RSS

Tag Archives: Nagore

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம்-2)


“கண்ணான கருணாநிதி”
“புகழ் பூக்கும் கருணாநிதி”
“தமிழ் காக்கும் கருணாநிதி”
“ஈடில்லா கருணாநிதி”
“இதயத்தில் கருணாநிதி”
“அதிமேதை கருணாநிதி”
“இளஞ்சிங்கம் கருணாநிதி
“பார்புகழும் கருணாநிதி”

இன்னும் என்னென்ன அடைமொழிகள் சேர்க்க முடியுமோ அத்தனை அடைமொழிகளையும் Superlative degree-யில் கலைஞரை போற்றிப் பாடியே, ஓடம்போக்கி ஆற்றோரத்தில் துவக்கிய ஹனிபாவின் அரசியல் துவக்கம் அவரது வாழ்க்கை முழுவதும் ஓடமாய் இருந்து கட்சியை கரைசேர்ப்பதிலும் கலைஞரை கலசமாய் கோபுரத்தில் தூக்கி வைப்பதிலுமே காலம் கடந்து விட்டது.

ஹனிபா ஒரு பாடகனாக இல்லாமல் பேச்சாளனாக கட்சி வாழ்க்கையைத் தொடங்கி இருந்தால் ஒருவேளை அவர் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவராக கருதப் பட்டிருப்பாரோ என்னவோ தெரியாது.

பேசிப்பேசி கட்சியை வளர்ப்பவனுக்கும், பாடிப் பாடி கட்சியை வளர்ப்பவனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை நிர்ணயித்து வைத்திருக்கின்றது நம் தமிழகத்து அரசியல் களம்.

ஆம் பாட்டுப்பாடி கட்சியை வளர்ப்பவனுக்குப் பெயர் கூத்தாடி. பேசிப் பேசி கட்சி வளர்ப்பவனுக்குப் பெயர் பேச்சாளன்.

பாடகியாக திமுகவில் அறிமுகமாகிய விஜயா தாயன்பன் இன்று மாநில மகளிர் அணி துணைத் தலைவர் என்ற பதவிக்கு சொந்தக்காரர். கனிமொழியிடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டதால் அவருக்கு இந்த ஒய்யாரமான பதவி. கட்சி விவகாரங்களில் குஷ்புவுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அந்தஸ்துகூட ஹனிபாவுக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை.

ஹனிபா அவர்கள் “கூஜாதூக்குவது” “முகஸ்துதி செய்வது” “அடிவருடி பிழைப்பது” போன்ற கலைகளில் தேர்ச்சி பெறாமல் போனதும் அவருடைய அரசியல் பின்னடைவுக்கு அதிமுக்கிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம். நாகூர் ஹனிபா உண்மையிலேயே ஒரு நல்ல நடிகர். ஆம் மேடையில்தான். 1950-ஆம் ஆண்டிலேயே திருச்சி தேவர் ஹாலில் அறிஞர் அண்ணா தலைமை தாங்க, புலவர் நாகூர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்னும் சமூக நாடகத்தில் கவிஞராக நடித்தார் நாகூர் ஹனிபா. அவரது நடிப்பைக் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் “அந்த பாத்திரத்திற்கு அனிபாவென்றே பெயர் வைத்திருக்கலாம். அவ்வளவு சிறப்பாக அனிபா இதில் நடித்தார்” என்று புகழ்மாலை சூட்டினார்.

மேடையில் நடிக்கத் தெரிந்த நாகூர் ஹனிபாவுக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாமல்போனது துரதிர்ஷ்டம்தான். அந்தக் கலையை இவர் மட்டும் நாசுக்காக கற்று வைத்திருந்தால் இந்நேரம் அரசியலில் புகழின் உச்சாணிக்கொம்பை எட்டியிருப்பார்.

“கூத்தாடி” எனப்படும் ஒரு நடிகனை அறிவுஜீவியாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஒரு பாடகனை அறிவுஜீவியாக ஏற்க மறுப்பது ஏனென்றுத் தெரியவில்லை.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தை ஆண்ட/ஆளும் முதல்வர்களுள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வி,எம்.ஜானகி அம்மையார், செல்வி ஜெயலலிதா – இவர்கள் அனைவரும் ‘கூத்தாடி’யாக இருந்து அரசியல் பிரம்மாக்களாக ஆனவர்கள்தான். வருங்காலத்தில் விஜயகாந்தோ அல்லது ரஜினிகாந்தோ முதலமைச்சர் ஆனால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாகூர் ஹனிபா தன் கணீர் என்ற வெண்கலக் குரலால் எல்லோரையும் கவரும் வண்ணம் பேசக் கூடியவர். அவருக்கிருந்த இசையார்வத்தால் ஒரு பாடகனாகவே மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அழகுத்தமிழை அட்சர சுத்தமாய், அழுத்தம் திருத்தமாய் அவர் உச்சரிப்பதைப்போல் வேறு யாராலும் அவ்வளவு தெள்ளத் தெளிவாய் உச்சரிக்க முடியாது. நிச்சயமாக குமரி முத்துவைக் காட்டிலும், குஷ்புவைக் காட்டிலும் செந்தமிழில் சீரான முறையில் சொற்பொழிவாற்றும் திறமை படைத்தவர்.

பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவரக்கூடிய கம்பீரமான உருவம் ஹனிபாவுடையது. நேரிய பார்வை, நிமிர்ந்த நன்னடை அவருடையது. சிங்கத்து கர்ஜனையை அவரது பேச்சில் காணலாம்.

இவரை விருப்பப்பட்டு வேறு முகாமுக்கு அழைத்த போதெல்லாம் கட்சி மீதிருந்த அபார கொள்கைப் பற்றால் வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளினார் நாகூர் ஹனிபா. காயிதே மில்லத் முதல் மக்கள் திலகம் வரை இவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து பார்த்தார்கள். மனுஷர் மசிய வேண்டுமே. ஊ….ஹும்.

ஆரம்ப காலத்தில் தி.மு.க, நாத்திகக் கொள்கைகளில் ஊறித் திளைத்தபோது, நாகூர் ஹனிபா சந்தித்த விமர்சனங்கள், அவர் மீது பாய்ந்த சொற்கணைகள், அவர் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாகூர் ஹனிபாவின் மதப்பற்றையே சந்தேகித்தார்கள். இவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன் கொள்கைப் பிடிப்பில் தளராமல் இருந்தவர் அவர்.

நாகூரில் எல்லோரும் பச்சைக்கொடி ஏந்தி வலம் வந்த காலத்தில், இவர் மட்டும் கறுப்புச்சட்டை அணிந்து பவனி வந்த போது இவரை ஏதோ வேற்றுக்கிரக மனிதரைப்போல் பார்த்தது சமூகம்.

21.6.2008 அன்று சென்னைத் தீவுத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இது:

“என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் – பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் – நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் – பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபாவின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”

“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை சாரணபாஸ்கரன் எழுத கருணாநிதியின் புகழை உச்சிக்கு கொண்டுச் சென்றார் நாகூர் ஹனிபா. கல்லக்குடி கொண்ட கருணாநிதி எப்பொழுது “கள்ளைக் குடி” என்று சொன்னாரோ அப்பொழுதுதான் காயிதே மில்லத் அவர்கள் கலைஞரின் தொடர்பை அறுத்தெரிய முனைந்தார்.

16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலம் வந்த முஸ்லீம் லீக் எனும் பாரம்பரியமிக்க கட்சிக்கு 3 இடங்களே போதும் என்ற நிலைக்குத் தள்ளி, தன் சொந்த அரசியல் லாபத்திற்காக அந்த கட்சியையே துண்டு துண்டாக உடைத்து சின்னாபின்னமாக்கி இப்போது மூஸ்லீம் லீக் என்ற கட்சியை காணாமல் செய்த பெருமை நம் மாண்புமிகு கலைஞரைத்தான் சாரும்.

ஏணி சின்னம் என்ற ஒரு அதிகாரபூர்வமான தேர்தல் சின்னம் முஸ்லீம் லீக் கட்சிக்கு இருந்தபோதும் அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து, அதையும் டெல்லிக்கு கணக்கு காண்பித்து தன்பங்குக்கு அமைச்சர் பதவிகளை தன் சொந்த பந்தங்களுக்கு வாங்கித் தந்த பெருமையும் நம் மாண்புமிகு கலைஞருக்குத்தான் உண்டு.

ஒரு நல்ல கண்ணையும், ஒரு நொள்ளைக் கண்ணையும் இணைத்து

நாட்டின் இரு கண்கள்
நல்லவர்கள் போற்றும்
வல்லவர்கள் இவர்கள்
நாட்டின் இரு கண்கள்

என்று பாடிய நாகூர் ஹனிபாவின் அப்பாவித்தனத்தை யாரிடம் சென்று முறையிடுவது?

பாசமலர் படத்தில் இப்படி ஒரு காட்சி இடம்பெறும். தன் அருமைத் தங்கையை மணமுடித்துக் கொடுக்கையில் ஜெமினி கணேசனை பார்த்து சிவாஜி கணேசன் இந்த வசனத்தை பேசுவார்.

“ஆனந்தா! நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கறேன்
அதுல ஆனந்த கண்ணீர தான் நான் எப்பவும் பாக்கனும்”

இந்த வசனம் கலைஞர் கருணாநிதி அவர்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

1972-ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்களின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி கூறும் விதத்தில், இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று சொன்னாராம். இந்த வசனத்தை இதுநாள்வரை பலமுறை மேடைகளில் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பறைசாற்றி வருகிறார். இப்போது காயிதேமில்லத் அவர்களிடம் யாரும் கேட்க முடியாது என்ற தைரியத்தினால்கூட இருக்கலாம்.

கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு இஸ்லாமிய சமுகத்தை வழிநடத்த மாண்புமிகு கலைஞர் அவர்களைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா என்ற கேள்வி நம் மண்டையைக் குடைகின்றது. காயிதே மில்லத் அப்படி சொல்லியிருப்பாரா?

காயிதே மில்லத் அவர்கள் மரணிக்கும் தறுவாயில் அவரோடு உடன் இருந்த அ.கா.அப்துல் சமத் போன்றவர்களிடம் “கலைஞர் சொல்வது உண்மையா?” என்ற கேள்வியை முன்வைத்த போது “இது பச்சைப் பொய்” என்று உறுதி படுத்தினார்கள்.

ஒருவர் மரணிக்கும் தறுவாயில் அவரை சந்தித்ததை வைத்து தனக்கு சாதகமான இப்படியொரு வசனத்தை வசனகர்த்தா கலைஞர் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டாரே என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் மரணித்தபோது (5-4-1972) அத்தனைத் தலைவர்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்தான் அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. காயிதேமில்லத் மரணித்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகி தள்ளாடி தள்ளாடி வந்தார் தந்தை பெரியார். அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தவர் நாகூர் ஹனிபாதான். கண்ணீர் மல்க, நா தழுதழுக்க “இந்த சமுதாய மக்களை இனி யார் காப்பாற்றுவார்கள்?” என்று கவலை பொங்க கூறினார் தந்தை பெரியார். இதுதான் நடந்த நிகழ்ச்சி. சிறந்த வசனகர்த்தாவான மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் அவர்களின் கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணமாக கற்பனை வளத்துடன் “இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று கண்ணியமிகு காயிதேமில்லத் கலைஞர் அவர்களிடம் சொன்னதாக ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வந்தார்.

இன்றைய சூழலில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் 1400-க்கு மேல் ஆகிவிட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மூன்றே மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன. 1) இந்திய தேசிய காங்கிரஸ், 2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அவ்வளவே. முஸ்லீம் லீக் என்ற பாரம்பரியமிக்க கட்சியை துண்டு துண்டாக உடைத்த பெருமை மஞ்சள் துண்டு அணிந்த கலைஞர் அவர்களையேச் சாரும்.

கலைஞர் அவர்கள் காயிதே மில்லத்திற்கும், முஸ்லீம் லீகிற்கும் செய்த பச்சைத்துரோகம் இஸ்லாமியர்களின் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் அழிந்துவிடப் போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்று வேறொரு மீலாத் மாநாட்டின்போது வீர வசனம் பேசினார் கலைஞர்.

“கலாம்” என்றால் கலகம் என்று விமர்சித்தவர் கலைஞர். ஆனால் ஹனிபா என்றால் “கழகம்” என்றுதான் பொருள் என்பது கலைஞருக்கே நன்றாகத் தெரியும். காலம் முழுதும் கழகத்தைக் கட்டிக்கொண்டு அழுத ஹனிபாவுக்கு கழகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. காரணம் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்தவர் அவர்.

ஹனிபா தான் கட்டிய இல்லத்திற்கு மட்டும் “கலைஞர்” பெயரை சூட்டவில்லை. தன் உள்ளத்திற்கும் சூட்டிக் கொண்டு, காலம் முழுதும் அந்த மனிதரின் புகழைப் பாடிகொண்டு, விசுவாசம் காட்டி தன் வாழ்நாளை பாழாக்கிக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடிய ஹனிபாவின் இதயத்திற்குள் அந்த கருணாநிதிதான் இதுநாள்வரை குடி கொண்டு இருக்கிறார்.

“அண்ணாவை அன்றைய தி.மு.க. தொண்டன் தனது நாடி நரம்புகளில் எல்லாம் ரத்த ஓட்டம் போல ஓடச் செய்துகொண்டதற்கு ஒரு வலிமையான உந்து சக்தியாக இருந்தது ஹனிஃபாவின் குரலும்தான். தான்பட்ட நன்றிக் கடனாக தி.மு. க. ஹனிஃபா அவர்களுக்குத் தமிழக சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் பதவியை ஒருமுறை வழங்கியதாக ஞாபகம். ஆனால் அதற்கு மேலும் உயர்ந்த பதவிகளைத் தி. மு.க. விடமிருந்து பெறுவதற்கான உரிமை அவருக்கு உண்டு. நாகூர் ஹனிபாவின் கட்சியின் சேவைக்கும், அவரது அரசியல் அனுபவத்திற்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் மிகவும் அற்பம் என்ற அபிப்பிராயம் ஏமாற்றமாய் எல்லோர் மனதிலும் குடிகொண்டுள்ளது”

என்று திண்ணை இதழில் எழுதுகிறார் மலர் மன்னன்.

ஆ.ராசாவைப் பற்றி இப்பதிவில் குறிப்பெழுதியபோது இந்த நிகழ்வும் ஏனோ ஞாபகத்திற்கு வந்து விட்டது.

கலைஞர் அவர்களின் அன்புக்கு பாத்திரமாக உள்ள அவரது நெருக்கங்கள் அரசியல் என்ற ஆயுதமேந்தி கொள்ளையடித்தார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. கொள்ளையடிப்பதே ஒரு கலை என்று வசனம் எழுதியவர்தான் நம் கலைஞர். அது படத்தில் பேசும் ஒரு பாத்திரத்திற்காக எழுதப்பட்டது என்று வாசகர்கள் வாதாடாலாம். எது எப்படியோ. சில நிகழ்வுகள் நடக்கையில் பழைய விஷயங்களும் நம் நினைவில் வந்து நிழலாடுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

மந்திரிகுமாரியில் கலைஞர் அவர்கள் எழுதிய வசனம் இது. நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறுகிறது இந்த உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”

கலைஞர் அவர்களின் எழுத்துக்களின் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.

“வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் ஒரு கதை எழுதியிருந்தார். சமுதாயம் சிரழிந்து போவதற்கு வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். கலைஞர் அவர்களின் கதையை படிக்கச் சொன்னாலே போதும், தானே சீரழிந்துப் போய்விடும். வறுமையில் வாடும் மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன், தான் பெற்ற மகளையே மனைவியாக ஆக்கிக் கொள்வதுதான் கதையின் கரு. கேட்கும்போதே குமட்டிக் கொண்டு வருகிறது அல்லவா? ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ போன்ற நூல்களும் அப்படித்தான். பலபேர்களிடம் கெட்டுப்போன ஒருத்தியைப்பற்றிய வருணனைகளை விரசமாகவும் ஆபாசமாகவும் வருணித்திருப்பார் நம் கலைஞர்.

“பண்பாடு அற்றவர்கள் எனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்குக்’ கதாசிரியர்” என்று மனம் புழுங்குகிறார் கவிஞர் கண்ணதாசன்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தான் பெண்களுடன் படுக்கையில் புரண்ட அனுபவங்களையெல்லாம் வெட்கமில்லாமல் எழுதும் ஒரு மனிதரே தன் நண்பன் எடுத்துக் கொண்ட கதையின் கருவை கேவலமாக எழுதுகிறார் என்றால் கலைஞர் அவர்களுடைய எழுத்தின் தரத்தை நாமே முடிவு செய்துக் கொள்ளலாம்.

சமுதாயத்தை வழிநடத்தும் தலைவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் நாகரிகமான முறையிலும் இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பண்பாடற்ற விதத்தில் அமைந்திருப்பது அவரவர் குணநலன்களையே எடுத்துக் காட்டுகிறது.

அறிஞர் அண்ணா எழுதிய “கம்பரசம்” நூலே அதில் மிஞ்சியிருந்த காமரசத்திற்காகவே அதிக அளவில் விற்பனையானது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.

பா.ஜ.க – ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு வந்ததற்கு ஒரே நீண்ட தொலை நோக்கு காரணம் எது என்பது எல்லோர்க்கும் தெரியும். தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாதே என்ற மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் இந்த முடிவு. கலைஞர் குடும்பத்தார்கள் தங்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் கட்சியின் அதிகார மையத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவை மட்டுமல்ல. ஆரம்ப காலத்தில் அவருடைய அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்குபெற்று துணைபுரிந்த எந்த ஒரு நண்பரையும் ஆதரித்து கைகொடுத்து தூக்கவில்லை என்பதுதான் பரவலான ஓர் என்ணம். தன் குடும்பம், பிள்ளைகள், சொந்தங்கள், பந்தங்கள் இவர்களது முன்னேற்றத்திலேயே அவர் முழுமூச்சாக இருந்தார் என்பதை கண்கூடாக நாம் கண்டுவருகிறோம்.

எந்த ஒரு ஜாதியை எதிர்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாரோ அதே ஜாதியைச் சேர்ந்த கவிஞர் வாலியை அழைத்து தன் மகன் மு.க.முத்துவுக்காக “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ!” என்று பாட்டெழுத வைத்து மன மகிழ்ந்தார் நம் மாண்புமிகு தலைவர்

“நல்ல மனதில் குடியிருக்கு நாகூர் ஆண்டவா” என்று தன் மகனை பாடவைத்து ஒட்டு மொத்த அனைத்து முஸ்லீம்களின் மனதிலும் இடம்பிடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டார் அவர். கலைஞரின் சுயசரிதை “நெஞ்சுக்கு நீதி”. அந்த பெயரில் ஒரு படமும் எடுத்தார். அதற்கும் கவிஞர் வாலி அவர்களே பாடல் எழுதினார்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ அடிப்படையாக வைத்து அவர்களை ஒட்டுமொத்தமாக தாழ்த்தியும் இழிவுபடுத்தியும் அரசியல் கருதி இந்தத் தலைவர்கள் ஆடிய ஆட்டத்தை ஒருக்காலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிராமணர்களின் அறிவுரைப்படியும், அவர்களது ஆலோசனையின் பேரிலும் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் இன்றுவரை வளர்த்து வருகிறார் நம் தமிழினத் தலைவர்.

  1. தயாளு அம்மாவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான்.
  2. அன்றுதொட்டு இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி.
  3. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
  4. கடந்த, 1996-ல், 2006-ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ். அவர்கள்
  5. 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்.,
  6. உள்துறைச் செயலாளராக (Home Secretary) செயல்பட்டவர் மாலதி ஐ.ஏ.எஸ்.,
  7. மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட நியமிக்கப்பட்டவர் கவிஞர் வாலி,
  8. குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்,
  9. தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி
  10. திரு.இராஜாஜி என்ற பார்ப்பனரால் முதன்முதலில் முதல்வராகி, பின்னர் ‘சோ’ என்ற பார்ப்பனராலும் மற்றும் லதா எனும் பார்ப்பனப் பெண்ணின் கணவர் திரு.ரஜினிகாந்த் தந்த வாய்ப்பில் தான் திரு.கருணாநிதி அவர்கள் மீண்டும் முதல்வர் ஆனார் என்பதையும் நாம் பார்த்தோம்.

என்று கலைஞர் அவர்களின் அத்தனை தேவைகளுக்கும் பிராமணர்களின் பட்டியல் தொடர்ந்துக்கொண்டே போகிறது.

இந்த இரட்டை வேடம்  இஸ்லாமியச் சமூகத்தோடு மட்டுமின்றி பிராமணச் சமூகத்தோடும் இன்றுவரை சிறப்பாக ஆடி வருகிறார் டாக்டர் கலைஞர் அவர்கள்.

 

Tags: , , , , , ,

நெருப்பில்லாமல் புகையாது


நாகூர் ஆபிதீன் என்றால் புலவர் ஆபிதீனைத்தான் எல்லோரும் அடையாளம் காட்டுவார்கள். இன்னொரு ஆபிதீனும் இருக்கிறார் “குடத்திலிட்ட விளக்காக”.

“வேறு உலகத்தில் ஜீவராசிகள் இருக்கிறார்களா?” என்று விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். “செவ்வாய்க் கிரகத்தில் அப்படி ஏதாவது உண்டா?” என்ற ஆராய்ச்சியில் விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்.

இது அல்லாமல் வேறொரு தனியுலகம் உண்டு. அங்கு ஜீவராசிகள் இருக்கிறார்கள். 24-மணி நேரமும் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்பது 100% உண்மை. அப்படியொரு உலகம் தனியாக இயங்குவது தெரியாமலே பலபேர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை

அந்த உலகத்திற்குப் பெயர் “இணைய உலகம்” என்பதாகும்.

இணைய உலகத்தில் பிரவேசிப்பவர்கள் அனைவருக்கும் நாகூர் ஆபிதீன் என்ற பெயர் பரிச்சயம். இந்த உலகத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு ஆபிதீனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் ஒரு “Three-in-one” Product. ஆமாம். ஓவியர், பாடகர், எழுத்தாளர். (நமக்கெல்லாம் ஒரு வேலையே ஒழுங்காக வரமாட்டேன் என்கிறது)

“நெருப்பின்றி புகையாது” என்பார்கள். படிப்பவர்கள் எல்லோரும் இவரை “ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!: என்று ரவுண்டு கட்டி புகழும்போது, “ஒண்ணுமில்லாமலா இப்படிப் புகழ்வார்கள்?” என்ற கேள்வி எழுந்து “அப்படி என்னதான் இந்த மனுஷனிடம் இருக்கிறது?” என்ற ஒரு தேடலை நமக்கு ஏற்படுத்துகிறது

இந்த ஆபிதீன் என்றால் “Break the Rules” என்ற அர்த்தம் ஆகிவிட்டது.

வேறு என்ன? “சிறுகதை” என்ற ஒன்று இருக்கிறது. “குறுநாவல்” என்ற ஒன்று இருக்கிறது, “நாவல்” என்ற ஒன்று இருக்கின்றது.

சிறுகதையையே நாவல் சைஸுக்கு எழுதுபவரை எந்தக் கூண்டில் கொண்டுபோய் நிறுத்துவது?

ஏற்கனவே நாகூர்க்காரர்கள் மீது “நையாண்டி மிக்கவர்கள்”; “குசும்பு, இவர்களுக்கு கூடவே பிறந்தது” என்றெல்லாம் பழிச்சொல் தாராளமாகவே விழுகிறது. இந்த மனுஷனால் அந்த பழிச்சொல் மேலும் ஊர்ஜிதமாக்கப்பட்டதுதான் மிச்சம்.

ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததைப் போன்று, சுஜாதா,  “வஸந்த்” என்ற பாத்திரத்தை உருவாக்கியதைப் போன்று, தமிழ்வாணன், “சங்கர்லால்” என்ற பாத்திரத்தை உலவ விட்டதைப்போன்று இவர் “அஸ்மா” என்ற பாத்திரத்தை வாசகர்கள் மனதில் நிலைக்க வைத்துள்ளார்.

ஆர்.கே.நாராயண் அவர்களால் “மால்குடி” என்ற கிராமம் பிரபலமானதைப் போன்று, “நாகூர்” என்ற சிற்றூர் இவரது கதைகள் மூலம் பிரபலம் அடைந்துள்ளது.

இவர் தனது வலைத்தளத்தில் என்ன எழுதினாலும் அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே ஒரு வாசக பட்டாளத்தை தன்வசம் வசியப்படுத்தி வைத்திருக்கும் மோடிமஸ்தான் இவர். இந்த மோடி மஸ்தானிடம் மூடி மறைக்கும் பழக்கமில்லை.

ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டு எழுதாமல் மனம்போன வாக்கில் இவர் எழுதுவதால் வாசகர்களுக்கு இரண்டு விதமான போனஸ் கிடைக்கிறது.

1. போகிற போக்கில் பல சுவையான பொதுஅறிவு தகவல்களை நமக்கு அள்ளித் தெளித்த வண்ணம் செல்வது.

2. தன் சொந்தக்கதை சோகக்கதையை அவ்வப்போது வாக்குமூலமாய்த் தருவது. (ரசிகனுக்கும் இது ஒரு சுவராஸ்யத்தை அளிக்கிறது. ஏனெனில் பிறர் டயரியை திருட்டுத்தனமாக படிக்கும் இன்பத்தை இது தருவதினால்)

2. நையாண்டி நவீனத்துவம் என்ற பெயரில் நமக்கு வயிறு குலுங்கும் நகைச்சுவை டானிக் கிடைப்பது

இவருடைய கதைகளை படிக்கையில் சில வட்டார மொழியை புரிந்துக்கொள்ள கூடவே ஒரு ‘கோனார் நோட்ஸும்’ வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இவருடைய கதையைப் படித்தே வண்டி நிறைய நாகூர் பாஷை கற்றுத் தேர்ந்த வாசகர்களும் உண்டு. அந்த விஷயத்தில் இவர் செய்வது ஒரு மெளனப் புரட்சிதான் என்று சொல்ல வேண்டும்.

இவரது படைப்புகளை வாசிக்கையில் “சந்தானம்” அல்லது “விவேக்கின்” காமெடியை காணொளியில் கண்டு ரசித்ததைப் போன்ற ஒரு திருப்தி ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.  (மேலும் எஸ்.எஸ்.சந்திரனின் டபுள் மீனிங் ஜோக்குகளையும் நமக்கு நினைவுறுத்தும்)

இவரை வாசகர்கள் விரும்புவது இவரது வெளிப்படத்தன்மையினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இவர் திரைச்சீலை போடுவது கிடையாது.

இவரது ‘வெடப்பு’க்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நெருங்கி பழகும் தோழராகட்டும், குடும்பம் நடத்தும் மனைவியாகட்டும், ஊர்க்காரர்கள் ஆகட்டும், தர்கா நிர்வாகம் ஆகட்டும்… ஊஹூ..ம். பாரபட்சமே பார்க்க மாட்டார்.  பேனாவால் விளாசித் தள்ளி விடுவார்.

சிலசமயம் மனுஷர் நம்மை தூக்கிப் பேசுகிறாரா அல்லது போட்டுக் கவிழ்க்கிறாரா என்றே புரியாமல் கன்பூஷியஸ் (இந்த வார்த்தை நான் கண்டுபிடித்தது) ஆகி விடுவோம்.

இவரது வலைத்தள பதிவுகள் சிலவற்றை படிக்கையில் ‘ஷிப்லி பாவா’ பேசுவதைப் போலிருக்கும். எனக்கு சில விஷயங்கள் மண்டையில் ஏறாது.  அதற்கான அறிவு நமக்கு கிடையாது போலும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேன்.

ஒரு சின்ன வட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கும் இவர் வெளியில் வரவேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருக்கும் இவர் , நாகை கலங்கரை விளக்கமாக  பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற சகதோழனின் விருப்பம்.

நான் சொல்வது ஒருபுறம் கிடக்கட்டும். இவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் படித்தால் “நெருப்பில்லாமல் புகையாது” என்ற உண்மை விளங்கும்.

watch?v=VM5wawlV_cY&feature=player_embedded

Our sweetest songs are those that tell us of saddest thought என்று கவிஞன் ஷெல்லி சொன்னான். எவ்வளவு உண்மை! ஆபிதீனின் நகைச்சுவை சொல்ல வரும் விஷயமும் மிகமிகத் துயரமானது. ஆபிதீனின் எழுத்தின் உயிரோட்டம் என்று இதைச் சொல்ல வேண்டும். இந்த நகைச்சுவை மிகமிக ஆழமான துன்ப அனுபவங்களை மிகத்துல்லியமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கும் தன்மை கொண்டவை. – நாகூர் ரூமி

(பார்க்க பதிவுகள்)

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன். – அஸ்ரஃப் ஷிஹாப்தீன் 

(பார்க்க அஸ்ரஃப் ஷிஹாப்தீன் வலைத்தளம்)

 ஒருநாள் சாரு ஆபிதின் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியர், சிறுகதை நாவல் எழுதக் கூடியவர் என்பதாக கூறுவார். ஒருமுறை ஆபிதீனை சாரு வீடடில் சந்தித்தேன். அதில் பழக்கம் கொள்ளும் அளவிற்கு நானோ ஆபிதீனோ பேசிக்கொண்டதுகூட இல்லை. உண்மையில் ஆபிதீனிற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்வதும்கூட சாத்தியமற்ற ஒரு சந்திப்பு நிற்க…

நீண்ட நாட்களாக ஆபிதீன் கதைகளை படிக்கும் எண்ணம் இருந்து வந்தது. அவரது கதைகள் படிக்க எனது சூழலில் கிடைக்கவில்லை. அல்லது தீவிரமாக அதனை தேடும் நிலையும் வாய்க்கவில்லை. அவரது எழுத்துக்களை படிக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறியதைப்போல பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது கதைகள் இரண்டினை சுவராஸ்யமான தலைப்புகளை கொண்டிருந்ததால் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து படித்தேன்.

1 பதிவு இணைய இதழில் ஜனவரி 2004-ல் வெளிவந்த கதை “இஸ்லாமிய கதை எழுத இனிய குறிப்புகள்”.
2. திண்ணை.காம் செப்டம்பர் 2003-ல் வெளிவந்த “ஹே! ஸைத்தான்” கதை.

நீண்ட நாட்களாக தமிழ் சிற்றிதழ்கள் இணையம் போன்றவற்றடன் தொடர்பில்லாததால்.. இவற்றை உரிய காலங்களில் படிக்க இயலவில்லை. அது வருந்தக்கூடிய செய்திதான்। பின்நவீனத்துவ கதையாடலில் ஒரு உத்தி நையாண்டி என்பது. நையாண்டியின் மூலம் உன்னதம் புணிதம் என்கிற விஷயங்களை கவிழ்த்து தலைகீழாக்கிவிடுவது. நையாண்டி என்பது ஒரு கதையாடல் உத்திதான் என்றாலும் கதையின் நையாண்டி ஒரு நகைச்சுவை உணர்வுடன் முடியாமல் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வண்ணம் ஒரு ஆழ்ந்த அமைப்பை உள்ளார்ந்து கொண்டிருக்கும். கதை வாசித்தபின் ஒரு செயலூக்கமிக்க மெளனத்தை ஏற்படுத்தும். எடுத்துரைக்கப்படும் கதையாடலில் மேலமைப்பிற்குள் உள்ளார்ந்து ஓடும் கூர்மையான விமர்சனம் கதை ஏற்ற முனைந்த உணர்வு தளத்திற்கு வாசகனை இட்டுச் சென்றுவிடும். அத்தகைய உணர்வை புதுமைபித்தனின் கதைத்தொகுதிகளில் கீழ்கண்ட கதைகள் ஏற்படுத்தக்கூடியவை. “திருக்குறள் செய்த திருக்கூத்து” “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்””புதிய கந்தபுராணம்” “இலக்கிய மம்மநாயனார் புராணம்” “கட்டில் பேசுகிறது” வேதாளம் சொன்னகதை “கட்டிலை விட்டிறங்கா கதை” போன்ற கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நகைச்சுவையை உருவாக்குவதுடன் சமூகம், சடங்குகள், ஆச்சாரங்கள் அல்லது பழகிய மனோபாவங்கள் என கெட்டித்தட்டிப்போயுள்ள புனிதங்களை கவிழ்த்துப் போட்டுவிடும்.

அப்படியொரு உணர்வை இவ்விருக்கதைகளும் உருவாக்கின. சிரிக்காமல் ஒரு வரிக்கூட படிக்க முடியவில்லை. – ஜமாலன்

(பார்க்க ஜமாலன் வலைத்தளம்)

ஆபிதீனைப் பற்றி எனது பதிவில்

ஆபிதீனும்  ஆர்.கே.நாராயணனும்

 

Tags: , , , , , , , , ,

இயற்றமிழ் வளர்த்த நாகூர் -1


முன்னுரை

இயற்றமிழின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் நமக்கே வியப்பாக இருக்கிறது.

இதனை ஆராய வைத்த எழுத்தாளர் ஜெயமோகனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று அவர் விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தால் பலநுட்பமான விஷயங்கள் எனக்குத் தெரியாமலே போயிருக்கும்.

தமிழில் நாவல்கள் எழுதிய முதல் இஸ்லாமிய பெண்மணி யாரென்று கேட்டால் எளிதில் கூறிவிடலாம். 1938-ஆம் ஆண்டு “காதலா கடமையா’ என்ற நாவலை எழுதிய நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா என்று.

தமிழில் வெளி வந்த முதல் நாவல் எது?

தமிழில் வெளி வந்த முதல் வரலாற்று நூல் எது?,

தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு நூல் எது?

தமிழில் சிறுகதைக்கு முன்னோடி யார்?

தமிழில் பத்திரிக்கைக்கு முன்னோடி யார்?

இந்த கேள்விகளுக்கு பதில்கள் நமக்குத் தெரியாது. அப்படியே தெரிந்துக் கொள்ள விரும்பி புத்தகங்களை ஆராய்ந்தாலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்தான் கிடைக்கின்றன.

இவை அத்தனைக்கும் பதில் பகரும் வண்ணம் இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று நான் சொன்னால் என்னை யாரும் நம்பப் போவதில்லை. இதில் இரண்டு சாதனைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் நாகூர்க்காரர் என்ற தகவல் நம்மை மேலும் தலைநிமிர வைக்கிறது.

சிறுகதை

சிறுகதை தோன்றிய ஆண்டு என்று ஆய்வாளர்கள் கூறுவது 1917. வ.உ.சுவாமிநாத ஐயரின் கதைகளே முழுமையான சிறுகதை வடிவம் என்று அறியப்பட்டு வந்தது. 1887-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிவந்த “சிங்கை நேசன்” ஏட்டில் அதன் ஆசிரியர் திரு மகுதூம் சாகிபு எழுதிய ‘விநோத சம்பாஷணை’ என்ற கதையே தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என வாதிடுகிறார் அமரர் நா. கோவிந்தசாமி. அக்காலக் கட்டத்தில் “சிறுகதை” என்ற பெயர் வடிவம் அதற்கு கொடுக்கப்படவில்லை. அவ்வளவுதான். உண்மையில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு முதல் பங்களிப்பு மகுதூம் சாயபு அவர்களுடையது என்பதை யாரும் மறுக்க இயலாது.

நாவல்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதி 1879-ல் வெளிவந்த ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நாவல் என்று ஏடுகள் கூறுகின்றன. செய்யுள் நடையில் இருந்ததை உரைநடை வடிவில் மாற்றியமைத்த பெருமை மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களையே சாரும் என்கிறார்கள்.

பிரதாப முதலியார் என்ற நாயகன், ஞானாம்பாள் என்ற நாயகியை திருமணம் புரிவதும், பிறகு அவர்களிருவரும் பிரிவதும், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை வைத்து பின்னப்பட்ட இக்கதை பெரிய வரவேற்பைப் பெற்றது.

நிஜவாழ்க்கையில் பேச்சு வழக்கில் இருந்ததைப் போலவே நிலவிய இந்த உரைநடையைப் பார்த்த வாசகர்கள் புரட்சிகரமான இந்த வடிவத்தைப் படித்து இரசித்து மெய்மறந்து போனார்கள். இந்த நாவல் பின்னர் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1885-ல் எழுதப்பட்டதாகக் கூறும் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட ‘அசன்பே சரித்திரம்’ என்ற நூல் இலங்கையிலிருந்து வெளியானதால் இதனை யாரும் இவ்வளவு காலம் கண்டு கொள்ளவே இல்லை.

அண்மையில் ‘அசன்பே சரித்திரத்’தையும், ‘பிரதாப முதலியார் சரித்திரத்’தையும் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார் முனைவர் தே நேசன். தமிழின் முதல் இரு நாவல்களில் ஆய்வு என்பதோடு, ஒரே கால கட்டத்தில், ஒரே மொழியில் இரு நாடுகளில் முதல் நாவல்களாகத் தோன்றிய வெவ்வேறு சமயப் பின்னணி கொண்ட படைப்புகளில் ஒப்பாய்வாகவும் இது அமைந்துள்ளது.

பத்திரிக்கை

பத்திரிக்கைத் துறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வேறு யாருமல்ல. நாகூர் குலாம் காதிறு அவர்களேதான். ‘வித்தியா விசாரிணி’ என்ற ஏட்டை வெளிக் கொணர்ந்து, இதே காலகட்டத்தில் ‘ஞானாசிரியன்’ என்ற ஏட்டையும் நடத்தி இருக்கிறார்.

இதோ மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எம்சாலி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

“‘வித்தியா விசாரிணி’ – மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா-விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறிமுறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.

‘வித்தியா விசாரிணி’க்கு எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்களை நடத்தவேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது.

‘வித்தியா விசாரிணி’ பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறை அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னணி வகித்தவர். பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலரே அந்த இலக்கிய இதழியல் முன்னோடி.

வரலாற்று நூல்

1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் “விக்கிரமாதித்யன் கதை’ முதல் வரலாற்று நாவல் என்கிறார் மிகச் சிரந்த எழுத்தாளரான கீரனூர் ஜாகிர்ராஜா. “பிரதாப முதலியார் சரித்திரம்’ அல்ல; மாப்பிள்ளை லெப்பையின்1858-ல் எழுதப்பட்ட “தாமிரப் பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல் என்று வாதிடுகிறார். இந்த நாவல் அரபுத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது அன்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மொழிபெயர்ப்பு நாவல்

நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 1889 ஆம் ஆண்டு நாவலர் மொழிபெயர்த்து வெளியிட்ட மிகப் பெரிய நாவல் “உமறு பாட்ஷா யுத்த சரித்திரம்” என்ற ஆங்கில நாவலாகும். ரெனால்ஸ் என்பவர் எழுதிய இந்நாவல்தான் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் நாவல். இதை நான் சொல்லவில்லை அண்மையில் இந்நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முரளீதரன் கூறுகிறார்.

நாவலர் இந்நாவலை பினாங்கில் மற்றும் தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்துள்ளார். கொழும்பு பெருவணிகர் ஒருவரின் உதவியுடன் இந்நாவல் 1889 இல் வெளிவந்துள்ளது. இந்த நாவலில் உள்ள சிறப்பம்சன் என்னவெனில், தமிழில் மணிப்பிரவாள நடையே நடைமுறையில் இருந்த காலத்தில் கூடுமானவரை வடமொழி வார்த்தைகளை கலக்காமல் தூயதமிழ் நடையில் எழுதியிருப்பது.

பத்திரிக்கைத் துறை மட்டும் மொழியாக்கத்துறையில் நாகூர்க்காரர்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

 

Tags: , ,

சங்கு பாவா


கைலி உடுத்தும் நம்மூர்க்காரர்களுக்கு சங்கு என்றால் இரண்டு சங்கு ஞாபகத்திற்கு வரும். ஒன்று பாளையகாட் சங்கு. இன்னொன்று அபுபக்கர் சங்கு. மூன்றாவது சங்கு ஒன்று உண்டு. அது சங்குபாவா வைத்திருக்கும் சங்கு.

பாரதிதாசன் “சங்கே முழங்கு!” என்று பாடலெழுதியதை சீரியஸாக எடுத்துக் கொண்டு சங்கு துணைகொண்டு குறி சொன்ன நம்மூர் சங்கு பாவாவை  மறக்கத்தான் முடியுமோ? நாகூரின் விநோதமான கேரக்டர்களின் வரிசையில் இவரும் நிலை பெற்று விட்டவர்.

‘சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’ என்று பாடும் பாட்டு இவருக்குத்தான் பொருந்தும். விவேக் ஒரு படத்தில் திருஷ்டிக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் சங்கைப் பார்த்து டயலாக் பேசுவார். “பொறந்தாலும் சங்கை எடுத்து பால் ஊத்துறீங்க. செத்தாலும் சங்கை எடுத்து ஊதுறீங்க. இந்த இடைப்பட்ட Gap-லேயாவது சங்குக்கு கொஞ்சம் ரெஸ்ட் விடக் கூடாதா?” என்று கேட்பார். இந்த வசனம் நம்ம சங்கு பாவாவை வைத்து எழுதப்பட்ட வசனம் போலவே இருக்கும்.

அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்டு பேச நேரடி டெலிபோன் நம்பர் உண்டு என்பார் நண்பர் ஹாரீஸ். அந்த நம்பரையும் கூறினார். 24434 என்ற நம்பர்தானாம் அது. தொழுகையின் மூலம் இறைவனிடம் உரையாடலாம் என்று கூறும்போது, ஐந்துவேளை தொழுகை ரக்காத்து முறையே சுபுஹூ2 + லுஹர்4+ அஸர்4+ மக்ரிப்3+ இஷா4 – இதுதானே இறைவனை தொடர்பு கொள்ளக்கூடிய நம்பர் என்பார். அவருடைய ஹஸ்ரத் கண்டுபிடித்த சூட்சமமாம் இது. இந்த லாஜிக் எனக்கு பிடித்திருந்தது.

சங்கு பாவா ஆண்டவனிடம் பேச தேர்ந்தெடுத்த கருவிதான் இந்த சங்கு. அவரை நாடி வரும் பக்தகோடிகளின் துயரைத் தீர்ப்பதற்கு இந்த சங்கை எடுத்து காதில் வைத்து, யாகாவாமுனிவர் பேசும் பறவை பாஷைபோல் ஏதோ ஒரு சங்கேத மொழியில் ஆகாயத்தைப் பார்த்து உரையாடி, பின்னர் பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.

எந்த சாட்டிலைட்டுக்கும் பணம் கட்டாமல் நம்ம சங்குபாவா பேசும் நெட்வொர்க் எதுவென்று கண்டுபிடித்து இந்த ஏர்செல். ஏர்டெல், வோடாஃபோன்காரர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தில் இலவச போன்கால் அமுலுக்கு வந்துவிடும்

என் வீட்டிற்கு எதிரே பெட்டிக்கடை வத்திருந்த சவுரி அண்ணன்தான் ஷேக் அலாவுத்தீன் என்றாகி, பின்னர் சங்கு பாவா ஆனார் என்று பிற்பாடுதான் தெரிந்துக் கொண்டேன்.

ஒருமுறை என் நண்பர் ஒருவர் நேராக சங்குபாவாவிடம் சென்று “பாவா! உங்களுக்காக டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகாரர்கள் பெரிய தொகையில் ஒரு பில் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்” என்று சொல்ல, அவர் அலறியடித்துக் கொண்டு “எங்க வூட்லே டெலிபோன் கனெக்ஷனே கிடையாதே! வேறு எதுக்கு எனக்கு பில் அனுப்புறாங்க?” என்று அப்பாவித்தனமாகக் கேட்க “அது வேறு ஒண்ணுமில்லே! டெலிபோன் எக்ஸ்சேஞ்சுலே நீங்க ஆண்டவன்கூட அடிக்கடி சங்கு வச்சு பேசுற கால் கிராஸ்டாக் ஆவுதாம். அதனாலே அந்த பில் எல்லாத்தையும் உங்களுக்குத்தான் அனுப்பப் போறதா பேசிக்கிறாங்க!” என்று மிரட்ட, “வாப்பா! நான் 5-க்கும் 10-க்கும் என் பொழைப்பை இந்த சங்கை வச்சு ஓட்டிக்கிட்டு இருக்குறேன். என் பொழப்புலே மண்ணை வாரிப் போட்டுடாதீங்க வாப்பா” என்று உண்மையை ஒத்துக் கொள்ள அவருக்கே இரக்கம் வந்து மேலும் 10 ரூபாய் கொடுத்துட்டு வந்திருக்கார்.

 

Tags: , , ,

உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும்


உமர் கய்யாம் பாடல்களை மேலைநாடுகளுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் தாமஸ் ஹைட் (Thomas Hyde) என்ற போதிலும் எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்ட் (Edward Fitzgerald) செய்த மொழியாக்கம்தான் மிகவும் பிரபலமாகியது.

இன்று உலகின் பல பகுதிகளில், இரவு கேளிக்கை விடுதிகளும் மதுக்கூடங்களும் உமர் கய்யாமின் பேரில் இயங்குகின்றன. உமர் கய்யாம் உண்மையிலேயே மது, மாது, மாயா ஜாலம் போன்ற மாயைகளில் மோகம் கொண்டிருந்த கவிஞனா அல்லது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட சூஃபிக் கவிஞனா என்பது முடிவுறாத வாதம். அதை இன்னொரு பதிவில் விளக்கமாக விவாதிப்போம்.

உமர் கய்யாம் வாழ்ந்த காலத்திலேயே அவற்றை பாமர மக்கள் பாடக்கூடாது ஏனெனில் மறைபொருளில் பாடப்பட்ட அந்த ஞானப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள சாதாரண மனிதனுக்கு மனப்பக்குவம் போதாது என்று கூறி பாமர மக்கள் அவருடைய பாடல்களை பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிட்ஸ்ஜெரால்டின் மொழியாக்கம் உலகம் முழுதும் பிரபலமானதற்கு மற்றொரு காரணம் கார்டன் ரோஸ் (Gordon Ross) வரைந்த கவர்ச்சி சித்திரங்கள்தான். அந்த நிர்வாண ஓவியங்களை ஆபாசச் சித்திரம் என்று நான் வருணித்தால் ‘கலையுணர்வு’ மிக்கவர்கள் என்னை ‘கலாரசனையில்லாத முண்டம்’ என்று விமர்சிக்கக்கூடும்.

ஒரு மனிதன் எப்படி ஒரே சமயத்தில் கவிஞனாகவும், கணித நிபுணனாகவும் (Algebra & Geometry), இசை மேதையாகவும், தத்துவவாதியாகவும் மற்றும் புவியியல், பெளதிகம்,  மருத்துவம் மற்றும் வானவியல் துறைகளில் ஒரே சமயத்தில் வல்லுனனாக திகழ முடிந்தது என்பது பெரிய ஆச்சரியம்.

உமர் கய்யாமின் இயற்பெயர் கியாசுத்தீன் அபுல் ஃபத் உமர் இப்னு இப்ராஹிம் அல் நிஷாபூரி அல் கய்யாமி. நிஷாபூர் – டர்குவாய்ஸ் (ஃபெரோஸா) எனும் நீலப்பச்சை கற்களுக்கு பிரசித்திப்பெற்ற ஈரானில் உள்ள நகரம். உமர் கய்யாம் பிறந்த ஊர் இது.

கய்யாம் என்றால் கூடாரம் என்று பொருள். கூடாரம் பின்னும் குடும்பத்தில் பிறந்ததினால் அவருக்கு கய்யாம் என்ற பெயர். தனது காரணப் பெயரை வைத்தே பொருத்தமான வரிகளில் அதனை பொருத்தி வார்த்தை ஜாலம் புனையும் அந்த தத்துவக் கவிஞனை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Khayyam, who stitched the tents of science,
Has fallen in grief’s furnace and been suddenly burned;
The shears of Fate have cut the tent ropes of his life,
And the broker of Hope has sold him for nothing!’

அறிவியலெனும் கூடாரத்தை தைத்த கய்யாம்
இன்று துயரமெனும் அடுப்பு உலையில்
வீழ்ந்து  கருகிவிட்டான்
விதியின் கத்திரிப்பு
அவனை இணைத்திருந்த
வாழ்க்கையின் கயிற்றையும்
அற்று எறிந்து விட்டது
நம்பிக்கைத் தரகன்
அவனை
சூன்யத்திற்கு விற்றுவிட்டானே !

என்று தன்னைத் தானே அறிமுகம் செய்துக் கொள்கிறான் அவன்.

The Moving Finger writes; and, having writ,
Moves on : nor all thy Piety nor Wit
Shall lure it back to cancel half a Line,
Nor all thy Tears wash out a Word of it.

எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
அபயம் அபயம் என்றாலும்
வழுவிப் பின்னால் ஏகியொரு
வார்த்தை மாற்றம் செய்திடுமோ ?

கவிமணியின் அழகுத்தமிழ் மொழியாக்கம் இது.

But helpless pieces in the game He plays
Upon this chequer-board of Nights and Days
He hither and thither moves, and checks … and slays
Then one by one, back in the Closet lays

இந்த வையம் இரவு பகல்
எழுதும் தாயக் கட்டமடா!
வந்த விதியோ மனிதர் தமை
வைத்துக் காயாய் விளையாடி
முந்தி நகர்த்தி நகைக்குமடா!
மூலைக் கிழுத்து வெட்டுமடா!
பிந்தி ஒவ்வொரு காயாகப்
பெட்டிக்குள்ளே வைக்குமடா!

இதுவும் கவிமணியின் மொழிபெயர்ப்புதான்.

இதையே செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் அவர் பாணியில் கூறுகிறார்.

இரவு பகலென்ற சதுரங்கப் பலகையிலே
விதி மனிதர்களைக் காய்களாக்கிக் கொண்டு
விளையாடும் சூது தான் வாழ்வு.
காய்கள் இங்கும் அங்கும் நகர்த்தப்படுகின்றன
வெட்டப்படுகின்றன
ஒன்றின் பின் ஒன்றாக
மீண்டும் பெட்டிக்குள் எடுத்து வைக்கப்படுகின்றன”.

இளம் பிராயத்தில், கண்டசாலா பானுமதி இணைந்து பாடிய இந்த திரைப்படப்பாடல் (கள்வனின் காதலி 1955) சிலோன் ரேடியோவில் ஒலிக்கும்போதெல்லாம் அந்தப் பாடலின் இனிமையில் நான் மெய்மறந்து ரசித்ததுண்டு.

வெய்யில் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
தெரிந்து பாட நீயுமுண்டு;
வையம் தரும் அவ்வனமன்றி;
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?”

(Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse — and Thou
Beside me singing in the Wilderness —
And Wilderness is Paradise enow.)

திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த உமர் கய்யாமின் வரிகளை இனிமையான மொழியில் கவிமணி மொழிபெயர்த்திருப்பார்.

மாணவப் பருவத்தில் உமர் கய்யாமின் பாடல்களால் கவரப்பட்ட நான், உமர்-கய்யூம் என்ற புனைப்பெயரில் கவியமுது, எழிலோவியம், முல்லைச்சரம், கணையாழி, போன்ற இலக்கிய ஏடுகளிலும், நற்சிந்தனை என்ற இஸ்லாமிய ஏட்டிலும் ஏராளமான கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன்.

உமர் கய்யாமின் ரூபய்யாத் கவிதைகளை மொழிபெயர்த்தது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்ற செய்தி எல்லோருக்கும் தெரியும். இப்போது கோவிந்த தீர்த்தர் என்பவர் பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த 1096 ரூபய்யாத் பாடல்களில் 410ஐத் தேர்ந்தெடுத்து கவிஞர் புவியரசு தமிழாக்கம் செய்திருக்கிறார்.

உமர் கய்யாம் படைப்புகளை கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்திருக்கும் பாடலொன்று இங்கு சாம்பிளுக்காக :

ஓரு நாளிரவு
குயவனின் கடையில்
மெல்ல நுழைந்து பார்த்தேன்
மட்பாண்டங்கள்
தீவிரமாக எதையோ பற்றி
விவாதம் நடத்தும்
காட்சியைக் கண்டதும்
என்னைக் கண்டதும்
கேள்விகள் கேட்டன:
‘பூமியில் குடம் யார்?’
‘குயவன் யார்?’
‘விற்றவர் யார்?’
‘அதைப் பெற்றவர் யார்?’
கை நொடி வாழ்க்கை
கைப்பிடிப் புழுதி-
இதுதான் உனது.
கைமுதல்;சொத்து.
இதயத்தை இறுகப்
பிடித்து ஏன் அழுகிறாய்?

வாழ்வின் நிலையாமையைப் பேசும் ஒரு மற்றொரு பாடல்

அரசன் எவனோ குருதி வடித்(து)
ஆழப் புதைந்த சவக்குழியில்
விரைவில் முளைக்கும் ரோஜாவை
விஞ்சிச் சிவந்த மலரேது?
உருவும் அழகும் பூத்தென்றோ
உதிர்ந்த பெண்ணின் உடலந்தான்
விரையார் சோலைப் பசுங்கூந்தல்
விஞ்சை அரும்பாய்க் கொஞ்சுமடா!

உமர் கய்யாம் பாடல்களை தமிழில் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1945), மு.வ., பாலபாரதி ச.து.சு.யோகி, சாமி சிதம்பரனார், தங்கவயல் லோகிதாசன் (1980), இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1965), புவியரசு (1997), ஆ.மா. ஜெகதீசன் (2002), பேரா. அ. சீநிவாசராகவன் போன்றவர்கள் மொழிபெயர்த்திருக்கின்றனர்.

ஆனால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு முன்னாலேயே வ.மி. சம்சுத்தீன் சாஹிப் மற்றும் வீ.சி. அருளானந்தம் அவர்களும் இணைந்து தமிழில் மொழி பெயர்த்து (1936ம் ஆண்டு) கொழும்பில் வெளியிட்டுள்ள உண்மை பலருக்கும் தெரியாது.

எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடன் பத்திரிக்கையில் “கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தார்.

ஜூலை 13, 2003 அன்று எழுதிய கட்டுரையில் “இரண்டு வாரங்களுக்கு முன் நாகூர் ரூமியின் உமர் கய்யாம் மொழி பெயர்ப்பைப் பற்றி எழுதியிருந்தேன். ரூபயாத்தின் 190 கவிதைகளை அ.மா. ஜெகதீசன் என்பவரும் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறாராம். இது நான்காவது மொழிபெயர்ப்பாகிறது. வேறு யாராவது செய்திருந்தால் எனக்கு ஒரு சாம்பிளுடன் தெரிவிக்கலாம்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்குப்பின் 2 வாரங்கள் கழித்து ஜூலை 27, 2003 அன்று எழுதிய கட்டுரையில்  “உமர்கய்யாமுக்கு மற்றொரு மொழி பெயர்ப்பு உள்ளது. சாமி சிதம்பரனாரின் 105 எழு சீர் விருத்தங்களை ஓர் அன்பர் ஜெராக்ஸ் அனுப்பியிருந்தார். உதாரணம் – ‘இரவுபகல் கோடுள்ள சதுரங்க உலகத்தே எள்ளளவும் சக்தியில்லா சிறு தாயக் கட்டைகளால் விளையாடல் சில பண்ணி அலைகின்றான் இங்கும் அங்கும்’ . இதோடு ரூபாயத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் ஐந்தாகிறது.” என்று எழுதியிருந்தார்.

ஆனால் சுஜாதா அறியாத செய்தி ஒன்று இருந்தது. அதை அவருக்கு யாரும் எடுத்தும் சொல்லவில்லை.

நாகூர்க்காரர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உமர் கய்யாமின் பாடலை மொழிபெயர்த்திருக்கிறார் என்ற உண்மையை அறியாமலேயே அவர் போய்ச் சேர்ந்தும் விட்டார். ‘ரூபய்யாத்’தை மொழிபெயர்த்த அந்த பெருமைக்குரிய நாகூர் நாயகர் வேறு யாருமல்ல – இலக்கியப் பரம்பரையில் வந்துதித்த கவிஞர் நாகூர் இ. எம். நயினார் மரைக்கார் அவர்கள்தான்.

தொடர்புடைய சுட்டி :

ச்சீஸ் படீஹை மஸ்த் மஸ்த்

 

Tags: , , , , ,

அபூர்வ தகவல்களும் என் கமெண்டும்


 

[பறவைகளைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியும் அபூர்வமான சில தகவல்களை நண்பரொருவர் திரட்டி அனுப்பியிருந்தார். தகவல்கள் என்னமோ சுவையாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் கமெண்ட் அடிக்கச் சொல்லும் கோணல்புத்தி இதற்கும் அடிக்கச் சொன்னது. நண்பர் அனுப்பி வைத்த தகவல்களும் என்னுடைய கமெண்டும்.]

“டால்பின்கள் தூங்கும் போது கண்கள் திறந்திருக்கும்”.

இந்த மாதிரி திறமை மனிதர்களுக்கும் இருந்தால் எவ்வளவு நல்லது. ஆபீஸில் மானேஜருக்கு எதிரிலேயே ஜாலியாக தூங்கலாமே!

“நாய்கள் பத்து விதமாக குறைக்கும் ஆற்றல் பெற்றது”

டைரக்டர் ராஜ்குமாருக்கு இது தெரிந்தால் ‘அசத்தப் போவது யாரு?’ நிகழ்ச்சியில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக சேர்த்துக் கொள்வார்.

“பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகிறது”.

என் மைத்துனர் மாத்திரம் என்னவாம்? (இறைவா! இதை என் மனைவி படிக்காமல் இருக்க வேண்டும்)

“ஆந்தையினால் மட்டும் நீலநிறத்தை அடையாளம் காண முடியும்”

இதை சென்ஸார் போர்டில் நியமித்தால் என்ன? நல்ல படம் எது? புளு பிலிம் எது? என்று எளிதில் கண்டுபிடித்து விடுமே!

“கலிபோர்னியாவில் வாழும் ஒரு வகை மீனுக்கு கண்களே கிடையாது”.

இதில் என்ன ஆச்சரியம் வேண்டிக் கிடக்கு? நம்ம அரசியல்வாதிகள் சிலருக்கு மூளையே கிடையாதே!

“மூளையில்லாத மீன் நட்சத்திர மீன்கள் ஆகும்”.

கரெக்ட். அரசியல்வாதிகள் நட்சத்திர அந்தஸ்த்து உடையவர்கள்தானே?

“தேளுக்கு பத்து கண்கள் உண்டு. இருப்பினும் பார்வைத் தெளிவாக இருக்காது.”

நம்ம ஆளுங்க சில பேரு பகல் நேரத்தில் கார் ஓட்டுவார்கள். நாலு கண்கள் இருக்கும் (அதாவது மூக்கு கண்ணாடி வேறு போட்டிருப்பார்கள்) கடைசியில் தாறுமாறாக பிளாட்பாரத்தில் போய் ஏற்றி விடுவார்கள்.

“நெருப்புக் கோழிக்குப் பற்கள் இல்லாததால், சாப்பிட்ட உணவு செரிப்பதற்காக சிறுசிறு கற்களை விழுங்கும்”

அப்புறமா கற்கள் செரிப்பதற்காக எதை விழுங்கும் என்று சொல்லவே இல்லையே?

“சிவப்பாக வியர்வை சிந்தும் விலங்கு நீர்யானை.”

நல்லவேளை நமக்கு இப்படி கிடையாது. வெயிலிலே அலைந்து விட்டு வீட்டுக்கு வந்தால் மகன் ரத்தக்களறியாக வந்து நிற்கின்றானே என்று என் தாயார் துடிதுடித்து போய் விடுவார்.

“முட்டையை முதன்முதலாக உணவுப் பொருளாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்”.

அது போகட்டும். ஆத்திரம் வந்தால் அழுகிய முட்டைகளை எடுத்து வீச பயன் படுத்தியது யார் என்று சொல்லவே இல்லையே?

 

Tags: , , , ,

அணிலும் நானும்


அணிலுக்கும் எனக்கும் ஓரு பயங்கர ஒற்றுமை. “யூ மீ அனில் கபூர்?” என்று கேட்கலாம். “நோ! நோ! நான் உண்மையான அணில்பிள்ளையைப் பற்றி சொல்கிறேன். எனக்கு மரம் ஏறத் தெரியாது. ஏறினாலும் அல்லது ஏற்றி விட்டாலும் தொபுக்கடீரென்று சறுக்கி கீழே விழுந்து விடுவேன். உடம்பு முழுக்க சிராய்ப்பு ஏற்பட்டு கண்றாவியாக காட்சியளிப்பேன்.

“வேறு எதுக்காக அணில் கூட உம்மை கம்பேர் செய்தீர்?” என்று நீங்கள் மறுபடியும் ஆத்திரத்துடன் கேட்பது புரிகிறது. நான் இன்னும் சொல்லியே முடிக்கவில்லையே. அதற்குள் அவசரப் பட்டால் என்னாவது? சத்தியமாக எனக்கு முதுகில் மூன்று கோடுகள் கூட கிடையாது. முதுகில் ஒன்றிரண்டு மச்சம். அவ்வளவுதான். இருந்தபோதிலும் எனக்கும் அணிலுக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருக்கின்றது.

சமீபத்தில் அணிலைப் பற்றிய ஒரு செய்தியை நான் படிக்க நேர்ந்தது. “பழத்தின் கொட்டைகளைப் பிறகு சாப்பிடுவதற்காக புதைத்து வைக்கும் பழக்கம் கொண்டவையாம் அணில்கள். ஆனால், எங்கே மறைத்து வைத்தோம் என்பதை எளிதில் அது மறந்து விடுமாம்”.

ஹா.. ஹா..ஹா..

படித்து முடித்ததும் என்னால் ‘குபீர்’ சிரிப்பை அடக்க முடியவில்லை. நம்மைப் போன்றே சரியான Abesent mind porfessor-ஆக இருக்கிறது அது.

என்னிடம் பவர் கிளாஸ் ஒன்று உண்டு. ரீடிங் கிளாஸ் ஒன்று உண்டு. இரண்டில் ஏதாவதொன்றை எங்காவது மறந்து தொலைத்து விடுகிறேன். வைத்ததை எங்கே வைத்தோம் என்று தேடி அலைவதற்குள் பாதி ஜீவன் கரைந்து விடுகிறது.

காணாமல் போகும் மூக்குக் கண்ணாடியை தேடுவதற்காகவே ஒரு மூக்கு கண்ணாடி வாங்கலாமா என்றுகூட சீரியஸாக மூளையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறேன்.

இதில் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் அடுத்த முறை நான் என் கண்ணாடியை தொலைத்துவிட்டு துழாவும் போது என்மீது என் மனைவிக்கு கோபம் ஏற்பட முடியாதபடி செய்துவிடுவேன். “நான் மட்டும்தான் இப்படி எங்கே வைத்தேன் என்று மறந்துவிட்டு துழாவுகின்றேனா? அணில் கூட இப்படித்தான்” என்று சொல்லி தைரியமாக சாமாளித்து விடுவேன்.

அணில் அவர்களிடம் எனக்குப் பிடித்த நல்ல பழக்கம் என்னவென்றால் சாப்பிடும்போது கையால் எடுத்து உண்ணும் டேபிள் மேனர்ஸ்தான். ஆண்டவன் கொடுத்த கை இருக்க, எல்லா நேரத்திலும் ஏதோ இங்கீலீஷ்காரன் வீட்டுப்பிள்ளை போல Spoon & Fork வைத்துச் சாப்பிடும் என் நண்பர் _______யை  நினைத்தால் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.  இந்த பதிவைப் படித்தபிறகு அவர் அணில்பிள்ளைப் போன்று நல்லபிள்ளையாக திருந்தி விடுவார் என்று நம்புவோமாக.

 

Tags: