RSS

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம்-2)

04 Nov

“கண்ணான கருணாநிதி”
“புகழ் பூக்கும் கருணாநிதி”
“தமிழ் காக்கும் கருணாநிதி”
“ஈடில்லா கருணாநிதி”
“இதயத்தில் கருணாநிதி”
“அதிமேதை கருணாநிதி”
“இளஞ்சிங்கம் கருணாநிதி
“பார்புகழும் கருணாநிதி”

இன்னும் என்னென்ன அடைமொழிகள் சேர்க்க முடியுமோ அத்தனை அடைமொழிகளையும் Superlative degree-யில் கலைஞரை போற்றிப் பாடியே, ஓடம்போக்கி ஆற்றோரத்தில் துவக்கிய ஹனிபாவின் அரசியல் துவக்கம் அவரது வாழ்க்கை முழுவதும் ஓடமாய் இருந்து கட்சியை கரைசேர்ப்பதிலும் கலைஞரை கலசமாய் கோபுரத்தில் தூக்கி வைப்பதிலுமே காலம் கடந்து விட்டது.

ஹனிபா ஒரு பாடகனாக இல்லாமல் பேச்சாளனாக கட்சி வாழ்க்கையைத் தொடங்கி இருந்தால் ஒருவேளை அவர் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவராக கருதப் பட்டிருப்பாரோ என்னவோ தெரியாது.

பேசிப்பேசி கட்சியை வளர்ப்பவனுக்கும், பாடிப் பாடி கட்சியை வளர்ப்பவனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை நிர்ணயித்து வைத்திருக்கின்றது நம் தமிழகத்து அரசியல் களம்.

ஆம் பாட்டுப்பாடி கட்சியை வளர்ப்பவனுக்குப் பெயர் கூத்தாடி. பேசிப் பேசி கட்சி வளர்ப்பவனுக்குப் பெயர் பேச்சாளன்.

பாடகியாக திமுகவில் அறிமுகமாகிய விஜயா தாயன்பன் இன்று மாநில மகளிர் அணி துணைத் தலைவர் என்ற பதவிக்கு சொந்தக்காரர். கனிமொழியிடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டதால் அவருக்கு இந்த ஒய்யாரமான பதவி. கட்சி விவகாரங்களில் குஷ்புவுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அந்தஸ்துகூட ஹனிபாவுக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை.

ஹனிபா அவர்கள் “கூஜாதூக்குவது” “முகஸ்துதி செய்வது” “அடிவருடி பிழைப்பது” போன்ற கலைகளில் தேர்ச்சி பெறாமல் போனதும் அவருடைய அரசியல் பின்னடைவுக்கு அதிமுக்கிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம். நாகூர் ஹனிபா உண்மையிலேயே ஒரு நல்ல நடிகர். ஆம் மேடையில்தான். 1950-ஆம் ஆண்டிலேயே திருச்சி தேவர் ஹாலில் அறிஞர் அண்ணா தலைமை தாங்க, புலவர் நாகூர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்னும் சமூக நாடகத்தில் கவிஞராக நடித்தார் நாகூர் ஹனிபா. அவரது நடிப்பைக் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் “அந்த பாத்திரத்திற்கு அனிபாவென்றே பெயர் வைத்திருக்கலாம். அவ்வளவு சிறப்பாக அனிபா இதில் நடித்தார்” என்று புகழ்மாலை சூட்டினார்.

மேடையில் நடிக்கத் தெரிந்த நாகூர் ஹனிபாவுக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாமல்போனது துரதிர்ஷ்டம்தான். அந்தக் கலையை இவர் மட்டும் நாசுக்காக கற்று வைத்திருந்தால் இந்நேரம் அரசியலில் புகழின் உச்சாணிக்கொம்பை எட்டியிருப்பார்.

“கூத்தாடி” எனப்படும் ஒரு நடிகனை அறிவுஜீவியாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஒரு பாடகனை அறிவுஜீவியாக ஏற்க மறுப்பது ஏனென்றுத் தெரியவில்லை.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தை ஆண்ட/ஆளும் முதல்வர்களுள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வி,எம்.ஜானகி அம்மையார், செல்வி ஜெயலலிதா – இவர்கள் அனைவரும் ‘கூத்தாடி’யாக இருந்து அரசியல் பிரம்மாக்களாக ஆனவர்கள்தான். வருங்காலத்தில் விஜயகாந்தோ அல்லது ரஜினிகாந்தோ முதலமைச்சர் ஆனால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாகூர் ஹனிபா தன் கணீர் என்ற வெண்கலக் குரலால் எல்லோரையும் கவரும் வண்ணம் பேசக் கூடியவர். அவருக்கிருந்த இசையார்வத்தால் ஒரு பாடகனாகவே மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அழகுத்தமிழை அட்சர சுத்தமாய், அழுத்தம் திருத்தமாய் அவர் உச்சரிப்பதைப்போல் வேறு யாராலும் அவ்வளவு தெள்ளத் தெளிவாய் உச்சரிக்க முடியாது. நிச்சயமாக குமரி முத்துவைக் காட்டிலும், குஷ்புவைக் காட்டிலும் செந்தமிழில் சீரான முறையில் சொற்பொழிவாற்றும் திறமை படைத்தவர்.

பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவரக்கூடிய கம்பீரமான உருவம் ஹனிபாவுடையது. நேரிய பார்வை, நிமிர்ந்த நன்னடை அவருடையது. சிங்கத்து கர்ஜனையை அவரது பேச்சில் காணலாம்.

இவரை விருப்பப்பட்டு வேறு முகாமுக்கு அழைத்த போதெல்லாம் கட்சி மீதிருந்த அபார கொள்கைப் பற்றால் வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளினார் நாகூர் ஹனிபா. காயிதே மில்லத் முதல் மக்கள் திலகம் வரை இவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து பார்த்தார்கள். மனுஷர் மசிய வேண்டுமே. ஊ….ஹும்.

ஆரம்ப காலத்தில் தி.மு.க, நாத்திகக் கொள்கைகளில் ஊறித் திளைத்தபோது, நாகூர் ஹனிபா சந்தித்த விமர்சனங்கள், அவர் மீது பாய்ந்த சொற்கணைகள், அவர் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாகூர் ஹனிபாவின் மதப்பற்றையே சந்தேகித்தார்கள். இவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன் கொள்கைப் பிடிப்பில் தளராமல் இருந்தவர் அவர்.

நாகூரில் எல்லோரும் பச்சைக்கொடி ஏந்தி வலம் வந்த காலத்தில், இவர் மட்டும் கறுப்புச்சட்டை அணிந்து பவனி வந்த போது இவரை ஏதோ வேற்றுக்கிரக மனிதரைப்போல் பார்த்தது சமூகம்.

21.6.2008 அன்று சென்னைத் தீவுத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இது:

“என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் – பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் – நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் – பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபாவின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”

“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை சாரணபாஸ்கரன் எழுத கருணாநிதியின் புகழை உச்சிக்கு கொண்டுச் சென்றார் நாகூர் ஹனிபா. கல்லக்குடி கொண்ட கருணாநிதி எப்பொழுது “கள்ளைக் குடி” என்று சொன்னாரோ அப்பொழுதுதான் காயிதே மில்லத் அவர்கள் கலைஞரின் தொடர்பை அறுத்தெரிய முனைந்தார்.

16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலம் வந்த முஸ்லீம் லீக் எனும் பாரம்பரியமிக்க கட்சிக்கு 3 இடங்களே போதும் என்ற நிலைக்குத் தள்ளி, தன் சொந்த அரசியல் லாபத்திற்காக அந்த கட்சியையே துண்டு துண்டாக உடைத்து சின்னாபின்னமாக்கி இப்போது மூஸ்லீம் லீக் என்ற கட்சியை காணாமல் செய்த பெருமை நம் மாண்புமிகு கலைஞரைத்தான் சாரும்.

ஏணி சின்னம் என்ற ஒரு அதிகாரபூர்வமான தேர்தல் சின்னம் முஸ்லீம் லீக் கட்சிக்கு இருந்தபோதும் அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து, அதையும் டெல்லிக்கு கணக்கு காண்பித்து தன்பங்குக்கு அமைச்சர் பதவிகளை தன் சொந்த பந்தங்களுக்கு வாங்கித் தந்த பெருமையும் நம் மாண்புமிகு கலைஞருக்குத்தான் உண்டு.

ஒரு நல்ல கண்ணையும், ஒரு நொள்ளைக் கண்ணையும் இணைத்து

நாட்டின் இரு கண்கள்
நல்லவர்கள் போற்றும்
வல்லவர்கள் இவர்கள்
நாட்டின் இரு கண்கள்

என்று பாடிய நாகூர் ஹனிபாவின் அப்பாவித்தனத்தை யாரிடம் சென்று முறையிடுவது?

பாசமலர் படத்தில் இப்படி ஒரு காட்சி இடம்பெறும். தன் அருமைத் தங்கையை மணமுடித்துக் கொடுக்கையில் ஜெமினி கணேசனை பார்த்து சிவாஜி கணேசன் இந்த வசனத்தை பேசுவார்.

“ஆனந்தா! நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கறேன்
அதுல ஆனந்த கண்ணீர தான் நான் எப்பவும் பாக்கனும்”

இந்த வசனம் கலைஞர் கருணாநிதி அவர்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

1972-ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்களின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி கூறும் விதத்தில், இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று சொன்னாராம். இந்த வசனத்தை இதுநாள்வரை பலமுறை மேடைகளில் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பறைசாற்றி வருகிறார். இப்போது காயிதேமில்லத் அவர்களிடம் யாரும் கேட்க முடியாது என்ற தைரியத்தினால்கூட இருக்கலாம்.

கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு இஸ்லாமிய சமுகத்தை வழிநடத்த மாண்புமிகு கலைஞர் அவர்களைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா என்ற கேள்வி நம் மண்டையைக் குடைகின்றது. காயிதே மில்லத் அப்படி சொல்லியிருப்பாரா?

காயிதே மில்லத் அவர்கள் மரணிக்கும் தறுவாயில் அவரோடு உடன் இருந்த அ.கா.அப்துல் சமத் போன்றவர்களிடம் “கலைஞர் சொல்வது உண்மையா?” என்ற கேள்வியை முன்வைத்த போது “இது பச்சைப் பொய்” என்று உறுதி படுத்தினார்கள்.

ஒருவர் மரணிக்கும் தறுவாயில் அவரை சந்தித்ததை வைத்து தனக்கு சாதகமான இப்படியொரு வசனத்தை வசனகர்த்தா கலைஞர் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டாரே என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் மரணித்தபோது (5-4-1972) அத்தனைத் தலைவர்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்தான் அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. காயிதேமில்லத் மரணித்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகி தள்ளாடி தள்ளாடி வந்தார் தந்தை பெரியார். அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தவர் நாகூர் ஹனிபாதான். கண்ணீர் மல்க, நா தழுதழுக்க “இந்த சமுதாய மக்களை இனி யார் காப்பாற்றுவார்கள்?” என்று கவலை பொங்க கூறினார் தந்தை பெரியார். இதுதான் நடந்த நிகழ்ச்சி. சிறந்த வசனகர்த்தாவான மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் அவர்களின் கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணமாக கற்பனை வளத்துடன் “இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று கண்ணியமிகு காயிதேமில்லத் கலைஞர் அவர்களிடம் சொன்னதாக ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வந்தார்.

இன்றைய சூழலில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் 1400-க்கு மேல் ஆகிவிட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மூன்றே மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன. 1) இந்திய தேசிய காங்கிரஸ், 2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அவ்வளவே. முஸ்லீம் லீக் என்ற பாரம்பரியமிக்க கட்சியை துண்டு துண்டாக உடைத்த பெருமை மஞ்சள் துண்டு அணிந்த கலைஞர் அவர்களையேச் சாரும்.

கலைஞர் அவர்கள் காயிதே மில்லத்திற்கும், முஸ்லீம் லீகிற்கும் செய்த பச்சைத்துரோகம் இஸ்லாமியர்களின் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் அழிந்துவிடப் போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்று வேறொரு மீலாத் மாநாட்டின்போது வீர வசனம் பேசினார் கலைஞர்.

“கலாம்” என்றால் கலகம் என்று விமர்சித்தவர் கலைஞர். ஆனால் ஹனிபா என்றால் “கழகம்” என்றுதான் பொருள் என்பது கலைஞருக்கே நன்றாகத் தெரியும். காலம் முழுதும் கழகத்தைக் கட்டிக்கொண்டு அழுத ஹனிபாவுக்கு கழகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. காரணம் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்தவர் அவர்.

ஹனிபா தான் கட்டிய இல்லத்திற்கு மட்டும் “கலைஞர்” பெயரை சூட்டவில்லை. தன் உள்ளத்திற்கும் சூட்டிக் கொண்டு, காலம் முழுதும் அந்த மனிதரின் புகழைப் பாடிகொண்டு, விசுவாசம் காட்டி தன் வாழ்நாளை பாழாக்கிக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடிய ஹனிபாவின் இதயத்திற்குள் அந்த கருணாநிதிதான் இதுநாள்வரை குடி கொண்டு இருக்கிறார்.

“அண்ணாவை அன்றைய தி.மு.க. தொண்டன் தனது நாடி நரம்புகளில் எல்லாம் ரத்த ஓட்டம் போல ஓடச் செய்துகொண்டதற்கு ஒரு வலிமையான உந்து சக்தியாக இருந்தது ஹனிஃபாவின் குரலும்தான். தான்பட்ட நன்றிக் கடனாக தி.மு. க. ஹனிஃபா அவர்களுக்குத் தமிழக சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் பதவியை ஒருமுறை வழங்கியதாக ஞாபகம். ஆனால் அதற்கு மேலும் உயர்ந்த பதவிகளைத் தி. மு.க. விடமிருந்து பெறுவதற்கான உரிமை அவருக்கு உண்டு. நாகூர் ஹனிபாவின் கட்சியின் சேவைக்கும், அவரது அரசியல் அனுபவத்திற்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் மிகவும் அற்பம் என்ற அபிப்பிராயம் ஏமாற்றமாய் எல்லோர் மனதிலும் குடிகொண்டுள்ளது”

என்று திண்ணை இதழில் எழுதுகிறார் மலர் மன்னன்.

ஆ.ராசாவைப் பற்றி இப்பதிவில் குறிப்பெழுதியபோது இந்த நிகழ்வும் ஏனோ ஞாபகத்திற்கு வந்து விட்டது.

கலைஞர் அவர்களின் அன்புக்கு பாத்திரமாக உள்ள அவரது நெருக்கங்கள் அரசியல் என்ற ஆயுதமேந்தி கொள்ளையடித்தார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. கொள்ளையடிப்பதே ஒரு கலை என்று வசனம் எழுதியவர்தான் நம் கலைஞர். அது படத்தில் பேசும் ஒரு பாத்திரத்திற்காக எழுதப்பட்டது என்று வாசகர்கள் வாதாடாலாம். எது எப்படியோ. சில நிகழ்வுகள் நடக்கையில் பழைய விஷயங்களும் நம் நினைவில் வந்து நிழலாடுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

மந்திரிகுமாரியில் கலைஞர் அவர்கள் எழுதிய வசனம் இது. நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறுகிறது இந்த உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”

கலைஞர் அவர்களின் எழுத்துக்களின் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.

“வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் ஒரு கதை எழுதியிருந்தார். சமுதாயம் சிரழிந்து போவதற்கு வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். கலைஞர் அவர்களின் கதையை படிக்கச் சொன்னாலே போதும், தானே சீரழிந்துப் போய்விடும். வறுமையில் வாடும் மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன், தான் பெற்ற மகளையே மனைவியாக ஆக்கிக் கொள்வதுதான் கதையின் கரு. கேட்கும்போதே குமட்டிக் கொண்டு வருகிறது அல்லவா? ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ போன்ற நூல்களும் அப்படித்தான். பலபேர்களிடம் கெட்டுப்போன ஒருத்தியைப்பற்றிய வருணனைகளை விரசமாகவும் ஆபாசமாகவும் வருணித்திருப்பார் நம் கலைஞர்.

“பண்பாடு அற்றவர்கள் எனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்குக்’ கதாசிரியர்” என்று மனம் புழுங்குகிறார் கவிஞர் கண்ணதாசன்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தான் பெண்களுடன் படுக்கையில் புரண்ட அனுபவங்களையெல்லாம் வெட்கமில்லாமல் எழுதும் ஒரு மனிதரே தன் நண்பன் எடுத்துக் கொண்ட கதையின் கருவை கேவலமாக எழுதுகிறார் என்றால் கலைஞர் அவர்களுடைய எழுத்தின் தரத்தை நாமே முடிவு செய்துக் கொள்ளலாம்.

சமுதாயத்தை வழிநடத்தும் தலைவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் நாகரிகமான முறையிலும் இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பண்பாடற்ற விதத்தில் அமைந்திருப்பது அவரவர் குணநலன்களையே எடுத்துக் காட்டுகிறது.

அறிஞர் அண்ணா எழுதிய “கம்பரசம்” நூலே அதில் மிஞ்சியிருந்த காமரசத்திற்காகவே அதிக அளவில் விற்பனையானது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.

பா.ஜ.க – ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு வந்ததற்கு ஒரே நீண்ட தொலை நோக்கு காரணம் எது என்பது எல்லோர்க்கும் தெரியும். தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாதே என்ற மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் இந்த முடிவு. கலைஞர் குடும்பத்தார்கள் தங்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் கட்சியின் அதிகார மையத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவை மட்டுமல்ல. ஆரம்ப காலத்தில் அவருடைய அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்குபெற்று துணைபுரிந்த எந்த ஒரு நண்பரையும் ஆதரித்து கைகொடுத்து தூக்கவில்லை என்பதுதான் பரவலான ஓர் என்ணம். தன் குடும்பம், பிள்ளைகள், சொந்தங்கள், பந்தங்கள் இவர்களது முன்னேற்றத்திலேயே அவர் முழுமூச்சாக இருந்தார் என்பதை கண்கூடாக நாம் கண்டுவருகிறோம்.

எந்த ஒரு ஜாதியை எதிர்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாரோ அதே ஜாதியைச் சேர்ந்த கவிஞர் வாலியை அழைத்து தன் மகன் மு.க.முத்துவுக்காக “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ!” என்று பாட்டெழுத வைத்து மன மகிழ்ந்தார் நம் மாண்புமிகு தலைவர்

“நல்ல மனதில் குடியிருக்கு நாகூர் ஆண்டவா” என்று தன் மகனை பாடவைத்து ஒட்டு மொத்த அனைத்து முஸ்லீம்களின் மனதிலும் இடம்பிடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டார் அவர். கலைஞரின் சுயசரிதை “நெஞ்சுக்கு நீதி”. அந்த பெயரில் ஒரு படமும் எடுத்தார். அதற்கும் கவிஞர் வாலி அவர்களே பாடல் எழுதினார்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ அடிப்படையாக வைத்து அவர்களை ஒட்டுமொத்தமாக தாழ்த்தியும் இழிவுபடுத்தியும் அரசியல் கருதி இந்தத் தலைவர்கள் ஆடிய ஆட்டத்தை ஒருக்காலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிராமணர்களின் அறிவுரைப்படியும், அவர்களது ஆலோசனையின் பேரிலும் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் இன்றுவரை வளர்த்து வருகிறார் நம் தமிழினத் தலைவர்.

  1. தயாளு அம்மாவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான்.
  2. அன்றுதொட்டு இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி.
  3. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
  4. கடந்த, 1996-ல், 2006-ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ். அவர்கள்
  5. 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்.,
  6. உள்துறைச் செயலாளராக (Home Secretary) செயல்பட்டவர் மாலதி ஐ.ஏ.எஸ்.,
  7. மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட நியமிக்கப்பட்டவர் கவிஞர் வாலி,
  8. குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்,
  9. தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி
  10. திரு.இராஜாஜி என்ற பார்ப்பனரால் முதன்முதலில் முதல்வராகி, பின்னர் ‘சோ’ என்ற பார்ப்பனராலும் மற்றும் லதா எனும் பார்ப்பனப் பெண்ணின் கணவர் திரு.ரஜினிகாந்த் தந்த வாய்ப்பில் தான் திரு.கருணாநிதி அவர்கள் மீண்டும் முதல்வர் ஆனார் என்பதையும் நாம் பார்த்தோம்.

என்று கலைஞர் அவர்களின் அத்தனை தேவைகளுக்கும் பிராமணர்களின் பட்டியல் தொடர்ந்துக்கொண்டே போகிறது.

இந்த இரட்டை வேடம்  இஸ்லாமியச் சமூகத்தோடு மட்டுமின்றி பிராமணச் சமூகத்தோடும் இன்றுவரை சிறப்பாக ஆடி வருகிறார் டாக்டர் கலைஞர் அவர்கள்.

 

Tags: , , , , , ,

2 responses to “நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம்-2)

  1. Jaffar Sadiq

    November 4, 2012 at 5:25 pm

    This is really commendable…! Hope you will write a few words about the relationship of Karunanidhi with Karunai Jamal from Tiruvarur also.

     
  2. தாஜ்

    November 4, 2012 at 7:14 pm

    இந்தக் கட்டுரையை யார் எழுதியது என்கிற குறிப்பைக் காணோம். வரிக்கு வரி சத்தியமான உண்மைகள். கருணாநிதியை நான் பலவருடங்களாக விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகிறேன். நம் மக்கள் ஆட்டு மந்தைகள் மாதிரி கருணாநிதி கூப்பாடுப் போடுவதை இன்றுவரை காண சகிக்க மாட்டேன் என்கிறது. இன்றைக்கும் கூட கருணாநிதிக்காக பேஸ்ஃபுக் கணக்கை சில இஸ்லாமிய சகோதர்கள் திறந்து வைத்துக் கொண்டு.., லைக் போடு,படி படியென்று ஒரு நாளைக்கு பத்துதரம் மேஸேஜ் தருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவு என்று ஒன்று உண்டா என்றே தெரியவில்லை. இந்தக் கட்டுரையில் கருணாநிதி இஸ்லாமிய சமூகத்திற்கு செய்த துரோகங்கள் காலத்தால் மறைந்து போன நிலையில் இந்தக் கட்டுரை அது குறித்து பேசுவதில் நான் மிகுந்த உணர்ச்சி வசப்படுகிறேன். மற்றவைகளை பின் எழுதுகிறேன்.
    -தாஜ்

     

Leave a comment