். அபூபக்கர் சித்தீக் அவர்களின் பேரர் ஜுபைரின் மகன். ஹஜ்ஜாஜோடு ஹரம் ஷரீ·பில் நடந்த சண்டையின் போது அவர்கள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தபோது கவிதை பாடினார்கள் !

மு’வியா(ரலி) அவர்கள் கலீ·பாவாக இருந்த காலத்தில் உடம்புக்கு முடியாமல் இருந்தபோது கண்ணுக்கு சுர்மாவும் எண்ணெயும் இட்டுக் கொண்டு ரோக்கியமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தில்தான் மக்களைச் சந்திப்பார்களாம்.

அப்போது அந்த சூழ்நிலை பற்றி கவிதை பாடுவார்களாம்! அதோடு அவர்களின் உடலைக் கழுவிக்கொள்ள உதவி செய்யும் தன் மகள்களைப் பற்றியும் கவிதை பாடுவார்களாம் !

ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் தாம் கொலை செய்யப்படுவோம் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தார்கள். பள்ளி வாசலுக்குச் செல்வதற்காக கஷ்டப்பட்டு எழுந்தபோது மரணம் பற்றியும் அதை துணிச்சலாக சந்திப்பதைப் பற்றியும் கஸீதா பாடினார்கள் !

இமாம் ஷா·பி’ஈ அவர்களை சித்ரவதை செய்தபோது, லுன் நபிய்யி தரிய்யத்தி, வ ஹ¤ம் இலய்ய வஸீலத்தீ எனது சேமிப்பெல்லாம் அருமை நபியின் வழித்தோன்றல்கள்தான் என்னும் பொருள்படும் கவிதையினைப் பாடினார்கள் !

இமாம் நஸீமி (ரஹ்) அவர்களை தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு அவர்கள் தோலை உரித்துக் கொன்றனர் பாவிகள். அப்போது ஏகத்துவ ஞானம் பற்றிய 500 பாடல்களைப் பாடி அவர்கள் உயிர் துறந்தார்கள் !

சூ·பி அபூபக்கர் ஷிப்லி அவர்கள் ” நீ வாழும் வீட்டில் ஒளியேற்ற மெழுகுவர்த்தி தேவையில்லை” என்று கவிதை பாடிக்கொண்டே உயிரை விட்டார்கள் !

இமாம் ஜா·பர் சாதிக் (ரலி), முஹ்யித்தீன் அப்துல் காதிரி ஜெய்லானி (ரலி), ராபியதுல் பஸரியா போன்ற அனேக இறை நேசர்கள் கஸீதாக்களில் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது கவிஞர்கள் அல்லாதவர்கள் !

முடிவுரை

இஸ்லாமிய வரலாறு கவிதைகளால் நிரம்பியுள்ளது. கவிஞர்கள் புகழும் செல்வாக்கும் செல்வமும் கொண்டவர்களாக அரசர்களைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த உமர் இப்னு அபீ ராபியா என்ற காதல் கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்ற கவிஞருக்கு 70 அடிமைகள் இருந்தனராம் ! சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்ற கூற்று இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை பொய்யாகிப் போனது !

அரேபிய இஸ்லாமிய வரலாற்றில் அநேகம் பேர் கவிதைகள் பாட முடிந்தவர்களாகவோ, அதாவது மகாகவிகளாகவோ, அல்லது குறைந்த பட்சம் கவிதைகளை கேட்பதில், உற்சாகப் படுத்துவதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருந்துள்ளனர்.

கொடுங்கோலன் என்ற பெயரை வாங்கிக்கொண்டுவிட்ட யஸீது கூட கவிதைகள் இயற்றுவதில் சிறந்து விளங்கினார் ! பல லட்சம் பேரை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பதுபோல ! ஆனாலும் உண்மை !

பெருமானரின் காலத்தை கவிதைகளுக்கும் பொற்காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிலே எஞ்சிய பொற்துகள்கள் உலகமுடிவு நாள் வரை பல திசைகளில் இருந்தும் பல மொழிகளிலும் நம்பிக்கையின் மற்றும் மனிதாபிமானத்தின் கடைசி பருக்கை இருக்கும் வரை மின்னிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கும் பிரபஞ்ச மகா கவியாகிய எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக !
இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 24

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 15

கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை – 20

 

Tags: , , , , ,

என் ஊர் – நாகூர் ரூமி


 

Tags: , ,

சொல்லாத சொல்


 

“சொல்லாத சொல்” என்ற நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதி ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது.

வெறும் சதை, இரத்தம், எலும்பு, இவைகளால் படைக்கப்பட்டவன்தானா மனிதன்? நிச்சயமாக இல்லை. இவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகள், பகுத்தறிவு போன்ற குணங்கள் அவனை ஜடப்பொருளை விட்டு வேறுபடுத்திக் காட்டுகிறது.

வெறும் கற்கள், சிமெண்ட், இரும்புக்கம்பிகள் இவற்றால் கட்டப்பட்டதுதானா வீடு? ஆங்கிலத்தில் “House” “Home” இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. “Home” என்பதில் பந்தம், பாசம், உறவு எல்லாமே கலந்திருக்கிறது. “East or West Home is the best” என்றுதான் பழமொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் “House” என்ற வார்த்தை கையாளப்படவில்லை.

கவிஞர் ரூமி கட்டிடங்கள் என்று கூறுவது அந்த உன்னத வீட்டைத்தான் என்று புலப்படுகிறது.

கற்களால் ஆனதே
கட்டிடங்கள்
என நினைத்திருந்தேன்
இடிவதற்கு முன்

என்று கூறுகிறார் கவிஞர். இடிந்த பிறகுதான் புரிகிறது வெறும் கற்களுக்கும், இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இனம்புரியாத ஒரு ஈர்ப்பு, சொல்ல இயலாத ஒரு பிணைப்பு அந்த வீட்டோடு இணைந்திருக்கிறது என்று.

அந்தப் பிணைப்பு எப்படிப் பட்டது என்று அறிந்துக் கொள்ள வேண்டுமா?

குடும்பத்தைத் துறந்து, கடல் கடந்து வந்து, திரவியம் தேடுகிறானே பணியாளன்; அவனிடம் கேட்டு பாருங்கள்.

தன் பிறந்த நாட்டை விட்டு, பிறந்த வீட்டை விட்டு அடித்து துரத்தப் பட்டானே பாலஸ்தீனச் சகோதரன்; அவனைக் கேளுங்கள்.

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட தன் வீடு இருந்த இடத்தில் வெறும் இடிபாடுகளுக்கிடையே நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தானே பாதிக்கப்பட்டவன்; அவனிடம் விசாரித்துப் பாருங்கள்.

“வீடு” என்பதற்கு உண்மையான அர்த்தம் அவனுக்குத்தான் புரியும். இதைத்தான் கவிஞர் கூறுகிறார். மேலும்,

சொற்களால் ஆனதே
கவிதைகள்
என நினைத்திருந்தேன்
மெளனிப்பதற்கு முன்

என்று தன் கருத்தை வெளிப்படுத்துகிறார். கவிதை என்றால் என்ன?

“கருத்துக்களை கற்பனை நயத்தோடு எடுத்துக் கூறுவது கவிதை” என்கிறான் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி.

“இரவு பகலாக எண்ணங்கள் தொடருகின்றன. தேவி எழுதென்று சொன்னால் செவி சாய்த்து எழுதுவதே கவிதை” என்று பகர்கிறார் உயர்ந்த மனிதன் Long Fellow.

“உவமை அணிகளிலும் வருணனைகளிலும் விளையாடிக் காலங் கழிப்பவனல்ல கவிஞன். பிறர் அறிய முடியாத அருளாவேசத்தை விளக்குபவன்” என்றுரைக்கிறார் வால்ட் விட்மன்.

கவிதை என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. அதற்குப் பின்னால் எவ்வளவோ விடயம் இருக்கிறது. “சொல்லாத சொல்லை” சொன்ன நாகூர் ரூமிக்கே மொளனியாய் இருந்தபோது தெரியாது அவர் சொல்ல வந்த  விடயங்களுக்குப் பின்னால் இத்தனை விடயங்கள் இருக்கின்றதென்று. அடுத்த வரிகளைப் பாருங்கள்.

கதவுகளால் ஆனதே
வாசல்கள்
என நினைத்திருந்தேன்
திறப்பதற்கு முன்

என்கிறார். உதாரணத்திற்கு பள்ளிவாயிலை எடுத்துக் கொள்ளுங்கள். காண்பதற்கு அது ஒரு கட்டிடம். அதற்கு நிலையும் இருக்கிறது, வாசலும் இருக்கிறது, கதவும் இருக்கிறது.

இறைவனை வழிபடுவதற்கு உள்ளே சென்று தியானித்து இருக்கையில்தான் புரிகிறது, எப்படிப்பட்ட ஒரு ஆத்ம திருப்தி, மனச்சாந்தி, உள்ளத்தெளிவு கிடைக்கிறதென்று. கவிதையின் இறுதி வரிகள் இதோ:

இறகுகளால் ஆனதே
சிறகுகள்
என நினைத்திருந்தேன்
பறப்பதற்கு முன்

“முயற்சி திருவினையாக்கும்” என்று சொல்வார்கள். ஒருவன் முயற்சி செய்தால்தான் ஒரு காரியத்தில் வெற்றியடைய முடியும். இறகுகள் வேறு சிறகுகள் வேறு. இந்த வேறுபாட்டை எனது “போன்சாய்” கவிதை நூலில் கீழ்க்கண்டவாறு கவிதை வடித்திருந்தேன்.

வீழ்ந்தபின்தானே
இறகுகள்.. ?

சேர்ந்திருந்து
சீறிப் பாய்கையில்
நீங்கள் சிறகுகள்

நினைத்துப் பாருங்கள்

சோர்ந்து போய்
காதுகுடையும் நீங்கள்

ஒருகாலத்தில்
காற்றையே கிழித்தவர்கள்

என் கற்பனையோடு கவிஞர் ரூமியின் கற்பனையும் ஒத்துப் போகிறது. அல்லாமா இக்பாலின் கவிதை ஒன்று இப்போது நினைவில் வருகிறது.

“பஞ்சணை மெத்தையில் ஓய்வெடுத்துக்
கொள்ள விரும்பாதீர்கள்;
நீங்கள் பறந்து செல்லும் இராஜாளிப் பறவைகள்;
மலையுச்சியிலே உங்கள் கூடுகளை
கட்டிக் கொள்ளுங்கள்”

உயரத்தை எட்ட நினைக்கும் இளைய சமுதாயத்திற்கு இதைவிட நல்ல கருத்தை யாரால் சொல்ல முடியும்?

கவிஞர் ரூமியின் கூற்றும் இதுதான். சிறகுகள் பறப்பதற்கு மட்டுமல்ல. உயரத்தை எட்டுவதற்காகவும்தான்.

– அப்துல் கையூம்

 

நாகூர் ரூமியும் நானும்


பிரபலமானவர்களின் பெயரை நம்மோடு இணைத்துப் போட்டால் நாமும் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணம் எனக்கும் இல்லாமலில்லை.

இணையத்தில் சென்று “நாகூர்” என்று தட்டச்சு செய்து குதுகூலமாய் ‘கூகுளி’த்துப் பார்த்தால், நாகூர் தர்காவைவிட அதிகமான தகவல்கள் நாகூர் ரூமியைப் பற்றித்தான் காணக் கிடைக்கின்றன.

நாகூர் ரூமி, டிராயர் போட்டுக்கொண்டு (அண்ட்ராயர் அல்ல) அலைந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். அப்போது அவரது பெயர் A.S.முஹம்மது ரபி. அவரது தந்தை என் தந்தையின் ஆத்ம நண்பர். சாவன்னா என்று அன்போடு அழைக்கப்படும் அவர், நாகூர் கடைத்தெருவில் நடந்து வந்தால் ஏறெடுத்து பார்க்கத் தோன்றும். சடசடவென்று சலசலக்கும் ரெட்டைமூட்டு புதுக்கைலி உடுத்தி, “See through” பாரின் சட்டை, அரசியல்வாதியைப் போன்று தோளில் உல்லன் ஷால். அரும்பு மீசை. கையில் 555 சிகரெட் டின். பார்ப்பதற்கு இளம் வயது S.S.R. போன்று காட்சியளிப்பார். பெரியவனானதும் நாமும் இப்படித்தான் பந்தாவாக காட்சிதர வேண்டும் என்று அப்போது மனதில் நினைத்ததுண்டு.

ரபிக்கும் எனக்கும் சிறுவயதிலேயே ஓர் ஒற்றுமை உண்டு. ஆமாம். நாங்களிருவரும் ‘பாட்டிச் சொல்லைத் தட்டாத’ பிள்ளைகள்.

அது என்ன “நாகூர் ரூமி” என்ற புனைப்பெயர்? எனக்கு குழப்பம் என்றால் குழப்பம், அப்படியொரு குழப்பம். ரூமி என்றால் ரோம நகரத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ஜலாலுத்தீன் என்ற பெயரில் ஒரு மகா கவிஞர் இருந்தார். அவர் ரோம் நகரத்திலிருந்து வந்ததால் அவருக்கு ஜலாலுத்தீன் ரூமி என்று பெயர் வந்ததாக எங்கோ படித்த ஞாபகம்.

அப்படியென்றால் இவர் “நாகூரைச் சேர்ந்த ரோம நகரத்துக்காரர்” என்றல்லவா அர்த்தம் ஆகிறது. அப்ப இவர் ரோம நகரத்துக்காரரா அல்லது நாகூர்க்காரரா? – இது இன்னும் எனக்குத் தீராத குழப்பம்.

ஜலாலுத்தீன் ரூமியின் நினைவாக புனைப்பெயர் சூட்டிக் கொண்டாரா அல்லது ரூமிலேயே தங்கி உட்கார்ந்துக் கொண்டு நூல்கள் புனைந்துக் கொண்டிருப்பதால் ரூமி என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று விளங்கவில்லை.

எது எப்படியோ, இவர் ரூமில் உட்கார்ந்து எழுதும் நூல்கள் இன்று உலகம் முழுவதும் படிக்கப் படுகிறது, விமர்சிக்கப்படுகிறது என்பதே உண்மை. ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்று சொல்வதைப்போல இவரை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் எழுத்துலகம் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இவருக்கு முஹம்மது ரபி என்று பெற்றோர்கள் பெயர் வைத்ததற்கு காரணம் இவரும் இந்திப் பாடகர் முஹம்மது ரபியைப் போன்று பெரிய பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசையினாலும் இருக்கக் கூடும். ஆனால் இவரது குரல்வளம் என்னமோ லதா மங்கேஷ்கர் போலவே இருக்கிறது.

சென்ற முறை தாயகம் சென்றபோது இவரிடம் நான் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடி மகிழ, இவரால் என் சுமூகமான இல்லற வாழ்வில் ஒரு பெரிய குழப்பம் உண்டானதுதான் மிச்சம். இவரது குரல் ஒரு பெண்குரல் போல் இருப்பதினாலும், இவர் தொலைபேசியில் சற்று உரக்க பேசினதினாலும், அது என் மனைவியின் காதில் விழ “ஒரு பொம்பளைப் புள்ளைக்கூட மணிக்கணக்கா அப்படியென்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று பொரிந்து தள்ளி விட்டாள் என் இல்லத்தரசி.  உண்மையை அவளுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்கு தாவு கழன்று விட்டது. பத்தினி விரதனான நான் அன்று அரை பட்டினி.

இந்தக் கீச்சுக் குரலை வைத்துக் கொண்டு அவர் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ.காதரிடம் கர்னாடகச் சங்கீதம் கற்று ‘வர்ணம்’ வரை வந்ததை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவர் ‘நல்லி விருது’ வாங்கிய நாட்களை விட ‘பள்ளி விருது’ வாங்கிய நாட்களில் சுவராஸ்யம் அதிகம். பள்ளி நாட்களில் ‘பேஷாக் மாந்திர்” என்ற சன்ச்சல் பாடிய பாட்டைப் பாடி பரிசும் வாங்கியிருக்கிறார்.  பொருத்தமான கீச்சுக்குரல் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்று நினைத்துக் கொள்வேன். அந்த உச்ச ஸ்தாயி பாடலில் சன்ச்சலுடைய குரலும் பாகிஸ்தான் பெண் பாடகிகள் குரல் போல்தான் ஒலிக்கும்.

யார் செய்த புண்ணியமோ, நல்ல வேளை இவர் இஸ்லாமியப் பாடகராக ஆகவில்லை. ஆகியிருந்தால் இஸ்லாமிய இசையுலகிற்கு இன்னொரு K.ராணி கிடைத்திருப்பார்.

ஹரிஹரனை ரபிதான் எனக்கு அறிமுகப் படுத்தினார். அப்போது பாடகர் ஹரிஹரன் திரைப்படத்துக்குள் அடியெடுத்து வைக்காத நேரம். 1980-களின் தொடக்கத்தில் ஒரு கேசட்டை என்னிடம் கொடுத்து தமிழ்க்காரர் ஒருவர் எவ்வளவு இனிமையாக, குலாம் அலிக்கு நிகராக உருது கஸல்கள் பாடுகிறார் கேளுங்கள் என்று சிபாரிசு செய்தார். (மாண்டலின் வாத்தியத்தைக் ஓரளவுக் கற்றுக்கொண்டு நானும் இசை மேதையாக வரவேண்டும் என்று கனவுக் கண்டுக் கொண்டிருந்த காலமது)

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நாங்கள் ஒன்றாக பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவரும் நானும் மன்னார்புரம் “Birds Lodge’ மாணவர் விடுதியில் தங்கியிருந்தோம். தற்போது அவரது வலைப்பூவிற்கு “பறவையின் தடங்கள்” என்று பெயர் சூட்டியிருப்பது இதனால்தானோ என்னவோ.

ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் நானும் அவரும் இணைந்துதான் (சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்த) ஆங்கிலப் பேராசிரியர் யூசுப் சாரிடம் ட்யூஷன் படிக்கப் போவோம். எங்களிருவருக்கிடேயே நடக்கும் உரையாடல்களில் பெரும்பாலும் ஷேக்ஸ்பியர், மில்டன், கீட்ஸ், பைரன், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி இவர்கள்தான் வந்து தலைகாட்டி விட்டு போவார்கள். கம்பன், பாரதி பெரும்பாலும் வரமாட்டார்கள்.

(ஷேக்ஸ்பியரை – சேகப்பிரியர் என்றும், டென்னிஸனை – தேனிசையான் என்றும், வோர்ட்ஸ்வொர்த்தை – வார்த்தைப் பிரியன் என்றும், பைரனை – பைரவன் என்றும் என்று தமிழ்ப்படுத்தி அழைக்கும் தமிழார்வலர்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை)

என்னுடைய மற்ற நண்பர்கள் ரபியை ஒரு விநோதப் பிறவி போன்றே பார்ப்பார்கள். காரணம் அவர் அறிவுஜீவிகளின் லிஸ்டில் சேர்க்கப்படிருந்ததால். அறிவுஜீவி எனப்படும் ஜீவராசிகள் அதிகமாக பேச மாட்டார்கள். தனியொரு உலகத்தில் சஞ்சரிப்பார்கள். ஆர்ட் பிலிம்தான் பார்ப்பார்கள். (புரியுதோ இல்லையோ) இந்தி கஸல் கேட்பார்கள். புதுக் கவிதை எழுதுவார்கள். லா.ச.ரா. போன்றவர்களின் எழுத்துக்களை வாதிப்பார்கள். கையில் ஹெரால்ட் ராபின்சன் புத்தகம் வைத்திருப்பார்கள். ஜோல்னா பை ஒன்று தோளில் தொங்கும். செம்மறி ஆடுபோல் குஞ்சு தாடி இருக்கும். (ரபிக்கு முகத்தில் முடி வளர்த்தி குறைவு என்பதால் தாடி மிஸ்ஸிங்)

நாகூரில் ரபி, ஆபிதீன், அறிவழகன் (சாரு நிவேதிதா) நண்பர்களாக ஒன்றாகச் சுற்றுவார்கள்.

இவர் ஒரு பன்முகப் படைப்பாளி. பராக் ஒபாமா மட்டுமின்றி பர்வேஸ் முஷர்ரப் பற்றியும் எழுதுகிறார். கர்ம வீரரைப் பற்றியும் எழுதுகிறார் கம்பனையும் ஆராய்கிறார். தலாய் லாமாவைப் பற்றி எழுதுங்கள் என்றாலும் எழுதுவார்.

அது மட்டுமா? ஆங்கிலப்பாடம் நடத்துகிறார். புதுக்கவிதை எழுதுகிறார். இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்கிறார். தன்முனைப்பு நூல்கள் எழுதுகிறார். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுகிறார். போதாத குறைக்கு பாபா ராம்தேவ் ஆக மாறி “ஆல்ஃபா தியானம்” வேறு நடத்துகிறார். (ஷில்பா ஷெட்டி யோகா கற்றுக் கொடுக்கும்போது இவர் கற்றுக் கொடுத்தால் என்ன?)

நான் ஜமாலில் பட்டப்படிப்பு முடித்த காலத்தில் மற்ற நண்பர்களிடம் ஆட்டோ கிராப் வாங்கியதுபோல் இவரிடமும் வாங்கினேன். பிற நண்பர்கள் எல்லோரும் யாவும். “This page is Blue. Our friendship is True”,  “This Page is Yellow. You are a good fellow”, “This page is Pink. Truly I will think”  என்று ரைம்ஸ் எழுதிய நேரத்தில், ரபி மட்டும்

உன் நினைவுகள்
என மனதில்
போட்டோகிராப்பாய் பதிந்திருக்க

நீ ஏன் உன்
ஆட்டோகிராப்பை நீட்டுகிறாய்

என்று எழுதி இருந்தார். அப்போதே எனக்குத் தெரியும், இவர் ஒரு காலத்தில் வாசகர்கள் ஆட்டோகிராப் வாங்குமளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆவார் என்று. அது உண்மையாகி விட்டது.

 

நாகூர் ரூமி


22222222222222 888888888888888888 124 123 333333333333333333 Islam - book 66666666666666666666611111111111111 44444444444444444444

– அரவிந்த் –

thendral

நன்றி : “தென்றல்” – நவம்பர் 2009 

               
நெடுங்காலமாகவே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக, இஸ்லாமியரில் ‘சீறாப்புராணம்’ பாடிய உமறுப்புலவர், செய்யது அப்துல் காதர் லெப்பை, நயினா முகமது, சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஆகியோர் வரிசையில், வண்ணக் களஞ்சியப் புலவர் பரம்பரையில் வருபவர் ஏ.எஸ். முஹம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி. இவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியர். 1938ல் வெளியான ஜுனைதாவின் ‘காதலா கடமையா?’ நூலுக்கு டாக்டர் உவேசா முன்னுரை வழங்கியிருக்கிறார். ரூமியின் தாய் மாமா தூயவன் (அக்பர்) புகழ்பெற்ற எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் வசனகர்த்தா. மற்றொரு மாமா நாகூர் சலீம் பிரபலமான பாடலாசிரியர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். அந்த வகையில் ஓர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் நாகூர் ரூமி.

1980ல் கல்லூரிக் காலத்தில் ரூமியின் முதல் படைப்பு ‘கணையாழி’ இதழில் வெளியானது. ‘தமிழ் சில வட்டங்கள்’ என்ற அக்கட்டுரையைத்  தொடர்ந்து மீட்சி, மானுடம், சுபமங்களா, ஃ, கொல்லிப்பாவை எனச் சிறு பத்திரிக்கைகளிலும் குமுதம், குங்குமம், குமுதம் ஜங்ஷன்,  விகடன் போன்ற வெகு ஜன இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். குமுதம் டாட் காமில் வந்த ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்ற குறுநாவல் பரவலான கவனத்தைப் பெற்றது.

மொழிபெயர்ப்புகளில், மூலத்தை நகலெடுக்காமல் அதை உள்வாங்கிக்கொண்டு மறுபடைப்புச் செய்வது ரூமியின் தனிச் சிறப்பு. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளுக்குக் கிடைத்திருக்கின்றன.

தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற ‘குட்டியாப்பா’ இவரது மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்று. “குட்டியாப்பா ஒரு மகத்தான சாதனை என்றே கருதத் தோன்றுகிறது. பாத்திரத் தேர்வு, சம்பவத் தேர்வு எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகத் தோன்றுகிறதோ அதே அளவுக்கு தனித்துவமிக்கது” என்கிறார் அசோகமித்திரன். “அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த குறு நாவல்களில் ஒன்று ‘குட்டியாப்பா'” என்று நாவலாசிரியர் சுஜாதா இதனைப் பாராட்டியிருக்கிறார். இக்கதை நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்ஃபில் பட்டத்திற்காக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தின் முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறையிலும் இவரது சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. (அது ரூமி படித்த கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.)

‘அடுத்த விநாடி’ என்ற நூலின் மூலம் இலக்கிய உலகில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் தொடர்ந்து படைப்புலகின் பல தளங்களிலும் ரூமி தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். கவிதை, சிறுகதை, நாவல், மொழிமாற்றக் கவிதை, மொழிமாற்றச் சிறுகதை ஆகியவற்றுடன் இஸ்லாத்தைப் பற்றியும், சூஃபி தத்துவம், நாகூர் ஆண்டவர் வரலாறு எனப் பல ஆன்மீக, தத்துவ, வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளையும் தந்து தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். காமராஜரைப் பற்றி இவர் எழுதியுள்ள நூல் முக்கியமானது. தொடர்ந்து மாணவர்களுக்காக எழுதிய ‘ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

வண்ணநிலவனின் மழை என்ற சிறுகதையை The Rain என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பதுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் பல விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புகளில், மூலத்தை நகலெடுக்காமல் அதை உள்வாங்கிக்கொண்டு மறுபடைப்புச் செய்வது ரூமியின் தனிச் சிறப்பு. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளுக்கு கிடைத்திருக்கின்றன. எண்ணூறு பக்கங்களுக்கு மேலான ஹோமரின்
இலியட் இதிகாசத்தை ஆங்கிலம் வழியே தமிழில் மாற்றம் செய்ததற்காகச் சமீபத்தில் நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது இவருக்குக் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 27 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கும் ரூமி தன் எழுத்துலக அனுபவம் பற்றி “அனுபவம் என்பதே ஒரு விஷயத்தை உள்வாங்குவதுதான். அதற்கு உடல் தொடர்பிருக்க வேண்டியது ஒரு கட்டாயமில்லை” என்று கூறுகிறார்.

ஆம்பூரில் உள்ள மஸ்ஹரூல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் ரூமி, கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது மாணவர்களுக்கான சுய மேம்பாட்டுப் பயிற்சியரங்குகளிலும், ஆளுமைத் திறன் வளர்ச்சிப் பயிற்சிகளிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து வருகிறார். ஆல்ஃபா தியானம் போன்றவற்றில் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருவதுடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிக்களிலும் பங்கு பெற்று வருகிறார். Distance Healing என்று சொல்லப்படும் பிரார்த்தனை முறையின் மூலம் தம்மைத் தொடர்பு கொள்பவர்களுக்கு நலம் அளித்து வருகிறார்.

டாக்டர் அ.ச.ஞா., டாக்டர் மு.வ. போன்றோர் வரிசையில், பேராசிரியர்களாலும் வெகுஜனம் விரும்பும் நல்ல படைப்புகளைத் தர முடியும் என்பதை நாகூர் ரூமி அழுத்தமாக நிரூபித்து வருகிறார்.

மனைவி நஸீஹா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வரும் ரூமி, “மனைவி நஸீஹா மட்டும் இல்லையென்றால் என்னால் ஒரு வரிகூட எழுதியிருக்க முடியாது” என்கிறார் நெகிழ்ச்சியுடன். இவரது மூத்த பெண் மூன்றாமாண்டு பட்ட வகுப்பில் இருக்கிறாரென்று இவரைப் பார்ப்பவர்கள் சொல்ல முடியாது, ரூமிக்கு அப்படி ஒரு இளமையான தோற்றம்.

ரூமி, தற்போது ‘பராக் ஒபாமா’, ஹோமரின் ‘ஒடிஸி’, ‘ஹராம் ஹலால்’, ‘இந்த விநாடி’ போன்ற நூல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். ‘என் பெயர் மாதாபி’ (சுசித்ரா பட்டாச்சார்யாவின் சிறுகதைகள்), ‘சவ்ரவ் – வாழ்க்கை வரலாறு’, ‘Prabhakaran: Entry and Exit’ (பா. ராகவனின் பிரபாகரன் வாழ்வும் மரணமும் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு), ‘பெருமானாரின் வெளியுறவுக் கொள்கைகள்’, ‘சொல்லாத சொல்’ (கவிதைகள்) போன்ற நூல்கள் விரைவில்
வெளியாகவிருக்கின்றன.

டாக்டர் அ.ச.ஞா., டாக்டர் மு.வ. போன்றோர் வரிசையில், பேராசிரியர்களாலும் வெகுஜனம் விரும்பும் நல்ல படைப்புகளைத் தர முடியும் என்பதை நாகூர் ரூமி அழுத்தமாக நிரூபித்து வருகிறார்.

– அரவிந்த்